search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu"

    • தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பேட்டை, சமாதானபுரம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் விடிய விடிய மழை பெய்தது.

    மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயினருவியில் இரவில் அதிக அளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் இரவில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஓட்டப்பிடாரத்தில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 17 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடியில் பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி

    களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் அணைக்கரை தரைப்பாலம் மூழ்கியது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மூணாம்சேத்தி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரசேகர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பெய்த கனமழையால் மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மாலையில் வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. பின்னர் இரவில் மழை பெய்யத் தொடங்கியது. திருச்சி மாநகரில் விடிய விடிய சாரல் மழை பெய்தது.

    தஞ்சை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், திருவோணம், பேராவூரணி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து இன்று காலையிலும் மழை இடைவிடாமல் பெய்தது.

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. நேற்று 105 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 113.16 அடியாக உயர்ந்துள்ளது.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவில், அப்துல்கலாம் மணி மண்டபம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாலையம், புதூர், ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    சேலம் ஆத்தூர், நத்தக்கரை, சங்ககிரி, கரியகோவில், மேட்டூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வேருடன் சாய்ந்தது. புதுச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழைபெய்து வருகிறது.

    • தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
    • கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது. இந்நிலையில் வரும் மே 21 ஆம் தேதி 30 வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேறக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்த காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் கூட்டத்தில் மே மாதத்தில் தமிழகத்துக்கு 2.5 தி.எம்.சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், மே 16 ஆம் தேதி காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜி-பே, போன் பே மூலம் கண்டக்டருக்கு கட்டணத்தை செலுத்தலாம்.
    • மே 1-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    நீண்ட தூரம் செல்லக் கூடிய அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்.இ.டி.சி.) மூலம் தினமும் 1000 பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் பெங்களூர், மைசூர், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.

    கோடைக்காலம் என்பதால் தற்போது அனைத்து பஸ்களிலும் முழு இடங்களும் நிரம்பி விடுகின்றன. குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏ.சி. வசதி உள்ள பஸ்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    இணையதளம் வழியாக எளிதாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பயணிகள் வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர்.

    இந்த நிலையில் பயணிகளுக்கு கூடுதலாக மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதி பரீட்சார்த்தமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து அரசு விரைவு பஸ்களிலும் இந்த வசதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    1000 வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு பஸ் களிலும் எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின் வழங்கப்பட்டுள்ளது. இனி டிக்கெட் எடுக்க ரொக்கமாக பணம் கொடுக்க தேவையில்லை. வங்கி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜி-பே, போன் பே போன்றவற்றின் மூலம் கண்டக்டருக்கு கட்டணத்தை செலுத்தலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

    மின்னணு பண பரிவர்த்தனை திட்டத்தை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மே 1-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

    முன்பதிவு செய்யாமல் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் பஸ்சிற்குள் டிக்கெட் எடுக்கும் போது சில்லரை பிரச்சினை ஏற்படுகிறது. குடும்பமாக பயணிக்கும் போது ஆயிரக்கணக்கில் ரொக்கமாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது சில்லரை கொடுப்பதில் கண்டக்டருக்கும் பயணிக்கும் இடையே தகராறு ஏற்படுவது உண்டு.

    இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜி-பே, போன் பே போன்ற டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    டிக்கெட்டிற்காக பெரும் தொகையை கையில் எடுத்து செல்லத் தேவையில்லை. இந்த திட்ட செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் அனைத்து பஸ்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.
    • பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.

    மத்திய மந்திரி அமித்ஷா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    3 கட்டத் தேர்தல் முடிந்து உள்ளது. 3 கட்டங்களிலும் 283 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவுப் பெற்றுள்ளது. இதில் யார் யாருக்கு? எவ்வளவு வெற்றி கிடைக்கும்? என்பதை உறுதியாக கணிக்க இயலாது.

    இப்போது நான் அடுத்த கட்டத் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக இருக்கிறேன் என்றாலும், முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.

    283 தொகுதிகளில் நடந்து முடிந்த தேர்தலில் குறைந்தபட்சம் 175 முதல் 200 இடங்கள் வரை பா.ஜ.க கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.

    பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் நிச்சயம் பா.ஜ.க.வுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். உத்தரபிரதே சத்தில் முழுமையான வெற்றி கிடைக்கும்.

    தமிழ்நாடு, கேரளாவில் எங்களது வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் நாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்.

    மீண்டும் ஆட்சியமைத்த தும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு பா.ஜ.க. அரசு ரூ.10 லட்சம் கோடி செலவு செய்துள்ளது.

    ஜி.எஸ்.டி. வருவாய் 2 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு மூலம் நேரடி வரி விதிப்பில் நியாயமான முறை அமலுக்கு வந்து உள்ளது. இதை ராகுல், எதிர்ப்பது ஏன்? என்று தெரியவில்லை. அவருக்கு யார் யோசனை சொல்கிறார்கள்? என்பதும் தெரியவில்லை.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

    • அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்கான பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    அரசுப் பள்ளிகளில் இணைய வேகத்தை 100 எம்பிபிஎஸ் என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 6223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    6992 நடுநிலைப் பள்ளிகளில் 3267 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மொத்தமுள்ள 24,338 தொடக்கப் பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இணையதள வசதி வழங்கப்படும்.

    மேலும், அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    • வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.
    • சென்னை உள்பட சில மாவட்டங்களில் வெப்ப தாக்கத்தை தாங்க முடியவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலை வீசி வருகிறது. வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட கொளுத்தி வருகிறது.

    கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் அதாவது 110.3 பாரன்ஷீட்டர் டிகிரி வெயில் பதிவானது. ஈரோடு, திருச்சி, வேலூர், திருத்தணி, திருப்பத்தூர், தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் 104, 105 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் உள்ளது.

    வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலை தருகிறது. ஆனால் தொடர்ந்து வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அநேக இடங்களில் இயல்பை விட அதிகமாகவும் ஓரிரு இடங்களில் மிக மிக அதிமாகவும் வெயில் பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    நாளை ஒரு சில இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கோடை மழை ஒரு சில பகுதிகளில் பெய்ய தொடங்கியதால் நாளை முதல் 10-ந் தேதி வரை வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.

    அதேநேரத்தில் உள் மாவட்டங்களில் 4 நாட்கள் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக வெப்பநிலை இருக்கும். இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் சுட்டெரித்தது.

    பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. அதிலும் கடலோர மாவட்டங்களில் அறவே மழை இல்லாததால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் வெப்ப தாக்கத்தை தாங்க முடியவில்லை.

    • வெயிலின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
    • 19 மாவட்ட கலெக்டர்கள் காணொலி வாயிலாக கலந்துகொள்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனலாகி வருகிறது. வெயிலின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் குடிநீர் பிரச்சினையும் ஆங்காங்கே உருவாக தொடங்கிவிட்டது.

    ஏரி-குளங்கள் உள் ளிட்ட நீர் வழங்கும் ஆதாரங்கள் மிக வேகமாக வறண்டு வருவதால் குடிநீர் பிரச்சினை குறித்தும் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாகவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று மாலை 4 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறக் கூடிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறைகளின் செயலாளர்கள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இன்று 19 மாவட்ட கலெக்டர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு தங்களது மாவட்ட நிலவரங்களை விளக்கி கூறுகின்றனர்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை, நாகை, நாமக்கல், மதுரை, கன்னியாகுமரி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் இன்றைய ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் எத்தனை என்பது பற்றியும் விவரமாக எடுத்து கூறுகின்றனர்.

    இதுதவிர தட்டுப்பா டின்றி மின் வினியோகம் கிடைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதில் விவாதிக்க உள்ளனர்.

    இது தவிர பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் கல்லூரி கனவு திட்டம் குறித்தும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் `மக்களுடன் முதல்வர் திட்டம்' உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் நிலைப்பாடு குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    இந்த கூட்டத்தில் கலெக்டர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான குடிநீர் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காத்துக் கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளது.

    இன்று நடைபெறும் கூட்டம் தொடர்ச்சியாக நாளையும் நடைபெற உள்ளது. இதில் மீதம் உள்ள புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தென்காசி, திருப்பத்தூர், விழுப்புரம், வேலூர் உள்பட 19 மாவட்டங்களில் கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்தில் கலெக்டர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான குடிநீர் மற்றும் மின்சார பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று மேற்கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது
    • பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது

    கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாதம் முழுவதும் வெயில் உக்கிரமாக இருந்தது. இதனால், மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.

    பல உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. இயல்பை விட இந்த ஆண்டு மிக அதிகமாக வெப்பம் நிலவியதால் மக்கள் தவித்து வருகிறார்கள். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.




    வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளதால், ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மின் தேவை அதிகரிகரித்துள்ளது. இரவு நேரத்தில் மக்கள், 'ஏசி' சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே, மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

    இந்நிலையில் வெப்ப அலை வீசுவதால் தமிழகத்தின் மின்சார தேவை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் சீரான மின் விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உறுதி செய்து வருகிறது.



    கடந்த 30 - ந்தேதி அதிகபட்ச மின் தேவை 20,701 மெகாவாட் ஆகும். மேலும் தமிழ்நாட்டின் மின் தேவை தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கோடை வெப்ப அலையின் தாக்கத்தால், தமிழ்நாட்டின் மின் தேவை 20,830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் வெப்ப அலை காரணமாக நேற்று 2 -ந்தேதி முதல் மாநிலத்தின் மின் தேவை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

    • வெள்ள பாதிப்பிற்கு ரூ.160 கோடி நிவாரணம் அறிவிப்பு.
    • ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவு.

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பிரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

    மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மொத்த வாக்குகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.
    • தமிழகத்தில் 4 கோடியே 33 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

    வாக்குப் பதிவின் போது மக்கள் எந்த அளவுக்கு வாக்களித்தனர் என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. எனினும், வாக்களித்த விவரம் தோராயமாக வெளியிடப்பட்டதால், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் மொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 81.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகம் முழுக்க மொத்தமாக 4 கோடியே 33 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

    இதில் 2 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள் என்பதும், 2 கோடியே 21 லட்சம் வாக்காளர்கள் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

    • தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. அது இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்ளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது.
    • ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இது முதல் முறை ஆகும்.

    சென்னை:

    பிரபலமான சொகுசு கார்களில் ஜாகுவார் லேண்ட்ரோவர் காரும் ஒன்று.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி டாடா மோட்டார்ஸ் ராணிப்பேட்டையில் ஆலை அமைக்க உள்ளது.

    ராணிப்பேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் தயாரிக்கப்படும். வாகன தொழிற்சாலை அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகும்.

    ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தமிழ்நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இங்கு தயாராகும் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×