search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
    • தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் சுயேட்சையாக போட்டியிட பலரும் ஆர்வமாக உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது. பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக செல்லும் வழியை காண்பிக்கும் அறிவிப்பு பலகை சுவற்றில் ஒட்டும் பணி நடந்தது.

    இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,

    வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதில் ஊர்வலமாகவோ, கூட்டமாகவோ வந்து வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு போடப்படும் என்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்பட வில்லை. இதனால் நாளை முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள். அதே சமயம் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
    • வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் பகுதிகளில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

    இந்த வாரச்சந்தைக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    சாதாரண நாட்களில் நடைபெறும் வாரச்சந்தையில் ரூ.2 கோடி ரூபாய்க்கும், பண்டிகை காலங்களில் நடைபெறும் ரூ.5 கோடி ரூபாய் வரையிலும் வர்த்தகம் நடைபெறும். வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததால் ரூ.50 ஆயிரம் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று இரவு கூடிய வார ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

    தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வெளி மாநில வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இன்று வார ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இதற்கு அஞ்சி வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக சிறு குறு வியாபாரிகள் ரொக்க பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து வருவதில் சிரமம் உள்ளதால், இரவு நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

    இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், சில்லரை வர்த்தகம் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவித்த வியாபாரிகள். இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்றும், வியாபாரிகளுக்கு தேர்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
    • கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள பனியம்பள்ளி ஊராட்சி துலுக்கம் பாளைத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (38). இவர் வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கருப்புசாமி நேற்று வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். தொடர்ந்து அவர் நான் உணவு பாதுகாப்பு அலுவலர் என்றும் உங்கள் கடையில் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எனக்கு தகவல் வந்ததால் உங்கள் கடையை சோதனை செய்ய வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து அந்த வாலிர் உங்கள் மீது வழக்கு போடாமலும், மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

    இதனால் பயந்து போன கருப்புசாமி கடையில் இருந்த பணத்தை எடுத்து அந்த வாலிபரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அந்த வாலிபரிடம் அடையாள அட்டையை காட்டுங்கள் என கருப்புசாமி கூறியுள்ளார். அதையெல்லாம் காட்ட முடியாது எனக்கூறி அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த கருப்புசாமி அந்த பகுதியில் இருந்தவர்களிடம் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். அப்போது கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.

    அதனைத்தொடர்ந்து கருப்புசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது உணவு பாதுகாப்பு அலுவலராக நடித்து பணத்தை பறித்து சென்றவர் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு வீதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் மகன் நவீன்குமார் (29) என தெரிய வந்தது. பின்னர் நவீன்குமாரை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.
    • சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மீன் மார்க்கெட் அருகே ஓடை செல்கிறது.

    அதன் அருகே இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் ரத்த கரையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி. ஜெய்சிங், சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு ஓடை பகுதியில் ஒரு சிலர் மது அருந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது. இதேபோல் இடது கை மற்றும் இடது கண்ணிலும் ரத்த காயங்கள் இருந்தன.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.

    இதில் மது அருந்தும் போது அவர்களுக்குள் சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். எனவே போலீசார் இரவு நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்றனர்.

    இந்நிலையில் இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழு வதும் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

    இதற்காக ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் குமலன் குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த காரில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    தொடர்பாக காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த டயர் வியாபாரியான சசிகுமார் என்பதும், டயர் விற்பனை செய்த பணத்தை காரில் வைத்து எடுத்து சென்றதும் தெரிய வந்தது.


    ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வியாபாரி சசிகுமார் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கானாபுதூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1.95 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் வெங்கடாசலம் என்பதும், காரைக்குடியில் இருந்து கோவைக்கு இடம் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு வெட்டுக்காடு வலசு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த வடிவேல் என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. 3 லட்சம் பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் இன்று காலை பறக்கும் படையினர் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வந்து கொண்டிருந்தார்.


    அவரை நிறுத்தி சோதனை செய்தபோது 89 பட்டு புடவைகள், 6 சுடிதார், ஒரு நைட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும் இருந்தது தெரியவந்தது.

    அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்நாடகா மாநிலம் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த கஜேந்திர ராவ் என்பதும், திருமண வீட்டிற்க்காக ஈரோட்டிற்கு வந்து புடவைகள் வாங்கி சென்று மீண்டும் கர்நாடகா செல்வதற்காக ரெயிலில் ஏற வந்ததாக கூறினார்.

    ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அவரது புடவைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம், புடவைகளை கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், தேர்தல் உதவி வட்டாட்சியர் ஜெகநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    • ரகுவின் தந்தை லோகநாதன் அவனிடம் பொது தேர்வு வரவுள்ளதால் செல்போனை பார்க்காதே என கண்டித்துள்ளார்.
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த நல்லூர் பாரதி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ரகு (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரகு நல்லூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ரகு வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ரகுவின் தந்தை லோகநாதன் அவனிடம் பொது தேர்வு வரவுள்ளதால் செல்போனை பார்க்காதே என கண்டித்துள்ளார்.

    இதையடுத்து மனவேதனையில் இருந்த ரகு வீட்டினுள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை முக்கிய வீதி வழியாக ஊரைச் சுற்றி அம்மன் வலம் வந்தார்.
    • சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    விழாவையொட்டி அம்மன் சப்பரம் வீதி உலா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அம்மன் சத்தியமங்கலம் மற்றும் பு.புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அம்மன் சப்பரம் வீதி உலா வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சப்பரம் முன்பு படுத்தும் நேர்த்தி கடன் செலுத்தி வருகிறார்கள்.

    இதே போல் புஞ்சை புளியம்பட்டி அடுத்து வெள்ளியம்பாளையம் மற்றும் கொத்தமங்கலம், நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பாரத்தில் பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து கொத்தமங்கலம் பரிசல் துறைக்கு சென்று பகுடுதுறை கோவிலில் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தொட்டம்பாளையம் கிராமத்துக்கு சப்பரத்தில் சென்ற பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் இரவு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து காலை முக்கிய வீதி வழியாக ஊரைச் சுற்றி அம்மன் வலம் வந்தார். வழியெங்கும் இதைக் கண்டு ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் படுத்தபடி பண்ணாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற அருள் புரிய வேண்டும் என வேண்டி கொண்டனர்.

    தொடர்ந்து வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரை தத்தப்பள்ளி ஊருக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது. பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் பரிசலில் அக்கறை தத்தப்பள்ளி மற்றும் உத்தண்டியூரில் திருவீதி உலா நடந்தது.

    இதில் சாலைகளில் வழி நெடுக பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

    • கோவில் உட்பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.
    • கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவில் உட்பிரகாரம் பகுதியில் காயர் மேட் போட்டுள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா வந்து கொண்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் ஆதலால் குழந்தைகளுடன் வந்து பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த நிலையில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு வெகு தூரம் நடக்க வேண்டும். இந்த இடத்தில் தார் ரோடு வெட்ட வெளியாக உள்ளதால் தற்போது கோடை வெயில் தாக்கத்தில் சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்டனர்.

    மேலும் கோவில் உட்பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவில் உட்பிரகாரம் பகுதியில் காயர் மேட் போட்டுள்ளனர்.

    வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து தார் ரோடு செல்லும் பகுதிகளிலும் மேட் விரித்துள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும், அதிக சூடு கால் பாதங்களில் தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கோடை காலம் என்பது பொதுவாக ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும். கோடை காலம் தொடங்க இன்னும் 1 மாதம் இருக்கும் நிலையில் தற்போதே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது. மேலும் தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெயில் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 4 வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது. மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் (103.38 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் (104.36 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. மதிய நேரம் வெளியே செல்லும்போது தீப்பிடிப்பது போல் இருப்பதால் மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர். வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும், குடை பிடித்த படியும் சென்று வருகின்றனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாள் ஒன்றுக்கு 4 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்து உள்ளனர். இதேபோல் நீர்ச்சத்து ஆகாரங்களை அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் மே மாதத்தில் என்ன செய்ய போகிறோம் என ஈரோடு மக்கள் புலம்பி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
    • போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 13-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அதியமான் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சட்ட விரோதமாக மது விற்பனையும், லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இத்தொடர்பாக அதிகாரிகளிடமும் மனுவும் அளித்து இருந்தனர். எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையும், மது விற்பனையும் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அதியமான் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென ஈரோடு-பவானி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை நேரம் என்பதால் பள்ளிகளுக்கு, அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே 24 மணி நேரமும் மது விற்பனையும், சட்டவிரோத மாக லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது. மது குடித்து வரும் நபர்களால் எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    மேலும் கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப்போல் எங்கள் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றனர்.

    இதனை அடுத்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு இருந்தது.

    • நமது இந்திய தேசத்தில் பிரிண்ட் ரக துணிகள் அதிகம் உற்பத்தி ஆவது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் தான்.
    • எல்லோரும், எல்லா வயதினரும் விரும்பும் வகையில் டிசைன் வடிவமைக்கப்பட்டு பிரிண்ட் செய்கிறோம்.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் செயல்படும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு துணி ரகங்கள் நெசவு செய்யப்படுகிறது. பெட்ஷீட்கள், படுக்கை விரிப்புகள், திரை சீலைகள், தலையணை உறை, துண்டு ரகங்கள், வீட்டு உபயோக துணி வகைகள், மேட் ரகங்கள், துணி பைகள், மேட் ரக பைகள், சால்வை ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் என பல வடிவங்களில், பல வண்ணங்களில் மக்கள் விரும்பும் விதமாக நெசவு செய்யப்படுகிறது.

    இதில் குறிப்பாக சென்னிமலை பகுதி கைத்தறிகளில் கோரா நூலில் நெசவு செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பிரிண்ட் செய்யப்படும் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரை சீலைகள் 25 வருடங்களாக விற்பனை தொய்வில்லாமல் நடந்து வருகிறது.

    நமது இந்திய தேசத்தில் பிரிண்ட் ரக துணிகள் அதிகம் உற்பத்தி ஆவது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் தான். இங்கு பிரிண்ட் செய்யப்படும் துணி ரகங்கள் உலக புகழ் பெற்றவை.

    இதை சென்னிமலை படுக்கை விரிப்புகளில் புகுத்த 25 வருடங்களுக்கு முன்பு கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் முடிவு செய்து சென்னிமலையில் கைத்தறியில் உற்பத்தியாகும் கோரா நூல் துணி ரகங்களை அனுப்பி அங்கு பிரிண்ட் செய்யப்பட்டு படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள், திரை சீலை ரகங்கள் அறிமுகம் செய்தனர்.

    இந்த ஜெய்பூர் பிரிண்ட் ரக துணிகள் நல்ல விற்பனை ஆனது. அதை தொடர்ந்து 25 வருடங்களாக புது புது வண்ணங்கள், தற்போதுள்ள இளம் தலைமுறையினறும் விரும்பும் டிசைன்கள் பிரிண்ட் செய்யப்பட்டு விற்பனை நடக்கிறது.

    25 வருடங்களாக ஜெய்பூர் ரக பிரிண்ட படுக்கை விரிப்புகளை பிரிண்ட் செய்து கைத்தறி சங்கங்களுக்கு கொடுக்கும் ஜெய்பூரை சேர்ந்த ராஜேந்திரகுமார் பட் கூறும்போது:-

    எங்கள் ஜெய்பூர் பிரிண்ட் துணிகளில் மிக நேர்த்தியான பிரிண்ட் செய்கிறோம், இயற்கை சாயம் கொண்டு ஆர்க்கானிக் முறையில் பிரிண்ட் செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு சரும பிரச்சனைகளை உண்டாக்காது.

    மேலும், எல்லோரும், எல்லா வயதினரும் விரும்பும் வகையில் டிசைன் வடிவமைக்கப்பட்டு பிரிண்ட் செய்கிறோம். இந்த ரக பிரிண்ட் படுக்கை விரிப்புகள் வண்ணம் பளபளப்பாக இருக்கும். துணிகளை துவைப்பது எளிது. மேலும் எத்தனை சலவை செய்தாலும் சாயம் போகாது. மினுமினுப்பு தன்மை குறையாது.

    இதனால் கடந்த 25 வருடங்களாக இந்த படுக்கை விரிப்புகள் மவுசு குறையாமல் சென்னிமலை பகுதி கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் விற்பனை தொய்வில்லாமல் நடக்கிறது என்றார்.

    எந்த துணி ரகங்கள் ஆனாலும், 25 வருடங்களாக விற்பனையினை குறிப்பாக ஒரு தலைமுறை தாண்டியும் மவுசு குறையாமல் வைத்திருப்பது போற்ற தகுந்தது தான். அப்படிதான் சென்னிமலை கைத்தறி ஜெய்பூர் பிரிண்ட் ரக படுக்கை விரிப்புகளும் மவுசு குறையாமல் உள்ளது.

    தற்போது வரும் தீபாவளி விற்பனையினை கருத்தில் கொண்டு புதிய ரக ஜெய்பூர் பிரிண்ட் படுக்கை விரிப்புகளை உருவாக்க கைத்தறியாளர்கள் சோதனையினை தொடங்கி உள்ளனர்.

    • இரவு பொருட்களின் இடையில் பாம்பு இருப்பதைக்கண்டு மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • வீட்டின் படிக்கட்டில் பழைய பொருட்கள் வைக்கும் போது கவனத்துடன் கையாள வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் பெட்ரோல் பங்க் அருகே மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தின் படிக்கட்டின் கீழ் மின்வாரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இரவு இந்த பொருட்களின் இடையில் பாம்பு இருப்பதைக்கண்டு மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த யுவராஜ் பாம்பை தேடினார். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மின்வாரிய அலுவலகப் பொருட்கள் அடியில் பதுங்கி இருந்த பாம்பை வெளியே கொண்டு வந்தார். அது சாரைப்பாம்பு. 8 அடி நீளம் இருந்தது. அந்த பாம்பை லாபகமாக பிடித்த யுவராஜ் வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

    இதேப்போல் ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள ஒரு வீட்டின் படிக்கட்டில் இருந்த 5 அடி நீள நல்ல பாம்பை பாம்பு பிடி வீரர் யுவராஜ் பிடித்தார். ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டையில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் பதுங்கி இருந்த 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பையும் அவர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

    இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் கூறும்போது,

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெப்பத்தை தாங்க முடியாமல் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி வர தொடங்கியுள்ளன. எனவே பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    வீட்டின் படிக்கட்டில் பழைய பொருட்கள் வைக்கும் போது கவனத்துடன் கையாள வேண்டும். அதை போன்று பிரிட்ஜ், வாஷிங் மெஷின் அடிப்பகுதியில் பாம்புகள் வர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

    ×