search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மொடக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • இரவில் வீட்டுக்கு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அருகே சோலார் ஈ.பி.நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நடமாற்றம் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    இதில் கடந்த 9-ந் தேதி மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டுவது, காலிங் பெல்லை அழுத்தும் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதேபோல் அந்த நபர் அந்த பகுதியில் உள்ள பல்வேறு வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டுவதும் பதிவாகி உள்ளது.

    இதனால் அந்த பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகி ன்றனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சமீபகாலமாக நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த நபர் கத்தியுடன் சுற்றி வருவதால் நாங்கள் பீதி அடைந்துள்ளோம். இது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வீடுகளின் கதவை தட்டுவது, காலிங் பெல் அடிப்பது இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் இரவில் வீட்டுக்கு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வீடு, வீடாக கதவை தட்டுவது, காலிங் பெல்லை அடித்து சிறிது நேரம் நிற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். அந்த நபரால் பெரிய பிரச்சனை ஏற்படும் முன் அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மக்கள் கூறினர்.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 538 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இதேபோல் பில்லூர் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 538 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 85.47 அடியாக அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 600 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.80 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25 அடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு மாவட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த 20-ந் தேதி திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
    • குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த மலை கிராமங்களுக்கு கடந்த 20-ந் தேதி திடீரென மின்சாரம் தடைப்பட்டது. அதனை த்தொடர்ந்து மின்சாரமின்றி இந்த மலை கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இன்று 6-வது நாட்களாக அவதி பட்டு வருகின்றனர்.

    மலைகிராமம் கேர்மாளம், ஒசட்டி, காட ட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், பூதாளபுரம் என 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. மின் தடையால் ஊராட்சிக்கு செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர்.

    மின்தடையால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், செல்போன் கூட ஜார்ஜ் செய்ய முடியாமல் அவசர தேவைக்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது.விவசாயிகள் பயிர்களுக்கு நீர்பாச்ச முடியாமலும், பள்ளி மாணவ-மாணவிகள் படிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாக வேதனையாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து 6-வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும், மின்வாரிய ஊழியர்களிடம் தகவல் அளித்து பயணில்லை என மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கந்தம்பாளையம் பகுதியில் அரசு ஊராட்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. இதை தொடர்ந்து மாணவர் சேர்க்கை அதிகரிக்க அரசு பள்ளி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இதைத் தொடர்ந்து இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கந்தம் பாளையம் பகுதியை சேர்ந்த அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் உதவியுடன் ஸ்மார்ட் கிளாஸ் மூலமாக ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதற்கு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

    இதையடுத்து 30 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த தொடக்கப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 65 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தினமும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களுடைய பணிநேரம் போக மீதம் உள்ள நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் ஆன்லைன் மூலம் ஆங்கிலத்தை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.

    ஆன்லைன் மூலமாக வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுடன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் வகுப்புகளை கற்பதுடன் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்கள்.

    இந்த அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை விட ஒரு படி உயர்ந்து தனியார் பள்ளி மாணவர்களை விட கூடுதலாக ஆங்கிலத்தில் தங்களது பேச்சு, எழுத்து திறன்களை மேம்படுத்தி உள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பள்ளியில் உள்ள மாணவர்களின் ஒழுக்கத்திறனை மேம்படுத்தும் விதமாகவும் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும், மாணவர்களின் வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அதனை கண்ட இடங்களில் தூக்கி வீசாமல் அதனை சேமித்து வைத்து பள்ளியில் ஒப்படைத்து வருகிறார்கள்.

    அந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்காக விற்பனை செய்து அதில் வரும் நிதியை கொண்டு பள்ளிக்கு பின்பு சிறிய அளவிலான தோட்டம் அமைத்து அதில் செடிகளை வைத்து மாணவர்களே பராமரித்து வருவதாகவும் அவற்றில் இருந்து வரும் காய்கறிகளை பள்ளி சத்து ணவு திட்டத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் பெருமையுடன் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் மூலமாக உதவி கரம் பெற்று ஏழை, எளிய மாணவர்களின் கல்வித்தரத்தை ஆங்கில வழியில் உயர்த்துவதுடன் மாணவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்திடவும் அவர்கள் வரும் காலங்களில் மேல் படிப்பிற்கு உதவுவ தாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார். 

    • கடந்த 10 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்துள்ளது.
    • முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இதேபோல் பில்லூர் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 538 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 85.10 அடியாக அதிகரித்து உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்துள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 600 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.80 அடியாக உள்ளது. இதே போல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25 அடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு மாவட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த 2 வருடங்களாக அந்தப் பகுதிகளுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை.
    • சென்னிமலை போலீசார் பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட மொட்டையன் காட்டுப்புதூர் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பைப்லைன் அமைத்து சுமார் 13 கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    ஆனால் கடந்த 2 வருடங்களாக அந்தப் பகுதிகளுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பைப்லைன் மூலம் போதுமான தண்ணீர் அனுப்பப்பட்டும் மொட்டையன் காட்டுபுதூர் பகுதிக்கு ஏன்? சரியாக தண்ணீர் கிடைப்பதில்லை என்பதற்காக முருங்கத்தொழுவு ஊராட்சி நிர்வாகத்தினர் பைப் லைனை ஆய்வு செய்தனர்.

    அப்போது முருங்கத் தொழுவை சேர்ந்த பெரியசாமி என்ற விவசாயி கடந்த 2 ஆண்டுகளாக தனது விவசாய நிலத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டக் குழாயை உடைத்து முறைகேடாக தண்ணீர் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முருங்கத் தொழுவு ஊராட்சித் தலைவர் பிரபா தமிழ்செல்வன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சென்னிமலை போலீசார் பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கொண்டு செல்லப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட குழாயை உடைத்து முறைகேடாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு வருடத்துக்கு பிறகு இந்த கொலை-கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ஒட்டன்குட்டை பகுதியில் கரியாங்காட்டு தோட்டத்தில் வசித்தவர் முத்துசாமி (85). விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (74). இவ்வூரின் அருகில் தோட்டத்து வீட்டில் விவசாயி முத்துசாமியும், அவரது மனைவி சாமியாத்தாளும் தனியே வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டில் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முத்துசாமி மற்றும் அவரது மனைவி சாமியாத்தாள் இருவரையும் இரும்பு ராடு மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு பீரோவை உடைத்து அதிலிருந்து 15 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதேபோல் கடந்த 2022-ல் சென்னிமலை அடுத்துள்ள உப்பிலிபாளையம் பகுதியில் குட்டையகாட்டு தோட்டத்தில் வசித்து வந்த விவசாயி துரைசாமி கவுண்டர் என்பவரை நள்ளிரவில் கொலையாளிகள் படுகொலை செய்து விட்டு அவரது வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

    இந்த 2 படுகொலை சம்பவங்களை சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு இந்த கொலை-கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் கண்ணன் (25). இவர் இந்த 2 படுகொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையை அவரும் மற்ற சிலரும் சேர்ந்து செய்ததாக ஒப்புக்கொண்டனர். பிடிபட்ட கண்ணனிடம் இருந்து அரை பவுன் நகை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் உப்பிலிபாளையம் பகுதியில் குட்டைய காட்டுத் தோட்டத்தில் விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ் பட்டி, பொதிகை நகரை சேர்ந்த காளியப்பன் மகன் இளையராஜன் (28). இவர் மற்றும் கண்ணன் ஆகிய இருவரிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு மாதங்களாக வேறொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை போலீசார் சென்னிமலை அழைத்து வந்து தீவிர விசாரணை செய்து இந்த 2 வழக்குகளிலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தமிழகம் முழுவதும் சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்.
    • குற்றவியல் சட்டம் குறித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதியிலும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று இருக்கிறது. இதற்கு தமிழக மக்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

    மாஞ்சோலை தேயிலை தோட்டம், மின்கட்டண உயர்வு, வேலை உறுதித்திட்டம், மத்திய அரசின் குற்றவியல் சட்டம் குறித்து 4 நாள் கூட்டத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மின்கட்டண உயர்வு என்பது மத்திய அரசின் நிர்பந்தத்தினால் தமிழக அரசு உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் மக்கள் பாதிக்கப்படுவதால், கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி வரும் ஜூலை 29-ந் தேதி அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    குற்றவியல் சட்டம் குறித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆகஸ்ட் 9-ந் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்.

    வேலை உறுதி திட்டத்தில் 4 மாத காலமாக வேலையும், ஊதியுமும் வழங்கவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. வேலை வழங்கப்பட வில்லை என்றால் வேலை உறுதி அளிப்பு சட்டப்படி பாதி ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய அரசு இதற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்காமல், வேலை நாட்களையும், ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை தேயிலை தோட்டம் தனியார் வசம் தான் உள்ளது. 2028-ம் ஆண்டு வரை தனியார் வசம் தான் இருக்கும். ஆனால் அதற்குள் தொழிலா ளர்களை வெளியேற்றும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

    உயர் நீதிமன்றம் மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் வெளியேற்ற கூடாது என்று கூறி உள்ளது. தமிழக அரசு தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.
    • வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

    நம்பியூர் அடுத்துள்ள பருத்திக்காட்டு பாளையத்தில் சிறிய அளவிலான விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு சென்று பார்த்த போது, மரத்தின் உயரமான கிளையில் இருந்து அதிக அளவில் பால் வடிவது கண்டு ஆச்சரியமடைந்தனர்.

    விநாயகர் கோவில் அருகே உள்ள வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவது குறித்து தகவல் அறிந்த அருகில் உள்ள கிராம மக்களும் வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழலாக நிலவியது.

    • அணையின் உள்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.
    • அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து சென்றது.

    சென்னிமலை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பரவலாக பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதை அடுத்து கோவை, திருப்பூர் வழியாக வரும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.17-ம் தேதி காலை நிலவரப்படி ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கம் இல்லை. அப்போது அணைக்கு வினாடிக்கு 59 கன அடி தண்ணீர் மட்டுமே நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 59 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அப்போது அணைக்கு வந்த தண்ணீரில் இருந்த உப்புத்தன்மை (டிடிஎஸ்) 1640 இருந்தது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் நள்ளிரவு நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 9 அடி தண்ணீர் தேங்கி நின்றது. அணையின் உள்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 393 கன அடி தண்ணீர் நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 229 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று பகலில் மீண்டும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 418 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து சென்றது. நேற்று மாலை அணையில் 11.6 அடி தண்ணீர் தேங்கி நின்றது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் இன்னும் ஒரிரு நாளில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நொய்யல் ஆற்றை யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்று பொது பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சேலத்திலிருந்து ஈரோடு வழியே இயக்கப்பட்ட அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றது. ஆனால் ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சேலம் - ஈரோடு இடையே அரசுப் பேருந்து ஒன்று திடீரென பழுதானதால், பயணிகளை இறக்கிவிட்டு மாற்று வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.

    பின்னர் ஓட்டுநரும் நடத்துநரும். பழுதடைந்த பேருந்தினை ஈரோடு பணிமனைக்கு கொண்டு செல்லும் பொழுது, பேருந்தின் முன்சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றது.

    பேருந்தில் பயணிகள் இல்லாததாலும், சாமர்த்தியமாக ஓட்டுநர் பேருந்தினை இயக்கியதாலும், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது.
    • துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

    சித்தோடு:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை டிரைவர் கார்த்திகேயன் இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.

    இந்நிலையில் சுமார் 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ் சாலையில், பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கார்த்திக் கேயன், பஸ்சை உடனடியாக சாலை யோரமாக நிறுத்திய தோடு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளார். டிரைவரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் பஸ்சில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×