என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துக்கு வெளியே துவார கணபதி ஸ்ரீமுருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
    • விநாயகர் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் தேரடி முனீஸ்வரப் பெருமாள் அருள்பாலிக்கின்றார்.

    இத்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் சிலா ரூபத் திருமேனி மிகவும் கவினுற வடிக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும். தென்திசை நோக்கி உலகின் முதல் ஞான குருவாக அமர்ந்து "ஓம்" என்னும் பிரணவப் பொருளை சனகாதி நால்வருக்கு உபதேசம் செய்த மூர்த்தியான இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறந்த கல்வி ஞானமும் வாழ்க்கையில் உயர்வான நிலையும் கிடைக்கும் என்பது உறுதி.

    மும்மலங்களால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, அவற்றினின்று விடுபட்டு, பரமாத்மாவுடன் சேர வேண்டும் என்ற அற்புத விளக்கத்தை உணர்த்தவே தம் வலது திருக்கரத்தை சின்முத்திரை 'காட்டி அருளும் இந்த தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட்டால் நவக்கிரக குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்.

    கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துக்கு வெளியே துவார கணபதி ஸ்ரீமுருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.

    ஆற்றங்கரை விநாயகர்

    விநாயகர் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் தேரடி முனீஸ்வரப் பெருமாள் அருள்பாலிக்கின்றார். சங்கராபரணி நதியில் நீராடிவிட்டு சந்நிதிக்கு வரும் பக்தர் ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை வலம் வந்து தரிசனம் செய்த பிறகே கோவிலுக்கு வந்து ஈசனைத் தரிசனம் செய்யவேண்டும்.

    • பூம்புகார் நகரில் கிடைத்த செங்கற்களை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    • கோவிலுக்கு அருகிலேயே பெரிய தீர்த்தக்குளம் இருந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    திருக்காஞ்சி தலம் சங்க காலம் முதலே புகழ் பெற்றுத் திகழ்ந்தது என்பதற்குச் சங்கராபரணி ஆற்றின் இருகரைகளிலும் காணப்படும் செங்கற்களே ஆதாரமாக உள்ளன. இவை யவனர்கள் குடியிருந்த அரிக்கமேடு மற்றும் புதையுண்ட பூம்புகார் நகரில் கிடைத்த செங்கற்களை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் இங்கு கிடைத்த பழமையான முதுமக்கள் தாழிகளும் சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மைகளும் பெரிய கட்டிடங்களின் சிதைவுற்ற அடித்தளங்களும் இப்பகுதியின் பழமையையும் சங்க காலத் தொடர்பையும் உறுதிப்படுத்துகின்றன. கி.பி. 6-ம் நூற்றாண்டிற்குப் பிறகு ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் இந்து சமயத்தில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டதால் சோழ மன்னர்களின் காலத்தில் திருக்காஞ்சி தலத்திற்கு பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    திருக்காஞ்சி திருத்தலம் ஊழிக்கால வெள்ளத்தில் பாதிக்கப்படுவதற்கு முன்பாக மூலவர் அருள்பாலித்த கருவறை தஞ்சைப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மற்றும் திருவதிகை கோவில் ஆகிய கோவில்களின் கருவறையை ஒத்திருந்துள்ளது. நாற்புறமும் மிகப்பெரிய மதில்களால் சூழப்பட்டிருந்தது என்றும் கோவிலுக்கு அருகிலேயே பெரிய தீர்த்தக்குளம் இருந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    மேலும் தற்போது அமைந்துள்ள காமாட்சி அம்பிகையின் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முக மண்டபம் என தனிச் சந்நிதியாக அமைந்திருந்தது என்றும் இக்கோவில் "திருக்காமகோட்ட நாச்சியார் கோவில்" என்று அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

    இத்தலத்திலிருந்த ஆயிரங்கால் மண்டபமும் ஆற்று வெள்ளத்தால் சிதைக்கப்பட்டுவிட்டது. கோவிலின் புனித தீர்த்தம் முதலாம் குலோத்துங்க சோழனால் செப்பனிடப்பட்டது என்பதை இக்கோவிலின் சிதைந்த கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

    • திருமால் மற்றும் சூரியனின் சன்னதிகள் ஒரு சதுர வடிவ மண்டபத்தின் வழியாக சிவனுடன் இணைகின்றன.
    • கோவில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலம், வாரங்கல் நகரில் ஹனுமக் கொண்டா என்ற இடத்தில் வரலாற்றுச் சிறப்புடைய ருத்திரேஷ்வர் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலை ஆயிரம் தூண் ஆலயம் என்றே அழைக்கின்றனர். காகத்திய வம்ச மன்னர் ருத்ரதேவன் என்பவரால் கி.பி. 1175 முதல் கி.பி. 1324 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்டக் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் காகத்திய வம்சத்தின் கட்டடக் கலைகளில் தலைசிறந்ததாய்க் கருதப்படுகிறது.

    நட்சத்திர அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த 'ஆயிரம் தூண் ஆலயம்', கல்லிலேச் செதுக்கப்பட்ட யானை வரிசையும், துளைத்துச் செதுக்கப்பட்ட ஜன்னல் அமைப்புகளும் காக்கத்திய வம்சத்தின் கட்டடக் கலையின் நுணுக்கத்திற்குச் சான்றாக உள்ளது.

    கோவிலில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட தூண்கள் உள்ளன. மேலும் சிக்கலான செதுக்கப்பட்ட வடிவியல் வடிவமைப்புகளில் முக்கால்வாசி புடைப்புகள் உள்ளன. வெளிப்புறச் சுவர்களில் உள்ள சிற்பங்கள் மிகச்சிறப்பானவை. கோவிலுக்குள் நுழையும் போது, நுழைவாயிலின் இருபுறமும் யானைகளின் அழகிய சிற்பங்கள் பார்வையாளர்களை வரவேற்கின்றன.

    இக்கோவிலின் உட்புறம் சிவன், திருமால், சூரியன் என்று மூவருக்கும் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது, மற்ற இரண்டு சன்னதிகள் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ளன. காகதீய ஆட்சியாளர்கள் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தனர். மேலும் அவர்கள், அதிகாலையில் சூரியனின் கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது பட வேண்டும் என்று விரும்பினர்.

    திருமால் மற்றும் சூரியனின் சன்னதிகள் ஒரு சதுர வடிவ மண்டபத்தின் வழியாக சிவனுடன் இணைகின்றன. இக்கோவிலினுள் பல்வேறு தெய்வங்களுக்கான சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு. பிரம்மா, சிவன், திருமால் என்றழைக்கப்படும் முப்பெருங்கடவுள்களில் இங்கு பிரம்மாவிற்குப் பதில், சூரியன் மூன்றாவது பெருங்கடவுளாக இடம் பெற்றிருப்பதால், இந்தக் கோவில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

    • சிவபெருமானின் ஆணைப்படி, மகாலட்சுமியின் செல்வங்களைப் பாதுகாக்கும் காவலராக இவர் நியமிக்கப்பட்டார்.
    • நவநிதிகளின் அருளைப் பெறுவதால் வாழ்க்கையில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

    சங்கநிதி குபேரனின் செல்வத் தேவதைகளில் ஒருவராகவும், செல்வச் செழிப்பைக் குறிக்கும் வலம்புரிச் சங்கினை கையில் ஏந்தியவராகவும், சிவபெருமானின் அருளால் செல்வங்களை நிர்வகிப்பவராகவும் போற்றப்படுகிறார். குபேரனின் நவநிதிகளில் முதல் நிதியாகக் கருதப்படும் சங்கநிதி, பதுமநிதியுடன் இணைந்து கோவில்களின் வாயில்களில் நிலைபெற்று, பக்தர்களுக்குச் செல்வத்தை வாரி வழங்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார்.

    சங்கநிதியின் சிறப்பம்சங்கள்:

    குபேர நிதி: நவநிதிகளில் (ஒன்பது வகையான செல்வங்கள்) சங்கநிதி முதன்மையானது. இது சங்கினைப் போன்ற செல்வத்தை குறிக்கிறது.

    வலம்புரிச் சங்கு: சங்கநிதி தனது கைகளில் செல்வம், மங்கலம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான வலம்புரிச் சங்கினை வைத்திருப்பார்.

    செல்வக் காவலர்: சிவபெருமானின் ஆணைப்படி, மகாலட்சுமியின் செல்வங்களைப் பாதுகாக்கும் காவலராக இவர் நியமிக்கப்பட்டார்.

    வழிபாடு: கோவில்களின் நுழைவாயிலில் பதுமநிதியுடன் இணைந்து காட்சியளிக்கும் இவரை, வழிபாட்டால் செல்வம், தனம், தான்யம் மற்றும் நிலைத்த செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    பதுமநிதியுடன் தொடர்பு: பெரும்பாலும் பதுமநிதியுடன் சேர்ந்தே இவரைப் போற்றுவர். சங்கநிதி (சங்கு), பதுமநிதி (தாமரை) இரண்டும் குபேரனின் நிதிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நவநிதிகளின் அருளைப் பெறுவதால் வாழ்க்கையில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

    • அகத்தியர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு புண்ணிய நீர் வேண்டும் என்று சிவனை பிரார்த்தனை செய்தார்.
    • சிவபெருமான் மேற்கு நோக்கி இருக்கிறார்.

    கோவிலில் உள்ள சிவலிங்கம் அகத்தியர் கையால் பிரதிஸ்டை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கத்திற்குரிய சிறப்பு என்னவென்றால் மற்ற சிவலிங்கங்களில் உருண்டை வடிவில் மேல்பகுதி இருக்கும். ஆனால் இந்த லிங்கத்தில் 16 பட்டைகள் கொண்டு இருப்பதால் சோடசலிங்கம் என்று பெயர். தமிழில் இதை பூரணா கலாலிங்கம் என்றும் சொல்வர். ஆய கலைகள் 16-ம் ஒரே இடத்தில் அமைந்துள்ளது.

    அகத்தியர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு புண்ணிய நீர் வேண்டும் என்று சிவனை பிரார்த்தனை செய்தார். அப்போது வராகநதி என்று ஒரு நதி உள்ளது. இது செஞ்சி என்ற ஊரில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி ஓடி புதுச்சேரி கடலில் கலக்கும்.

    இந்த நதியை திருக்காஞ்சிக்கு திருப்புவதற்கு சிவபெருமான் வராகருக்கு ஆணையிடுகிறார். வராகர் அவருடைய கொம்பினால் கீரி மேற்கில் இருந்து வடக்கு பக்கமாக திருப்பி விடுகிறார். இதனால் இது வராக நதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி திருக்காஞ்சிக்கு அருகில் வடக்கு நோக்கி பாய்கிறது. இதற்கு அகத்தியர் சங்கராபரணி என்று பெயரிட்டு வழிபடுகிறார். சங்கரா என்றால் சிவபெருமான். பரணி என்றால் ஆபரணம். சங்கரனுக்கு ஆபரணமாக இருப்பவள் கங்கை. இதனால் சங்கராபரணி என்று அழைக்கப்பட்டது.

    இந்த நதியில் இருந்து நீர் எடுத்து பூஜை செய்கிறார் அகத்தியர். 17-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது கோவில் முற்றிலும் சிதிலம் அடைந்து தண்ணீரில் இறங்கியது. அதன் பின்னர் அங்குள்ள கிராம மக்கள் இந்த கோவிலில் உள்ள விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, ஜெயிஸ்டா தேவி, அம்பாளுக்கு எதிரில் உள்ள நந்தியம்பெருமான் இவர்களை மட்டும் மீட்டு கொண்டுவந்து கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர்.

    நாளடைவில் புதுச்சேரி அரசாங்கம் பணம் ஒதுக்கி 2016-ல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியது.பழமையான கோவிலில் கருங்கல்லால் ஆன குளக்கரை, படித்துறை இருந்தது என்பதற்கான 3 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

    அதில் முதல் கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் முதல் மதில் சுவரை 2-ம் குலோத்துங்க சோழன் அமைத்து கொடுத்துள்ளார் என்றும், ராஜேந்திர சோழன் படிகற்களை கட்டி கொடுத்தார் என்றும் உள்ளது. மற்றொரு கல்வெட்டில் ராஜேந்திரம் உடையார் இந்த கோவிலுக்கு நித்தியகொடி பூஜைக்கு தேவையான நெல்லை கொடுத்துள்ளார் என்றும் கல்வெட்டில் உள்ளது.

    இந்த திருத்தலத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் எல்லா சிவாலயங்களிலும் ஒரு அம்பாள் மட்டுமே இருக்கும். இங்கு காமாட்சி, மீனாட்சி என்று 2 அம்பாள் சுவாமிகள் உள்ளது. ஏனென்றால் காசிக்கு நிகரான தலம் என்பதால் காசியில் அன்னபூரணி, விசாலாட்சி அருள்பாலிக்கின்றனர். விருத்தகாசி என்று அழைக்கப்படும் விருத்தாசலத்தில் பாலாம்பிகை, விருத்தாம்பிகை என்று 2 அம்பாள் இங்கு உள்ளனர். அதேபோன்று இங்கு காமாட்சி, மீனாட்சி என்று இரண்டு அம்பிகை உள்ளனர்.

    இங்குள்ள சிவபெருமான் மேற்கு நோக்கி இருக்கிறார். பொதுவாக ரிஷிகள், தேவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள் மேற்கு நோக்கி அமைந்திருக்கும். உதாரணத்திற்கு கபாலீஸ்வரர். கற்பகாம்பாள் பூஜை செய்ததால் அவர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். அதேபோன்று மருந்தீஸ்வரர் வால்மீகி முனிவர் பூஜை செய்ததால் அவர் மேற்கு நோக்கி இருக்கிறார்.

    அதேபோல் முருகன் பூஜை செய்ததால் வைத்தீஸ்வரன்கோவில் மேற்கு நோக்கி இருக்கும். மார்க்கண்டேயர் பூஜை செய்ததால் திருக்கடையூரில் சிவலிங்கம் மேற்கு நோக்கி இருக்கும். அதேபோல் அகத்தியர் பூஜை செய்ததால் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். ஆயிரம் கிழக்கு நோக்கி இருக்கும் லிங்கத்தை தரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதே புண்ணியம் ஒரு மேற்கு நோக்கிய சிவபெருமானை தரிசனம் செய்தால் கிடைக்கும்.

    • ஈசன் அன்று முதல் இத்தலத்தில் தம்மை வணங்கும் அடியார்களுக்குப் பேரருள் புரிந்து வருகின்றார்.
    • அகத்திய மகரிஷியின் வேண்டுதலை ஏற்ற அம்மையப்பன், அவ்வாறே ஆகட்டும்!’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    திருக்கயிலாய மலையே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கரையிலாத கருணைப் பெருங்கடலாக அருளும் கயிலை நாதனுக்கும் மலையத்துவசன் பெற்ற மாமகள் அன்னை பார்வதி தேவிக்கும் திருமணம் என்பதாலேயே இவ்விழாக் கோலம்!

    ஈசனின் திருமண வைபவத்தைக்காண தேவர்களும் மகரிஷிகளும் வட திசை நோக்கிக் குவிந்தனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகம் சமநிலை பெறத் திருவுள்ளம் கொண்டார் சர்வேஸ்வரன், சர்வ வல்லமை பொருந்திய தவ முனியாம் குறுமுனி அகத்திய மகரிஷியை அழைத்து தென்திசையில் உள்ள பொதிகை மலை நோக்கிச் செல்ல ஆணையிட்டார்.

    உலகத்தைக் காத்து ரட்சிக்கும் உமாதேவிக்கும் பொன்னார் மேனியனுக்கும் நடைபெறும் திருமணக் காட்சியைக் கண்டு தரிசிக்க இயலவில்லையே என்ற ஏக்கம் கொண்ட அகத்திய மகரிஷி 'ஐயனே! அடியேன் தங்களது ஆணையினை சிரமேற்று இக்கணமே தென்திசை நோக்கிப் பொதிகை மலைக்குச் செல்கிறேன்.

    ஐயன் எமக்கு ஒரு வரமளித்து அருள வேண்டும். இப்புண்ணிய பூமியில் அடியேன் பயணிக்கும் வழியில் எங்கெல்லாம் உமா மகேஸ்வரப் பெருமானின் திருமணக்கோலத்தைக் காண விழைகின்றேனோ, அங்கெல்லாம் அம்பிகை சமேதராக எனக்குத் திருக்காட்சி தந்து அருள்பாலிக்க வேண்டும் என்று மனமுருக வேண்டினார். அகத்திய மகரிஷியின் வேண்டுதலை ஏற்ற அம்மையப்பன், 'அவ்வாறே ஆகட்டும்!' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    ஈசனின் ஆணைப்படி தென்திசை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்த அகத்திய மகரிஷி, புனித பூமியான புதுவையில் பாயும் சங்கராபரணி நதியில் நீராடி, ஈசனின் திருமணக்கோலத்தைத் தரிசிக்க எண்ணினார். தமது திருக்கரங்களினால் ஒரு ஷோடச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, உமையொரு பாகனைத் தன் சிந்தையில் நிறுத்தித் தவம் செய்து தியானிக்க, திரு நீலகண்டன் தன் தேவியோடு கோடி சூர்யப் பிரகாசனாகத் தோன்றி அகத்திய மகரிஷிக்குத் தன் திருமணக்கோலத்தைக் காட்டியருளினார்.

    'நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடனாவார்' என்ற வாக்கிற்கு ஏற்ப உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் இதயக்கமலத்தையே கோவிலாகக் கொண்டு எழுந்தருளி நித்யவாசம் செய்யும் ஈசன் அன்று முதல் இத்தலத்தில் தம்மை வணங்கும் அடியார்களுக்குப் பேரருள் புரிந்து வருகின்றார்.

    அகத்திய மகரிஷிகளின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசனின் திருமேனி இத்தலத்தில் அருள்பாலிப்பதால் இத்தலம் ஸ்ரீ அகத்தீஸ்வரம்' என்றும் பூஜிக்கப்படுகின்றது.

    சங்கராபரணி நதியின் புதுப்புனலால் செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளம் பெற்ற திருக்காஞ்சி திருத்தலத்தில் தமிழாய்ந்த தவமுனி அகத்தியப் பெருமான் ஸ்ரீ கங்க வராக நதீஸ்வரப் பெருமானைக் குறித்து தவம் செய்வதற்கு ஏதுவாகவே ஊழிப்பெரு வெள்ளத்தில் இருந்து உலகம் காத்த ஸ்ரீவராகப் பெருமானின் திருவருளால் சங்கராபரணி உத்தரவாகினியாக வடக்கு நோக்கித் திரும்பி பின்னர் வங்கக் கடலில் சங்கமிக்கின்றது.

    ஸ்ரீராமபிரான் இலங்கைக்குச் செல்லும் போது சங்கராபரணி நதியில் நீராடித்தம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து இத்தல ஈசனை வழிபட்டுள்ளார். மகரிஷி ஸ்ரீ ஓதர் இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்து தம் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுள்ளார்.

    • செல்வத்தின் தெய்வமான குபேரனிடம் இருக்கும் ஒரு தெய்வீக நிதியாகக் கருதப்படுகிறது.
    • சங்க நிதி செல்வத்தை வழங்கினால், பதும நிதி அறிவை வழங்குகிறது.

    பதும நிதி குபேரனின் ஒன்பது வகையான செல்வங்களில் (நவ நிதிகள்) முக்கியமான ஒன்றாகும். இந்து புராணங்களின்படி, இது செல்வத்தின் தெய்வமான குபேரனிடம் இருக்கும் ஒரு தெய்வீக நிதியாகக் கருதப்படுகிறது.

    பதும நிதியின் சிறப்புகள் இதோ:

    அறிவை அருளுதல்: பதும நிதி 'வெண்தாமரை' வடிவில் உருவகப்படுத்தப்படுகிறது. இது பக்தர்களுக்கு வெறும் பணத்தை மட்டும் தராமல், அந்தச் செல்வத்தை நல்வழியில் பயன்படுத்துவதற்கான அறிவையும் (புத்தி) அருளக்கூடியது.

    வளம் மற்றும் சந்ததி: இந்த நிதியைப் பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களும், புத்திர பாக்கியம் மற்றும் பேரக்குழந்தைகள் போன்ற குடும்ப வளமும் பெருகும் என்று நம்பப்படுகிறது.

    சத்துவ குணம்: பதும நிதி சத்துவ குணத்தைக் (உண்மை மற்றும் தூய்மை) குறிக்கிறது. அறநெறிகளின்படி (தர்மம்) ஈட்டப்படும் செல்வத்தை இது குறிக்கும்.

    சங்க நிதியுடன் தொடர்பு: பொதுவாகக் கோவில்களின் நுழைவாயில்களில் (எ.கா: தஞ்சை பெரிய கோவில்) சங்க நிதி மற்றும் பதும நிதி ஆகிய இருவரும் துவாரபாலகர்கள் போலச் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். சங்க நிதி செல்வத்தை வழங்கினால், பதும நிதி அறிவை வழங்குகிறது.

    குபேரனின் சேவகர்கள்: குபேரன் இந்த நிதிகளைத் தனித்தனி தேவகணங்களாக மாற்றித் தனது செல்வத்தைப் பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் பயன்படுத்துகிறார்.

    பதும நிதி மற்றும் சங்க நிதி ஆகிய இருவரையும் வணங்குவதன் மூலம் ஒருவருக்கு அழியாத செல்வமும், அதைச் சரியாகப் பயன்படுத்தும் ஞானமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • ஆழ்வார்கள் திகைத்தனர்.
    • கோவிலினுள்ளேயே துர்க்கையம்மன் சந்நிதி ஒன்று உள்ளது.

    ஆதி திருவரங்கத்துக்கு ஆன்மீக யாத்திரை செல்பவர்கள் அவசியம் திருகோவிலூர் கோவிலுக்கும் செல்ல வேண்டும். கோவில்களில் சிறந்தது திருக்கோவிலூர் என்று சொல்லும்படி சொல்லலொண்ணா சிறப்புகள் பெற்ற தலம் இது. மாபலியை வெல்ல வாமனர் திருவிக்கிரமனாக மூவுலகும் ஈரடியால் தாவியளந்த தலம்.

    மூலவர்: திருவிக்ரம பெருமாள் வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும் தாங்கி தனது வலக்காலை உயரத்தூக்கி விண்ணை அளந்தபடி கிழக்கு. நோக்கி நிற்கிறார். உற்சவ மூர்த்திக்கு ஆயனர் என்றும் கோபாலன் என்றும் பெயர். தாயார்: பூங்கோல் நாச்சியார்.

    தல தீர்த்தங்கள்: பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், சக்கர தீர்த்தம்,

    விமானம்: ஸ்ரீகர விமானம். கிருஷ்ணரின் நித்திய சாந்நித்தியம் பெற்ற பஞ்ச கிருஷ்ணாரண்ய சேத்திரங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்து பெருமாளை பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் ஸ்ரீமணவாள மாமுனிகளும் மங்களா சாசனம் செய்துள்ளனர். பேயார், பொய்கையார், பூதத்தார் என்னும் முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே பல தலங்களுக்கும் சென்று இறைவனை பாடி பணிந்து வந்தனர். பெருமாள் அவர்களை ஒன்று சேர்த்து வைக்க நினைத்தார். தற்செயலாக ஆழ்வார்கள் மூவரும் இவ்வூருக்கு வர நேரிட்டது. நல்ல இருட்டு நேரம். மழை வேறு. முதலில் வந்த ஆழ்வார் ஒரு வீட்டில் தங்க இடம் கேட்டார். ஒற்றை அறை கொண்ட அவ்வீட்டின் முன்புறம் ஒரு தாழ்வாரம் இருந்தது. மிக குறுகலான இடம். ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் வந்து விட்டால்...? மூன்று பேரும் நிற்கத்தான் வேண்டும்.

    வீட்டுக்குடையவன் முதலில் வந்தவருக்கு இடம் கொடுத்தான். அவர் படுக்கப்போகும் சமயம் இரண்டாமவர் வந்தார். நாராயணா நாராயணா என்றழைத்துக் கொண்டு...! இருவரும் அமர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் மூன்றாமவர் வந்துவிட்டார். மூவரும் எழுந்து நின்றனர். தாராளமாக நிற்கலாம். இருட்டு வேளையில் இவர்களுக்கிடையே இன்னொருவரும் புகுந்துகொண்டு நெருக்கத் தொடங்கி விட்டார்.

    ஆழ்வார்கள் திகைத்தனர். யார் அது? யார் அது? பெருமாள் பிராட்டியுடன் காட்சியளித்தார். ஆழ்வார்கள் மூவரும் மெய்மறந்து ஆளுக்கொரு அந்தாதி பாடி அரங்கனை பணிந்தனர். ஒருவரை ஒருவர் புரிந்துகொன்டு ஒன்றாக சிறிதுகாலம் தலயாத்திரை செய்தனர். இப்படி ஆழ்வார்களை ஒன்று சேர்த்து வைத்த பெருமாள் இவரே.

    ஸ்ரீவேதாந்த தேசிகன் தேகாளீஸ்துதியை இந்த கோவிலில்தான் இயற்றினார். எம்பெருமானார், ஜூயர் பரம்பரைக்குட்பட்ட தலம் இது. இக்கோவிலினுள்ளேயே துர்க்கையம்மன் சந்நிதி ஒன்று உள்ளது. இது தேவேந்திரமாக கருதப்படவில்லை. இத்தலத்திற்கு விழுப்புரத்தில் இருந்து அடிக்கடி பஸ்கள் செல்கின்றன. கடலூரில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் கூட பஸ்கள் செல்கின்றன. வேலூர் மார்க்கமாக செல்லும் திருச்சி- சித்தூர் பஸ்களும் இத்தலத்தின் வழியாக செல்கின்றன. விழுப்புரம், காட்பாடி ரெயில் பாதையில் உள்ள திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் இறங்கியும் இரண்டு மைல் தொலைவிலுள்ள ஊரை சென்றடையலாம். சகல வசதிகளும் உள்ள ஊர்.

    • பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
    • கிருஷ்ணருக்கு விருப்பமான தலமாக விளங்குகின்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் தென் பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம். இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

    முதல்யுகம் மற்றும் முதல் அவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது. இக்கோவில் மூன்று முக்கிய பாக்கியங்களை பக்தர்களுக்கு வழங்குகிறது. அவை முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம்.

    இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர். போகம் என்றால் மகிழ்ச்சி (சந்தோசம்) எனப் பொருள். அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது.

    அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார். அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியுள்ளார். அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீது வைத்துள்ளார். அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார். அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார். இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.

    வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசனைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

    இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தலமாக விளங்குகின்றது. இங்கு கிருஷ்ணர் கொடி மரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனிசன்னதியில் காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் வெண்னையும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார். பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.

    கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் 'கிருஷ்ணா ரண்யம்' என்றும் பெயர் பெற்றது. தமிழ் இலக்கணம் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் உள்ளதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும். காட்டை சார்ந்த பகுதியில் முழு முதற்கடவுள் 'கிருஷ்ணர்' இருப்பதனால், இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு, இது பலி பீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்துள்ளது. பக்தர்கள் பலி பீடத்தில் இருந்தே கிருஷ்ணரை சேவித்துக் கொள்கிறார்கள். இச்சன்னதியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணையும் மற்றொரு கையில் உரியோடும், ஆண் உருவோடு காட்சித் தருகின்றார்.

    தென்பெண்ணை ஆற்றின் தென்கரையோரம் மேட்டுப்பாங்கான பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. இதன் தோற்றமும் இதை உராய்ந்தாற்போல வடக்கிலும், கிழக்கிலும் நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதைக் கவர்ந்த கண் கொள்ளாக் காட்சியாய் இன்பம் அளிக்கிறது.

    • கருட சேவையின் மூலம் வேதங்கள் உணர்த்தும் பரம்பொருளைத் தரிசிப்பதாகக் கருதப்படுகிறது.
    • பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா வரும்போது, பக்தர்கள் அவரை நேரடி தரிசனம் செய்கிறார்கள்.

    கருட வாகன சேவை என்பது வைணவக் கோவில்களில், பிரம்மோற்சவம் போன்ற முக்கிய திருவிழாக்களின் போது, திருமால் கருடப் பறவையின் வடிவிலான வாகனத்தில் எழுந்தருளி, திருவீதிகளில் வீதி உலா வரும் நிகழ்வாகும். இது வைணவத்தில் மிக உயர்ந்த தரிசனமாகக் கருதப்படுகிறது, மேலும் இது செல்வத்தையும், மோட்சத்தையும் அளிக்கும் என்று நம்பப்படுகிறது. கருட வாகனம் 'பெரிய திருவடி' என்றும் அழைக்கப்படுகிறது,

    மேலும் கருட சேவையின் மூலம் வேதங்கள் உணர்த்தும் பரம்பொருளைத் தரிசிப்பதாகக் கருதப்படுகிறது. பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா வரும்போது, பக்தர்கள் அவரை நேரடி தரிசனம் செய்கிறார்கள். கருட வாகனத்தில் பெருமாளைத் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது வைணவர்களின் நம்பிக்கை. கருடன் வேதங்களின் வடிவமாக கருதப்படுவதால், கருட சேவையின் போது பெருமாளை தரிசிப்பது, வேதங்களின் சாராம்சத்தை உணர்வதற்கு சமம்.

    பல வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினாலும், கருட வாகன சேவை மிகவும் உயர்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    பல வைணவக் கோவில்களின் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் கருட சேவையும் ஒன்றாகும். கோவிலுக்குள் வர இயலாத முதியவர்கள், நோயுற்றவர்கள் போன்றோருக்காக இறைவன் கருணையுடன் வீதிக்கு எழுந்தருள்வதாகவும் கருதப்படுகிறது. சுருக்கமாக, கருட வாகனம் என்பது திருமாலின் மிக முக்கியமான வாகனங்களில் ஒன்று. கருட வாகன சேவை என்பது திருமாலின் பேரருளைப் பெற்று, மறுபிறப்பில்லா பேறு அடையும் ஒரு வைணவ வழிபாட்டு முறையாகும்.

    • பக்தி மூலம் அஞ்ஞானம் நீங்கி, இறை அருள் கிடைப்பதைக் குறிக்கும்.
    • பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது, பக்தி வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும்.

    சடாரி, கிரீடம் போன்ற வடிவில் இருந்தாலும், அதன் மேல் பகவானின் பாதங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், அந்த சடாரியை நம் தலையில் வைக்கும் போது, நாம் பகவானின் திருவடிகளை நேரடியாக நம் தலையில் தாங்குவதாகக் கருதப்படும்.

    ஆசிர்வாதம் மற்றும் அருள் பெறுதல்: இறை தரிசனத்திற்குப் பிறகு, சடாரி வைப்பதன் மூலம் பக்தர்கள் பகவானின் ஆசியையும் அருளையும் நேரடியாகப் பெறுவதாகக் நம்பப்படுகிறது.

    அஞ்ஞானத்தை நீக்குதல்: 'சடம்' என்றால் அஞ்ஞானம் அல்லது உலகப் பந்தங்கள் என்று பொருள். குழந்தைகள் பிறந்ததும் இவ்வுலகப் பந்தங்களில் பிணைப்பதே சடாரி வைப்பதன் ஒரு தத்துவமாகும். இது, பக்தி மூலம் அஞ்ஞானம் நீங்கி, இறை அருள் கிடைப்பதைக் குறிக்கும்.

    சடகோபர் பக்தியைப் பிரதிபலித்தல்: நாலாயிரதிவ்யபிரபந்தத்தை அருளிய நம்மாழ்வார் 'சடகோபன்' என்று அழைக்கப்படுகிறார். சடாரியை தலையில் வைப்பது, சடகோபரின் பக்தியை நினைவுகூறும் விதமாகவும், அவர் பகவானின் பாதங்களைக் கண்டடைந்ததைப் போல பக்தர்களும் அவரது அருளைப் பெற வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படுகிறது.

    பக்தி அனுபவத்தின் ஒரு பகுதி: பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது, பக்தி வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும். இது பக்தர்களுக்கு ஒரு புனிதமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.

    • கோவிலின் நுழைவு வாயிலில் அம்மனுக்கு இடதுபுறத்தில் இந்த விநாயகரை நாம் தரிசிக்கலாம்.
    • பக்தர்கள் கோவிலுக்கு சென்றவுடன் முதலில் இந்த விநாயகரைதான் வழிபட்டு செல்கிறார்கள்

    நாம் எந்த காரியங்களை தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுதான் தொடங்குகிறோம். அனைத்து கோவில்களிலும் விநாயகர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் விநாயகரை நின்ற கோலத்தில் தரிசனம் செய்யலாம்.

    பார்வதிதேவி குளிக்க செல்லும் போது விநாயகரை காவலுக்கு நிற்க சொல்லி விட்டு சென்றார். உட்கார்ந்தால் தூங்கி விடுவார் என்று எண்ணிய அன்னை, விநாயகரை நின்று கொண்டே இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனை ஏற்றுக்கொண்ட விநாயகர் அந்த இடத்தில் நின்று கொண்டே காவல் காத்தார். அதனால் இந்த கோவிலில் விநாயகர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    கோவிலின் நுழைவு வாயிலில் அம்மனுக்கு இடதுபுறத்தில் இந்த விநாயகரை நாம் தரிசிக்கலாம். 2 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளார். பக்தர்கள் கோவிலுக்கு சென்றவுடன் முதலில் இந்த விநாயகரைதான் வழிபட்டு செல்கிறார்கள். காரணம் இந்த விநாயகர் அவ்வளவு சக்தி படைத்தவராக அருள் பாலிக்கிறார்.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை இந்த விநாயகரிடம் வைத்து செல்கிறார்கள். அவர்களுக்கு நினைத்த காரியத்தை விநாயகர் நிறைவேற்றி வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த விநாயகருக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி உள்பட முக்கிய விழாக்களின் போது சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பார். விநாயகரை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவருக்கு உகந்த அருகம்புல் மாலை, வெள்ளெருக்கு மாலை உள்பட பலவித பூக்களை அணிவித்து வழிபட்டு செல்கிறார்கள்.

    ×