search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worship"

    • பன்னிரு திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் என்பதால் இது தேவாரம்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

    தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப்பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத் தையும் பார்க்கலாம்.

    பாடல்

    தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

    ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

    விளக்கம்

    திருஞானசம்பந்தர் ஒரு காதினில் தோட்டினையும், மற்றொரு காதினில் குழை ஆபரணத்தையும் அணிந்த பெருமான், காளையை தனது வாகனமாகக் கொண்டும், தன்னிடம் சரணடைந்த பிறை சந்திரனை தனது சடையில் ஏற்ற வண்ணமும், சுடுகாட்டு சாம்பலை, தனது உடல் முழுவதும் பூசியபடி இருக்கிறார். அவர் எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்வனாக விளங்குகிறார்.

    அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்ட தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் பிரம்மன், முன்பொரு நாளில் தன்னை பூஜித்து வணங்கியதன் காரணமாக, அவருக்கு படைப்புத் தொழிலை சரியாகச் செய்யும் வகையில் அருள்புரிந்தவர், சிவ தொறு பெருமான். இவரே பெருமை உடையதும், பிரமாபுரம் என்று அழைக் கப்படுவதுமான சீர்காழி நகரினில் உறைந்து அருள் செய்யும் எனது மதிப்புக்குரிய தலைவன் ஆவார்.

    • நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
    • இன்று காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது.

    நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் அந்த தேர் வடக்கு ரத வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து நேற்று 2-வது நாள் தேரோட்டம் நடந்தது. காலை 10 மணி அளவில் மீண்டும் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வடக்கு ரத வீதி, கிழக்குரத வீதி, கடைவீதி வழியாக மதியம் 2 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக கருணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறிய தேர் வடம் பிடித்து நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து நிலையை அடைகிறது. இரவு 10 மணிக்கு வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) பரிவேட்டையும், 25-ந்தேதி தெப்பத்தேர் விழாவும், 26-ந்தேதி நடராஜ பெருமாள் மகா தரிசனம் நடக்கிறது. 27-ந்தேதி மஞ்சள் நீர் விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவுபெறுகிறது.

    • நாளை அதிகாலையுடன் சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது.
    • அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று அதிகாலை தொடங்கியது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் நாளை அதிகாலையுடன் சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.

    அவைகள் நகர எல்லையில் உள்ள 13 தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர்.

    திருவண்ணாமலை நகரம் இன்று காலை பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் காட்டாற்று வெள்ளம் போல பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்கி சென்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்தனர்.

    பக்தர்கள் கூட்டத்தால் திருவண்ணாமலை நகரமே குலுங்கியது. பாதுகாப்புக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவச நிலையில் அண்ணாமலையாரை வணங்கிய படி செல்கின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கு விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாதம் விற்பனை செய்தனர். இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    • சித்திரத்தில் இருந்து பிறந்ததால் சித்திரகுப்தன்.
    • `குப்தன்’ என்றால் `கணக்கன்’ என்று பொருள்.

    ஒரு சமயம் கயிலாயத்தில் பார்வதியும், பரமேஸ்வரனும் அமர்ந்திருந்தனர். அப்பொழுது அவர்களை தரிசிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும், 41 ஆயிரம் மகரிஷிகளும் மற்றும் தபோவனர்களும் தேடி வந்தனர். பரமேஸ்வரன் 'பூலோகத்தில் உள்ள மானிடர்களின் பாவ - புண்ணிய கணக்குகளை எழுத ஒருவரை நியமிக்க வேண்டும்' என எண்ணினார். தற்போது 'நமக்கு இருக்கும் இரு புத்திரர்களுக்கும் (விநாயகர், முருகன்), அநேகமான பொறுப்புகள் இருப்பதால், புதியதாக ஒருவர் அதையெல்லாம் கவனிப்பது நல்லது' என நினைத்தார்.

    அப்பொழுது பார்வதி தங்கக் தகட்டில் வரைந்த அழகான சித்திரத்துடன் வந்தாள். அந்த சித்திரத்தைக் கண்ட பரமேஸ்வரன் அதிசயித்தார்.

    பரமேஸ்வரன் பார்வை பட்டதும், அந்தச் சித்திரம் உயிர் பெற்று எழுந்தது. சகல தேவர்களும் ஆச்சரியப்பட, உயிர் பெற்று வந்தவரிடம் `பாவ - புண்ணிய கணக்குகளை கயிலை மலையில் அமர்ந்து எழுது' என சிவபெருமான் உத்தரவிட்டார். சித்திரத்தில் இருந்து பிறந்ததால் இவரை 'சித்திரகுப்தன்' என அழைத்தனர்.

    'குப்தன்' என்றால் `கணக்கன்' என்று பொருள். அதே நேரத்தில் தேவேந்திரனும், இந்திராணியும், ஈசனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அதற்கான தவத்தை மேற்கொண்டிருந்தனர். இப்படி அவர்கள் தவம் இயற்றுவதற்கும் ஒரு காரணம் இருந்தது. அதை இங்கே பார்ப்போம்..

    ஒரு சமயம் தேவேந்திரன் பூமியில் புண்ணிய தலத்தை நோக்கி தீர்த்த யாத்திரை வந்தார். அப்போது வழியில் கவுதம மகரிஷியின் ஆசிரமத்தைக் கண்டார். அங்கு பேரழகுடன் இருந்த அவரது மனைவியான ரிஷி பத்தினி அகலிகையை கண்டார். அகலிகையை அடைய எண்ணி மறுநாள் காலையில் கோழி உருவெடுத்து சூரியன் உதிக்கும் முன் வந்து கூவினார். கவுதமர், பிரம்ம முகூர்த்தம் தொடங்கி விட்டதாக எண்ணி (சூரியன் உதிக்கப் போகிறான்) கங்கையில் நீராட கிளம்பினார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இந்திரன், கவுதமர் போல் வேடம் அணிந்து அகலிகையை அடைய ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

    அதே நேரத்தில் கவுதமர் கங்கையை நோக்கி செல்கையில், அநேக கொடிகளில் பூக்கள் அரும்பாகவே இருப்பதைக் கண்டார். பூக்கள் இன்னும் பூக்க ஆரம்பிக்கவில்லை. அதனால் பொழுது விடியவில்லை என திரும்பி வந்தார். கவுதமர் வருவதை அறிந்த இந்திரன் பூனையாக மாறி வெளியே ஓட எண்ணினான். ஆனால் கவுதமர், இந்திரனை மடக்கி "நீ எதற்காக இங்கு வந்தாய்?" என்றார்.

    அதற்கு பதிலளித்த இந்திரன், "இந்த வருட பஞ்சாங்க பலன் கேட்க வந்தேன்" என்றான். ஞான திருஷ்டியால் அனைத்தையும் அறிந்த கவுதமர், "நீ எதை எண்ணி காமம் கொண்டு இங்கு வந்தாயோ, அதே உனக்கு உண்டாகும். உன் உடல் முழுக்க ஆயிரம் யோனிகள் உண்டாகும்" என சபித்தார்.

    பின் அகலிகையின் பக்கம் திரும்பிய கவுதமர், "இந்திரன் என்பதை நீ அறியாமல் இருந்தாய். எனவே நீ கல்லாய் போவாய்" என சபித்தார். அதற்கு அகலிகை "நீங்கள் எவ்வளவு பெரிய மகரிஷி. நீங்கள் இவ்வாறு சொல்லலாமா? இதில் எனது தவறு ஒன்றும் இல்லை" எனக் கூறினாள்.

    (இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனியுங்கள். ரேணுகாதேவி ஜலத்தில் தெரிந்த கந்தர்வனின் உருவத்தை கண்ணால் கண்டு மனதால் விரும்பினாள். அதற்காக அவள் கற்பிழந்ததாக தலை வெட்டப்பட்டாள். ஆனால் அறியாமல் தன்னை இழந்த அகலிகை, மீண்டும் சாபத்தில் இருந்து விடுபட்டு கற்புக்கரசி என கொண்டாடப்பட்டாள். அந்த காலத்தில் கற்புக்கு வைத்துள்ள அளவுகோல் சரீரத்தை சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது என தெரிந்து கொள்ள வேண்டும்)

    உடனே கவுதமர், அகலிகையை நோக்கி "ராமாவதாரத்தில் ராமபிரானின் திருவடி, கல்லாயிருக்கும் உன்மேல் பட்டவுடன் உனக்கு சாப விமோசனம் ஏற்பட்டு, மீண்டும் என்னை வந்து அடைவாய்" என்று கூறினார். அப்போது இந்திரனும் கவுதமரின் திருவடியை வணங்கி, தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். "நீ பரமேஸ்வரனை குறித்து கயிலாயத்தில் தவம் செய். உனது ஆயிரம் யோனிகளும் ஆயிரம் கண்களாக மாறும்" என்று கூறி அருளினார்.

    அதே நேரத்தில் அகலிகை சிறிதும் கோபம் குறையாமல் "பெண்ணின் சாபம் பொல்லாதது. நீ தேவேந்திரனாக இருந்தாலும் கூட பத்தினி சாபம் உன்னை விடாது. பட்ட மரம் பூத்தாலும் பூக்கும், காய்க்காத மரமும் காய்க்கும். ஆனால் உனக்கு புத்திர பாக்கியம் ஏற்படாது" என சபித்தாள்.

    அடுத்து வந்த நாட்களில் இந்திரன், ஈசனை நினைத்து வழிபட்டதன் பலனாக, ஆயிரம் யோனிகளும், ஆயிரம் கண்களான மாறின.

    ஆனால் அகலிகை சபித்தது போல, இந்திரனுக்கு புத்திரப் பேறு மட்டும் கிடைக்கவில்லை. அந்த சாபம் நீங்கவே, இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சிவபெருமானை நோக்கி தவம் இயற்றினான்.

    அப்போது பரமேஸ்வரன், காமதேனுவை அழைத்து "நீ என்னை தரிசனம் செய்து கொண்டிருந்தது போதும். நீ இப்போது தேவலோகம் செல்" என்றார். அதற்கு காமதேனு "சுவாமி உமது தரிசனத்தை விட்டு, நான் தேவலோகம் செல்ல வேண்டுமா?" என கேட்க, "நீ கவலைப்படாதே.. தேவலோகம் சென்று நீ ஒரு குழந்தையை ஈன்று கொடுத்துவிட்டு இங்கு வந்து விடலாம்" என்றார், சிவபெருமான்.

    அதன்படியே காமதேனு தேவலோகம் சென்றது. ஆனால் காமதேனுவுக்கும் புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. இதனால் இந்திராணி மனம் கலங்கினாள். 'நமக்கு தான் குழந்தை பேறு இல்லை. காமதேனுவுக்கும் குழந்தை பாக்கியம் இல்லையே. பத்தினி சாபம் இப்படியா வதைக்கும்' என வருந்தினாள்.

    இதை அறிந்த பரமேஸ்வரன், சித்திரகுப்தனை நோக்கி "நீ காமதேனு கர்ப்பத்தை அடைந்து, அங்கு நீ புத்திரனாகப் பிறந்து தேவலோகத்தில் வசித்து வருவாய்" என கூறி அருளினார்.

    அவரது ஆணைக்கிணங்க, காமதேனு கர்ப்பத்தில் மூன்றே முக்கால் நாழிகை இருந்து, பின் கையில் எழுத்தாணி யுடன் பிறந்தார் சித்திரகுப்தன். தேவேந்திரன் ஒளி பொருந்திய சித்திரகுப்தனை வணங்கி, "நீ இங்கிருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொள்" என்றார்.

    குறுகிய காலத்தில் அனைத்து சாஸ்திரங்களையும் கற்ற சித்திரகுப்தன், தேவேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கி எமபுரியில் எமதர்மராஜனின் எமபட்டிணத்தில் கணக்கராக அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுத ஆரம்பித்தார்.

    சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தன் பிறந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நற்பலன்களைத் தரும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பசு மாட்டிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கோ பூஜை

    செய்ய வேண்டும். காமதேனுவின் வயிற்றில்இருந்து சித்திரகுப்தன் பிறந்ததால், அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் பசும்பால், பசு நெய், பசுந்தயிர் ஆகியவற்றை உணவில் சேர்க்க மாட்டார்கள். உப்பில்லாத உணவுதான் உண்பார்கள். தரையில் சித்திரகுப்தன் உருவத்தை எழுதி (அவர் சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதால்) வழிபாடு செய்வார்கள்.

    சித்திரகுப்தனுக்கு பலவித சித்ரான்னங்கள் படைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, பெண் சாபத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஜாதக தோஷங்களும் விலகும்.

    காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் (பவுர்ணமி) சித்தரகுப்தனுக்கு காலையில் விசேஷ பூஜையும், மாலையில் விமரிசையாக திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.

    சித்திர குப்தன் அங்க பூஜை

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நாமாவையும் சொல்லி பூக்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    * பாபநாசநாய நம: பாதெள பூஜயாமி (கால்)

    * கமலவர்ணாய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)

    * சித்ராயநம: ஜானுனீ பூஜயாமி (முட்டி)

    * சித்ரரூபாய நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)

    * நதாபீஷ்டதாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)

    * வ்ருகோதராய நம: உதரம் பூஜயாமி (வயிறு)

    * ஓம் ப்ராக்ஞாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு)

    * காலாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

    * பஹுரூபாய நம: பாஹூன் பூஜயாமி (புஜதண்டம்)

    * அந்தக ஸசிவாய நம: அதரம் பூஜயாமி (உதடு)

    * மத்யஸ்தாய நம: முகம் பூஜயாமி (முகம்)

    * கருணாநிதயே நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)

    * பத்ம நேத்ராய நம: நேத்ரே பூஜயாமி (கண்கள்)

    * நானாரூபாய நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)

    * லலிதாய நம: லலாடம் பூஜயாமி (நெற்றி)

    * சித்ரகுப்தாய நம: சிர: பூஜயாமி (தலை)

    * ஸர்வேச் வராய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி

    • திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.
    • திருநங்கைகள் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றி யத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதலில் உள்ளூரில் வசிக்கும் திருநங்கைகளுக்கும், இன்று காலை 7 மணி முதல் வெளியூர் திருநங்கைகளுக்கும் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

     மேலும், இன்று மாலை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.

    இன்று இரவு திருநங்கைகள் அனைவரும், தங்களின் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    நாளை (24-ந் தேதி) சித்திரை தேரோட்டம் தொடங்கும். தேர் வீதியுலா, தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களது கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது தாலிக் கயிறை அறுத்து விட்டு அருகில் உள்ள கிணறு, குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

    25-ந் தேதி விடையாற்றி உற்சவமும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி கள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
    • தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தேர்களில் 3-வது பெரிய தேர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    `பூலோக வைகுண்டம்' என போற்றப்படும் இக்கோவிலில் `சொர்க்க வாசல்' தனியாக கிடையாது என்பது தனிச்சிறப்பாகும்.

    இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது. மேலும், 7 ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கோவில் தேரோனது தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தேர்களில் 3-வது பெரிய தேர் ஆகும். இந்த தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல் தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும்.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கா.. சாரங்கா... பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 வீதிகளிலும் வலம் வந்து நிலையை வந்தடைய உள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருமலை:

    திருமலையில் நடந்து வரும் வசந்தோற்சவத்தின் 2-வது நாளான நேற்று தங்கத்தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    வசந்த மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு மாலை உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாகக் கோவிலுக்கு திரும்பினர்.

     வசந்தோற்சவத்தில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர், கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடப்பது வழக்கம். ஆனால், திருமலையில் வசந்தோற்சவம் நடப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவைைய திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை, பக்தர்கள் கவனித்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • உலகப்புகழ்பெற்றது சித்திரை திருவிழா.
    • கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

    மதுரை:

    கோவில் மாநகர் என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து மாதங்களிலும் திருவிழா நடைபெறும். இந்த விழாக்களில் உலகப்புகழ்பெற்றது சித்திரை திருவிழா. வரலாற்று சிறப்புமிக்க விழாவும்கூட..

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. அதாவது சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த ஒற்றுமை பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

    சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.

    அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

     நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

    இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி உள்ளார். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

    அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

     வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கள்ளழகர் வைகையில் இறங்கியபின், இன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    அப்போது கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருள்கிறார்.

    அங்கு நாளை (புதன்கிழமை) அதிகாலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடக்கின்றன. காலை 9 மணியளவில் திருமஞ்சனமாகி அங்கிருந்து சேஷவாகனத்தில் புறப்பட்டு பகல் 11 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.

    பின்பு மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் நடக்க உள்ளது.

    அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு இரவு 12 மணி முதல் விடிய, விடிய தசாவதார காட்சி நடக்கிறது. அப்போது அழகர் தசாவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    தொடர்ந்து 25-ந்தேதி காலை 6 மணிக்கு மோகினி அவதார கோலத்துடன் உலா வருகிறார். அதன்பின் பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருள்கிறார்.

    இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார். நள்ளிரவுக்குபின் 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    26-ந்தேதி காலை 8.50 மணிக்கு கருப்பணசுவாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியானவுடன் அழகர்மலைக்கு புறப்படுகிறார்.

    அன்று இரவு அப்பன்திருப்பதியில் திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் அழகர்மலையில் இருப்பிடத்தை அடைகிறார்.

    • மூன்று பெண் நாயன்மார்களில் இசைஞானியார் நாயனாரும் ஒருவர்.
    • தியாகராஜர் மீது பெரும் பக்தி கொண்டவராக இருந்தார்.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் உள்ள மூன்று பெண் நாயன்மார்களில் இசைஞானியார் நாயனாரும் ஒருவர். இவர் சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னையார் ஆவார். இவர் சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.

    சுந்தரமூர்த்தி நாயனாரை மகனாய் பெற்றதாலாயே, தாயான இசைஞானி நாயனாரையும், தந்தையான சடைய நாயனாரையும் நாயன்மார்களாகக் கொண்டாடி மகிழும் பாக்கியம் பெறுகிறோம். சுந்தரமூர்த்தி நாயனார், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

    சோழவள நாட்டில், கமலாபுரத்தில் (திருவாரூர்) கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு இசைஞானியார் மகளாகப் பிறந்தார். சிறுவயது முதல் சிவபெருமானின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு சிறந்த சிவபக்தையாக வாழ்ந்தும், வளர்ந்தும் வந்தார்.

    இவர் திருவாரூரில் உள்ள தியாகராஜர் மீது பெரும் பக்தி கொண்டவராக இருந்தார். குழந்தைப் பருவம் முடிந்து திருமண பருவத்தை அடைந்ததும், இவர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில், ஆதி சைவ மரபில் வந்த சிறந்த சிவபக்தரான சடையனார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    சடையனாரிடம் பதிபக்தியுடனும், சிவபெருமானிடம் சிவ பக்தியுடனும் எவ்விதமான குறைகள் இன்றி வாழ்ந்து வந்தார். தனக்கு பிறக்கும் குழந்தை தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதற்காக குழந்தையை கருவில் சுமக்கும்போதே சிவ நாமங்கள் மற்றும் சிவஸ்துதிகளை கற்பித்தார். இசைஞானியார் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரை புத்திரனாகப் பெறும் பேறு பாக்கியத்தை இசைஞானியாருக்கு அருளினார்.

    இசைஞானியார் நாயனார் சிவபக்தியும், பதிபக்தியும் பூண்டு வாழ்ந்து திருதொண்டத்தொகை பாடி, உலகையெல்லாம் உய்வித்த தெய்வ மகனை பெற்று முடிவில் சிவபெருமானின் பாதகமலம் அடைந்தார்.

    சிவபக்தியில் சிறந்த இசைஞானியார் நாயனார் இறைத்தொண்டு செய்து, சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் திருநாவலூரில் (விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது) முக்தி அடைந்தார். அன்றில் இருந்து முக்தி அடைந்த நாளை எல்லா சிவாலயங்களிலும் குருபூஜை ஆக கொண்டாடப்படுகின்றது. அதாவது இன்று இசைஞானியார் நாயனார் குரு பூஜை தினம்.

    • பாவ, புண்ணிய கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர்.
    • விடிய விடிய சித்ரகுப்த நயினார் கதையைப் படிப்பார்கள்.

    தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று. பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர். பார்வதி தேவி வரைந்த சித்திரத்தில் இருந்து பிறந்தவர் என்பதால், அவருக்கு சித்திரகுப்தர் என்ற பெயர் ஏற்பட்டது.

    சித்ராபவுர்ணமி நாளில் விரதமிருந்து விடிய விடிய சித்ரகுப்த நயினார் கதையைப் படிப்பார்கள். அந்த காலத்தில் பூஜை அறையில் ஓர் ஓலைச் சுவடியில், `சித்ரகுப்தன் படி அளக்க…' என்று எழுதி வைத்து வழிபடுவார்களாம். இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம்.

    சித்ர குப்தர் அவதார தினத்தில் அவரது கதையை படித்தாலோ கேட்டாலோ நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும். உடல் நலம் சீராக இருக்கும். சித்திரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனி சந்நதி உண்டு அங்கே ஏடும் எழுத்தாணியும் இன்ன பிற பொருளும் வைத்து முறையான பூஜையை நடத்தி பிரார்த்தனை செய்வார்கள்.

    நம்முடைய குற்றங்களை பொறுத்துக் கொண்டு நல்வாழ்வு அளிப்பார் என்பதற்காக சித்ரகுப்த பூஜை சித்ரா பவுர்ணமியில் நடைபெறுகின்றது. இந்த நாளில் செய்யும் தானம், சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
    • வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தஞ்சாவூா்:

    தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 9-ம் நாளான இன்று சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி அம்மனுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு தேரடியில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. 27-வது தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். திருவையாறு நான்கு ராஜ வீதிகளில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது. இன்று மாலையில் தேர் நிலையை வந்து அடையும். அப்போது தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    விழாவில் வரும் 25ஆம் தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. 26-ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • சித்தரகுப்தருக்கு உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே கோவில் உள்ளது.
    • சித்திர குப்தரை வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை.

    இந்துக்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரின் உயிரும் எமதர்மராஜாவால் எடுக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பூலோகத்தில் அவர்கள் செய்யும் பாவ- புண்ணியங்களை வைத்து எமதர்மராஜா அவர்களுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பது தீர்மானிப்பார் என்பது நம்பிக்கை. இதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு, சித்திரகுப்தருடையது.

    புராண வரலாறு

    புராணத்தின்படி சிவன் மற்றும் பார்வதி பூமியில் உள்ள அனைத்து மனிதர்களிடையும், நல்லொழுக்கமும் தர்மமும் அதிகம் இருக்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், ஈடுபவர்களும், நற்செயல்கள் செய்பவர்களையும் கண்காணிக்க யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தனர் எனவும், அதன் அடிப்படையில் சிவன் தங்கத்தட்டில் ஒரு படத்தை வரைந்தார் எனவும், பார்வதிக்கும் அதில் உடன்பாடு ஏற்பட்டது எனவும் நம்பப்படுகிறது.

    இருவருடைய அருளால் படம் உயிர் பெற்றது. சித்திரத்தில் இந்து உருவானதால் அவருக்கு சித்திரகுப்தர் என பார்வதி மற்றும் சிவன் ஆகியோர் பெயர் வைத்து, சித்திரகுப்தரிடம் மக்களின் பாவ-புண்ணிய கணக்குகளை பார்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர் என்பது ஐதீகம். இதனைத்தொடர்ந்து எமனின் கணக்காளராக அவர் நியமிக்கப்பட்டார் என்பது புராண கால நம்பிக்கையாக உள்ளது.

    வரவு கணக்கு செலவுகளை பார்க்கும் மிக முக்கிய கடவுளாக பார்க்கப்படும் சித்தரகுப்தருக்கு உலகில் எங்கும் கோவில் கிடையாது.

    ஒரே ஒரு கோவில் மட்டுமே உலகில் சித்திரகுப்தற்கு என உள்ளது. அந்த கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    தொடர்ந்து பல்வேறு காலங்களில் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 1911-ஆம் ஆண்டு கோவில் சீரமைப்பு பணியின் பொழுது சித்திரகுப்தன் மற்றும் அவரது மனைவி கர்ணிகாம்பாள் ஆகியோரின் இரண்டு உலோக சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அமைவிடம்

    சித்திரகுப்தர் கோயில் , காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ளது.

    சித்திர குப்தரை பூஜை செய்து வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை. தொடர்ந்து சித்திரகுப்தரிடம் தங்களுடைய வரவு மற்றும் செலவு கணக்குகளை ஒரு சீட்டில் எழுதி வைத்து, வேண்டிக்கொண்டால் நினைத்தல் லாபம் தொழிலில் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

    இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து கேதுவுக்கு அதி தேவதையாக சித்திரகுப்தர் விளங்குவதால் இவரை வணங்கினால் கேதுவால் உண்டாகும் தீமையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். எனவே கேது தோஷம் இருப்பவர்கள் சித்தரகுப்தரை வணங்கி வந்தால், வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை

    சித்ரா பவுர்ணமி

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்ற பின், பவுர்ணமி அன்று நகர்வலம் கொண்டு செல்லப்படுகிறார். ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்தரை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக நம்பிக்கை உள்ளது. எனவே இந்த நன்னாளில் சித்திரகுப்தரை வணங்கினால் அனைத்து பாவங்களில் இருந்தும் விடிவு பிறந்து, ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    ×