என் மலர்
நீங்கள் தேடியது "worship"
- கும்பகோணம் கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் உள்ளது.
- ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி மதிப்பில் கோவில் அமைத்துள்ளார்.
தலச்சிறப்பு
கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் உள்ளது. சேங்காலிபுரம் நாராயண தீஷிதர் புதல்வர் ராமதீஷீதர். இவர் இன்றும் பிரவசனம் செய்து கொண்டு வருபவர். இவரது புத்திரர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ்.
நாமசங்கீர்த்தனமே நாதன்தாள் பற்றுவதற்கான நல்ல வழி என்பதை உலகெங்கும் பறைசாற்றிய ஞானானந்த சுவாமிகள் சீடரான குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளையும், ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பிரேமி மகராஜ் ஆகியோரை தமது குருவாக ஏற்று நாடெங்கும் நாமசங்கீர்த்தனத்தை நடத்தி வருபவர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் ஆவார்.
வடமாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள ஸ்ரீபாண்டுரங்கனின் கோவிலை போன்று அனைத்து பக்தர்களும் கோவில் கர்ப்பகிரகத்தினுள் சென்று பகவானை தரிசிக்க வேண்டும் என்று ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி மதிப்பில் கோவில் அமைத்துள்ளார்.
பண்டரிபுரத்தில் இருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும் புதிய கோவிலில் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தனை கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மனிகளின் கதை சிற்பங்கள், பொன் போன்ற ஒளிரும் மேல் விதானம் மடப்பள்ளி போன்றவைகள் தெய்வீகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பசுக்களுக்கான பிரத்தியேக கோசாலை அமைந்துள்ளது. ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்தே பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
தல வரலாறு
கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 15, 2011 ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஜெயகிருஷ்ண தீட்சிதர் என்ற விட்டல்தாஸ் மகராஜ், பல கோடி ரூபாய் மதிப்பில், மகாராஷ்டிர மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள போலவே, இக்கோவிலை அமைத்துள்ளார்.
பண்டரிபுரத்தில் இருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும், புதிய கோவிலில் அருள்பாலிகின்றனர். மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தன கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மணிகளின் சுதை சிற்பங்கள், பொன் போன்று ஒளிரும் மேல் விதானம், மடப்பள்ளி போன்றவை, பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு பசுக்களுக்கான பிரத்யேக கோசாலை அமைந்துள்ளது.
விட்டல்தாஸ் மகராஜ், நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்து, பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்துள்ளார். விமான கும்பாபிஷேகத்தை, விட்டல்தாஸ் மகராஜ் நடத்தி வைத்தார். தொடர்ந்து சுவாமி, தாயார் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது. மண்டலாபிஷேக துவக்கத்தையொட்டி, மகாஅபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகள், அண்ணா கிருஷ்ண பிரேமி சுவாமிகள் ஆகியோரின் அருளாசியுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேங்காலிபுரம் ராமதீட்ஷிதர் முன்னிலை வகிக்கிறார். கோவில் திருப்பணி வேலைகளில் மஹாராஷ்டிரா ஸ்தபதி பாலாஜி, சென்னை ஸ்தபதி செல்வநாதன், பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர். எங்கும் பார்க்கமுடியாத வகையில் பைபர் கிளாஸில் சீலிங் மோல்டு டெக்கரேஷன் செய்துள்ளனர். 100 கோடி விட்டல் நாமங்களை கீழே உள்ள அறையில் வைத்து அதன் மேலே மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பு ஆகும்.
ஆயிரம் பசுக்கள்:
ஸ்ரீவிட்டல் ருக்மணிதேவி சம்ஸ்தானத்தில் 2,000 பசுக்கள் கொண்ட மிகப்பெரிய கோசாலை உள்ளது. ஏகாதசி, கோகுலாஷ்டமி, ஆஷாட ஏகாதசி போன்ற தினங்களில் விசேஷ வழிபாடுகள் இங்கு நடைபெறுகின்றன.
தினசரி இந்த சந்நிதியில் புஐயதேவரின் 24 அஷ்டபதியும் பாடப்படுவது வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும். ஸ்ரீபாண்டுரங்கன். ருக்மணித் தாயார் திருத்தலத்தில் வருஷம் 365 நாள்களும் பகவானின் நாமாவளி ஒலித்துக் கொண்டிருக்கும்.
அமைவிடம்:
திருவிடைமருதூர் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி சம்ஸ்தான வளாகத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபாண்டுரங்கன், ருக்மணித்தாயார் திருத்தலம்
நடைதிறப்பு
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
- வடகாடு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கோதண்டராம சுவாமி கோவில் அமைந்துள்ளது.
- ஆஞ்சநேயர் சன்னதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு வடகாடு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கோதண்டராம சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இந்த ஆண்டு கம்பசேவை விழா நடைபெற்றது நிகழ்ச்சியில்கம்ப விளக்கிற்கு அபிஷேகம் நடைபெற்று, சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது.
இதே போல் ஆஞ்சநேயர் சுவாமி திருஉருவ படம்வைக்கப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆஞ்சநேயர் சன்னதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பக்தா்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனா். பெண்கள் பக்தர்களுக்கு வாழைப்பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன
இதே போல் மறைஞாயநல்லூர், தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில், நாகக்குடையான் சீனிவாசபெருமாள் கோவில், கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமான் ஆகிய பெருமாள் கோவில்களில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னா் பெருமாள் வண்ண மலர்களாலும், துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் ஆங்காங்கே கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- மக்களிடம் நற்பெயர் பெற்றால் போதும், அவருக்கு சொர்க்கம் உறுதி.
- நல்லவர்களுக்கு நீ கெடுதல் செய்யாதே
ஓய்வு என்பது, தற்காலிக ஓய்வு, நிரந்தரமான ஓய்வு என இரு வகைப்படும். ஓய்வு என்பதன் பொருள்: 'தொடர்ச்சியான, ஒரு செயலில் இருந்து விடுபடுவது' என்பதாகும். இந்த விடுபடுதல் என்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.
நாம் ஈடுபடும் செயலில் இருந்து சிறிது நேரம் நம்மை விடுவித்து களைப்பாறுதல். நமது அன்றாட பணியின் வேலைப்பளு தாக்கத்தில் இருந்து தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள இளைப்பாறுதல். ஒருநாள் தொடர் வேலையில் மத்தியப்பகுதியில் சற்றுநேரம் அவகாசம் எடுத்துக் கொண்டு தளர்வை போக்க ஓய்வு பெறுதல். நோயில் இருந்து உடல் விடுபட மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமுறை ஓய்வு, இவையாவும் தற்காலிக ஓய்வுகளாகும்.
இன்னும், சில ஓய்வுகள் நிரந்தரமானதாக அமைந்துவிடுகிறது. அது, பணிநிறைவு எனும் ஓய்வு. அடுத்தது, வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விடுபட்டு, இயற்கை எய்தி இறைவனடி நிழலில் இளைப்பாறுதலாகும்.
'நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் 'இவர் ஓய்வு பெற்றவராவார்; அல்லது இவர் பிறருக்கு ஓய்வு அளித்தவராவார்' என்றார்கள்.
மக்கள் 'இறைத்தூர் அவர்களே, ஓய்வு பெற்றவர், அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கை கொண்ட அடியார் இறக்கும்போது இவ்வுலகத்தின் துன்பத்தில் இருந்தும், தொல்லையில் இருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார்.
பாவியான அடியான் இறக்கும்போது அவனின் தொல்லைகளிடம் இருந்து மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: புகாரி)
'ஒருமுறை, ஒரு பிரேதத்தை கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றி மக்கள் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள். மற்றொருமுறை வேறொரு பிரேதத்தை கடந்து சென்றபோது, மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசினார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள்.
உடனே உமர் (ரலி), 'எது உறுதியாகி விட்டது?' என்று கேட்டதும், நபி (ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறி புகழ்ந்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. மற்றவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள், எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் இறைவனின் சாட்சிகளாவீர்கள்' என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி) மக்களிடம் நல்லவிதமாக நடந்து, நல்லதை செய்து, இவர் நல்லவர் என்று மக்களிடம் நற்பெயர் பெற்றால் போதும், அவருக்கு சொர்க்கம் உறுதி. மக்களிடம் மோசமாக நடந்து, மோசடி செய்து, கெட்டபெயர் பெற்று, கெட்டவன் என்று மக்கள் இகழ்ந்தாலே போதும், அவருக்கு நரகம் உறுதி.
ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அநியாயத்திலும், அட்டூழியத்திலும், கொடுமைப்படுத்துவதிலும் பிரபலமாகத் திகழ்ந்தான். அப்துல்லாஹ் பின் சுபைர், ஸயீத் பின் சுபைர் போன்றோரை ஈவு இரக்கமின்றி கொன்றான். இறுதியில் அவன் நோய்வாய்ப்பட்டான். நோயின் வேதனை தாங்கமுடியாமல் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் உதவியும், நிவாரணமும் வேண்டினான். அதற்கு ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் 'நல்லவர்களுக்கு நீ கெடுதல் செய்யாதே, என நான் உன்னைத் தடுத்தேன்.
இப்போது நீ கடும் சிரமத்தில் மாட்டிக்கொண்டாய்' என்றார். அதற்கு ஹஜ்ஜாஜ் பின் யூசுப் 'ஹஸனே! என்னிடமிருந்து கடும் சிரமம் நீங்கிவிட இறைவனிடம் பிரார்த்திக்கும்படி நான் உம்மை வேண்டிக் கொள்ளவில்லை. மாறாக, எனது உயிர் சீக்கிரமாக கைப்பற்றப்பட வேண்டும் எனவும், எனக்கு ஏற்படும் வேதனை நீடிக்கக்கூடாது எனவும் தான் நான் உம்மை வேண்டும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
ஹஜ்ஜாஜ் இறந்தபோது, அந்த செய்தியை அறிந்த மக்கள் வீதிக்கு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மஃமூன் இறந்தபோது இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். தன்னை நபி என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா கொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) இறைவனுக்கு தலைவணங்கி, சிரம் தாழ்த்தி நன்றி கூறி மகிழ்ந்தார்.
நல்லவர்கள் நம்மை விட்டுச் சென்றால் அது நமக்கு கவலை தரும். தீயவர்கள் மரணமானால் அது உலகத்திற்கும், உலக மக்களுக்கும் நிம்மதி தரும் ஓய்வாகும். நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும்.
- இயேசு அவரைப் பார்த்து ‘அழாதீர்’ என்று சொன்னார்.
- ‘இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திடு’ என்றார்.
ஒரு முறை கப்பர்நாகும் என்ற ஊரில் இருந்து நயீன் என்னும் ஊருக்கு தேவன் இயேசு சென்றார். அப்போது அங்குள்ள மக்கள் இறந்தவர் ஒருவரின் உடலை தூக்கிக்கொண்டு வந்தனர். இறந்து போனவர் ஒரு இளைஞர். தாய்க்கு அவர் ஒரே மகன். கணவனை இழந்த அந்தப்பெண், தனது ஒரே நம்பிக்கையான மகனும் இறந்துவிட்டானே என்பதை எண்ணி அழுது கொண்டு இருந்தார்.
அப்போது இயேசு அவரைப் பார்த்து 'அழாதீர்' என்று சொன்னார். அதன் பிறகு பாடையின் அருகே சென்று, அதைத் தொட்டு 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திடு' என்றார். உடனே இறந்து போன அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினார். அதன் பின் இயேசு அந்த இளைஞனை அவரது தாயிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனை பார்த்த அங்குள்ள மக்கள் ஆச்சரியத்துடன், 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றி இருக்கிறார், கடவுள் தம் மக்களைத்தேடி வந்து இருக்கிறார்' என்று கூறினார்கள்.
இந்த அற்புதமான நிகழ்வு லூக்கா நற்செய்தி 7-வது அதிகாரத்தில் இடம் பெற்று இருக்கிறது. நான்கு நற்செய்தியாளர்களுள் லூக்கா மட்டுமே இந்த நிகழ்வைப் பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது இந்த இறைவார்த்தை பகுதியை சற்று சிந்தித்து பார்ப்போம். இதனை இரண்டு விதங்களில் பார்க்கலாம். ஒன்று, இயேசு அந்தத்தாயின் மீது இரக்கம் கொண்டதால், இளைஞனைத் தொட்டு உயிர் பெறச்செய்தார், என்பது ஒரு கண்ணோட்டம்.
இரண்டாவது, அந்த இளைஞன் மீது இயேசு கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கை. அந்த இளைஞன் எழுந்து விட்டால், அவனது தாயைப் பார்த்துக்கொள்வான். அவனது தாய்க்கு ஆறுதலாக இருப்பான் என்று முழுமையாக நம்பியதால், மக்கள் சூழ்ந்து இருந்த கூட்டத்தில் இருந்து நகர்ந்து, அந்த இளைஞனை வைத்திருந்த இடத்திற்குத் தேடிச்சென்று உயிர்கொடுத்தார். இவ்வாறு இரண்டு விதங்களிலும் இந்த வேதாகமப் பகுதியை சிந்தித்துப் பார்க்கலாம்.
இப்போது இந்த இறைவார்த்தைப் பகுதியை நம் நிகழ்கால வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்போம். தற்போதைய தொழில்நுட்ப உலகில் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்குமான இடைவெளி பெரிதாகி கொண்டே வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. அதனை சரி செய்ய ஒரு புரிதல் தேவைப்படுகிறது.
அந்த புரிதலை அனைவரும் பெறுவதற்காக, ரோம் நகரில் இருக்கிற போப் ஆண்டவர் பிரான்சிஸ் 2019 -ம் ஆண்டு 'கிறிஸ்து வாழ்கிறார்' என்கிற தலைப்பில் ஒரு மடலை எழுதினார். அதில் அவர், 'இளைஞர்கள் திருச்சபையின் நிகழ்காலம். இளைஞர்களின் புனித நிலமாகிய இதயத்திற்குள் செல்கிற போது உங்கள் காலணிகளை கழற்றி விட்டு செல்லுங்கள்' என்று எழுதியுள்ளார்.
இதில் அவர் சொல்கிற வார்த்தைகள் அவர் சுயமாக எழுதியதல்ல, இளைஞர்கள் பலரிடம் நேரடியாக உரையாடி அவர்களது மனநிலையைப் புரிந்து கொண்டும், திருச்சபையின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு தேவை என்பதை உணர்ந்தும் இவ்வாறு சொன்னார்.
இது இளைஞர்கள் மீது கொண்டிருக்கிற அன்பை, நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இதுவே இயேசு கொண்டிருந்த பார்வை ஆகும். இந்த பார்வை நாம் அனைவருக்கும் இருக்க வேண்டும். இளைஞர்களிடம் உரையாடும் போது, நமது பழைய சிந்தனைகளைக் கடந்து, திறந்த மனதோடு இளைஞர்களின் புதிய சிந்தனைகளுக்கு செவி கொடுக்க வேண்டும். ஏனெனில் இளைஞர்கள் பலவிதமான மனக்காயங்களோடு தங்கள் வாழ்க்கையை வாழுகின்றனர்.
இதனால் ஏதாவது ஒன்றிற்கு அடிமையாகி, அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். நயீன் ஊர் இளைஞனை தேடிச்சென்று புதுவாழ்வு கொடுத்த இயேசுவைப் போல, இளைஞர்களைத் தேடிச்சென்று அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு வழிகாட்டுகிறபோது, இளைஞர்கள் பெரியவர்கள் உறவில் நல்ல புரிதல் ஏற்படும். இளைஞர்களது வாழ்வில் மாற்றம் நிகழும்.
அவ்வாறு நடக்கிறபோது, 'மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்' (மத்தேயு:25:40) என்ற இறைவார்த்தை நமது வாழ்வில் நிதர்சனமாகும்.
அன்பார்ந்தவர்களே! ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும் முன், இன்று நான் இயேசுவின் பார்வையில் இளைஞர்களையும், மற்ற மக்களையும் பார்த்தேனா? என்ற கேள்வியை கேட்போம். இயேசுவின் பார்வையான அன்போடும், இரக்கத்தோடும், நம்பிக்கையோடும், பொறுமையோடும் இளைஞர்களையும் இந்த சமூகத்தையும் பார்ப்போம்.
இறைவனின் சாயலாக படைக்கப்பட்ட நாம், அனைவரிலும் அனைத்திலும் இறைவனைக் காண்போம். இறைவனின் சாயலாய் வாழ்வோம்!
- தேவர்களின் வரிசையில் போய் நின்றான் சுவர்பானு.
- அகப்பையைக் கொண்டு சுவர்பானுவின் தலையை துண்டித்தாள்.
ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்தால், தேவேந்திரன் தன்னுடைய செல்வம் அனைத்தையும் இழந்தான். அந்த செல்வங்கள் அனைத்தும் கடலுக்குள் சென்று மறைந்துவிட்டன. அதேநேரத்தில் அசுரர்களுடனான போரில் தேவர்களின் பக்கம் இழப்பும் அதிகமாக இருந்தது. அந்த இழப்பு ஏற்படாமல் இருக்க அனைவரும் பிரம்மதேவனிடம் முறையிட்டனர். அவர், பாற்கடலை கடைவதன் மூலம் வெளிப்படும் அமிர்தத்தை அருந்துவதால், தேவர்கள் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
ஆனால் பாற்கடலை கடைய தேவர்களால் மட்டுமே இயலாது என்பதால், அசுரர்களையும் உடன் சேர்த்துக்கொள்ள முன்வந்தனர். அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. திருப்பாற்கடலைக் கடைவதற்காக மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தனர். வாசுகிப் பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்து இழுத்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர்.
கடலில் இருந்து முதலில் வெளிப்பட்ட விஷத்தை, சிவபெருமான் அருந்தினார். அந்த விஷம் அவரது கழுத்தில் நின்றதால், 'நீலகண்டன்' எனப் பெயர் பெற்றார். பின்னர் கடலில் இருந்து பல பொருட்கள் வெளிப்பட்டன. அவற்றில் தேவேந்திரன் இழந்த செல்வங்களும் அடங்கும்.
அதில் காமதேனு என்ற பசு, உச்சைசிரவஸ் என்ற வெள்ளைக் குதிரை, ஐராவதம் என்ற வெள்ளை யானை மற்றும் கற்பக விருட்சம் ஆகியவற்றை தேவேந்திரன் எடுத்துக்கொண்டான். அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாக எடுத்துக்கொண்டார். பின்னாளில் அவளை கவுதம முனிவர் மணம் முடித்தார்.
திருமகள் என்ற லட்சுமி தேவியை, மகாவிஷ்ணு தன் மார்பில் அமர்த்திக் கொண்டார். பாரிஜாதம், கவுஸ்துப மணி, சங்கு, ஜேஷ்டா தேவி, அப்சரஸ்களும் வெளிப்பட்டனர். இறுதியாக அமிர்த கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி பகவானிடம் இருந்து, அசுரர்கள் அமிர்த கலசத்தை பறித்துச் சென்றனர்.
அமிர்தத்தை யார் முதலில் அருந்துவது என்பதில் அசுரர்களுக்குள்ளேயே கலவரம் மூண்டது. இதில் அமிர்தம் யாருக்கும் கிடைக்காமல் வீணாகிவிடும் நிலை உருவானது. இதனால் தேவர்கள் பெரும் கவலை அடைந்தனர். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று, அமிர்தத்தை காத்து அருளும்படி வேண்டினர்.
தேவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களிடம் சென்றார். மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணு, 'நான் அமிர்தத்தை தேவர்களுக்கும் உங்களுக்கும் சரிபாதியாக பங்கிட்டு தருகிறேன்' என்று அசுரர்களிடம் கூறினார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமிர்த கலசத்தை அவளிடம் கொடுத்தனர். அமிர்த கலசத்தை வாங்கிய மோகினி, தேவர்களையும் அசுரர்களையும் இரு வரிசைகளாக நிற்கச் சொன்னாள்.
பின்னர், "முதலில் எந்த வரிசைக்குக் கொடுக்கட்டும். இல்லை ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா?" என்றாள். அசுரர்கள் 'அமிர்த கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமிர்தத்தை தங்களுக்கும், தெளிந்த மேல் பகுதியில் இருப்பதை தேவர்களுக்கும் அளிக்கலாம்' என்றனர். அதன்படி தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கத் தொடங்கினாள் மோகினி. அளவுக்கு அதிகமாகவே தேவர்களுக்கு வழங்கப்பட்டது.
மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு என்ற அசுரன், தேவர்களை போல உருவத்தை மாற்றிக்கொண்டு, தேவர்களின் வரிசையில் போய் நின்றான். இதனை கவனிக்காத மோகினி, சுவர்பானுவுக்கும் அமிர்தத்தை வழங்கினாள்.
அமிர்தம் கிடைத்தவுடன் அதை உடனடியாக பருகிவிட்டான். தான் அமிர்தம் உண்டதை யாரும் அறியவில்லை என்று சுவர்பானு கருதிய நேரத்தில், அவனை சூரியனும், சந்திரனும் இனம் கண்டு கொண்டனர். உடனடியாக அது பற்றி மோகினிக்கு உணர்த்தினர். மோகனி, அமிர்தம் வழங்குவதற்காக தன் கையில் இருந்த அகப்பையைக் கொண்டு சுவர்பானுவின் தலையை துண்டித்தாள்.
உடலும், தலையும் தனித்தனியாக ஆனாலும், அமிர்தம் அருந்தியதன் விளைவாக சுவர்பானு இறக்கவில்லை. இதற்கிடையில் அசுரர்கள் ஏமாற்ற நினைத்ததாகக் கூறி, அவர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என்று மோகினி தெரிவித்து விட்டாள். இதனால் கோபம் கொண்ட அசுரர்கள், சுவர்பானுவை தங்களோடு சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டனர்.
உடல் வேறு, தலை வேறாக பிரிந்தாலும், அமிர்தம் உண்ட காரணத்தால் சுவர்பானுவின் துண்டான தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு 5 பாம்பின் தலையும் முளைத்தன. இந்த மாறுபட்ட உடல் அமைப்பைக் கொண்ட அவனை, தேவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் மிகவும் வருத்தம் அடைந்த சுவர்பானு, பிரம்மதேவரை தஞ்சம் அடைந்தான். தனக்கு பழைய உடல் உருவைத் தரும்படி பிரம்மனிடம் வேண்டினான். பிரம்மதேவரோ, "நாராயணரால் தண்டிக்கப்பட்ட உன்னை, பழைய நிலைக்கு மாற்றுவது என்பது இயலாது. எனவே இருவேறு உடல் பிரிவுகளைக் கொண்டவனாக இருப்பாய்.
மனித தலையும் பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு 'ராகு' என்றும், மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு 'கேது' என்றும் பெயர் அமையும்" என்றார்.
அப்போது பிரம்மனிடம் சுவர்பானு மீண்டும் ஒரு கோரிக்கையை வைத்தான். "சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்ததால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. எனவே அவர்களைப் பழி வாங்குவதற்கு அருள்புரிய வேண்டும்" என்றான். அதற்கு பிரம்மன், "பின்னாளில் நீங்கள் நவக்கிரக அமைப்புடன் சேரும்போது, சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை மறைத்து, அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்கள். மேலும் நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களைப் போல் முன்னோக்கிச் செல்லாமல், பின்னோக்கி சஞ்சாரம் செய்வீர்கள்" என்று அருள்புரிந்தார்.
பூமியில் பூண்டாக மாறிய அமிர்தம்
காசியப முனிவரின் மகன் விப்ரசித்தி. இவருக்கும் சிம்மிகை என்ற அசுர குல பெண்ணுக்கும் பிறந்தவர்தான், சுவர்பானு. பின்னாளில் இவர் ராகு-கேதுவாக மாறினார். மோகினி வழங்கிய அமிர்தத்தை, தேவர்களைப் போல உருமாறி வாங்கி பருகியதற்காக மோகினி, சுவர்பானுவின் தலையை துண்டித்தபோது, அவன் வாய்க்குள் இருந்த சில துளி அமிர்தம், பூமியில் விழுந்தது. அந்த அமிர்தத்தில் இருந்து தோன்றியதுதான் பூண்டு என்று புராணங்கள் சொல்கின்றன.
அமிர்தத்தில் இருந்து உருவானதால், பூண்டுவுக்கு மருத்துவ குணம் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் இந்த பூண்டு தெய்வீக காரியங்களில் இருந்து விலக்கிவைக்கப்பட்டது. அமிர்தத்தில் இருந்து தோன்றிய பொருளாக இருந்தாலும் கூட, அது அசுர குலத்தைச் சேர்ந்த ஒருவரின் எச்சிலாக வெளிப்பட்டதில் முளைத்தது என்பதால், அதில் ராட்சச குணம் இருக்கும் என்ற ரீதியில் ஆன்மிகத்தில் இருந்து பூண்டு விலக்கப்பட்டுள்ளது.
- வருகிற 8-ந்தேதி ராகு-கேது பெயர்ச்சி
- ராகு-கேது கிரகங்களால் நன்மை பெற பரிகாரங்கள் செய்தால் நலமாக வாழலாம்.
ராகு-கேது பெயர்ச்சி வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நாளில் ராகு-கேது கிரகங்களால் நன்மை பெற சில வழிபாடுகளை செய்தால் நலமாக வாழலாம். ராகு -கேது அருளைப்பெற, நவக்கிரகங்களில் உள்ள ராகு- கேதுவுக்கு பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம்.
* சிதம்பரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் சவுந்தரநாயகி உடனாகிய அனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும், அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாகதோஷம், கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் அகன்றிட ராகு-கேது பெயர்ச்சியின்போது இங்கு வந்து வழிபடலாம்.
* காரைக்குடி செஞ்சை பகுதியில் பெரியநாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சன்னிதியும் உண்டு. இங்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம்.
* பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் சவுந்தரநாயகி சமேத நாகநாத சுவாமி சன்னிதி உள்ளது. இங்கும் ராகு-கேது பெயர்ச்சி அன்று சீர்காழியில் சிரபுரம் பகுதியில் உள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவிலில் வழிபடலாம்.
* திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
* செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது தலம் ஆகும். இங்கு வழிபடலாம்.
* தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்-திருச்செந்தூர் பாதையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒரு தலமான தொலைவில் மங்கலம் சென்று வணங்கலாம்.
* மன்னார்குடி அருகில் பாமினியில் ஆதிசேஷன் வழிபட்ட தலம் உள்ளது. இங்கு வழிபட உடனடி பலன் கிடைக்கும்.
* மயிலாடுதுறை - பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலி தாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.
* கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர்ந்து அர்ச்சனை செய்யலாம்.
* கோவை -அவினாசி பாதையில் மோகனூர் அருகில் வாழை தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. இது ராகு-கேது பரிகார தலம், பிரார்த்தனை தலமாகும்.
* ராகு- கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி - அதற்காக பயப்படத் தேவை இல்லை. குண்டலினி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில் சென்று வழிபட்டால் போதும். ராகு- கேது பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுவார்கள்.
* சோளிங்கரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள பெத்த நாகபுடியில் நாகவல்லி சமேத நாக நாதேஸ்வரரை தரிசிக்கலாம்.
* கொடுமுடியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில் உள்ள நாகேஸ்வரரை வழிபடலாம்.
* காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம், காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள மூலவரான மகாகாளேஸ்வரரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.
* ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள வடிவுடையம்மன்-உடனுறை படம்பக்கநாதர் மற்றும் மாணிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்.
* கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள். ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.
* சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட மகமாயி அம்மன், கானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.
* நன்னிலம்- குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்ச நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
* விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் உள்ள நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.
- ராகுவிற்கு எந்த வீடும் சொந்தமில்லை.
- அனுகூல ராகு கீழான ஒருவரை சக்கரவர்த்தியாக மாற்றும் வலிமை படைத்தவர்.
சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி குன்றும்படியாகவும் கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகு மற்றும் கேதுவிற்கு உண்டு. ராகுவிற்கு எந்த வீடும் சொந்தமில்லை. அதாவது எந்த ராசியும் ராகுவிற்கு சொந்தமாக இல்லை. ராகு எந்தராசியில் இருக்கின்றாரோ, எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகின்றாரே சிறந்த இடத்தில் சேர்க்கை பெற்றுள்ளாரோ அந்த இடத்தின் பலன்களை முழுமையாக தருவார்.
ஒருவரது ஜாதகத்தில் அனுகூலம் தரும் நல்ல இடத்தில் ராகு இருந்து விட்டால், அந்த நபருக்கு நல்ல மனைவி, நல்ல வேலைக்காரர், ஆட்சி மற்றும் செல்வாக்கு ஆகியவை அமையும். பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கும் ராகுவேகாரணமாகிறார். மருந்து, வேதியியல், நூதன தொழில் நுட்பக் கருவிகள் ஆகியவற்றுக்கும், அவ்வப்போது மாறி வரும் நவ நாகரிகத்திற்கும் ராகுவுடன் இணைந்த சுக்ரன் காரணமாக அமைகிறார்.
அரசியல் செல்வாக்கு, ஆட்சியுரிமை போன்றவற்றுக்கும் ராகுவின் அனுக்கிரகம் நிச்சயம் தேவை. அனுகூல ராகு கீழான ஒருவரை சக்கரவர்த்தியாக மாற்றும் வலிமை படைத்தவர். மந்திரஜாலம், கண்கட்டி வித்தை போன்றவைகளும் ராகுவின் அனுக்கிரகத்தால் தான் கைவரப்பெறும். ராகு ஒருவரை குபேரபுரிக்கு அழைத்துச் செல்வார்.
அதேநேரத்தில் ராகு தோஷம் ஒருவருக்கு அமைந்தால். அந்த நபர் மிகவும் கடுமையான பலன்களையும் அனுபவிப்பார். ஒருவரது ஜாதகத்தில் 7-வது இடத்தில் ராகு இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. இல்லற வாழ்க்கை சிறப்பதற்கும் ராகுவின் அனுக்கிரகம் தேவை. 5-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் புத்திர தோஷம் ஏற்படுகிறது. ஆகவே களத்திர தோஷம், புத்திரதோஷம் ஆகியவை நீங்குவதற்கு ராகுவை வழிபடுதல் வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநாகேஸ்வரம். இங்கு நாகநாத சுவாமி கோவில் உள்ளது. ராகு பகவான். சிவபெருமானை பூஜித்த சிறப்புமிக்க தலம் இது. ஆதலால் தான் இந்த தலத்தை 'திருநாகேஸ்வரம்' என்று அழைக்கிறார்கள்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில், நாகநாத சுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
சுசீல முனிவரின் பிள்ளையை, அரவாகிய ராகு தீண்டியது. இதனால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நிவர்த்தி பெற நான்கு தலங்களை வழிபட்டு முடிவில் திருநா கேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட வேண்டும். அதன்படியே ராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.
அதோடு இத்தல சிவபெருமான். ராகுவுக்கு ஒரு வரத்தையும் அளித்தார். "இத்தலத்திற்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் உன்னையும் வணங்கினால், உன்னால் ஏற்படக் கூடிய கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்கும்" என்று அருளினார்.
அதன்படி ராகு பகவானும் இந்த ஆலயத்தில் மங்கள ராகுவாக, நாககன்னிமற்றும் நாகவள்ளி ஆகிய இரு தேவியருடன் நிருதி மூலையில் அமர்ந்து, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தோஷங்களை நீக்கி அருள்பாலிக்கிறார்.
பல்வேறு தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல சூரிய புஷ்கரணியில் நீராடி, நாகநாத சுவாமியை வழிபட்டு, பின்னர் ராகுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி நன்மை கிடைக்கும். இந்த ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
இங்குள்ள ராகு பகவானுக்கு, பாலா பிஷேகம் செய்யும்போது, அந்த பாலானது நீல நிறமாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. இந்த ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டால் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும்
- பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.
- சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் ஆலயத்தில் சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோவில் இதுமட்டும் தான்.
ஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வெகுண்டெழுந்த சிவபெருமான் பிரம்மாவின் தலையை கொய்தார். இந்த செயலால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழுவது அலைந்து திரிந்தார்.
ஒருநாள் சோமேஸ்வரர் என்ற இடத்திற்கு சிவபெருமான் வந்தபோது பசு ஒன்று தன் கன்றுடன் பேசுவதைக் கண்டார். பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளான கன்றுக்கு தாய் பசு பரிகாரம் சொல்லிக்கொண்டு இருந்தது.
பஞ்சவதி அருகே வந்ததும், கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்மஹத்தி பாவத்தில் இருந்து விடுபட்டு பழைய நிலைக்கு திரும்பியது. அதேஇடத்தில் சிவபெருமானும் நீராடி தனது பாவத்தை போக்கிக்கொண்டார். பின்னர் அருகே இருந்த மலையில் சிவபெருமான் குடிகொண்டார். சிவனை பின்தொடர்ந்து சென்ற பசு அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது. ஆனால் இதற்கு சிவபெருமான் ஒப்புக்கொள்ளவில்லை.
தன்னை பிரம்மஹத்தில் பாவத்தில் இருந்து விடுவித்ததால் நீ எனக்கு குருவுக்கு சமமானவர் என்றும் அதனால் என் முன்னால் அமரவேண்டாம் என்றும் நந்தியை கேட்டுக்கொண்டார் சிவபெருமான். ஆனால் நந்தியோ சிவபெருமான் மீது கொண்ட அளவுகடந்த பக்தியால் கோவிலில் இருந்து வெறியேற மறுத்து தன்னை அனுமதிக்குமாறு சிவபெருமானிடம் மன்றாடியது. இருப்பினும் சிவபெருமான் கண்டிப்புடன் வெளியேற சொன்னதால் அந்த சிவாலயத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறியது நந்தி என்று புராணவரலாறு கூறுகிறது. எனவே பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் கோவிலில் நீங்கள் நந்தி இல்லாத சிவபெருமானை தான் தரிசிக்க முடியும்.
- 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம்.
- புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.
மிருகங்கள் இறைவனை பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நம் நாட்டில் பல உண்டு. குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும், தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும், திருத்தேவன் குடியில் நண்டும் பூஜித்து பேறு பெற்றன. அதேபோல் புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள கூறைநாடு எனும் தலத்தில் பூஜித்துப் பேறு பெற்றது. அதனாலேயே இங்குள்ள ஈசன் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
அம்பாளின் பெயர் சாந்த நாயகி. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் நெடிதுயர்ந்த ஏழு நிலை ராஜ கோபுரம் உள்ளே நுழைந்ததும் விசாலமான மண்டபம். எதிரே பலிபீடமும், உயரமான கொடிமரமும். மண்டபத்தின் இடதுபுறம் அன்னை சாந்த நாயகியின் சந்நதி உள்ளது.
அம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள். மேல் இரு கரங்களில் மாலையையும், தாமரை மலரையும் தாங்கி, கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை திகழ்கிறாள். அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காவல் காக்க, இறைவனின் அர்த்த மண்டபம் விளங்குகிறது.
கருவறையில் இறைவன் புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக்கோட்டத்தின் வடபுறம் துர்க்கை, பிரம்மா, கிழக்கே லிங்கோத்பவர், தெற்கே தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர் போன்றோர் திருமேனிகள் உள்ளன. உட்பிராகாரத்தின் மேற்கில் பிள்ளையார், வடக்கில் நடராஜர், சிவகாமி, மகாலட்சுமி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தெற்கில் நேசநாயனார், கிழக்கில் பைரவர், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம்.
அம்மன் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரி அருள்பாலிக்கிறாள். வெளி பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் கலசமண்டபம் உள்ளது. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி தரிசனம் அருள்கிறார். இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர்.
ஆலயத்தின் தல விருட்சம் பவழமல்லி மரம். ஆலயத்தின் தீர்த்தமான திருக்குளம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. இந்த ஆலயம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தை போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். சிவபெருமான் எழுந்தருளியுள்ள மயிலாடுதுறைக்கு மேற்கே பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு காடு இருந்தது. அரசு, கொங்கு, தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், நாவல், மா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து அது ஒரு அழகிய வனமாகத் திகழ்ந்தது. பறவையினங்களும், விலங்கினங்களும் பகையின்றி அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன.
அங்கு தேவர்களும், திருமாலும், பிரம்மனும் வழிபடுவதற்காகவும், உயிரினங்கள் உய்யவும், பவழமல்லிகை நிழலில் லிங்க வடிவில் தானே தோன்றி எழுந்தருளியிருந்தார் சிவபெருமான். அந்த வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணையுடனும், குட்டிகளுடனும் வாழ்ந்து வந்தது. அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் ரம்மியமாக பரவியிருந்தது.
திடீரென்று ஒருநாள் அந்த புனுகு பூனைக்கு ஞானம் வந்தது. "இதுவரை சாதாரணமான செயல்களையே செய்து வாழ்ந்து விட்டோமே! இது என்ன வாழ்க்கை! சிவபெருமானை வணங்கி பேரருளைப் பெற வேண்டும்" என அந்தப்பூனை நினைத்தது. யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, ஈ, எறும்பு, முயல், தவளை ஆகியன எல்லாம் இறைவனைப் பூஜித்து நற்பேறு பெற்றுள்ளன.
நாமும் அவ்வாறே நற்கதியடைய வேண்டும் என்று எண்ணிய அந்தப் பூனை சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத் தேடி அலைந்தது. வயல் சூழ்ந்த ஒரு சோலையில் இறைவனின் லிங்கத் திருமேனியைக் கண்டது அந்த பூனை. மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது. வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது. இறைவனை வலம்வந்து வணங்கியது.
இப்படியே சிவபெருமானைப் பல நாட்கள் அந்த புனுகுப்பூனை வணங்க மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார். புனுகுப்பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழ மல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து துதித்துப் பாடினர்.
'இவரே புனுகீசர்' என்று அந்த இறைவனுக்குப் பெயரிட்டு வணங்கினர். சோழ மன்னன் தன் காலத்தில் காட்டுப் பகுதியை அழித்து புனுகீசருக்கு அதே இடத்தில் ஒரு ஆலயத்தை அமைத்தான். இதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறு.
இந்தப் புனுகுப்பூனை பற்றிய இன்னொரு தல வரலாறும் உண்டு: சிவபெருமானை மதியாமல் தட்சன் யாகம் நடத்தினான். தேவேந்திரன் அந்த யாகத்தில் கலந்து கொண்டதால் சிவபெருமானின் சினத்திற்கு ஆளாகி சாபம் பெற்றான். அந்த தேவேந்திரனே இறைவன் மகிழும் வண்ணம் புனுகுப்பூனை வடிவெடுத்து பூஜை செய்து சாப விமோசனம் அடைந்து, இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றான். இந்த ஆலயத்தில் உள்ள சுவாமி விமானம் கருங்கல்லினால் ஆனவர்.
ஆலயத்தின் உள்ளே தென்புறம் மிகப்பெரிய கல்யாண மண்டபமும், சுமார் 1500 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக் கூடமும் உள்ளன. மிகவும் குறைந்த வாடகைக்கு இதை மக்கள் பயன்படுத்தி மனம் மகிழ்கிறார்கள். ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கில் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின்போது 13 நாட்களும் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு. இங்கு 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகள் கண்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மூல நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களும் வீதியுலா வருவதுண்டு.
நவராத்திரி நாட்களில் தினசரி இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வதுண்டு. தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். கன்னிப் பெண்கள் இறைவிக்கு மாங்கல்யம் செய்து அணிவிக்க அவர்களுக்கு விரைந்து திருமணம் நடைபெறும் எனவும், அம்மனை அங்கப்பிரதட்சணம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு மேற்கே இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது கூறைநாடு.
- மத்திய திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
- புதுவையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
புதுவையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் இங்கு வலம்புரி ஸ்ரீமகாகணபதி, பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அக்கோவிலில் ஸ்ரீவாரி வெங்கடாசலபதிக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடப்பது வழக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், சனிக்கிழமை காலையில் ஸ்வர்ணபுஷ்ப சிறப்பு சங்கல்பம் மற்றும் விசேஷ அர்ச்சனை நடைபெறும்.
அதன்படி, புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையான நேற்று வெங்கடாசலபதி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்ட ராமன், செயலாளர் நரசிம்மன், உப தலைவர் யுவராஜன், அறங்காவலர்கள் பழனியப்பன், செல்வம், கோவில் நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.