என் மலர்
இந்தியா
- 17 ஆசிரியர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பீடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 5 ஆசிரியர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்
மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக 81 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாநில வாரியத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 81 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் ChatGPT -ஐ பயன்படுத்தி தேர்வில் முறைகேடு செய்ததாகவும், அதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக பீடு மாவட்டத்தில் அதிக அளவில் இத்தகைய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்வு தொடங்கியவுடன் வினாத்தாள்களை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து வெளியே இருப்பவர்களுக்கு அனுப்பியுள்ளனர். அந்த வினாக்களை ChatGPT போன்ற AI தொழில்நுட்பத்தில் பதிவேற்றி, அதற்கான விடைகளை பெற்றுள்ளனர்.
பெறப்பட்ட விடைகளை பள்ளியின் பிரிண்டரில் அச்சிட்டு, பின்னர் சிறிய துண்டுகளாக மாற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். சௌசாலா போன்ற பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் நேரடி கண்காணிப்பு செய்யப்பட்டது. இதில் 16 தேர்வு அறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுவது உறுதி செய்யப்பட்டது.
தேர்வு மையங்களில் நடந்த இந்த முறைகேடுகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
- மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலால் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிப்பு.
- கச்சா எண்ணெய் விலை 2022-ம் ஆண்டுக்குப் பிறகு 110 அமெரிக்க டாலரை தாண்டி விற்பனை.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா விளைகுடா நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.
இதனால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சான்றாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 60 ரூபாய், வணிக சிலிண்டர் விலை ரூ. 115-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் குறுகிய நேர விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இந்த மோதலால் இந்தியாவின் பொருளாதார ஸ்திரதன்மை நேரடியாக பாதித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கோடி பேருக்கும் மேலாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் சிலரை காணவில்லை. சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் செய்தி வருகின்றன. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 51 பில்லியன் அமெரிக்க டாலர் வருகிறது என கார்கே தெரிவித்தார்.
இதற்கிடையே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தானாகவே, மத்திய கிழக்கு மோதல் குறித்து அறிக்கை வெளியிட்டார்.
- மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.
- ரவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர்.
தெலுங்கானா மாநிலம், கம்மம், காந்தி நகரை சேர்ந்தவர் ரவி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரசாந்தி. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவி மது போதைக்கு அடிமையானதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ரவி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில் ரவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கணவர் விரைவில் இறந்து விடுவார் என கருதிய மனைவி கணவர் பெயரில் காப்பீடு செய்தார். காப்பீடு எடுத்து ஒரு ஆண்டு ஆகியும் ரவி இறக்கவில்லை. இதனால் காப்பீட்டு பணத்தை பெற கணவரை கொலை செய்ய பிரசாந்தி முடிவு செய்தார்.
அதன்படி ரவியின் உறவினரான சீனிவாஸ் அவரது நண்பர்களான ராஜ்குமார், வெங்கடேஷ், ராம் பாபு ஆகியோரை அணுகினார். அவர்களும் ரவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்படி கடந்த 2-ஆம் தேதி இரவு ரவியை அவரது ஆட்டோவில் கம்பம்-குரவி சாலையில் உள்ள எம்.பி. பாலம் அருகே அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து ரவியை மது குடிக்க வைத்தனர். மது போதை தலைக்கு ஏறிய ரவி சாலையில் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தார்.
அப்போது ராஜ்குமார் தனக்கு சொந்தமான காரை வேகமாக ஓட்டி வந்து ரவி மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் ரவியின் பிணத்தை சாலை ஓரத்தில் வீசிவிட்டு தப்பி சென்றனர். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரவி சாலை விபத்தில் இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ரவியின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்தேகத்தில் பேரில் பிரசாந்தியை பிடித்து விசாரணை செய்த போது காப்பீட்டு பணத்திற்காக காரை ஏற்றி கொலை செய்ததாக தெரிவித்தார். போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரசாந்தி, ஸ்ரீனிவாஸ், ராஜ்குமார், வெங்கடேஷ், ராம் பாபு ஆகியோரை கைது செய்தனர்.
- பட்டியலின பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்
- இந்த திட்டத்தை செயல்படுத்த பஞ்சாப் அரசு ரூ.9,300 கோடியை ஒதுக்கியுள்ளது.
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு அறிவித்தது.
பட்டியலின பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் மற்றப் பெண்களுக்கு 1000 ரூபாயும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா பட்ஜெட் உரையில் அறிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த பஞ்சாப் அரசு ரூ.9,300 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் தற்போதைய அல்லது முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கப்படுவார்கள். ஆனாலும் பஞ்சாபில் வசிக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 97% பேர் இதன்மூலம் பலன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பட்ஜெட்டில் இருந்து, இலவச பேருந்து சேவை திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக சரிந்தது.
- கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்தது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக சரிந்தது. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பும் வீழ்ச்சியடைந்தது.
கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.
- பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும்.
- விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் இருந்து கோவா சென்ற ஆகாசா ஏர் விமானத்தின் கழிப்பறைக்குள் 'பீடி' புகைத்த பயணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியைச் சேர்ந்த குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ், டெல்லியில் இருந்து கோவாவிற்கு QP1625 விமானத்தில் பயணித்தபோது கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
விமான நிறுவனத்தின் புகாரின்படி, விமானத்தின் கழிப்பறைக்குள் பயணி 'பீடி' புகைத்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் ஒரு லைட்டரை வைத்திருந்ததாகவும், இது விமானம் மற்றும் விமானத்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானத்தின் போது சக பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததாக போலீசார் தெரிவித்தனர். கோவாவில் உள்ள மோபா விமான நிலைய காவல் நிலையத்தில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சிவில் விமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை ஆகாசா ஏர் நிறுவனம் உறுதிப்படுத்தி இருப்பதுடன், அதன் பணியாளர்கள் தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளது.
"மார்ச் 7 ஆம் தேதி டெல்லியில் இருந்து கோவாவுக்கு QP1625 என்ற ஆகாசா ஏர் விமானத்தில் பயணித்த ஒரு பயணி விமானக் கழிப்பறையில் புகைபிடித்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது," என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகள் மற்றும் சட்டத்தின்படி, ஆகாசா ஊழியர்கள் "தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றி" கோவா வந்தவுடன் அந்த நபரை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் அதிகாரிகளுக்கு "முழு ஒத்துழைப்பை" வழங்குவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன.
- கடந்த ஒரு காலமாக பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இன்று (புதன்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
இன்று சென்செக்ஸ் 2494 புள்ளிகள் சரிந்து 76,424 என்ற நிலைக்கு வந்தது. இது கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும். நிஃப்டி சுமார் 753 புள்ளிகள் வரை சரிந்து 23,697 புள்ளிகள் என்ற நிலைக்குச் சென்றது. இதுவும் கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனால் கடந்த ஒரு காலமாக பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
மத்திய கிழக்கு போரால் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகியுள்ளது.
- பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு இன்று தொடங்குகிறது.
- இதில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
புதுடெல்லி:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ம் தேதியுடன் முதல் கட்ட அமா்வு முடிவடைந்தது.
முதல் கட்ட அமர்வின்போது ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளியை தொடங்கின. கடந்த 3-ம் தேதி மக்களவையில் காகிதங்களைக் கிழித்து அவைத்தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, அவரைப் பதவிநீக்கம் செய்யக்கோரி தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு இன்று தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடக்கிறது.
முதல் நாளிலேயே மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மீதான பதவி நீக்க தீர்மான விவாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும், இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டது குறித்தும், ரஷிய கச்சா எண்ணெய் விவாதத்தில் அமெரிக்காவின் மிரட்டல் குறித்தும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சியினர் பிரச்சனையை கிளப்புவார்கள்.
மத்திய அரசு இந்த விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்விலும் கடும் அமளி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விடுதியில் சக மாணவர்களுடன் சிறுவனுக்கு சிறிய விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.
- விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் குருகல் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியின் விடுதியில் தங்கி சிறுவன் ஒருவன் 9 வகுப்பு படித்து வந்தான். விடுதியில் சக மாணவர்களுடன் சிறுவனுக்கு சிறிய விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், இரவில் சக மாணவர்கள் தங்கள் அறைகளில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது இரும்புக் கம்பியுடன் சென்று அவர்களை சரமாரியாக தங்கியுள்ளான்.
இதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர். விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
பள்ளி நிர்வாகம் அந்த மாணவர் இரும்புத் கம்பியை பயன்படுத்தியதாகக் கூறுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர், அவர்கள் கத்தியால் குத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற ஏழு மாணவர்கள் பெல்லாரியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தப்பியோடிய மாணவனை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
- சிறப்பு கூப்பன், செருப்புகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
இலவசம்.. மலிவு விலையில் பொருட்கள் என்ற அறிவிப்புகள் மக்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் சிரமத்தை தான் தருகின்றன. இதுபோன்று வெளியான ஒரு அறிவிப்பால் திரண்ட மக்கள் கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கோழிக்கோடு வைக்கம் முகமது பஷீர் சாலையில் ஒரு செருப்பு கடை திறப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஒரு ரூபாய் நோட்டை கொண்டு வந்தால் சிறப்பு கூப்பன், செருப்புகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காலை 10 மணிக்கு திறப்பு விழாவின்போது காலணிகள் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் வெளியான இந்த அறிவிப்பை பார்த்து இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் கடை முன்பு திரண்டனர்.
கடை திறந்தவுடன், சலுகையை பயன்படுத்திக் கொள்ள இளைஞர்கள் கடைக்குள் நுழைய போட்டியிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் அதிகமாகி நிலைமை மோசமடைவதை கண்ட கடை உரிமையாளரே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அதன்பிறகே கூட்டம் கலைந்தது. இந்த சம்பவத்தின்போது ஓடிய பலரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கூட்டத்தை உருவாக்கியதற்காகவும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததற்காகவும் கடைக்காரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
- சாம்ராட் சவுத்ரி அடுத்த முதலமைச்சராக அதிக வாய்ப்புள்ளது.
அண்மையில் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக நிதிஷ் குமார் அறிவித்து, மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு என்டிஏ சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பீகாரின் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) உடன் கூட்டணியில் உள்ள பாஜகவை சேர்ந்த ஒருவர் அடுத்த முதல்வராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் இன்று (மார்ச் 8) பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியில் இணைந்தார்.
50 வயதான நிஷாந்த் குமார், ஜே.டி.யு கட்சியின் தேசிய செயல் தலைவர் சஞ்சய் ஜா முன்னிலையில் கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வின் போது மத்திய அமைச்சர் லாலன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
நிதிஷ் குமார் தனது குடும்பத்தினரை இதுவரை அரசியலில் இருந்து தள்ளியே வைத்திருந்த நிலையில், தற்போது நிஷாந்த் குமாரின் வருகை ஜே.டி.யு கட்சியின் அடுத்தகட்ட தலைமை மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பீகார் துணை முதல்வராக நிஷாந்த் குமார் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் தற்போது பீகார் துணை முதல்வராக உள்ள பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி அடுத்த முதலமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- பல் மருத்துவரான இவர், நடனம் மற்றும் ஆடை அலங்கார போட்டிகளில் பங்கேற்பு.
- 'மிஸ் கிராண்ட் இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளார்.
கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவை சேர்ந்தவர் டாக்டர் கே.எஸ்.அஸ்வினி. பல் மருத்துவரான இவர், நடனம் மற்றும் ஆடை அலங்கார போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
தொடர்ந்து அழகி போட்டியில் பங்கேற்ற அஸ்வினி, தற்போது 'மிஸ் கிராண்ட் கேரளா 2026' பட்டம் வென்றுள்ளார்.
இதன் மூலம் அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள 'மிஸ் கிராண்ட் இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இவரது தந்தை ஸ்ரீராஜ், தெற்கு ரெயில்வேயில் மின் பொறியாளராகவும், தாயார் பிந்துமேனன், கேரள நீர் ஆணையத்தில் கணக்கு அதிகாரியாகவும் பணியாற்றி வருகின்றனர்.






