search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
    • தென்சென்னை தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் களம் காண்பார் என தெரிகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் பதவியில் இருந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென ராஜினாமா செய்தார். இது தொடர்பான, ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். அனேகமாக, தென்சென்னை தொகுதியில் பா.ஜனதா சார்பில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் களம் காண்பார் என தெரிகிறது.

    இந்நிலையில் புதுச்சேரி, தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணை நிலை கவர்னர் பொறுப்புகளை ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவித்துள்ளார்.


    • காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள்.
    • பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான்.

    பெங்களூரு:

    பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா எம்.பி. சதானந்தகவுடா. முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான இவருக்கு 71 வயதாகிறது. வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் சதானந்தகவுடாவிடம் இருந்து மத்திய மந்திரி பதவி பறிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் மீண்டும் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.ஆனால் அவருக்கு பதிலாக பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி ஷோபா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இதன் காரணமாக சதானந்தகவுடா பா.ஜனதா தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். அவரை காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள். இதுபற்றி சதானந்தகவுடாவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் சதானந்தகவுடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சதானந்தகவுடாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஷோபா மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் சதானந்தகவுடாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய அரசியல் எதிர்காலம், நிலைபாடு என்ன? என்பது குறித்து கூற நாளை (அதாவது இன்று) டாலர்ஸ் காலனியில் உள்ள எனது வீட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அங்கு எனது அரசியல் நிலைபாடு பற்றி தெரிவிப்பேன். பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான். அதுபற்றி எனது குடும்பத்தினருடன் ஆலோசிக்க வேண்டியது உள்ளது. நான் எப்போதும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதனால் குடும்பத்தினருடன் கலந்து பேசி, எனது அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். எங்கள் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் என்னை சந்தித்து பேசினார்.

    அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது. எனது மனதில் இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது தெரிவிக்கிறேன். ஈசுவரப்பா தனது மகனுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்திருந்தோம். அதற்குள் சுயேச்சையாக போட்டியிடுவதாக ஈசுவரப்பா தெரிவித்துள்ளார். இது அவரது தனிப்பட்ட முடிவாகும். சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி எங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம்.
    • பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    தொழில்நுட்ப மையமான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் டாக்டர் ஒருவர் வீடுகளில் நீர் சேமிப்பு பற்றிய 4 யோசனைகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திவ்யா சர்மா என்ற அந்த மருத்துவர் பூமியில் உள்ள நீர் சேமிப்பு அணுகுமுறை எளிமையானது மற்றும் பயனுள்ளது என்று கூறியுள்ளார். டாக்டர் சர்மா தனது பதிவில், ஒரு தோல் மருத்துவராக நான் எப்போதும் பக்கெட் குளியல் செய்வதை ஊக்குவிப்பேன். ஷவரில் குளித்தால் நிமிடத்திற்கு 13 லிட்டர் தண்ணீர் செலவாகும். ஆனால் பக்கெட் குளியலில் மொத்தமாக 20 லிட்டர் மட்டுமே ஆகும். 5 நிமிடம் ஷவரில் குளிப்பதையும், பக்கெட் குளியலையும் ஒப்பிடும் போது தோராயமாக 180 லிட்டர் தண்ணீர் சேமிப்பாகிறது. இதே போல ஆர்.ஓ.வில் இருந்து வரும் நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து அதனை வீட்டை துடைப்பதற்கும், தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம். இதன் மூலமாக சுமார் 30 லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.

    மேலும் வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம். இதுபோன்ற சிறிய முயற்சிகள் மூலம் எங்கள் குடும்பத்தில் ஒரு நாளைக்கு 600 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
    • தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தின்போதும், அந்த கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜூன கார்கேவும் பல உத்தரவாதங்களை அளித்துள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
    • பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வருகிற மே மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுறது . முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்த பயணத்தில் காலை நேரத்தில் பொது மக்கள் மத்தியில் பேசுகிறார். மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    • வாலிபர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.

    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ஆதர்ஸ் நகரில் ஒரு கோவில் உள்ளது. இந்த கோவிலிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இந்த கோவில் ஊழியர்கள் கதவை திறந்த போது அங்கு காணிக்கை பெட்டியில் இருந்து பணம், நகை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர் கோவிலுக்கு வரும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அந்த நபர் காணிக்கை பெட்டி அருகே சென்று கடவுள் முன்பு கை நீட்டி வழிபட ஆரம்பிக்கிறார். அதன் பிறகு காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் கோவிலில் கைவரிசை காட்டியது அதே பகுதியை சேர்ந்த கோபேஷ் சர்மா என்பதும், இவர் கோவில்களை குறிவைத்து திருடும் பழக்கம் கொண்டவர் என்பதும் தெரியவந்தது. இரவு நேரங்களில் கோவில் கதவுகளை உடைத்து, கடவுளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து நகை, பணத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்ட இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இவர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன.
    • போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு என்ற இடத்தில் போர் விமானங்களை அவசரமாக தரை இறக்குவதற்காக 4.1 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சாலையில் அவசர காலத்தில் போர் விமானங்களை தரை இறக்கும் திறன் மதிப்பீடு சோதனையை விமானப்படையினர் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர்.

    தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு முதல் ரெணங்கிவரம் வரை அவசர காலத்தில் விமானங்கள் தரை இறக்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சாலையில் சுகோய் 232 ரக 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன. அதனை ஹாக் ரேஞ்ஜின் வகை 2 விமானங்கள் பின் தொடர்ந்து சென்றன.


    இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முன்னதாக போர் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்த போது திடீரென தெரு நாய் ஒன்று விமான ஓடு பாதையில் குறுக்கே சென்றது.

    இதனைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நாயை விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சோதனை நடத்திய காட்சி.

    • மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?.
    • மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் தேர்தலையொட்டி மாற்றப்படுவார்கள்.

    இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆறு மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் "பா.ஜனதாவின் இழிவான யுக்திகள் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிக்கின்றன. மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?. தேர்தல் ஆணையமா?. அல்லது எச்.எம்.வி.யா? (ECI or HMV?)

    மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள். நாங்கள் 2024 தேர்தல் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

    • மகாதேவர் கோவிலிலும் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.
    • இயந்திர யானையை வழங்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில கோவில் விழாக்களில் யானைகளை பயன்படுத்துவது அந்த மாநிலத்தின் பாரம்பரியமாக உள்ளது. இதற்காக மாநிலத்தின் பெரும்பாலான கோவில் வளாகங்களிலேயே பிரத்யேகமாக யானைகள் வளா்க்கப்படுகிறது.

    இதற்கு விலங்குகள் நல ஆா்வலா்கள் அதிருப்தி தெரிவித்தபடி இருந்தனர். அதனை கருத்தில் கொண்டு கோவில் விழாக்கள் உள்பட எந்த சடங்குகளிலும் இனி யானை உள்ளிட்ட உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதில்லை என மாநிலத்தில் முதல் முறையாக திருச்சூா் மாவட்டம் இரிஞ்சாடப் பள்ளி ஸ்ரீ கிருஷ்ணா் கோவில் நிா்வாகம் முடிவெடுத்தது.

    அதன்படி அந்த கோவில் விழாக்களில் கடந்த ஆண்டு முதல் இயந்திர யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் 2-ஆவது கோவிலாக கொச்சி திருக்கயில் மகாதேவர் கோவிலிலும் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.

    கோவில் நிா்வாகத்தின் அந்த முடிவை பாராட்டும் விதமாக, கோவிலுக்கு இயந்திர யானை ஒன்றை பீட்டா அமைப்பும், நடிகை பிரியாமணியும் இணைந்து பரிசளித்துள்ளனா். 'மகாதேவன்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திர யானை, இனி கோவில் விழாக்களில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இயந்திர யானையை வழங்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மகாதேவன் இயந்திர யானை, கோவில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து நடிகை பிரியாமணி, 'தொழில்நுட்ப வளா்ச்சி மூலம் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நமது கலாசார நடைமுறைகள் மற்றும் பாரம்பரியம் பின்பற்றப்படுவதை நாம் உறுதிப்படுத்தலாம்' என்றாா்.

    இது குறித்து மாகதேவர் கோவில் நிர்வாகத்தினர் கூறும்போது, 'மனிதா்கள் போல் தங்கள் குடும்பத்துடன் இணைந்து சுதந்திரமாக வாழவே எல்லா விலங்குகளையும் கடவுள் படைத்தாா். அந்த வகையில், கோவில் விழாக்களில் இயந்திர யானையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சிதான்' என்றனா்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
    • பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நிஜாம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் யாகூப் பாஷா. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சமீனா. தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சமீனா தன்னுடைய கணவரிடம் கம்மல் வாங்கி தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்தார். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சமீனா தனக்கு உடனடியாக கம்மல் வேண்டுமென கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.

    மேலும் கணவர் என்று கூட பார்க்காமல் அவரது உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் ஷேக் யாகூப் பாஷா அலறினார் .அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைத்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்

    இது குறித்து பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார் . ஷேக் யாகூப் பாஷாவும் மனைவி தன்னைக் கொல்ல முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எஸ்பிஐ வழங்கிய தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயரைத் தவிர, பத்திரங்களின் வரிசை எண்கள் ஏன் இல்லை
    • இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை

    தேர்தல் பத்திரத்தைச் சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது

    அப்போது, "எஸ்பிஐ வழங்கிய தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயரைத் தவிர, பத்திரங்களின் வரிசை எண்கள் ஏன் இல்லை. இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர்கள் பெயர், பத்திர எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.

    குறிப்பாக ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண்ணை வெளியிட வேண்டும். தேர்தல் ஆணையம் அதனை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். வெளியிட்ட பின் 'எந்த தகவலும் விடுபடவில்லை' என்பதை பிரமாணப் பத்திரமாக எஸ்பிஐ வங்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற கொண்டிருந்த போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, குடியரசுத் தலைவருக்கு தாம் கடிதம் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டார்.

    அதற்குக் கடுமையாக பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், "நீங்கள் ஒரு மூத்த வழக்கறிஞர் மற்றும் உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர். என்னுடைய சுய அதிகாரத்திற்கு எதிராக நீங்கள் தேவை இல்லாமல் இப்போது கடிதம் எழுதியுள்ளீர்கள். இவை அனைத்தும் விளம்பரம் தொடர்பான விஷயங்கள். நாங்கள் அதில் தலையிட விரும்பவில்லை. என்னை எதுவும் காட்டமாகச் சொல்ல வைக்காதீர்கள்" என எச்சரித்தார்.

    சில நாட்களுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதியிருந்தார்.

    அக்கடிதத்தில், "இந்திய நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு முழுமையான நீதியை உறுதி செய்ய தேர்தல் பத்திரங்கள் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்.

    அரசியலமைப்பு சட்டத்திற்கு முட்டுக்கட்டையை உருவாக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தின் மகத்துவத்தை குலைக்கும் வகையிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கக் கூடாது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கத்தை சந்தேகிப்பது மிக மோசமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.
    • இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இறுதியில் அமைத்தது.

    இதில், இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருந்தனர்.

    வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொண்டு வந்தன. 

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று கூட்டமைப்பின் தற்காலிகக் குழுவை கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கம் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு குழு கொண்டு நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

    அடுத்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.

    அந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×