என் மலர்
இந்தியா
- அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் தரும் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு உணவு டெலிவரி ஊழியராக மாறியுள்ளார்.
இதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது அவர் சொந்தமாக கிளவுட் கிச்சன் உணவகம் தொடங்கும் கனவை கொண்டிருந்தார்.
இதற்காக, தான் பயின்ற பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் என்ன வகையான உணவுக்கு தேவை உள்ளது, நுகர்வோர் என்ன விலையில் அதை வாங்கத் தயாராக உள்ளனர், எந்தெந்த பகுதிகளில் ஆர்டர்கள் அதிகம் வருகின்றன என்பதைத் தானே கண்டுபிடிக்க விரும்பினார். இந்தக் கள ஆராய்ச்சிக்கு டெலிவரி ஊழியராக ஆனார்.
அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சில நண்பர்கள் அவரை கேலி செய்தனர், மேலும் டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.
இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், அவர் பின்வாங்கவில்லை. தனது ஆராய்ச்சியின் மூலம், குறைந்த விலையில் அதிகம் விற்பனையாகும் 12 வகையான உணவுப் பொருட்களை அவர் அடையாளம் கண்டார்.
இந்த மாதிரியின் மூலம் 3-4 மாதங்களுக்குள் லாபம் ஈட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். அவரது நண்பர் அவர் குறித்து இவ்வாறு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
- 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது கேள்வி எழுப்பினார்.
- நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது, ஒரு டாலருக்கு ரூ.90க்கும் கீழே சரிந்துள்ளது.
நேற்று காலை அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் 28 பைசாக்கள் சரிந்து, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலருக்கு ரூ.90.43 ஆகக் குறைந்தது.
இந்நிலையில் கடந்த 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை மோடி விமர்சித்த பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
"ரூபாய் மதிப்பு ஏன் சரிந்து வருகிறது? பிரதமரிடம் நரேந்திர மோடியின் கேள்வி" என்ற தலைப்பில் மோடியின் வீடியோவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில், "நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு பதிலளிக்க வேண்டும்" என்று மோடி பேசியுள்ளார்.
- மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது
டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '400' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, 2022 மற்றும் 2024 க்கு இடையில் டெல்லியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் சுமார் 2 லட்சம் சுவாச நோய்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பதிலளித்தார்.
அவரது பதிலில், அரசு தரவுகளின்படி, டெல்லியில் உள்ள ஆறு பெரிய மருத்துவமனைகள் 2022 ஆம் ஆண்டில் 67,054 சுவாசக் கோளாறுகளையும், 2023 இல் 69,293 மற்றும் 2024 இல் 68,411 சுவாசக் கோளாறுகளையும் பதிவு செய்துள்ளன.
மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது. மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று பாரளுமன்றத்தில் டெல்லி மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது.
- இந்த நாடுகடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம்.
2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா 18,822 இந்திய குடிமக்களை நாடு கடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் இந்த ஆண்டு மட்டும் 3,258 பேர் ஜனவரி முதல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த ஆண்டு திரும்பிய 3,258 பேரில், 2,032 பேர் வழக்கமான வணிக விமானங்களில் வந்தனர். மீதமுள்ள 1,226 பேர் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நாடு கடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் மாநில அரசுகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்ற வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் NIA இதுவரை 27 மனித கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்து 169 பேரைக் கைது செய்துள்ளது என்றும் 132 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
- SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள்.
- அவர்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஊழலால் நிறைய பணம் சம்பாதித்தவர்கள்.
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடைபெற்று வருகிறது. அவசர கதியில் செய்யப்படுவதால் படிவத்தை விநியோகித்து, திரும்பப்பெற்று, பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் SIR எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி,
"பாஜக SIR ஐ வைத்து குறித்து மத அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால் SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள். எனவே நீங்கள் அமர்ந்திருக்கும் கிளையையே (இந்துக்கள்) வெட்ட வேண்டாம்.
நான் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமை பதிவேட்டை (NRC), மக்களை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம்களையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்
என் கழுத்தை அறுத்தாலும் சரி, இங்கிருந்து யாரும் விரட்டப்பட மாட்டார்கள். மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும்.
மேலும் வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படாது என்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு எனது பொறுப்பு என்றும் உறுதியளிக்கிறேன்.
சில விஷமிகள், மாநில அரசு மத வழிபாட்டுத் தலங்களை மசூதிகள் அல்லது கல்லறைகளாகப் பதிவு செய்ததாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இது ஒரு பொய்.
ஏஐ தொழில்நுட்பம் இப்போது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் ஒருபோதும் கூறாத அறிக்கைகளைப் பரப்ப என் முகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஊழலால் நிறைய பணம் சம்பாதித்தவர்கள். பீகாரில், அவர்கள் தந்திரமாக ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தினர். இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. சுயேச்சைகள் வாக்குகளைப் பிரித்தால், இழப்பு உங்களுடையது, நன்மை அவர்களுடையது.
நான் இன்னும் SIR படிவத்தை பூர்த்தி செய்யவில்லை. உங்கள் அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்ட பின்னரே நான் அதை செய்வேன். உதவ ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உதவி முகாம்களை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.
- அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை
டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.
அதாவது, நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, ஆனால் அசாமில் அத்தகைய சாலைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. சுங்க வரி செலுத்தினாலும் அசாம் மக்களுக்கு தரமான சாலைகள் கிடைக்கவில்லை. அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை என்று கோகாய் கூறினார்.
இதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்ததை ஒப்புக்கொண்டார். அதாவது, கௌரவ் கோகோய் கூறியது உண்மை என்றும், விசாரணை நடத்தப்பட்டு சாலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இப்போது நிலைமை சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
- அருகில் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த 10,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட்டில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவால் 2 பெண்கள்உயிரிழந்தனர்.
தன்பாத் மாவட்டத்தின் கெண்டுவாடி பஸ்தி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கடந்த 2 நாள்களாக கார்பன் மோனாக்ஸைட் விஷவாயு கசிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அருகில் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த 10,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஷவாயு தாக்கியதில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு 20-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அப்பகுதியை சேர்ந்த பிரியங்கா தேவி என்ற பெண்நேற்று முன் தினம் உயிரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணா லலிதா தேவி என்பவர் நேற்று உயிரிழந்தார்.
இதனிடையே விஷவாயு பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் விஷவாயு கசிவிற்கு பிசிசிஎல் நிறுவனத்தின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டி உள்ளூர்வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்தனர்.
- மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை டெல்லியில் நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக இன்று மாலை ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தந்தார்.
டெல்லியில் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.
டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர், இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்.
பிரதமர் மோடி தனது இல்லத்தில் புதினுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பு இரவு விருதுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து புதினின் முதல் இந்திய வருகை இதுவாகும். எனவே இந்த வருகை சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்கா இந்தியா மீது பல தடைகளை விதித்துள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, புதின் ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு, பின்னர், ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை, பின்னர், மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்பார்.
- தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் ‘தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி’ என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது
- திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும்.
கூகுள் தனது பயனர்களால் அதிகம் தேடப்படும் பொருட்கள், பெயர்கள் என அனைத்துவிதமான தேடல்களின் பட்டியலையும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் அதிகம் தேடப்பட்ட A டூ Z அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய உணவான இட்லி முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் பத்து இடங்களில் கொழுக்கட்டை, திருவாதிரை களி இடம்பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களை பிடித்த உணவுகள் குறித்து காண்போம்.
இட்லி
இந்த தேடலில் தென்னிந்தியாவின் முக்கிய உணவான இட்லி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வட இந்தியர்கள் என சொல்லலாம். காரணம் தேசியக் கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புகள் எழுந்த சமயத்தில், இணையத்தில் முக்கியமாக இன்ஸ்டாவில் தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் 'தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி' என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது. அப்போது அதிகம் இட்லி குறித்து தேடப்பட்டிருக்கலாம்.
Porn star martini
இரண்டாவது இடத்தில் Porn star martini உள்ளது. இது ஒரு காக்டெயில். வெண்ணிலா சுவையுள்ள Porn star martini ஷாட் கிளாஸ் ஷாம்பெயினுடன் சேர்க்கப்படுகிறது.
உகாடிச்சே மோடக்
உகாடிச்சே மோடக் என்பது வட இந்தியாவில் செய்யப்படும் கொழுக்கட்டை எனக்கூறலாம். விநாயகர் சதுர்த்தியின்போது இது அதிகம் தேடப்பட்டிருக்கும்.
தேக்குவா (இனிப்பு பிஸ்கட்)
4ம் இடத்தில் தேக்குவா (இனிப்பு பிஸ்கட்) உள்ளது. இது கஜூரியா, கஜூர் எனவும் அழைக்கப்படுகிறது. கோதுமை மாவில் வெல்லம், நெய், தேங்காய், ஏலக்காய், பெருஞ்சீரகம் போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது.
உகாதி பச்சடி
உகாதி பச்சடி என்பது உகாதி பண்டிகையின் போது தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் செய்யும் ஒரு சிறப்பு உணவாகும். இது அறுசுவைகளின் கலவையாகும்.
பீட்ரூட் கஞ்சி
6ம் இடத்தில் பீட்ரூட் கஞ்சி உள்ளது. பீட்ரூட்டுடன் கேரட் கடுகு மற்றும் தேவையான மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு உணவு.
திருவாதிரை
திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது.
கொழுக்கட்டை
10ம் இடத்தில் கொழுக்கட்டை உள்ளது. கொழுக்கட்டையை நாம் அனைவரும் அறிவோம். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு படைக்க செய்யப்படும் முக்கிய உணவாகும்.
- ரஷிய அதிபர் புதின் 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்.
- பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்தடைந்தார்.
தலைநகர் டெல்லி வந்தடைந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார். பின்னர் புதின் ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.
ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை அதிபர் புதினுக்கு முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் கலந்துகொள்கிறார். மாநாட்டுக்கு இடையே மோடி-புதின் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கும் அவர்கள், கூட்டு அறிக்கை வெளியிடுகின்றனர்.
- ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு
- இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் கருத்து
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஆசிட் வீச்சு வழக்குகள் தொடர்பான விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய ஷாஹீன் மாலிக் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக்கின் வழக்கு தற்போது வரை விசாரணையில் இருப்பது வெட்கக்கேடானது எனவும் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "சட்ட அமைப்பை எவ்வளவு கேலிக்கூத்தாக்குவது இது. 16 வருடம் இப்படிப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது வெட்கக்கேடானது. ஒரு நாட்டின் தேசிய தலைநகராலேயே இதை கையாள முடியவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்? இது தேசத்திற்கே அவமானம்" என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு ஏன் முடிவுக்கு வரவில்லை என்பதை விளக்கி, பொதுநல மனுவிலேயே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டார். விசாரணையின்போது, ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை மாலிக் விவரித்தார். அவர்களில் பலர் நிரந்தர காயங்களுடன் வாழ்கின்றனர். செயற்கை உணவு குழாய்கள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அதனால் சில நலத்திட்டங்களை பெறமுடியும் எனவும் வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க சட்டம் அல்லது தேவைப்பட்டால் அவசரச் சட்டம் மூலம் சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
- தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 2024-25-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை தொடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் அவர் கூறியதாவது:
தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25 மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை 20.8 சதவீதமும், இருசக்கர வாகனங்களின் விற்பனை 33 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதேபோல், பெட்ரோல், டீசல் கார்களின் கார்களின் விற்பனை 4.2 சதவீதமும், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 14 சதவீதமும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். ஆண்டுக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் 400-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் ஸ்டார்ட் அப் சந்தையை உருவாக்கும் என தெரிவித்தார்.






