என் மலர்
இந்தியா
- மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.
- மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 'கர்மஸ்ரீ' க்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசு தனது தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு "விபி ஜி ராம் ஜி" எனப் பெயர் மாற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மம்தா, "தேசியத் தலைவர்களுக்குச் சில கட்சிகள் மரியாதை செலுத்தத் தவறினால், நாங்கள் அதைச் செய்வோம். தேசத் தந்தையின் பெயரையே நீக்குவது மிகுந்த அவமானமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக முறைகேடுகளைக் காரணம் காட்டி 2022-ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்திற்கான ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சுமார் 58 லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 6,919 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.
இது கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.
மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜியம் விரைவில் அகற்றப்படும் என பொதுக்கூட்டத்தில் சூளுரைத்துச் சென்றார்.
- டெல்லியில் இன்று காற்றின் தரம் 386 என்ற அளவில் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்தது.
- பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கடுமையாக உள்ளது. மேலும் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் காலை 10 மணிக்கு டெல்லி விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானச் செயல்பாடுகள் இயல்பு நிலையில் தொடர்கின்றன என்று தெரிவித்தது.
அதேவேளையில் புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியது. டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் 386 என்ற அளவில் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது. நகரத்தில் உள்ள 16 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது, மீதமுள்ள நிலையங்களில் மிகவும் மோசமான அளவில் பதிவாகியுள்ளது.
மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.
- துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட லஞ்சம் பெற்றார்.
- லஞ்சப் பணம் 3 லட்சம் ரூபாயுடன், கணக்கில் வராத 2.23 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி ஒருவர், துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி பிரிவில் துணை திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் லெப்டினன்ட் கர்னல் தீபக் குமார் சர்மா.
துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட, அந்த நிறுவனத்தின் சார்பாக வினோத் குமார் என்பவர் மூலம் தீபக் குமார் சர்மாவுக்கு 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, தீபக் குமார் சர்மா மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்தது.
இந்த ஊழல் சதியில் ஈடுபட்டதாக தீபக் குமார் சர்மாவின் மனைவியும், ராணுவ அதிகாரியுமான கர்னல் காஜல் பாலி மற்றும் துபாய் நிறுவனத்தின் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லியில் உள்ள தீபக் குமார் சர்மாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், லஞ்சப் பணம் 3 லட்சம் ரூபாயுடன், கணக்கில் வராத 2.23 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
பெங்களூரு, ஜம்மு மற்றும் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
- கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, 215 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
215 கி.மீ.க்கு மேல் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்படும்.
500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
உதாரணமாக சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரெயில்களில் ரூ10 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
இதுதவிர்த்து அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், 215 கி.மீ வரை பயணிக்க கட்டண உயர்வு இல்லை. மேலும் புறநகர் ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு மூலம் ரெயில்வே ரூ.600 கோடி கூடுதல் வருவாயை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே ஊழியர் ஊதியச் செலவு ரூ. 1,15,000 கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ. 60,000 கோடியாகவும் அதிகரித்துள்ளதால் 2024-25 நிதியாண்டில் மொத்த ரெயில்வே துறையின் செலவு ரூ. 2,63,000 கோடியாக உயர்ந்துள்ளது.
எனவே இந்த செலவுகளை சமாளிக்க பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக ரெயில்வே கட்டணங்களை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேற்று முதல் 2 நாட்களுக்கு பிரம்மபுத்திரா நதியில் படகு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- மொத்தம் 45 நிமிடம் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று காலை மேற்கு வங்காளம் சென்றார். பின்னர் அங்கிருந்து அசாமிற்கு பிற்பகலில் சென்றார்.
கவுகாத்தியில் ரூ.4000 கோடியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் வாகன பேரணி நடத்தி பா.ஜ.க. தலைமை அலுவலகம் சென்றார்.
2-வது நாளான இன்று பிரதமர் மோடி அசாம் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து பிரம்மபுத்திரா நதியில் சொகுசு கப்பலில் பிரதமர் மோடி மாணவர்களுடன் உரையாற்றுகிறார்.
3 அடுக்குகள் கொண்ட எம்.வி.சராய்தேவ்-2 கப்பலில் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அசாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மாணவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். மொத்தம் 45 நிமிடம் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதலே பாதுகாப்புபடை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று முதல் 2 நாட்களுக்கு பிரம்மபுத்திரா நதியில் படகு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு திப்ருகர், நாம்ரூப் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான அம்மோனியா-யூரியா உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- UGC தற்போது மேலும் 3 கல்வி நிறுவனங்களைப் போலிப் பட்டியலிட்டுள்ளது.
- இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளோமா சான்றிதழ்கள் எதற்கும் அங்கீகாரம் கிடையாது.
இந்தியாவில் போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தற்போது மேலும் 3 கல்வி நிறுவனங்களைப் போலிப் பட்டியலிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள மொத்த போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், கர்நாடகாவில் உள்ள சர்வ பாரதிய சிக்ஷா பீடம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நேஷனல் பேக்வார்ட் கிருஷி வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாத போலியான நிறுவனங்கள் என்று UGC தெரிவித்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளோமா சான்றிதழ்கள் எதற்கும் அங்கீகாரம் கிடையாது. இந்தச் சான்றிதழ்களைக் கொண்டு மேல் படிப்பிற்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ விண்ணப்பிக்க முடியாது.
மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு முன்னால், அந்த நிறுவனம் UGC-ஆல் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது டெல்லியில் தான் அதிகப்படியாக 10 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 4, கேரளாவில் 2, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் தலா ஒன்று என இந்தப் பட்டியல் நீள்கிறது.
- 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகனம் கேட்டிருந்தார்.
- தந்தையின் பாக்கெட்டில் ரூ.100 மட்டுமே இருந்தது. அதில், ரூ.20 பணத்தை அருகிலுள்ள கடையில் இருந்து பிளாஸ்டிக் கவரை வாங்கினார்.
ஜார்க்கண்டில் மருத்துவமனையின் அலட்சியத்தால், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நான்கு மாத மகனின் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு பேருந்தில் வீடு திரும்ப வேண்டிய அவலம் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்டில் உள்ள சாய்பாசா சதார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக வியாழக்கிழமை குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை சிகிச்சையின் போது குழந்தை இறந்தது.
தனது மகன் இறந்த பிறகு, அவரது தந்தை டிம்பா, உடலை 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகனம் கேட்டிருந்தார்.
மணிக்கணக்கில் காத்திருந்தும், அதிகாரிகள் வாகனம் ஏற்பாடு செய்யத் தயாராக இல்லை. இதற்கிடையில், குழந்தையின் தந்தையின் பாக்கெட்டில் ரூ.100 மட்டுமே இருந்தது.
அதில், ரூ.20 பணத்தை அருகிலுள்ள கடையில் இருந்து பிளாஸ்டிக் கவரை வாங்கி, அதில் தனது மகனின் உடலைச் வைத்தார்.
மீதமுள்ள பணத்தைதில் சாய்பாசாவிலிருந்து நோமுண்டிக்கு பஸ் டிக்கெட் எடுத்துக்கொண்டு கையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றிய மகனின் உடலுடன் பயணித்தார்.
நோமுண்டியில் இறங்கி தனது கிராமத்திற்கு அவர் நடந்தே சென்றார். மருத்துவமனையிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
ஆம்புலன்ஸ் அப்போது வேறு இடத்திற்கு சென்றிருந்தது என்றும் மேலும் 2 மணி நேரம் காத்திருக்க சொல்லியும் அவர் சென்றுவிட்டார் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் இர்பான் அன்சாரி கூறினார்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
- யாருக்கு வேலை, எங்கே, எப்படி? என்பது குறித்த முடிவுகள் இனி டெல்லியில் இருந்துதான் எடுக்கப்படும்.
ஊரக வேலைத்திட்ட புதிய சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மா காந்தி பெயரில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி, அதற்கு பதிலாக 'வி.பி. ஜி ராம் ஜி' என்ற 125 நாள் வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றியது. இதனை எதிர்க்கட்சிகள் இன்னும் எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
அதில் அவர்," கிராமப்புற ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த திட்டம் வேண்டுமென்றே பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி அரசு முற்றிலுமாக ஒழித்துவிட்டது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தின் ஒருமித்த கருத்துடன் இயற்றப்பட்டது. கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு, குறிப்பாக ஏழைகள், ஓரங்கட்டப்பட்ட மற்றும் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியத்தை வழங்கும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக அது இருந்தது.
அந்த சட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது. மக்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வாழ்வாதாரத்தை ஈட்ட உதவுவதன் மூலம் துன்பகரமான இடம்பெயர்வைத் தடுக்க உதவியது. மேலும் மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியக் கண்ணோட்டத்தை நனவாக்குவதற்கான ஒரு உறுதியான படியாக மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம் இருந்தது.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக, கிராமப்புற வேலையற்றோர், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன. கொரோனா காலத்தில் பல லட்சக்கணக்கானவர்களுக்கு உயிர்நாடியாக இருந்தது. ஆனால் சமீபத்தில் அந்த திட்டத்தை புல்டோசர் கொண்டு தாக்கி விட்டது.
மகாத்மா காந்தி சட்டத்தின் கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி எதிர்க்கட்சிகளிடம் கலந்துரையாடல் நடத்தப்படவில்லை. மகாத்மா காந்தியின் பெயர் கூட இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. யாருக்கு வேலை, எங்கே, எப்படி? என்பது குறித்த முடிவுகள் இனி டெல்லியில் இருந்துதான் எடுக்கப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தியதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தாலும், இந்த திட்டம் ஒருபோதும் எந்தவொரு கட்சியை பற்றியதாகவும் இல்லை. மாறாக தேசிய மற்றும் பொது நலனைப் பற்றியதாகவே இருந்தது. தற்போது அந்த சட்டத்தை பலவீனப்படுத்தி இருப்பது, கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலுக்கு சமம்" என்றார்.
மேலும், இந்த புதிய சட்டத்தை கருப்புச் சட்டம் என அழைத்த அவர், அதனை எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்களும், லட்சக்கணக்கான தொண்டர்களும் உறுதுணையாக நிற்பதாகவும் கூறினார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனை ஏற்று தற்போது சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
- மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது
- போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம்.
தனியார் நிறுவனங்களிடமிருந்து இந்திய ரயில்வேக்கு வரவேண்டிய சுமார் 4,087 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வசூலக்கப்படவில்லை என்று மத்திய கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது.
மேலும், இந்திய ரயில்வேயிடம் தற்போது 4.88 லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 62,740 ஹெக்டேர் நிலம் காலியாகவே கிடக்கிறது.
இந்த நிலங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்ட 'ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்திடம்' (RLDA) வெறும் 1.6% நிலம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் கூட, நில உரிமை தொடர்பான சிக்கல்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணமாகப் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை.
போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம் என்று சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் ரயில் டிக்கெட் கட்டணங்கள் தவிர்த்து, நிலங்களை மேம்படுத்துவதன் மூலம் ஈட்ட வேண்டிய டிக்கெட் சாரா வருவாயில் இந்திய ரயில்வே மிகவும் பின்தங்கியிருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
- திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.
- திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 8 மாநிலங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்தின்(சி.ஏ.ஜி.) தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதமரின் கவுஷல் விகாஸ் யோஜனா என்கிற திட்டம் மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம் மேற்பார்வை செய்து வருகிறது.
அசாம், பீகார், ஜார்கண்ட், மராட்டியம், கேரளா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் இந்த திட்டத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மோசமான நிதி மேலாண்மை, மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.
95.90 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 90.66 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வங்கிக்கணக்குகளில் இந்த நிதி உதவி வரவு வைக்கப்படவில்லை. பலரின் வங்கி கணக்குகளில் 2 முறை மற்றும் அதற்கு மேலான தடவையும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விண்கலன் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்யும் வகையில் சோதனை.
- பாராசூட் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ககன்யான் திட்டத்திற்கான இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றிப்பெற்றுள்ளது.
விண்வெளிக்கு சென்று பூமி திரும்பும் வீரர்களின் விண்கலன் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட பாராசூட் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
- மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.
- அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.
அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது. பிரதமரின் வருகைக்காக மாநாட்டுத் திடலில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.
இந்நிலையில், மாநாட்டுத் திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்.ஐ.ஆரை திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளனர்.
அந்தக் கட்சி என்னையும், பா.ஜ.க.வையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், பேசட்டும். ஆனால் மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது.
பின்தங்கிய, மேற்கு வங்கத்தின் தொலைதூர பகுதிகளுக்கு நவீன வசதிகளை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இங்கு வளர்ச்சியைக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
மாநிலத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு அளியுங்கள் என தெரிவித்தார்.






