என் மலர்
நீங்கள் தேடியது "தாக்குதல்"
- தாக்குதல் சம்பவம் குறித்து கண்ணூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
- இந்த சம்பவத்திற்கு பின்னால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மந்திரி சபையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர் நேற்று கண்ணூரில் நடைபெற்ற பன்னாட்டு ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை தொடங்கி வைத்து விட்டு திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரெயில் நிலையம் வந்தார்.
அப்போது அங்கு திரண்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர், வீணா ஜார்ஜிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புக் கொடியுடன் வந்து கோஷமிட்ட அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். இருப்பினும் அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மந்திரி வீணா ஜார்ஜ் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த அவர் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதல் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் முதல்-மந்திரி பினராயி விஜயன், கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு வந்து வீணா ஜார்ஜிடம் நலம் விசாரித்தார். தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். தாக்குதலுக்கு உள்ளான வீணா ஜார்ஜ், கழுத்தில் வலி இருப்பதாக கூறியதை தொடர்ந்து, பரியாரம் பகுதியில் உள்ள கண்ணூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தனர். இந்த சூழ்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து கண்ணூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கேரள மாணவர் காங்கிரசின் கண்ணூர் மாவட்டத் தலைவர் எம்.சி. அதுல், பொருளாளர் அக்ஷய் மட்டுல் மற்றும் நிர்வாகிகள் முபாஸ், பிதுல் பாலன் மற்றும் முகமது யாசின் ஆகியோர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதற்கிடையில் பெண் மந்திரி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் அழைப்பு விடுத்தார். இதனால் மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மகளிர் மற்றும் மாணவர் பிரிவுகள் இணைந்து கண்ணூர் நகரில் தனித்தனி போராட்ட பேரணிகளை நடத்தியது. இந்த பேரணியின் போது காங்கிரஸ் தேர்தல் பணிக்காக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அங்குள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது கல் வீசப்பட்டதில் மாநில நிர்வாகி பர்ஹான் முண்டேரி காயமடைந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் கண்ணூர் கோடியேரி பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
- சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.
- செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ந்தேதி நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காரை இயக்கிய பயங்கரவாதி டாக்டர் உமர் நபி உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த சம்பவத்தில் உமர் நபியின் கூட்டாளிகளான சில டாக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பேட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டாக்டர்கள் அரியானாவின் பரிதாபாத்தில் செயல்படும் அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் டெல்லியில் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
செங்கோட்டை அருகே உள்ள பகுதிகள், சாந்தினி சவுக்கின் சில பகுதிகள் மற்றும் டெல்லியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், பாரம்பரிய கட்டிடங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்பு அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
சாந்தினி சவுக்கில் உள்ள ஒரு கோவிலும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருப்பதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.
இதை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதை தவிர தீவிரவாதிகள் இலக்காக நிர்ணயித்த இடங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அல்லது செயல்பாடுகள் குறித்து போலீசாருக்கு தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பீதி அடைய வேண்டாம் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 6-ந்தேதி மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 160 பேர் காயம் அடைந்தார்கள். இதற்கு பழி வாங்கவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தலாம் என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- பணத்தை திருப்பி தராமல் காலிப் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
- ஹர்ஷத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தென்காசி:
தென்காசி நகரப்பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷத். இவர் தென்காசி நகரின் மையப்பகுதியில் உள்ள அம்மன் சன்னதி பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரிடம் சில மாதங்களுக்கு முன்பு அதே சன்னதி பஜாரில் நகைக்கடை நடத்தி வரும் உரிமையாளரான காலிப் என்பவர், தனக்குத் தெரிந்த ஒருவரின் 56 கிராம் நகை ரூ.3.5 லட்சத்திற்கு அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை அடகில் இருந்து திருப்ப நீங்கள் பணம் கொடுத்தால், அவர் அந்த நகையை உங்களிடமே விற்பனை செய்வார் என கூறி உள்ளார்.
இந்த நிலையில், ஹர்ஷத் தன்னிடம் இருந்த ரூ3.5 லட்சம் பணத்தை காலிப்பிடம் கொடுத்து அந்த நகையை திருப்பிய நிலையில், அந்த நகை தரம் குறைந்த நகையாக இருந்துள்ளது.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஹர்ஷத் இது தரம் குறைந்த தங்கம் எனவும், இது எனக்கு வேண்டாம் தன்னுடைய பணத்தை திருப்பி தாருங்கள் என கூறியுள்ளார்.
ஆனால், பணத்தை திருப்பி தராமல் காலிப் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹர்ஷத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு ஹர்சத்தை, காலிப் உள்பட சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹர்சத்தை தாக்கிய காலிப் மற்றும் அவரது சகோதரர்களான அஸ்லம், ஹாஜி உள்ளிட்ட 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் பஸ் நிலையம் அருகே கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
- தாக்குதலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகள் 4 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார்.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம், வெங்கடேசா நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் த.வெ.க வட்ட செயலாளராக உள்ளார்.
இவர் இரவு சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் பஸ் நிலையம் அருகே கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மற்றொரு வட்ட செயலாளர் உட்பட 4 பேர் சேர்ந்து சுரேந்திரனை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயம் அடைந்த சுரேந்திரன் கே.கே. நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகள் 4 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார். ஜனநாயகன் திரைப்படம் ரிலீசுக்காக கோயம்பேட்டில் உள்ள சினிமா தியேட்டரில் சுரேந்திரன் வைத்த கட் அவுட் மற்றும் பேனரில் ஒரு சில நிர்வாகிகள் பெயரை போடவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் சுரேந்திரனை தாக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
- ஒரு தலித் எப்படி எப்படிக் குதிரை சவாரி செய்யலாம்? என்று கூறி அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
- குஜராத்தில் தலித் மணமகன்கள் குதிரை சவாரி செய்வதால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் சந்துர்மனா என்ற கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தின் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் விஷால் சாவ்தா என்பவரின் திருமண விழா இன்று (பிப்ரவரி 2) நடைபெற்றது.
மணமகன் விஷால் சாவ்தா தனது திருமண ஊர்வலத்தின் போது குதிரை மீது அமர்ந்து சென்றது, அங்குள்ள ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலரை ஆத்திரமடையச் செய்துள்ளது.
எனவே ஊர்வலத்தை வழிமறித்த ஆதிக்க சாதி கும்பல், ஒரு தலித் எப்படி எப்படிக் குதிரை சவாரி செய்யலாம்? என்று கூறி தாக்குதல் நடத்தியுள்ளது.
மணமகன் குதிரையிலிருந்து வலுக்கட்டாயமாக கீழே இழுத்துத் தள்ளப்பட்டார். தடுக்க வந்த உறவினர்களை கத்திகள் மற்றும் கட்டைகளால் கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சிலர் படுகாயமடைந்தனர்.
இதன்பின் மணமகன் குதிரை சவாரியை கைவிட்டு காரில் சென்று போலீஸ் பாதுகாப்புடன் திருமண சடங்குகளில் கலந்துகொண்டார்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சைலேஷ் தாகூர், ஜெயேஷ் தாகூர், சமீர் தாகூர், அஸ்வின் தாகூர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராமத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்கப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காந்திநகர் முதல் பனஸ்கந்தா வரை குஜராத்தில் தலித் மணமகன்கள் குதிரை சவாரி செய்வதால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
- முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார்.
- 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் மும்பை, வடாலா பகுதியைச் சேர்ந்த ஷெஹ்னாஸ் சையத் (46) என்ற பெண் மசாஜ் சேவையை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை வீட்டிற்கு மசாஜ் செய்ய வந்த பெண் ஊழியரின் நடத்தை மற்றும் அவர் கொண்டு வந்த மசாஜ் பெட் அறையில் வைப்பதற்கு வசதியாக இல்லாதது போன்ற காரணங்களால், ஷெஹ்னாஸ் அந்த முன்பதிவை ரத்து செய்துள்ளார்.
முன்பதிவை ரத்து செய்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர், ஷெஹ்னாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஆத்திரம் தலைக்கேறி, ஷெஹ்னாஸின் முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார். இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
தடுக்க வந்த ஷெஹ்னாஸின் 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஷெஹ்னாஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்புடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அந்த ஊழியரை நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
- மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை வீதிகள் வழியாக 1.5 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர்.
- நூற்றுக்கணக்கான மக்கள் இதனை வேடிக்கை பார்த்த போதிலும், யாரும் தடுக்க முன்வரவில்லை.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் 16 வயது சிறுவனை கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி 1.5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனும், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததை தொடர்ந்து, சிறுவன் சிறையிலும், சிறுமி சீர்திருத்தப் பள்ளியிலும் வைக்கப்பட்டனர் என்று கூறபடுகிறது.
இந்தச் சம்பவத்தால் சிறுமியின் குடும்பத்தினர் சிறுவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.
சிறையில் இருந்து விடுதலையான சிறுவன், தனது மாற்றுத்திறனாளி தாயுடன் உஜ்ஜைன் இல் இருந்து வெளியேறி தேவாஸ் பகுதியில் வசித்து வசித்து வந்தான்.
தனது தாயின் மருத்துவச் செலவுக்காகப் பணம் திரட்ட இந்த வாரம் உஜ்ஜைன் திரும்பியபோது, சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறுவனை வழிமறித்துள்ளனர்.
சிறுவனைப் பிடித்து ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்திய கும்பல், சிறுவனின் கைகளைக் கயிற்றால் கட்டி, மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை வீதிகள் வழியாக 1.5 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் இதனை வேடிக்கை பார்த்த போதிலும், யாரும் தடுக்க முன்வரவில்லை.
மாறாக, பலர் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.
இறுதியாக காவல் நிலையத்திற்கு அருகே வந்தபோது சிறுவனை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக சிறுவன் நேற்று முன் தினம் அளித்த புகாரின் பேரில், நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- நேற்று ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
- பாதுகாப்புக் கருதி சக்கரதர்பூர் ரயில்வே கோட்டத்தில் 6 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரே ஒரு ஒற்றை காட்டு யானை தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பலரையும் தாக்கிவந்த அந்த ஆண்யானை, நேற்று இரவு (ஜன.5) நோவாமுண்டி மற்றும் ஹட்கம்ஹாரியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புகுந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரை மிதித்துக் கொன்றது. நேற்று முன்தினம் இதே யானை கோல்ஹான் பகுதியில் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் உட்பட 7 பேரைக் கொன்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் யானையை மீண்டும் காட்டிற்குள் விரட்ட, மேற்கு வங்கத்தின் பாங்குரா (Bankura) மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், யானைகளின் நடமாட்டம் காரணமாக பாதுகாப்புக் கருதி சக்கரதர்பூர் ரயில்வே கோட்டத்தில் 6 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக தலா ரூ.20,000 நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. யானை தாக்குதலைத் தடுக்க வனத்துறை தவறிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் மது கோடா மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த மாவட்டத்தில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
- சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை.
- பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது.
சென்னை:
திருத்தணி ரெயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27.12.2025 அன்று, திருத்தணி ரெயில்வே குடியிருப்பு அருகே, சில நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருத்தணி காவல் நிலையத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கு முறையான உதவியும் அளிக்கப்பட்டது.
மேற்கொண்ட புலன் விசாரணையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன், சட்டத்துக்கு முரண்பட்ட 4 இளஞ்சிறார்கள் இந்த குற்றத்தை செய்திருப்பது தெரிய வந்தது.
அவர்கள் 4 பேரும் 28.12.2025 அன்று கைது செய்யப்பட்டு இளையோர் நீதிக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் 3 பேரும் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது சட்டப்படி தகுந்த மற்றும் உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை. பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது.
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்கள் பணியாற்றும் இடங்களிலும் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இச்சம்பவத்தின் உணர்வுபூர்வ தன்மையை கருத்தில் கொண்டு, தாக்குதல் தொடர்பான இவ்வீடியோவை சமூக ஊடகதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பரப்பப்படுவதால் பொது அமைதி மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இதனைத் தட்டிக்கேட்ட நோயாளி, மரியாதையாகப் பேசுங்கள் என்று மருத்துவரை கடிந்துள்ளார்.
- அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் நோயாளி ஒருவரை மருத்துவர் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஷிம்லா மாவட்டத்தின் குப்வி பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர், சுவாசக் கோளாறு காரணமாகச் ஞாயிற்றுக்கிழமை ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் தனது உடல்நிலை குறித்து விளக்கியுள்ளார்.
அந்த சமயத்தில், மருத்துவர் மிகவும் அநாகரீகமாக பேசியதாக தெரிகிறது.
இதனைத் தட்டிக்கேட்ட நோயாளி, மரியாதையாகப் பேசுங்கள் என்று மருத்துவரை கடிந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர், நோயாளியைத் தாக்கியுள்ளார். இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து வெளியிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளி மீது தாக்குதல் நடத்திய மருத்துவரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
- சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார்.
- அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கரோல் பாடிச் சென்ற சிறுவர்களை தாக்கியதாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலக்காடு மாவட்டம் புதுசேரி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் என்ற அந்த நபர், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சுரபி நகர் பகுதியில் கரோல் பாடிச் சென்ற 14 வயதுக்குட்பட்ட சில சிறுவர்களை வழிமறித்துள்ளார்.
அப்போது, சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த அவர், சிறுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்தச் சிறுவர்களை கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களைத் தாக்கியதுடன் இசைக்கருவிகளையும் அஸ்வின் ராஜ் சேதப்படுத்தியுள்ளார். அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
இச்சம்பவம் குறித்து உள்ளூர் சிபிஐ(எம்) கட்சியினர் கூறுகையில், அந்தச் சிறுவர்கள் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலத்தில் கட்சியின் இசைக்கருவிகளைச் சிறுவர்களுக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுப்பது வழக்கம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அஸ்வின் ராஜ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் மீதான இந்தத் தாக்குதல் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானி ஒருவர் பயணியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் அங்கித் திவான் என்பவர், ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஊழியர்கள் என்ட்ரி வழியாக வரிசையில் புகுந்து முன்னால் செல்ல முயன்ற ஏர் இந்தியா விமானி வீரேந்தர் என்பவரை அங்கித் திவான் கடிந்துகொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த விமானி வீரேந்தர், இது ஊழியர்கள் என்ட்ரி என்றும், திவானை படிப்பறிவு இல்லையா என்று திட்டியுள்ளார். அதோடு அவரை தாக்கியும் உள்ளார்.
இந்தத் தாக்குதலில் அங்கித் திவானின் முகத்தில் ரத்தம் வழிந்தது.முகம் முழுவதும் ரத்தக் கறையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை அங்கித் திவான் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டாம் என அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிறது.






