என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்குதல்"

    • ஏன் அதிக விலை வசூலிக்கப்படுகிறது என்று ஊழியர்களிடம் கேட்டார்.
    • பயணிகள் தங்கள் தொலைபேசிகளில் தாக்குதலை படம் பிடித்தனர்.

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிஹால் (25) என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது குடும்பத்தினருடன் உத்தரப் பிரதேசத்தின் கத்ராவில் இருந்து மத்திய பிரதேசத்தின் பினா நோக்கி அந்தமான் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுகொண்டிருந்தார்.

    பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் ரெயிலில் சைவ உணவுகளை ஆர்டர் செய்தார். அதன் விலை ரூ.110 ஆக இருந்த நிலையில், கேட்டரிங் ஊழியர்கள் அவரிடம் ரூ.130 வசூலித்தனர். இதற்கு நிஹால் எதிர்ப்பு தெரிவித்து, ஏன் அதிக விலை வசூலிக்கப்படுகிறது? என்று ஊழியர்களிடம் கேட்டார்.

    இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கேட்டரிங் ஊழியர்கள் நிஹாலை தடிகளாலும், பெல்ட்களாலும் கண்மூடித்தனமாக அடித்தனர்.

    சக பயணிகள் அவர்களைத் தடுக்க முயன்றாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தாக்குதலைத் தொடர்ந்தனர். சில பயணிகள் தங்கள் தொலைபேசிகளில் தாக்குதலை படம் பிடித்தனர்.

    ரெயில் ஜான்சி ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    ரெயில் பினா நிலையத்தை அடைந்தவுடன் நிஹால் ரெயில்வே காவலரளிடம் புகார் அளிக்க முயன்றார். ஆனால் அவர்கள் இந்த விவகாரம் தங்கள் எல்லைக்குள் நடக்கவில்லை என கூறி புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இது பழைய வீடியோ என்றும் இதுபோன்ற எந்த சம்பவமும் பதிவாகவில்லை எனவும் வடக்கு ரெயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. 

    • இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைக்கலப்பாகி உள்ளது.
    • ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம் பிஜுனூரில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    அப்போது, திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட சிக்கன் துண்டுகள் சிறியதாக இருந்ததாக மணமகன் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக, மணமகன் வீட்டாருக்கு பொறித்த சிக்கன் சிறிய துண்டுகளாகவும், மணமகள் வீட்டாருக்கு பெரியதாகவும், அதிகமாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பாகி உள்ளது.

    சிக்கன் பிரச்னையில் திருமண வீடுடே கலவர வீடாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.

    சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

    • ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர்.
    • கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இங்கிலாந்தில் டான்காஸ் டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் பகுதிக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ஹண்டிங்டன் பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். சிலர் கழிவறைக்குள் சென்று பதுங்கி கொண்டனர்.

    இதுகுறித்து பயணிகள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ரெயிலில் இருந்து பயணிகள் பயத்துடன் அவசர அவசரமாக வெளியேறினார்கள்.

    இந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பயங்கரவாத எதிர்ப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் பெரிய கத்தியை வைத்து இருந்தார் என்றும் எங்கே பார்த்தாலும் ரத்தம் இருந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.

    கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார். "ஹண்டிங்டன் அருகே ரெயிலில் நடந்த தாக்குதல் சம்பவம் பயங்கரமானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.

    அவசர நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் போலீசாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.

    • அங்கிருந்தவர்கள் கணவன், மனைவியை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
    • போலீசார் மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா மதினஹள்ளி கிராமத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த கூட்டுறவு வங்கிக்கான தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் பி.கே.பி.எஸ்.(முதன்மை வேளாண் கடன் சங்கம்) ஒருவர் போட்டியிட்டார். இதற்காக அந்த சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டமும் நடத்தி இருந்தனர்.

    இந்த சங்கத்தைச் சேர்ந்த மாருதி என்பவர், கடந்த ஒரு வாரமாக மாயமாகி இருந்தார். இந்த நிலையில் திடீரென ஆலோசனை கூட்டத்துக்கு வந்து அவர் கலந்து கொண்டார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரி சதீஸ் ஜார்கிகோளியும் கலந்து கொண்டார். இந்த சந்தர்ப்பத்தில் மாயமாகி இருந்த மாருதி என்பவரின் மனைவி அங்கு வந்தார். கணவரை காணாததால் ஒரு வாரமாக அவரை தேடி அலைந்த நிலையில், திடீரென கூட்டத்திற்கு வந்து அவர் பங்கேற்றதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த பெண், தனது கணவரின் சட்டையைப்பிடித்து இழுத்தார்.

    மேலும் மந்திரி சதீஸ் ஜார்கிகோளியின் முன்பு வைத்தே தனது கணவர் மாருதியின் கன்னத்தில் அவர் சரமாரியாக அறைந்தார். அதைப்பார்த்து மந்திரி சதீஸ் ஜார்கிகோளி திக்குமுக்காடி போனார். மேலும் செய்வதறியாது திகைத்தார். அதையடுத்து அங்கிருந்தவர்கள் கணவன், மனைவியை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

    இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த முன்னாள் எம்.பி. ரமேஷ் கத்தி, மந்திரி சதீஸ் ஜார்கிகோளியிடம் சவால் விட்டார். தனது அரசியல் வாழ்க்கை மீண்டும் எந்த நொடியில் இருந்தும் தொடங்கும் என்றும், அதற்கு இந்த சம்பவமே சாட்சி என்றும் கூறினார். மேலும் அவர் அங்கிருந்த போலீசார் மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து மந்திரி சதீஸ் ஜார்கிகோளி தனது ஆதரவாளர்களுடன் கூட்டுறவு வங்கிக்குள் சென்றார்.

    இதற்கு முன்னாள் எம்.பி. ரமேஷ் கத்தியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளியின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது போலீசார் அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து அவர்களை கலைத்தனர்.

    இந்த நிலையில் மாருதியை சிலர் கடத்திச் சென்று இருந்ததாகவும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெலகாவியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
    • பஞ்சாபின் சிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் வலியறுத்தி உள்ளார்.

    பிரிட்டனில் இந்தியாவை சேர்ந்த 2 முதிய சீக்கியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    ஆகஸ்ட் 15 ஆம் தேதி, வால்வர்ஹாம்டன் ரெயில் நிலையத்திற்கு வெளியே மூன்று இளைஞர்கள் இரண்டு சீக்கியர்களைத் தாக்கினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    அதில் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் கிடப்பதையும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அவர்களை உதைப்பதையும், இரு சீக்கியர்களின் அகற்றப்பட்ட தலைப்பாகைகள்  தரையில் கிடப்பதையும் காண முடிகிறது.

    சம்பவ இடத்திலிருந்து மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    பஞ்சாபின் சிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்து, இது ஒரு கொடூரமான இனவெறி குற்றம் என்று தெரிவித்துள்ளார்.

    சீக்கிய சமூகம் எப்போதும் மற்றவர்களின் நலனுக்காக பாடுபடுவதாகவும், உலகம் முழுவதும் பாதுகாப்பையும் மரியாதையையும் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    இந்தப் பிரச்சினையை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வலுவாக எழுப்புமாறு பாதல் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.
    • அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்ல.

    அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது. 

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டூப்லினில் மூன்று இளைஞர்களால் ஒரு இந்தியர் தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மாலை 5:30 மணியளவில் ஃபேர்வியூ பார்க்கில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் எட்டு தையல்கள் போடப்பட்டன.

    தனக்கு நேர்ந்ததை விவரித்த பாதிக்கப்பட்டவர், "நான் பூங்காவிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மின்சார ஸ்கூட்டரில் வந்த ஒரு இளைஞன் என் அருகில் வந்து என் வயிற்றில் உதைத்தான்.

    நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.

    நான் தரையில் விழுந்த பிறகும் அவர்கள் என்னைத் தொடர்ந்து தாக்கினர். அவர்களில் ஒருவர் தனது ஸ்ட்டீல் தண்ணீர் பாட்டிலால் என் கண்ணில் அடித்தார்" என்று தெரிவித்தார்.

    மேலும் அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்லை என்றும் 2 இளைஞர்கள் மட்டும் தனக்கு உதவி செய்து காவல்துறைக்கு தகவல் அளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார். சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தத் தாக்குதலை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், வரும் நாட்களில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக 6 வயது இந்திய சிறுமி, சிறுவர்கள் கும்பலால், " உனது நாட்டுக்கே திரும்பிப் போ' என கூறி தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • புகார் உதவி பெட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் வாரந்தோறும் சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கடுமையான புகார்களாக இருந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

    கேரளாவில் சமீபகாலமாக குழந்தைகள் மீதான கொடூர தாக்குதல் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. குழந்தையின் ரத்த உறவுகளே இந்த தாக்குதலில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றன. ஆலப்புழாவில் 9 வயது சிறுமி கன்னத்தில் காயத்துடன் பள்ளிக்கு வந்துள்ளார். இது பற்றி விசாரித்த போது அவளை, தந்தை மற்றும் மாற்றாந்தாய் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது.

    இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்தினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு சிறுமியின் தந்தை மற்றும் மாற்றாந்தாய் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீட்டில் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ளும் மாணவ-மாணவிகளை பாதுகாக்க கேரள அரசு விரைவில் ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்கும் என கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி தெரிவித்தார்.

    அதன்படி வீட்டில் உறவினர்களால் துன்புறுத்தப்படும் குழந்தைகள் ரகசிய புகார்களை அளிக்கும் வகையில் பள்ளிகளில் புகார் உதவி பெட்டிகள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த பெட்டியில் புகார் தெரிவிக்கும் குழந்தைகள் தங்கள் பெயரை எழுத வேண்டிய அவசியம் இல்லை. புகார் உதவி பெட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் வாரந்தோறும் சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான புகார்களாக இருந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். மாற்றாந்தாய் மற்றும் மாற்றாந்தந்தையின் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

    கடந்த 10 ஆண்டுகளில் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 43 ஆயிரத்து 474 என்றும், இதில் கொல்லப்பட்ட குழந்தைகள் 282 என்றும், இதில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 13 ஆயிரத்து 825 என்றும் வெளியான புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் பள்ளிகளில் புகார் உதவி பெட்டிகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் தேவாலயத்துக்குள் ஒரு கும்பல் நுழைந்தது.
    • அந்த கும்பல் அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்தது.

    ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கோமாண்டா நகரில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அப்போது துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் தேவாலயத்துக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. உயிருக்கு பயந்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

    மேலும் அந்த கும்பல் அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்தது. அதில் வீடுகள், கடைகள் எரிந்து சேதமானது. இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக தேவாலயம் அருகில் உள்ள மக்சோஸ்கனி கிராமத்தில்இந்த கும்பல் நடத்திய தாக்குதலில் 5 பேர் இறந்தனர்.

    கோமாண்டா நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டையில் இருந்து வந்த இக் கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளனர். அரசுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவ்வப் போது இவர்கள் பொதுமக்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
    • இஸ்லாமிய ஆட்சியை நாட்டில் நிறுவ வேண்டும் என்பதே ADF-ன் நோக்கம்.

    காங்கோவின் கிழக்கு பகுதியான கோமண்டாவில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் இன்று, இஸ்லாமிய அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலை அலைய்ட் டெமாக்ரடிக் ஃபோர்ஸ் (ADF) உறுப்பினர்கள் அதிகாலை 1 மணியளவில் நடத்தியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கோமண்டாவில் சிவில் சமூக ஒருங்கிணைப்பாளர் டியூடோன் டியூரந்தாபோ, 21-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பல வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

    உகாண்டா மற்றும் காங்கோ எல்லைப் பகுதியில் செயல்படும் ADF, பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்லாமிய ஆட்சியை நாட்டில் நிறுவ வேண்டும் என்பதே ADF-ன் நோக்கம்.

    முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் இடுரியில் நடந்த தாக்குதல்களில் ADF குழு 12க்கும் அதிகமானோரை கொன்றது குறிப்பிடத்தக்கது. 

    • தாக்குதலில் சரண்ப்ரீத்தின் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டது.
    • இந்தியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் தாக்கப்பட்டார்.

    வெளிநாடுகளில் இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

    இந்த சம்பவம் ஜூலை 19 சனிக்கிழமை இரவு அடிலெய்டில் உள்ள கிந்தோர் அவென்யூவில் நடந்தது.

    நகரின் லைட் ஷோவை பார்க்க 23 வயதான சரண்ப்ரீத் சிங் அவரது மனைவியும் வந்திருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் எந்தத் தூண்டுதலும் இல்லாமல் சரண்ப்ரீத்தை காரில் இருந்து இழுத்து சாலையில் தள்ளி அவர்கள் தாக்கியுள்ளனர்.

    தாக்குதலில் சரண்ப்ரீத்தின் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டது.அவர் மயக்கமடைந்த பிறகு காவல்துறையினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்தியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் தாக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தாக்குதலை படம் பிடித்துக் கொண்டிருந்த சரண்ப்ரீத்தின் மனைவியையும் கும்பல் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவை ஆன்லைனிலும் பரப்பப்பட்டன.
    • காவல்துறை இதை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரித்து வருகிறது.

    அயர்லாந்தில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் அயர்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) அயர்லாந்தின் டப்ளின் நகரில் தல்லாக்ட் பகுதியில் வைத்து அவர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவரது ஆடைகளை கிழித்து அந்த கும்பல் ரத்த காயங்கள் ஏற்படும்படி தாக்கியுள்ளது.

    குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவை ஆன்லைனிலும் பரப்பப்பட்டன.இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

    தாக்குதலுக்கு ஆளானவர் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட மீட்கப்பட்டு, தல்லாக்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தச் சம்பவம் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காவல்துறை இதை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரித்து வருகிறது.

    பாதிக்கப்பட்டவரை சந்தித்த உள்ளூர் கவுன்சிலர், அவர் அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தாக்குதலை மோசமானது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என உள்ளூர் அரசியல் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

    • காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர்.
    • இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார்

    பெங்களூருவில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு டெலிவரி ஊழியர் நேற்று இரவு மருத்துவமனை சந்திப்புக்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோதிலும், ஹாரன் அடித்து, அவரை முன்னோக்கி நகர்த்துமாறு கோரினர்.

    அதற்கு அந்த ஊழியர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதாக விளக்கியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர். அந்த நபர்கள், அவரை மீண்டும் மீண்டும் அடித்து உதைத்து வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

    இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இந்த தாக்குதல் குறித்து அவர் பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்தில் தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மது போதையில் இருந்ததாக கூறி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    டெலிவரி ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    ×