என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்குதல்"

    • விடுதியில் சக மாணவர்களுடன் சிறுவனுக்கு சிறிய விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் குருகல் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியின் விடுதியில் தங்கி சிறுவன் ஒருவன் 9 வகுப்பு படித்து வந்தான். விடுதியில் சக மாணவர்களுடன் சிறுவனுக்கு சிறிய விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், இரவில் சக மாணவர்கள் தங்கள் அறைகளில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது இரும்புக் கம்பியுடன் சென்று அவர்களை சரமாரியாக தங்கியுள்ளான்.

    இதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர். விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். 

    பள்ளி நிர்வாகம் அந்த மாணவர் இரும்புத் கம்பியை பயன்படுத்தியதாகக் கூறுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர், அவர்கள் கத்தியால் குத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற ஏழு மாணவர்கள் பெல்லாரியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

    தப்பியோடிய மாணவனை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.   

    • ஈரானின் இஸ்பஹான் உள்பட பல்வேறு நகரங்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டன.
    • இன்று ஈரானிய டிரோன் விமானம் தாங்கி கப்பலை தாக்கினோம்.

    அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் தொடர்ந்து ஏவுகணை-குண்டுகளை வீசின.

    தலைநகர் தெக்ரானில் ராணுவம் மற்றும் அரசு தொடர்பான கட்டமைப்புகளை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் தெக்ரான் முழுவதும் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டு கொண்டிருந்தன.

    இன்று காலை தெக்ரானில் ஜோம்ஹுரி அவென்யூவில் உள்ள மார்க்கெட்டில் குண்டு வீசப்பட்டது. இதில் குடியிருப்பு பகுதிகள் கடும் சேதமடைந்தன. தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய மற்றும் கிழக்கு தெக்ரானில் உள்ள வீதிகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்பட்டன.

    அதேபோல் ஈரானின் இஸ்பஹான் உள்பட பல்வேறு நகரங்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் ஈரானின் ஐரிஸ் ஷாஹித் பகேரி போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. டிரோன் விமானம் தாங்கி கப்பலான ஐரிஸ் ஷாஹித் பகேரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டு உள்ளது.

    முழு ஈரானிய கடற்படையையும் மூழ்கடிக்கும் பணியில் அமெரிக்கப் படைகள் பின்வாங்க போவதில்லை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க உயர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது,"தற்போது நடந்து வரும் போரில் 30-க்கும் மேற்பட்ட ஈரான் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. இன்று ஈரானிய டிரோன் விமானம் தாங்கி கப்பலை தாக்கினோம்.

    இது 2-ம் உலகப்போரின் விமானம் தாங்கி கப்பலின் அளவு ஆகும். ஈரான் படைகளின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் கணிசமாகக் குறைந்துவிட்டன" என்றார்.

    இதற்கிடையே இஸ்ரேலின் ராணுவ தளபதி கூறும் போது," 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் 2,500 தாக்குதல்களை நடத்திய பிறகு ஈரானுடனான போரில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளோம்" என்றார்.

    இஸ்ரேல் மீது ஈரான் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. அதை தடுக்க இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. இருந்தபோதிலும் இஸ்ரேலுக்குள் சில ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. இதனால் இஸ்ரேல் முழுவதும் தாக்குதலுக்கான அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.

    அதேபோல் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. பக்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் 2 குடியிருப்பு கட்டிடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் பக்ரைனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது டிரோன், ஏவுகணைகள் வீசப்பட்டன. அங்கு அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் அலி அல்-சலேம் விமான தளம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.

    கத்தாரில் அமெரிக்க ராணுவ தளமான அல் உதெய்த் விமான தளத்தை குறிவைத்து நடத் தப்பட்ட டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஈரானுக்கு ஆதரவாக உள்ள லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் தெற்கு பெய்ரூட்டில் சரமாரியாக ஏவுகணைகள் வீசப்படுகின்றன. பதிலுக்கு ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    எல்லையில் உள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசிய தாக ஹிஸ்புல்லா தெரிவித்து உள்ளது. இதற்கிடையே எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவு வரை வசிக்கும் இஸ்ரேலியர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ஹிஸ்புல்லா இயக் கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தியா நடத்திய 'சர்வதேச கடற்படை சீராய்வு-2026' என்ற ராணுவப் பயிற்சியில் பங்கேற்றது.
    • இலங்கை கடற்படையினர், தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து 32 பேரை காயத்துடன் மீட்டனர்.

    இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்த ஈரான் கடற்படையின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.

    இத்தாக்குதல் இலங்கை தெற்கு கடற்பகுதியில் இருந்து 40 நாட்டிக்கல் தொலைவில் நடந்தது. 180 பேர் இருந்த அந்த ஈரான் போர்க்கப்பல் சேதமடைந்து மூழ்க தொடங்கியது. போர்க்கப்பலில் இருந்து இலங்கை கடற்படைக்கு அவசர உதவி அழைப்பு அனுப்பப்பட்டது.

    இதையடுத்து விரைந்து சென்ற இலங்கை கடற்படையினர், தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து 32 பேரை காயத்துடன் மீட்டனர். இந்த தாக்குதலில் 87 பேர் பலியாகி உள்ளனர். 61 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஐரிஸ் டெனா போர்க் கப்பல், சில நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய 'சர்வதேச கடற்படை சீராய்வு-2026' என்ற ராணுவப் பயிற்சியில் பங்கேற்றது. அந்த பயிற்சியை முடித்து கொண்டு புறப்பட்டு சென்றபோது அமெரிக்க தாக்குதலில் சிக்கியது.

    இந்த நிலையில் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ஈரான் கடற்கரையில் இருந்து 2 ஆயிரம் மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது.

    கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஐரிஸ் டெனா போர்க்கப் பலை சர்வதேச கடல்பகுதியில் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் தாக்கி உள்ளது.

    எனது வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள். அமெரிக்கா தனது செயலுக்காக மிகவும் வருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • போதை நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி சென்னை தரமணியில் உள்ள தனியார் கல்லூரியில் இதழியல் படித்து வருகிறார்.தரமணி கானகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோழிகள் இருவருடன் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மது போதையில் இருந்த ஒரு நபர் மாணவியின் உடலில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து போதை நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் கோட்டூர்புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவரது பெயர் காசி என்பது தெரியவந்தது 58 வயதான அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நெசல் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், சென்னையில் தங்கி இருந்து 40 ஆண்டுகளாக கொத்தனார் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

    அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஈரானின் சாஹேத்-136 ரக டிரோன்கள் மூலம் எண்ணெய் ஆலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது.
    • ஈரான் தாக்குதல் நடத்தி வருவதற்கு சவுதி அரேபியா ஏற்கனவே கண்டனம்.

    அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    3-வது நாளாக நடைபெறும் இந்த தாக்குதல் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, கத்தார் தலைநகர் தோகா, பக்ரைன், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் அமெரிக்காவின் 27 ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரானின் சாஹேத்-136 ரக டிரோன்கள் மூலம் எண்ணெய் ஆலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உலகின் மிகப் பெரிய பெட்ரோலிய பொருட்களை வழங்கும் சுத்திகரிப்பு நிலையம் ஆகும். இதனால் உலகம் முழுவதும் இதனுடைய எதிரொலிப்பு அதிகளவில் இருக்கும்.

    வளைகுடா நாடுகளில் உள்ள ஈரான் தாக்குதல் நடத்தி வருவதற்கு சவுதி அரேபியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் மீது ஈரான் தனது கூடுதல் கவனத்தை செலுத்தி அதிரடியான இந்த தாக்குதலை நடத்தியது.

    • தாக்குதல் சம்பவம் குறித்து கண்ணூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இந்த சம்பவத்திற்கு பின்னால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மந்திரி சபையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர் நேற்று கண்ணூரில் நடைபெற்ற பன்னாட்டு ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை தொடங்கி வைத்து விட்டு திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரெயில் நிலையம் வந்தார்.

    அப்போது அங்கு திரண்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர், வீணா ஜார்ஜிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புக் கொடியுடன் வந்து கோஷமிட்ட அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். இருப்பினும் அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மந்திரி வீணா ஜார்ஜ் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த அவர் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தாக்குதல் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் முதல்-மந்திரி பினராயி விஜயன், கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு வந்து வீணா ஜார்ஜிடம் நலம் விசாரித்தார். தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். தாக்குதலுக்கு உள்ளான வீணா ஜார்ஜ், கழுத்தில் வலி இருப்பதாக கூறியதை தொடர்ந்து, பரியாரம் பகுதியில் உள்ள கண்ணூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தனர். இந்த சூழ்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து கண்ணூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கேரள மாணவர் காங்கிரசின் கண்ணூர் மாவட்டத் தலைவர் எம்.சி. அதுல், பொருளாளர் அக்ஷய் மட்டுல் மற்றும் நிர்வாகிகள் முபாஸ், பிதுல் பாலன் மற்றும் முகமது யாசின் ஆகியோர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதற்கிடையில் பெண் மந்திரி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் அழைப்பு விடுத்தார். இதனால் மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மகளிர் மற்றும் மாணவர் பிரிவுகள் இணைந்து கண்ணூர் நகரில் தனித்தனி போராட்ட பேரணிகளை நடத்தியது. இந்த பேரணியின் போது காங்கிரஸ் தேர்தல் பணிக்காக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் அங்குள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது கல் வீசப்பட்டதில் மாநில நிர்வாகி பர்ஹான் முண்டேரி காயமடைந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் கண்ணூர் கோடியேரி பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    • சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.
    • செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ந்தேதி நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காரை இயக்கிய பயங்கரவாதி டாக்டர் உமர் நபி உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    இந்த சம்பவத்தில் உமர் நபியின் கூட்டாளிகளான சில டாக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பேட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டாக்டர்கள் அரியானாவின் பரிதாபாத்தில் செயல்படும் அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் டெல்லியில் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    செங்கோட்டை அருகே உள்ள பகுதிகள், சாந்தினி சவுக்கின் சில பகுதிகள் மற்றும் டெல்லியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், பாரம்பரிய கட்டிடங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்பு அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

    சாந்தினி சவுக்கில் உள்ள ஒரு கோவிலும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருப்பதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.

    இதை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதை தவிர தீவிரவாதிகள் இலக்காக நிர்ணயித்த இடங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அல்லது செயல்பாடுகள் குறித்து போலீசாருக்கு தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பீதி அடைய வேண்டாம் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 6-ந்தேதி மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 160 பேர் காயம் அடைந்தார்கள். இதற்கு பழி வாங்கவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தலாம் என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    • பணத்தை திருப்பி தராமல் காலிப் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
    • ஹர்ஷத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி நகரப்பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷத். இவர் தென்காசி நகரின் மையப்பகுதியில் உள்ள அம்மன் சன்னதி பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவரிடம் சில மாதங்களுக்கு முன்பு அதே சன்னதி பஜாரில் நகைக்கடை நடத்தி வரும் உரிமையாளரான காலிப் என்பவர், தனக்குத் தெரிந்த ஒருவரின் 56 கிராம் நகை ரூ.3.5 லட்சத்திற்கு அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை அடகில் இருந்து திருப்ப நீங்கள் பணம் கொடுத்தால், அவர் அந்த நகையை உங்களிடமே விற்பனை செய்வார் என கூறி உள்ளார்.

    இந்த நிலையில், ஹர்ஷத் தன்னிடம் இருந்த ரூ3.5 லட்சம் பணத்தை காலிப்பிடம் கொடுத்து அந்த நகையை திருப்பிய நிலையில், அந்த நகை தரம் குறைந்த நகையாக இருந்துள்ளது.

    அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஹர்ஷத் இது தரம் குறைந்த தங்கம் எனவும், இது எனக்கு வேண்டாம் தன்னுடைய பணத்தை திருப்பி தாருங்கள் என கூறியுள்ளார்.

    ஆனால், பணத்தை திருப்பி தராமல் காலிப் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹர்ஷத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று இரவு ஹர்சத்தை, காலிப் உள்பட சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹர்சத்தை தாக்கிய காலிப் மற்றும் அவரது சகோதரர்களான அஸ்லம், ஹாஜி உள்ளிட்ட 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் பஸ் நிலையம் அருகே கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
    • தாக்குதலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகள் 4 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார்.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம், வெங்கடேசா நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் த.வெ.க வட்ட செயலாளராக உள்ளார்.

    இவர் இரவு சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் பஸ் நிலையம் அருகே கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மற்றொரு வட்ட செயலாளர் உட்பட 4 பேர் சேர்ந்து சுரேந்திரனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் காயம் அடைந்த சுரேந்திரன் கே.கே. நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    மேலும் தாக்குதலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகள் 4 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார். ஜனநாயகன் திரைப்படம் ரிலீசுக்காக கோயம்பேட்டில் உள்ள சினிமா தியேட்டரில் சுரேந்திரன் வைத்த கட் அவுட் மற்றும் பேனரில் ஒரு சில நிர்வாகிகள் பெயரை போடவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் சுரேந்திரனை தாக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    • ஒரு தலித் எப்படி எப்படிக் குதிரை சவாரி செய்யலாம்? என்று கூறி அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • குஜராத்தில் தலித் மணமகன்கள் குதிரை சவாரி செய்வதால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் சந்துர்மனா என்ற கிராமம் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்தின் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் விஷால் சாவ்தா என்பவரின் திருமண விழா இன்று (பிப்ரவரி 2) நடைபெற்றது.

    மணமகன் விஷால் சாவ்தா தனது திருமண ஊர்வலத்தின் போது குதிரை மீது அமர்ந்து சென்றது, அங்குள்ள ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலரை ஆத்திரமடையச் செய்துள்ளது.

    எனவே ஊர்வலத்தை வழிமறித்த ஆதிக்க சாதி கும்பல், ஒரு தலித் எப்படி எப்படிக் குதிரை சவாரி செய்யலாம்? என்று கூறி தாக்குதல் நடத்தியுள்ளது.

    மணமகன் குதிரையிலிருந்து வலுக்கட்டாயமாக கீழே இழுத்துத் தள்ளப்பட்டார். தடுக்க வந்த உறவினர்களை கத்திகள் மற்றும் கட்டைகளால் கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சிலர் படுகாயமடைந்தனர்.

    இதன்பின் மணமகன் குதிரை சவாரியை கைவிட்டு காரில் சென்று போலீஸ் பாதுகாப்புடன் திருமண சடங்குகளில் கலந்துகொண்டார். 

    தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சைலேஷ் தாகூர், ஜெயேஷ் தாகூர், சமீர் தாகூர், அஸ்வின் தாகூர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கிராமத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்கப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    காந்திநகர் முதல் பனஸ்கந்தா வரை குஜராத்தில் தலித் மணமகன்கள் குதிரை சவாரி செய்வதால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.   

    • முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார்.
    • 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவின் மும்பை, வடாலா பகுதியைச் சேர்ந்த ஷெஹ்னாஸ் சையத் (46) என்ற பெண் மசாஜ் சேவையை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளார்.

    கடந்த புதன்கிழமை மாலை வீட்டிற்கு மசாஜ் செய்ய வந்த பெண் ஊழியரின் நடத்தை மற்றும் அவர் கொண்டு வந்த மசாஜ் பெட் அறையில் வைப்பதற்கு வசதியாக இல்லாதது போன்ற காரணங்களால், ஷெஹ்னாஸ் அந்த முன்பதிவை ரத்து செய்துள்ளார்.

    முன்பதிவை ரத்து செய்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர், ஷெஹ்னாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் ஆத்திரம் தலைக்கேறி, ஷெஹ்னாஸின் முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார். இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். 

    தடுக்க வந்த ஷெஹ்னாஸின் 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார். 

    இது தொடர்பாக ஷெஹ்னாஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தொடர்புடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அந்த ஊழியரை நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.    

    • மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை வீதிகள் வழியாக 1.5 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர்.
    • நூற்றுக்கணக்கான மக்கள் இதனை வேடிக்கை பார்த்த போதிலும், யாரும் தடுக்க முன்வரவில்லை.

    மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் 16 வயது சிறுவனை கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி 1.5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுவனும், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

    பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததை தொடர்ந்து, சிறுவன் சிறையிலும், சிறுமி சீர்திருத்தப் பள்ளியிலும் வைக்கப்பட்டனர் என்று கூறபடுகிறது. 

    இந்தச் சம்பவத்தால் சிறுமியின் குடும்பத்தினர் சிறுவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

    சிறையில் இருந்து விடுதலையான சிறுவன், தனது மாற்றுத்திறனாளி தாயுடன் உஜ்ஜைன் இல் இருந்து வெளியேறி தேவாஸ் பகுதியில் வசித்து வசித்து வந்தான்.

    தனது தாயின் மருத்துவச் செலவுக்காகப் பணம் திரட்ட இந்த வாரம் உஜ்ஜைன் திரும்பியபோது, சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறுவனை வழிமறித்துள்ளனர்.

    சிறுவனைப் பிடித்து ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்திய கும்பல், சிறுவனின் கைகளைக் கயிற்றால் கட்டி, மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை வீதிகள் வழியாக 1.5 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர்.

    நூற்றுக்கணக்கான மக்கள் இதனை வேடிக்கை பார்த்த போதிலும், யாரும் தடுக்க முன்வரவில்லை.

    மாறாக, பலர் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.

    இறுதியாக காவல் நிலையத்திற்கு அருகே வந்தபோது சிறுவனை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக சிறுவன் நேற்று முன் தினம் அளித்த புகாரின் பேரில், நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

    ×