என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhya Pradesh"

    • இந்தக் கடனின் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களை தொடும்.
    • சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமாக ருதியா குடும்பம் விளங்கியது.

    1917இல் முதலாம் உலகப் போர் சமயத்தில், மத்தியப் பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேத் ஜம்மாலால் ருதியா என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு 35,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளது.

    பிரிட்டிஷ் அரசுக்கு கடன் கொடுத்த விஷயம் ருதியா குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்தாலும், அதற்கான ஆவணங்கள் யாரிடமும் இல்லை. இதனால் 109 ஆண்டுகளாக இந்த விஷயம் கிடைப்பில் இருந்துள்ளது.

    ஜம்மாலால் ருதியாவின் பேரன் விவேக் ருதியா, தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு பழைய ஆவணங்களையும் உயிலையும் ஆய்வு செய்தபோது, இந்தக் கடனுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் கிடைத்துள்ளன.

    முதலாம் உலகப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, போபால் சமஸ்தானத்தின் நிர்வாகத் தேவைகளுக்காக இந்த 'போர்க் கடன்' வாங்கப்பட்டதாக அந்தப் பத்திரங்கள் தெரிவிக்கின்றன.

    1917-ல் 35,000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும். அன்றைய தங்கத்தின் விலையோடு ஒப்பிடும்போது, இந்தக் கடனின் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களை தொடும்.

    ஒரு இறையாண்மை கொண்ட நாடு, தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது சர்வதேச சட்டப்படி கட்டாயம் என்ற அடிப்படையில், கடனை திருப்பி கேட்டு பிரிட்டன் அரசுக்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்ப ருதியா குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.

    ஒரு காலத்தில் சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமாக ருதியா குடும்பம் விளங்கியது.

    இன்றும் சீஹோர் நகரின் 20 முதல் 30 சதவீத குடியிருப்புகள் இந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களில்தான் அமைந்துள்ளன.

    தற்போது இவர்கள் விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.
    • குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்.

    மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பாக் பகுதியில் உள்ள சமூக நல மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடைபெற்றது.

    சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 180 பழங்குடியினப் பெண்கள் இந்த முகாமிற்கு வந்திருந்தனர்.

    30 படுக்கைகள் மட்டுமே கொண்ட அங்கு, வந்திருத்தவர்களில் 175 பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    முகாம் மருத்துவரான ராகேஷ் தாவர், மதியம் 3 மணிக்கு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

    அவர் ஒரு அறுவை சிகிச்சையை வெறும் 2 முதல் 5 நிமிடங்களுக்குள் முடித்துள்ளார். சில மணி நேரங்களிலேயே 175 அறுவை சிகிச்சைகளை அவர் செய்துள்ளார்.

    அறுவை சிகிச்சை முடிந்த பின், மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.

    பெண்களுக்குக் குடிநீர், உணவு, நிழலுக்குக் கூடாரம் என எதுவுமே வழங்கப்படவில்லை. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருந்தும், சுகாதாரமற்ற முறையில் தரையில் கிடத்தப்பட்டுள்ளனர்.

    "எங்களை காலை 8 மணிக்கே வரச் சொன்னார்கள். ஆனால், நாள் முழுவதும் எங்களுக்கு உணவோ அல்லது தண்ணீரோ கூட வழங்கப்படவில்லை" என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் தெரிவித்தார்.

    மற்றொரு பெண், "மயக்க மருந்து கொடுத்ததால் உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்ததும் என்னை வெளியே தூக்கி வந்து வெயிலில் தரையில் கிடத்தினார்கள்.

    அங்கு படுக்கைகள் இல்லை, குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்." என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து செய்தி பரவியதை அடுத்து, சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட பி.எம்.ஓவை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. 

    • அதர்வா தானே ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.
    • உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தினர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் 19 வயது இளைஞர் அதர்வா சதுர்வேதி.

    பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான EWS கோட்டாவின் கீழ் இரண்டு முறை இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் அதர்வா தேர்ச்சி பெற்றார். இரண்டாவது முறை 530 / 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

    ஆனால் மத்தியப் பிரதேச அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதர்வா வழக்கு தொடர்ந்தார். ஆனால் அங்கு நீதி கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் வாயிலாக அதர்வா தானே ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.

    மாணவனின் வாதத்தைக் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர்.

    உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு வார காலத்திற்குள் அதர்வாவிற்கு 2025-26 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் தற்காலிக சேர்க்கை வழங்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் மாநில அரசிற்கும் உத்தரவிடப்பட்டது.

    தனியார் கல்லூரிகள் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றவில்லை என்றால், அவற்றைப் பூட்டிவிடுங்கள் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமாக தெரிவித்தார். 

    • கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அடையாளம் காணப்பட்டார்.
    • தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் வீசியுள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிஷத்புரா பகுதியில் கமல் நகர் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, இங்குள்ள ஒரு செப்டிக் டேங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    செப்டிக் டேங்கிற்குள் சோதனை செய்தபோது, ஒரு இரும்புப் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவைச் சேர்ந்த அஷ்ரபி என்று அடையாளம் காணப்பட்டார்.

    போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

    மத்தியப் பிரதேசத்தை சமீர் கான் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், அஷ்ரபிக்கும் ஓராண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அஷ்ரபி போபாலில் சமீருடன் வசித்து வந்துள்ளார்.

    ஏற்கனவே திருமணமான சமீரைத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அஷ்ரபி வற்புறுத்தியதாகவும், பணம் தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சமீர், கடந்த பிப்ரவரி 7 இல் அஷ்ரபியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

    கொலைக்குப் பிறகு, தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் சடலத்தை ஒரு இரும்புப் பெட்டிக்குள் திணித்து, வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்கிற்குள் சமீர் வீசியுள்ளார்.

    இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி சமீர் கான் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.
    • தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.

    மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் பால்காவாடா பகுதியில் பால்காட் என்ற கிராமம் அமைந்துள்ளது.

    கடந்த 1980 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் இருந்து ரூ.100 மதிப்புள்ள கோதுமை திருடு போனது.

    கோதுமையை திருடியதாக சலீம் மற்றும் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.

    தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.

    மறுபுறம் மாநில அளவிலான நீண்ட கால வழக்குகளளில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணிகளை மத்தியப் பிரதேச காவல்துறை தீவிரப்படுத்தியது.

    இந்நிலையில் சலீமின் முன்னாள் கூட்டாளி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சலீமை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.  

    • கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.

    மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில்  ரூலி பகுதியில் உள்ள அஹ்ரௌலி கிராமத்தில் மாதா கோயில் அமைந்துள்ளது.

    கோயிலின் பழைய கூரையை இடித்துவிட்டு, அங்கு கோபுரம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று (பிப்ரவரி 9) மதியம் 2 மணியளவில் பணியின்போது எதிர்பாராதவிதமாக கூரை இடிந்து விழுந்தது. 

    கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர். 

    இந்த விபத்தில் மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தில் வகுப்பறையில் வைத்து 1 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    திகம்கர் மாவட்டம் பலேரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற அந்த 6 வயது சிறுமியை ஆசிரியர், பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பலேரா காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் போக்சோவின் கீழ் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.    

    • மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
    • இதுதான் உங்கள் நல்லாட்சியா? என அங்கு ஆளும் பாஜக அரசிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

    மத்திய பிரதேசத்தின் மைஹர் மாவட்டத்தில் பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவானது நோட்டு, புத்தக பேப்பரில் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் காகிதங்களில் உணவை வைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது.

    மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திரிபாதி மற்றும் மதிய உணவுப் பிரிவு பொறுப்பாளருக்கு மெத்தனமாகச் செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து மோகன் யாதவ் தலைமையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்த அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா, "இதுதான் உங்கள் நல்லாட்சியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்த்தின் ஷீயோபுர் பகுதியிலும் இதேபோல பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    • அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார்.
    • அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார்.

    மத்திய பிரதேச போபால் எய்ம்ஸ் மருத்துவமனை லிப்ட்டில் பெண் ஊழியரின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவில், மருத்துவமனையின் பெண் ஊழியர் ஒருவர் லிபிட்டிற்குள் செல்கிறார். அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார். லிப்ட் மற்றொரு தளத்தை அடைந்ததும் கதவு திறந்தபோது அந்த நபர் அப்பெண்ணின் நகையை பறித்துச் சென்றார். 

    அந்தப் பெண் ஊழியர் அவரை துரத்திச் சென்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    எய்ம்ஸ் வளாகத்திற்குள்ளேயே இத்தகைய துணிகரமான திருட்டு நடந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.  

    • கடைகளை அடித்து நொறுக்கியும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர்.
    • அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள தரானா நகரில், இந்துத்துவா அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் அணித் தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.

    இந்தத் தகவல் பரவியதும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின் போது நேற்று வன்முறை வெடித்தது.

    விஸ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் கற்களை வீசியும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகளை அடித்து நொறுக்கியும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர்.

    வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.வன்முறையில் ஈடுபட்டதாகப் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

    • வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
    • குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

    இந்தியாவின் தூய்மையான நகரம் எனப் பெயர் பெற்ற இந்தூரில், மீண்டும் அசுத்தமான குடிநீரைக் குடித்ததால் ஒரே பகுதியில் 22 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தூரின் மௌ பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 22 பேருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

    இவர்களில் நிலைமை மோசமாக இருந்த 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்தார்.

    குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.

    ஏற்கனவே சில வாரங்கள் முன் இந்தூரின் பாகீரத்புரா பகுதியில் இதேபோல அசுத்தமான குடிநீரால் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தொழுகைக்காக வரும் முஸ்லிம் நபர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்
    • போஜ்சாலா வளாகத்தில் செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தி வருகின்றனர்

    மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய போஜ்சாலா-கமல் மௌலா மசூதியில் நாளை, வசந்த பஞ்சமியை முன்னிட்டு சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இந்துக்கள் பிரார்த்தனை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்கள் அன்று மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொழுகை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தொழுகைக்காக வரும் முஸ்லிம் நபர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. நாளை போஜ்சாலா வளாகத்தில் தொழுகை மற்றும் பூஜைகள் நடத்த இரு சமூகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

    இரு தரப்பினரும் பரஸ்பர மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2003, ஏப்ரல் 7-ம் தேதி இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை செய்த ஏற்பாட்டின்படி, போஜ்சாலா வளாகத்தில் செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தி வருகின்றனர்.

    இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ள 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போஜ்சாலா நினைவிடத்தை, இந்துக்கள் 'வாக்தேவி' (சரஸ்வதி தேவி) கோயில் என்று கருதுகின்றனர். அதேவேளையில், முஸ்லிம் சமூகத்தினர் இதனை 'கமல் மௌலா மசூதி' என்று அழைக்கின்றனர். 

    ×