search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reservation"

    • ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
    • டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது.

    இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்த போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பிறப்பித்து உள்ளது. அதனை பின்பற்றி போட்டிகள் நடக்கின்றன.

    இந்த நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கியுள்ளது.

    எனவே காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது பெயர்களை நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படும்.

    மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் சான்றுகள் முழுவதும் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

    • 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இட ஒதுக்கீட்டில் முக்கிய திருத்தத்தைக் கொண்டுவந்தது.
    • இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுக்காக கொண்டுவரப்பட்டது.

    2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இட ஒதுக்கீட்டில் முக்கிய திருத்தத்தைக் கொண்டுவந்தது. சமூகத்தால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைப் போல் பொருளாதாரத்தால் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டத்தைத் திருத்தம் செய்தது.

    இதன் மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை அப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா, ரவீந்திர பட் ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது.

    இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா ஆகியோர் மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும் தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகிய 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.

    5 இல் 3 நீதிபதிகள் ஆதரித்து தீர்ப்பளித்ததால் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று முடிவில் தீர்ப்பானது. தற்போதுவரை இந்த இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்த மறைந்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயரின் 10ம் ஆண்டு நினைவு கூட்டத்தில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் நாரிமன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுக்காக கொண்டுவரப்பட்டது.

    உயர்வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தார்மீக ரீதியாகவும் தவறானது. இந்த இட ஒதுக்கீட்டை பெறுவோர் வரலாற்று ரீதியாக எந்த ஒடுக்குமுறைக்கும் ஆளானது கிடையாது என்று தெரிவித்துள்ளார். 

    • முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • 11, 12, 13 தேதிகளில் சிறப்பு பஸ்கள் விடுவதற்கு அரசு ஏற்பாடு.

    பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) வருவதையொட்டி ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் இப்போதே அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அரசு விரைவு பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகையை யொட்டி 11, 12, 13 தேதிகளில் சிறப்பு பஸ்கள் விடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இருந்த போதிலும் பஸ்களில் முன்பதிவு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.

    ஜனவரி மாதம் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என்றும் குறைந்தப லட்சம் 1½ லட்சம் பேர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அவருக்கு சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்தது.
    • ஞானஸ்நானத்திற்குப் பிறகு அவர் தன்னை ஒரு இந்து என்று அடையாளம் காண முடியாது.

    உண்மையான நம்பிக்கை இல்லாமல் இட ஒதுக்கீடு பெரும் ஒற்றை நோக்கத்தோடு மட்டுமே மதம் மாறுவது அரசியலமைப்பை மோசடி செய்வதாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அரசு பணி இட ஒதுக்கீட்டைப் பெற தன்னை இந்து எனக்கூறி பட்டியலின வகுப்பு [SC] சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். புதுச்சேரியில் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக அவர் இந்த சான்றிதழைக் கோரியுள்ளார். ஆனால் அவருக்குச் சான்றிதழ் மறுக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. ஆனால் அவருக்கு சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்தது. எனவே அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த மேல்முறையீடு மனுவானது நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், மனுதாரர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார் என்பதற்கும் தேவாலயத்திற்குத் தவறாமல் செல்வதன் மூலம் மத விசுவாசத்தை தீவிரமாக கடைப்பிடிப்பதையும் முன்வைக்கப்பட்ட சான்றுகள் தெளிவாக நிரூபிக்கின்றன.

     

    ஆனால் தன்னை இந்துவாக முன்னிறுத்தி வேலைவாய்ப்புக்காகப் பட்டியலின சாதி சான்றிதழ் கேட்கிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. ஞானஸ்நானத்திற்குப் பிறகு அவர் தன்னை ஒரு இந்து என்று அடையாளப்படுத்த முடியாது.

    கிறிஸ்தவராக இருந்து இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக மட்டுமே இந்து மதத்தைத் தழுவுவதாகக் கூறுபவருக்குப் பட்டியலின சான்றிதழ் வழங்குவது இட ஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது மட்டுமின்றி அரசியலமைப்பையே மோசடி செய்வதாகும் என்று கூறி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர்.

    • ஊருக்கு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான்.
    • ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை, கோவை உள்பட பெரு நகரங்களில் தங்கியிருக்கும் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான். இதற்காக ரெயிலில் முன்பதிவு செய்து விடுவார்கள்.

    இப்படி ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்பே அதாவது 4 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பயணிக்க முடியும் நிலை இருந்தது. பயணிகளும் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து, பயணித்து வந்தனர்.

    ரெயில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    இந்த நடைமுறை நவம்பர் 1-ந்தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ரெயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

    • ரெயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
    • 60 நாட்கள் என்பது, எளிதாக அனைவருக்கும் மனதில் நிற்கக் கூடிய நாட்களாகும்.

    குனியமுத்தூர்:

    சென்னை, கோவை உள்பட பெரு நகரங்களில் தங்கியருக்கும் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    அவ்வாறு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான். இதற்காக ரெயிலில் முன்பதிவு செய்து விடுவார்கள்.

    இப்படி ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்பே அதாவது 4 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பயணிக்க முடியும் நிலை இருந்தது. பயணிகளும் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து, பயணித்து வந்தனர்.

    இந்த நிலையில், ரெயில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த நடைமுறையானது வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ரெயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து போத்தனூர் ரெயில் பயணிகள் சங்க பொதுச் செயலாளரும், சேலம் ரெயில்வே கோட்ட பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் கூறியதாவது:-

    ரெயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். பொதுவாக ரெயில் பயணம் செய்ய விரும்புவர்கள் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக்கிங் செய்து, பிளாக் செய்து விடுவதால், அவசர தேவைகளுக்காக செல்பவர்களுக்கு அது கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் ஏஜென்ட்கள் இதுபோன்று அதிகப்படியான டிக்கெட் புக்கிங் செய்து விட்டு, கடைசி நேரத்தில் அதனை கேன்சல் செய்து விடுவதும் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பயணிகள் மட்டுமே.

    மேலும் நீண்ட நாட்களுக்கு முன்பு புக்கிங் செய்யும்போது ஒரு சிலருக்கு மறதி ஏற்பட்டு, பயணிக்கும் நாட்களையும் தவற விடும் சூழலும் உள்ளது.

    தற்போது முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 60 நாட்களாக குறைக்கப்படும் என்ற ரெயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு வரவேற்க கூடியதாகும்.

    60 நாட்கள் என்பது, எளிதாக அனைவருக்கும் மனதில் நிற்கக் கூடிய நாட்களாகும். மேலும் தேவையற்றவர்கள் புக்கிங் செய்து வைத்திருப்பது குறையும். ரெயில்வே துறையின் இத்தகைய முடிவு ரெயில் பயணிகளுக்கு முற்றிலும் நன்மையே ஆகும். பயணிகள் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தியின் இடஒதுக்கீடு நீக்கம் குறித்த கருத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
    • 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.

    பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும் போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும் என்று பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் தெரிவித்தார்.

    நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பா.ஜ.க. இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, நாட்டின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தியின் இடஒதுக்கீடு நீக்கம் குறித்த கருத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில் தனது கருத்தை யாரோ தவறாக புரிந்துகொண்டு தன்னை இடஒதுக்கீட்டுக்கு எதிரானவனாக சித்தரிக்க முயல்கின்றனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இடஒதுக்கீடு நீக்கம் குறித்த தனது கருத்துக்கு தற்போது விளக்கம் அளித்துள்ள ராகுல், நான் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன், நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல. 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என நான் பலமுறை கூறி வருகிறேன்.நான் ஒருபோதும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்ததில்லை. என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க - அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம்.
    • இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதும் மேலும், பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது!

    முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க - அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம்.

    இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அருந்ததியினருக்கு 2009-ல் திமுக ஆட்சியில் 3% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
    • உள்ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை.

    அருந்ததியினருக்குதமிழ்நாட்டில் பட்டியலினத்தவரில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது.

    பட்டியலினத்தவருக்குள் மிகவும் பின்தங்கிய அருந்ததியினருக்குஉள்ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் அப்போது முன்மொழிந்தார். இதனையடுத்து அருந்ததியினருக்கு 2009-ல் திமுக ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது.

    அருந்ததியினருக்கு 3% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 2020 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    ஆனாலும், ஏற்கனவே உள் ஒதுக்கீடு அனுமதிக்க கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். இதன் காரணமாக இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. இதேபோன்று பஞ்சாப், ஹரியானா மாநில வழக்குகளும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா மாநில அரசுகளின் உள் இடஒதுக்கீடு சட்டங்கள் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 7 நீதிபதிகளில் பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். மற்ற 6 நீதிபதிகளும் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.

    உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில், பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள்ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அருந்ததியினருக்கு 2009-ல் திமுக ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு அனுமதி அளித்துள்ளது.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள்.
    • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்.

    கார்கில் போரின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று [ஜூலை 26] கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மத்திய பாஜக அரசு கொண்டுவந்த ராணுவ ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பாஜக ஆளும் 5 மாநிலங்கள் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய 5 மாநில முதல்வர்கள் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்.

     

    இந்த திட்டம் இளைஞர்களை பயன்படுத்திவிட்டு அவர்களை தூக்கியெறியும் வகையில் உள்ளது என்றும், முறையாக பயிற்சி கிடைக்காத அக்னிவீரர்களை, ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தும் சிக்கலும் இதில் உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    சமீபத்தில் பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், அக்னிபாத் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக பாஜக ஆளும் 5 மாநில முதல்வர்களும் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

    அதன்படி மாநில அரசின் காவல்துறை மற்றும் மாநிலத்தின் ஆயுதக் காவல் படை [PAC] பணிகளில் ஓய்வுபெற்ற அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அரியானாவில் ஆளும் பாஜக அரசு, மாநிலத்தின் காவல்துறை மற்றும் சிறைத்துறை பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தனக்கு உள்பட மக்களுக்கு இந்த மசோதா நியாயமானது கிடையாது.
    • 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய சொந்த நகரத்தில் வசித்து வரும் எனது குழந்தைகளுக்கு...,

    கர்நாடக மாநில மந்திரிசபையில் தனியார் நிறுவனங்களில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    இதற்கு பெரும்பாலான தனியார் நிறுவன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் மசோதா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா தெரிவித்தார். நிர்வாகம் தொடர்பான வேலையில் 50 சதவீதம், நிர்வாகம் அல்லாத வேலையில் 75 சதவீதம் ஒதுக்கீடு என மசோதாவில் திருத்தம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் பணபரிமாற்றம் செயலியான போன்பே (PhonePe) சிஇஓ சமீர் நிகம் "தனக்கு உள்பட மக்களுக்கு இந்த மசோதா நியாயமானது கிடையாது. என்னுடைய தந்தை அவரது பணிக்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் இந்திய கடற்படையில் பணிபுரிந்துள்ளார். என்னுடைய கேள்வி, 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய சொந்த நகரத்தில் வசித்து வரும் எனது குழந்தைகளுக்கு வேலை மறுக்கப்படுமா? என்பதுதான் எனக் கூறியிருந்தார்.

    இதற்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். PhonePe-ஐ புறக்கணிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போன்பே சிஇஓ சமீர் நிகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

    நான் யாருடைய உணர்வையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்று கூறவில்லை. யாரையும் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முதலாவதாக, முதன்மையாக விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

    என்னுடைய நோக்கம் ஒருபோதும் கர்நாடகா மற்றும் அங்குள்ள மக்களை இழிவுப்படுத்துவது இல்லை. என்னுடைய கருத்து யாருடைய உணர்வை காயப்படுத்தியிருந்தால், உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    போன்பே (PhonePe) நிறுவனம் பெங்களூருவில்தான் தொடங்கப்பட்டது. தொழில்நுட்பத் திறமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் உள்ள நம்முடைய அடித்தளம் பற்றி நம்பமுடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது.
    • நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

    இந்த சூழலில் மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வங்காளதேச அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    மாணவர்களால் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 16-ந் தேதி டாக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட பலர் பலியாகினர்.

    இதை தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது. இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    வன்முறை காரணமாக வங்காளதேச அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகளை காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே வங்காளதேசத்தில் நிலவும் வன்முறை காரணமாக அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவதை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சிவில் விமானப்போக்குவரத்து துறை, குடியேற்றத்துறை, எல்லைச் சாவடிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி வங்காளதேசத்தில் 978 இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் கல்வி பயின்று வந்த தங்கள் மாநிலத்தை சேர்ந்த 120 மாணவர்கள் அங்கிருந்து திரும்பியுள்ளதாக அசாம் அரசு நேற்று அறிவித்தது.

    அதே போல் திரிபுராவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் வழியாக கடந்த 2 நாட்களில் மொத்தம் 379 மாணவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் மாணவர்களின் போராட்டத்துக்கு காரணமான 30 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

    சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில், "அரசுப் பணிகளில் தேர்வுகள் மூலம் தேர்ச்சியடையும் தகுதியான நபர்களுக்கு 93 சதவிகிதமும், விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கு 5 சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 2 சதவிகிதம் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3-ம் பாலினத்தவர்களுக்கு வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல்பு நிலை திரும்பும் பட்சத்தில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×