என் மலர்
நீங்கள் தேடியது "நீட் தேர்வு"
- அதர்வா தானே ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.
- உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தினர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் 19 வயது இளைஞர் அதர்வா சதுர்வேதி.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான EWS கோட்டாவின் கீழ் இரண்டு முறை இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் அதர்வா தேர்ச்சி பெற்றார். இரண்டாவது முறை 530 / 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆனால் மத்தியப் பிரதேச அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதர்வா வழக்கு தொடர்ந்தார். ஆனால் அங்கு நீதி கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் வாயிலாக அதர்வா தானே ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.
மாணவனின் வாதத்தைக் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு வார காலத்திற்குள் அதர்வாவிற்கு 2025-26 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் தற்காலிக சேர்க்கை வழங்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் மாநில அரசிற்கும் உத்தரவிடப்பட்டது.
தனியார் கல்லூரிகள் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றவில்லை என்றால், அவற்றைப் பூட்டிவிடுங்கள் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமாக தெரிவித்தார்.
- மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
- இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும்.
இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
NTA (National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு மே 3-ந்தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் நுழைவுத்தேர்வுக்கு www.neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை நீட் நுழைவுத்தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் மே 3-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்
- சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
உத்தரப் மாநிலம் ஜான்பூரை சேர்ந்த 20 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்காக படித்து வந்தார்.
ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோற்ற அவர் அடுத்த முறை எப்படியும் வென்று விட வேண்டும் என தீவிரமாக இருந்துள்ளார்.
சூரஜ், பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிர்பந்தத்திலும் இருந்துள்ளார்.
எனவே நீட் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறைவாக இருந்தாலும், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு இருந்தால் எளிதாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்று அவர் நினைத்துள்ளார்.
எனவே அவர் தனது ஒரு காலில் உள்ள 4 விரகலை அவரே துண்டித்துள்ளார். வலிக்காமல் இருக்க அனஸ்தீசியா மருந்து செலுத்திக்கொண்டு இந்த காரியத்தை அவர் செய்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரவு தன்னை யாரோ தாக்கியதில் அவ்வாறு ஆனதாக கூறியுள்ளார். இந்த விஷயம் காவல்துறை கவனத்துக்கு செல்லவே, அவர்கள் சூரஜ் உடைய போனை ஆராய்ந்ததில் அவருக்கு காதலி இருப்பதை அறிந்து அவரை தொடர்பு கொண்டுள்ளனர். இறுதியில் விசாரணையில் உண்மை வெளிவந்தது.
சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வின் போது டெல்லியில் உள்ள சில மையங்களில் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
- தேர்வரின் முக அடையாளம், புகைப்படம் உள்ளிட்டவை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
புதுடெல்லி:
மருத்துவ மாணவர் சேர்க்கை, மத்திய அரசு அதிகாரி பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு, மருத்துவ பணியிடங்கள் உள்ளிட்டவற்றுக்கு நுழைவுத் தேர்வுகளும், எழுத்து தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற தேர்வுகளில் அடிக்கடி முறைகேடுகள் நடைபெறுகின்றன. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்றவை முக்கிய பிரச்சனைகளாக உருவெடுத்துள்ளன.
ஆள்மாறாட்ட முறைகேடுகளை களைய 'பயோ மெட்ரிக்' சோதனை முறையை தேர்வு மையங்களில் அறிமுகப்படுத்த தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) திட்டமிட்டு உள்ளது. இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வின் போது டெல்லியில் உள்ள சில மையங்களில் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது. தேர்வரின் முக அடையாளம், புகைப்படம் உள்ளிட்டவை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
இதில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்ததால், வருகிற 2026-ம் ஆண்டில் இருந்து முக்கிய நுழைவுத் தேர்வுகளில் முகம் சரிபார்க்கும் பயோ மெட்ரிக் சோதனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது
- குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் மீண்டும் அனுப்ப வேண்டும்.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் மார்ச் 3ம் தேதி நிராகரித்தார்.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், "இளநிலை நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் மீண்டும் அனுப்ப வேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 254 கீழ் மசோதாவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
- மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உத்தரபப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த முகமது அன் (21) இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
நீட் பயிற்சிக்காக நான்கு நாட்களுக்கு முன்பு கான்பூர் ராவத்பூரில் உள்ள ஒரு விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவரது அறைத் தோழர் இம்தாத் ஹசன், முகமதுவை பிரார்த்தனைக்குச் செல்ல அழைத்தார். ஆனால் முகமது மறுத்துவிட்டார். இம்தாத் திரும்பி வந்தபோது, அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். முகமதுவை அழைத்தும் எந்த பதிலும் இல்லாததால் இம்தாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, முகமது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அங்கிருந்து 2 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் மீட்டனர். அதில் "அம்மா, அப்பா, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாது. அதனால்தான் நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். இதற்கு நான்தான் பொறுப்பு" என்று முகமது எழுதியுள்ளார்.
அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
- மாணவியின் தந்தை செண்டாபாய் தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.
காந்திநகர்:
குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது தராட் போலீஸ் நலையம். இங்கு கடந்த 6-ந்தேதி ஹரேஷ் சவுதாரி என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில், 'தன்னுடன் பழகி வந்த 18 வயதான பெண், அவரது தந்தை செண்டாபாய் படேல் மற்றும் அவர்களது உறவினர்கள் 2 பேரால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக" புகாரில் கூறி இருந்தார். கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.
இதையடுத்து மாணவியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தச் சென்றபோது, மாணவி கடந்த ஜூன்-24-ந்தேதி இறந்துவிட்ட தகவலும், அதை போலீசுக்கு தெரிவிக்காமல் இறுதிச் சடங்கு நடத்திய தகவலும் வெளிவந்தது. மேலும் மாணவியின் தந்தை தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் மாணவியின் மரணம் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன.
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அந்த மாணவி, கடந்த மே மாதத்தில் தேர்வை எழுதி இருந்தார். நீட் தேர்வு முடிவு வெளியானதில் கொலையான மாணவி நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். மருத்துவ படிப்பில் சேர தயாராகி வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே மாணவி, ஹரேசுடன் பழகி, சேர்ந்து வாழ்ந்து வந்தது அவரது பெற்றோருக்கு தெரியவந்ததால், அவர் ஆணவ படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
மாணவி பழகிய ஆண் நண்பரான ஹரேஷ் சவுதாரி ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மாணவி தராட் நகரில் இருந்து பலான்பூருக்கு படிக்க செல்லும்போது, மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி இறக்கிவிடும்போது ஹரேசுடன் பழக்கம் செய்யப்பட்டு உள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியது.
மாணவியிடம் ஹரேஷ் தனக்கு திருமணமான விவரத்தை கூறிவிட்டாரா? என்பது பற்றி இதுவரை தெரியவில்லை என்று போலீசார் கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் கடந்த மே மாதம் ஆமதாபாத் சென்று சேர்ந்து வாழ்வது பற்றி தங்களுக்குள் முடிவு செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அடிக்கடி ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
ராஜஸ்தானில் அவர்களை ஒரு ஓட்டலில் பார்த்த போலீஸ் குழு, மாணவியை அவரது உறவினர் சிவராம்பாயிடம் ஒப்படைத்து உள்ளனர். மாணவியின் உறவினர்கள், அதன்பிறகு மாணவியை கண்டித்து உள்ளனர். ஹரேஷ் மற்றொரு வழக்கிற்காக கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டார்.
ஜூன் 21-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்த ஹரேஷ், மாணவிக்கு செல்போன் மற்றும் சமூக வலைத்தளத்தில் மெஸேஜ் அனுப்பி உள்ளார். ஆனால் பதில் வரவில்லை. இதையடுத்து மாணவியின் நிலை குறித்து அச்சம் அடைந்த ஹரேஷ், தனது வக்கீல் உதவியுடன் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே மாணவி ஆணவக் கொலை செய்யப்பட்டு, இறுதிச் சடங்கு நடக்கும் செய்தி ஜூன் 25-ந்தேதி அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார்.
கொலை நடப்பதற்கு முன்பு, தாண்டியா கிராமத்தில் சிவராம்பாய் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவி ஜூன் 24 அன்று பாலில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சிவராம்பாய் மற்றும் நரன்படேல் ஆகியோரை கைது செய்து உள்ளனர். நரேன் படேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மாணவியின் தந்தை செண்டாபாய் தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.
- மூத்த மகள் சஞ்சி ஸ்ரீ டாக்டருக்கு படித்து வருகிறார்.
- கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த மதன ஸ்ரீ சோகத்துடனேயே காணப்பட்டார்.
பெரம்பூர்:
சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் குமார். இவர் தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சஞ்சி ஸ்ரீ டாக்டருக்கு படித்து வருகிறார். அக்காவை பார்த்து 2-வது மகள் மதன ஸ்ரீயும் டாக்டருக்கு படிக்க விரும்பினார்.
இதற்காக அவர் நீட் தேர்வு எழுதி இருந்தார். கடந்த ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியானபோது குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்திருந்தார். இதனால் கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த மதன ஸ்ரீ சோகத்துடனேயே காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு 11 .30 மணி அளவில் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று மதன ஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீ சார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நீட் தேர்வால் மாணவிகள் பலர் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டு உள்ள நிலையில் சென்னை கொடுங்கையூரிலும் நேற்று மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.
- ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.
மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தாயும், மகளும் வந்திருந்தனர். முதலில் மகளுக்காக தாய் உடன் வந்திருக்கிறார் என நினைத்திருந்த நிலை அப்படியே மாறி, கலந்தாய்வில் மகள் உதவியுடன் தாய் மருத்துவப்படிப்பை தேர்வு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமுதவல்லி (வயது 49) என்ற பெண்தான், மருத்துவம் படிக்க இருக்கிறார். 'நீட்' தேர்வுக்காக மகள் படிக்க தயாராகி கொண்டிருந்தபோது அந்த புத்தகத்தை தானும் படித்து நீட் தேர்வை மகளுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.
நீட் தேர்வில் தாய் அமுதவல்லி 147 மதிப்பெண் எடுத்திருந்தாலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து அமுதவல்லியிடம் கேட்டபோது, 'நான் 'பிசியோதெரபிஸ்ட்டாக' இருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மருத்துவம் படிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அப்போது எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய மகள் மூலம் அந்த கனவு நிறைவேறி உள்ளது. ஆனால் ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.
மருத்துவம் படிக்க இருக்கும் அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாளினியும் நீட் தேர்வில் 460 மதிப்பெண் எடுத்து, பொது கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.
அவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், தாயும், மகளும் ஒரே ஆண்டில் மருத்துவப்படிப்பில் நுழைவார்கள்.
- ஆகஸ்ட் 3ஆம் தேதி மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.
- தேர்வு நடைபெற இருக்கும் இடங்கள் குறித்த விவரம் இ-மெயில் மூலம் அனுப்பப்படும் என அறிவிப்பு.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான NEET PG 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் தங்களுக்கு எந்த இடத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் இ-மெயில் மூலம் வருகிற 21ஆம் தேதி அனுப்பப்படும். விண்ணப்பத்தாரர்கள் தேர்வு நடைபெறும் இடத்தை மாற்றுவதற்கு ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 17ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.
ஹால் டிக்கெட் ஜூலை 31ஆம் தேதி வழங்கப்படும். அதில் தேர்வு எழுதக்கூடிய மையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் தெரிந்து கொள்ளலாம்.
ஏதாவது சந்தேகம் இருந்தால் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை +91-7996165333 உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணை natboard.edu.in and nbe.edu.in ஆகிய இரண்டு இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவு செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிடப்படும்.
- "மன்னித்துவிடுங்கள் அப்பா, அம்மா, என்னால் முடியாது" என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
- போட்டித் தேர்வுகளால் இளம் மாணவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நீட் நுழைவுத் தேர்வுக்காகப் படித்து வந்த இரண்டு மாணவர்கள், சில மணி நேர இடைவெளியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (புதன்கிழமை) கவாஹிஷ் தேவ்ராம் நாகரே (16) என்ற மத்தியப் பிரதேச மாணவர், நாக்பூரில் தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். "மன்னித்துவிடுங்கள் அப்பா, அம்மா, என்னால் முடியாது" என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதேபோல், 17 வயது வைதேகி அனில் உய்கே என்ற மாணவியும் நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். இந்த தொடர் மரணங்கள், போட்டித் தேர்வுகளால் இளம் மாணவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
- கடந்த மே 4-ந்தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
- நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடந்தது.
அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்களும், கே.கே நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளியைச் சேர்ந்த 1 மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், கடந்த மே 4-ந்தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
வழக்கு விசாரணையின்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிய வந்ததாகவும், இந்த மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து ஜூன் 4-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து 16 பேரும் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






