என் மலர்
நீங்கள் தேடியது "Madras High Court"
- தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.
- சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை உயர்நீதிமன்றக் கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ளவர்களில் ஏழு பேர் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்களாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர்களாகவும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது சாதி மத அரசியல் சார்பு அடிப்படையிலேயே இருக்கிறது. சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.
தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதி திராவிடர் மற்றும் இதுவரை நீதிபதி நியமனங்களில் இடம்பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சமூக நீதிக்கு எதிராகத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் செய்வதை கொலேஜியம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.
- நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, தமிழக அரசு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், தமிழக அரசு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில்,
* கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.
* 5000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.
* வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.
* நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
* நிகழ்ச்சியில் பொது, தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.
* கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு.
* அனுமதித்த நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
* நிகழ்ச்சி அனுமதிக்கான விண்ணப்பத்தில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ ஏற்பாடு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
* திடீரென ஏற்பாடு செய்யக்கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு ஆட்சியர், சென்னை மாநகர காவல் ஆணையர் முடிவெடுக்க அதிகாரம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.
- சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது.
யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பல்வேறு யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங் கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் என்னை அடையாளப்படுத்தும் வகையில் எனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன் படுத்தக் கூடாது.
சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி எனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் "இசை அமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை மார்பிங் செய்தும், ஏ.ஐ. தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி மாற்றியும் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்" என்று கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெயரை, புகைப்படங்களை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வக்கீல், "இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.
இது அவரது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்பதால், யூடியூப் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதி இன்றி இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது" என்றார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி யூடியூப் சேனல்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
- அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
- ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் திருத்தம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மேலும், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
- கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார்.
- கும்கி 2 படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கும்கி 2 படம் வரும் 14ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பட வெளியிட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் கும்கி 2 படத்தை வெளியிடக்கூடாது எனக்கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல.
சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.
புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், பாக்கி தொகை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பாக்கி தொகையை வழங்க வேண்டும் எனவும், பயனாளிகள் குறித்த விவரங்களை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும்படி, விடியல் மக்கள் நல அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கியதாக விடியல் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது குறித்தும், இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு குறித்தும் அரசு கடிதத்தை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க 3 வார அவகாசம் வழங்கக் கோரி இருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,
இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக தலைமைச்செயலாளர் வழக்கு தொடர்ந்ததற்கு அதிருப்தி தெரிவித்தது.
பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.
மக்களின் பணத்திற்கு அரசு அறங்காவலர்கள் மட்டுமே. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய எஞ்சிய இழப்பீட்டு தொகை ரூ.2.59 கோடியை உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.
பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
- தலைமை நீதிபதி இந்த நிகழ்ச்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துவிட்டதா ? என்று கேள்வி எழுப்பினார்.
- ரோடு ஷோ நடத்துவதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கரூரில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக மூச்சு திணறி பலியாகினர்.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பாக விஜய் பிரசாரக் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகளை போலீசார் விதிப்பதாகக் கூறி, த.வெ.க. தரப்பில் ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு, தனி நீதிபதி முன்பு விசாரணை நிலுவையில் இருந்தது. இந்த வழக்கும், தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்கும் வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறினார்.
அதற்கு தலைமை நீதிபதி இந்த நிகழ்ச்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துவிட்டதா ? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இதுகுறித்து அரசு, கட்சி நிர்வாகிகள் உடன் கலந்து ஆலோசனை செய்து வருகிறது என்றார்.
அப்படி என்றால் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை அரசியல் கட்சிகளுக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாது என்ற முடிவு அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக இருக்காதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
"ரோடு ஷோ நடத்துவதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை எதுவும் இருக்கவில்லை. அரசியல் கட்சிகளையும் தடுக்கவில்லை என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்தார்.
மேலும், இந்த ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாது என்று ஐகோர்ட்டில் ஏற்கனவே அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், "அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணி, ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி 10 நாட்களுக்குள் அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதே நேரம் தற்போது பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் அனுமதி கோரி ஏதாவது விண்ணப்பம் செய்திருந்தால் அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க இந்த உத்தரவு அரசுக்கு தடையாக இருக்காது. இந்த வழக்கு விசாரணையை வருகிற அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்" என்று கூறினார்கள்.
- கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வே விசாரிக்க முடிவு செய்தது.
- வழக்குகளை எல்லாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளோம் என ஒரு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை:
கரூரில், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வே விசாரிக்க முடிவு செய்தது.
இந்த வழக்குகள் எல்லாம், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் இன்று காலையில் முதல் வழக்குகளாக விசாரணைக்கு வந்தன.
முதல் வழக்காக கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமின் கோரிய மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அந்த மனுவை மனுதாரர் தரப்பு வக்கீல் வாபஸ் பெறுவதாக கூறியதை ஏற்று, அந்த மனு வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.
அதேபோல, கரூர் சம்பவம் காரணமாக, மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.ராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, விஜய் பிரசாரக் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி, த.வெ.க. தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்த வழக்கு, அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரத்தின்போது, டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பது, தீ விபத்து தடுப்பு கண்காணிப்பு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு,
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டபோது, நேபாளம், இலங்கை போல், தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு, வன்முறையை தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, த.வெ.க. தேர்தல் பிரசார பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வழக்கு, கரூர் துயர சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்தன் வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா? என்பதை முடிவு செய்யும் வழக்கு என்று பல வழக்குகள் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்குகளை எல்லாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளோம் என ஒரு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குகளை எல்லாம் 3 வாரத்துக்கு தள்ளிவைத்தும், அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- வாக்குச்சாவடி அதிகாரிகளாக உள்ள தி.மு.க.வினர், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.
- தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவாளர்கள் 13 ஆயிரம் நபர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை தி.நகர் தொகுதியில், 13 ஆயிரம் அ.தி.மு.க. ஆதரவாளர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர்.
வாக்குச்சாவடி அதிகாரிகளாக உள்ள தி.மு.க.வினர், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.
1998-ம் ஆண்டு தி.நகர் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 349 வாக்காளர்கள் இருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2021 ம் ஆண்டு வெறும் 36 ஆயிரத்து 656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர். மக்கள் தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.
தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவாளர்கள் 13 ஆயிரம் நபர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேநேரம், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து, தவறான சேர்க்கை, நீக்கத்தை களைந்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தி.நகர் தொகுதியில் மொத்தமாக வாக்காளர்கள் சேர்க்கையும், நீக்கமும் நடந்துள்ளதால், அவற்றை சரிபார்த்து திருத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இது சம்பந்தமாக தமிழில் உள்ள ஆவணங்களை மொழி பெயர்த்து தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பீகாரைப் போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அப்போது, மனுதாரர் தெரிவித்த புகார்கள் கவனிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பீகார் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
- ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
- அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறி, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறி, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
- உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
- ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்று தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். எனினும் அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
எதையும் ஆய்வு செய்யாமல் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார் என கூறிய உச்சநீதிமன்றம், சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிட்டது எப்படி என்றும் சென்னை உயர்நீதிமன்றத்திடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
பரப்புரை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரிய வழக்கு, கிரிமினல் வழக்காக பட்டியலிடப்பட்டது எப்படி? என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
- வியாசர்பாடி பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று காலை உயிரிழந்தார்.
அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இன்று காலை 11.30 மணியளவில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதன்பிறகு நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தியவுடன் கொடுங்கையூர் முல்லை நகர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இதையொட்டி வியாசர்பாடி பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வியாசர்பாடி வீட்டிலிருந்து முல்லை நகர் மயானம் வரையில் நாகேந்திரனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் வழியிலும் இன்று மாலையில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக நாகேந்திரனின் மகன்கள் அஸ்வத்தாமன், அஜித் ஆகியோர் சிறையில் இருந்து பரோலில் வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே அவரது உடலை தங்கள் தரப்பு மருத்துவரை வைத்து பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அவரது மனைவி சென்னை ஐகோர்ட்டில் இன்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த ஐகோர்ட்டு, அதற்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பிரேத பரிசோதனை செய்வார்கள் என்று தெரிவித்தது. இருப்பினும் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் நீதிபதி சதிஷ்குமார் தெரிவித்தார்.






