என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக"

    • கடந்த 2025-ம் ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது.
    • நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம்.

    பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2025-ம் ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம். ஆனால், என் தாயார் அடிக்கடி சொல்வது போல, நடந்தவை யாவும் நன்மைக்கே எடுத்துக்கொண்டு நாம் முன்னேறுகிறோம். துரோகங்கள் நம்மை உடைக்கவில்லை. மாறாக நம்மை இன்னும் கூர்மையாக்கி அசைக்க முடியாத சக்தியாக மாற்றியிருக்கிறது.

    தர்மம் தாமதிக்கலாம். ஆனால் தவறாமல் ஜெயிக்கவும் செய்யும் என்ற வாக்கிற்கு இணங்க, வஞ்சகத்தின் மேகங்கள் விலகி, நீதியின் ஒளி விரைவில் பிறக்கும். 2026- ஆண்டு, துரோகத்திற்கு எதிரான உண்மையின் வெற்றியாகவும், அச்சுறுத்தலுக்கு எதிரான நம்பிக்கையின் வெற்றியாகவும் அமையும்.

    நேற்றிரவு எனது தாயார் என்னிடம் ஒரு தீர்க்கமான நம்பிக்கையை பகிர்ந்துகொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி 26 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும்' என்பதே அந்த நம்பிக்கை.

    இந்த இயக்கம் பதவி ஆசைக் கொண்டவர்களால் கட்டப்பட்டது அல்ல. ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த உண்மையான தொண்டர்களாலும், மக்களாலும் கட்டப்பட்டது. உங்கள் அன்பும், விசுவாசமுமே எங்களின் மிகப்பெரிய பலம்.

    இந்த புத்தாண்டு தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடும். சேவை மனப்பான்மையோடும் 2016-ஐ பாமக-வின் பொற்காலமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

    தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    இவ்வாறு ஸ்ரீகாந்தி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    • திமுகவின் 55 மாத ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை.
    • இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையை திமுக அரசு செய்திருக்கிறது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் வடமாநில இளைஞரை 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே, அதே தொடர்வண்டி நிலையத்தில் ஜமால் என்ற புடவை வணிகர் போதையில் இருந்த 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். ஒரே தொடர்வண்டி நிலையத்தால் அடுத்தடுத்து போதைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதும், அத்தாக்குதல்களைத் தடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.

    தொடர்வண்டி நிலையத்தில் தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கூறி திமுக அரசு பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. தாக்குதல் எங்கு நடத்தப்பட்டது என்பது இங்கு சிக்கல் அல்ல. தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது தான் இங்கு பிரச்சினையே. சில நாள்களுக்கு முன் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட வடமாநில இளைஞரும், இப்போது தாக்கப்பட்டுள்ள புடவை வணிகர் ஜமாலும் அப்பாவிகள். அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் எந்தத் தூண்டுதலிலும் ஈடுபடவில்லை. மாறாக கஞ்சா போதையில் இருந்தவர்கள் தான் அவர்களைத் தாக்கியுள்ளனர்.

    திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் நடந்த இரு தாக்குதல்களுக்கும் காரணம் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் கட்டுப்படுத்தப்படாத புழக்கம் தான். அதனால் தான் இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அடியோடு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக இமாலயப் பொய் ஒன்றை சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதற்கு அடுத்த நாளே இந்த நிகழ்வு நடந்திருப்பதன் மூலம் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் எங்கும் நிறைந்திருப்பது உறுதியாகியிருக்கிறது.

    திமுகவின் 55 மாத ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை; தரமான கல்வி வழங்கவில்லை; அரசு பள்ளிகளையும், கல்லூரிகளையும் வலுப்படுத்தவில்லை; தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றவில்லை. ஆனால், தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, மது உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களை வெள்ளமாக பாயவிட்டு இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையை மட்டுமே திமுக அரசு செய்திருக்கிறது.

    தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுக அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதிலும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும் படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. இளைஞர்களை சீரழித்த, தோல்வியடைந்த திமுக தமிழகத்தை தொடர்ந்து ஆளும் தகுதியை இழந்து விட்டது. இதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்வார்கள்.

    • நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை அரசால் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்படி தேடித் தேடி நடத்த வேண்டும்.
    • தமிழக அரசின் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 55,706 பேரைக் கொண்டு அரசு நடத்தவுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைல்,

    தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்துவதற்கு ஆணையிட்டிருக்கும் திமுக அரசு, அதற்காக ரூ.43.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான சர்வே மிகவும் அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், இத்தகைய சர்வே நடத்தும் திமுக அரசு, சமூகநீதி நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து சாதிவாரி சர்வே நடத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு அரசு நடத்தவிருக்கும் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும், சாதிவாரி சர்வேவுக்கு இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. நலத்திட்ட தாக்க அறிவிக்கைக்கான சர்வே தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி வீடுகளில் நடத்தப்பட வேண்டும். சாதிவாரி சர்வே என்பது அதைவிட சற்றுக் கூடுதலாக 2.26 கோடி வீடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை அரசால் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்படி தேடித் தேடி நடத்த வேண்டும்; ஆனால், சாதிவாரி சர்வேயை அனைத்து வீடுகளிலும் மேற்கொள்ளலாம். மொத்தத்தில் பணிச்சுமை, அலைச்சல் ஆகியவை சாதிவாரி சர்வேவுக்கும், நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும் ஒரே அளவிலானவை தான், இன்னும் கேட்டால் சாதிவாரி சர்வே நடத்தும் போது, அதில் எழுப்பப்படும் 70-க்கும் மேற்பட்ட வினாக்களின் வாயிலாகவே நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்து விட முடியும் என்பதால், இதற்காக தனி சர்வே நடத்த வேண்டிய தேவை இருக்காது.

    தமிழக அரசின் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 55,706 பேரைக் கொண்டு அரசு நடத்தவுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு இதை விட 4 மடங்கு அதிகமாக சுமார் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். நலத்திட்ட தாக்க சர்வேவுக்கு ரூ.43.52 கோடி செலவாகும் நிலையில், சாதிவாரி சர்வேவுக்கு ரூ. 300 கோடி செலவாகும். இது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவு தான்.

    இவை அனைத்துக்கும் மேலாக நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் மேற்கொள்ள முடியும். இதே சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி சர்வேயையும் மேற்கொள்ள முடியும். நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை நடத்த தமிழக அரசுக்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி சர்வேயை நடத்துவதற்கு இல்லையா? அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால், சமூகநீதிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற மனம் தான் திமுகவுக்கு இல்லை.

    சாதிவாரி சர்வே நடத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகள் அம்பலமாகிவிடும் என்று திமுக அரசு அஞ்சுகிறது. அதனால் தான் இல்லாத காரணங்களைக் கூறி சாதிவாரி சர்வே நடத்த மறுக்கிறது. ஆனால், சமூகநீதியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள சமூக அநீதி ஆட்சி வீழ்த்தப்பட்டு, சமூகநீதி ஆட்சி அமைக்கப்படும் போது கண்டிப்பாக சாதிவாரி சர்வே நடத்தப்படுவதும், அதனடிப்படையில் சமூகநீதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் உறுதி என்று கூறியுள்ளார். 

    • தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
    • ஆனால், இது குறித்த எந்த கவலையும் இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    அரசு பள்ளிகளில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கும் உடனடியாக காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் சென்னையில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டமும், அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் மாற்றுத்திறனாளி தற்காலிக பணியாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தி சென்னையில் குடும்பத்துடன் தொடர்போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். அரசு பணியில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் எளிய மக்களை போராடும் சூழலுக்கு திமுக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பணி நிலைப்பு என்ற நியாயமான கோரிக்கையைக்கூட ஏற்க மறுத்து திமுக அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

    தமிழக அரசுத் துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்கப் பட வேண்டும் என்று கடந்த 2008&ஆம் ஆண்டு அக்டோபர் 16&ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 151-ஐயும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க சிறப்பு ஆள் தேர்வுகளை நடத்தலாம் என்று 2023&ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 20-ஐயும் செல்லாததாக்கும் வகையில் கடந்த அக்டோபர் 30&ஆம் தேதி 24 என்ற எண் கொண்ட அரசாணையை திமுக அரசு பிறப்பித்திருக்கிறது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.

    அரசாணை எண் 24-ஐ ரத்து செய்து விட்டு, முந்தைய அரசாணைகளின் அடிப்படையில் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளி பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. ஆனால், அதைக் கூட நிறைவேற்றுவதற்கு திமுக அரசு மறுத்து வருகிறது.

    2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், 181-ஆம் வாக்குறுதியாக திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சொல்வதைச் செய்வதாகக் கூறிக் கொள்ளும் திமுக ஆட்சிக்கு வந்து 55 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடினால், அடக்குமுறையைத் தான் பரிசாக அளிக்கிறது திமுக அரசு.

    சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து நான்காம் நாளாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் இன்றும் கைது, அரசு ஊழியர்கள் போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் என தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது குறித்த எந்த கவலையும் இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பகுதிநேர சிறப்பாசிரியர்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்; திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றுவார்கள்.

    • நான் செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறேன்.
    • தைலாபுரத்தில் தினந்தோறும் என்னை வந்து சந்திக்கும் பா.ம.க.வினரை நினைத்தால் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது.

    சேலம்:

    பா.ம.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் தொடர்ந்து பேசியதாவது:-

    * 30 ஆண்டாக மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்த ஜி.கே.மணியை அவமானப்படுத்தினால் என்னால் பொறுக்க முடியாது.

    * இந்த தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன், நல்ல முடிவை அது கொடுக்கும்.

    * என்னைப்போன்ற ஒரு தகப்பன் உலகில் வேறு யாருக்காவது உண்டா? அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்?

    * அன்புமணி ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என செல்லும் இடங்களில் எல்லாம் கேட்கிறார்கள்.

    * நான் செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறேன்.

    * அன்புமணியின் பின்னால் 5 சதவீதம் பேர் வட இல்லை. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

    * நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை.

    * பதவிக்கு வரமாட்டேன் என்ற எனது சத்தியத்தால் தான் நீ 36 வயதில் மத்திய அமைச்சராக ஆனாய்.

    * கூட்டணிக்கான காலம் இன்னும் கனியவில்லை, நான் நினைப்பது போன்ற வெற்றி தேர்தலில் கிடைக்கும்.

    * அன்புமணி நினைப்பு வந்துவிட்டால், தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை.

    * தைலாபுரத்தில் தினந்தோறும் என்னை வந்து சந்திக்கும் பா.ம.க.வினரை நினைத்தால் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது என்றார். 

    • வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்.
    • சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு என்னை தினமும் காயப்படுத்துகிறார்கள்.

    சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடந்து நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்ணீர் மல்க தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * செயற்குழுவும், பொதுக்குழுவும் நேற்று முதலே களைகட்டத் தொடங்கி விட்டது.

    * பொதுக்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

    * என்னிடத்தில் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க ஒரு மணி நேரம் தேவை.

    * நான் வளர்த்த பிள்ளைகள் தான் என்னை தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

    * 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி, நல்ல முடிவு எடுப்பேன்.

    * வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்.

    * தனது கனவில் தாய் வந்ததை நினைத்து மனம் உடைந்து கண்ணீர் சிந்தினார். அப்போது தொண்டர்கள் அழக் கூடாது ஐயா என கூறினர்.

    * பிள்ளையை நான் சரியாக வளர்க்கவில்லை என கனவில் தாயிடம் அழுதேன்.

    * என்னை 20- 30 துண்டுகளாக கூட வெட்டி வீசி இருக்கலாம், போய் சேர்ந்திருப்பேன்.

    * சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு என்னை தினமும் காயப்படுத்துகிறார்கள்.

    * 100-க்கு 95 சதவீத பாட்டாளி மக்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள்.

    * அன்புமணி தன்னை நெஞ்சிலும், முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டதாக பேசினார். 

    • விமர்சனங்களை காந்திமதி இன்றோடு நிறுத்தி கொள்ள வேண்டும்.
    • இல்லாவிட்டால் பல விஷயங்களை நாங்களும் சொல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

    சென்னை:

    சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதற்கு அன்புமணி தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக வக்கீல் பாலு கூறியதாவது:-

    சேலத்தில் இன்று அவர்கள் எடுத்த முடிவுகள் எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது. இரண்டு கேலி கூத்தான தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதாவது, பா.ம.க. தலைவராக டாக்டர் ராமதாசை தேர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியானால், இதுவரை பேசியது பொய்யா? டாக்டர் ராமதாசை பொதுக்குழுவில் முறைப்படி தலைவராக தேர்வு செய்துவிட்டதாகவும், அதை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டதாகவும் ஐகோர்ட்டு அங்கீகரித்துவிட்டதாகவும் கூறி வந்தார்கள். அப்படியானால் இப்போது தலைவரை தேர்வு செய்திருப்பதாக கூறுவது ஏன்?

    ஒரு கட்சியின் புதிய தலைவரை அந்த கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பொதுக்குழுவை கூட்டி தேர்வு செய்ய முடியும். அதன்படி, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணிதான் பொதுக்குழுவை கூட்டி புதிய தலைவரை தேர்வு செய்ய முடியும்.

    இன்னொரு கேலி கூத்தான தீர்மானத்தையும் சொல்லி உள்ளார்கள். அதாவது, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து சவுமியா அன்புமணியை நீக்கி இருப்பதாக கூறியிருக்கிறார்கள். சவுமியா அன்புமணி ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பில் நீண்ட நாட்களாக தலைவராக இருக்கிறார். அவரை நீக்க வேண்டுமென்றால் அந்த அமைப்பின் பொதுக்குழுதான் கூடி முடிவெடுக்கும். இன்னொரு அமைப்பு அந்த முடிவை எடுப்பதற்கு என்ன உரிமை உள்ளது?

    காந்திமதி எங்கள் தலைவரை மிக மோசமாக தரக்குறைவாக விமர்சித்துள்ளார். அதை கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்றுக் கொள்ள மாட்டோம். அன்புமணி எங்கள் கட்சியை வழிநடத்தி வரும் தலைவர். அவரை யார் விமர்சனம் செய்தாலும் ஏற்க மாட்டோம். அது அக்காவாக இருந்தாலும் சரி, அக்கா-தம்பி சண்டை இருந்தால் வீட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பா.ம.க. டாக்டர் ராமதாசின் குடும்ப சொத்தும் அல்ல. இந்த விமர்சனங்களை காந்திமதி இன்றோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல விஷயங்களை நாங்களும் சொல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
    • ராமதாஸின் அனுமதியின்றி பா.ம.க. கொடியை சௌமியா அன்புமணி பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் போக்கு அதிகரித்து தற்போது இருதரப்பினரும் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், இன்று சேலத்தில் ராமதாஸ் தரப்பினர் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தினர். இதில் அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதேபோல் ராமதாஸின் அனுமதியின்றி பா.ம.க. கொடியை சௌமியா அன்புமணி பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த சௌமியா அன்புமணி நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    • ராமதாஸ் இல்லாத பா.ம.க. பிணத்துக்கு சமம்.
    • ராமதாஸ் தேர்தலுக்கு வியூகம் வகுத்து விட்டார்.

    சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பேசியதாவது:-

    அன்புமணி அணிந்திருக்கும் கோட் சூட் யார் கொடுத்தது? எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும், உழைத்து வாங்கியதா? ராமதாஸ் இல்லாத பா.ம.க. பிணத்துக்கு சமம். தம்பி அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சியை தொடங்கிக் கொள்ளட்டும்.

    ராமதாஸுக்கு அன்புமணி செய்தது பச்சை துரோகம்!

    ராமதாஸ் தேர்தலுக்கு வியூகம் வகுத்து விட்டார். யாருடன் கூட்டணி? யாருக்கு சீட்டு? எப்படி ஜெயிக்க வேண்டும் என அவருக்கு தெரியும். இனிமே குறுக்க பேச யாருமே கிடையாது. காலை வாரி விடவும் யாரும் இல்லை என்றார். 

    • கடந்த 2, 3 ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற மன உளைச்சல் சாதாரண மன உளைச்சலா?
    • ராமதாஸ் அவர்கள் முடிவெடுக்கும் வரையிலே பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தது.

    சேலம்:

    சேலத்தில் நடந்த பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அருள் எம்.எல்.ஏ பேசியதாவது:-

    ஒரு கட்சியினுடைய தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நமது பாட்டாளி மக்கள் கட்சி. ஒரு தலைவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணமாக இருந்ததும் நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சி. அப்படின்னா மருத்துவர் ராமதாஸ் என்ற ஒரு தலைவர் இந்த நாட்டை எப்படி நேசித்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 46 ஆண்டு காலம் அரை நூற்றாண்டுகள் தன்னுடைய வாழ்வை இந்த மக்களுக்காக அர்ப்பணித்து ஒரு போராளியாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவர்.

    அப்படிப்பட்ட தலைவர் இன்றைக்கு கடந்த 2, 3 ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற மன உளைச்சல் சாதாரண மன உளைச்சலா? நான் உங்களிடத்தில் கேட்கிறேன். இந்த மன உளைச்சலுக்கு யார் காரணம். பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களா? பொறுப்பாளர்களா? யார் காரணம், யாருமே இல்லை.

    ராமதாஸ் அவர்கள் முடிவெடுக்கும் வரையிலே பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தது. மருத்துவர் ராமதாஸ் என்ற ஒரு பெயரை சொன்னால் எந்த ஒரு தலைவரும் ராமதாஸ் சொல்வதை மட்டுமே செய்தாக வேண்டிய கட்டாய நிலையை உருவாக்கி வைத்திருந்தார். இன்றைக்கு சிறு அளவிற்கு மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. அதற்கு யார் காரணம். மருத்துவர் ராமதாஸ் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு 36 வயதிலேயே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கொடுத்து இந்திய துணை கண்டத்தில் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று வழிகாட்டி, எம்.பி. பதவி உள்ளிட்ட பல பதவிகளை கொடுத்து அழகுபார்த்த ராமதாஸ்.

    அவர்களை இந்த 3 ஆண்டுகளில் நீங்கள் படுத்திக் கொண்டு இருக்கின்ற பாடு என்பது, நேற்று முன்தினம் ஒரு காணொளி வந்ததே தமிழ்நாட்டில் இருக்கின்ற பெண்கள் கதறி அழுதார்களே. ஆனால் ராமதாஸ் அவர்களால் பெற்றெடுக்கப்பட்ட ஒரு குழந்தை மகிழ்ந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய வேதனை. நியாயமா? நான் கேட்கிறேன். 18 முறை நான் சிறைக்கு சென்றிருக்கிறேன். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறேன். ஆனால் சிறையை காணாத உங்களுக்கு எத்தனை எத்தனை பதவிகளை வாரி கொடுத்தவர் யார்? அடுத்தது நமக்கு வழிகாட்டுபவர்கள் நீங்கள் என்று நினைத்து உங்களை அழைத்தோம். ஆனால் அனைவரின் தலையிலும் மண்ணை போட்டு விட்டீர்களே. நியாயமா? தர்மமா? உங்களிடத்தில் கேட்கிறேன். வயிறு அய்யாவுக்கு மட்டும் எரியவில்லை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அப்பாவுக்கும், ஒவ்வொரு அம்மாவுக்கும் வயிறு எரிகிறது.

    நீங்கள் இந்த 26-ல் அமைக்கின்ற கூட்டணி நீங்கள் சொல்கின்றவர் தான் இந்த நாட்டின் முதலமைச்சராக வருவார். யார் தலையில் எழுதியுள்ளது என்று எங்களுக்கு தெரியவில்லை. முதலமைச்சராக யார் வருவார் என்பதை முடிவு செய்பவர் ராமதாஸ் என்று பேசினார். 

    • அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    • செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    சேலம்:

    சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. யாருடன் கூட்டணி அமைப்பது, எத்தனை இடங்களை கேட்பது என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

    இதில் செயல்தலைவர் ஸ்ரீகாந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் மன்சூர், மாநில இளைஞர் சங்க தலைவர் தமிழ்குமரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 300 பேர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் பொதுக்குழுவில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிக்கிறார். இதனால் இந்த கூட்டம் அரசியல் கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்களது இருக்கையில் டாக்டர் ராமதாஸ் படத்துடன் கூடிய பையில் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள், மிக்சர், கடலை உருண்டை வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டாக்டர் ராமதாஸ் நேற்று மதியம் சேலம் வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் செயற்குழு, பொதுக்குழு நடந்த மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் சேலம் மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ம.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பா.ம.க. மாநில இணை பொதுச்செயலாளர் இரா.அருள் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர். 

    • தான் நிலைக்குலைந்து கண் கலங்கினாலும் கட்சியை வலிமையான சக்தியாக உருவாக்க ராமதாஸ் முயற்சித்து வருகிறார்.
    • அன்புமணி பிரிந்து சென்ற பிறகு ராமதாசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலத்தில் நாளை காலை 10 மணிக்கு பா.ம.க.வின் செயற்குழுவும், 11.30 மணிக்கு பொதுக்குழுவும் நடைபெற உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தமிழகம் எதிர்பார்த்து உள்ளது.

    ராமதாசால் பா.ம.க.வில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவியில் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். பா.ம.க.வை பிளவுபடுத்த அன்புமணி மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளாலும் ராமதாஸ் வேதனை அடைந்துள்ளார். அன்புமணியால் தூண்டிவிடப்பட்ட சிலரின் அவதூறு பேச்சால் நிறுவனர் நிலைகுலைந்து போயுள்ளார். சூழ்ச்சியால் பா.ம.க.வை அபகரிக்க பார்க்கிறார்கள்.

    தான் நிலைக்குலைந்து கண் கலங்கினாலும் கட்சியை வலிமையான சக்தியாக உருவாக்க ராமதாஸ் முயற்சித்து வருகிறார். கட்சியை வலிமையாக்க ராமதாஸ் எடுக்கும் முயற்சிகளை கண்டு ராமதாசை விட்டு அன்புமணியிடம் சென்ற நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் ராமதாஸ் உடன் வருவார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம் ராமதாஸ்தான். தற்போது ராமதாசுக்கு பெரிய சோதனை வந்துள்ளது. ஆனால் வரும் தேர்தலில் ராமதாஸ் சொல்பவர்களுக்குதான் பாட்டாளி மக்கள் வாக்களிப்பார்கள். ராமதாசின் நேற்றைய உருக்கமான பேச்சு அனைவருக்கும் வேதனை அளிக்கிறது. ராமதாசின் உருக்கமான பேச்சு வரும் தேர்தலில் வாக்காக மாறும். தேர்தல் கூட்டணி குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ராமதாஸ் கருத்து கேட்டுள்ளார். ராமதாஸ் அமைக்கும் கூட்டணிதான் வெற்றி கூட்டணி; அந்த கூட்டணிதான் ஆளுங்கட்சியாக ஆட்சியை பிடிக்கும்.

    என்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ராமதாசால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியால் பா.ம.க.வில் இருந்து யாரையும் நீக்க முடியாது. தற்போது வரை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை யாரிடமும் பேசவில்லை. பா.ம.க தனித்துப் போட்டி அல்ல. நிச்சயம் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திப்போம். கூட்டணியில் சேர 3 பக்கம் இருந்து ராமதாசுக்கு அழைப்பு வந்துள்ளது.

    அன்புமணியை நம்பவில்லை; பொதுநலத்துடன் செயல்படும் ராமதாசை தான் நம்புகிறார்கள். பா.ம.க.வின் செயற்குழுவை நடத்தக் கூடாது என சொல்ல அன்புமணிக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அன்புமணியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு அவரின் வளர்ச்சியையும் பாதிக்கும். ராமதாசை ஆதரிப்பவர்கள் மட்டும்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்; ஆட்சி அமைக்க முடியும். அன்புமணிக்கு பின்னால் சில நிர்வாகிகள்தான் உள்ளார்களே தவிர பா.ம.க.வின் உண்மை தொண்டர்களோ, பொதுமக்களோ கிடையாது. அன்புமணி பிரிந்து சென்ற பிறகு ராமதாசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. அன்புமணி உடன் உள்ள நிர்வாகிகள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×