என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய ஜனநாயக கூட்டணி"
- இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடாது என்பது தி.மு.க.வினுடைய ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
- ஆன்மிக சக்தியை எந்த ஒரு அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
கோவையில் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் கூட மாநில அரசு அந்த உத்தரவை நிறைவேற்றாமல் வேண்டுமென்றே எந்தவித முகாந்திரமும் இல்லாமல் அதை தடுத்து நிறுத்தினார்கள்.
சட்டம் ஒழுங்கு என்ற ஒரு பொய் காரணத்தை சொல்லி தீபத் திருநாள் அன்று தீபம் ஏற்றுவதை தடுத்தது இந்த தி.மு.க. அரசு.
தமிழகம் எப்போதும் தெய்வீக மண். இங்கு இருக்கக்கூடிய கோவில்கள், இறை தெய்வங்கள், கோவிலையொட்டி இருக்கக்கூடிய கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தான் தமிழர்களுடைய அடையாளம்.
தமிழ்நாடு என்றாலே ஒரு கோபுர சின்னத்தை வைத்தது நம் முன்னோர்கள். கோபுர சின்னம் கோவிலின் அடையாளம் என்பதை தாண்டி அது தமிழகத்தின் அடையாளமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட தமிழர்களுடைய அடையாளத்தை அழிக்கின்ற விதமாக திராவிட மாடல் தி.மு.க. அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஒன்று தான் திருப்பரங்குன்றத்தில நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாமல் போனதற்கு காரணம். நீதிமன்றத்தில் போய் வெட்கமில்லாமல் மன்னிப்பு கேட்டது தி.மு.க. அரசு. அவர்களுடைய நோக்கம் என்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும். இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடாது என்பது தி.மு.க.வினுடைய ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
ஆன்மிக சக்தியை எந்த ஒரு அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஊழல்வாதிகளை மிரட்டி தான் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளாரே?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய அமைச்சரவையில் உள்ள கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு எத்தனை மாதம் ஆகிறது. அதெல்லாம் ஊழலாக தெரியவில்லையா?
அமைச்சரவையில் ஊழல் அமைச்சர்களை வைத்துக்கொண்டு, ஊழல் வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கக்கூடிய அமைச்சர்களை வைத்துக்கொண்டு, ஊழல் குற்றச்சாட்டிற்காக ஒரு சிட்டிங் அமைச்சரை வீட்டுக்கு அனுப்பிய பெருமைக்குரியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.
தி.மு.க. கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி என்று விஜய் கூறியிருக்கிறாரே?
விஜய் எந்தவிதமாக புதுபுது வார்த்தைகள் வைத்து பேசினாலும் அல்ட்டிமேட்டா தி.மு.க.வை வீழ்த்தப்போவது தேசிய ஜனநாயக கூட்டணிதான். அதனால் மேடை ஏறலாம். வசனம் பேசலாம். கூட்டத்தை கூட கூட்டிக்காட்டலாம். ஆனால் வாக்குகள் விழுவது என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான். ஏனென்றால் அவர்களை வீழ்த்த முடிகின்ற சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.
- போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.
இந்த திருத்தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஜனாதிபதி வெங்கட்ராமன் சாமி தரிசனம் செய்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் வாசல் வழியாக சென்ற அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் காரில் இருந்தபடி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இதையொட்டி அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை முன்னிட்டு கோவில் வாசலில் இருந்து கருவறை வரையிலும் அதிகாரிகள் பார்வையிட்டு உள்ளனர். கருவறைக்கு முன்னதாக உள்ள மகாமண்டபத்தின் படிக்கட்டுகளில் பிரதமர் ஏறி கருவறைக்கு எளிதாக சென்று வர வசதியாக படிக்கட்டுகளை சீரமைப்பது குறித்தும் கோவில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இன்று போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் வரை கோவிலில் பிரதமர் தரிசனம் செய்துவிட்டு திரும்புவார் எனவும் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஓரிருநாளில் தெரிய வரும் என கூறப்படுகிறது.
- முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
மதுரை:
மார்ச் 1-ம் தேதி மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிலையில் பொது கூட்டத்தன்று அரசு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதனால் இரண்டு நிகழ்வுகளும் ஒரே இடத்தில் அமைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:-
அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான கூட்டமாக இருக்கும்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது பக்தர்கள் சார்பாக பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதை நிறைவேற்றும் விதமாக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நீதியரசர் சுவாமிநாதன் மீதும் தீர்ப்பு வழங்கியதற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தி.மு.க. ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் விதமாகவும் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் பக்தர்கள் அனைவரும் தங்களது வீட்டு வாசலில் விளக்கேற்றி 23-ம் தேதி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமருடைய வருகை தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பி விடும் என்றார். பொது கூட்டத்துக்கு முன்பாக மேலும் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக வலிமையான கூட்டணியாக உள்ளது.
எங்களுடைய கூட்டணியின் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி பல கட்சிகளுடன் பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
- புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது. இதை கடந்த 14-ந்தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது. ஒரு சில தொகுதிகளை மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுவைக்கு பிரதமர் வருகை, தொகுதி பங்கீடு குறித்து புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை இன்று திலாசுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். சுமார் 5 நிமிடங்கள்தான் இந்த சந்திப்பு நடந்தது.
இதன் பின்னர் சுரானா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின்போது, முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும். அதேநேரத்தில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கட்சி தலைமையிடம் தகவலை தெரிவிப்பதாக கூறிவிட்டு, நிர்மல் குமார் சுரானா வெளியேறியுள்ளார்.
புதுவையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த பகுதிகளில் ரங்கசாமியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்திலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் கால் பதிக்கும் என ரங்கசாமி கூறியிருந்தார். அந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.
இதனடிப்படையில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். ஏற்கனவே மாநிலத்துக்கு, மாநிலம் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் கூட்டணி அமைப்பார்கள்.
இதுபோல கடந்த 2001 சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
ஆனால் புதுவையில் அ.தி.மு.க., பா.ம.க.வுடன் தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் தனியாக போட்டியிட்டது.
அதுபோல தற்போது புதுவைக்கு ஒரு கூட்டணியும், தமிழகத்துக்கு தனி கூட்டணி என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
- அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
- அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.
ராயப்பேட்டை:
சென்னை ராயப்பேட்டையில் பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
* எ.வ.வேலு அமைச்சர் கிடையாது வியாபாரி. இன்னும் 2 மாதத்தில் 1, 2, 3 என சிறையில் கம்பி எண்ணப்போகிறார்.
* சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி உட்பட 47 தொகுதிகளை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கி உள்ளது தி.மு.க.
* தி.மு.க.வினர் கிராமங்கள் அளவில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பணத்தை கொண்டுபோய் பதுக்கி வைத்துள்ளனர்.
* பணத்தை மட்டுமே நம்பி தி.மு.க. இந்த சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.
* கேடு கெட்ட தி.மு.க. ஆட்சி குறித்து வீடு வீடாக சென்று கூறுங்கள்.
* இளைஞர்களால் எத்தனையோ பல புரட்சிகள் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற புரட்சி நடக்கும்.
* தேர்தலில் தி.மு.க. ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெல்லும்.
* அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
* அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.
* துணை பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு தி.மு.க. போலி வாக்குறுதி அளித்துள்ளது என்றார்.
- 2047-க்குள் நீர் வழி போக்குவரத்து சாத்தியக் கூறுகள் அனைத்தும் ஆராயப்படும்.
- பிரதமர் சென்னை வருகை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரும் பலம் அளித்துள்ளது.
புதுச்சேரி:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட் இப்போது தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு கூடுதலாக 10 சதவீத நிதி கோரியுள்ளனர். இதன் பின்னர் தான் மாநிலம், யூனியன் பிரதேசத்துக்கு நிதி ஒதுக்கப்படும். புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
புதுச்சேரியில் 800 ஏக்கரில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் 6 ஆயிரம் இளைஞர்கள் நேரடியாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார்.
2047-க்குள் நீர் வழி போக்குவரத்து சாத்தியக் கூறுகள் அனைத்தும் ஆராயப்படும். புதுச்சேரி, தமிழகம், ஒடிசா, ஆந்திரா, கேரளாவை இணைத்து சாலை, ரெயில் வளர்ச்சி, கிழக்கு கடற்கரை சாலை வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம். சென்னை, ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் 2047-க்குள் மிகப் பெரிய வளர்ச்சியடையும். வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கி செல்லும்போது அனைத்து மாநிலமும், அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வளர்ச்சியடைவர். அதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்ப்பட்டுள்ளது.
பிரதமர் சென்னை வருகை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரும் பலம் அளித்துள்ளது. மீண்டும் பிரதமர் தமிழகம், புதுச்சேரிக்கு வருவார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும். பல கட்சி களோடு பேசி வருகிறோம். தேர்தலுக்காக பட்ஜெட் தயாரிப்பவர்கள் பா.ஜ.க.வினர் அல்ல, நாட்டின் வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை, வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெறும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்ட ஒன்று, தி.மு.க. வீட்டுக்கு செல்லும் நாள் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. தி.மு.க. கூட்டணியில் இன்று வரை யார் உள்ளார்கள்? என்றே தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து கூட்டத்தையே நடத்தி விட்டோம். எங்கள் கூட்டணி, வலுவான கூட்டணி, ஆட்சி அமைக்கும் கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் உள்ளது.
- சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மதுரை:
மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் தென்மண்டல மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக உள்ளார்கள். தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் போது தி.மு.க. அரசு புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவது தொடர் கதையாகி வருகிறது. புதிய அறிவிப்புகளை வெளியிடுவது மக்களை முகம் சுழிக்கும் அளவில் தான் உள்ளது.
தமிழக மக்கள் மீண்டும் தி.மு.க.விடம் ஏமாற மாட்டார்கள் என்று நினைக்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் உள்ளது. விஜயின் த.வெ.க.வுக்கு கட்சிக்கு ஒவ்வொரு வரும் ஒவ்வொரு சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என சொல்லி வருகிறார்கள். யாரும் 10 சதவீதம் குறைவாக சொல்லவில்லை.
சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணியில் தலைமை வகிக்கும் கட்சி தான் எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். தேசிய அளவில் மோடி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜக, த.மா.க உள்ளிட்ட கட்சிகள் உள்ளது அவ்வளவு தான் வித்தியாசம் என்றார்.
- பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு
- தலைவராக முன்னாள் எம்பியும், மாநில துணைத் தலைவருமான துரைசாமி நியமனம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகளை இணைக்க குழு அமைத்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026-ஐ சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்த்திட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது." என தெரிவித்துள்ளார்.
இக்குழுவிற்கு தலைவராக முன்னாள் எம்பியும், மாநில துணைத் தலைவருமான துரைசாமியும், துணைத்தலைவராக முன்னாள் டிஜிபி பாலச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
- தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்பும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
மதுரை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அ.ம.முக., த.மா.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 23-ந்தேதி இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகர் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். இந்த கூட்டம் நடைபெற உள்ள இடத்தை மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்பும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
தி.மு.க. எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கவில்லை என்று கூறிவந்த நிலையில் தற்போது எய்ம்ஸ் கட்டிடம் எழுந்து நிற்கிறது. இதற்கு அடிக்கல் நாட்டிய இடத்திலேயே பிரதமர் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுகிறது என்றால் இந்த கூட்டம் பிப்ரவரி 28-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1-ந்தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
அன்றைய தினம் மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ளது
- உலகத் தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளி இடைநிற்றல் அளவு அதிகரித்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
"தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ளது, மத்திய கல்வித்துறை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2021–22 ஆம் ஆண்டிலிருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில் 0% ல் இருந்து 2.7% ஆகவும், நடுநிலை வகுப்புகளில் 0% ல் இருந்து 2.8% ஆகவும், உயர்நிலை வகுப்புகளில் 4.47% ல் இருந்து 8.5% ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் பணம் சம்பாதிக்க, அரசுப் பள்ளிகளில், வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் என, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை முழுமையாக சிதைத்ததே, இதற்கு முக்கியக் காரணம்.
உலகத் தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திமுக அரசு கொண்டு வந்த வினோத கல்விக் கொள்கை, ஒரு தோல்வியடைந்த கல்விக் கொள்கை என்பது நிரூபணமாகியிருக்கிறது.
ஏழை, எளிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சம் கூடக் கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக்கி, நடுத்தர குடும்பத்தினர் மீது, பெரும் கடன் சுமையைத் திணித்திருக்கிறது திமுக அரசு. வரும் தேர்தல் முடிந்த பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, அரசுப் பள்ளிகள் இழந்த பெருமையை நிச்சயம் மீட்டெடுக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இன்று திமுகவை விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார் ராமதாஸ்.
- அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது
தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து வருகின்றன. திமுக தனது நாடாளுமன்ற தேர்தலின்போது இணைந்த கூட்டணி கட்சிகளுடனேயே தேர்தலை சந்திக்கிறது. ஆனால் நடுநடுவே திமுக-காங்கிரஸ் மோதல் புகைந்துகொண்டே இருக்கிறது. இருப்பினும் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட்டணியில் உறுதியாக இருக்கிறார்கள்.
இதனிடையே ராமதாஸ் தரப்பு திமுகவில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்று திமுகவை விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார் ராமதாஸ். மேலும் பாமக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என திருமாவளவன் உறுதியாக உள்ளார். இதனால் ராமதாஸ் தரப்பு பாமக, திமுக கூட்டணியில் இடம்பெறாது என கூறப்படுகிறது.
மறுபுறம் பிரிந்த அதிமுக ஒண்றிணைந்து வருகிறது. ஓபிஎஸ் மட்டும் இன்னும் இணையவில்லை. இதனிடையே ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு மூன்றுமுறை அதிமுக முதலமைச்சராக இருந்தவர் எப்படி திமுகவிற்கு செல்வார், அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஓபிஎஸ் தே.ஜ.கூட்டணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது ஓபிஎஸ் கூட்டணியில் இருந்தால் எவ்வளவு பலமாக இருக்கும்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,
"இப்போது இருக்கும் கூட்டணியே பலமான கூட்டணிதான். மற்ற பலனும் நல்லப் பலன்தான். கூட்டணிகள் பலமாக வந்துசேர்கின்றன. நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். " என தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த யூகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள ஓபிஎஸ்,
"எனது ஒற்றை கோரிக்கை, வேண்டுகோள் என்னவென்றால், பிரிந்திருக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணையவேண்டும். இதன்மூலம் தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதுதான். மீண்டும் ஒன்றிணையவது பற்றி ஆண்டவன் கையிலேயே உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை. கூட்டணிக்கு என்னை யாரும் இதுவரையில் அழைக்கவுமில்லை" என தெரிவித்துள்ளார்.
ஆனால் இவை அனைத்திற்கும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்கிறார் இபிஎஸ். திமுகவை வீழ்த்த, டிடிவி தினகரனுடன் கைக்கோர்த்தது போல ஓபிஎஸ் உடனும் கைக்கோர்ப்பாரா? பாஜக ஓபிஎஸை இணைக்கக் கோரினால் இணைப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
- எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதாக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வந்துள்ளோம்.
- எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன்,
"தமிழ்நாட்டில் நடக்கும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அமமுக தே.ஜ.கூட்டணியில் இடம்பெற வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். இந்தக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதாக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வந்துள்ளோம். நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் வழிவந்தவர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டனர். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அ.ம.மு.க.வின் நலனுக்காகவும் பிரதமரின் அழைப்பை ஏற்று, மனதில் இருந்த எல்லா கோப, தாபங்களையும் விட்டுவிட்டு மீண்டும் அம்மா ஆட்சியை மலரசெய்ய இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம்.
ஒரு விஷயத்தை எதிர்ப்பது என்றால் அதிலும் உறுதி, ஆதரிப்பது என்றால் அதிலும் உறுதியாக இருக்கக்கூடிய தன்மையை ஜெயலலிதா எனக்கு கொடுத்திருக்கிறார். ஒரேக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்; பங்காளிகளாக இருந்தவர்கள். எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை. ஆனால் மக்களாட்சியை தமிழ்நாட்டில் நிறுவவேண்டும் என்பதற்காக நாங்கள் முழுமனதோடு இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடே இன்று கொலை, கொள்ளை நாடாக மாறிக் கிடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதைப்பொருள் புழக்கம். தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வருத்தத்தில் இருக்கும்போது மகனை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்தக் குடும்ப ஆட்சியை முழுமையாக முறியடிப்போம்" என தெரிவித்தார்.






