என் மலர்
புதுச்சேரி
- புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
- புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
புதுச்சேரி:
நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு திரளுவார்கள்.
அதுபோல் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை கொண்டாடப்படும் கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா துறை சார்பில் இசை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன. புதுச்சேரியில் உள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளை நோக்கி செல்கின்றனர்.
புதுச்சேரி நகர் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவ ரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
புதுச்சேரியில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க 50 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் சீருடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பணியில் ஈடுபடுவார்கள். மேலும் மதுகுடித்திருப்பதை கண்டறியும் கருவி (பிரீத் அனலைசர்) சோதனை மேற்கொள்வார்கள். இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்கக்கூடாது. அதிக வேகத்தில் செல்லக்கூடாது இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்யக்கூடாது அதிக இரைச்சல் எழுப்பக்கூடாது. இதனை இன்டர்செப்டர் வாகனம் மூலமாக கண்கா ணிக்கப்படும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள்.
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் நிரம்பி விட்டன.
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுப்பதால் நகர வீதிகள் எங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வலம் வருகிறார்கள். இதனால் புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
நாளை மறுநாள் நள்ளிரவு கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நித்யா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு, வருகிற 31-ந் தேதி இரவு கடற்கரை சாலை மற்றும் நகர மைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து ஒழுங்கு மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 31-ந் தேதி மதியம் 2 மணி முதல் ஜனவரி 1-ந் தேதி காலை 9 மணி வரை, ஒயிட் டவுன் பகுதியின் உள்ளே வாகனங் கள் செல்ல அனுமதியில்லை.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரி கடற்கரை நோக்கி வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை தற்காலிக வாகன நிறுத்து மிடங்களில் நிறுத்திவிட்டு, அங்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கட்டணமில்லா பேருந்து சேவைகளை பயன்படுத்தலாம்.
கடற்கரைக்கு செல்ல 30 தற்காலிக சிறப்பு கட்டணமில்லா பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் எளிதில் வழிகாணும் வகையில், சுமார் 400 போக்குவரத்து வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், முக்கிய சந்திப்புகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையை சேர்ந்த லூபின் நிறுவனம் அளித்த புகாரின்பேரில் ராஜா, விவேக் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- இவ்வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
போலி மருந்து குறித்து சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்து ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து கோர்ட் அனுமதியுடன் கம்பெனி, குடோன்கள், தலைமை அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.200 கோடிக்கு போலி மருந்துகள், பல கோடி சொத்துக்கள், தங்க, வைர நகைகள் சிக்கின.
இந்த நிலையில் இந்த வழக்கில் கவர்னர் உத்தரவின்பேரில், எஸ்.பி., நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர். உடன், வழக்கில் முன்ஜாமின் பெற்று தலை மறைவான ராஜா (எ) வள்ளியப்பன், விவேக் ஆகியோர் கடந்த 10-ந்தேதி கோர்ட்டில் சரணடைந்தனர்.
இருவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், 9 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த லூபின் நிறுவனம் அளித்த புகாரின்பேரில் ராஜா, விவேக் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் ஜெயிலில் அடைக்கப்பட்ட ராஜாவை, நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த 18-ந் தேதி முதல் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில் ராஜாவின் பங்குதாரரான என்.ஆர்.காங்., பிரமுகர் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். மேலும் ஜி.எஸ்.டி., செலுத்துவதில் மோசடி செய்ய உதவிய முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் ஜி.எஸ்.டி., அலுவலக கண்காணிப்பாளரை தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் பல மாநிலங்களை சேர்ந்தவர்களின் தொடர்பு உள்ளதால், வழக்கை சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை செய்து கவர்னர் உத்தரவிட்டார். இந்த நிலையில் ராஜாவின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அதனையொட்டி, சிறப்பு புலனாய்வு குழுவினர், ராஜாவை நேற்று மாலை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே, கவர்னர் உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து நேற்று மாலை உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இன்னும், ஓரிரு நாளில் இவ்வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் கோப்புகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
போலீஸ் காவலில் ராஜா அளித்த தகவலின் பேரில் போலி மருந்து தயாரிக்க உதவியது தொடர்பாக அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த ஜெகன் என்ற மருதமுத்து (வயது42) சொக்கலிங்கம், (43) ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதன்மூலம் இவ்வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சொக்கலிங்கம், திருபுவனைபாளையத்தில் உள்ள மருந்து கம்பெனியில் மெஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். ஜெகன் என்ற மருதமுத்து (42) வேன் டிரைவர் மருந்தை சென்னைக்கு எடுத்துச் சென்று வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வந்தார்.
- போலி மருந்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
- ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதயம், சர்க்கரை, ரத்தகொதிப்பு நோயாளிகள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை போலி மருந்து தொழிற்சாலை மூலம் தயாரித்து நாட்டில் உள்ள 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரபல நிறுவனம் அளித்த புகாரில் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேட்டுப்பாளையம், திருபுவனை பாளையம், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் இயங்கிய போலி மருந்து தொழிற்சாலைகள், 10-க்கும் மேற்பட்ட குடோன்களை சோதனை செய்தனர்.
தொழிற்சாலையில் உள்ள நவீன எந்திரங்கள், பல கோடி மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள், மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 13 இடங்களில் சீல் வைக்கப்பட்டன.
போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா என்ற வள்ளியப்பன், அவரது பங்குதாரர் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன், குடோன் பொறுப்பாளர் வெங்கட் உறுதுணையாக இருந்த ராணா, மெய்யப்பன் உட்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொழிற்சாலை அதிபர் ராஜாவின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 2 ½கோடி அளவிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே போலி மருந்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த புதன்கிழமை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ராஜா பல தகவல்களை தொடர்ந்து அளித்து வருகிறார். அதன்படி போலீசார் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதாலும் ரசாயான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது என்பதாலும், வெளிநாட்டு பண பரிவர்த்தனை காரணங்களால் வழக்கை சி.பி.ஐ., என்.ஐ.ஏ. விசாரணைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.
இந்த நிலையில் போலியாக நடத்தப்பட்ட தொழிற்சாலைக்கு ஜி.எஸ்.டி. வரி எப்படி செலுத்தப்பட்டது என்ற கேள்வியை அரசியல் கட்சியினர் எழுப்பினர்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு குழுவினர் கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவிடம் ஜி.எஸ்.டி.வரி செலுத்தியது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். ஜி.எஸ்.டி. வரியை செலுத்த புதுவை வனத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி தனக்கு உதவி செய்ததாக கூறினார்.
மேலும் சத்திய மூர்த்தியிடம் ரூ12 கோடி பணம் கொடுத்ததாகவும், ஐ.எப்.எஸ். அதிகாரி தனது அதிகாரிகள் தொடர்பின் மூலம் உதவியதாகவும் ராஜா தெரிவித்தார். இதனிடையே அந்த அதிகாரி தலைமறைவானார்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஓசூரில் பதுங்கியிருந்த சத்தியமூர்த்தியை நேற்று இரவு கைது செய்தனர் அவரை இரவோடு இரவாக புதுச்சேரி கொண்டு வந்து விஜிலென்ஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் தனக்கு நெருக்கமாக இருந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் பெயரை சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இதனையடுத்து புதுவை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் பணிபுரியும் சூப்பிரண்டு பரிதாவிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஜி.எஸ்.டி அதிகாரியை கைது செய்ய மத்திய அரசிடம் முன் அனுமதி பெறும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர். விரைவில் ஜி.எஸ்.டி. அதிகாரிகளும் இந்த வழக்கில் கைதாவார்கள் என தெரிகிறது.
- நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.
- புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
பா.ஜனதாவின் புதிய தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். அவருக்கு புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் பாரதியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அக்கார்டு ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
பா.ஜ.க-வினர் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக ஓயாமல் உழைத்து வருவது மிகப்பெரிய பலம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் பா.ஜ.க வலிமையான வளர்ச்சியடைந்து வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து உற்சாகத்துடன் செயல்பட்டு தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதற்காக சக்தி கேந்திர நிர்வாகிகள், பூத் தலைவர்கள் களத்தில் இறங்கி வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் ஒரு லட்சம் புதிய இளைஞர்களை அடையாளம் கண்டு, நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி வரை தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பிரதமர் அறிவித் துள்ள திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி.மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முதலியார் பேட்டை 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜ.க வல்லுனர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் பா. ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின்நபின் கலந்து கொண்டு பேசினார்.
நேற்று இரவு புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் தங்கிய பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்தார். அதனை தொடர்ந்து பா.ஜ.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் மணவெளி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தொடர்ந்து கணபதி செட்டிகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் அவருடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட வியாவும் பங்கேற்றார்.
- புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.
- தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
புதுச்சேரி:
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாளில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்ட நிலையில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்கவில்லை.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து புதுச்சேரியில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் மற்றும் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.
தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாதிரி தீபத் தூணில் தொழிலதிபர் குணசேகரன் தீபத்தை ஏற்றினார். திருக்கனூர் அருகேயுள்ள திருமங்கலம் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி பா.ஜனதா தலைவர் வி.பி.ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தீப்பாய்ந்தான், இந்து முன்னணி தலைவர் சனில்குமார் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள், முருகபக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
- வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
- காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார்.
புதுச்சேரியில் 16,171 வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 45,312 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், 22,077 வாக்காளர்கள் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாதவர்களாகவும், 1627 வாக்காளர்கள் ஏற்கனவே வேறு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களாகவும் மற்றும் 344 வாக்காளர்கள் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. மொத்தம் 85,531 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 17,936 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 1,03,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
- புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின்
- லட்சிய ஜனநாயக கட்சி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.
தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகம் செய்தார்
நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள், நெற்கதிருடன் LJK என பதிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது
கட்சியின் கொடிக்கு மும்மத பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின். இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வந்தார்.
இதனால் பாஜக சார்பில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.
தற்போது புதிய கட்சியை தொடங்கியுள்ள சார்லஸ் மார்ட்டின், அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
- ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மின் கட்டணத்தை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது.
இதற்காக ஆண்டுதோறும் புதுச்சேரி மின்துறை வருவாய், செலவினங்களை ஆணையத்திடம் சமர்பிக்கும். வரவு, செலவு அடிப்படையில் உத்தேச மின் கட்டண உயர்வு பட்டியலையும் ஆணையத்திடம் சமர்பிக்கும்.
இதில் வீட்டு உபயோகம், பொது சேவை, வணிகம், ஓட்டல் மற்றும் பண்ணை வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு உத்தேச கட்டணம் நிர்ணயித்து சமர்பிக்கும். இதையடுத்து ஆணையம், மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி மின் கட்டண உயர்வை நிர்ணயம் செய்யும்.
பெரும்பாலும் புதுச்சேரி அரசின் மின்துறை நிர்ணயிக்கும் கட்டணத்தையே ஆணையம் ஏற்று அதற்கான அனுமதியை வழங்கும்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அரசே மின் கட்டண உயர்வை ஏற்கும் என அறிவித்தது. இதன்படி ரூ.35 கோடி மின்துறைக்கு அரசு மானியமாக வழங்குகிறது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டது. ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து இந்த மின் கட்டண உயர்வையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது. இதற்கான கோப்பு ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் மின்துறைக்கு அரசு ரூ.10 கோடி வழங்கும். நுகர்வோருக்கு கட்டணம் உயராது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2025-2030 வரை 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசின் மின்துறை இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
இதன்படி நடப்பு ஆண்டில் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.90, 101 முதல் 200 வரை ரூ.4.20, 201 முதல் 300 வரை ரூ.6.20, 301 முதல் 400 வரை ரூ.7.70, 400க்கு மேல் ரூ.7.90 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இந்த கட்டணம் 1.10.2025 முதல் முன்தேதியிட்டு வசூலிக்கப்பட உள்ளது. வழக்கமாக மின் கட்டணம் முதல் 100 யூனிட், 101 முதல் 200, 201 முதல் 300, 300க்கு மேல் என கட்டணம் நிர்ணயிக்கப்படும். தற்போது புதிதாக 301 முதல் 400, 400-க்கு மேல் என புதிய சிலாப்பும் உருவாக்கப் பட்டுள்ளது.
இதன்படி குறைந்தபட்சமாக ஒரு யூனிட்டுக்கு 20 பைசா மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் வழங்குமா? என இனிமேல்தான் தெரியவரும்.
- சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.
- 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.
டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 2021, 2022, 2023 & 2024 ஆம் ஆண்டுகளுக்கான 30வது ஆண்டு பட்டமளிப்பு விழா, டிசம்பர் 29, 2025 திங்கட்கிழமை அன்று, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.
இந்திய துணைக் குடியரசுத் தலைவரும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும், 2500 பேர் அமரக்கூடிய சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.
இந்த 30வது பட்டமளிப்பு விழாவில், 746 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படும். 2021 ஆம் ஆண்டு முதல் முதலிடம் பிடித்த 191 பேருக்கும், 2022 ஆம் ஆண்டு முதல் 191 பேருக்கும், 2023 ஆம் ஆண்டு முதல் 192 பேருக்கும், 2024 ஆம் ஆண்டு முதல் 186 பேருக்கும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் பட்டம் மற்றும் தங்கப் பதக்கங்கள் நேரில் வழங்கப்படும். மொத்தம், 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று விஜய் குற்றம்சாட்டினார்.
- த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியதை முதலமைச்சர் ரங்கசாமி செல்போனில் நேரலையில் பார்த்து ரசித்து கேட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் மத்திய பா.ஜ.க. அரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனாலும் என்.ஆர்.காங்கிரசையோ, முதலமைச்சர் ரங்கசாமியையோ, த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம் செய்யவில்லை. அதற்கு மாறாக முதலமைச்சர் ரங்கசாமியை புகழ்ந்து பேசினார்.
அவர் பேசும்போது, வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு எழுச்சியாக வரும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் காட்டாமல் புதுச்சேரி அரசு நடந்து கொள்கிறது. இந்த புதுச்சேரி அரசுக்கும், முதலமைச்சருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்ததற்காக அவருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
அதேநேரத்தில் பா.ஜ.க.வை விஜய் விமர்சனம் செய்தார். மத்திய பா.ஜ.க. அரசு மாநில அந்தஸ்து தரவில்லை, மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்கவில்லை, புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் வெளியேறும் என்ற பேச்சு உள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் ஏற்கனவே நட்புணர்வு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றதும் சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து ரங்கசாமி பேசினார். நேற்று நடந்த த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியதை முதலமைச்சர் ரங்கசாமி செல்போனில் நேரலையில் பார்த்து ரசித்து கேட்டார்.
இதனால் ரங்கசாமி வருகிற சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியை விஜய் விமர்சிக்காதது இதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. இதனை அரசியல் நோக்கர்கள் என்.ஆர்.காங்கிரஸ், த.வெ.க. கூட்டணிக்கு அச்சாரமாக கருதுகின்றனர்.
- தவறான கருத்துகளை விஜய் மக்களிடத்தில் சொல்லியிருக்கிறார்.
- ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு புதுச்சேரி வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி விஜய் பேசினார்.
இதுகுறித்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜயை பொறுத்தவரை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பது தெரியாமல் பேசியுள்ளார். அவருக்கு சொல்லி கொடுத்தவர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லை என்று தான் நான் நினைக்கிறேன்.
தவறான கருத்துகளை விஜய் மக்களிடத்தில் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் அவரால் பேச முடியவில்லை. பேசவும் அவருக்கு வாய்ப்பில்லை. அதனால் புதுச்சேரியில் எதையாவது பேச வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். அவர் பேசியது கூட 12 நிமிடங்கள் தான். ஏதேனும் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக சில குறைகளை பேசிவிட்டு சென்றுள்ளார். அவர் பேசியதில் 90 சதவீதம் உண்மை இல்லை.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரிசி போடாமல் இருந்தது. அரிசிக்கு பதிலாக பணமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தேர்தலின்போது மக்கள் பணமாக வேண்டாம். அரிசியாக போடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நேரடி பணப் பரிமாற்றத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று சொல்லி மத்திய அரசின் ஒப்புதலோடு இலவச அரிசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இது தெரியாமல் விஜய் பேசியிருக்கிறார்.
தேர்தல் என்று வரும்போது நிறைய கூட்டணிகள் பேசுவார்கள். எந்த நேரத்தில் யாருடன் எந்த கட்சி செல்லும் என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும். இன்று எதைவேண்டுமானாலும் அனுமானமாக பேசலாம். ஆனால் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவாகும்.
புதுச்சேரி மக்கள் அரசியலை நன்கு அறிந்தவர்கள். இந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் திட்டங்கள் குறைவின்றி நடைபெறும் என்பது புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும்.
அதனால் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்வது வழக்கம். அந்த அடிப்படையில் விஜயும் சொல்லி சென்றுள்ளார். 2026-ல் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு அவரால் எங்கும் கூட்டம் நடத்த முடியவில்லை. காஞ்சிபுரத்தில் கூட உள்ளரங்கத்தில் 2 ஆயிரம் பேரைக் கொண்டு ஒரு கூட்டம் நடத்தினார்.
புதுச்சேரியில் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்ததால் விஜய் முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






