search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry"

    • பள்ளியின் இ-மெயிலுக்கு மர்ம மெயில் ஒன்று வந்தது.
    • புதுவையில் இருந்து வெடிகுண்டு செயலழப்பு நிபுணர்களும் வந்தனர்.

    பாகூர்:

    புதுச்சேரி எல்லைப்பகுதியான முள்ளோடையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்தநிலையில் பள்ளியின் இ-மெயிலுக்கு மர்ம மெயில் ஒன்று வந்தது. அதில் நீதிமன்றத்தால் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும், இல்லை யென்றால் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மெயில் காலையில் வந்திருந்த நிலையில், மாலை 5 மணிக்கே பார்க்கப்பட்டது.

    இது குறித்து உடனடியாக கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சஜித், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் தகவல் தெரிவித்து புதுவையில் இருந்து வெடிகுண்டு செயலழப்பு நிபுணர்களும் வந்தனர்.

    அவர்கள் பள்ளியில் வெடி குண்டு ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியு டன் சோதனை செய்தனர். பள்ளி வளாகம், வகுப்பறை, விளையாட்டு மைதானம், ஆசிரியர்கள் ஓய்வறை என அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை. வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்பது சோதனையின் முடி வில் தெரியவந்தது.

    பள்ளிக்கு வந்த இ-மெயில் முகவரியை வைத்து, மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • காரின் ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்தபோதும் அந்த காவலர்கள் தேவையற்ற சில ஆவணங்களை கேட்டுள்ளனர்.
    • இந்த சம்பவத்தை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து டி.ஐ.ஜி. சத்தியசுந்தரத்திற்கு அனுப்பியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம். இவரது நண்பர்கள் சிலர் புதுவை கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். இவர்கள் காரில் புதுவையை சுற்றி பார்த்து விட்டு ரிசார்டுக்கு திரும்பினர்.

    அப்போது கிருமாம்பாக்கம் போலீசார் அவர்களின் காரை மடக்கி விசாரித்துள்ளனர். இதில் காரின் ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்தபோதும் அந்த காவலர்கள் தேவையற்ற சில ஆவணங்களை கேட்டுள்ளனர்.

    அதோடு வலுக்கட்டாயமாக அபராதம் கொடுக்க வேண்டும் எனக்கூறி தகராறு செய்து அத்துமீறியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து டி.ஐ.ஜி. சத்தியசுந்தரத்திற்கு அனுப்பியுள்ளனர்.

    இதனையடுத்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய ஏட்டுகள் ஞானமூர்த்தி, திவித்ரசன், நவீன் காந்த் மற்றும் போலீஸ்காரர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் அதிரடியாக ஆயுத படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி. சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.

    • 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டதாக புகார்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை மத்திய கோட்ட சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன் பொது இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நெல்லித்தோப்பு சிக்னல் சந்திப்பு, திருவள்ளுவர் சாலை நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக கொசப்பாளையம் சிலம்பரசன் ரசிகர் மன்றம் சார்பில், பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    ரசிகர் மன்ற நிர்வாகிகள் பசுபதி, அசோக் ராஜா, மற்றும் பாபு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2-ந் தேதி நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க வரும் வி.ஐ.பி.க்கள், அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்று 60-க்கும் மேற்பட்ட பேனர்கள் சாலை முழுதும் வைக்கப்பட்டிருந்தன.

    இதைக்கண்ட பொதுப்பணித்துறை மத்திய கோட்ட சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன், பேனர் வைத்தவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் பேனர் வைத்த மர்ம நபர்கள் மீது புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்கெடுத்தல் பிரிவின் கீழ் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிகழ்வு தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
    • கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சமீப காலமாக உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிகழ்வு தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரியில் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல் செயல்கள் நடந்து வருகிறது.

    எனவே மாணவிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் எம்.பி.பி.எஸ். பயிற்சி மருத்துவ மாணவிகள் 2 பேருக்கு முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். அதன் பேரில், கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதுநிலை மருத்துவ மாணவரை 6 மாதம் சஸ்பெண்டு செய்துள்ளது.

    இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு செயலர் சுந்தரேசனுக்கு சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர்நலம், பொருளாதாரம், புள்ளியியல்துறை, இளைஞர் நலம் விளையாட்டுத்துறை, பாண்கேர் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • சோமசேகர அப்பாராவ் காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகருக்கு தொழில் வளர்ச்சி, வனம், வனத்துறை, கல்வி, அறிவியல் தொழில் நுட்பத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

    அரசு செயலர் முத்தம்மாவுக்கு, திட்டம் மற்றும் ஆராய்ச்சி, போக்குவரத்து, மின்சாரம், குடிமைப்பொருள் வழங்கல்துறை, பொதுப்பணி, தகவல் தொழில்நுட்பம், ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

    காரைக்கால் கலெக்டர் மணிகண்டன், புதுச்சேரி கவர்னரின் செயலராகவும், கூடுதலாக சுற்றுலா, மீன்வளத்துறை செயலராகவும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அரசு செயலர் சுந்தரேசனுக்கு சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர்நலம், பொருளாதாரம், புள்ளியியல்துறை, இளைஞர் நலம் விளையாட்டுத்துறை, பாண்கேர் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அரசு செயலர் ஜெயந்த்குமார் ரேவுக்கு சுகாதாரத்துறை, குடும்பநலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அரசு செயலர் நெடுஞ்செழியனுக்கு வேளாண், கால்நடைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வக்புவாரியம், கலை, பண்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு செயலர் கேசவனுக்கு பொது நிர்வாகம், நகர அமைப்பு குழுமம், வீட்டு வசதி, உள்ளாட்சி, தீயணைப்பு, செய்தி விளம்பரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன், நகர மேம்பாடு, டி.ஆர்.டி.ஏ., வருவாய் சிறப்பு செயலர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார். சோமசேகர அப்பாராவ் காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவை கவர்னர் உத்தரவின்படி தலைமை செயலர் சரத்சவுகான் பிறப்பித்துள்ளார்.

    • புதுச்சேரியை மையமாக வைத்து படம் தயாரிக்கும் பார்த்திபன்.
    • ‘54-ம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்பதுதான் புதிய படத்தின் தலைப்பு.

    சினிமா நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் புதுச்சேரி பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமி நாராயணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் சுமார் 15 நிமிடம் தனியாக பேசினார்கள்.

    புதுச்சேரியை மையமாக வைத்து நான் ஒரு படம் தயாரிக்கிறேன். அதற்கு அரசின் உதவியை கேட்பதற்காக அமைச்சரை சந்தித்தேன். அவரும் முடிந்த அளவு உதவுவதாக தெரிவித்தார்.

    வழக்கமாக திரைப்படங்களின் ஒரு சில காட்சிகள் புதுச்சேரியில் எடுக்கப்படும். ஆனால் இந்த படத்தில் 99 சதவீத காட்சிகள் இங்கு எடுக்கப்பட உள்ளது.

    '54-ம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்பதுதான் புதிய படத்தின் தலைப்பு. படத்தில் நான் தான் கதாநாயகன். இது முழுக்க முழுக்க ஒரு காதல் கதை. படங்களுக்கு புதிய பெயர் வைக்காமல் பழைய பெயர் வைக்கும்போது எதிர்ப்புகள் வருகிறது. குறிப்பாக 'பராசக்தி' படம் என்றால் அது கலைஞர்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அப்போது விஜய்யின் அரசியல் பிரவேசம், பெரியார் குறித்த சீமானின் விமர்சனங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பார்த்திபன் கூறியதாவது:-

    புதிதாக அரசியலுக்கு வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் தப்பு கிடையாது.

    விஜய் அவரது வேகத்தில் செல்லட்டும். அரசியலில் பெரிய இடத்துக்கு செல்ல தடை இல்லாமல் இருக்காது. ஆட்சியை பிடிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

    அதனால் தடைகளை தாண்டி செல்வதுதான் உண்மையான தலைவருக்கு அழகு. அதுபோல் விஜய்யும் தடையை தாண்டி செல்ல வேண்டும். ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தால்தான் அடுத்த இடத்துக்குவர முடியும்.

    எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் அதைத்தான் செய்தார்கள். அதை விடுத்து பாராட்டிக்கொண்டு இருந்தால் தலைவராக வரமுடியாது. இதனால் நான் விஜய்க்கு ஆதரவாக செல்கிறேன் என்று அர்த்தமல்ல.

    பெரியார் என்பது நமது பாரம்பரியத்தில் சமூகத்தில் நீக்கமுடியாத விஷயம். அதில் எதிர் கருத்து சொல்வதற்கு பின்னால் வேறு ஏதாவது அரசியல் இருக்கலாம். அது நமக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
    • வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனுார் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் 150 பவுன் நகை, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க கடிகாரம், ரூ.1.30 லட்சம் செல்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சீர் வரிசையாக வழங்கினர்.

    இந்நிலையில் திருமணம் முடிந்த சில வாரத்திலேயே சீர்வரிசையாக அணிந்து வந்த நகைகளை மாமியார் பெற்று கொண்டார். மேலும் சில மாதங்களில் பெண்ணிடம் கூடுதலாக 50 பவுன் நகை வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்தார்.

    அதோடு பெண்ணின் பெற்றோர் வீட்டு சொத்தை தனது பெயரில் எழுதித் தர வேண்டும் என அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.

    இதற்கு மறுத்த அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டில் வளர்த்து வரும் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் காங்கோ சாம்பல் பறவையை கொத்த வைத்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    தொடர்ந்து இதுபோன்ற கொடுமை செய்து வந்ததால் அந்த பெண் புதுச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வரதட்சணை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 4 ஆண்டுகளாக மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்.
    • டேலண்ட்னா வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார்பேட்டை நைனார் மண்டபத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் புஷ் (வயது.29). வரி ஆலோசகராக உள்ளார்.

    இவர் கடந்த 6 ஆண்டுகளாக கரலாக்கட்டையை சுற்றும் பயிற்சியை செய்து வருகிறார். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்.

    இந்த நிலையில் பாரம்பரிய கரலாக்கட்டை உடற்பயிற்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த விரும்பினார். இதற்காக இவர் 24 மணி நேரம் கரலாக்கட்டை சுற்றும் சாதனையில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இந்த சாதனை நிகழ்வு நடந்தது. இதில் 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 128 முறை கரலாக்கட்டையை ஜார்ஜ் புஷ் சுற்றினார். இதனை டேலண்ட்னா வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

    • பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் கன்னியம்மாளை சங்கர் கொலை செய்தது உறுதியானது.
    • சங்கருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது28) . ரவுடியான இவர் மீது கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இவரும் அதே பகுதியை சேர்ந்தவர் விநாயகவேலன் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இடையில் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    கடந்த 14.03.2016 ஆண்டு விநாயகவேலனை கொலை செய்யும் நோக்கில் சங்கர் கையில் கத்தியுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டில் விநாயகவேலன் இல்லை. அவரது சகோதரி முத்து லட்சுமி மற்றும் பாட்டி கன்னியம்மாள் (86) ஆகியோர் மட்டும் இருந்தனர். அவர்கள் சங்கரை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்தனர்.

    இதில் ஆத்திரமடைந்த சங்கர் முத்துலட்சுமியை மார்பிலும், கன்னியம்மாளை முதுகிலும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு சங்கர் தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த இருவரும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கன்னியம்மாள் இறந்து போனார்.

    இது குறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

    பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் கன்னியம்மாளை சங்கர் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து சங்கருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விநாயகம் ஆஜராகி வாதாடினார்.

    • புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
    • வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு சென்சார் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.

    ஏற்கனவே புதுச்சேரியில் சாலைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியில் நாள்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிப்பால் வாகன ஓட்டிகள் அல்லாடி வருகின்றனர்.

    இதையடுத்து புதுச்சேரி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கேமராக்கள் மூலம் கண்டறிந்து ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக நகரின் முக்கிய இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சுமார் 450 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    அரியாங்குப்பம், வில்லியனூர், மேட்டுப்பாளையம், கோரிமேடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதியில் வாகனங்கள் வரும் பகுதிகளை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    இதற்கான கட்டுப்பாட்டு மையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இங்கிருந்தபடியே ஊழியர்கள் கண்காணித்து, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன எண்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதேபோல் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களை கண்டறிந்து, உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதுமட்டுமல்லாது மழையின்போது புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்கும் முயற்சியாக மழைக்காலங்களில் முன்கூட்டியே வெள்ள அளவை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சாலைகள், கழிவு நீர் வாய்க்கால்களை கண்காணிக்கவும் கேமரா பொருத்தப்படுகிறது. அதாவது, வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு சென்சார் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.

    அதன்மூலம் மழை வெள்ளம் அதிகரிக்கும்போது தாழ்வான பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றுவது, மின்சாரத்தை துண்டிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    • தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
    • ரவிக்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தர்மாபுரி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜாமுகமது, (வயது 49). இவர், நடேசன் நகர், 2-வது குறுக்கு தெருவில், குளிசாதன பெட்டி சர்வீஸ் மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 5-ந் தேதி வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். 6-ந் தேதி கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    கடையின் உள்ளே உள்ள மேசை டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.19 ஆயிரம் மற்றும் கை கடிகாரம் திருடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, மேஜை டிராயரை திறந்து பணம் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாாணை நடத்தினர்.

    விசாரணயில் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் கைகடிகாரத்தை திருடியவர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஓகை கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் என்ற ஓகை குமார் (வயது 68) என தெரியவந்தது.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுவையில் இதுபோன்று 15-க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து நகை-பணம் திருடியவர் என்பதும் அதோடு கோவில் உண்டியலை உடைத்தும், வீடு புகுந்தும் திருடிய வழக்குகள் உள்ளது.

    இதுதவிர தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து ரவிக்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம்.
    • நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் பழைய பொருட்களை பொதுமக்கள் தீயிட்டு எரித்து, அகற்றுவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில வருடங்களாக, போகியன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதால் நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது.

    எனவே, போகி அன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக், தெர்மோகோல், செயற்கை இழைத்துணி போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தச் சூழலில், புதுச்சேரியில் 2024-ம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு போகி பண்டிகையன்று காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம். காலப்போக்கில் இத்தகைய பொருட்களுடன் வீட்டில் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்ற பொருட்களை எரிக்க தொடங்கினர்.

    இதனால் காற்றில் மாசுக்களின் அளவு அதிகரித்தது புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், இத்தகைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியது. இந்தச் சூழலில் புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், அண்ணா நகர் மற்றும் காரைக்காலில் ஒரு இடத்திலும் போகி அன்று காற்றின் மாசு 24 மணி நேரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் மிதவை துகள்களின் அளவு 54 மைக்ரோ கிராம், கந்தக ஆக்ஸைடுகளின் அளவு 10.4 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.

    2024-ம் ஆண்டில் மிதவை துகள்களின் அளவு 138 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 23.6 மைக்ரோ கிராம் என பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    போகி அன்று ஏற்பட்ட சிறு மழை தூறலும், மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் இந்த ஆண்டில் காற்றின் மாசு அளவு குறைய காரணமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×