வருகிற 11-ந்தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி

அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. புதுச்சேரி வரும் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
வருகிற 11-ந்தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க தற்போதே காய் நகர்த்தி வருகிறது. இதற்காக மத்திய மந்திரிகள் அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து பேசுகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் தேர்தலை முன்வைத்து கடந்த பொங்கல் பண்டிகையின்போது அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும், ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளுடன் தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதே போல் குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் முதியோர், உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரதமர் மோடியும் புதுச்சேரிக்கு வருவதாக உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரி வரும் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com