என் மலர்
- குறைந்தது 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யாத அவலம்.
- ஆமை வேகத்தில் மாட வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, கடந்த 50 மாதகால தி.மு.க. அரசு, மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
திருவண்ணாமலை மாநகரில் அறநிலையத்துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகளின் அலட்சியத்தாலும், ஆமைவேகப் பணிகளினாலும் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திண்டாடுகின்றனர். அந்த வகையில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், திருவண்ணாமலையில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால், பக்தர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முறையான வழிமுறைகளைக் கையாளாததால், அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு நாள்தோறும் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பலமணி நேரம் காத்துக்கிடக்கும் அவலம்.
குறைந்தது 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யாத அவலம்.
தமிழ்நாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதேபோல், முறையான பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தால் அடாவடி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
ஆமை வேகத்தில் மாட வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்.
மாட வீதிக்கு வாகனங்கள் வரத் தடை இருக்கின்ற காரணத்தால் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு.
மோசமான சாலைகள், சாலைகளில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதிக்குள்ளாகும் அவலம்.
மாநகராட்சி கடைகளுக்கு பல மடங்காக வாடகை உயர்வு.
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களில் எந்தஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அதனை மாநகராட்சியுடன் இணைத்து ஏழை, எளிய மக்களிடமிருந்து கூடுதல் வரிகளை மட்டுமே வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு.
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் மெத்தனப்போக்கோடு இருந்து வரும், தி.மு.க.வின் ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத அறநிலையத் துறையைக் கண்டித்தும், திருவண்ணாமலை மாநகராட்சியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், ஆமை வேகத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் அரசுத் துறையினரைக் கண்டித்தும், அரசுத் துறைகளின் நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க.வின் ஸ்டாலின் அரசை கண்டித்தும்; பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 16-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், திருவண்ணாமலை மாநகராட்சி அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் வீரமணி தலைமையிலும்; ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி, பேரூராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தராத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நம்முடைய ஆன்மீகத்தை விரிவாக பார்க்கக் கூடிய மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது.
- கோவிலை சார்ந்த ஆட்சியாகத்தான் அமையும்.
கோவை:
கோவை சூலூர் அருகே உள்ள காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடத்தில் நடந்த குருபவுர்ணமி விழாவில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
ஜூலை-ஆகஸ்டு மாதத்தில் வரக்கூடிய குருபவுர்ணமி அன்று வட இந்தியாவில் இரவு குறைவாகவும், பகல் அதிகமாகவும் இருக்கும். இயற்கையாகவே இந்த குருபவுர்ணமி ஒரு விசேஷமான நாள்தான். இந்த நாளுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் நடக்கும்.
எனவே இந்த நாளில் குருவிடம் அருளாசி பெறும்போது இன்னும் நல்ல மனிதர்களாக, நம்முடைய ஆன்மீகத்தை விரிவாக பார்க்கக் கூடிய மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது.
மிக மிக குறைவாக மூச்சு விடுகின்ற ஆமைக்கு ஆயுள் அதிகம். பிராண ரகசியத்தை யார் உணர்ந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஆயுள் அதிகம் என்பதை மிகத்தெளிவாக, ஆமை போன்ற ஜீவராசிகளை பார்க்கும்போது நமக்கு தெரியும்.
இந்நாட்டில் ராஜா, முதலமைச்சர் என யாராக இருந்தாலும் சன்னியாசிகள் முன் என்று தரையில் அமர ஆரம்பிக்கிறார்களோ, அன்று தான் உண்மையான ஆன்மீக ஆட்சி வந்து விட்டது எனலாம்.
தமிழகத்தில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் இருக்கும். கோவிலை சார்ந்த ஆட்சியாகத்தான் அமையும். இது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் சனாதன தர்மம் காக்க சன்னியாசிகள் உடன் பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெடுஞ்சாலையில் ரீல் செய்யும்போது உரிமம் பெற்ற ஆயுதத்தை காண்பிப்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம்.
- வீடியோவில் உள்ள அந்த பெண் இயக்கும் ஷாலினி பாண்டே என்பது தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு பெண் நெடுஞ்சாலையின் நடுவில் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக கான்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் பாடலுக்கு அந்த பெண் நடனமாடி உள்ளார்.
பொது இடத்தில் ஆயுதத்தை காட்டி நடனமாடும் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தன.
இதுதொடர்பாக எக்ஸ் தள பயனர் ஒருவர், நெடுஞ்சாலையில் ரீல் செய்யும்போது உரிமம் பெற்ற ஆயுதத்தை காண்பிப்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம் என்றும் தயவுசெய்து உடனடியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவுடன் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டேக் செய்துள்ளார்.
ஒரு பயனர், அந்த நபர்களது துப்பாக்கிக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்எஸ்பி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இதற்கு பதிலளித்த கன்னாஜ் காவல்துறை, இந்த விஷயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் கான்பூர் நகரில் வசிப்பவர் என்றும், அவர் கான்பூர் நகர் மாவட்டப் பகுதிக்குள் இந்த வீடியோவை எடுத்து இருப்பதாகவும் இது தொடர்பாக கான்பூர் நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த பெண் இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்கும் ஷாலினி பாண்டே என்றும், அவருக்கு 60,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது கணக்கில் 2,550க்கும் மேற்பட்ட முறை பதிவிட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, "லக்னோ ராணி" என்று அழைக்கப்படும் சமூக ஊடகத்தில் பிரபலமான சிம்ரன் யாதவ், லக்னோவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவிற்காக துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ மூலம் வைரலானார். வைரலான அந்த வீடியோவில், அவர் துப்பாக்கியை அசைத்துக்கொண்டே போஜ்புரி பாடலுக்கு நடனமாடுவது காட்டப்பட்டது. லக்னோ காவல்துறை இந்த வீடியோவை கவனித்து, தேவையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- பா.ம.க. மகளிர் மாநாட்டு பணிகளை ராமதாஸ் ஆய்வு செய்தார்.
- கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதில் தவறில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நடைபெறும் பா.ம.க. மகளிர் மாநாட்டு பணிகளை ராமதாஸ் ஆய்வு செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த அணி சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதில் தவறில்லை என்றார்.
இதனிடையே, அன்புமணி அப்பா பிள்ளையா? அம்மா பிள்ளையா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இரண்டும் என ராமதாஸ் பதில் அளித்தார்.
- மலையாளத்தில் மைனே பியார் கியா படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை அறிமுக இயக்குநரான ஃபைசல் இயக்கியுள்ளார்.
கவின் நடித்த ஸ்டார் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிந்தார் நடிகை ப்ரீத்தி முகுந்தன். அதைத்தொடர்ந்து இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் வெளியான `ஆச கூட' வீடியோ பாடலில் நடித்து இருந்தார். இதன் மூலம் மிகப்பெரிய வைரலானார்.
தற்பொழுது பான் இந்தியன் திரைப்படமாக உருவாகி வெளியான கண்ணப்பா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து நடிகை ப்ரீத்தி முகுந்தன் மலையாள சினிமாவில் களம் இறங்கியுள்ளார். மலையாளத்தில் மைனே பியார் கியா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான ஃபைசல் இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக ஹ்ரிது ஹருன் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் முரா, All We Imagine As Light போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களுடன் அஸ்கர் அலி, மிதுன், ஜெகதிஷ், முஸ்தஃபா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஜியொ பேபி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
- தேசத்தை கட்டி எழுப்ப தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி.
- மோரோபந்த் பிங்லி தேச சேவையில் அர்ப்பணிப்புடன் இருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கலந்து கொண்டார்.
அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் மோரோபந்த் பிங்லி குறித்த புத்தகத்தை வெளியீட்டு மோகன்பகவத் பேசியதாவது:-
தேசத்தை கட்டி எழுப்ப தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி. அவசர நிலைக்கு பிந்தைய அரசியல் குழப்பத்தின் போது முடிவுகளை சரியாக கணித்தவர். அவரது இயல்பு மிகவும் நகைச்சுவையானது. மோரோபந்த் பிங்லி தேச சேவையில் அர்ப்பணிப்புடன் இருந்தார்.
தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சு விவாதங்களுக்கு களம் அமைத்துள்ளது. எதிர்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்க தூண்டி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு இப்போது 74 வயது ஆகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்த போதும் அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் கூறுகையில், எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் ஜஸ்வந்த்சிங் போன்ற தலைவர்களை 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். இப்போது அதே விதியை அவர் தனக்கும் பயன்படுத்துகிறாரா? என்று பார்ப்போம் என கூறினார்.
- வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
- இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபாஃபா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் கதைசுருக்கத்தை இயக்குநர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது " வடிவேலுவிற்கு அல்சைமர் என்ற நியாபகம் மறதி நோய் இருக்கிறது. வடிவேலு வங்கியில் பெரும் பணத்தை எடுப்பதை திருடனான ஃபஹத் ஃபாசில் பார்க்கிறார். இதை எப்படியாவது வடிவேலுவிடம் இருந்து திருடிவிட வேண்டும் என நினைக்கிறார் ஃபஹத். அதனால் வடிவேலுவை திருவண்ணாமலை வரை வண்டியில் இறக்கிவிடுகிறேன் என கூறி அழைத்து செல்கிறார் அந்த பயணத்தை இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நண்பர்களாகின்றனர். இதற்கு அடுத்து என்ன ஆனது? ஃபஹத் கடைசியில் வடிவேலுவிடம் இருந்து பணத்தை திருடினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதையாகும்.
- வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக்கோன்.
- வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசியவர் மாவீரர் அழகுமுத்துக்கோன்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக்கோன். தாய் நிலத்தின் உரிமை காக்க, அடிமை விலங்கைத் தகர்த்தெறிய, விடுதலைப் போராட்டக் களத்தில் தலைவணங்காமல் தடந்தோள்களுடன் தீரமாகப் போரிட்டவர்.
வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவரது தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி அதற்கு அடுத்த நாள் தமிழகம் வருகிறார்.
- ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 26-ந்தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி அதற்கு அடுத்த நாள் தமிழகம் வருகிறார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.
- கடந்த 7 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400 குறைந்தும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 குறைந்தும் நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்தும் ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,075 ரூபாய்க்கும் சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த 7 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 121 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
09-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,000
08-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
07-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,080
06-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-07-2025- ஒரு கிராம் ரூ.120
09-07-2025- ஒரு கிராம் ரூ.120
08-07-2025- ஒரு கிராம் ரூ.120
07-07-2025- ஒரு கிராம் ரூ.120
06-07-2025- ஒரு கிராம் ரூ.120