search icon
என் மலர்tooltip icon
    • அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கினர்.
    • கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தலைநகர் பெங்களூருவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி   கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    பெங்களூருவில் ஹென்னூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பாபுசாபல்யா பகுதியில் கனமழைக்கிடையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கினர்.

    தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்கு உள்ளிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் 17 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே அவர்களை  மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கட்டடம் இடித்து விழும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

    • மஹத் அடுத்ததாக `காதலே காதலே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    மங்காத்தா திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் மஹத் ராகவேந்திரா . அதைத் தொடர்ந்து ஜில்லா படத்தில் நடித்தார்.

    2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் XL இந்தி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    தற்பொழுது மஹத் அடுத்ததாக `காதலே காதலே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல இயக்குனரான கே.வி ஆனந்தின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார். மஹத்துடன் இணைந்து பாரதிராஜா, விடிவி கணேஷ், ரவீனா, புகழ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். `காதலே காதலே' படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க ஸ்ரீ வாரி பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது.

    படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இப்பாடலை வியன் புகழேந்தி வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ளார். இப்பாடல் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

    திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இங்கிலாந்து நாட்டில் The Hundred லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
    • 100 பந்துகளை மட்டுமே கொண்டு இந்த கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போல இங்கிலாந்து நாட்டில் The Hundred லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    100 பந்துகளை மட்டுமே கொண்டு நடத்தப்பட்டு வரும் The Hundred லீக் தொடருக்கு ஐபிஎல் போல மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

    இதனால், ஹன்ட்ரட் லீக் தொடரில் விளையாடி வரும் அணிகளில் முதலீடு செய்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்நிலையில், தற்போது ஒவ்வொரு அணிகளின் 49% பங்குகளை விற்பனை செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு அணிகளின் மதிப்பும் சுமார் ரூ.900 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை கணக்கிடப்பட்டுள்ளது.

    இதனிடையே முதற்கட்ட ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தரப்பில் ஏலத்திற்கான தொகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலீடு செய்வதில் இருந்து விலகியுள்ளது.

    ஹன்ட்ரட் அணிகளின் 49% பங்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், மீதமுள்ள 51% பங்குகள் கவுண்டி அணிகளிடம் தான் இருக்கும். அவர்களும் இணைந்தே அணியை வழிநடத்துவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் ராஜூ ஜெயமோகன் நடித்துள்ளார்.
    • கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.

    அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த "சைஸ் ஸீரோ" தேசிய விருதுபெற்ற "பாரம் " ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ராகவ் மிர்தாத்.

    அதைத்தொடர்ந்து காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.

    அடுத்ததாக இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியானது.இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இந்த வீடியோ மிகவும் நகைச்சுவை பாணியில் அமைந்துள்ளது. ராஜு , இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவிடம் பாட்டு நல்லா வந்துரும்ல என கேட்கப்படும் வீடியோவில் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியா சென்றார்.
    • ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மாஸ்கோ:

    பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் கருப்பொருள் 'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' ஆகும்.

    இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஜி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சனைகள் குறித்து தலைவா்கள் கலந்துரையாட உள்ளனா்.

    இதற்கிடையே, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ரஷியாவின் கசானுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், ரஷிய அதிபருடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்திற்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும். மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளித்தே நமது அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 3 மாதங்களில் தனது 2-வது ரஷிய பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஆழமான நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது என தெரிவித்தார்.

    • இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதில் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.
    • ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்தது

    லடாக் எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா சீனா இடையே புதிய ஒப்பந்தமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாமல் இருக்கிறது.

    அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்கின்றன. அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.

    முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

     

    ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்து எல்.ஏ.சி. எல்லையை ஒட்டி கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரச்சனையைத் தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் தற்போது புதிய ஒப்பந்தமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த உடன்பாட்டின்படி இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டுஉள்ளது. எனவே எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி செல்வது முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிற

    • சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

    திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா இரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திஷா பதானி , பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    ப்ரோமோஷன் பணிகளில் கலந்துக்கொள்ளும் போது சூர்யா ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்தார் அதில் அவர் ' நான் சமீபத்தில் நடிகர் அஜித் சாரை சந்தித்தேன். அப்பொழுது அவர் கூறினார் இப்பொ தெரியுதா நான் ஏன் இயக்குனர் சிவா-வ விடலன்னு" என கூறினார்.

    இந்த காணொலி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல், தேங்கியுள்ளது.
    • வெள்ள நீரில் மக்கள் மீன்பிடித்து சென்ற சம்பவம் அரங்கேறியது.

    பெங்களூருவில் இன்று (அக்டோபர் 22) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல், தேங்கியுள்ளது.

    மழைநீர் தேங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்புப்படையினர் படகுகள் மூலம் மீட்டனர். தொடர் கனமழையில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு நகரின் சில பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கனமழையால் சூழ்ந்த வெள்ள நீரில் மக்கள் மீன்பிடித்து சென்ற சம்பவம் அரங்கேறியது. பெங்களூருவை அடுத்த அல்லலசண்ட்ரா மற்றும் எலஹங்கா பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் மக்கள் மீன்களை பிடித்து சென்றனர். 


    • ஆட்டோ வாங்க 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ் நாடு அரசு மானியமாக வழங்கும்.
    • கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்திற்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ் நாடு அரசு. பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. அவற்றோடு, பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது. புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு புதிய மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளது.

    பெண்களின் பாதுகாப்பில் தமிழ் நாடு சிறந்து விளங்குகின்றது. அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக 'இளஞ்சிவப்பு ஆட்டோக்களை தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.

    அவசரக் காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும்.

    பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும். ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தேவையான தகுதிகள்:

    1. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

    2. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    3. 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    4. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    5. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

    6. சென்னையில் குடியிருக்க வேண்டும்

    இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ் நாடு அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும்.

    சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு. 8வது தளம். சிங்கார வேலர் மாளிகை, சென்னை 600 001 என்ற முகவரிக்கு 23.11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கட்டட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
    • மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனம் இதை நடத்தி வருகிறது

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கமாரியா பகுதியில் செயல்பட்டு வரும் ஆயுதத் தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த காலையில் தொழிற்சாலையின் எரிபொருள் நிரப்பும் பிரிவில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 காயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சமபவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆயுத தொழிற்சாலையானது மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ×