என் மலர்tooltip icon
    • மத்திய கிழக்கு ஆசியாவில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • இதனால் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.

    அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், பாரசீக வளைகுடாவில் உள்ள குறுகலான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. அரபு நாடுகளில் இருந்து இவ்வழியாகத்தான் எண்ணெய் கப்பல்கள் பிற நாடுகளுக்கு பயணித்து வருகின்றன.

    உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடக்கும் இக்கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்கள்மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்கி வருகிறது. சமீபத்தில் இந்தியா வந்து கொண்டிருந்த தாய்லாந்து கப்பல் உள்பட 3 வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வளைகுடா நாடுகளில் விரிவடைந்து வரும் மோதல் பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் பதற்றத்தை தணித்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். என வலியுறுத்தி உள்ளார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 6-4 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பிரிட்டிஷ் வீரர் ஜேக் டிராபரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் லேனர் டைனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் சின்னர் ஸ்வரேவுடனும், கார்லோஸ் மெத்வதேவுடனும் மோதுகின்றனர்.

    • ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது வோக்ஸ்வேகன் நிறுவனம்.
    • கடந்த சில ஆண்டாக உலகளவில் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

    பெர்லின்:

    ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது வோக்ஸ்வேகன் நிறுவனம். கடந்த சில ஆண்டாக உலகளவில் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், வோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களிடம் பணிசெய்யக்கூடிய ஊழியர்களில் சுமார் 50,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன உற்பத்தி துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    வரும் 2030-ம் ஆண்டுக்குள் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் 50,000 பேரை படிப்படியாக வேலையில் இருந்து நீக்கப் போவதாக வோக்ஸ்வேகன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

    நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எழுதி இருக்கக்கூடிய ஆண்டு அறிக்கையில் வோக்ஸ்வேகன் சிஇஓ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

    நிறுவனத்தின் லாபம் கணிசமான அளவு குறைந்ததால் இந்த பணிநீக்க முடிவு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நிறுவனத்தின் வாகன உற்பத்தி பிரிவு என மட்டும் இல்லாமல் மென்பொருள் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுமே இந்த பணிநீக்கத்தால் வேலையை இழக்க உள்ளனர்.

    • ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் இந்தியாவின் மணிஷா சவுகான் ஒரு கோல் அடித்தார்.
    • இறுதியில், இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.

    ஐதராபாத்:

    16-வது பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

    இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் முறையே இங்கிலாந்து, இத்தாலியும், 'பி' பிரிவில் இந்தியா, ஸ்காட்லாந்தும் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன. இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் இரு தகுதிச்சுற்றிலும் (சாண்டியாகோ, ஐதராபாத் சுற்று) 4-வது இடம் பிடிக்கும் அணிகளில் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் அணியும் நேரடியாக தகுதி பெறும்.

    இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா, இத்தாலி அணிகள் மோதின. இரு அணிகளும் தொடக்கம் முதலே தீவிரமாக ஆடின. முதல் பாதி முடிவில் எந்த அணியும் கோல் அடிக்காததால் 0-0 என ஆனது.

    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் இந்தியாவின் மணிஷா சவுகான் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதன்பின் யாரும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதுகிறது.

    • டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 47.3 ஓவரில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டாக்கா:

    பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.3 ஓவரில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மாஸ் சதாக் 75 ரன்னும், சல்மான் ஆகா 64 ரன்னும், முகமது ரிஸ்வான் 44 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. மழை காரணமாக 32 ஓவரில் 243 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது.

    இதனால் வங்கதேச அணி 23.3 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 41 ரன்னும், தவுஹித் ஹிருடோய் 28 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராப், மாஸ் சதாகத் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம் பாகிஸ்தான் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரில் 1-1 என சமனில் உள்ளது.

    • மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர் முறை உள்ளது.
    • குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.

    உச்சநீதிமன்ற வட்டாரத்தின்படி, வழக்கு ஒதுக்கீடு (Case Allocation) மற்றும் அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் இருந்து மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார்.

    தற்போது நடைமுறையில் உள்ள 'மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்' (Master of the Roster) முறையின்படி, எந்த வழக்கை எந்த நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்வார்.

    அண்மையில் உத்தரப் பிரதேச குண்டர் சட்டத்திற்கு எதிராக இர்பான் சோலங்கி என்பவர் தாக்கல் செய்த மனுவை சூர்யா காந்த் அமர்வு விசாரித்தது.

    விசாரணையின் போது, இதேபோன்ற ஒரு மனு ஏற்கனவே 2022-ல் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது.

    தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, மீண்டும் ஒரு புதிய அமர்வின் முன் எப்படி பட்டியலிடப்பட்டது குறித்து நடந்த உள் விசாரணையில் உச்ச நீதிமன்றப் பதிவகத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    எனவே இனி வழக்குகள் மற்றும் அமர்வுகளை ஒதுக்கீடு செய்யும் பணியை இனி AI மென்பொருள் கவனிக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், சீரான முறையில் வழக்குகளைப் பட்டியலிடும் என்று நம்பப்படுகிறது. 

    • சுப்மன் கில்லுக்கு ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது வழங்க இருக்கிறது.
    • ஆகிப் நபிக்கு மாதவ்ராவ் சிந்தியா விருது வழங்கப்பட இருக்கிறது.

    பி.சி.சி.ஐ. ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதனடிப்படையில் வருகிற 15-ந்தேதி (நாளைமறுதினம்) 2026-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழா டெல்லியில் நடைபெற இருக்கிறது.

    இதில் ராகுல் டிராவிட், ரோஜர் பின்னி, மிதாலி ராஜ் ஆகியோருக்கு மதிப்பிற்குரிய சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறது.

    ரஞ்சி டிராபி வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்தது. அதற்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் நபி முக்கிய காரணம். இவர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வளர்ந்து வரும் வீரராக திகழ்ந்தார். இவருக்கு மாதவ்ராவ் சிந்தியா விருது வழங்க இருக்கிறது.

    சுப்மன் கில்லுக்கு ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது வழங்க இருக்கிறது.

    சிறந்த சர்வதேச கிரிக்கெட்டர் விருது ஆண்கள் மற்றும் பெண்கள் அணியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

    சிறந்த சர்வதேச அறிமுக வீரர் மற்றும் வீராங்கனை விருது, உள்ளூர் தொடரில் சிறந்த ஆல்-ரவுண்டர் போன்ற விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

    இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

    நடிகர் யோகி பாபு நடித்துள்ள திரைப்படம் `கெணத்த காணோம்'. இந்தப் படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார். இந்தப் படத்தை `ஒரு கிடாயின் கருணை மனு', `சத்ய சோதனை' போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

    `கெணத்த காணோம்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில், இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், கெணத்த கானோம் திரைப்படம் குறித்து இயக்குநர், நடிகர் லோகேஷ் கணகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

     

    இதுகுறித்த எக்ஸ் தளப் பதிவில் இயக்குநர் லோகேஷ் கணகராஜ், "கெணத்த கானோம் திரைப்படம் குறித்து நல்ல ரிவ்யூக்களை கேட்டு வருகிறேன். இயக்குநர் சுரேஷ் சங்கையா சார், ரமேஷ் பாபு சார், எஸ்.ஆர். பிரபு சார், யோகி பாபு அண்ணா மற்றும் ஒட்டுமொத்த நடிகர், நடிகையர் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்," என குறிப்பிட்டுள்ளார்.

    • பிரச்சினைகளை நீக்குவதற்கு நாங்கள் எங்களால் இயன்றவரை முயற்சி செய்தோம்
    • இந்திய மக்களின் துயரம் எங்களது துயரம், அதுபோலவே எங்களுடையதும்.

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக இந்தியக் கொடியிடப்பட்ட கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையே நடந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி தேவைகளில் பெரும் பகுதி இந்த வழியாகவே வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களுக்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், போர் தொடர்பாக ஈரானுக்கு எந்த ஆதரவும் தெரிவிக்காதபோதும் இந்தியாவிற்கு மட்டும் இந்தச் சிறப்பு விலக்கு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி, 

    "ஏனென்றால் இந்தியா எங்கள் நண்பன். இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் நீங்கள் அதைக் காண்பீர்கள். பிராந்தியத்தில் ஈரானும் இந்தியாவும் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய மக்களின் துயரம் எங்களது துயரம், அதுபோலவே எங்களுடையதும். இதன் காரணமாகவே இந்திய அரசாங்கம் எங்களுக்கு உதவுகிறது. நமக்குள் பொதுவான நம்பிக்கையும் பொதுவான நலன்களும் இருப்பதால், நாமும் இந்திய அரசாங்கத்திற்கு உதவ வேண்டும்.

    எனது உரையில் நான் குறிப்பிட்டது போல், இந்திய அரசாங்கத்துடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் நேற்று இந்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பல்வேறு துறைகளில் உள்ள அனைத்துத் தடைகளையும் நீக்குமாறு நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிரச்சினைகளை நீக்குவதற்கு நாங்கள் எங்களால் இயன்றவரை முயற்சி செய்தோம்" என தெரிவித்தார். 

    • ஏர் இந்தியா ஏற்கனவே டிக்கெட் விலைகளில் கூடுதல் கட்டணம் விதிக்கிறது.
    • இந்த கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும்.

    மத்திய கிழக்கு போர் சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    விமான எரிபொருளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. விமானக் கட்டணம் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் கட்டணம் என்ற பெயரில் புதிய கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. ஏர் இந்தியா ஏற்கனவே டிக்கெட் விலைகளில் கூடுதல் கட்டணம் விதிக்கிறது.

    இந்நிலையில் இண்டிகோவும் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவெடுத்துள்ளது.

    எரிபொருள் கூடுதல் கட்டணம் என்ற பெயரில் இண்டிகோ ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 425 முதல் ரூ. 2,300 வரை வசூலிக்க உள்ளது. இந்த  கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும்.

    இண்டிகோ உள்நாட்டு பயண டிக்கெட்டுகளுக்கு ரூ. 425, மத்திய கிழக்கு விமானங்களுக்கு ரூ. 900, தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் மேற்கு ஆசிய விமானங்களுக்கு ரூ. 1,800 மற்றும் ஐரோப்பா விமானங்களுக்கு ரூ. 2,300 எரிபொருள் கட்டணம் வசூலிக்கும்.

    சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இண்டிகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ×