என் மலர்
- 63.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
- 100 உறுப்பினர்களின் கையொப்பம் தேவை.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தீர்மானத்திற்கான அறிவிப்பு வரைவு இறுதி செய்யப்பட்டு இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் சதாப்தி ராய் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரும் யோசனையை முன்வைத்தார் என்றும் இதற்கு மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் உடன்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் மோசடியாக நீக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மார்ச் 6 முதல் கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
பிப்ரவரி 28 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மேற்கு வங்கத்தில் சுமார் 63.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதேபோல் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் மோசடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து அகற்ற இந்தியா கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதியை எந்த நடைமுறையில் பதவி நீக்கம் செய்ய முடியுமோ, அதே கடுமையான நடைமுறைதான் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் பொருந்தும்.
இந்தத் தீர்மானத்தை மக்களவையில் கொண்டுவரக் குறைந்தது 100 உறுப்பினர்களின் கையொப்பமும், மாநிலங்களவையில் கொண்டுவர 50 உறுப்பினர்களின் கையொப்பமும் தேவை.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்தத் தீர்மானம் வெற்றி பெறும்.
இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டால், அது தேர்தல் ஆணையத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாகப் பார்க்கப்படும்.
நேற்று தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் அமர்வு வரும் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாகனம் ஏறி சாந்தோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
- 116 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தின் பெனி மாவட்டத்தில் ஆட்டோவை திருட முயன்ற கும்பலால் சாந்தோ குமார் சாஹா என்ற இந்து சிறுவன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளான்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (மார்ச் 8) டாக்கா-சிட்டகாங் நெடுஞ்சாலையில் உள்ள லால்போல் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சாந்தோ தனது ஆட்டோவில் பயணிகளுக்காகக் காத்திருந்தபோது, ஒரு கும்பல் அவனை தாக்கி ஆட்டோவைப் பறிக்க முயன்றது.
அவர்கள் சாந்தோவை நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த ஒரு பள்ளத்தில் வீசிவிட்டு ஆட்டோவுடன் தப்ப முயன்றனர்.
சாந்தோ எழுந்து அவர்களைத் துரத்தியபோது, ஓடும் வாகனத்தின் அடியில் சாந்தோவை தள்ளிவிட்டனர். இதில் வாகனம் ஏறி சாந்தோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
வங்கதேசத்தில் தற்போது தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி அரசு அண்மையில் பதவியேற்றது.
இருப்பினும், சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் இன்னும் குறைந்தபாடில்லை.
இதற்கு முன்பு முகமது யூனுஸ் தலைமையிலான 18 மாத இடைக்கால ஆட்சியின் போதும் சிறுபான்மையினருக்கு எதிராகப் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின.
2025 ஜூன் முதல் 2026 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் மட்டும் வங்கதேசத்தில் சுமார் 116 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
- இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று ரேஸ் வைத்ததே காரணம்.
- 5 அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது.
டெல்லி நங்லோய் பகுதியில் நேற்று காலை அதிவேகமாக சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முதலில் ஒரு ஸ்கூட்டர் மீது மோதி, பின்னர் அங்கிருந்த ஈ-ரிக்ஷா, பைக் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற இளைஞர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் ரவிகாந்த் (32) மற்றும் கமல்ஜீத் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஒரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நடந்தவுடன் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் திரண்டனர்.
விபத்து நடந்த போது இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று ரேஸ் வைத்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்தை அடித்து நொறுக்கிய அவர்கள், அதற்குத் தீ வைத்தனர்.
அதே சாலையில் வந்த மற்றொரு அரசுப் பேருந்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
மேலும் 5 அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தீபக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- ஆப்பிரிக்கா வழியாக நீண்ட தூர பாதையிலேயே சென்று கொண்டிருந்தது.
- எத்தியோப்பியா - எரித்திரியா எல்லையில் நுழைந்தது.
டெல்லியில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு நேற்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் 7 மணி நேர பயணத்தின் பின் மீண்டும் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது.
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக, ஏற்கனவே இந்த விமானம் மோதல் பகுதிகளைத் தவிர்ப்பதற்காக ஆப்பிரிக்கா வழியாக நீண்ட தூர பாதையிலேயே சென்று கொண்டிருந்தது.
விமானம் எத்தியோப்பியா - எரித்திரியா எல்லை வான்வெளியில் நுழைந்தபோது, அங்கு திடீரென வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால் மான்செஸ்டர் செல்வது சாத்தியமில்லை என்பதால், விமானம் 'யு-டர்ன்' எடுத்து மீண்டும் டெல்லிக்குத் திரும்பியது.
பயணிகளின் பாதுகாப்பிற்கே நாங்கள் முதலிடம் அளிக்கிறோம் என்று இது குறித்து இண்டிகோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
- ஈரான் வீராங்கனைகள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தைப் பாட மறுத்தனர்.
- அமெரிக்கா அவர்களை ஏற்றுக்கொள்ளும்.
ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் மகளிர் கால்பந்து அணியினர் ஆஸ்திரேலியா சென்றனர்.
கடந்த வாரம் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது, ஈரான் வீராங்கனைகள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தைப் பாட மறுத்தனர்.
ஈரானில் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் செயலால் ஈரானிய அரசு ஊடகங்கள், வீராங்கனைகளை "யுத்த காலத் துரோகிகள்" என்று விமர்சித்தன. அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தென் கொரியாவுடன் நடந்த போட்டிக்கு பிறகு நடந்த அடுத்த இரண்டு போட்டிகளில் வீராங்கனைகள் ஈரான் தேசிய கீதத்தைப் பாடினர்.
இந்நிலையில் ஈரான் மகளிர் கால்பந்து அணியினர் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
ஆனால் வீராங்கனைகள் ஈரான் திரும்பினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உலகளவில் எழுந்துள்ளது. மேலும் ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல்களுக்கும் நிலைமையை மோசமாக்கியுள்ளன.
இந்நிலையில் ஈரான் மகளிர் கால்பந்து அணியினர், மீண்டும் ஈரான் திரும்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் பதவில், ஈரான் தேசிய மகளிர் கால்பந்து அணியை ஈரானுக்குத் திருப்பி அனுப்ப அனுமதிப்பதன் மூலம் ஆஸ்திரேலியா ஒரு பயங்கரமான மனிதாபிமானத் தவறைச் செய்கிறது. அங்கு அவர்கள் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதைச் செய்யாதீர்கள், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் (ஆண்டனி அல்பானீஸ்), அவர்களுக்கு அடைக்கலம் கொடுங்கள். நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் அமெரிக்கா அவர்களை ஏற்றுக்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் வீராங்கனைகள் தங்கியுள்ளனர். அவர்கள் ஈரான் அரசுக்கு எதிராக தேசிய கீதம் பாட மறுத்ததால் அவர்களுக்கு டிரம்ப் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
- ஆபிரகாம் உடன்படிக்கை மூலம் இஸ்ரேலின் கூட்டாளியாகவும் உள்ளது.
- உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தாபா கமேனிக்கு புதின் வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஒரு போன் அழைப்பு செய்தால் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் நின்றுவிடும் என்று இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் ஹுசைன் ஹசன் மிர்சா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, "ஈரான் - இஸ்ரேல் மோதலில் பங்கேற்க அமீரகத்திற்கு விருப்பமில்லை. எங்கள் நிலப்பரப்பை ஒருபோதும் எவர் ஒருவரும் தாக்குதலுக்கான தளமாகப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
பிரதமர் மோடி அவர்கள் வளைகுடா நாடுகளின் தலைவர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.
பிரதமர் மோடி ஈரான் மற்றும் இஸ்ரேல் தலைவர்களுக்குச் செய்யும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும். போரை முடிவுக்குக் கொண்டு வர அவாரால் முடியும்" என்று தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம் அது ஈரானின் அண்டை நாடாகவும், அதே சமயம் 'ஆபிரகாம் உடன்படிக்கை' மூலம் இஸ்ரேலின் கூட்டாளியாகவும் உள்ளது. இது எங்களை ஒரு சிறந்த மத்தியசாதராக மாற்றுகிறது. எங்களால் இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று மிர்சா மேலும் தெரிவித்தார்.
8 நாட்களுக்கும் மேலாக ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானின் ஐநா தூதர் தகவல்படி, ஈரானில் இதுவரை 1,332 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே ஈரானின் புதிய உச்ச தலைவராக தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தாபா கமேனி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய ஈரான் மற்றும் லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது இன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
- சாதனைகள், கொள்கைகள் மட்டும் நம்முடைய பலம் இல்லை; நான்காவது பொதுத் தேர்தலை இணைந்து சந்திக்கும் கூட்டணியும், நம்முடைய பெரிய பலம்தான்.
- தமிழ்நாட்டைத் தொடர்ந்து நம்பர்-1 மாநிலமாக்க எங்கள் ஸ்டாலினுக்கு ஆதரவு கொடுங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இன்று திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"திமுக தொண்டர்களுக்கு நான் வைக்கும் மற்றொரு வேண்டுகோள், உதயசூரியன் சின்னம் வெற்றி பெற நீங்கள் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு உழைக்கிறீர்களோ, அதே உழைப்பை நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களின் வெற்றிக்கும் கொடுக்க வேண்டும். ஏனென்றால், நம்முடைய சாதனைகள், கொள்கைகள் மட்டும் நம்முடைய பலம் இல்லை; நான்காவது பொதுத் தேர்தலை இணைந்து சந்திக்கும் கூட்டணியும், நம்முடைய பெரிய பலம்தான்.
மற்றவர்களைப்போல் வெறும் தேர்தலுக்காக, எலக்ஷன் சீசனில் மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை; கொள்கையின் அடிப்படையில், கொள்கைத் தோழர்களான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகவும் நீங்கள் களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மக்களைச் சென்று சந்திக்கின்ற நீங்கள், இன்னொரு விஷயத்தையும் சொல்லுங்கள். "தமிழ்நாட்டில், இதுவரை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக வேண்டும் என்று வாக்களித்து மக்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அவர்களுக்குப் பின்பு, நீங்கள் வாக்களித்து ஜெயிக்க வைத்தது இந்த ஸ்டாலினைத்தான்!
கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை விட, அடுத்த 5 ஆண்டுகள் இன்னும் தமிழ்நாட்டிற்கு அதிக சாதனைகள் செய்வார் எங்க தலைவர் என்று தைரியமாக மக்களிடத்தில் சொல்லுங்கள். தமிழ்நாட்டைத் தொடர்ந்து நம்பர்-1 மாநிலமாக்க எங்கள் தலைவருக்கு ஆதரவு கொடுங்கள் என்று நம்பிக்கையோடு வீடு வீடாக சென்று சொல்லுங்கள். நம்மால் பயனடைந்த அவர்கள், நிச்சயம் உங்களை வரவேற்பார்கள்.
இந்த ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிதான், சொன்னதைச் செய்யும், சொல்லாததையும் செய்யும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால், தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி... நீங்கள் ரெடியா? நம் மண்- மொழி- மக்களை காக்க, நான் ரெடி... நீங்கள் ரெடியா? திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி... நீங்கள் ரெடியா? நம்முடைய வெற்றி, கழகத்தின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வெற்றி! அதை உணர்ந்து நீங்கள் உழைக்க வேண்டும்! ஏழாவது முறையும் நாம்தான்! இனி எப்போதும் நாம்தான்! திருச்சியின் எழுச்சி தமிழ்நாடெங்கும் பரவட்டும்! திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்" என தெரிவித்தார்.
- இந்தியா வென்ற மூன்று ஐசிசி கோப்பைக்கான அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்திருந்தார்.
- 2024 மற்றும் தற்போதைய டி20 உலகக் கோப்பையில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் இந்தியாதான் கைப்பற்றியது. கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் பட்டத்தையும் இந்தியாதான் வென்றது. இந்த மூன்று தொடரையும் வென்ற இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்திருந்தார். இடம் பிடித்திருந்தது மட்டுமல்லாமல் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கியமான நபர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்றது குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2024 டி20 உலகக் கோப்பையை பார்படோசில் வென்ற பிறகு, எனக்கு நானே ஒரு வாக்குறுதி செய்து கொண்டேன். அது, எந்தவொரு தொடரில் நான் விளையாடினாலும் வெற்றிக்காக விளையாட வேண்டும். சாம்பியன் கோப்பையை தூக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அகமதாபாத்தில் நியூசிலாந்திற்கு எதிரான இந்த வெற்றி, நான் எனக்கு அளித்த வாக்குறுதி நிஜமாகிவிட்டது என்பதற்கான சான்றாகும். அணியின் ஆதிக்கத்தில் இது ஜஸ்ட் தொடக்கம்தான்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.
- சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாட்டை அரசு அமல்படுத்தியுள்ளது.
- சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும், விநியோகத்தைச் சீர்செய்யவும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாட்டை அரசு அமல்படுத்தியுள்ளது.
ஒரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். (முன்பு இது 15 முதல் 21 நாட்களாக இருந்தது).
எரிவாயு தட்டுப்பாடு நிலவும் சூழலில், வசதி படைத்தவர்கள் அல்லது அச்சப்படுபவர்கள் அதிகப்படியான சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனைத்துக் குடும்பங்களுக்கும் சமமான விநியோகம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நடிகர் விஜய் நாளை ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
- சம்மனை பெறவும், பதிலளிக்கவும் செந்தில்பாலாஜி மறுப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. அவர் சிபிஐ சம்மனைப் பெறவோ அல்லது அதற்குப் பதிலளிக்கவோ மறுத்துவிட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் நடந்த துயரச் சம்பவத்திற்குச் செந்தில் பாலாஜியே காரணம் என்று ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாநாட்டிற்குப் போதிய பாதுகாப்பு வழங்கக் கூடாது என்று காவல்துறையினருக்கு அவர் அழுத்தம் கொடுத்ததாகவும், சம்பவ இடத்தில் திட்டமிட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த செந்தில் பாலாஜி, போதிய திட்டமிடல் இல்லாததே நெரிசலுக்குக் காரணம் என்று தவெக நிர்வாகத்தைக் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகர் விஜய் நாளை ஆஜராகுமாறு சிபிஐ ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் தேர்தல் பணிகளால் நாளை ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறும், மேலும் விசாரணையை சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு மாற்றுமாறும் சிபிஐ தலைமைக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.









