என் மலர்tooltip icon
    • காஷ்மீரின் 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை அதிகாரிகள் தற்காலிகமாக மூடிவிட்டனர்.
    • பெதாப் பள்ளத்தாக்கு, பூங்காக்கள், வெரினாக், கோகர்னாக் மற்றும் அச்சாபல் தோட்டங்கள் திறக்கப்படும்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ள 16 சுற்றுலாத் தலங்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.

    சுற்றுலாத் தலங்கள் படிப்படியாக திறக்கப்படும் என்று சின்ஹா கூறினார். முதல் கட்டமாக, அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் சந்தைக்கு அருகிலுள்ள பெதாப் பள்ளத்தாக்கு, பூங்காக்கள், வெரினாக், கோகர்னாக் மற்றும் அச்சாபல் தோட்டங்கள் திறக்கப்படும்.

    ஏப்ரல் 22 தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரின் 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை அதிகாரிகள் தற்காலிகமாக மூடிவிட்டனர். இந்நிலையில் பஹல்காம், குல்மார்க், சோனாமார்க் மற்றும் தால் ஏரி போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் ஏற்கனவே திறந்திருந்ததாகவும், சில முக்கிய இடங்கள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
    • கோர விமான விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இதில், விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

    படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

    படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் தனுஷ் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நீங்கள் எனக்காக செய்த தியாகங்களுக்கு நன்றி என்ற வார்த்தை பத்தாது. நான் இன்று இருப்பதற்கு காரணம் நீங்கள் தான். மை அப்பா மை ஹீரோ. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்"

    • இதுபோன்ற கருத்துக்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம்.
    • கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்று கூறியதை அமித் ஷா குறிப்பிட்டார்.

    சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் பாஜக தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுபோன்ற கருத்துக்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம் என்றும், சில சமயங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்றும் அமித் ஷா அட்வைஸ் செய்துள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினருக்கான பயிற்சி முகாமில் அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளார்.

    சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்று கூறியதை அமித் ஷா குறிப்பிட்டார்.

    "தவறுகள் நடக்கலாம். ஆனால் அவை ஒருபோதும் மீண்டும் நிகழக்கூடாது. அவர்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது மூத்தவர்களாகவோ இருந்தாலும், அவர்கள் எப்போதும் ஒரு மாணவரைப் போல இருக்க வேண்டும்" என்று அமித் ஷா நினைவுபடுத்தினார்.

    • ராஜினாமா செய்வதாக ஆயுதப்படை ஏடிஜிபி செயராமுக்கு அருண் கடிதம்.
    • கடந்த 2013ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்தார்.

    ஆயுதப்படை பிரிவில் 12வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றிய அருண் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    அருண் வெளிநாட்டிற்கு செல்வதால் ராஜினாமா செய்வதாக ஆயுதப்படை ஏடிஜிபி செயராமுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ராஜினாமா கடிதம் டிஜிபி சங்கர் ஜிவால் மூலம் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்த அருண் 2024ல் எஸ்.பி., ஆனார்.

    • கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கவுரிகுன்று என்ற பகுதி மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டது
    • சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் சிறிய மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், குப்தகாசி போன்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த தலங்களுக்கு செல்வதற்கு ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்படுகிறது.

    உத்தரகாண்டில் பருவ நிலை சரியில்லாத நேரங்களில் இந்த ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்குவது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 8-ந் தேதி உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பக்தர்கள் பலியானர்கள்.

    கடந்த 7-ந் தேதி கடுமையான பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த ஹெலிகாப்டர் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டதால் 5 பக்தர்கள் உயிர் தப்பினார்கள்.

    இந்த நிலையில் உத்தரகாண்டில் மீண்டும் ஒரு ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு குப்தகாசிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 6 பக்தர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்பட 7 பேர் இருந்தனர்.

    கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கவுரிகுன்று என்ற பகுதி மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து செல்ல முடியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாமல் விமானி திணறினார்.

    சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் சிறிய மலையில் மோதி விபத்துக்குள்ளானது. அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அந்த ஹெலிகாப்டர் விழுந்து தீ பிடித்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் பலியானார்கள்.

    சம்பவ இடத்துக்கு உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சென்று உடல்களை மீட்டனர்.

    • தெஹ்ரானின் வடமேற்கில் உள்ள ஷாஹ்ரான் எண்ணை கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை கடும் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலின் 200 போர் விமானங்கள், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின. அதே போல் மாலையிலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் 9 அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது.

    இதில் இஸ்ரேலின் ராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன.

    இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்கின. நேற்றும் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன.

    இதற்கிடையே தங்களது தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேலும், ஈரானும் அறிவித்தன.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்று இஸ்ரேல், ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை தொடுத்தன.

    இஸ்ரேலில் இன்று அதிகாலை நடத்திய தனது புதிய தாக்குதலில் ஈரானின் ராணுவ தலைமையகம், அணுசக்தி நிலையங்கள், எண்ணை நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள், எரிவாயு நிலையங்கள் குறிவைக்கப்பட்டன. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமையகம் மீது ஏவுகணை வீசப்பட்டது. அதே போல் தெஹ்ரானின் வடமேற்கில் உள்ள ஷாஹ்ரான் எண்ணை கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    அதேபோல் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கியது. அங்கு பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

    புஷேர் மற்றும் அபாடனில் உள்ள முக்கிய எரிசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியது. இஸ்ரேல் தாக்குதலால் உலகின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி நிலைய மான தெற்கு பார்ஸ் எரிவாயு மையம் தீப்பிடித்து எரிக்கிறது.

    அதேபோல் ஹைபா, தம்ரா உள்ளிட்ட ஈரானின் பல்வேறு நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலின் தாக்குதல்களால் தெஹ்ரான் உள்பட நகரங்களில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.

    இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும் போது, ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய தெஹ்ரானில் உள்ள இலக்குகள் மீது விரிவான தொடர் தாக்குதல்கள் நடத்தி முடிக்கப்பட்டது.

    இந்த இலக்குகளில் அணுசக்தி திட்டத்தின் தலைமையகமான ஈரானிய பாதுகாப்பு அமைச்சக தலைமையகமும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தெஹ்ரானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 29 குழந்தைகள் உட்பட 60 பேர் பலியானதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இஸ்ரேலின் புதிய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் கடும் தாக்குதல்களை தொடுத்தது. இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ஏவுகணைகள், டிரோன்கள் வீசப்பட்டன.

    இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் போர் விமான எரிபொருள் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்கின. டெல்அவிவ், ஜெருசலேம், பேட் யாம், ரெஹோவோட் உள்ளிட்ட நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகின.

    ஏவுகணை தாக்குதலில் டெல் அவிவ்வில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. டான் மாவட்டத்தில் உள்ள ஒரு 5 மாடி கட்டிடம் இடிந்தது. மேலும் அருகில் உள்ள மற்றொரு குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்தது.

    இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வரு கிறது. ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் ஈரான் தாக்குதலில் 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த பேச்சுவார்த்தை இன்று ஓமனில் நடைபெற இருந்த நிலையில் அதில் பங்கேற்க ஈரான் மறுத்துவிட்டது. இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்து நிறுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு 17-ந் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மழையின் காரணமாக கேரள கடற்கரையில் மணிக்கு 40 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வருகிற 18-ந் தேதி வரை அங்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம் திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

    மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு 17-ந் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக கேரள கடற்கரையில் மணிக்கு 40 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், 18-ந் தேதி வரை மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சென்னையில் மட்டும் குரூப் 1 முதல்நிலை தேர்வை 41,094 பேர் எழுதினார்கள்.
    • சென்னையில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது.

    இதில், துணை கலெக்டர் பதவிக்கு 28 இடங்கள், போலீஸ் டி.எஸ்.பி. பதவிக்கு 7 இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் பதவிக்கு 19 இடங்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பதவிக்கு 7 இடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 இடங்கள், தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 இடங்கள் ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வன பாதுகாவலர் பதவிக்கு 2 காலியிடங்களுக்கான குரூப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வை எழுத ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகளை எழுத மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேரும், குரூப் 1 ஏ தேர்வை எழுத 6,465 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு இன்று நடந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகா மையங்கள் என 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    சென்னையில் மட்டும் குரூப் 1 முதல்நிலை தேர்வை 41,094 பேர் எழுதினார்கள். இதற்காக சென்னையில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு எழுத வந்தவர்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை எடுத்து வந்து காண்பித்து தேர்வு எழுத சென்றனர்.

    தேர்வு எழுத வந்த மாணவர்கள் காலை 8.30 மணி முதல் தேர்வு எழுதும் மையங்களுக்கு வரத் தொடங்கினார்கள். தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்

    பட்டனர்.

    தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வு மையத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டன. அதன் பிறகு வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மேலும், தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 987 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குரூப் 1 தேர்வு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் கூறியதாவது:-

    இன்று குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு எழுதியவர்கள் காலதாமதம் இன்றி முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி தேர்வு எழுதியவர்கள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வந்து விட்டனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த முறை மிகவும் எளிமைப்படுத்தபட்ட ஓ.எம்.ஆர். ஷீட் வழங்கப்பட்டு உள்ளது. குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்னும் 2 மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படும். மெயின் தேர்வு அதில் இருந்து 3 மாதங்களுக்குள் நடத்தப்படும்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு 10,701 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இப்போது வரை 10,227 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இப்போது நடந்து வரும் தேர்வுகள், இனிமேல் நடைபெற உள்ள தேர்வுகள் மூலம் 12,231 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்திற்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஜூன் 17-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×