என் மலர்tooltip icon
    • வருகிற 14-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.
    • வருகிற 19-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதன்பிறகு உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இதையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மோன்தா புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, வருகிற 14-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்.

    இதனை தொடர்ந்து, வருகிற 19-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
    • டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?

    மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதற்கு உதயகுமார் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் மேலும் கூறியதாவது:-

    ஜெயலலிதா 10 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டிடிவி தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.

    நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.

    டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?

    டிடிவி தினகரனுடன் இருந்த தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திமுக சென்றபோது ஏன் கவலைப்படவில்லை?

    பொதுவெளியில் டிடிவி தினகரன் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

    சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதைதொடர்ந்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் நடிகர் அருண் விஜய் வீட்டில் சோதனை செய்தனர்.

    • அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
    • ஏற்கனவே செங்கேட்டையன் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 12 பேரை நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் சுந்தவேல் முருகன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 12 பேர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே செங்கேட்டையன் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 12 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

    • வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
    • மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

    234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

    இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    நேற்று முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர்.

    121 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளன.

    அதிகபட்சகமாக பெகுசாராய் தொகுதியில் 67.32% வாக்குகளும் குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகளும் பதிவாகி உள்ளன. மாலை 6 மணியுடன் முதற்கட்ட வாக்குபதிவு நிறைவு பெற்றது.

    இந்நிலையில், பீகார் முதல்கட்ட தேர்தலில் பதிவான மொத்த வாக்குபதிவு சதவீதம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இது, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது. 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசிலபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    சென்னை:

    தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில

    பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மாயவரம் ஸ்ரீசவுரீமாயுரநாதர் உற்சவம் ஆரம்பம்.
    • கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-21 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவிதியை பிற்பகல் 2.48 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம் : கார்த்திகை காலை 6.58 மணி வரை. பிறகு ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.31 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

    யோகம் : சித்த, மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

    மாயவரம் ஸ்ரீசவுரீமாயுரநாதர் உற்சவம் ஆரம்பம். மகத்துவஜாரோகணம் திருக்கொடியேற்றம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்ற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மனுக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உறுதி

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-லாபம்

    கடகம்-செலவு

    சிம்மம்-ஆதாயம்

    கன்னி-சுபம்

    துலாம்- விருத்தி

    விருச்சிகம்-கடமை

    தனுசு- பயணம்

    மகரம்-பாசம்

    கும்பம்-உயர்வு

    மீனம்-ஆக்கம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். தனவரவு திருப்தி தரும். அனாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் கூடும்.

    ரிஷபம்

    செல்வாக்கு உயரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மிதுனம்

    வருமானம் திருப்தி தரும் நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    முன்னேற்றம் கூடும் நாள். முயற்சித்த செயலில் வெற்றி ஏற்படும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் உயர எடுத்த புது முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    குழப்பங்கள் அகலும் நாள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் சீராக நடைபெறும்.

    கன்னி

    கோவில் வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    துலாம்

    வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். வியாபாரப் போட்டி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    விருச்சிகம்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    தனுசு

    சகோதர வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் இரட்டிப்பாகும். பயணம் பலன் தரும்.

    மகரம்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

    கும்பம்

    தனவரவு திருப்தி தரும் நாள். எண்ணிய காரியம் நிறைவேற அன்னியர் ஆதரவு கிடைக்கும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    மீனம்

    எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும்.

    • ஸ்டேட் வங்கியின் 12-வது பொருளாதார மாநாடு மும்பையில் நடைபெற்றது.
    • இதில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

    மும்பை:

    மும்பையில் ஸ்டேட் வங்கியின் 12-வது பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வங்கிகளின் நிலை குறித்து விரிவாகப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டிற்கு பெரிய அளவிலான, உலகத்தரத்திலான வங்கிகள் தேவை. இதற்காக ரிசர்வ் வங்கியும் மற்ற பிற வணிக வங்கிகளும் சேர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகின்றன.

    தொழில் துறைக்கு கடன் ஓட்டத்தை மேலும் விரிவுபடுத்த வங்கிகளைக் கேட்டுக்கொண்டார்.

    ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் ஏற்பட்டுள்ள தேவை, முதலீட்டை ஊக்குவித்து 'நல்ல வட்டச் சுழற்சி'யை உருவாக்கும்.

    பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய பணியாளர்களுக்கான விதிமுறைகள் மாற்றியமைக்க வேண்டும்.

    வங்கி பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் உள்ளூரின் வட்டார மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.

    ஒரு கிளையில் பணியமர்த்தப்படும் ஒவ்வொரு ஊழியரும் தனது வாடிக்கையாளரைப் புரிந்து கொள்வதற்கு, உள்ளூர் மொழியை பேசுவதையும் உறுதிசெய்ய வேண்டும். குறைந்தபட்சம் அந்த வங்கியின் கிளை மானேஜராவது வட்டார மொழி பேச வேண்டும் என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி நாளை இருநாள் பயணமாக வாரணாசி செல்கிறார்.
    • அங்கு 4 வந்தே பாரத் ரெயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவம்பர் 8) 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு செல்லும் ஒரு ரயிலும் அடக்கம். இந்த ரயில் தமிழக நகரங்கள் வழியே செல்கிறது.

    இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புதிதாக 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

    கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு வரை வந்தே பாரத் ரெயில் ஒன்று இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 8 மணி நேரம் 40 நிமிடமாகக் குறையும். இந்த ரெயிலானது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்ல உள்ளது.

    உ.பி.யின் பனாரஸ் நகரில் இருந்து ம.பி.யின் கஜூராகோ இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலானது வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூடம் வழியே பயணிக்கிறது. இது மதம் சார்ந்த மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்கும்.

    உ.பி.யின் ஷஹாரான்பூர் முதல் லக்னோ இடையிலான வந்தே பாரத் ரெயிலால் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இந்த ரெயிலானது லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பைரேலி, மொராதாபாத், பிஜ்னூர் நகரங்களில் நின்று செல்லும்.

    பஞ்சாபின் பிரோஸ்பூர்-டெல்லி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் இரு நகரங்கள் இடையிலான பயண நேரம் 6 மணி 40 நிமிடமாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×