என் மலர்
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்தது.
- இறுதிச்சுற்றில் பெலாரசின் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரியாத்:
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
முதல் அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவும், 2வது அரையிறுதியில் பெலாரசின் அரினா சபலென்காவும் வென்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-3, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
ரிபாகினா பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை.
- அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பா.ஜ.க. அனைத்தையும் செய்கிறது.
பாட்னா:
பீகாரில் 121 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில். நவம்பர் 11 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், பீகாரின் கட்டிஹார் நகரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தைப் பேணவில்லை.
ஒருபக்கம் அவர் அகிம்சைக்கான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார். மறுபக்கம் நாட்டு துப்பாக்கி பற்றிப் பேசுகிறார்.
ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது.
நாங்கள் உங்கள் உரிமைகளுக்காக, உண்மைக்காக, ஒரு பேரரசுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அதுதான் நரேந்திர மோடி பேரரசு.
மக்களை அடக்குவதன் மூலம் அவர் நாட்டை வழிநடத்துகிறார். அவரது கட்சி வதந்திகளைப் பரப்புகிறது.
மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை. அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பா.ஜ.க. அனைத்தையும் செய்கிறது. அவர்கள் வாக்குரிமையைத் திருடத் தொடங்கிவிட்டார்கள்.
அரசியலமைப்பையும் நாட்டையும் காட்டிக் கொடுத்தவர்களை மக்கள் மறக்க வேண்டுமா அல்லது நினைவில் கொள்ள வேண்டுமா? என தெரிவித்தார்.
- ரதாலா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- தீ மளமளவௌ அப்பகுதி முழுவதும் பரவியதால் ஒரே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
புதுடெல்லி:
டெல்லி ரதாலா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவௌ அப்பகுதி முழுவதும் பரவியதால் ஒரே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்களும் வெடித்துச் சிதறியது. இதனால் உயிருக்கு பயந்து பொதுமக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர்.
தகவல் அறிந்ததும் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் ஒருவர் இறந்தார். ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது. அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிபத்தில் குடிசைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
- தொழில்நுட்ப கோளாறால் ரன்வேயில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை.
காத்மண்டு:
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய ரன்வேயில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை. விமான நிலைய ரன்வே வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், விமானங்கள் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிப்பட்டனர்.
தொழில்நுட்ப கோளாறை செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன.
- வைரலான வீடியோவில், உள்ளூர்வாசிகள் VVPAT சீட்டுகளை எடுத்து சரிபார்ப்பதைக் காணலாம்.
பீகாரின் சமஸ்திபூரில் சாலையில் பறக்கும் VVPAT சீட்டுகளின் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்கள் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை சரிபார்க்க கூடிய VVPAT சீட்டுகள் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன. வைரலான வீடியோவில், உள்ளூர்வாசிகள் VVPAT சீட்டுகளை எடுத்து சரிபார்ப்பதைக் காணலாம்.
இந்த சீட்டுகள் வியாழக்கிழமை நடந்த தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து வந்தவை என்று ஆர்ஜேடி குற்றம் சாட்டியது.
இருப்பினும், இந்த சீட்டுகள் கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனை வாக்குப்பதிவிலிருந்து வந்தவை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சீட்டுகள் கிடந்த இடத்தில் ஆய்வு செய்த சமஸ்திபூர் மாவட்ட நீதிபதி ரோஷன் குஷ்வாஹா, "நாங்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, இந்த சீட்டுகள் மாதிரி வாக்குப்பதிவில் இருந்து வந்தவை என்பதைக் கண்டறிந்தோம்.
அவை சரியாக அழிக்கப்படாதது தெரியவந்துள்ளது. இதற்கு பொறுப்பான வாக்குச் சாவடி ஊழியர்களை அந்த சீட்டுகளில் உள்ள EVM எண்களைப் பயன்படுத்தி அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடமை தவறியதற்காக உதவி தேர்தல் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவுத்துள்ளது.
- பேட் கம்மின்ஸ் உடற்குதியுடன் இருந்தால் அவர் கேப்டனாக இருக்கப்போகிறாரா அல்லது நீங்கள் தொடர்ந்து நீடிப்பீர்களா?.
- பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்பினால், அவர்கள் உங்கள் கேப்டன் பதவியின் கீழ் விளையாடப் போகிறார்?.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. 4.5 ஓவரில் மழை குறுக்கீடு செய்ததால், அத்துடன் போட்டி கைவிடப்பட்டது. இதனால் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
மழையால் போட்டி கைவிடப்பட்ட நிலையில், கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் ஆடம் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்செல் மார்ஷிடம் கேள்வி கேட்டார். அப்போது 2026 டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை வழி நடத்திச் செல்லப் போவது யார்? நீங்களா அல்லது பேட் கம்மின்ஸா? என கேள்வி எழுப்பினார். இதற்கு என்ன பதில் சொல்ல என்று மிட்செல் மார்ஷ் வார்த்தை இல்லாமல் நின்றார். பின்னர் சமாளித்துக் கொண்டு பேசினார்.
ஆடம் கில்கிறிஸ்ட்: யார் கேப்டன்? நீங்களா அல்லது பேட் கம்மின்ஸா?. பேட் கம்மின்ஸ் உடற்குதியுடன் இருந்தால் அவர் கேப்டனாக இருக்கப்போகிறாரா அல்லது நீங்கள் தொடர்ந்து நீடிப்பீர்களா?
மிட்செல் மார்ஷ்: நல்ல கேள்வி. நான் அங்கே இருப்பேன் (கேப்டன் பொறுப்பில்) என நினைக்கிறேன்.
கில்கிறிஸ்ட்: ஆகவே, நீங்கள் அதிகாரப்பூர்வ கேப்டன்?. பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்பினால், அவர்கள் உங்கள் கேப்டன் பதவியின் கீழ் விளையாடப் போகிறார்?
மிட்செல் மார்ஷ்: நான் அப்படித்தான் நினைக்கிறேன். ஆமாம்.
கில்கிறிஸ்ட்: விளக்கம் அளித்ததற்கு நன்றி. இது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.
டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எந்தபொரு டி20 அட்டவணையும் இல்லை. அணித் தேர்வுக்கு பிக் பாஷ் டி20 லீக் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
மிட்செல் மார்ஷ் 2024 டி20 உலக கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி கேப்டனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கில்கிறிஸ்ட் இதுபோன்ற கேள்வியை எழுப்பியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
- ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த்து பவார்.
இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.
இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், "இந்த ரூ.300 கோடி பரிவர்த்தனை குறித்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரித்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இந்த பரிவர்த்தனை தொடர்பான பதிவு ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டு, தொடர்புடைய ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு ரூபாய் கூட கைமாறவில்லை. அந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானது, அதை விற்க முடியாது. அது அரசு நிலம் என்ற விஷயம் எனது மகன் பார்த்து மற்றும் அவரது கூட்டாளி திக்விஜய் பாட்டீல் ஆகியோருக்கு தெரியாது" என்று கூறினார்.
இதற்கிடையே இந்த நிலமோசடி தொடர்பாக போலீசார் பதிந்த வழக்கு வழக்கில் அஜித் பவார் மகன் பெயர் இடம் பெறவில்லை. நிலத்தை வாங்கிய நிறுவனத்தில் 1 சதவீதம் மட்டும் பங்கு வைத்துள்ள திக்விஜய் பாட்டீலின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து சிவசேனா(உத்தவ்) நிர்வாகி அம்பாதாஸ் தன்வே கூறுகையில்,"நிலத்தை வாங்கிய கம்பெனியில் அஜித் பவார் மகனுக்கு 99 சதவீத பங்கு இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு சதவீத பங்கு இருப்பவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.
- இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.
- ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வாரணாசியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 4 புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார். இ
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரதமர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பாடல் பாடப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் மாணவர்கள் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் வெறுப்பு மற்றும் வகுப்புவாத சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பின் பாடலைச் சேர்ப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது.
இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.
அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஆபத்தான செயலை எதிர்க்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 143 ரன்னில் சுருண்டது.
- 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் இன்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி பைசலாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பிரிட்டோரியஸ், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரிட்டோரியஸ் 45 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். டி காக் 70 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல் சரிய ஆரம்பித்தன. இதனால் 37.5 ஓவர்களே தாக்குப்பிடித்து 143 ரன்னில் சுருண்டது.
தென்ஆப்பரிக்கா முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் ஆட்டமிழக்கும்போது 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 7 விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும் ஷாஹீன் ஷா அப்ரிடி, சல்மான் ஆகா, முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயூப் 70 ரன்கள் விளாசினார். ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் அடிக்க 25.1 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- காலிஸை வேட்டையாட பூமியிலிருந்து மற்றொரு ரோபோ குழுவும் வந்து சேர்ந்துள்ளது.
- வில்லனாக இருந்த பிரிடேட்டர் இனத்தவனைக் கதாநாயகனாக வைத்து மாறுபட்ட கோணத்தில் படம் உருவாகி இருப்பது இயக்குனரின் புதிய பாய்ச்சல்.
வளிமண்டலத்தில் ப்ரிடேட்டர் இனத்திற்கென்று தனியான ஒரு கிரகம் இருக்கிறது. இந்தக் கிரகத்தின் பெயர் யாட்ஜா பிரைம். இதில் வசிக்கும் ப்ரிடேட்டர்கள் யாட்ஜா என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள உயிரினங்களை வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
யாட்ஜா என்றால் பலசாலியாகவும், கருணையே அற்ற வேட்டைக்காரனாகவும் இருக்க வேண்டும். ஆனால், கதையின் நாயகனான யாட்ஜா இனத்தைச் சேர்ந்த டெக், மற்ற யாட்ஜா-களை விட பலவீனமாக இருக்கிறான். இதனால் டெக்கை வெறுக்கும் அவனது தந்தை, அவனைக் கொல்ல உத்தரவிடுகிறார். ஆனால், டெக்கின் அண்ணன், தன் தம்பிக்குத் தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவனைக் கொல்ல மறுக்கிறான்.
தந்தையே டெக்கைக் கொல்ல முயலும்போது, அண்ணன் தம்பியைப் பாதுகாக்கும் முயற்சியில் தந்தையின் கையால் இறக்கிறான். இறப்பதற்கு முன், தம்பி டெக்கை ஒரு விண்கலத்தில் ஏற்றி கென்னா என்ற கிரகத்திற்கு அனுப்பி வைக்கிறான். கென்னா கிரகத்தில் யாராலும் அழிக்க முடியாத காலிஸ்க் என்ற மிருகம் உள்ளது. அதைக் கொன்று வேட்டையாடினால், தன்னைத் தனது கிரகத்தில் அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் டெக், அந்தக் காலிஸ்க்கைத் தேடிப் பல வினோத உயிரினங்கள் உள்ள அந்தக் கிரகத்தில் தனது பயணத்தைத் தொடர்கிறான்.
வழியில், பூமியிலிருந்து அந்தக் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட தியா என்ற மனித வடிவிலான ரோபோவை டெக் சந்திக்கிறான். தியா ஏற்கனவே காலிஸுடன் சண்டையிட்டு தனது உடலின் ஒரு பாதியை இழந்தவள். எனவே, காலிஸ் இருக்கும் இடத்தைத் தான் காட்டுவதாக டெக்குடன் ஒரு ஒப்பந்தம் செய்து பயணத்தைத் தொடர்கிறாள்.
இதற்கிடையே, காலிஸை வேட்டையாட பூமியிலிருந்து மற்றொரு ரோபோ குழுவும் வந்து சேர்ந்துள்ளது. டெக், தியா காலிஸைக் கண்டுபிடித்தார்களா? இறுதியில் காலிஸ் வேட்டையாடப்பட்டதா? என்பதுதான் மீதிக்கதை.
நடிகர்கள்:
டெக் கதாபாத்திரத்தில் டிமிட்ரியஸ் ஷுஸ்டர்-கோலோமதாங்கி மற்றும் தியா கதாபாத்திரத்தில் எல்லே பன்னிங் சிறப்பாக நடித்துள்ளனர். படம் முழுவதும் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், டெக் கதாபாத்திரத்திற்கு டிமிட்ரியஸ் ஷுஸ்டர் நியாயம் செய்திருக்கிறார். நகைச்சுவை உணர்வு கொண்ட தியா கதாபாத்திரத்திற்கு எல்லே பன்னிங் வலு சேர்த்துள்ளார். அதிக ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட படத்தில், இருவரின் கெமிஸ்ட்ரி காண்போருக்கு இதமளிக்கிறது.
இயக்கம்:
மனிதனே அல்லாத, அதிக CGI உடன் வேற்றுகிரகவாசிகள், மிருகங்கள், ரோபோக்கள் என நகரும் படத்தில், குடும்ப உறவு, அண்ணன் தம்பி பாசம், நட்பு, விரோதம், பலவீனம், நிராகரிப்பு போன்ற உணர்ச்சிகளை இயக்குநர் டான் ட்ராக்டென்பெர்க் தொட்டுக் காட்டி இருக்கிறார். முந்தைய படங்களில் வில்லனாக இருந்த பிரிடேட்டர் இனத்தவனைக் கதாநாயகனாக வைத்து மாறுபட்ட கோணத்தில் படம் உருவாகி இருப்பது இயக்குனரின் புதிய பாய்ச்சல்.
காட்சிகள் - ஒளிப்பதிவு:
கென்னா கிரகம் மிக பிரம்மாண்டமாக CGI வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டெக் - தியா தங்கள் சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் டிராகன்கள், யானை போன்ற மிருகங்கள், விசித்திரத் தாவரங்கள் சுவாரஸ்யமூட்டுகின்றன. டெக் மற்றும் காலிஸ்க் இடையே நடக்கும் சண்டை மிரட்டலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொருந்தக்கூடிய பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
மொத்தத்தில், ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் சாகசப் படமாக, அதிரடிகளுடன் கூடிய த்ரில்லிங் அனுபவத்தை 'ப்ரிடேட்டர்: பேட்லேன்ட்ஸ்' அளிக்கிறது.
ரேட்டிங்: 3.5/5








