search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    • கைரேகை , ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கருணாஸ் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று சிறுமி கொலையாளிகளான விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர்களின் கைரேகை, ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கைதான 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், புதுச்சேரி போக்சோ விரைவு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சோபனா தேவி, கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சிறுமியை எப்படி அழைத்து சென்றனர். அவளை கொன்று கால்வாயில் வீசியதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அவர்களிடம் போலீசார் கேட்டனர். விசாரணை முடிவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

    வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

    இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

    முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 5 லட்சம் பெயா்களை நீக்கவும் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
    • சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்க 2 தொகுதிகளுக்கு ஒரு பாா்வையாளா் நியமனம் செய்யப்படுவாா்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தலுக்காக 68 ஆயிரத்து 144 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. வாக்காளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், வாக்குச் சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட போது, மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை உயா்ந்திருக்கிறது.

    குறிப்பாக, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட முதல் தலைமுறையைச் சோ்ந்த 90 ஆயிரம் போ் தங்களது பெயா்களை வாக்காளா்களாகப் பதிவு செய்துள்ளனா். இதன்மூலமாக, மாநிலத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.


    அதேசமயம், 5 லட்சம் பெயா்களை நீக்கவும் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. வாக்காளா் பட்டியலில் புதிதாகப் பெயா் சோ்த்த அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    தோ்தல் நடத்தை விதிகளை மீறும் சம்பவங்கள் தொடா்பாக, சி-விஜில் எனும் செல்போன் செயலியில் புகாா் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில் 141 புகாா்கள் வரை பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலான புகாா்கள் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை என்பதாகும்.

    பாராளுமன்ற தோ்தலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட பாா்வையாளா்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இதுவரை 58 நபா்களை பாா்வையாளா்களாக நியமிப்பதற்கான பட்டியலை தோ்தல் ஆணையம் அனுப்பி உள்ளது.

    ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பொதுப் பாா்வையாளரும், இரண்டு செலவினப் பாா்வையாளா்களாக நியமிக்கப்படுவா். சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்க 2 தொகுதிகளுக்கு ஒரு பாா்வையாளா் நியமனம் செய்யப்படுவாா். தேவையின் அடிப்படையில் கூடுதலான பாா்வையாளா்களும் நியமிக்கப்படுவா்.

    தோ்தலில் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தனித்தனியாக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு பறக்கும் படையும், ஒரு நிலைக் குழுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவைத் தோ்தலை நடத்த ஒட்டுமொத்தமாக ரூ.750 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட தொகையானது ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் இருந்து செலவிடப்பட்டுள்ளது. கூடுதலான தொகைகள் அரசால் ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
    • தென்சென்னை தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் களம் காண்பார் என தெரிகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் பதவியில் இருந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென ராஜினாமா செய்தார். இது தொடர்பான, ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். அனேகமாக, தென்சென்னை தொகுதியில் பா.ஜனதா சார்பில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் களம் காண்பார் என தெரிகிறது.

    இந்நிலையில் புதுச்சேரி, தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணை நிலை கவர்னர் பொறுப்புகளை ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவித்துள்ளார்.


    • காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள்.
    • பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான்.

    பெங்களூரு:

    பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா எம்.பி. சதானந்தகவுடா. முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான இவருக்கு 71 வயதாகிறது. வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் சதானந்தகவுடாவிடம் இருந்து மத்திய மந்திரி பதவி பறிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் மீண்டும் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.ஆனால் அவருக்கு பதிலாக பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி ஷோபா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இதன் காரணமாக சதானந்தகவுடா பா.ஜனதா தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். அவரை காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள். இதுபற்றி சதானந்தகவுடாவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் சதானந்தகவுடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சதானந்தகவுடாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஷோபா மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் சதானந்தகவுடாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய அரசியல் எதிர்காலம், நிலைபாடு என்ன? என்பது குறித்து கூற நாளை (அதாவது இன்று) டாலர்ஸ் காலனியில் உள்ள எனது வீட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அங்கு எனது அரசியல் நிலைபாடு பற்றி தெரிவிப்பேன். பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான். அதுபற்றி எனது குடும்பத்தினருடன் ஆலோசிக்க வேண்டியது உள்ளது. நான் எப்போதும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதனால் குடும்பத்தினருடன் கலந்து பேசி, எனது அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். எங்கள் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் என்னை சந்தித்து பேசினார்.

    அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது. எனது மனதில் இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது தெரிவிக்கிறேன். ஈசுவரப்பா தனது மகனுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்திருந்தோம். அதற்குள் சுயேச்சையாக போட்டியிடுவதாக ஈசுவரப்பா தெரிவித்துள்ளார். இது அவரது தனிப்பட்ட முடிவாகும். சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி எங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம்.
    • பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    தொழில்நுட்ப மையமான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் டாக்டர் ஒருவர் வீடுகளில் நீர் சேமிப்பு பற்றிய 4 யோசனைகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திவ்யா சர்மா என்ற அந்த மருத்துவர் பூமியில் உள்ள நீர் சேமிப்பு அணுகுமுறை எளிமையானது மற்றும் பயனுள்ளது என்று கூறியுள்ளார். டாக்டர் சர்மா தனது பதிவில், ஒரு தோல் மருத்துவராக நான் எப்போதும் பக்கெட் குளியல் செய்வதை ஊக்குவிப்பேன். ஷவரில் குளித்தால் நிமிடத்திற்கு 13 லிட்டர் தண்ணீர் செலவாகும். ஆனால் பக்கெட் குளியலில் மொத்தமாக 20 லிட்டர் மட்டுமே ஆகும். 5 நிமிடம் ஷவரில் குளிப்பதையும், பக்கெட் குளியலையும் ஒப்பிடும் போது தோராயமாக 180 லிட்டர் தண்ணீர் சேமிப்பாகிறது. இதே போல ஆர்.ஓ.வில் இருந்து வரும் நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து அதனை வீட்டை துடைப்பதற்கும், தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம். இதன் மூலமாக சுமார் 30 லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.

    மேலும் வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம். இதுபோன்ற சிறிய முயற்சிகள் மூலம் எங்கள் குடும்பத்தில் ஒரு நாளைக்கு 600 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
    • தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தின்போதும், அந்த கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜூன கார்கேவும் பல உத்தரவாதங்களை அளித்துள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
    • பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வருகிற மே மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுறது . முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்த பயணத்தில் காலை நேரத்தில் பொது மக்கள் மத்தியில் பேசுகிறார். மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    • வாலிபர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.

    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ஆதர்ஸ் நகரில் ஒரு கோவில் உள்ளது. இந்த கோவிலிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இந்த கோவில் ஊழியர்கள் கதவை திறந்த போது அங்கு காணிக்கை பெட்டியில் இருந்து பணம், நகை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர் கோவிலுக்கு வரும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அந்த நபர் காணிக்கை பெட்டி அருகே சென்று கடவுள் முன்பு கை நீட்டி வழிபட ஆரம்பிக்கிறார். அதன் பிறகு காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் கோவிலில் கைவரிசை காட்டியது அதே பகுதியை சேர்ந்த கோபேஷ் சர்மா என்பதும், இவர் கோவில்களை குறிவைத்து திருடும் பழக்கம் கொண்டவர் என்பதும் தெரியவந்தது. இரவு நேரங்களில் கோவில் கதவுகளை உடைத்து, கடவுளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து நகை, பணத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்ட இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இவர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன.
    • போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு என்ற இடத்தில் போர் விமானங்களை அவசரமாக தரை இறக்குவதற்காக 4.1 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சாலையில் அவசர காலத்தில் போர் விமானங்களை தரை இறக்கும் திறன் மதிப்பீடு சோதனையை விமானப்படையினர் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர்.

    தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு முதல் ரெணங்கிவரம் வரை அவசர காலத்தில் விமானங்கள் தரை இறக்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சாலையில் சுகோய் 232 ரக 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன. அதனை ஹாக் ரேஞ்ஜின் வகை 2 விமானங்கள் பின் தொடர்ந்து சென்றன.


    இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முன்னதாக போர் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்த போது திடீரென தெரு நாய் ஒன்று விமான ஓடு பாதையில் குறுக்கே சென்றது.

    இதனைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நாயை விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சோதனை நடத்திய காட்சி.

    • மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?.
    • மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் தேர்தலையொட்டி மாற்றப்படுவார்கள்.

    இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆறு மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் "பா.ஜனதாவின் இழிவான யுக்திகள் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிக்கின்றன. மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?. தேர்தல் ஆணையமா?. அல்லது எச்.எம்.வி.யா? (ECI or HMV?)

    மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள். நாங்கள் 2024 தேர்தல் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

    • கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 42). இவர் வியாபார நிமித்தமாக தனக்கு சொந்தமான மினி லோடு வேனில் கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். வேனை தளவாய்புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(32) என்பவர் ஓட்டி வந்தார்.

    லோடு வேன் இன்று அதிகாலையில் புளியங்குடி எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கனிமவளம் ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கனிமவள லாரியும், லோடு வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் லோடு வேனின் முன்பக்க கேபின் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரையும் மீட்டனர். ஆனால் எனினும் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். கணேஷ்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவரை போலீசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×