என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ஆந்த்ரோபிக் நிறுவனத்தை பென்டகன் தனது 'சப்ளை செயின் ரிஸ்க்' பட்டியலில் சேர்த்து அதன் செயல்பாடுகளை பகுதியளவு முடக்கியுள்ளது.
    • டிரம்ப் குறித்து தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    ராணுவ உளவு வேலைகளுக்கு ஏஐ உடைய முழு அணுகலையும் வழங்க முடியாது என கூறி ஆந்ரோபிக் நிறுவனம் அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனுடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அதன்பின் அந்த ஒப்பந்தத்தை ஓபன் ஏஐ நிறுவனம் கைப்பற்றியது.

    இந்நிலையில் பென்டகனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் பிரிவு தலைவரான கைட்லின் கலினோவ்ஸ்கி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இவர் கடந்த 2024 நவம்பரில்தான் மெட்டா நிறுவனத்திலிருந்து விலகி ஓபன் ஏஐ இல் இணைந்தார்.

    பென்டகனின் ரகசிய நெட்வொர்க்குகளில் ஓபன் ஏஐ-இன் ஏஐ மாடல்களைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என கைட்லின் தெரிவித்துள்ளார்.

    சட்ட மேற்பார்வையின்றி அமெரிக்க குடிமக்களை ஏஐ மூலம் உளவு பார்ப்பது மற்றும் மனிதக் கட்டுப்பாடு இல்லாத தானியங்கி ஆயுதங்களில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் ஆழமான விவாதங்கள் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து ஓபன் ஏஐ தரப்பு கூறுகையில், "தேசிய பாதுகாப்பிற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதற்காகவே பாதுகாப்புத் துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    உள்நாட்டு உளவு வேலைகளுக்கோ அல்லது தானியங்கி ஆயுதங்கள் தயாரிப்பதற்கோ எங்களது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது.

    இது தொடர்பாக அரசு மற்றும் பொது அமைப்புகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஆந்த்ரோபிக் நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் டிரம்ப் ஆத்திரமடைந்தார்.

    எனவே ஆந்த்ரோபிக் நிறுவனத்தை பென்டகன் தனது 'சப்ளை செயின் ரிஸ்க்' பட்டியலில் சேர்த்து அதன் செயல்பாடுகளை பகுதியளவு முடக்கியுள்ளது.

    இந்தப் பட்டியலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டி, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடி, கடந்த காலங்களில் அதிபர் டிரம்ப் குறித்து தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    முன்னதாக மனிதத் தலையீடு இல்லாத ஆயுதங்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றுக்குத் தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
    • கம்ப்யூட்டர் புரோகிராமிங் 75% பணிகள் ஏஐ உதவியுடன் செய்யப்படுகின்றன.

    செயற்கை நுண்ணறிவு எழுச்சியால் உலகம் முழுவதிலும் தொழில்நுட்ப நிறுவனங்களில் லே ஆப் எனப்படும் பணிநீக்கங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.

    மனித வேலைகளை மனிதர்களை விட ஏஐ வேகமாக செய்வதாலும் மனிதர்கள் ஏஐ க்கு தகவமைத்துகொள்ளாதபட்சத்திலும் வரும் காலங்களில் வேலையிழப்புகள் அதிகம் இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில் முன்னணி ஏஐ நிறுவனங்களில் ஒன்றான அந்திரோபிக் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

    அந்நிறுவனத்தின் Claude ஏஐ உட்பட ஏஐ கருவிகளை உண்மையில் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    இதன் மூலம் ஏஐ எந்த வேலைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்ற தரவுகளை சேகரித்ததன் மூலம் எந்த வேலைகளுக்கு ஏஐ ஆல் ஆபத்து இருக்காது என தெரியவந்துள்ளது. 

    இதில் சுமார் 22 வேலைகள் ஏஐ ஆல் பாதிக்கப்படாது என்று ஆந்திரோபிக் பட்டியலிட்டுள்ளது.  

    அதன்படி விவசாயம், மீன்பிடித்தல், வனத்துறை, கட்டுமானப் பணிகள், அகழ்வாராய்ச்சி, இயந்திரங்களை நிறுவுதல், பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல், உணவு தயாரித்தல், பரிமாறுதல், கட்டிட பராமரிப்பு, துப்புரவு வேலைகள், போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் ஏஐ தலையீடு இருக்காது. 

    மேலும், முடிதிருத்துதல், முதியோர் பராமரிப்பு போன்ற தனிநபர் பராமரிப்பு மற்றும் சேவை, தொழிற்சாலை இயந்திரங்களை இயக்குவது உள்ளிட்ட உற்பத்தித் துறை வேலைகள், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணிகள், வணிக மற்றும் நிதிச் செயல்பாடுகள் ஆகியவற்றை ஏஐ-ஆல் செய்ய முடியாது.

    அதேபோல், ஆய்வுப் பணிகள், தீயணைப்பு, காவல், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு சேவைகள், சமூக சேவை, விற்பனை மற்றும் அது சார்ந்த பணிகள், கற்பித்தல், கலை, பொழுதுபோக்கு, ஊடகங்கள் ஆகியவற்றில் நேரடி மனித திறன் சார்ந்த பணிகள் பாதிக்கப்படாது.

    இந்த வேலைகள் பெரும்பாலும் உடல் உழைப்பு, மனிதர்களுடனான நேரடித் தொடர்பு மற்றும் இயந்திரங்களால் செய்ய முடியாத நுணுக்கமான வேலைகளை அடிப்படையாகக் கொண்டவை.

    சிக்கலான நேரங்களில் மனிதர்கள் எடுக்கும் முடிவுகளை இயந்திரங்களால் எடுக்க முடிவதில்லை, எனவே நிபுணத்துவம் வாய்ந்த சிறப்புத் தேர்ச்சி தேவைப்படும் வேலைகளுக்கு ஏஐ ஒத்துவராது.

    ஆபத்தில் உள்ள துறைகள்:

    கம்ப்யூட்டர் புரோகிராமிங் 75% பணிகள் ஏஐ உதவியுடன் செய்யப்படுகின்றன. கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கஸ்டமர் சர்வீஸ் சேவைகள், தானியங்கி மென்பொருட்கள், சாட்பாட்ஸ் மூலம் செய்யப்படுகின்றன.

    டேட்டா என்ட்ரி எனப்படும் தரவு உள்ளீடு வேலைகள் ஏஐ ஆல் 67% மேற்கொள்ளப்படுகின்றன. கணினி துறையில் 94% வேலைகளை ஏஐ ஆல் செய்ய முடியும்.

    சுருக்கமாகச் சொன்னால், கம்ப்யூட்டர் திரைக்கு வெளியே நடக்கும் வேலைகள் இப்போதைக்கு ஏஐ ஆல் பறிக்கப்பட வாய்ப்பில்லை என்கிறது ஆந்த்ரோபிக்.  

    • அமெரிக்காவின் போர் அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டது.
    • ஆந்திரோபிக் நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தத்தை பென்டகன் ரத்து செய்தது.

    நவீன கால போர்கள் வீரர்களின் எண்ணிக்கையை விட, தரவுகளின் வேகத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.

    தாக்குதல் நடத்த முதலில் இலக்குகளை தீர்மானிக்க வேண்டும். இலக்குகளை தீர்மானிக்க, தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

    தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தின் சாட்டிலைட் புகைப்படங்கள், உளவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த தரவுகளில் அடங்கும்.

    ராட்சதனின் வருகை:

    ஏஐ என்ற ராட்சத தொழில்நுட்பம் வரும் வரை இந்த தரவுகளை ஆய்வு செய்வது ராணுவ நிபுணர்களால் செய்யப்பட்டு வந்தது.

    நிபுணர்கள் என்றாலும் அவர்களும் மனிதர்களே, தரவுகளை ஆய்வு செய்து முடிவெடுக்க மனிதர்களுக்கு நேரம் எடுக்கும். எனவே இலக்கை நிர்ணயித்து தாக்குதல் நடத்துவதும் மிக நீண்ட செயல்முறையாக இருந்து வந்தது.

    ஆனால் ஏஐ ஆயிரக்கணக்கான தரவுகளை நிமிடங்களில் முழுமையாக ஆய்வு செய்து துல்லியமான முடிவுகளை வழங்குகிறது. இது எளிதில் இலக்கை தீர்மானிக்க உதவுகிறது.

    போரில் வெற்றி என்பது யார் பலசாலி என்பதை விட யார் வேகமாக செயல்படுகின்றனர் என்பதை பொறுத்தே உள்ளது.

    எனவே ஏஐ மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் இந்த வேகம், போர் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

    அந்த வகையில் மனிதர்கள் முடிவெடுக்கும் முறையிலிருந்து, இயந்திரங்களே மின்னல் வேகத்தில் முடிவெடுத்துத் தாக்கும் புதிய முறைக்கு அமெரிக்கா மாறியுள்ளது.

    கடந்த ஜனவரி அமெரிக்காவின் போர் அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டது.

    ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஏஐ-ஐ முழுமையாகப் புகுத்துவது, நவீன ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி எதிரிகளின் நகர்வுகளைக் கணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றன.

    இந்த ஏஐ பலத்தை  பயன்படுத்தி ஏற்கனவே 2 நாடுகளின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது  நவீன போர் முறையில் ஏஐ உடைய முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளது.

    ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்

    கடந்த ஜனவரி 3 ஆம் தேதி இரவு, "ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்" என்ற பெயரில் வெனிசுலா நாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக நுழைந்தது.

    அந்நாட்டு தலைநகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகைக்கு உள்ளேயே நேரடியாக புகுந்து அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்காவுக்கு நாடுகடத்திச் சென்றது.

    இந்த தாக்குதலுக்கு முன் பல ஆயிரம் மணிநேர ஆடியோ பதிவுகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்து, மதுரோவின் பாதுகாப்பில் இருந்த ஓட்டைகளை கண்டறிந்த அமெரிக்க ராணுவம், அதன் மூலம் தாக்குதலை திட்டமிட்டது பின்னர் தெரியவந்தது.

    ஆபரேஷன் எபிக் ஃபியூரி:

    இதேபோல் கடந்த வாரம் சனிக்கிழமை, பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

    இந்தத் தாக்குதல் வெறும் ஏவுகணைத் தாக்குதல் மட்டுமல்ல, இது உலகின் முதல் ஏஐ-ஆல் வழிநடத்தப்பட்ட போர்முறை என்று அழைக்கப்படுகிறது.

    அண்மையில் ராணுவத்துக்கு தங்களின் முழு ஏஐ அணுகலையும் வழங்க முடியாது என மறுத்ததால் ஆந்திரோபிக் நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ரத்து செய்தது.

    இந்நிலையில் ஆந்திராபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ உதவியுடனே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

    வழக்கமாக ராணுவ அதிகாரிகள் பல வாரங்கள் செய்ய வேண்டிய வேலையை கிளாட் ஏஐ வெறும் சில மணிநேரங்களில் செய்து முடித்தது.

    செயற்கைக்கோள் படங்கள், உளவுத் தகவல்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் என பல கோடி தகவல்களை ஏஐ சில நிமிடங்களில் அலசி ஆராய்ந்தது.

    காமேனி எங்கே இருக்கிறார், அவரது பாதுகாப்பு வளையம் எப்படி இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, எங்கே தாக்கினால் வெற்றி கிடைக்கும் என்பதை ராணுவ அதிகாரிகளுக்கு ஏஐ பரிந்துரைத்தது.

    தாக்குதலை தொடங்குவதற்கு முன்பே, பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை கணினி மூலம் ஒத்திகை பார்த்து ஏஐ சொல்லியுள்ளது.

    கொலைச் சங்கிலி

    ராணுவத்தில் கொலைச் சங்கிலி, அதாவது 'Kill chain' என்ற ஒரு வார்த்தை பிரயோகம் உண்டு. ஓர் இலக்கைக் கண்டுபிடித்து அதைத் தாக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே Kill chain என்று அழைக்கப்படும்.

    மனிதர்கள் தரவுகளை கையாண்ட வரை இதற்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும்.

    மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள் மூலம் கிளாட் போன்ற ஏஐ கருவிகளால் தரவுகள் ப்ராசஸ் செய்யப்படுவதால், இந்த முடிவெடுக்கும் நேரம் வெறும் நிமிடங்களாகக் குறைந்துவிட்டது.

    இதனால் எதிரிகள் தப்பிச் செல்லும் முன்பே அமெரிக்கப் படைகளால் மின்னல் வேகத்தில் முடிவெடுத்து தாக்க முடிகிறது.

    160 சிறுமிகள் புதைக்கப்பட்ட இடம் 

    160 சிறுமிகள்:

    அதேநேரம் உயிரைப் பறிக்கும் முடிவுகளை எடுக்கும்போது, மனிதர்களுக்குப் பதில் இயந்திரங்களை அதிகம் நம்புவது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    ஏஐ தவறான ஒரு இடத்தைக் குறிவைத்தால், அப்பாவி மக்கள் கொல்லப்பட வாய்ப்புள்ளது.

    அமெரிக்க தாக்குதலில் தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளி கடந்த சனிக்கிழமை தாக்கப்பட்டதும் இதில் 160 சிறுமிகள் கொல்லப்பட்டதும் இதற்கு உதாரணமாகும்.

    இனிவரும் காலங்களில் போர்கள் ஆயுதங்களால் மட்டுமின்றி, ஏஐ தொழில்நுட்பத்தாலும், அல்காரிதம் எனப்படும் கணினி சூத்திரங்களாலும் தான் தீர்மானிக்கப்படும் என்பதை இந்த போர் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. 

    • நாங்கள் அனைத்தையும் பார்க்கிறோம். வரவேற்பு அறை முதல் நிர்வாண உடல்கள் வரை.
    • பயனர்களின் தவறுகளை சட்டபூர்வமாக திருட ஒரு தந்திரமான வழி.

    பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் ஆகிய முன்னணி சமூக வலைதளங்களை இயக்கி வரும் நிறுவனம் மெட்டா. இதன் தலைமை செயல் அதிகாரியாக பேஸ்புக்-ஐ உருவாக்கிய மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.

    பயனர்களின் தரவுகளை உளவு பார்க்கும், திருடும் குற்றச்சாட்டுகளுக்கு மெட்டாவின் பேஸ்புக் பல முறை உள்ளாகி நீதிமன்ற விசாரணையையும் எதிர் கொண்டது.

    மெட்டா சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி மெட்டா ஏஐ மற்றும் பிற தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் இயங்கி வருகிறது.

    அந்த வகையில் மெட்டா நிறுவனத்தின் Ray Ban ஸ்மார்ட் கிளாஸ் சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் ஒன்றாக உள்ளது.

    எசிலார் லுக்சோட்டிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இந்தக் கண்ணாடிகள், 2025ல் மட்டும் 70 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

    இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இந்த Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தும் பயனர்களின் அந்தரங்கக் காட்சிகள் கண்காணிக்கப்படுவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    கென்யாவின் நைரோபியில் உள்ள Sama என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊழியர்கள், மெட்டா கண்ணாடிகள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்து வகைப்படுத்தும் வேலைகளை செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

    கண்ணாடியை அணிந்துகொண்டு இருக்கும் பயனர்கள் உடைகளைக் களைவது, கழிவறைக்குச் செல்வது மற்றும் உடலுறவு கொள்வது போன்ற மிக அந்தரங்கமான காட்சிகள் இந்தக் கண்ணாடிகள் மூலம் படமாக்கப்பட்டு, அந்த ஊழியர்களுக்கு அனுப்பப்படுவதாக ஸ்வீடன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    சில வீடியோக்களில் பயனர்களின் வங்கி அட்டைகள் தெளிவாகத் தெரிவதாகவும், இவை கசிந்தால் மிகப்பெரிய பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் எழுந்துள்ளது.

    "நாங்கள் அனைத்தையும் பார்க்கிறோம். வரவேற்பு அறை முதல் நிர்வாண உடல்கள் வரை. சிலர் இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டே உடலுறவு கொள்கிறார்கள்" என்று அந்த கென்ய நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கூறியதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அந்த ஊழியர்கள் பிறரின் அந்தரங்கங்களை கண்காணிக்கும் வேலையை விரும்பவில்லை என்றாலும் வேறு வழியின்றி அதில் ஈடுபட்டுள்ளதாக கூறுவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    ஏஐ-ஐ மேம்படுத்த பயனர்களின் உரையாடல்கள் மற்றும் தரவுகள் தானியங்கி முறையிலோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ ஆய்வு செய்யப்படலாம் என்று மெட்டா நிறுவனம் தனது தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இது பயனர்களின் தவறுகளை சட்டபூர்வமாக திருட ஒரு தந்திரமான வழி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.    

    • சர்ச்சை ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து ஆந்த்ரோபிக் நிறுவனம் விலகிய நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஓபன்ஏஐ கைப்பற்றியது.
    • சாட்ஜிபிடி-யை பின்னுக்கு தள்ளி அதன் போட்டியாளரான Claude சாட்பாட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    உலகளவில் செயற்கை நுண்ணறிவு துறையில் ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி), எக்ஸ் (குரோக்), ஆந்த்ரோபிக் (Claude ஏஐ) ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

    சாட்பாட்கள், வேலை என்பதையும் தாண்டி அன்றாட தேவையாகவே மாறும் சூழல் உருவாகி உள்ளது.

    அந்த வகையில் அந்தந்த நிறுவனங்கள் அவற்றில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அவ்வப்போது அப்டேட்களை வழங்கி வருகின்றன.

    அந்த வகையில் ஓபன் ஏஐ நிறுவனம் தனது சாட்ஜிபிடி சாட்பாட் உடைய புதிய மாடலான ChatGPT 5.3 Instant பாதிப்பை அறிமுகம் செய்துள்ளது.

    பயனர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்த புகார்களை ஏற்று, சாட்ஜிபிடியின் பேச்சில் இருந்த சில செயற்கையான மற்றும் எரிச்சலூட்டும் (Cringe) விஷயங்களை ஓபன் ஏஐ குறைத்துள்ளது.

    முன்பு போல நீண்ட முன்னுரைகள் அல்லது தேவையற்ற அறிவுரைகள் இன்றி, கேட்கப்படும் கேள்விக்கு ChatGPT 5.3 Instant நேரடியாக பதிலளிக்கும்.

    புதிய மாடல் தவறான தகவல்களைத் தருவதை பெருமளவு குறைத்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்திப் பதிலளிக்கும்போது தவறுகள் 26.8% குறைந்துள்ளன. தனது சுய அறிவில் இருந்து பதிலளிக்கும்போது தவறுகள் 19.7% குறைந்துள்ளன.

    அதேநேரம் சாட்ஜிபிடியின் பதில்கள் எந்த தொனியில் இருக்க வேண்டும் என்ற Customization ஆப்ஷனும் இதில் உள்ளது.

    இதன்படி, சாட்ஜிபிடி உற்சாமாகவோ, கனிவாகவோ, நேரடியாகவோ பதில்களை வழங்கும்வகையில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்க மாற்றிக் கொள்ளலாம்.

    உரையாடலின் போக்கில் திடீர் மாற்றங்கள் இன்றி, ஒரு சீரான தன்மையைப் பராமரிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ChatGPT 5.3 வெளிவந்த அதே நேரத்தில், கூகுள் நிறுவனமும் தனது Gemini 3 மாடலை மேம்படுத்தியுள்ளது.

    சர்ச்சை ஒப்பந்தம்

    இதற்கிடையே அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனுடன் ஓபன் ஏஐ அண்மையில் செய்துகொண்ட ஒப்பந்தம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    முன்னதாக இந்த சர்ச்சை ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து ஆந்த்ரோபிக் நிறுவனம் விலகிய நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஓபன்ஏஐ கைப்பற்றியது.

    இந்த ஒப்பந்தத்தின்படி ஏஐ-ஐ உள்நாட்டு உளவு வேலைகளுக்காக பயன்படுத்த அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    எனவே தங்கள் தரவுகள் கண்காணிப்படும் என்ற கவலையால் பல பயனர்கள் சாட்ஜிபிடி சேவைகளை புறக்கணித்து வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை மட்டும் சாட்ஜிபிடி செயலியை Uninstall செய்தவர்களின் எண்ணிக்கை 295% அதிகரித்துள்ளது.

    அதேநேரம், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சாட்ஜிபிடி-யை பின்னுக்கு தள்ளி அதன் போட்டியாளரான அந்த்ரோபிக் உடைய Claude சாட்பாட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.   

    • உயர்நீதிமன்றம் 4 தீர்ப்புகளும் போலியானவை என்பதை ஒப்புக்கொண்ட போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • இதற்கான சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    அந்தச் சொத்தை ஆய்வு செய்ய அட்வகேட் கமிஷனர் ஒருவரை நீதிமன்றம் நியமித்தது.

    ஆனால் அட்வகேட் கமிஷனர் கொடுத்த அறிக்கையில் தவறு இருப்பதாக மனுதாரர்களில் ஒரு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.

    இந்தப் புகாரை நிராகரிக்க விசாரணை நீதிமன்ற நீதிபதி, இதேபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கியதாக, நான்கு தீர்ப்புகளை மேற்கோள் காட்டியிருந்தார்.

    ஆனால், அந்தத் தீர்ப்புகள் உண்மையில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டவை அல்ல என்றும் அவை ஏஐ தொழில்நுட்பத்தால் கற்பனையாக உருவாக்கப்பட்ட போலி தீர்ப்புகள் என்பது பின்னர் தெரியவந்தது.

    எனவே விசாரணை நீதிமன்றத்தின் மீது குற்றம்சாட்டி மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

    உயர் நீதிமன்றம் அந்த 4 தீர்ப்புகளும் போலியானவை என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், நீதிபதியை எச்சரித்ததோடு மட்டும் நிறுத்திக்கொண்டது.

    இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    இதன்போது பேசிய நீதிபதிகள், "போலித் தீர்ப்புகளை ஆதாரமாகக் கொண்டு முடிவெடுப்பது என்பது வெறும் சட்ட ரீதியான தவறு மட்டுமல்ல, இது நீதித்துறை விதிகளை மீறிய தவறான நடத்தை (Judicial Misconduct) ஆகும்.

    இதற்கான சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இத்தகைய நடவடிக்கைகள் நீதித்துறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும்" என்று தெரிவித்தனர்.

    இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்க இந்திய அட்டர்னி ஜெனரல் மற்றும் இந்திய பார் கவுன்சிலுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இந்த வழக்கு வரும் மார்ச் 10 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதுவரை போலி தீர்ப்புகளின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையை பயன்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  

    குறைந்த கால இடைவெளியில் அசுர வளர்ச்சி கண்டுள்ள செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வேலைகளையும் தாண்டி தற்போது நீதித்துறை வரை ஊடுருவியுள்ளது விவாதப் பொருளாகி உள்ளது.

    • அன்லிமிட்டெட் என்றால் உண்மையான அன்லிமிட்டெட் என்று பொருள்படாது.
    • இது மற்ற டேட்டா வவுசர்களை விட தனித்துவம் பெற்றுள்ளது.

    இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் உள்ளது. அவ்வப்போது தனது சலுகைகளை மாற்றியமைத்து வரும் நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் ரூ. 99 விலையில் டேட்டா வவுச்சர் ஒன்றை அறிவித்தது. அன்லிமிட்டெட் டேட்டா பலன் வழங்குவதால் இது மற்ற டேட்டா வவுசர்களை விட தனித்துவம் பெற்றுள்ளது.

    எனினும், வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களின் கூற்றுப்படி அன்லிமிட்டெட் என்றால் உண்மையான அன்லிமிட்டெட் என்று பொருள்படாது. இது ஒரு ஆட்-ஆன் டேட்டா பேக் ஆகும், இதன் காரணமாக பயனர்கள் ஏற்கனவே பிரீபெயிட் சலுகை ஒன்றை ரீசார்ஜ் செய்து அதற்கான வேலிடிட்டி முடியாமல் இருந்தால் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும்.

    வோடபோன் ஐடியாவின் டேட்டா வவுச்சர்கள் பிரீபெயிட் பயனர்களுக்காக அறிவிக்கப்பட்டு இவை உரிமம் பெற்ற சேவை பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ரூ. 99 டேட்டா வவுச்சரின் பலன்களை பொருத்தவரை இது அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகிறது. எனினும், இதில் அன்லிமிட்டெட் டேட்டா நாள் ஒன்றுக்கு 20 ஜி.பி. வரை பொருந்தும். இந்த வவுச்சரின் வேலிடிட்டி 2 நாட்கள் ஆகும்.

    அந்த வகையில், ஏற்கனவே பிரீபெயிட் ரீசார்ஜ் செய்து அவசர டேட்டா தேவைப்படும் பட்சத்தில் பயனர்கள் இந்த டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் செய்து 40 ஜி.பி. வரையிலான டேட்டா பெற முடியும். இது தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 64 கிலோபைட் (Kbps) ஆக குறைக்கப்பட்டு விடும். இந்த வவுச்சரின் படி பயனர்கள் நாள் ஒன்றுக்கு 20 ஜி.பி. டேட்டாவுக்கு ரூ. 49.5 அல்லது ரூ. 50 வரை செலவிட நேரிடும்.

    இந்த வவுச்சரில் 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் இது 5ஜி பயன்படுத்துவோருக்கு தேவைப்படாது. எனினும், 4ஜி பயனர்களுக்கு இது குறுகிய காலக்கட்டத்தில் பயன்படுத்த அளவுக்கு மீறிய டேட்டா என்றே கூறலாம். இது குறைந்த விலையில் கிடைக்கவில்லை என்ற போதிலும், அவசர தேவைக்கு ஆட்-ஆன் டேட்டா என்ற முறையில் இது குறிப்பிட்ட பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 

    • எனவே அந்த வேலைகளுக்கு ஏஐ ஆல் எந்த பாதிப்பும் இருக்காது.
    • எலான் மஸ்க் முன்பு கூறியிருந்த்தும் குறிப்பிடத்தக்கது.

    ஏஐ மனித வேலைகளை பறிக்குமா என்ற விவாதம் உலகளவில் நடந்து வருகிறது. இதுகுறித்து தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் தத்தமது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    இன்போனிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், "ஏஐ என்பது ஒரு சாதனம் மட்டுமே. மனிதனின் சிந்திக்கும் திறன் மற்றும் படைப்பாற்றலை அது ஒருபோதும் ஈடுகட்ட முடியாது.

    இளைஞர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்தத் தொழில்நுட்பங்களை ஒரு உதவியாளராகப் பயன்படுத்தி அவற்றில் தேர்ச்சி பெறுவதுதான்.

    ஏஐ கருவிகளைத் திறம்படப் பயன்படுத்திக் கற்றுக்கொண்டால், ஐடி துறையில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்" என்று ஊக்கம் அளிக்கும் வகையில் நேர்மறையாக பேசியிருந்தார்.

    இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபரும் Zoho தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " ஒரு மனிதர் தனது மதிப்பைப் பணத்தை வைத்தோ அல்லது அவரது அறிவுசார் அந்தஸ்தை வைத்தோ கணக்கிட்டால், ஏஐ ஆல் அவருக்குப் பெரிய மன உளைச்சலே ஏற்படலாம்.

    ஆனால் குழந்தைகளுக்கு கற்பிப்பது, முதியோரை பராமரிப்பது, நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டு விவசாயத்துக்கு திரும்புவது, காட்டில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றுவது, கோயில் பூசாரிகள் யாரும் வராவிட்டாலும் தினசரி சடங்குகளை செய்வது, இசைக் கலைஞர்கள் தினமும் பயிற்சி செய்து சிறிய எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருந்தாலும் கச்சேரி நடத்துவது போன்றவை பணத்துக்காக செய்யப்படுவதில்லை. எனவே அந்த வேலைகளுக்கு ஏஐ ஆல் எந்த பாதிப்பும் இருக்காது.

    எனவே மனிதர்கள் எதிர்காலத்தில் இத்தகைய பணிகளை மையமாகக் கொண்டு வாழலாம்" என்று தெரிவித்துள்ளார். வேம்புவின் இந்த கருத்துக்கு நேரமறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

    "எதிர்காலத்தில் வேலை என்பது ஒரு விருப்பமாக மட்டுமே இருக்கும்; மக்கள் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது விருப்பத்திற்காகவோ மட்டுமே வேலை செய்வார்கள்" என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முன்பு கூறியிருந்த்தும் குறிப்பிடத்தக்கது.   

    • நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என அரசு கோரியது.
    • தார்மீக ரீதியாக சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி மறுத்துவிட்டார்.

    அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கோலோச்சும் ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி), எக்ஸ் (குரோக்) ஆகியவற்றுக்கு மத்தியில் ஆந்த்ரோபிக் (Claude ஏஐ) குறிப்பிடத்தகுந்த போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

    முன்பு ஓபன் ஏஐ நிறுவனத்தில் துணைத் தலைவர்களாக பணியாற்றிய டேரியோ அமோடி மற்றும் அவரது சகோதரி டேனியலா அமோடி ஆகியோர் 2021ல் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஆந்த்ரோபிக் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

    ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் ஏஐ பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டியே அவர்கள் வெளியேறினர்.

    தற்போது ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

    இதற்கிடையே டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை(பென்டகன்) உள்ளிட்ட முக்கிய துறைகள் ஆந்த்ரோபிக் உடைய Claude ஏஐ சேவையை பயன்படுத்தி வந்தது.

    அண்மையில், அந்திரோபிக் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் கோரினார்.

    ஆனால் அந்திரோபிக் நிறுவனம் இதற்கு வெளிப்படையாகவும், முழுமையாகவும் மறுத்துவிட்டது.

    மனிதத் தலையீடு இல்லாத ஆயுதங்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றுக்குத் தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி மறுத்துவிட்டார்.

    எனவே பென்டகன் உடனான அந்திரோபிக் ஒப்பந்தம் ரத்தாகி உள்ளது.

    மேலும் அந்திரோபிக் உடைய பிடிவாதம் டிரம்ப் உடைய கோபத்தையும் சம்பாதித்துள்ளது.

    அனைத்து கூட்டாட்சி முகமைகளும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஆந்த்ரோபிக் தொழில்நுட்பம் எங்களுக்குத் தேவையில்லை, அதை நாங்கள் விரும்பவில்லை. இனி அந்த நிறுவனத்துடன் எந்த வணிகமும் செய்யப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    ராணுவம் எப்படிப் போராட வேண்டும் என்று ஒரு தனியார் நிறுவனம் கட்டளையிடுவதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் பாதுகாப்புத் துறை போன்ற அமைப்புகள், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அதனை முழுமையாக நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத், ஆந்த்ரோபிக் நிறுவனத்தை 'தேசிய பாதுகாப்பு விநியோகச் சங்கிலிக்கு அச்சுறுத்தல்' (Supply chain risk) என்று அறிவித்துள்ளார்.

    அந்த நிறுவனத்தின் முடிவு, அதன் அகங்காரத்தையும் துரோகத்தையும் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

    இந்தத் தடையின் காரணமாக, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் போட்டியாளர்களான,  ஓபன் ஏஐ பென்டகன் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தருவாயில் உள்ளது. 

    • படைப்பாற்றலை அது ஒருபோதும் ஈடுகட்ட முடியாது.
    • நான் மேற்கொண்ட சோதனைகள் எனக்கு ஒன்றைக் காட்டியுள்ளன.

    இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ். இதன் நிறுவனர் நாராயண மூர்த்தி (79).

    இவர் அவ்வப்போது கலந்துரையாடல்களில் பங்கேற்று தொழில்துறை குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    அந்த வகையில் தற்போது உலகில் அசுர வளர்ச்சி கண்டுள்ள செயற்கை நுண்ணறிவு குறித்து நாராயண மூர்த்தி தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.

    தனியார் ஊடக நேர்காணலில் பேசிய நாராயண மூர்த்தி, " ஏஐ என்பது ஒரு சாதனம் மட்டுமே. மனிதனின் சிந்திக்கும் திறன் மற்றும் படைப்பாற்றலை அது ஒருபோதும் ஈடுகட்ட முடியாது.

    முன்னதாக கணினிகள் அறிமுகமான போதும் இதேபோன்ற அச்சங்கள் எழுந்தன. ஆனால் அவை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கினவே தவிர, வேலைகளைப் பறிக்கவில்லை.

    தொழில்நுட்ப மாற்றத்தைக் கண்டு அஞ்சுவதை விட, அந்த மாற்றங்களுக்கு ஏற்ப புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    குறிப்பாக ஏஐ கருவிகளைத் திறம்படப் பயன்படுத்திக் கற்றுக்கொண்டால், ஐடி துறையில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.

    உற்பத்தித் திறனுக்காக ஜெனரேட்டிவ் ஏஐ-ஐ பயன்படுத்துவதில் நான் மேற்கொண்ட சோதனைகள் எனக்கு ஒன்றைக் காட்டியுள்ளன.

    ஒரு புத்திசாலியான மனிதன் இத்தகைய உதவி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் சிறந்த தரத்தையும், சிறந்த அளவிலான உற்பத்தித் திறனையும் பெற முடியும்.

    எனவே, இளைஞர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்தத் தொழில்நுட்பங்களை ஒரு உதவியாளராகப் பயன்படுத்தி அவற்றில் தேர்ச்சி பெறுவதுதான்.

    இந்திய இளைஞர்கள் கடின உழைப்புடன் ஏஐ போன்ற நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைத்தால், இந்தியாவின் உற்பத்தித்திறன் உலக அளவில் முதலிடத்தைப் பிடிக்கும்" என்று தெரிவித்தார்.

    நாராயணமூர்த்தியின் ஆலோசனைப்படி இன்போசிஸ் நிறுவனம் ஏற்கனவே, புதிய ஊழியர்களுக்கும் ஏற்கனவே உள்ளவர்களுக்கும் 'ஏஐ பிராம்ட் இன்ஜினியரிங்' குறித்த சிறப்புப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. 

    • ஸ்மார்ட்போன்கள் நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாக உருவெடுத்துள்ளன.
    • 5 ஐபோன் அசெம்பிளி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் ஐபோன் முதலிடம் பிடித்துள்ளது.

    தொழில்துறை தரவுகளின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 23 பில்லியன் டாலர் (ரூ.1.90 லட்சம் கோடி) மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, முதலிடத்தில் இருந்து வந்த ஆட்டோமோட்டிவ் டீசல் ஏற்றுமதியைப் பின்னுக்குத் தள்ளி, ஸ்மார்ட்போன்கள் நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாக உருவெடுத்துள்ளன.

    2025ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து மொத்தம் 30.13 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் 76 சதவீதம் ஆப்பிள் ஐபோன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்களில் பெரும்பகுதி அமெரிக்காவிற்குச் செல்கிறது.

    அதேபோல், உள்நாட்டிலும் 2025ல் அதிக விற்பனையான போனாக ஐபோன் 16 இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    தற்போது இந்தியாவில் டாடா குழுமத்தின் கீழ் 3 ஆலைகளும், பாக்ஸ்கான் கீழ் 2 ஆலைகளும் என மொத்தம் 5 ஐபோன் அசெம்பிளி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகையில், "இந்தியாவில் டிசம்பர் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சாதனை அளவிலான வருவாயைப் பெற்றுள்ளது. ஐபோன், மேக், ஐபேட் போன்ற சாதனங்களுடன் சேவைகள் பிரிவிலும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் வளர்ந்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி மும்பையில் மற்றொரு புதிய ஆப்பிள் ஸ்டோரைத் திறக்க உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.    

    • ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறான்.
    • 12 வயதிலேயே தனக்கு நிகரான ஒரு டிஜிட்டல் குளோன்-ஐ உருவாக்கினான்.

    டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ஏஐ தாக்க சர்வதேச உச்சிமாநாடு இன்றுடன் நிறைடைகிறது.

    இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் நடந்த கண்காட்சியில் பலவேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தின.

    இந்தச் சர்வதேச மேடையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ரவுல் ஜான் அஜு என்ற 16 வயது சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.

    மாநாட்டில் ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரஸ் உள்ளிட்ட பல தலைவர்களை ரவுல் ஜான் அஜு சந்தித்தான்.

    ரவுல் ஜான் அஜு

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளியை சேர்ந்த ரவுல், ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) செயல்பட்டு வருகிறான்.

    இந்த நிறுவனத்தின் கீழ், இந்திய நீதித் துறைக்காக நியாயசாதி என்ற ஏஐ உதவியாளரையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்காக ஜஸ்ட்ஈஸ் என்ற சட்ட உதவிக்கான சாட்பாட்-ஐயும் உருவாக்கி உள்ளான்.

    6 வயதிலிருந்தே ஏஐ மீது ஆர்வம் கொண்ட ரவுல், தனது கல்வி தளத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் 'Vbot' என்ற ஒரு ஏஐ-ஐ உருவாக்கினான். மேலும் தனது 12 வயதிலேயே தனக்கு நிகரான ஒரு டிஜிட்டல் குளோன் மற்றும் MeBot என்ற ஹூமனாய்டு ரோபோவை உருவாக்கினான்.

    கடந்த ஆண்டு தனது நிறுவனத்தில் தனது தந்தையையே ஒரு ஊழியராக நியமித்து செய்திகளில் இடம்பிடித்தான். பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு ஏஐ குறித்து பயிற்சி அளித்துள்ளான். ஏஐ மாநாட்டுக்கு முன்னதாக கடந்த வாரம் பிரதமர் மோடியை ரவுல் சந்தித்தான்.

    மேலும் அண்மையில் வந்தே பாரத் ரெயிலில் கேரள காங்கிரஸ் எம்பி சசி தரூர் ரவுல் உடன் பயணம் செய்தபோது அவனின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து ஊக்குவித்ததும் கவனம் பெற்றது.  

    ×