என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் முதலிடம் பிடித்த ஐபோன்கள்!
- ஸ்மார்ட்போன்கள் நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாக உருவெடுத்துள்ளன.
- 5 ஐபோன் அசெம்பிளி ஆலைகள் இயங்கி வருகின்றன.
2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் ஐபோன் முதலிடம் பிடித்துள்ளது.
தொழில்துறை தரவுகளின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 23 பில்லியன் டாலர் (ரூ.1.90 லட்சம் கோடி) மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, முதலிடத்தில் இருந்து வந்த ஆட்டோமோட்டிவ் டீசல் ஏற்றுமதியைப் பின்னுக்குத் தள்ளி, ஸ்மார்ட்போன்கள் நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாக உருவெடுத்துள்ளன.
2025ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து மொத்தம் 30.13 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் 76 சதவீதம் ஆப்பிள் ஐபோன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்களில் பெரும்பகுதி அமெரிக்காவிற்குச் செல்கிறது.
அதேபோல், உள்நாட்டிலும் 2025ல் அதிக விற்பனையான போனாக ஐபோன் 16 இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்தியாவில் டாடா குழுமத்தின் கீழ் 3 ஆலைகளும், பாக்ஸ்கான் கீழ் 2 ஆலைகளும் என மொத்தம் 5 ஐபோன் அசெம்பிளி ஆலைகள் இயங்கி வருகின்றன.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகையில், "இந்தியாவில் டிசம்பர் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சாதனை அளவிலான வருவாயைப் பெற்றுள்ளது. ஐபோன், மேக், ஐபேட் போன்ற சாதனங்களுடன் சேவைகள் பிரிவிலும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ந்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி மும்பையில் மற்றொரு புதிய ஆப்பிள் ஸ்டோரைத் திறக்க உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.






