என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்
- எலும்புகளை வலுப்படுத்துவதற்கு கீரை உதவுகிறது.
- புரதச்சத்து உணவுகளை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு அலுவலக வேலைக்கும் சென்று வருவது சற்று சவாலான விஷயம்தான். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர். பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...
கீரை
கீரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
பருப்பு
பருப்பு பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள். இதில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எனவே இதை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பருப்பு மிகவும் நல்லது.
ஓட்ஸ்
ஓட்சில் தினசரி ஆற்றலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. அவை மற்ற தானியங்களை விட அதிக புரதம் மற்றும் கொழுப்புச் சத்தை கொண்டிருக்கின்றன. மற்றும் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றையும் ஓட்ஸ் கொண்டுள்ளது.
பால்
பணிபுரியும் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு அமைப்பு பாதிக்கப்படுவதற்கும் அதிக ஆபத்து உள்ளது. இது அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. பால் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் புரதம், பாஸ்பரஸ், பி வைட்டமின் காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.
ப்ரோக்கோலி
பெண்கள் உண்ணவேண்டிய முக்கிய உணவுகளில் ப்ரோக்கோலியும் முக்கியமானது. ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கிறது. இது புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்று அறியப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கால்சியம் நிறைந்தது, இது எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது.
பீட்ரூட்
பீட்ரூட் நார்ச்சத்துக்கான சிறந்த மூலப்பொருளாகும். இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. பீட்ரூட் மற்றும் அதன் சாறு மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சிறந்த உடற்பயிற்சி, செயல்திறன் போன்ற பல நன்மைகளுடன் தொடர்புடையது.
பாதாம்
பாதாம் ஒரு ஃப்ரீபயாடிக் உணவாகும். அதாவது இது உங்கள் செரிமான அமைப்பு வழியாக செல்லும்போது புரோபயாடிக்குகளை உருவாக்க உதவுகிறது. 1/4 கப் பாதாம் ஒரு முட்டையை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இதில் மெக்னீசியமும் உள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தங்கள் உணவுகளில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.
- ரசக்கற்பூரத்தை உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- குளியலறை, சமையலறை பல்லி அதிகமாக வரும் இடங்களில் வைத்து விடலாம்.
50 கிராம் அளவு பாமாயிலை கடாயில் சேர்த்து அதை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 15 கொத்து வேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது வேப்பிலை நன்கு வெடிக்க ஆரம்பிக்கும். சற்று தூரமாக நிற்பது நல்லது. இல்லையென்றால் மூடி வைத்து விடலாம். எண்ணெயின் சத்தம் அடங்கியதும் மூடியை திறந்து வேப்ப இலைகளை மட்டும் எண்ணெயில் இருந்து எடுத்து விட வேண்டும். இதை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 3 கற்பூரத்தை பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ரசக்கற்பூரத்தை உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
வீட்டில், இந்த எண்ணெயை சிறு சிறு ஸ்பான்ச் துண்டுகளின் மீது சிறிதளவு ஊற்றினால் ஸ்பான்ச் எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும். இந்த ஸ்பான்ச் துண்டுகளை, கழிவறை, குளியலறை, சமையலறை, உள்ளிட்ட பல்லி அதிகமாக வரும் இடங்களில் வைத்து விடலாம். இப்படி செய்தால் பல்லி வரவே வராது.
டாய்லெட்டில் துர்நாற்றம் நீங்க
ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் அளவு ஏதாவது டூத் பேஸ்ட்டை எடுத்துக் கொண்டு இதனுடன் ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தில் போடக்கூடிய பவுடர் இரண்டு டீஸ்பூன் அளவு இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இதை மிக சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். நாம் எடுத்துக்கொண்ட அளவுக்கு 4 முதல் 5 உருண்டைகள் கிடைக்கும். இதை 1 மணி நேரம் காய வைக்க வேண்டும்.
வீட்டின் குளியலரை, டாய்லெட் உள்ளிட்ட இடங்களில் இந்த உருண்டையை போட்டு வைத்தால் நறுமணமாக இருக்கும். மேலும் டாய்லெட்டின் ப்ளஷ் டேங்கில் இதில் இரண்டு மூன்று உருண்டைகளை போட்டு வைப்பதன் மூலம், இது ஒவ்வொரு முறை ஃப்ளஷ் செய்யும் போதும் தண்ணீரில் சிறிது சிறிதாக கரைந்து வரும். இதனால் கறை படியாமல் இருக்கும்.
- கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும்.
- தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை 90 சதவீதம் தடுக்க முடியும்.
உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 3,00,000-க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஹெச்.பி.வி. தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஹெச்பிவி என்றால் என்ன?
ஹெச்பிவி என்பது மிகவும் பொதுவான வைரஸ்களின் குழுப்பெயர். இங்கு 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஹெச்.பி.வி. வைரஸ்கள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. சில வைரஸ்கள் நம் உடலில் மருக்களை ஏற்படுத்தும். அவை நம் கை, கால், பிறப்புறுப்பு அல்லது வாயில் தோன்றலாம்.
இருப்பினும், பெரும்பாலான மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர மாட்டார்கள். அவர்களின் உடல்கள் சிகிச்சையின்றியே வைரஸை அகற்றும். ஆனால் அதிக ஆபத்துள்ள ஹெச்.பி.வி. வைரஸ் வகைகள், அசாதாரண திசு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.
ஹெச்.பி.வி. தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கிறது?
ஹெச்.பி.வி. தடுப்பூசி ஒன்பது வகையான ஹெச்பிவி வைரஸ்களின் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஹெச்.பி.வி. தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதற்கும் மேல் நீண்ட காலம் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின்பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.
ஹெச்.பி.வி. தடுப்பூசி யாருக்கு?
ஹெச்.பி.வி. தடுப்பூசியை பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஹெச்.பி.வி. பாதிப்பிற்கு முன் எடுத்துக் கொண்டால் அது சிறப்பாக செயல்படும். ஏனெனில், தடுப்பூசிகளால் தற்காத்துக்கொள்ள மட்டுமே முடியும், அவை உடலில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், அவற்றை வெளியேற்ற முடியாது.
தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற வேண்டும்.
யாருக்கு ஹெச்பிவி ஏற்படும்?
ஹெச்.பி.வி. எளிதில் பரவக் கூடியது. இது தோல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பெரும்பாலான மக்கள் தங்களின் 25 வயதிற்குள்ளாகவே ஹெச்.பி.வி. பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான நேரங்களில் மக்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.
இது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. இது பாலியல் திரவங்களாலும் பரவுவதில்லை. ஆனால், இது தொடுதல் உள்ளிட்ட பாலியல் தொடர்புகளின் போது இது அடிக்கடி பரவுகிறது.
- நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் முக்கிய இடம்.
- கடைசி கட்டத்திற்கு வந்தபின்ரே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.
பெண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் முக்கிய இடம் வகிக்கின்றது. கருப்பை வாய் புற்றுநோயினை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்துக்கொள்வது மிகவும் கடினம். கடைசி கட்டத்திற்கு வந்தபின்ரே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.
இருப்பினும் இது குறித்த போதிய தெளிவு இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் இருப்பதை தெரிந்துக்கொள்ள முடியும். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடையே கருப்பை வாய் புற்றுநோய் அதிகமாக கண்டறியப்படுகின்றது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
கருப்பைவாய் புற்றுநோய் என்றால் என்ன?
பெண்களின் கருப்பைக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் ஒரு சிறிய வாய் பகுதியைத்தான் கருப்பைவாய் என அழைக்கப்படுகின்றது. இந்த சிறிய பகுதியில் ஏற்படும் புற்றுநோய் தான் கருப்பைவாய் புற்றுநோய் எனப்படும். அதாவது தேவையற்ற வகையில் கலன்கள் பிரிந்து பெருகுவதே புற்றுநோய் எனப்படும். இந்த செல்களின் பெருக்கம் எந்த பாகத்தில் ஏற்படுகின்றது என்பதை பொருத்தே இது எந்த வகை புற்றுநோய் என அடையாளப்படுத்தப்படுகின்றது.
கருப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகள்
சாதாரணமாக பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளியேறுவது வழக்கமான நிகழ்வு தான். ஆனால் அசாதாரண அளவில் அதிகமாக பிறப்புறுப்பில் இருந்து திரவங்கள் வெளியேறுவது இயல்பான விஷயமாக கருத முடியாது. இதுபோன்று அசாதாரணமாக திரவ வெளியேற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பிறப்புறுப்பில் இருந்து திவரம் வெளியேறுவது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளின் அறிகுறியாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் இதுவும் முக்கியமான அறிகுறியாகும்.
கால்கள் மற்றும் பாதங்களில் அதிக வலியை உணர்தல் அல்லது வீக்கம் ஏற்படுவதும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறியாக கருத முடியும்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு என்பது இயல்பானது தான். ஆனால் அசாதாரண நிலையில் அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது மாதவிடாய் காலம் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது முடிந்த பிறகோ பிறப்புறுப்பில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மருத்துப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
பொதுவாக சிறுநீர் பை நிரம்பும் போது சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கக்கூடும்.
சில சமயங்களில் சிறுநீர் பை நிரம்பி சிறுநீரை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாத நிலை ஏற்படும். இது எப்போதாவது ஏற்படுவது இயல்புதான் ஆனால் அடிக்கடி இந்த நிலை ஏற்பட்டால் இது கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
அதேபோல சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல் மற்றும் உடலுறவு கொண்ட பின்னர் அதிக வலியை உணர்தல் போன்றவையும் கருப்பை வாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும். பி.சி.ஓ.எஸ். உள்ளிட்ட பல பிரச்சினைகளின் போது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஹார்மோன் சமநிலை பிரச்சினை எதுவும் இல்லாத பட்சத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டால் அது கருப்பை வாய் புற்றுநோயின் ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கப்படுகின்றது.
கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் முதுகு வலியும் முக்கிய இடம் வகிக்கின்றது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் முதுகு வலி ஏற்படலாம். இதுவே தாங்கமுடியாத வலியாக இருந்தால் அதைனை அலட்சியப்படுத்த கூடாது.
உடலுறவில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்படும். குறிப்பாக கருப்பை வாய் பாதையில் புண்கள், கட்டிகள் குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அவர்களால் சாதாரணமாக உடலுறவில் ஈடுப்பட முடியாத நிலை காணப்படும் இவ்வாறாக அறிகுறிகள் கருப்பை வாய் புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும். மேலும் உடலுறவில் விருப்பமற்ற தன்மை, உடலுறவின் போது பிறப்புறுப்பு மற்றும் கருப்பை வாய் பகுதியில் வலி ஆகியவை உண்டாகலாம்.
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தாலும் அது கருப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம். இவ்வாறன அறிகுறிகள் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
- அலங்காரப் பொருட்கள் கூட ரகசிய கேமராவை கொண்டிருக்கலாம்.
- கேமராக்கள் பெரும்பாலும் மின்னணு சாதனங்களில் மறைக்கப்படுகின்றன.
மறைந்திருக்கும் ரகசிய கேமராக்களால் அம்பலமாகும் அபாயம் தற்போது நிறைய இடங்களில் இருக்கிறது. ஓட்டல், ஜவுளிக்கடையில் உடை அணிந்து பார்க்கும் அறை, பொதுவான இடங்களில் உள்ள கழிப்பிடம் போன்றவற்றில் ரகசிய கேமராக்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கலாம்.
இந்நிலையில், ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஓட்டல் அறைக்குள் சென்றதும். முதலில் அறையில் தேவையற்ற பொருட்களைக் கண்டால், உடனடியாக அவற்றை அகற்றச் சொல்லுங்கள். அகற்ற முடியாத பொருள் என்றால், அதுகுறித்து எச்சரிக்கையாக இருங்கள். அலங்காரப் பொருட்கள் கூட ரகசிய கேமராவை கொண்டிருக்கலாம்.
கேமராக்கள் பெரும்பாலும் மின்னணு சாதனங்களில் மறைக்கப்படுகின்றன. எனவே தங்கும் அறையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் மீது கவனம் செலுத்துங்கள். ஸ்பீக்கர்கள் அல்லது கேட்கும் சாதனங்களை நன்றாகப் பாருங்கள். இதன் மூலம் கேமராவை எளிதில் மறைக்க முடியும். எனவே இவை அனைத்தையும் சரியாக கவனிக்கவும்.
குளியலறை கொக்கிகள் அல்லது துணி தொங்கும் கம்பியை சரிபார்க்கவும். கேமராக்களை ஹேங்கர்களிலும் மறைத்து வைக்கலாம். அறையில் உள்ள திரைச் சீலைகளையும் நன்றாகப் பாருங்கள்.
உங்களுக்கு கண்ணாடியின் மீது சந்தேகம் எழுந்தால் உடனே அதன் அருகில் சென்று உங்கள் விரலை கண்ணாடியில் வைக்கவும். உங்கள் விரலுக்கும், கண்ணாடியின் பிரதிபலிப்பிற்கும் இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி. இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒட்டி இருந்தால் அது பொய்யான கண்ணாடி அதன் பின்னணியில் ஆபத்து இருக்க வாய்ப்பிருக்கிறது.
இன்னொன்று சில கேமராக்கள் இரவிலும் செயல்படக்கூடியதாக இருக்கும் அதனால் அதனைச்சுற்றி எல்.ஈ.டி. விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். நீங்கள் அறையின் விளக்கை அணைத்தால் அது தெரிய வாய்ப்பிருக்கிறது.
இதுதவிர இன்ஃப்ராரெட் கேமராக்களை நீங்கள் உங்கள் கைபேசி கேமராக்கள் வழியாகவே கண்டறியமுடியும். கேமராவை ஆன்செய்து ஒவ்வொரு இடமாக நகர்த்தினால் அங்கு கேமரா இருந்தால் சிவப்பு நிற விளக்கு எரியும். அதை வைத்து கண்டறியலாம். ரிமோட்டின் மேல் பகுதியிலுள்ள விளக்குபோன்ற பகுதிக்கு முன் செல்போன் கேமராவை வைத்து படமெடுத்தபடியே எந்த பட்டனையாவது அழுத்தினால் அதில் சிவப்பு நிற ஒளி எரியும். அவைதான் இன்ஃப்ராரெட். இது சாதரண கண்களுக்கு தெரியாது. தேவை இல்லாமல் எதாவது வயர் சென்றால் அந்த இடத்தை சோதித்துப் பாருங்கள்.
"ஹிட்டன் கேமரா டிடெக்டர்" என்ற ஒரு ஆப் உள்ளது. இதன்மூலமும் கண்டறியலாம். இந்த ஆப்பை முழுமையாக நம்ப முடியாது என்றாலும், ஓரளவு நம்பகத்தன்மை கொண்டதுதான். இப்படியான வழிகளைக்கொண்டு நாம் கண்டறியலாம். நீங்கள் ஒருவேளை அதை உறுதிசெய்தால் உடனே அதை பதிவு செய்யுங்கள், காவல்துறையை, சைபர் கிரைமை அணுகுங்கள். நமது பாதுகாப்பு, நமது உரிமை. அதை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. அப்படி அத்துமீறுபவர்களுக்கு தண்டனை கொடுப்பது நமது கடமை.
- உணவுப்பொருட்களை குறிப்பிட்ட காலம் கெடாமல் பாதுகாக்கிறது பிரிட்ஜ்.
- சமைத்தவுடனே யாரும் உணவை ஃபிரிட்ஜில் வைப்பதில்லை.
இன்றைய வீடுகளின் இன்றியமையாத பொருள், ஃபிரிட்ஜ், குளிர்பதனப்பெட்டி. உணவுப்பொருட்களை குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் பாதுகாக்கிறது ஃபிரிட்ஜ். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? உணவுப்பொருட்களை, குறிப்பாக சமைத்த உணவை பிரிட்ஜில் எவ்வளவு நாள் வைத்திருக்கலாம்? இதற்கு உணவியல் நிபுணர்கள் கூறும் பதில்...
கெட்டுப்போகக்கூடிய உணவுகளான இறைச்சி, மீன், முட்டை, பால் பொருட்கள் போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்த சில நாட்கள் முதல் ஒரு வாரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் ரொட்டி, சிலவகை பழங்கள். காய்கறிகள் போன்ற அழுகாத பொருட்களை பல நாட்களுக்கு சேமிக்கலாம்.
ஃபிரிட்ஜில் வைத்த சமைத்த உணவுகளில், 3 முதல் 4 நாட்களுக்குப் பிறகு பாக்டீரியா வளர ஆரம்பிக்கலாம். இது உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். பாக்டீரியா பொதுவாக உணவின் சுவை, வாசனை. தோற்றத்தை மாற்றாது. எனவே, ஒரு உணவு உண்பதற்கு பாதுகாப்பானதா இல்லையா என்று கண்ணால் பார்த்து உங்களால் சொல்ல முடியாது.
சமைத்த உடனே யாரும் உணவை ஃபிரிட்ஜில் வைப்பதில்லை. உணவு உண்ணும் வரை முதலில் வெளியே தான் இருக்கிறது. அதன் பிறகு ஆறிய உணவைத்தான் ஃபிரிட்ஜில் வைக்கின்றனர். இது நுண்ணுயிரிகளை விரைவாகப் பெருக்கி, உணவை மாசுபடுத்தும் நிலைமையை உருவாக்குகிறது. எஞ்சிய உணவுகள் சுவை குறைவதற்கு காரணம் இதுதான்.
உணவுப்பொருட்களில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க என்ன செய்வது?
மீதமான உணவை காற்று புகாத பாத்திரத்தில் சேமிக்க வேண்டும் அல்லது மூடிவைக்க வேண்டும். எஞ்சிய உணவை ஃபிரிட்ஜில் மேல் அலமாரிகளில் சேமிக்கலாம். அங்கு அதிகபட்ச காற்று, குளிர்ச்சி கிடைக்கும். முதலில் உள்ளே வைத்த உணவுகளை விரைவாக உட்கொள்ளுங்கள். அதற்காக, பழைய எஞ்சியவற்றை முன்பக்கமாகவும். புதியவற்றை பின்புறமாகவும் வையுங்கள். இதுபோன்று பொதுவான ஆலோசனைகளை பின்பற்றும் அதேநேரம், பார்வை, வாசனை, தொடுதல் அடிப்படையில், ஃபிரிட்ஜில் வைத்த உணவு பாதுகாப்பானதா என உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு சந்தேகம் எழுந்தால், அமுதமாகவே இருந்தாலும் அதை தொடாதீர்கள்.
- உமோஜா பெண்கள், ஆண்களை வெறுப்பவர்கள் அல்ல.
- பெண்களை மதிக்கும் ஆண்களை அவர்களும் மதிக்கின்றனர்.
கென்யா - கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு நாடு. கென்யா மலைத்தொடர் முடிந்து அதன் அடிவாரத்தில் பாலைவனம் தொடங்கும் இடத்தில் சம்புரு என்ற பழங்குடி இனம் வாழ்ந்து வருகிறது. அங்கு வாழும் ஆண்கள் ஆடு மற்றும் மாடுகளை வரதட்சணையாக கொடுத்து பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள். ஒரு பொருளை வாங்குவதுபோல் பெண்களை விலைக்கு வாங்குவார்கள்.
அப்படி விலைக்கு வாங்கப்பட்ட பெண்கள், ஆண்களுக்கு அடிமையாக வாழ்க்கை நடத்த வேண்டும். பெண்களுக்குக் கல்வி கிடையாது. வேலை செய்து சம்பாதிக்க முடியாது.
இப்படி ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தான் அங்கு வாழ்ந்து வந்த ரெபேகா லோலோசோலி என்ற பெண்ணால் இந்த கொடுமைகள் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள முடியாமல் முதல் முறையாக குரல் எழுப்பத்தொடங்கினார்.
இவர் பள்ளி படிப்பை மட்டுமே முடித்திருந்த அவருக்கு 18 வயதில் திருமணம் நடைபெற்றது. 5 குழந்தைகள் பிறந்தன. 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் ராணுவ வீரர்கள் 15 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதில் ரெபேகாவும் இருந்தார்.
பலாத்காரத்தை காரணம் காட்டி, அவருடைய கணவர் ரெபேகாவை விற்க முடிவெடுத்தார் . அப்போது ரெபேக்கா இந்த கொடுமைகளுக்கு எதிராக பேசத் தொடங்கினார். அதை பொறுக்க முடியாத சில ஆண்கள் அவரை அடித்து சித்ரவதை செய்தனர்.
அங்கே பாலியல் பலாத்காரத்துக்கு பலியான பெண்களைக் கணவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. சில பெண்கள் உணவின்றி இறந்துபோவார்கள். ஆனால் இதை பொறுக்க முடியாத ரெபேக்கா பாதிக்கப்பட்ட பெண்களையும் அவர்கள் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு, தனியாக வீடு கட்டி தங்கினர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றுதிரட்டிக்கொண்டு கிராமத்தை விட்டுக் கிளம்பினார் ரெபேகா. `உமோஜா' என்ற பெண்கள் அமைப்பை ஆரம்பித்தார். `உமோஜா' என்றால் ஒற்றுமை என்று அர்த்தம்.
கணவர்கள், உமோஜா பெண்களால் தங்களின் மதிப்பு குறைந்து போவதாக முடிவு செய்து, அவர்களை அங்கிருந்து துரத்த பல தகராறுகள் செய்தனர்.
இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில், குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் துன்புறுத்தப்பட்டு, அதை பொறுக்க முடியாமல் தப்பிப் பிழைத்து குழந்தை குட்டிகளுடன் இந்த கிராமத்தில் தஞ்சம் அடைந்தார்கள். பொட்டல் நிலத்தில் தங்குவதற்கு ஓர் எளிமையான வீட்டைக் கட்டினார்கள்.
2 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய நகைகள், கைவினைப்பொருட்கள் செய்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்றனர். இந்த தொழில் சூடுபிடித்தது. அதோடு பழங்குடி நடனம், பாட்டு என்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். ஆண்களால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதுபோல கிராமத்துக்குள் நுழைந்து தகராறு செய்தனர். இடத்தை காலி செய்ய வற்புறுத்தினர். சொந்தமான இடமாக இருந்தால் யாரும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தார் ரெபேகா.
இதனால், தமக்கென்று ஒரு இடம் வேண்டும் என முடிவு செய்து, அங்கு வாழும் பெண்கள் பாரம்பரிய நகைகளும், கைவினைகளும் விற்று பணம் சேர்த்து, சொந்தமாக அந்த இடத்தை விலைக்கு வாங்கினர். சுற்றி வேலிகள் எழுப்பி, குடில்கள் அமைத்து வாழத் தொடங்கினர்.
ரெபேக்கா முதலில் 15 பெண்களுடன் 1990-ம் ஆண்டு இந்த கிராமத்தை தொடங்கினார். இப்போது பெண்கள், குழந்தைகள் என 250 பேர் கொண்ட கூட்டுக்குடும்பமாக வளர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அங்கு ஒரு பள்ளியையும் நிறுவி உள்ளனர். உமோஜா பெண்கள், ஆண்களை வெறுப்பவர்கள் அல்ல. பெண்களை மதிக்கும் ஆண்களை அவர்களும் மதிக்கின்றனர்.
- வாழ்க்கையில் ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பலன் தரும்.
- நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள்.
அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவது பலன் தரும்.
1. நட்பு வட்டம் உங்கள் நலனில் அக்கறை கொள்வதாக அமைய வேண்டும். உங்களுடைய செயல்பாடுகளை நேர்மறையாக விமர்சித்து நல்வழிப்படுத்தும் நல் உள்ளங்களுடன் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் ஊக்குவித்து நிறை, குறைகளை தவறாமல் சுட்டிக்காட்டுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
2. மற்றவர்கள் உங்களிடம் கருத்து கேட்டாலோ, உதவி கேட்டாலோ உங்கள் மனதில் எழும் எண்ணங்களை தயங்காமல் வெளிப்படுத்திவிடுங்கள். உங்கள் மனம் `இல்லை' என்று சொல்ல நினைக்கும். அதன் விருப்பத்துக்கு மாறாக `ஆம்' என்று சொல்லாதீர்கள். நீங்கள் விரும்பாத விஷயங்களை செய்தால் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதாக அமைந்துவிடும். அது தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் குலைத்துவிடும்.
3. தினமும் உறுதிமொழி எடுங்கள். `இன்று என்னால் முடிந்ததை செய்துள்ளேன்' என்பது போன்ற மந்திரமாக அது அமையட்டும். பிறருக்கு உங்களால் இயன்ற உதவிகளை தயங்காமல் செய்யுங்கள். அது உங்களுக்கு நேர்மறை உணர்வைத் தரும்.
4. கடினமான காலங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றியுடன் இருங்கள். பிறர் செய்யும் சின்னச்சின்ன உதவிகளுக்கு கூட நன்றி சொல்ல மறக்காதீர்கள். நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள். அது மன வலிமையை தரும்.
5. இசை கூட ஒரு வகையான சிகிச்சை முறைதான். அதற்கு மனதை சாந்தப்படுத்தி மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் சக்தி உண்டு. வேகமான, உற்சாகமான வரிகள் கொண்ட பாடல்கள் நேர்மறை உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
6. கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்தும் கவலை கொள்ளாதீர்கள். தற்போது கிடைத்ததை சிறப்பாகப் பயன்படுத்துங்கள். வாழ்க்கையை மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அனுபவிக்கும் திருப்தியை அது தரும்.
7. எப்போதும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது ஏற்புடையதாக இருக்காது. உங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள். அது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சிறப்பாக செயல்பட வழிகாட்டும்.
- மகளிர் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள், முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்.
சர்வதேச மகளிர் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது, வரலாற்றிலும், தற்காலத்திலும் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பை கவுரவப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்தை நோக்கிய பெண்களின் பயணத்தின் மிக முக்கிய படியாக இந்த நாள் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போது தொடங்கியது
மகளிர் தினம்
1975-ம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 8-ந் தேதி கொண்டாடப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. ஆனாலும், பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1911-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் மகளிர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், பாலின சமத்துவம் மற்றும் பல்வேறு துறைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டியதை வலியுறுத்தும் நாளாகவும் அமைகிறது. சம ஊதியம், கல்வி பெறுவது, தலைமை வாய்ப்பில் தற்போதும் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுவதன் காரணங்கள் கண்டறியப்பட்டு, அந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய குறிக்கோள்.
பெண்களுக்கு இருக்கும் தடைகளை உடைத்தெறிந்த, முன்னேறிய பெண்களைப் பற்றியும், பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தும் நாளாக இருக்கிறது.
மகளிர் தினத்தின் கருப்பொருள்:
2024-ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள், 'பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள், முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்,' என்பதாகும். இதன் மூலம், பொருளாதாரத்தை வலுவாக்குவதை இலக்காகக் கொண்டு கவனம் செலுத்தப்படும். தொடர்ந்து இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு கருப்பொருள் 'திறமையை ஊக்குவிப்பது.
சர்வதேச மகளிர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?
பாலின பாகுபாடு சம்பந்தமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை அனைவரது கவனத்திலும் கொண்டு வருவதே இந்நாளின் நோக்கம். ஆண்களுக்கு நிகரான ஊதியம், படிப்பு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள் போன்ற பல்வேறு விஷயங்களில் பெண்கள் சந்தித்து வரும் சவால்களையும் வேறுபாடுகளையும் இந்த நாள் பறைசாற்றுகிறது.
அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெண்களிடையே ஒற்றுமையையும், தோழமையையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து, சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை அடையும் பொருட்டு அவர்களது கூட்டு வலிமையை கொண்டாடுவதற்கு அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
மிக முக்கியமாக பெண்களின் சாதனைகளை கொண்டாடவும், உலகில் நிலவிவரும் சமத்துவமின்மைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலத்தை அமைக்கும் பொருட்டு வாதிடுவதற்கான ஒரு தளமாக அமைகிறது.
- இந்தியா உள்பட உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
- மார்ச்-8 பெண்கள் தினமாக 1909-ம் ஆண்டு அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி.
வருகிற 8-ந் தேதி, இந்தியா உள்பட உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த நாள் பிறந்ததோ, போராட்டத்தில். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி, உழைக்கும் பெண்கள் 15 ஆயிரம் பேர் திரண்டு ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர். வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தியும், வாக்களிக்கும் உரிமை கோரியும் இந்த பேரணி நடத்தப்பட்டது.
இந்த நாளை தேசிய பெண்கள் தினமாக 1909-ம் ஆண்டு அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி. இத்தினத்தை சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின் என்ற அம்மையார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை தெரிவித்தார் அவர். அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதை அடிப்படையாகக் கொண்டே கடந்த 2011-ம் ஆண்டு நூறாவது சர்வ தேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் 1975-ம் ஆண்டில்தான் ஐக்கிய நாடுகள் சபை. மார்ச் 8-ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது.
அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்து வருகிறது ஐ.நா. சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடும் இந்த நாள், பெண்கள் சாதிக்க வேண்டிய, எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நினைவுபடுத்தும் நாளாகவும் அமைந்திருக்கிறது.
சர்வதேச பெண்கள் தினம் ரஷியா உள்ளிட்ட பல நாடுகளில் தேசிய விடுமுறை நாளாக உள்ளது. இந்த நாடுகளில் பெண்கள் தினத்தை யொட்டி சில நாட்களுக்கு பூக்கள் விற்பனை இருமடங்காக களை கட்டுகிறது. சீனாவில் பல இடங்களில் மார்ச் 8 அன்று பெண் ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இத்தாலியில் பெண்கள் தினத்தில் மிமோசா பூக்களை வழங்கும் வழக்கம் உள்ளது. அமெரிக்காவில் மார்ச் மாதம் பெண்கள் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்கப் பெண்களின் சாதனையை கவுரவப்படுத்தி ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் இந்த மாதத்தில் ஒரு பிரகடனத்தை வெளியிடுகிறார்.
சமூகத்தின் சரிபாதியாய் உள்ள பெண்கள்தான், ஆண்களுடன் இந்த உலகத்தை நகர்த்தும் இரு சக்கரங்களில் ஒன்றாக உள்ளனர். அவர்களைப் போற்றும் பெண்கள் தினம் பெருமைக்குரியதே.
- வாழ்க்கை இனிமையாக செல்ல 'ரொமான்ஸ்' தான் ஆணிவேர்.
- 'நன்றி' என்ற எளிய வார்த்தை பல அற்புதங்களைச் செய்யும்.
கணவன்-மனைவிக்கு இடையிலான அந்தரங்க நெருக்கமும், அது சார்ந்த அன்யோன்ய செயல்பாடுகளும் தான் ரொமான்ஸ் வாழ்க்கை அலுக்காமலும், சலிக்காமலும் இனிமையாகச் செல்ல இந்த 'ரொமான்ஸ்' தான் ஆணிவேர். அந்த ஆணிவேருக்கு எப்படி நீரூற்றுவது என்று பார்க்கலாமா...?
நன்றியும், பாராட்டும்:
முன்பின் தெரியாத யார் யாருக்கோ அவ்வப்போது நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் பலர், வீட்டுக்குள் அதை கடைப்பிடிப்பதில்லை. நம்மவர்தானே... வழக்கமாக செய்யும் வேலைதானே... என்று அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துவிடுகிறார்கள். மாறாக, மனைவி விசேஷமாக ஒன்றை சமைக்கும்போது, அவருக்காக கணவர் வேலையில் உதவி செய்யும்போது யோசிக்காமல் பரஸ்பரம் பாராட்டு தெரிவிக்கலாம். 'நன்றி' என்ற எளிய வார்த்தை பல அற்புதங்களைச் செய்யும்.
நேர ஒதுக்கீடு:
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலின் மீது குற்றச்சாட்டை போட்டு விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் இந்த ஓட்டம் என்று எவரும் யோசிப்பதில்லை. வாழ்க்கை முழுவதும் நம்முடன் வந்துகொண்டே இருக்கும் துணைக்கு நேரம் ஒதுக்கி, மனம் திறந்து பேசுவதும், அவர் கூறுவதை கேட்பதும் முக்கியம். முடிந்தால் இருவரும் வெளியிலும் சென்று வரலாம்.
இன்ப அதிர்ச்சி:
திடீர் இன்ப அதிர்ச்சி எவருக்கும் ஒரு 'திரில்'லை ஏற்படுத்தும். அது பரிசுப் பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எதிர்பாராத நேரத்தில் ஒரு அன்பான பார்வை, நெகிழ்ச்சியான சொல் போன்றவை உங்கள் வாழ்க்கைத்துணையின் மனமார்ந்த வரவேற்பை பெறும். உறவினர்கள் சூழ்ந்திருக்கையில், "நான் அவளிடம் கூட சொன்னதில்லை... பசங்களை அவளைப் போல யாரும் பொறுப்பா பார்த்துக்க முடியாது' என்ற வார்த்தைகூட மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும்.
வெளிப்படையான பேச்சு:
வெளிப்படையான பேச்சும், நேர்மையான தகவல்தொடர்பும் இல்லற வாழ்வின் வலுவான அஸ்திவாரமாகத் திகழும். கணவன்-மனைவி தங்களுக்கு இடையிலான பேச்சை மேம்போக்காக வைத்துக்கொள்ளாமல், தமது உணர்வுகள், கனவுகள்... ஏன், பயங்களை கூட பகிர்ந்து கொள்ளலாம். இது உணர்வு ரீதியாக இருவரும் நெருக்கமாக உதவும்.
காது கொடுத்து கேட்பது:
கணவன், மனைவியிடமும், மனைவி, கணவனிடமும் தங்கள் எண்ணங்களை, தேவைகளை முதலில் கூற முற்படுவார்கள். அப்போது, 'சும்மா தொண தொணக்காதே..' என்றோ, ஆரம்பிச்சுட்டீங்களா?' என்று முட்டுக்கட்டை போடாமல், பொறுமையாக, காது கொடுத்து கேளுங்கள். துணையின் பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதுகூட இல்லை. கவனமாக கேட்டு, ஆறுதலாக கூறும் இரண்டு வார்த்தைகளே அவருக்கு மிகுந்த நிம்மதியை தரும்.
அரவணைப்பும், அன்பு முத்தமும்:
தம்பதியர் இடையில் நெருக்கத்தை வளர்ப்பதில் ஸ்பரிசத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. கைகளை ஆதரவோடு பற்றுதல், அரவணைத்தலுடன், திடீர் அன்பு முத்தமும் அதிசயங்களை நிகழ்த்தும்.
- உலகில் எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்குகின்றன.
- நம்மை நாமே அன்பு செய்வோம், மகிழ்ச்சியாக வாழ்வோம்.
இந்த உலகில் எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்குகின்றன. தன் மீது பிறர் அன்பு காட்ட வேண்டும், தன்னிடம் ஆறுதலாக பேச வேண்டும், மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும், தன் செயல்களை அங்கீகரிக்க வேண்டும், தான் சிறப்பாக செயல்பட்டால் பாராட்ட வேண்டும் என ஏதாவதொரு வகையில் பிறர் தன் நலன் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்று மனிதர்களும் ஆசைப்படுவது யதார்த்தமானது.
அதேபோல தனக்கு பிடித்தமானவரிடம் அளவில்லா அன்பை பொழிவதும், அவருக்கு பிடித்ததை பரிசாக அளிப்பதும், அவரை சந்திக்க அலாதியான விருப்பம் கொள்வதும் பலரது இயல்பாக இருக்கும். தன்னிடம் அன்பு காட்டுபவருக்காக எதையும் செய்ய துணிந்திடுவார்கள். தம்மால் முடியாததையும் தமது சக்திக்கு அப்பாற்பட்டதையும் கூட செய்ய முயற்சி செய்வார்கள்.
அதேபோலவே நம்மையும் பிறர் அன்பு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் நம்மையே அன்பு செய்ய மறந்து விடுகிறோம். இதனையே சுய அன்பு என்று சொல்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். சுய அன்பு என்பது சுய நலம் அல்ல. அது நமது மன நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும் அற்புதமான திறவுகோலாகும்.
இன்றைய சமூகச்சூழலில் பலர் வாழ்க்கை மீது வெறுப்பு கொள்வதற்கும், இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவு எடுப்பதற்கும் சுய அன்பு இல்லாததே காரணம். சுய அன்பு என்றால் புரியாத புதிரல்ல, அது மிகவும் எளிதானது. நம்மையே நாம் அன்பு செய்வது என்றால் நம்மையே நாம் முழுமையாக ஏற்றுக்கொள்வது. நாம் சிகப்போ, கருப்போ, குண்டோ, ஒல்லியோ, குட்டையோ, நெட்டையோ எப்படியாக இருந்தாலும் நாம் நம்மையே ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள்ளேயே `நான் அழகானவன்' என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.
ஒருபோதும் நாம் நம்மை பிறரோடு ஒப்பிடவே கூடாது. நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு வகையில் தனித்துவம் ஆனவர்கள். எனவே நமது தனித்துவ பண்பை ஏற்றுக்கொண்டு அதனை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்காக நம்மையே நாம் அன்பு செய்வோம். அதன் வெளிப்படாக நமக்காக மேற்கொள்ளும் சிறு, சிறு காரியங்களை ரசித்து, மகிழ்ச்சியுடன் செய்வோம்.
அதேபோன்று நல்ல செயலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு, அதனை செய்து முடித்து விட்டால் நம்மை நாமே பாராட்டிக்கொள்வோம். அதற்கு தக்க சன்மானமாக ஏதாவதொரு பரிசை வாங்கி நமக்கே நாம் அளித்துக்கொள்வோம். அது ஐஸ்கிரீம் வாங்கி ருசித்து சாப்பிடுவதாகக் கூட இருக்கலாம். இப்படி செய்வது விளையாட்டாக தெரியலாம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் உளவியல் தாக்கம் பெரியது என்கிறார்கள் உளவியலாளர்கள். எனவே நம்மை நாமே அன்பு செய்வோம்...! மகிழ்ச்சியாக வாழ்வோம்...!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்