என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆம்பூர்:

    சென்னை பழவந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவபூசணம் (வயது48) . இவர் இன்று காலை ஆம்பூர் அடுத்த தேவலாபும் ஊராட்சி எட்டியம்மமன் கோவில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியை சேர்ந்த காஞ்சனா என்ற பெண்ணை 11 ஆண்டு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததும், தற்போது ஆம்பூரில் கணவன்- மனைவி பைபாஸ் சாலையின் அருகே உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த 3- நாட்களுக்கு முன்பு தேவலாபுரம் பகுதியில் தங்கும் விடுதியில் தங்கியிருந்து நேற்று மாலை அறையை காலி செய்து வெளியே சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவபூசணம் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடுத்ததால் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க ஏராளமானோர் அணிவகுத்து வந்தனர்.

    வாணியம்பாடி:

    ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடுத்ததால் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என்றும் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

    இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க ஏராளமானோர் அணிவகுத்து வந்தனர். பலர் கேன்களுடனும் குவிந்தனர். அவர்கள் வாணியம்பாடி பஸ் நிலையம், நியூ டவுன், பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நீண்டநேரம் வரிசையில் நின்று கொண்டு பெட்ரோல் மற்றும் டீசலை தங்கள் வாகனங்களிலும், கேன்களிலும் நிரப்ப அலைமோதினர்.

    இதனால் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பதற்றமான சூழல் நிலவியது. பெட்ரோல் நிலைய ஊழியர்கள் இது வதந்தி என்று கூறி அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த நகர போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்து வந்தனர். பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்பது வதந்தி என்று கூறி கூடியிருந்த அனைவரையும் கலைந்து போக செய்தனர். தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் காரணமாக வாணியம்பாடி முழுவதும் பரபரப்பாக இருந்தது.

    • லக்கேஜ் வைக்கும் ரேக்கில் 5 பைகளில் பண்டல்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • சென்னை ஆவடியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    மேற்குவங்க மாநிலம், ஹவுராவிலிருந்து கர்நாடக மாநிலம், பெங்களூர் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்கள் இடையே இன்று வந்து கொண்டிருந்தது.

    இந்த ரெயிலின் பின்பக்கம் உள்ள பொது ஜன பெட்டியில் கஞ்சா கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஷீன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் 6 பேர் கொண்ட பாதுகாப்பு படை போலீசார் ஆம்பூர் அருகே பொது ஜன பெட்டியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது லக்கேஜ் வைக்கும் ரேக்கில் 5 பைகளில் பண்டல்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 36 கிலோ கஞ்சாவை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையம் எடுத்து வந்தனர்.

    இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த ரெயில்வே போலீசார் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 36 கிலோ கஞ்சாவை சென்னை ஆவடியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    • தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் சிவசவுந்திரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 14-ந் தேதி அன்று ஒரு நாள் முழுவதும் திருப்பத்தூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
    • தமிழக மக்கள் எல்லா மொழிகளும் அறிய வேண்டும்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்," பாஜக என்றுமே இந்தியைத் திணித்தது இல்லை. தமிழக மக்கள் எல்லா மொழிகளும் அறிய வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம்" என்றார்.

    • குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்காயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாய் மற்றும் சகோதரிகள் கண்முன்னே பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி திலகவதி. தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 1½ வயது மகன் துர்சாந்த்.

    2 பெண் பிள்ளைகளும் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தினமும் காலை அவர்களை ஏற்றி செல்வதற்காக பள்ளி பஸ் வீட்டின் அருகே வந்து நிற்கும். அதேபோல் இன்று காலை மாணவிகளை ஏற்றிச் செல்ல பஸ் வந்தது.

    அப்போது, திலகவதி துர்சாந்த்தை அழைத்துக் கொண்டு 2 மகள்களையும் பஸ்சில் ஏற்ற சென்றார். துர்சாந்த் பஸ்சின் முன்பக்கமாக விளையாடி கொண்டிருந்தான்.

    இதை கவனிக்காத பஸ் டிரைவர் பஸ்சை ஓட்டியபோது அதன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த காவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்காயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் மற்றும் சகோதரிகள் கண்முன்னே பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
    • கனமழையின் காரணமாக திருப்பத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி திருப்பத்தூரில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    காலை முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அறிவித்துள்ளார்.

    • பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை ஒரு கார் கடக்க முயன்றது.
    • கால்வாயில் நீர்மட்டம் குறைந்தபிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). இவரது மனைவி பவித்ரா (38), மகள்கள் சவுத்தியா (8), சவுமிகா (6).

    ராஜேஷ் குமார் கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் குடும்பத்தோடு தங்கி சிவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்வதற்காக ராஜேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் அவர்கள் காரில் பயணம் செய்தனர். அப்போது, மழை காரணமாக கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது.

    இதில் காரில் பயணித்த ராஜேஷ்குமார் அவருடைய மனைவி, மகள்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்ட த்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு 4 பேரின் உடல்களை எடுத்து வரும் பணியில் சத்தீஸ்கர் மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவருடைய சொந்த ஊரில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கொரட்டி மற்றும் குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
    • பஞ்சணம்பட்டி, புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட கொரட்டி மற்றும் குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், நாளை (19-ந் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி, பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி காமாட்சிப்பட்டி, கொரட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு, சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங்கரை, குனிச்சி, பல்லப்பள்ளி, அரவமட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்படி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத்தூர், எலவம்பட்டி, பஞ்சணம்பட்டி, புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சம்பத்து தெரிவித்துள்ளார்.

    • பரசுராமன் நிர்வாணமாக நின்று பூஜை செய்து கொண்டிருந்தார்.
    • ஜெயலட்சுமி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த அக்ரகாரம் பூசிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி என்பவரின் மகன் பரசுராமன் (வயது33).

    இவர் அதே பகுதியில் உள்ள ராஜாத்தி என்பவரின் வீட்டின் எதிரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பூஜை செய்துள்ளார்.

    அப்போது பரசுராமன் வீட்டின் அருகே வசிக்கும் குமரன் (27) என்பவர் ஏதோ வெளிச்சம் தெரிகிறது என கருதி அருகில் சென்று பார்த்தார்.

    அப்போது பரசுராமன் நிர்வாணமாக நின்று பூஜை செய்து கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குமரன் ஏன் இங்கு இப்படி பூஜை செய்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் தட்டி கேட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது வீட்டில் குமரனும் இவரது தாயார் ஜெயலட்சுமி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பரசுராமன் அவரது சகோதரர் சாந்தகுமார் (29) இருவரும் குமரன் வீட்டிற்கு வந்தனர். குமரனின் தலை மீது கல்லை போட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஜெயலட்சுமி மற்றும் குமரன் கத்தி கூச்சல் போட்டனர். அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த குமரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இதுகுறித்து ஜெயலட்சுமி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமன், சாந்தகுமார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வெங்கடேசன் (வயது 67) வீட்டுக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்
    • இது தொடர்பாக,விடுதி காப்பாளரிடம் 6 சிறுமிகள் புகார் செய்தனர்

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு விடுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த வெங்கடேசன் (67) என்ற முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (65). 2018 ஆம் ஆண்டு அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் சிறுவர் காப்பகத்தில் அவர் சமையல் வேலை செய்து வந்தார். இந்த காப்பகத்தில் அதிகளவில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காப்பகத்தில் உள்ள சிறுமிகளை கோட்டீஸ்வரி தனது வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோட்டீஸ்வரியின் கணவர் வெங்கடேசன் (வயது 67) வீட்டுக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இது தொடர்பாக,விடுதி காப்பாளரிடம் 6 சிறுமிகள் புகார் செய்தனர். உடனடியாக அவர், சிறுமிகளை அழைத்து சென்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, கோட்டீஸ்வரி மற்றும் அவரது கணவர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.

    2018ம் ஆண்டில் பதிவான இந்த வழக்கில் வெங்கடேசனுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையின்போதே கோட்டீஸ்வரி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

    • திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • கனமழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    தொடர் கனமழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கபட்டுள்ளது.

    திருப்பத்தூர் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது . இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    ×