என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain"

    • கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
    • அடுத்த 12 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தலைநகர் சென்னையில் கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

    சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

    சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 12 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
    • வாழை மரங்கள் கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    அவினாசி:

    திருப்பூா் மாவட்டம் அவினாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் செம்பியநல்லூா் ஊராட்சி கந்தம்பா ளையத்தில் கணேஷ், ராஜாமணி, சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் குலை தள்ளிய நிலையில் இருந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

    இதேபோல் சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால் முறியாண்டம்பாளையம், மங்கரசுவலையபாளையம், சாலையப்பாளையம், கானூா், புலிப்பாா் உள்ளி ட்ட பகுதிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி ஆகிய வகைகளை சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

    கடந்த 2 நாட்களில் அவிநாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

    மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரி வித்துள்ளனா்.இதையடுத்து சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா். 

    • மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    அரபிக்கடலில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்றானது தமிழக மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுக்கப்படுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள நெல்லை, தென்காசி மலைகிராமங்களில் தற்காலிகமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார்.

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. மாநகரில் டவுன், பேட்டை பகுதிகளில் காலையில் 1/2 மணி நேரம் சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் புறநகரின் அனைத்து இடங்களிலும் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அந்த வகையில் மேல் பாபநாசம் பகுதியில் காலையில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதியில் பரவலாக பெய்யும் மழையால் அங்கு சாஸ்தா கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

    மலையடிவார பகுதியான அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரத்திலும் சாரல் மழை நீடித்தது. மாஞ்சோலை மலைப்பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 14 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    கடந்த 2 நாட்களாக அந்த பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. அணைகளை பொறுத்தவரை 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 85.42 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 62 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 88 அடியாகவும், சேர்வலாறில் 102.62 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து காலையில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இன்று காலை லேசான சாரல் அடித்தது. கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் சற்று அதிகமாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.

    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    புதுச்சேரியில் தினமும் சராசரியாக 96 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இரவு நேரங்களிலும் வெப்பச்சலனம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தூக்கம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது.

    வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி, கிர்ணி, பழச்சாறு உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.26 டிகிரி பாரன்ஹீட பதிவானது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.

    இதன் காரணமாக, 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

    • கடந்த மாதம் இறுதியில் சில இடங்களில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவானதை பார்க்க முடிந்தது.
    • ஒரு மணி நேரம் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) இறுதியில் இருந்தே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. அதிலும் கடந்த மாதம் இறுதியில் சில இடங்களில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவானதை பார்க்க முடிந்தது. அதன் பின்னர், காற்று சுழற்சியால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்ததால், வெப்பம் ஓரளவுக்கு தணிந்து காணப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் கடந்த 9-ந்தேதி நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து காணப்பட்டது. இது மேலும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுவிழக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வுப்பகுதியால் பெரிய அளவுக்கு மழை இல்லை என்றாலும், சில இடங்களில் மழை பதிவானது.

    தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் அதிகாலையில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.

    திருவொற்றியூர், எண்ணூர், வண்ணாரப்பேட்டை, மாதவரம் பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது.

    ஒரு மணி நேரம் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசாக மழை பெய்யும்.
    • புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது.

    கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதியில் பெய்த தொடர் மழைக்கு சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 நாட்களில் 20 அடி உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 66.25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.75 அடியாக உயர்ந்துள்ளது. 42 கனஅடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது. 493 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1476 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. 238 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2966 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32 அடியாக உள்ளது. 109 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 34.70 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    பெரியகுளம் 6, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 6, போடி 1.2, கூடலூர் 2.8, பெரியாறு 0.2, தேக்கடி 0.4, சண்முகாநதி 8.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
    • குழித்துறை ஆற்றில் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் சுட்டெரிக்கு வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இரணியல், குருந்தன் கோடு, கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, பூதப்பாண்டி, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்ததால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    திற்பரப்பில் அதிகபட்சமாக 68.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று காலையில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மேற்கு மாவட்ட பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக குழித்துறை ஆற்றிலும் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    தற்பொழுது மழை குறைந்ததையடுத்து சப்பத்து பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு சாரல் மழை பெய்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையினால் 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30.18 அடியாக இருந்தது. அணைக்கு 233 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.05 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 48.2, பெருஞ்சாணி 41.4, சிற்றாறு 1-29.8, சிற்றாறு 2-18.6, நாகர்கோவில் 4.2, கன்னிமார் 20.6, பூதப்பாண்டி 12.4, முக்கடல் 20, பாலமோர் 6.2, தக்கலை 20, குளச்சல் 8, இரணியல் 6.2, அடையாமடை 27, குருந்தன்கோடு 4.4, கோழிப்போர்விளை 4.8, மாம்பழத்துறையாறு 20.2, ஆணைக்கிடங்கு 18.6, களியல் 15.4, குழித்துறை 5.2, புத்தன் அணை 41, சுருளோடு 62.6, திற்பரப்பு 68.4, முள்ளங்கினாவிளை 5.4.

    • கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது.
    • வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இதேபோல கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்து பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் நகராட்சி 26, 27, 28வது வார்டுகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் 29வது வார்டு ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவுக்குள் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிர்த்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூக்கமின்றி வேறு இடங்களுக்கு சென்றனர்.

    இன்று அதிகாலை அப்பகுதியில் இருந்த அடுத்தடுத்த 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து சுவர் இடிந்து விழுந்ததால் ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி புத்தகம் மற்றும் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் அனைத்தும் நீரில் நனைந்து சேதம் ஆகிவிட்டதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

    எனவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கம்பம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    • அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது.
    • ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி அடைந்து வந்தனர். அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் திணறி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இதன்படி நேற்று முன் தினம் சுமார் அரை மணி நேரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்தியது. ஆனால் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது.

    குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் லேசாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கன மழையாக கொட்டி தீர்த்தது. இந்த கன மழையால் கோபி பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சாலையோரம் தேங்கி நின்றது.

    இடியுடன் கூடிய கன மழையால் பல்வேறு இடங் களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோபி அடுத்த நாகதேவம்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. அதன் அருகே கசிவு நீர் குட்டையில் நேற்று இரவு பெய்த மழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 15 வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. இரவு நேரத்தில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனையடுத்து கோபி தாசில்தார் சரவணன், நீர்வளத் துறை அதிகாரிகள், பொது பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் குட்டையில் அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீர் வடிந்தது. இதன் பின்னர் இயல்பு நிலை திரும்பியது. நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் கோபிசெட்டிபாளையத்தில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதே போல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

    அப்போது அந்தியூர் கருவாச்சி அடுத்த பால பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இடி தாக்கியது. இதில் கோவிலில் லேசான சேதாரம் ஏற்பட்டது. மேலும் ஈரோடு புறநகர் பகுதியில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. எலந்தை குட்டை மேடு, கவுந்தப்பாடி பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இதேபோல் நம்பியூர் அம்மாபேட்டை, கொடி வேரி, மாவட்ட அணை பகுதிகளான பவானிசாகர், குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம் போன்ற பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதைப்போல் சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. கோடைமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் சேரும் சகதியுமாக காட்சியளித்தது.

    இதனால் மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்த வியாபாரிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வரு மாறு:- கோபி-155, எலந்த குட்டைமேடு-100.40, கவுந்தப்பாடி-91.40, நம்பியூர்-79, கொடிவேரி-52.20, வரட்டு பள்ளம்-51.20, பவானி சாகர்-39.40, சென்னிமலை -39, குண்டேரி பள்ளம்-29.40, சத்தியமங்கலம்-23, பவானி-19, தாளவாடி-15, ஈரோடு-12.30, மொடக்குறிச்சி-3, பெருந்துறை-2.

    • குளச்சல், இரணியல், அடையாமடை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இந்தநிலையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. நாகர்கோவிலில் நேற்று மாலையில் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது.

    கனமழையின் காரணமாக பீச்ரோடு, இருளப்பபுரம், வைத்தியநாதபுரம், வடலிவிளை, புன்னைநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் நள்ளிரவு அதை சரி செய்து மின் இணைப்பை வழங்கினர்.

    கோழிப்போர்விளை பகுதியில் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 195 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    குளச்சல், இரணியல், அடையாமடை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கன மழை பெய்தது. பேச்சிப்பாறை அணைப்பகுதியில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, களியல், குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30 அடியாக இருந்தது. அணைக்கு 793 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25.70 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 125.4, பெருஞ்சாணி 37.6, சிற்றாறு 1-60.2, சிற்றாறு 2-56.6, கொட்டாரம் 2.2, மயிலாடி 1.2, நாகர்கோவில் 44.6, கன்னிமார் 7.6, ஆரல்வாய்மொழி 3.6, பூதப்பாண்டி 5.2, முக்கடல் 18, பாலமோர் 38.2, தக்கலை 49, குளச்சல் 14, இரணியல் 74, அடையாமடை 128.4, குருந்தன்கோடு 23, கோழிப்போர்விளை-195, மாம்பழத்துறையாறு 57, ஆணைக்கிடங்கு 55.6, களியல் 46.4, குழித்துறை 32.4, சுருளோடு 61.4, திற்பரப்பு 5.4, முள்ளங்கினாவிளை 16.6.

    • 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் வேலைகளில் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று, பகலில் மீண்டும் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து, மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யத் தொடங்கி கனமழையாக மாறியது.

    இதனால் தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.

    தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

    அத்திமரப்பட்டி, காலங்கரை, கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நெல் அறுவடை பணியும் பாதிப்படைந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கிடங்குகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    குறிப்பாக திருச்செந்தூர் சாலையில் வடிகால் இல்லாததால் முழு தண்ணீரும் சாலையில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கீழே இறங்கி வாகனத்தை உருட்டி சென்று அவதி அடைந்தனர்.

    இதுபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளான திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் , கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டி னத்தில் 96 மில்லிமீட்டர், தூத்துக்குடி 16.20 மி.மீ, திருச்செந்தூர் 55 மி.மீ, குலசேகரப்பட்டினம் 6 மி.மீ, சாத்தான்குளம் 6.40 மி.மீ, கோவில்பட்டி 18 மி.மீ, கழுகுமலை 80 மி.மீ, கயத்தார் 70 மி.மீ, கடம்பூர் 1.50 மி.மீ, எட்டையாபுரம் 5.10 மி.மீ, விளாத்திகுளம் 17 மி.மீ, காடல்குடி 5 மி.மீ, வைப்பார் 9 மி.மீ, சூரங்குடி 20 மி.மீ, ஓட்டப்பிடாரம் 73.50 மி.மீ, மணியாச்சி 9 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 487.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 25.67 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதியம்புத்தூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. 

    ×