என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenkasi"

    • காலை மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்து வரும் ஆனந்தன் அய்யாசாமிக்கும் இன்று காலை மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்த கலெக்டர் அலுவலகம் தரப்பிலும், ஆனந்தன் அய்யாசாமி தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசாரின் முழு பாதுகாப்பின் கீழ் தென்காசி கலெக்டர் அலுவலகம் கொண்டு வரப்பட்ட நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து அரசு ஊழியர்களும், பொதுமக்களும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மூலமாக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    அரபிக்கடலில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்றானது தமிழக மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுக்கப்படுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள நெல்லை, தென்காசி மலைகிராமங்களில் தற்காலிகமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார்.

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. மாநகரில் டவுன், பேட்டை பகுதிகளில் காலையில் 1/2 மணி நேரம் சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் புறநகரின் அனைத்து இடங்களிலும் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அந்த வகையில் மேல் பாபநாசம் பகுதியில் காலையில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதியில் பரவலாக பெய்யும் மழையால் அங்கு சாஸ்தா கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

    மலையடிவார பகுதியான அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரத்திலும் சாரல் மழை நீடித்தது. மாஞ்சோலை மலைப்பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 14 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    கடந்த 2 நாட்களாக அந்த பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. அணைகளை பொறுத்தவரை 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 85.42 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 62 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 88 அடியாகவும், சேர்வலாறில் 102.62 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து காலையில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இன்று காலை லேசான சாரல் அடித்தது. கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் சற்று அதிகமாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.

    • சாஸ்தா அவதரித்த நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது.
    • அனைத்து சாஸ்தா கேவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    முருகப்பெருமானுக்கு உகந்த இந்த நாளில், முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நாளில் வள்ளியை முருகப்பெருமான் திருணம் செய்தார் என்பதால் பக்தர்கள் 3 மாவட்டங்களிலும் உள்ள முருகன் கோவில்களில் வழிபடுவார்கள். இதையடுத்து இன்று பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன.

    தென் மாவட்டங்களில் குலதெய்வமாக வணங்கப்படும் சாஸ்தா அவதரித்த நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. இதனால், இந்த நாளில் பக்தர்கள் தங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து சாஸ்தா கேவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மகாதேவி செங்கொடி சாஸ்தா, நெல்லை சந்திப்பு மேகலிங்க சாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன் பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, வள்ளியூர் அருகே பூசாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதனால் நேற்று மாலை முதலே ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வந்து தங்கினர். குழுவாக இருந்து கோவில் வளாகத்தில் சமைத்து சாப்பிட்டு பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது நேர்த்திக்கடனாக பலரும் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் நேமிதமாக ஆடுகளையும் பலியிட்டனர்.

    பெரும்பாலான பக்தர்கள் இன்று காலை முதல் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதனால் காலை 7 மணி முதலே முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலிலும் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி கை கொண்டார் சாஸ்தா, கடையம் சூட்சமடையார் சாஸ்தா, பாப்பான்குளம் பூரண பெருமாள் சாஸ்தா, களக்கோட்டீஸ்வரர் சாஸ்தா கோவில் உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா மற்றும் அய்யனார் கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    கடையம் தோரணமலை முருகன் கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாண திருவிழா இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோவிலில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு மாலையில் வீடு திரும்பினர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அருஞ்சுனை காத்த அய்யனார், கற்குவேல் அய்யனார், பூலுடையார் சாஸ்தா, இலங்குடி சாஸ்தா ஆகிய கோவில்களில் இன்று பங்குனி உத்திரத்தையொட்டி பந்தல்கள் அமைக்கப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை செய்யப்பட்டி ருந்தது.

    விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடை பெற்று வருகின்றன. பக்தர்கள் பொங்கலிட்டும், சைவ படையலிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இரவு 12 மணிக்கு பிறகு, கருப்பசாமி மற்றும் பிற பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு, கிடா வெட்டி அசைவ படையல் போட்டு பக்தர்கள் வழிபடுவார்கள்.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி யில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சாஸ்தா கோவில்களுக்கு சென்றனர். மேலும் வாடகை ஆட்டோ, வேன் உள்ளிட்டவற்றிலும் குடும்பம் குடும்பமாக சென்றனர்.

    இந்த திருவிழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கோவில் திருவிழாக்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    பங்குனி உத்திர திருவிழாவால் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பூட்டிக்கிடந்த கோவில்கள் வர்ணம் பூசப்பட்டு பளிச்சென காட்சியளிக்கிறது. மேலும் இரவு நேரத்தில் பல வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

    • சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
    • அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை காணப்படும்.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை காணப்பட்டது.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை பகுதியில் 19 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் பகுதியில் தலா 15 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மேலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    • களக்காடு, மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
    • சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும், பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது.

    நெல்லை மாநகரில் டவுன், பாளையங்கோட்டை, சமாதானபுரம், நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை பகுதிகளில் கனமழை கொட்டியது. இரவிலும் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பாளை சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    மாவட்டத்திலும் களக்காடு, மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வள்ளியூரில் யாதவர் தெருவில் மழை பெய்தபோது அங்குள்ள மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்ட நிலையில், அந்தநேரம் அவ்வழியாக சென்ற மாடு ஒன்று அதில் உரசியதால் மின்சாரம பாய்ந்து மாடு உயிரிழந்தது.

    சில இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ராதாபுரத்தில் போலீஸ் நிலையம் முன்பு தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் குளம்போல் தேங்கி கிடந்தது. அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 8 சென்டிமீட்டரும், ராதாபுரத்தில் 6 சென்டிமீட்டரும் மழை பெய்தது.

    சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் மாலையில் இதமான காற்று வீசிய நிலையில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழை மக்களை குளிர்வித்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. நம்பியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து 99.54 அடியை எட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஊத்து எஸ்டேட்டில் 16 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 12 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி சுற்றுவட்டாரங்களில் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் சாரல் மழை பெய்தது.

    ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் மாலையில் சுமார் 2 மணி நேரம் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிவகிரி, சங்கரன்கோவில் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிவகிரியில் அதிகபட்சமாக 63 மில்லிமீட்டரும், சங்கரன்கோவிலில் 53 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 26 மில்லிமீட்டரும், கடனா அணையில் 12 மில்லி மீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. குற்றாலம் அருவியில் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டியது.

    தென்காசி மாவட்டத்தை குளிர்வித்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 22 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    • இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானில் மேக கூட்டங்கள் திரண்டன. மாநகரின் எல்லை பகுதிகளில் பேட்டை, பழையபேட்டை, ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக பேட்டை பகுதியில் சுமார் 1 மணி நேரமாக கனமழை கொட்டியது. பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி பகுதிகளில் கனமழையால் நான்கு வழிச்சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 13.60 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் அங்கு கனமழை பெய்தது. அதிகபட்ச மாக ஊத்து எஸ்டேட்டில் 45 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 40 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் வரை வெயில் வாட்டிய நிலையில் பாவூர்சத்தி ரம், புளியங்குடி, தென்காசி சுற்றுவட்டாரங்களில் மாலையில் பரவலாக மழை பெய்தது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    அங்கு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராயகிரி, உள்ளார், தளவாய்புரம், விஸ்வநாதபேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று காலை நிலவரப்படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக சிவகிரியில் 11 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் 32 மில்லிமீட்டரும், அடவி நயினார் அணையில் 16 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் கனமழையும், வைப்பார், சூரன்குடி, மணியாச்சி சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 22 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டம், கடம்பூர், எட்டயபுரம் பகுதி களில் சாரல் மழை பெய்தது.

    • அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. சில இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் பயங்கர இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆய்குடியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது . மழை காரணமாக குற்றாலத்தில் மிதமான அளவில் அனைத்து அருவியிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.

    தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 2 மணி அளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குண்டாறு அணையில் 26.20 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும் மழை பெய்தது. ராமநதி மற்றும் கடனாநதி அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. நெல்லை மாநகரப பகுதியிலும் இரவில் மழை பெய்த நிலையில் இன்றும் அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    மாநகரில் பாளையங்கோட்டையில் 7.20 மில்லி மீட்டரும், நெல்லையில் 6.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் அம்பை, கண்ணடியன் கால்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் சேர்வலாறு அணை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணையின் நீர்வரத்து 214 கன அடியாக இருந்து வருகிறது. அணை நீர்மட்டம் உயர்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது.

    • சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்.
    • முருகன் பாதமும், அருகில் சிவலிங்கமும் உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் சிவகிரி என்னும் ஊரில் உள்ள மலை மீது அமைந்திருக்கிறது, பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில். சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலின் மூலவராக 'பால சுப்பிரமணியர்' உள்ளார். உற்சவரின் திருநாமம், முத்துக்குமாரர் என்பதாகும். இவ்வாலய தீர்த்தமாக சரவணப் பொய்கை உள்ளது.

    சூரபத்மனை அழித்த பிறகு தெய்வானையை மணப்பதற்காக, முருகப்பெருமான் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். அப்போது முருகனை தரிசனம் செய்ய வேண்டி அகத்திய முனிவர் இந்த மலையில் தவம் செய்து கொண்டிருந்தார்.

    அவருக்கு தரிசனம் அளித்த முருகப்பெருமான், அகத்தியரின் விருப்பப் படியே இந்த மலை மீதும் வாசம் செய்தார். பின்னாளில் இம்மலை மீது ஆலயம் எழுப்பப்பட்டது. இங்கு பாலகராக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

    எனவே இவர் 'பாலசுப்பிரமணியர்' என்று பெயர் பெற்றார். அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் இருக்கிறது. இங்கு முருகன் பாதமும், அருகில் சிவலிங்கமும் உள்ளது.

    பாதகமான கிரக அம்சங்களை எதிர்கொள்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்திற்காக இங்கு வழிபாடு செய்கிறார்கள். பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.

    பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள், அந்த பிரச்சினைக்கு காரணமான கிரகத்திற்கு உரிய நாளில் இங்குள்ள முருகனை வழிபட்டு சென்றால், நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


    இங்கு முருகப்பெருமான் தனது ஜடாமுடியையே, கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இது முருகப்பெருமானின் அரிய வடிவம் ஆகும்.

    கிரகப் பிரச்சினை உள்ளவர்கள், ராசி சின்னங்களுடன் ஒரு உலோகத் துண்டை (தகடு), முருகப்பெருமானின் பாதத்தில் வைக்கிறார்கள். இதன்மூலம் பக்தர்களின் கிரக சம்பந்தமான பிரச்சனைகள் அகலும் என்பது ஐதீகம்.

    மலைகள் மற்றும் நீர் வளங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் மிகுந்ததாக, இந்த மலைக் கோவில் திகழ்கிறது. பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ள குன்று 'சக்தி மலை' என்று அழைக்கப்படுகிறது. இடதுபுறம் சிவன் மலை உள்ளது.

    சிவனுக்கும், சக்திக்கும் இடையில் சோமாஸ்கந்த வடிவத்தில் இங்குள்ள முருகன் காட்சி தருகிறார். முருகன் சன்னிதியின் வலதுபுறம் சுந்தரேஸ்வரரும், இடதுபுறம் அன்னை மீனாட்சியும் உள்ளனர்.

    பங்குனி பிரம்மோற்சவத்தில் உற்சவரான முத்துக்குமாரர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். திருவிழாக் காலங்களில் மூன்று நாட்கள் மட்டுமே முருகப்பெருமானின் ஊர்வல தரிசனம் கிடைக்கும். மற்ற நாட்களில் கோவிலுக்குள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

    இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரி, பைரவர், நவக்கிரகங்கள், சனி பகவான், அஷ்டபுஜ துர்க்கை மற்றும் இடும்பன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. முருகப்பெருமானின் கருவறை கோஷ்டத்தில் பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரரின் எதிரே லிங்கோத்பவருக்கு தனிச் சன்னிதி உள்ளது.

    மலையின் நடுவில் காளி அன்னை சன்னிதி உள்ளது. காலையிலும், மாலையிலும் முதல் பூஜை இந்த காளியம்மனுக்குத்தான் செய்யப்படுகிறது. அதன் பிறகுதான் முருகப்பெருமானுக்கு வழிபாடு நடைபெறும்.

    பவுர்ணமி தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இக்கோவிலில் உள்ள முருகப்பெருமான் நவக்கிரக முருகனாக போற்றப்படுகிறார். இங்கு உள்ள விநாயகருக்கு 'அனுக்ஞை விநாயகர்' என்று பெயர்.


    பங்குனி பிரம்மோற்சவம், ஐப்பசியில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மாசி மகம் ஆகியவை இந்த கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும். திருச்செந்தூர் கோவிலில் செய்யப்படும் முறைப்படியே, இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

    பொதுவாக கந்தசஷ்டி விழா 6 நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆலயத்தில் 11 நாட்கள் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 11-வது நாளில் முருகப்பெருமானுக்கு முடிசூட்டு விழா நடைபெறும்.

    அப்போது அரியணையில் முருகனை அமரச் செய்து, தங்க கிரீடம் அணிவித்து, அரச அதிகாரத்தை குறிக்கும் செங்கோல் கொடுக்கப்படும். பின்னர் அரச அங்கியில் முருகன் வீதி உலா வருவார். இதனை 'பட்டினப் பிரவேசம்' என்று சொல்வார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழித்தடத்தில் 108 கி.மீ. தொலைவில் சிவகிரி உள்ளது. ராஜபாளையத்தில் இருந்தும் தென்காசிக்கு பேருந்து வசதி உள்ளது. அந்த பேருந்துகள் சிவகிரி வழியாகத்தான் செல்லும். சிவகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

    • தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண குழுக் கூட்டம் நடைபெற்றது.
    • மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1,04,07,520-க்கும் திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் ருக்மணி முன்னிலை வகித்தார். 15-வது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.2,03,37,000-க்கும், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1,04,07,520-க்கும் திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன் உட்பட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அனைத்து வட்டாரங்களிலிருந்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.
    • கருப்பாநதி கால்வாய் தூர்வாறுதல், ஆர். நவநீதகிருஷ்ணபுரம் தீவு அலுவலகம் அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கவுன்சிலர்கள், யூனியன் சேர்மன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.

    அதில் கருப்பாநதி கால்வாய் தூர்வாறுதல், ஆர். நவநீதகிருஷ்ணபுரம் தீவு அலுவலகம் அமைத்தல், கீழக்கலங்கல் ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்குதல், பொது பயன்பாட்டிற்கு நீர் பிடிப்பு பகுதியை வழங்குதல், ஊத்துமலை ஊராட்சியில் புதிய தண்ணீர் தொட்டி வழங்குதல், ஆலங்குளம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 ஊர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை வழங்குதல், வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு திருஉருவச் சிலை எழுப்புதல், குற்றாலம் செண்பகா தேவி அருவிக்கு மேல் அணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

    அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, தென்காசி தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல், தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் என பலர் உடன் இருந்தனர்.


    • மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.
    • அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்- அமைச்சரால் கடந்த மாதம் 5-ந் தேதி அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.

    இதுவரை 2,3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள (https://www.pudhumaipenn.tn.gov.in) என்கிற வலைதளத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    இந்த வலைதளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம்,

    அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் நேரடியாக விண்ணப்பிக்க கூடாது எனவும்் கூறப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் தற்போது 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற் கட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் சமூக நல இயக்குனராக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் மார்பகப் புற்றுநோய் கருத்தரங்கு நடைபெற்றது
    • அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மார்பகப் புற்றுநோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர்.

    தென்காசி:

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் மார்பகப் புற்றுநோய் கருத்தரங்கு நடைபெற்றது.

    கருத்தரங்கு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள் என சுமார் 103 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவின் மூத்த மருத்துவர் சுவர்ணலதா அனைவரையும் வரவேற்றார். மருத்துவர்கள் மார்பகப் புற்றுநோய் பற்றி விளக்கிக் கூறினார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கருத்தரங்கில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவின் உதவி பேராசிரியர் அனிதா காந்தி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் பொது பிரிவு உதவி பேராசிரியர் காந்திமதி பத்மநாபன், தென்காசி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஜெரின் இவாஞ்சலின், விஜயகுமார், முத்துக்குமாரசாமி, கார்த்திக் ஆகியோர் மார்பகப் புற்றுநோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர்.

    கருத்தரங்கில் மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான மருத்துவர் ஜெஸ்லின் அனைத்து பேச்சாளர்களையும் கலந்துகொண்ட அரசு டாக்டர்கள் சங்க உறுப்பினர்களையும் வாழ்த்திப் பேசினார்.

    கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் மல்லிகா மற்றும் பயிற்சி மருத்துவர் பிரியதர்ஷினி இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர். உறைவிட மருத்துவர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் மருத்துவர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    கலந்து கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும் 2 மணித்துளி மதிப்பெண்களும், பேச்சாளர்களுக்கு 3 மணித்துளி மதிப்பெண்களும் தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது.

    ×