search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenkasi"

    • மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்ய ஆரம்பித்தது. மாநகரில் சந்திப்பு, மேலப்பாளையம், பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

    பேட்டையில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி 17-வது வார்டு பழைய பேட்டை சர்தார்புரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லமுடியாமல் சிரமத்துடன் சென்றனர்.

    மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் பகுதிகளில் மழை காரணாக சாலைகள் சகதியாக காணப்பட்டது. பாளை வ.உ.சி. மைதானம், மகாராஜாநகர் சாலைகளிலும் குளம் போல் மழைநீர் தேங்கி கிடந்தது.

    ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், காலையில் இருந்தே பெய்த மழையால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி அடைந்தனர். பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர். அதிகபட்சமாக பாளையில் 11 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீர் கனமழை பெய்தது. அங்குள்ள சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இன்றும் காலையில் இருந்தே சாரல் அடித்தது. இதேபோல் களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இன்று சாலையில் சாரல் மழை பெய்தது.

    சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இன்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் 10.6 மில்லிமீட்டரும், அம்பையில் 5.6 மில்லிமீட்டரும், களக்காடு மற்றும் நாங்குநேரியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அவ்வளவாக பெய்யவில்லை. என்றாலும் மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. இன்றும் காலையில் இருந்தே வெயில் அடிக்கவில்லை. இதனால் ரம்மியமான சூழ்நிலை நிலவியது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 44 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சிவகிரியில் லேசான சாரல் பெய்தது.

    ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 10 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை முடிந்துவிட்டதால் அருவிக்கரைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் ஏராளமான இடங்களில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. குறிப்பாக எட்டயபுரம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக எட்டையபுரத்தில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டியில் 7 மில்லிமீட்டரும், சூரன்குடி, கழுகுமலையில் தலா 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் அடித்தது. இன்றும் காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    • நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் தற்போது தண்ணீரானது அதிக அளவில் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


    குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீரானது தற்பொழுது ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது மழை குறைந்துள்ள நிலையில், தண்ணீரின் அளவு அருவிகளில் குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திடீரென கனமழை பெய்தது.
    • ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது.

    தொடர்ந்து நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை யிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையிலும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

    சேரன்மகாதேவியில் 29.60 மில்லிமீட்டர் மழை பெய்தது. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பகுதிகளிலும் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் இரவு முழுவதும் பயங்கர இடி-மின்னலும் காணப்பட்டது. அம்பையில் 40.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 21 மில்லிமீட்டரும், நாங்கு நேரியில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 23.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 251 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 98 அடியாக உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

    மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 26 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 21 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சியில் 18 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாநகரில் டவுன், பேட்டை, சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள், கே.டி.சி. நகர், என்.ஜி.ஓ. காலனி, டக்கம்மாள் புரம், மேலப்பாளையம் என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் சென்ற வாகனங்கள் கடும் மழையால் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    பாளை பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இரவில் தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரையிலும் மின்சார வினியோகம் இல்லை. அதன்பின்னரும் மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. மாநகரில் பல்வேறு இடங்களிலும் கடுமையான மின்வெட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பாளை பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 84 மில்லிமீட்டரும், நெல்லையில் 49 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியது.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

    தென்காசி, ஆய்க்குடியில் தலா 42 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது .மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 48.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி நிலவியது.

    கருப்பாநதி அணை பகுதியில் 67 மில்லிமீட்டர் மழை பெய்தது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வரும் 55 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 43 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 46 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    காயல்பட்டினம் பகுதியில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 93 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறு, மணியாச்சி பகுதிகளில் 65 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழையும் கொட்டியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    விளாத்திகுளம், கீழஅரசடி, வேடநத்தம், குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. இரவில் விட்டு விட்டு சாரல் மழையாக மாறி பெய்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் இரவில் பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.

    • இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டியது.
    • சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்ககளாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் மேகக் கூட்டங்கள் திரண்டு இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தினம் என்பதாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீர் நிலைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    • நண்பகல் 11.55 மணிக்கு பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.
    • ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கொட்டாரம், அனவன் குடியிருப்பு, அகஸ்தியர் பட்டி, செட்டிமேடு, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வைராவிகுளம், அயன் சிங்கம்பட்டி, தென்காசி மாவட்டம் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, சேர்வை காரன்பட்டி, பாப்பான் குளம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, கல்யாணிபுரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று நண்பகல் 11.55 மணிக்கு பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.

    சுமார் 5 வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்தி ரங்கள் உருண்டது. வீடுகளில் இருந்த ஜன்னல், கதவுகள் குலுங்கியது. ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

    சில இடங்களில் பூமிக்குள் மோட்டார் ஓடுவது போல் ஒரு அதிர்வு தென்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து அவசரம், அவசரமாக வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு ஓடி வந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த 2017-ம் ஆண்டு 29-ந்தேதி செங்கோட்டை, புளியரை, வடகரை, அச்சன்புதூர், தென்காசி, சுரண்டை, வி.கே.புரம் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற நில அதிர்வு ஏற்பட்டது என்றனர்.

    தற்போது 2 மாவட்டங்க ளிலும் பெரும்பாலான கிராமங்களிலும் மக்கள் லேசான அதிர்வை உணர்ந்துள்ள நிலையில், அதிகாரிகள் அப்படி எதுவும் தேசிய நில நடுக்க மையத்தில் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில், அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான நில அதிர்வுகள் ஏதும் ஏற்பட வில்லை. ரிக்டர் அளவு கோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நில அதிர்வுகள் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் நடக்கும். அவை ரிக்டர் அளவுகோலில் பதிவாகாது.

    குறிப்பிட்ட ஆழத்தில் குறிப்பிட்ட வினாடிக்கு நில அதிர்வு நீடித்தால் மட்டுமே ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும். எனினும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினர்.

    அதேநேரத்தில் 2 மாவட்டங்களிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேராளவுக்கு எடுத்துச்செல்லப்படுவது தான் இந்த அதிர்வுக்க காரணம் என்று இயற்கை பாதுகாப்பு வள சங்கத்தி னரும், சமூக ஆர்வலர்களும் புகார் கூறுகின்றனர்.

    நேற்றைய தினம் இயற்கை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் கணக்கில்லாத அளவுக்கு ஆழமாக குவாரிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.

    ஆலங்குளம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போர் எந்திரம் உபயோகித்து துளை இட்டு பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர்.

    அனுமதிக்கப்பட்ட அளவை விட குவாரிகளில் பாறைகளை எடுத்துவிட்டு, மீண்டும் ஆழம் தெரியாமல் இருக்க மண் நிரப்பி விடுகின்றனர்.

    எனவே குவாரிகளை எல்லாம் அரசு உடனடியாக ஆய்வு செய்து அதி திறன் கொண்ட வெடிபொருட்களை உபயோகப்படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    • நில அதிர்வு பீதியால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
    • தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் பெரும்பாலான கிராமங்கள் மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ளன.

    இதில் அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, அண்ணா நகர், வைராவி குளம், மணிமுத்தாறு, ஆலடியூர், ஏர்மாள்புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று நண்பகல் 11.55 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் பீதி அடைந்தனர்.

    ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்து தெருக்களில் கூட்டமாக நின்றனர். அப்போது அவர்கள் சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், அதனை தாங்கள் உணர்ந்ததாகவும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தனர். மேலும் வி.கே.புரம் அருகே உள்ள கீழ ஆம்பூர் கிராமத்தில் சில வீடுகளில் மேலே உள்ள சிலாப்புகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் கீழே விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.

    இதே போல் அம்பையை அடுத்த வி.கே.புரத்தில் பட்டாசு வெடித்தது போல் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். மன்னார்கோவில் பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து முக்கூடல் மற்றும் சுத்தமல்லி வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தகவல்கள் பரவலாக வெளியாகி வருகிறது. சுத்தமல்லியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வீட்டுக்குள் ஓடிச் சென்று தங்களது பெற்றோரிடம் பயத்துடன் தெரிவித்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார் பட்டி, ஆழ்வார் குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட இடங்களிலும் நண்பகலில் திடீர் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். அங்கு வீடுகள் பயங்கர சத்தத்துடன் குலுங்கியதாக கூறப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பெரும்பாலான கிராம பகுதிகளில் திடீரென உணரப்பட்ட இந்த நில அதிர்வால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் அச்சத்துடன் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து ஏராளமான குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே இது போன்ற நில அதிர்வுகள் ஏற்படுவதாக தங்களது பல்வேறு கருத்துக்களை கூறி விவாதித்தனர்.

    இதையடுத்து தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    • 3 மாத காலங்கள் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம்.
    • கண்ணை கவரும் வகையில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை, சுந்தர பாண்டியபுரம், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 மாத காலங்கள் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், இந்த ஆண்டும் தற்போது சூரியகாந்தி சாகுபடி சுந்தர பாண்டியபுரம், சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது அவை அனைத்தும் அறுவடைக்கு தயாரான நிலையில், செழித்து வளர்ந்துள்ள அந்த சூரியகாந்தி பூவின் அழகு அந்த பகுதியில் கண்ணை கவரும் வகையில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    ஏற்கனவே கடந்த சில வருடங்களாக குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பூக்களின் அழகை ரசிப்பதற்காக கார்களில் குடும்பத்துடன் தென்காசியில் இருந்து ஆய்க்குடி வழியாக சுரண்டை செல்லும் சாலையில் வந்து சூரியகாந்தி தோட்டத்திற்கு படையெடுப்பார்கள்.

    தொடர்ந்து கண்களை கவரும் சூரியகாந்திக்கு நடுவில் நின்று செல்பி எடுத்து மகிழ்வார்கள்.

    இதனால் குற்றாலம் சீசன் காலத்தில் இந்த பகுதிகளும் சுற்றுலாத் தலமாக மாறிவிடும். அதன்படி இந்த ஆண்டும் சூரியகாந்தி பூக்கள் கம்பளி, சாம்பவர் வடகரை, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் குடும்பம் குடும்பமாக கார்களில் வந்து தங்கள் குழந்தைகளுடன் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்களுக்கு இடையில் நின்று உற்சாகமாக புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    கேரளாவில் திருமணமான புதுமண தம்பதிகள் பல்வேறு ரக ஆடைகளை அணிந்து கொண்டு சூரியகாந்தி மலர் இருக்கும் பகுதியை சுற்றிலும் போட்டோ சூட் நடத்தி வருகின்றனர். இதனால் வயல் வெளியில் உள்ள சாலைகளின் ஓரத்தில் வியாபாரிகள், விவசாயிகள் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர்.

    • வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி.
    • செப்டம்பர் 1-ந்தேதி பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடக்கிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் செப்டம்பர் 1-ந்தேதி நெல்கட்டும்செவல் கிராமத்தில் வீரவணக்க நிகழ்ச்சி நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளூர் மற்றும் தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டத்தில் இருந்தும் வருவார்கள்.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் 18-ந்தேதி (இன்று) மாலை 6 மணி முதல் 21-ந்தேதி காலை 10 மணி வரைக்கும், 30-ந்தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ந்தேதி காலை 10 மணிவரை ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்.

    இந்தநாளில் அனைவரும் கூட்டமாக செல்லாமல், 4 பேர் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாரல் திருவிழா களைகட்டி உள்ளது.
    • குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்,புலி அருவி,சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வரும் நிலையில், சாரல் திருவிழாவும் நடைபெறுவதால் விழா களைகட்டி உள்ளது.

    சாரல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருவதால் அதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் குற்றாலத்தில் குவிந்து வருவதால் குற்றாலத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஐந்தருவி. மெயின் அருவி.

    பழைய குற்றால அருவிகளில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    குற்றாலம் சாரல் திருவிழாவில் இன்று காலையில் பெண்களுக்கான கோலப் போட்டியும் ஆண்களுக்கான ஆணழகன் போட்டியும் நடை பெற்றது.

    மாலையில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்து குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.

    சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    • மலைப்பகுதியில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.
    • மணி முத்தாறு அருவிகளில் கூட்டம் கூட்டமாக சென்று உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

    நெல்லை:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், அண்டை பகுதியான தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பருவமழை ஓரளவுக்கு பெய்துள்ளது. இதனால் அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மிக மிக குறைவாகவே பெய்திருந்தாலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கார் பருவ சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளது.

    அணைகளில் கடந்த ஆண்டை காட்டிலும் கணிசமான அளவு நீர் இருப்பு இருப்பதால் பாசனத்திற்காக அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பாபநாசத்தை ஒட்டி தாமிரபரணி ஆறு தொடங்கும் இடங்களில் நெல் நடவு பணிகள் முடிந்து விட்டது. அதனை தொடர்ந்து படிப்படியாக அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச் செவல், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணி முடிந்துவிட்டது.

    தற்போது நெல்லை கால்வாய் மூலமாக பயன் பெறும் கண்டியப்பேரி உள்ளிட்ட மாநகரின் பல இடங்களில் நெல் நடவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    மேலும் மாநகரை கடந்து பாளையங்கால்வாய் மூலமாக பாசனம் பெறும் இடங்களில் தற்போது நெல் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று சேர்வலாறு அணை பகுதியில் அதிக பட்சமாக 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசத்தில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அந்த அணையின் நீர்மட்டம் 115.45 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம்120.77 அடியாகவும் இருக்கிறது.

    அணைகளுக்கு வினாடிக்கு 415 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 1,104 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மலைப்பகுதியில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

    இதனிடையே விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் களக்காடு தலையணை, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணி முத்தாறு அருவிகளில் கூட்டம் கூட்டமாக சென்று உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று ராமநதி அணை பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடனா அணையில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று காலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், விடுமுறையையொட்டி அங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    குற்றாலத்தில் பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த அருவிகளில் இருந்து வரும் நீரின் காரணமாக மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் மானூர் பெரிய குளத்திற்கும் குற்றாலம் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தபசு காட்சி வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 11-ந் தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் அம்பாள் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் கலையரங்கத்தில் சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி., தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தேரோட்டத்தில் அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, கோவில் துணை ஆணையர் கோமதி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியான தபசு காட்சி 11-ம் திருவிழாவான வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரலிங்கசுவாமி கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டக படிதாரர்கள் செய்து வருகிறார்கள். 

    • வேனில் இருந்தபடி சசிகலா தொண்டர்களிடையே உரையாற்றினார்.
    • சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக சசிகலா தெரிவித்திருந்தார்.

    அதன்படி நேற்று மாலை தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜர்புரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இரவு வரையிலும் தென்காசி சுற்றுவட்டார கிராமங்களில் வேனில் இருந்தபடி சசிகலா தொண்டர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து குற்றாலம் சென்று ஓய்வெடுத்தார்.

    இந்நிலையில் 2-வது நாளான இன்று மாலையில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரானூர் பார்டரில் சசிகலா தனது பயணத்தை தொடங்க உள்ளார்.

    தொடர்ந்து செங்கோட்டை, விஸ்வநாதபுரம், தேன்பொத்தை, பண்பொழி, அச்சன்புதூர், இலத்தூர், குத்துக்கல்வலசை, கொடிக்குறிச்சி, நயினாகரம், இடைகால், கடையநல்லூர், திரிகூடபுரம் வழியாக சொக்கம்பட்டியில் இன்றைய சுற்றுப்பயணத்தை அவர் நிறைவு செய்கிறார். இன்று மொத்தம் 17 இடங்களில் சசிகலா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.

    நேற்று தனது முதல் நாள் பயணத்தின்போது சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு புறப்பட்டார். சசிகலா தனது சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    ஆனால் அந்த எதிர்ப்புகளை மீறி சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. மேலும் சசிகலாவின் பிரசார வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற வாகனங்களிலும் அ.தி.மு.க. கொடிகளே கட்டப்பட்டிருந்தது.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×