என் மலர்
உலகம்
- பூமியில் செவ்வாய் கிரகம் போன்ற சூழலை உருவாக்கி உள்ளனர்.
- மனிதர்கள் எப்படி நடமாட வேண்டும், அவர்கள் சமைப்பது எப்படி என்பது உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கும் பணியையும் விஞ்ஞானிகள் தொடங்கி விட்டனர். இதற்காக பூமியில் செவ்வாய் கிரகம் போன்ற சூழலை உருவாக்கி அங்கு மனிதர்கள் எப்படி நடமாட வேண்டும், அவர்கள் சமைப்பது எப்படி என்பது உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
தற்போது 4 மனிதர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக நாசா தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
- சிறுத்தையின் செயல்பாடுகள் வனவிலங்கு ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
- சூரிய நமஸ்காரம் செய்வதில் சிறுத்தைக்கும் இத்தனை ஆர்வமா? என கேள்வி கேட்ட இணையதளவாசிகள், அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
வனவிலங்குகள் காட்டுக்குள் சுற்றிவருவதையும், எதிரிகளை வேட்டையாடுவதையும் வனவிலங்கு ஆர்வலர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம்.
மின்னல் வேகத்தில் ஓடும் மான், வேட்டையை துரத்தி செல்லும் சிங்கம், புலி, சிறுத்தை, இவற்றிடம் இருந்து தப்பிக்க முயலும் சிறு விலங்குகள் போன்றவற்றை வீடியோவாக பார்க்கும் பலரும் வனவிலங்குகளை கண்டு மிரண்டுபோவார்கள்.
அந்த வகையில் இந்திய வனத்துறை அதிகாரி சாகேத் படேலா என்பவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ, சிறுத்தைகள் பற்றிய சிந்தனையை மாற்றும் விதத்தில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று அதிகாலை பொழுதில் எழுந்து காட்டுக்குள் நடைபோடுகிறது. பின்னர் சூரியனை பார்த்தபடி கால்களை நீட்டுகிறது.
பின்னர் சூரியநமஸ்காரம் செய்வது போல செயல்படுகிறது. சிறுத்தையின் இந்த செயல்பாடுகள் வனவிலங்கு ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த வீடியோ ரஷிய தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. சூரிய நமஸ்காரம் செய்வதில் சிறுத்தைக்கும் இத்தனை ஆர்வமா? என கேள்வி கேட்ட இணையதளவாசிகள், அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
யோகா ஆசிரியர் இல்லாமல் இந்த சிறுத்தைக்கு யோக கற்று கொடுத்தது யார்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
- அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்விதமான ரோபோட் டெஸ்டிங்கையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு விடுகின்றன.
- டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்த இருக்கிறது.
டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் ஏஐ பாட்கள் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.
"ஏப்ரல் 15 ஆம் தேதி முதல், வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். இது தான் ஏஐ பாட்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் உண்மையான வழியாக இருக்கும். இதைதவிர மற்ற நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடியும். வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளவும் வெரிஃபிகேஷன் பெற்றிருக்க வேண்டும்," என எலான் மஸ்க் டுவிட் செய்திருக்கிறார்.

அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிறப்பிக்கும் ரோபோட் டெஸ்டில் இருந்து விடுபட செய்யும் ஒரே வழிமுறை கட்டண சமூக வலைதள அக்கவுண்ட்கள் தான் என எலான் மஸ்க் முன்னதாக தெரிவித்து இருந்தார். தற்போதைய அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்விதமான ரோபோட் டெஸ்டிங்கையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு விடுகின்றன.
முன்னதாக ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என டுவிட்டர் அறிவித்து இருந்தது.
உலகளவில் டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்த இருக்கிறது. பழைய வழக்கப்படி டுவிட்டர் பயனர்களின் ஐடி மற்றும் பொது மக்கள் இடையே பிரபலமாக இருப்போருக்கு மட்டும் குறிப்பிட்ட வழிமுறைகளின் கீழ் வெரிஃபைடு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பாதிக்கப்பட்டவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் சென்று கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சவூதி அரேபியாவின் தென்மேற்கில் நேற்று மாலை பயணிகள் சிலர் பேருந்தில் யாத்ரீகர்களுடன் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்து பிரேக் பிடிக்காததை அடுத்து பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி, கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இதில், உம்ரா யாத்ரீகர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் சென்று கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- மோடி பற்றிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
- ராகுல் காந்தி விவகாரத்தில் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
மோடி பற்றிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறையின் துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறும்போது, 'சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அடிப்படையாகும். இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல் காந்தி மீதான வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம். கருத்து சுதந்திரம் உள்பட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பது குறித்து உறுதிப்பாட்டை இந்திய அரசுடன் பகிர்கிறோம்' என்றார்.
- டிஸ்னி தனது நிறுவனத்தில் இருந்து 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- எதிர்பார்த்த லாப இலக்கை அடைய முடியாதது உள்ளிட்ட காரணங்களாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உலகின் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி தனது நிறுவனத்தில் இருந்து 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாகவும், எதிர்பார்த்த லாப இலக்கை அடைய முடியாதது உள்ளிட்ட காரணங்களாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 7 ஆயிரம் பணி இடங்களை குறைப்பதற்கான கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.
- தாறுமாறாக ஓடிய பஸ் பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
- விபத்தில் 20 பேர் பலியானார்கள். 29 பேர் காயம் அடைந்தனர்.
சவுதி அரேபியாவின் தெற்கு மாகாணமான ஆசிரில் பஸ் ஒன்று மெக்காவுக்கு சென்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உம்ரா பயணமாக மெக்காவுக்கு பயணம் செய்தனர். அப்போது ஒரு பாலம் ஒன்றில் பஸ் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய பஸ் பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள். 29 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர், விவரங்களை வெளியிடவில்லை.
- துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இது நமது சமூகங்களைத் துண்டாக்குகிறது. இந்த தேசத்தின் ஆன்மாவை அழிக்கிறது.
அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைதொடர்ந்து சிறு வணிக நிர்வாக மகளிர் வணிக உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் சரியானவை அல்ல. சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை ஆராய்ந்து வருகிறோம். பென் நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். துப்பாக்கி சூடு வன்முறையை தடுக்க இன்னும் அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது நமது சமூகங்களைத் துண்டாக்குகிறது. இந்த தேசத்தின் ஆன்மாவை அழிக்கிறது. பள்ளிகளை சிறைகளாக மாறாமல் பாதுகாக்க இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் இருந்து இரண்டு தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு ஏகே-47 இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, ஆயுதத் தாக்குதல் தடையை நிறைவேற்ற மீண்டும் அழைப்புவிடுகிறேன். அரசு இன்னும் சில முன்னேற்றங்களைச் செய்யத் தொடங்க வேண்டிய நேரம் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இம்ரான்கான் அரசியலை பகையாக மாற்றி இருக்கிறார்.
- பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிரியாக இம்ரான்கான் இருக்கிறார்.
இஸ்லாமாபாத் :
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகவும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார். அப்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றபோது இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். அதை தொடர்ந்து, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பும், உள்துறை ராணுவ மந்திரி ராணா சனாவுல்லா ஆகிய இருவரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவியுடன் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ராணா சனாவுல்லா பேசும்போது, "பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிரியாக இம்ரான்கான் இருக்கிறார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானின் அரசியலைக் கொண்டு சென்றிருக்கும் பாதையால் ஒன்று அவர் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம். இம்ரான்கான் அரசியலை பகையாக மாற்றி இருக்கிறார். அவர் எங்கள் எதிரி. அவ்வாறே அவர் நடத்தப்படுவார்" என்றார்.
இம்ரான்கான் குறித்த ராணா சனாவுல்லாவின் இந்த பேச்சு பாகிஸ்தான் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கிழக்கு காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
- இதில் பொதுமக்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கோவின் கிழக்கில் உள்ள இடுரி மற்றும் ட்ஜிகு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த மாகாணங்களில் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியது. இந்த சம்பவத்தில் அந்த வாகனங்களில் பயணம் செய்த டிரைவர் உள்பட பொதுமக்கள் 17 பேர் கிளர்ச்சியாளர்கள் குழுவால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.