என் மலர்tooltip icon

    உலகம்

    • போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
    • போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை 150 டாலரைத் தாண்டும்

    மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது

    உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.

    ஈரான் -அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில், 2022ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 110 டாலரைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஒருவேளை போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை 150 டாலரைத் தாண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது.
    • அல் கார்ஜ் ஒரு பெரிய விமான தளத்தைக் கொண்டுள்ளது.

    ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.

    மேலும், இது ஆறுதலாக இருப்பதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு இந்தியர் காயமடைந்து தற்போது அல் கார்ஜில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    "நேற்று மாலை அல் கார்ஜில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் எந்த இந்தியரும் உயிரிழக்கவில்லை என்பது நிம்மதியளிக்கும் விஷயம். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. ஆலோசகர் (CW) ஸ்ரீ ஒய். சபீர் நேற்று இரவு அல் கார்ஜுக்கு சென்று இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் காயமடைந்த இந்தியரை சந்தித்தார்," என்று இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    குடியிருப்பு பகுதியை தாக்கிய குறிப்பிடப்படாத ராணுவ ஏவுகணையால் ஒரு இந்தியரும் ஒரு வங்கதேச நாட்டவரும் கொல்லப்பட்டதாக சவுதியின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் முன்பு கூறியிருந்தது.

    அல் கார்ஜ் ஒரு பெரிய விமான தளத்தைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு தெஹ்ரான் வளைகுடாவைத் தாக்கியதால் கடந்த ஒரு வாரமாக இந்தப் பகுதி மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளது.

    • இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 47 முக்கியத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை.
    • அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2023-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் நாடு தழுவிய அளவில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதனை விசாரித்த கோர்ட்டு, இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 47 முக்கியத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அக்கட்சியின் ஆதரவாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். ஏற்கனவே இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் சிறையில் இருக்கும் நிலையில், இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரு நாடுகளிடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளது.
    • இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சாம்சங் மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்கும்.

    சியோல்:

    தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தென்கொரியா கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ரூ.29 லட்சம் கோடி (350 பில்லியன் டாலர்) தொகையை அமெரிக்காவில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தென் கொரிய நாடாளுமன்றம் தாமதம் செய்து வந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் கார்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

    இந்த வரி உயர்வு அமலுக்கு வந்தால் தென் கொரியப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்பதால், அந்நாட்டு அரசு அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.

    இது குறித்து பேசிய தென் கொரிய தொழில் துறை மந்திரி கிம் ஜங்-குவான், "அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கான சிறப்புச் சட்டத்தை வரும் 12-ந் தேதி தென் கொரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ளோம். இந்த தகவல் அமெரிக்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி உயர்வு அபாயம் நீங்கியுள்ளது." எனத் தெரிவித்தார்.

    இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சாம்சங் மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்கும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் டிரம்ப் நிர்வாகம் இதில் பிடிவாதமாக இருந்தது. தற்போது தென் கொரியா இதற்குச் சம்மதித்துள்ளதால் இரு நாடுகளிடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளது.

    • ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
    • இதையடுத்து அவரது மகன் முஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு ஆவார் என கூறப்பட்டது.

    டெஹ்ரான்:

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அந்நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து, அங்கு புதிய உச்சபட்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது. இதில் காமேனியின் மகன் முஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது.

    இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.

    இந்நிலையில், ஈரானின் உச்சபட்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    • ஆந்த்ரோபிக் நிறுவனத்தை பென்டகன் தனது 'சப்ளை செயின் ரிஸ்க்' பட்டியலில் சேர்த்து அதன் செயல்பாடுகளை பகுதியளவு முடக்கியுள்ளது.
    • டிரம்ப் குறித்து தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    ராணுவ உளவு வேலைகளுக்கு ஏஐ உடைய முழு அணுகலையும் வழங்க முடியாது என கூறி ஆந்ரோபிக் நிறுவனம் அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனுடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அதன்பின் அந்த ஒப்பந்தத்தை ஓபன் ஏஐ நிறுவனம் கைப்பற்றியது.

    இந்நிலையில் பென்டகனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் பிரிவு தலைவரான கைட்லின் கலினோவ்ஸ்கி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இவர் கடந்த 2024 நவம்பரில்தான் மெட்டா நிறுவனத்திலிருந்து விலகி ஓபன் ஏஐ இல் இணைந்தார்.

    பென்டகனின் ரகசிய நெட்வொர்க்குகளில் ஓபன் ஏஐ-இன் ஏஐ மாடல்களைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என கைட்லின் தெரிவித்துள்ளார்.

    சட்ட மேற்பார்வையின்றி அமெரிக்க குடிமக்களை ஏஐ மூலம் உளவு பார்ப்பது மற்றும் மனிதக் கட்டுப்பாடு இல்லாத தானியங்கி ஆயுதங்களில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் ஆழமான விவாதங்கள் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து ஓபன் ஏஐ தரப்பு கூறுகையில், "தேசிய பாதுகாப்பிற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதற்காகவே பாதுகாப்புத் துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    உள்நாட்டு உளவு வேலைகளுக்கோ அல்லது தானியங்கி ஆயுதங்கள் தயாரிப்பதற்கோ எங்களது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது.

    இது தொடர்பாக அரசு மற்றும் பொது அமைப்புகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஆந்த்ரோபிக் நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் டிரம்ப் ஆத்திரமடைந்தார்.

    எனவே ஆந்த்ரோபிக் நிறுவனத்தை பென்டகன் தனது 'சப்ளை செயின் ரிஸ்க்' பட்டியலில் சேர்த்து அதன் செயல்பாடுகளை பகுதியளவு முடக்கியுள்ளது.

    இந்தப் பட்டியலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டி, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடி, கடந்த காலங்களில் அதிபர் டிரம்ப் குறித்து தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    முன்னதாக மனிதத் தலையீடு இல்லாத ஆயுதங்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றுக்குத் தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தீப்பற்றி எரியும் எண்ணெய் கிடங்கில் இருநு்து அதிகளவில் கரும்புகை வெளியாகிறது.
    • அமில மழை பெய்து பெரும் ஆபத்தை உருவாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை.

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் நடத்தியதில் எரிபொருள் கிடங்கு தீப்பற்றி எரிகிறது.

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கிடங்கில் இருநு்து அதிகளவில் கரும்புகை வெளியாகிறது.

    இதனால், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமில மழை பெய்து பெரும் ஆபத்தை உருவாக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இஸ்ரேல் தாக்குதலில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்ததால் காற்றில் அதிகளவு கரும்புகை கலந்ததால் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • ஈரான் தோற்கடிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
    • பலியானவர்களின் எண்ணிக்கை 1300-ஐ கடந்துள்ளது.

    இஸ்ரேல் - அமெரிக்கா ஈரான் மீது கடந்த ஒரு வார காலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மீதும் அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகள் மீதும் அங்குள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் வளைகுடா நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டார். ஈரான் மீது அங்கிருந்து தாக்குதல் நடத்தப்படாத வரை நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று தெரிவித்தார்.

    ஈரான் அதிபர் மன்னிப்பு கேட்டது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், தாக்குதலுக்கு உள்ளாகி தோற்கடிக்கப்பட்ட ஈரான், மன்னிப்பு கேட்டு அதன் மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் அண்டை நாடுகளுடனான ஈரானின் உறவில் விரிசலை ஏற்படுத்த எதிரிகள் தனது வார்த்தைகளைத் தவறாகச் சித்தரிப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் தெரிவித்துள்ளார்.

    அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படாதவரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் ராணுவ நடவடிக்கை எடுக்காது என்றே தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், "அண்டை நாடுகளை நாங்கள் சகோதரர்களாகவே பார்க்கிறோம். பிராந்திய நாடுகளிடையே பிளவை ஏற்படுத்த அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அனுமதிக்கக் கூடாது" என்று வலியுறுத்தினார். 

    இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவோம் என ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லாரிஜானி எச்சரித்துள்ளார்.

    "எங்கள் தலைவரின் இரத்தத்திற்கு நாங்கள் இரக்கமின்றிப் பழிவாங்குவோம். இதற்கு டிரம்ப் விலை கொடுக்க வேண்டியிருக்கும் " என்று லாரிஜானி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தற்போது, ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார மையங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஈரானின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

    இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1300-ஐ  கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

    • ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நான் ஈடுபட விரும்புகிறேன்.
    • நாங்கள் ஒவ்வொரு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு மோதலில் ஈடுபடவிரும்பவில்லை.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

    ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஈரானுக்கு இனி ஒரு செயல்பாட்டு ராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதமுள்ள எந்த தலைமையும் இல்லாதபோதுதான் போர் முடிவடையும்.

    ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நான் ஈடுபட விரும்புகிறேன்.

    நாங்கள் ஒவ்வொரு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு மோதலில் ஈடுபடவிரும்பவில்லை.

    அமெரிக்காவை ஒரு போருக்கு இட்டுச் செல்லாத ஒரு ஈரான் அதிபரை தேர்ந்தெடுக்க விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • ஈரான் முழுவதும் ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தின.

    தெக்ரான்:

    அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் இன்று 9-வது நாளாக நீடிக்கிறது.

    அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தும் இந்த தாக்குதலில் ஈரானின் ராணுவ நிலைகள், அரசாங்கம் தொடர்பான கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இப்போரில் முதல் முறையாக ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் குறி வைக்கப்பட்டன.

    தலைநகர் தெக்ரானின் ஷாஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு தீப்பிடித்தது. அங்கு விண்ணை முட்டும் அளவுக்கு புகை மண்டலம் எழும்பியது.

    அதேபோல் தெக்ரானின் கோஹாக்கில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் மேற்கு தெக்ரானின் கராஜில் உள்ள எண்ணெய் கிடங்கு ஆகியவை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் அந்த எண்ணெய் கிடங்குகள் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிகின்றன.

    அதே போல் அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதலில் 4 ஊழியர்கள் பலியானார்கள்.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, ஈரான் அரசாங்கம் தனது ராணுவப் படைகள், ராணுவ உள்கட்டமைப்பை இயக்க இந்த எண்ணெய் கிடங்குகளை அடிக்கடி பயன்படுத்துகின்றன. அவற்றின் மூலம் ஈரானில் உள்ள ராணுவ நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த எண்ணெய் கிடங்கு மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஈரான் ஆட்சியின் ராணுவ உள்கட்டமைப்பிற்கு ஏற்படும் சேதத்தை ஆழப்படுத்துவதில் கூடுதல் படியாகும் என்று தெரிவித்தது.

    இதற்கிடையே பிரதான சுத்திகரிப்பு வளாகத்திற்கு அருகே தெற்கு தெக்ரானில் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் சுத்தி கரிப்பு நிலையம் சேதமடையவில்லை என்று தெரிவித்து உள்ளது.

    அதே போல் ஈரானின் கெஷ்ம் தீவில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதற்கிடையே எண்ணெய் கிடங்குகள், குடிநீர் ஆலை மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அரக்சி கூறும்போது, கடல் நீரை குடி நீராக்கும் ஆலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதன் மூலம் ஒரு அப்பட்டமான, அவநம்பிக் கையான குற்றத்தை செய்து உள்ளது. இந்த தாக்குதலால் 30 கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஈரானின் உள்கட்டமைப்புகளை தாக்குவது என்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த முன் உதாரணத்தை அமெரிக்கா தான் செய்துள்ளது. நாங்கள் அல்ல" என்றார்.

    ஈரானின் இஸ்பஹானில் உள்ள விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த போர் விமானங்களை அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஈரான் முழுவதும் ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தின.

    போர் காரணமாக ஈரானில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து உள்ளனர். அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதலை ஈரான் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

    குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் விமான நிலையத்தில் பயங்கர தீப்பிழம்புகள் ஏற்பட்டு கொழுந்து விட்டு எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அதே போல் குவைத் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்தபோது அதன் பாகங்கள் அங்குள்ள குடியிருப்பு கட்டிடம் மீது விழுந்தது. இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

    இதற்கிடையே தற்போது நடந்து வரும் தாக்குதலில் குவைத்தின் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பக்ரைனின் சல்மான் துறைமுகத்திற்கு அருகில் உள்ள தளத்தை ஈரான் தாக்கியதாக பக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பக்ரைனில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    துபாய் மீது ஏவப்பட்ட டிரோன்கள் இடைமறிக்கப்பட்டன. அப்போது நடுவானில் அழிக்கப்பட்ட டிரோன்களின் பாகங்கள், துபாயின் 90 மாடிகள் கொண்ட பிரமாண்டமான மெரினா டவர் கட்டிடம் மீது விழுந்தது. இதில் அந்த கட்டிடத்தின் உச்சி பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.

    உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். துபாயின் அல் பர்ஷாவில் வான்வழி இடைமறிப்பின் இடிபாடுகள் ஒரு வாகனத்தின் மீது விழுந்ததில் பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் உயிரிழந்தார்.

    இதற்கிடையே கத்தார், சவுதி அரேபியா மீது ஈரான் ஏவுகணைகள், டிரோன்களை வீசியது. அவைகள் இடைமறிக்கப்பட்டதாக அந்நாடுகள் தெரிவித்தன.

    அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஜெருசலேம் ஹைபா உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் கடும் ஏவு கணை தாக்குதலை தொடுத்தது. இதனால் இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன. உடனே பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.

    இதற்கிடையே ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் மத்திய பெய்ரூட்டில் உள்ள ரமாடா ஓட்டல் கட்டிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.

    மோதல் காரணமாக தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் இந்த ஓட்டலில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே இஸ்ரேலின் சபெட் அருகே உள்ள இஸ்ரேலின் வடக்கு கட்டளை தலைமையகமான டாடோ தளத்தின் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஈரான் மீது இன்று கடுமையான தாக்குதல் தொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதனால் ஈரானின் பல்வேறு இலக்கு களை குறி வைத்து வான்வழி தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்பதால் போர் உச்சத்தை அடைந்து இருக்கிறது.

    • சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பள்ளியின் மீது விழுந்திருக்கலாம்.

    கடந்த வாரம் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 160 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளியை தாக்கியது அமெரிக்க இராணுவமே என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

    அவர் கூறுவதாவது, "எங்களிடம் உள்ள ஆதாரங்களின்படி, இது ஈரானே செய்த வேலை. அவர்களின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மிகவும் தரம் குறைந்தவை.

    இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் அவற்றுக்குக் கிடையாது. தவறுதலாக அவர்களின் ஏவுகணையே அந்தப் பள்ளியின் மீது விழுந்திருக்கலாம். நாங்கள் ஒருபோதும் பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்" என்று கூறினார். 

    • இளைஞர்களை திரட்டிப் போராடியதில் பாலேந்திர ஷா முக்கியப் பங்கு வகித்தார்.
    • கர்நாடகாவில் முதுகலை பயின்றார்.

    நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது. 

    பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்டுவர். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.

    தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி.சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கினா்.

    ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

    நேபாளத்தின் செல்வாக்குமிக்க தலைவரான கே.பி. சர்மா ஒலியை அவரது சொந்தத் தொகுதியான ஜாப்பா-5 இல் பாலேந்திர ஷா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

    ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் போட்டியிட்ட பாலேந்திர ஷா 68,348 வாக்குகள் பெற்ற நிலையில் சர்மா ஒலி 18,734 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் சர்மா ஒலியை 35 வயது முன்னாள் மேயர் 49,614 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

    74 வயதான ஒலி, 1990 முதல் இந்தத் தொகுதியில் ஏழு தேர்தல்களில் ஆறில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 4 முறை நேபாள் பிரதமர் பதவியில் இருந்துள்ளார். 

    இதற்கிடையே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 165 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பாலேந்திர ஷா பிரதமர் பொறுப்பேற்க உள்ளார்.

    யார் இந்த பாலேந்திர ஷா?

    பாலேந்திர ஷா அடிப்படையில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர் ஆவார்.  இசை மீதான ஆர்வத்தால் ராப் பாடகர் ஆகி அதன் மூலம் நேபாள் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.  

    இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாலேந்திர ஷா முதுகலை பட்டம் பெற்றவர்.

    2022 இல் காத்மாண்டு மாநகராட்சி மேயராக பாலேந்திர ஷா சுயேச்சையாக வென்று சாதனை படைத்தார்.

    2026 பொதுத்தேர்தலில் போட்டியிட கடந்த ஜனவரி மாதம் மேயர் பதவியைத் துறந்து, ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியில் இணைந்தார்.

    2025 இல் கே.பி. ஒலி அரசு சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தபோது, அதற்கு எதிராக இளைஞர்களைத் திரட்டிப் போராடியதில் பாலேந்திர ஷா முக்கியப் பங்கு வகித்தார். அந்தப் போராட்டமே ஒலி அரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

    இந்த தேர்தல் முடிவு ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக இளைஞர்கள் அளித்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.  

    ×