என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ஜாம்பெல்லா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்தக் கார் திடீரென விபத்தில் சிக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாஷிங்டன்:

    உலகில் அதிகம் விற்பனையாகும் கால் ஆப் டூட்டி போன்ற வீடியோ கேம்களை உருவாக்கியவர்களில் ஒருவர் வின்ஸ் ஜாம்பெல்லா (55).

    இவர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தக் கார் திடீரென விபத்தில் சிக்கிய ஜாம்பெல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவருடன் பயணித்த மற்றொருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    ஜாம்பெல்லா மெடல் ஆப் ஹானர் உள்ளிட்ட கேம்களை தயாரித்து உலகப் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
    • வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளோம் என்றார்.

    நியூயார்க்:

    வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.

    இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே, தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜார்ரிக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது நிருபர்கள் வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

    வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளோம்.

    வங்கதேசமோ, வேறு நாடோ பெரும்பான்மையை சேராதவர்கள் தங்களைப் பாதுகாப்பாக உணர வேண்டும்.

    ஒவ்வொரு வங்கதேசத்தவரும் தங்களைப் பாதுகாப்பாக உணர தேவையான நடவடிக்கைகளை வங்கதேச அரசு எடுக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

    • டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி டிரம்ப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
    • சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

    டென்மார்க் நாட்டின் கிரீன்லாந்து பகுதிக்கு மட்டும் தனியாக தூதரை நியமித்துள்ள ட்ரம்ப், அந்த பகுதி அமெரிக்காவுக்கு நிச்சயம் கிடைத்தாக வேண்டும் எனவும் பேசியுள்ளார். 

    • அனைத்து நாடுகளைச் சேர்ந்த H-1B மற்றும் H-4 விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும்.
    • வழக்கத்தை விடக் கூடுதல் காலம் ஆகலாம் என்பதால், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து சென்று வேலை செய்ய H-1B மற்றும் H-4 விசா பெற டிரம்ப் நிர்வாகம் மேலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள  வலைதள கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

    இது அனைத்து நாடுகளைச் சேர்ந்த H-1B மற்றும் H-4 விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும். விசா முறைகேடுகளை தடுக்கவும் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சோஷியல் மீடியா வெட்டிங்

    விண்ணப்பதாரர் கடந்த 5 ஆண்டுகளில் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் தரவுகளை அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

    விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானதா என்பதையும், பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்பதையும் இதன் மூலம் உறுதி செய்வார்கள்.

    இந்த செயல்முறையால் விசா நடைமுறைகளுக்கு வழக்கத்தை விடக் கூடுதல் காலம் ஆகலாம் என்பதால், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு தற்போது இந்தியாவிற்குத் திரும்பியுள்ள ஊழியர்கள், விசா கிடைக்காததால் மீண்டும் தங்களது வேலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த புதிய கட்டுப்பாடு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.  

    • வெனிசுலாவைச் சுற்றி அமெரிக்கா கடலில் தனது படைகளைக் குவித்துள்ளது.
    • ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா-வெனிசுலா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

    இதையடுத்து போதை பொருள் கடத்துவதாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. வெனிசுலாவைச் சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளைக் குவித்து உள்ளது.

    இதற்கிடையே, வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் கைப்பற்றியது. அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர். அதன்பின், அந்தக் கப்பலை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

    இந்த எண்ணெய் கப்பல் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் வகையில் சட்டவிரோதமாக செயல்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்தது. கப்பல் கைப்பற்றப்பட்ட தற்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இந்நிலையில், வெனிசுலாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்கக் கடலோரக் காவல்படையால் மீண்டும் ஒரு எண்ணெய் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    ஒரே வாரத்தில் பறிமுதல் செய்யப்படும் இது இரண்டாவது எண்ணெய் கப்பல் என்பதுடன், இரண்டு வாரங்களுக்குள் இது மூன்றாவது சம்பவம் என தெரிய வந்துள்ளது.

    • வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது.
    • அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, அதில் இருந்த 16 முக்கியமான கோப்புகள் மாயமாகியுள்ளன.

    இதில் டொனால்ட் டிரம்ப் தொடர்பான புகைப்படங்களும் அடங்கும் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறையின் இணையதளத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான பக்கங்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன. இதில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    ஆனால், சனிக்கிழமை காலையில் பார்த்தபோது, அதில் குறைந்தது புகைப்படங்கள் உள்ளிட்ட 16 கோப்புகள் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    மாயமான கோப்புகளில் ஒன்று, ஜெப்ரி எப்ஸ்டீன், டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப் மற்றும் கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படமாகும்

    நிர்வாணப் பெண்களின் படங்கள் மற்றும் எப்ஸ்டீனின் இடத்தில் எடுக்கப்பட்ட சில ரகசிய புகைப்படங்களும் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    இந்தக் கோப்புகள் எதற்காக நீக்கப்பட்டன அல்லது தவறுதலாக நீக்கப்பட்டனவா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

    இன்னும் என்னவெல்லாம் மறைக்கப்படுகின்றன? அமெரிக்க மக்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    யார் இந்த எப்ஸ்டீன்?

    ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

    இதையும் படியுங்கள்: கம்போடியா உடனான மோதல் எதிரொலி: 1,000 பள்ளிகளை மூடியது தாய்லாந்து

    2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.

    2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

    ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

    'எப்ஸ்டீன் கோப்புகள்'

    ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.

    • ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடா நோக்கி விமானம் புறப்பட்டது.
    • சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரெக் பிபிள் (55). இவர் முன்னாள் கார் பந்தய சாம்பியன் ஆவார். இவர் தனது மனைவி கிறிஸ்டினா, குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தார். இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது மகன் ஜாக், கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் இருந்தனர்.

    ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம் சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் விமான நிலையத்திற்கே திரும்பியது.

    அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரன்வேயைத் தாண்டிச் சென்று ஆண்டனா மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

    இதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு விமானத்தில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுவரில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
    • பாதுகாப்புப் படைவீரர்ர்களே தேசத்தின் உண்மையான ஹீரோக்கள் என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    அமெரிக்காவின் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றிவரும் 14.5 லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சியாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளேன்.

    அமெரிக்கா சுதந்திரம் பெற்று ஒரு தேசமாக உருவான ஒரு ஆண்டாக 1776-ஐ நினைவு கூரும் வகையில் இந்தத் தொகை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வாரியர் டிவிடெண்ட் என அழைக்கப்படும் இந்தத் திட்டம் தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் விண்வெளி படை என அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் தொடக்கத்தைக் கவுரவிக்கும் இந்தத் தொகைக்கு நமது வீரர்களைவிட தகுதியானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அவர்களே தேசத்தின் உண்மையான ஹீரோக்கள் என புகழாரம் சூட்டினார்.

    இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரமானது அமெரிக்காவின் பொது பட்ஜெட்டிலிருந்து எடுக்கப்படாமல் பிற நாடுகள் மற்றும் வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிரடி வர்த்தக வரி மூலம் திரட்டப்பட்ட வருவாயிலிருந்து வழங்கப்படுகிறது.

    • எலான் மஸ்கின் சொத்துமதிப்பு அண்மையில் கிடுகிடுவென உயர தொடங்கியது.
    • 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை மஸ்க் படைத்தார்.

    உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் இன்டெஸ்க் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

    டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனுக்கு 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் அண்மையில் கோரிக்கை வைத்தார். இதற்கு டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து எலான் மஸ்கின் சொத்துமதிப்பு கிடுகிடுவென உயர தொடங்கியது. இதன்மூலம் 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை மஸ்க் படைத்தார்.

    தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 648 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    • சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்தது.
    • இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.

    பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

    சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் நேற்று இந்தத் தாக்குதலை நடத்தியது.

    இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்தது.

    சமீபகாலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமை காட்டி வரும் நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அவை போதைப்பொருள் படகுகள் இல்லை என்றும் இந்தத் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் விமர்சனம் எழுந்தது.

    ஆனால், சர்வதேச சட்டங்களின்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பென்டகன் விளக்கம் அளித்துள்ளது. 

    • கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை டிரம்ப் ஜூனியர் திருமணம் செய்தார்.
    • இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.

    டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை திருமணம் செய்தார்.

    இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளநிலையில் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக 2018 ஆம் ஆண்டு அறிவித்தனர். அத்துடன் இவர்களின் 12 ஆண்டு மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    டொனால்ட் டிரம்ப் ஜூனியர் - பெட்டினா ஆண்டர்சன் என்ற பெண்ணை கடந்தாண்டு முதல் காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் வெள்ளை மாளிகையில் திருமண நிச்சதார்தம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 8 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும் அவர் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

    பல்கலைக்கழகத்தில் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 8 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும் அவர் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×