என் மலர்
நீங்கள் தேடியது "World Economic Forum"
- உலக பொருளாதார மன்ற தலைவரான போர்கே பிரென்ட் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
- போர்கே மீதான குற்றம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
நியூயார்க்:
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, உலக பொருளாதார மன்ற தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான போர்கே பிரென்ட் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. எப்ஸ்டீனுடன் வணிக ரீதியான இரவு விருந்துகளில் கலந்துகொண்டதாகவும், மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் போர்கே மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உலகப் பொருளாதார மன்றத் தலைவர் பதவியை போர்கே ராஜிநாமா செய்தார். இவர் 2017-ம் ஆண்டு முதல் தலைவர் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், தனது பதவி விலகல் குறித்து போர்கே பேசுகையில், உலகப் பொருளாதார மன்றம் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அதற்காகவே நான் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளேன். கடந்த எட்டரை ஆண்டுகளாக இந்தப் பதவியில் பணியாற்றியதில் எனக்கு மிகவும் திருப்தி என தெரிவித்தார்.
போர்கே பதவி விலகியதைத் தொடர்ந்து, அலோயிஸ் ஸ்விங்கி இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றார்.
- ஆக்ஸ்ஃபேம் "இன்ஈக்வாலிட்டி இங்க்." எனும் பெயரில் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடும்
- இது தொடர்ந்தால் 229 வருடங்களுக்கு வறுமை ஒழியாது என எச்சரிக்கிறது ஆக்ஸ்ஃபேம்
ஜனவரி 15 தொடங்கி 19 வரை, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது.
பொருளாதார ஏற்ற இறக்கங்கள் குறித்து "இன்ஈக்வாலிட்டி இங்க்." (Inequality Inc.) எனும் பெயரில் தங்களது ஆண்டு அறிக்கையை ஆக்ஸ்ஃபேம் (Oxfam) எனும் அமைப்பு, உலக பொருளாதார மன்ற கூட்டத்திற்கு சில தினங்களுக்கு முன் வெளியிடுவது வழக்கம்.
இங்கிலாந்தை சேர்ந்த சுமார் 21 தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பு, ஆக்ஸ்ஃபேம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு அறிக்கையில் ஆக்ஸ்ஃபேம் தெரிவித்ததாவது:
2020க்கு பிறகு உலகின் பெரும் பணக்காரர்களில் முதல் 5 இடத்தில் உள்ளவர்கள், தங்கள் சொத்து மதிப்பை 2 மடங்கிற்கும் மேல் பெருக்கி உள்ளனர்.
அந்த 5 பேரும் $3.3 ட்ரில்லியன் மதிப்பிற்கு மேலும் பணக்காரர்களாகி உள்ளனர்.
பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault), ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), வாரன் பஃபே (Warren Buffet), லேரி எலிசன் (Larry Ellison) மற்றும் எலான் மஸ்க் (Elon Musk) ஆகிய அந்த 5 பேரின் நிகர மதிப்பு தற்போது $869 பில்லியன் என அதிகரித்துள்ளது.
கடந்த 4 வருடங்களாக இவர்களின் சொத்து மதிப்பு, மணிக்கு சுமார் $14 மில்லியன் என அதிகரித்து வந்திருக்கிறது.
இதே காலகட்டத்தில் 5 பில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலை தொடர்ந்தால் அடுத்த 229 வருடங்களுக்கு உலகில் வறுமையை ஒழிக்க முடியாது.
இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
"பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது, வரிகளை கட்டாமல் தப்பிப்பது, தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பருவகால மாற்றங்களை தொடர செய்வது ஆகியவற்றால் அசுரத்தனமான பணக்காரர்களை உருவாக்கத்தான் கார்ப்பரேட் அமைப்புகள் இயங்குகின்றன" என ஆக்ஸ்ஃபேம் செயல் இயக்குனர் அமிதாப் பெஹர் (Amitabh Behar) தெரிவித்தார்.
1792லிருந்து 1822 வரை இங்கிலாந்தில் வாழ்ந்த எழுத்தாளர், பெர்சி பைஷ் ஷெல்லி (Percy B. Shelley) "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்" என கூறியதை ஆக்ஸ்ஃபேம் அறிக்கையுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பயனர்கள் விவாதிக்கின்றனர்.
- உலக பொருளாதார மன்ற கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது
- பிராந்திய அமைதி இஸ்ரேலின் அமைதியையும் உள்ளடக்கியது என்றார் ஃபர்ஹான்
ஆண்டுதோறும், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டம் நடைபெறும்.
இவ்வருட கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளில் இருந்து தொழில் மற்றும் வர்த்தக துறையை சேர்ந்த அரசாங்க மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் பங்கு பெறுகின்றனர்.
இதில் சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் (Prince Faisal bin Farhan) பங்கேற்றார்.
அவரிடம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கேட்கப்பட்டது.
அப்போது பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:
பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து தருவதில் இஸ்ரேலுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், இஸ்ரேலை ஒரு தனி நாடாக ஏற்று கொள்ள சவுதி அரேபியாவிற்கு எந்த தயக்கமும் இல்லை.
பிராந்திய அமைதி என்பது இஸ்ரேலுக்கான அமைதியையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் ஏற்று கொள்கிறோம். ஆனால், பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு கிடைத்து அவர்கள் அமைதியாக வாழும் சூழல் ஏற்பட்டால்தான் அது சாத்தியமாகும்.
அப்போது இஸ்ரேலை தனி நாடாக ஏற்க சவுதி அரேபியா சம்மதிக்கும்.
தற்போது இஸ்ரேல், பிராந்திய அமைதியையும், பாதுகாப்பையும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
அப்பகுதியில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் வளமான எதிர்காலம் உருவாக அமைதிதான் ஒரே வழி. போர் நிறுத்தமே அமைதிக்கான முதல் படி.
அதற்கு நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முயற்சிக்கிறோம்.
இவ்வாறு ஃபைசல் கூறினார்.
பெரும்பாலும் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் நிறைந்த சவுதி அரேபியா, அரபு நாடுகளிடையே வலிமை வாய்ந்த நாடாக கருதப்படுகிறது.
கடந்த வருடம், பிராந்திய அமைதி ஏற்படும் வகையில் இஸ்ரேலுடன், சவுதி அரேபியா ஒரு ஒப்பந்தம் செய்ய இருந்தது.
ஆனால், அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து அமைதிக்கான சூழல் மாறி விட்டது.






