என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் மரணத்தை தழுவியே ஆக வேண்டும்.
    • இதயத்தின் இடதுபிரதான ரத்தக்குழாய் பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும்.

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் மரணத்தை தழுவியே ஆக வேண்டும். அனைவருக்கும் ஒரு கட்டத்தில் மரணம் ஏற்படும். வயது மூப்பு, விபத்து, தொடர் நோய் ஆகிய காரணங்களால் மரணம் உண்டாகும். ஆனால் எந்த நோயும் இல்லாமல், நோய்க்கான அறிகுறிகளும் இல்லாமல் திடீரென சிலர் மரணம் அடைகின்றனர். இதற்கு பெயர் தான் திடீர் மரணம்.

    முன்பு திடீர் மரணங்கள் பற்றி கேள்விப்படுவோம். ஆனால் இப்போது அந்த துயர காட்சிகளை வீடியோவாகவே பார்க்கிறோம். திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருப்பவர் அப்படியே சரிந்து விழுந்து இறப்பார், விளையாடிக் கொண்டிருக்கும் வீரர் சுருண்டு விழுந்து உயிர் விடுவார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர் அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு மரணிப்பார். இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவதை பார்க்கிறோம். அதனால் திடீர் மரணங்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகி விட்டது.

    திடீர் மரணத்துக்கு 4 காரணங்கள் உள்ளன. ஒன்று இதயம் சம்பந்தப்பட்டது. இதயத்துக்கு செல்லும் ரத்தம் 3 குழாய்கள் வழியாக செல்கிறது. அந்த 3 குழாய்களும் ஒரே சமயத்தில் அடைத்து விட்டால் இதயத்துக்கு ரத்தம் போவதில்லை. இதயத்தின் தசைப்பகுதிகளுக்கு செல்லும் ரத்தம் போகாமல் தடைபட்டால் தசைகள் செயல் இழந்து விடுகிறது. செயலிழந்த அந்த தசைகள் மீண்டும் செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. மீண்டும் அந்த தசைகள் விரிந்து சுருங்காது. இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் முக்கியமானது இடது பிரதான ரத்தக்குழாய்.

    அணையில் இருந்து வரும் தண்ணீர் மெயின் குழாய் வழியாக வந்து அதில் இருந்து ஒவ்வொரு பகுதிக்கும் சிறு குழாய்களாக பிரிந்து சென்று தண்ணீர் சப்ளை வழங்கப்படும். அந்த மெயின் குழாயிலேயே அடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் எங்கேயும் செல்லாது. அடைப்பு ஏற்பட்டாலும், குழாய் உடைந்து போனாலும் தண்ணீர் வராது. அதேபோல மெயின் குழாய் வழியாக ரத்தம் வந்து மற்ற பகுதிகளுக்கு ரத்தம் செல்லும். இந்த மெயின் குழாய் தான் இடதுபிரதான ரத்தக்குழாய்.

    இந்த குழாய் 4 மில்லி மீட்டர் அளவில் இருக்கும். அந்த மெல்லிய குழாயானது திடீரென்று அடைபடாது. அதில் கொஞ்சம், கொஞ்சமாக கொழுப்பு படிந்து கொண்டே வரும். 90 சதவீதத்துக்கு மேல் படியும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு இறந்து விடுகிறார். இடது பிரதான ரத்தக்குழாயை விதவை ரத்தக்குழாய் என்றும் அழைப்பர்.

    எந்தவொரு மனிதனும் சிறு நோயாவது இல்லாமல் இருக்க முடியாது. நோயானது 20 வயதிலும், 40 வயதிலும் வரலாம். சிலர் பிறக்கும் போது நோயுடனேயே பிறக்கிறார்கள். இதயத்தின் இடதுபிரதான ரத்தக்குழாய் பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும்.


    டாக்டர் ஜி.பக்தவத்சலம்

    டாக்டர் ஜி.பக்தவத்சலம்

     இந்த ரத்தக்குழாய் பாதிப்பை எளிதில் கண்டறிய முடியாது. டாக்டரிடம் சென்றால் ஈ.சி.ஜி. எடுத்து பார்ப்பார். அதில் ஒன்றும் தெரியாது. உங்களுக்கு ஒன்றும் இல்லை என டாக்டர் சொல்வார். எனது தந்தை மாரடைப்பால் இறந்து விட்டார், எனவே நன்றாக பரிசோதித்து பாருங்கள் என டாக்டரிடம் வேண்டுகோள் விடுப்பர்.

    உடனே நோயாளியின் சந்தேகத்தை போக்க அவருக்கு எக்கோ கார்டியோ கிராபிக் எடுத்து பார்ப்பார்கள். இதயம் விரிந்து சுருங்கும்போது 60 சதவீத ரத்தம் வெளியேறும். அவ்வாறு வெளியேறாமல் 20 சதவீத ரத்தம் வெளியேறுகிறது என்றால் இதயம் பலமாக இல்லை, பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். அதிலும் பிரச்சினை இல்லை என்றால் மூவிங் பெல்ட் மீது நடக்கும் பரிசோதனை. அந்த பெல்ட்டை 2, 3, 4 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடச் செய்து அதில் நம்மை ஓடச் சொல்வார்கள். மலையேறும் போது இதயத்துடிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். இதேபோன்றதொரு பரிசோதனை தான் இது. 4 கிலோ மீட்டர் வேகத்தில் பெல்ட்டில் ஓடும்போது இதயத்துடிப்பின் அளவு 140 வரை செல்லும். 150-க்கு போகும் போது கூட நெஞ்சில் வலியோ, எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என்றால் இதயம் நன்றாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளப்படும்.

    150-க்கு போகும்போது லேசாக நெஞ்சு வலிப்பது போல் இருந்தாலோ, ஈ.சி.ஜி.யில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தாலோ உங்களுக்கு ரத்த ஓட்டம் குறைவான இதய நோய் என்று அர்த்தம். இதற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர் பரிந்துரைப்பார். அல்லது நவீன சி.டி. ஸ்கேன் மூலமும் ரத்தக் குழாயில் இருக்கும் பிரச்சினையை மருத்துவர் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார். அடுத்து இதயத்தில் உள்ள அயோடிக் வால்வில் ஏற்படும் பாதிப்பு. உடலில் அனைத்து பாகங்களுக்கும் ரத்தம் செல்ல இதயம் அழுத்தும் போது வால்வு திறக்கும். அந்த வால்வு சுருங்கிப் போனால் 4 அல்லது 5 மில்லி மீட்டர் அளவில் இருக்கும் வால்வு அரை சென்டி மீட்டர் ஆகி விடும். வால்வு சுருங்கி போனால் ரத்தம் அடுத்த இடத்துக்கு செல்ல முடியாது. அப்போது மூளைக்கும் ரத்தம் செல்வது தடைபடும். அந்த சமயம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருப்பவர்களும் மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள். எனவே அயோடிக் வால்வு பழுதுபட்டால் மயக்கம் வரும். பழுதுபட்ட அந்த வால்வை மாற்ற வேண்டும்.

    இதய ரத்தக்குழாய்களில் ஒரு அடைப்பு, 3 அடைப்பு இருந்தால் கூட பைபாஸ் சர்ஜரி செய்யலாம். அயோடிக் வால்வு பழுதுபட்டால் அந்த வால்வை மாற்றித்தான் ஆக வேண்டும். ஒரு முறை மயக்கம் வந்தவுடன் உஷாராகி மருத்துவரை போய் பார்த்து எக்கோ கார்டியோ கிராபி மூலம் அயோடிக் வால்வு பழுதாகி இருந்தால் அதனை மாற்ற வேண்டும். திறந்தநிலை அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த வால்வை மாற்றி விட்டால் இன்னும் 10 ஆண்டுகள் கூடுதலாக வாழலாம். அந்த வால்வை மாற்றாமல் சாதாரண மயக்கம் தான் என்று விட்டு விட்டால் அடுத்த மயக்கம் வரும்போது உயிரோடு இருக்க மாட்டீர்கள். நெஞ்சுவலி லேசாக வருகிறது என்றால் அது அபாய மணி. உடனே டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறுங்கள். ஏன் என்றால் அடுத்த அபாய மணி அடிக்கும் போது உயிர் பிழைப்பது கடினம் ஆகிவிடும்.

    3-வது இதயத்துக்கு செல்லும் நரம்புகளால் பாதிப்பு ஏற்படும். இதயம் துடிக்கிறது என்று சொன்னால் அங்கு சின்ன பல்ஸ் ஜெனரேட்டர் இருக்கிறது. இதயத்தின் உள்ளேயே இதுபோன்ற செயல்பாடு உள்ளது. கரண்டை தொட்டவுடன் ஷாக் அடிப்பது போல இதயத்துக்கே மெல்லியதாக ஷாக் கொடுப்பது போல இந்த அமைப்பை நமக்குள் கடவுள் படைத்து இருக்கிறார். இந்த மின் தூண்டுதல் செயல்படாவிட்டாலும் இதயம் சரியாக துடிக்காது. மூளைக்கும் சரியாக ரத்தம் செல்லாது. இதனால் ஏற்படும் மயக்கம் மிக ஆபத்தானது. அடுத்து இதயத்துக்கு செல்லும் நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் மயக்கம் வரும். இதுவும் திடீர் மரணத்துக்கான அறிகுறியே. மகா பெருஞ்சிரை குழாய் உடைந்து போனாலும் அடைப்பு ஏற்படும். மேலும் மாரடைப்பின் போது இதயத்தின் ஒரு சுவர் உடைந்து விடும். இதனாலும் திடீர் மரணம் ஏற்படும்.

    எனவே உங்கள் உயிர் மேல், உங்கள் குடும்பத்தின் மீது அக்கறை இருந்தால் நீங்கள் கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். சிகரெட் பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது. மன அழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். டென்சன் ஆகாமல் அமைதியாக உங்கள் வேலையை கவனியுங்கள். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், முடிந்தவரை ஓட்டலில் சாப்பிடுவதை தவிருங்கள். அதிகம் இனிப்பு சாப்பிடாதீர்கள். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆபரேஷன் வரை வந்து விட்டோம் என்றால் அதன்பிறகாவது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அசைவ உணவை தவிர்க்க வேண்டும். மஞ்சள் கரு சாப்பிடக் கூடாது. தினந்தோறும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்யுங்கள். காய்கறிகள், சிறுதானியங்களை அதிகம் சாப்பிடுங்கள். சாப்பாட்டை அப்படியே விழுங்காதீர்கள். நன்கு மென்று சாப்பிடுங்கள்.

    அறிந்து கொள்வோம் முதலுதவி

    சிலர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். திடீரென மட்டனோ அல்லது சிக்கனோ தவறான வழியாகச் சென்று மூச்சு குழாயை அடைத்துக் கொள்ளும். அப்போது காற்று உள்ளே போக முடியாது. காற்று உள்ளே போகவில்லை என்றால் 3 நிமிடத்தில் உயிர் போய் விடும். உங்கள் நண்பர் ஒருவர் சாப்பிடும்போது இப்படி நடந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். பேச்சு வரவில்லை, கையை மட்டும் தொண்டையில் வைத்து சைகை காட்டுகிறார். அப்போது தொண்டையில் ஏதோ உணவு சிக்கிக் கொண்டு அவதிப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடனே அவரது பின்னால் போய் நின்று வயிற்றை பலமாக அழுத்தினோம் என்றால் சிக்கிக் கொண்ட உணவோ, பொருளோ வெளியே வந்து விடும். குழந்தைகளுக்கு மூச்சுக்குழாயில் ஏதாவது சிக்கிக் கொண்டால் குழந்தையை தலைகீழாக பிடித்து முதுகை தட்டினால் வெளியே வந்து விடும். எனவே நாமும் சிறு, சிறு முதலுதவிகளை தெரிந்து கொள்வது அவசியம்.

    பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை. விதியை மதியால் வெல்லலாம்.

    தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் பல இடங்களில் நாகராஜர் கோவில்கள் உள்ளன. பல ஆலயங்களில் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாகம் பூஜிக்கப்படுகிறது.
    • அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது.

    `பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா' என்ற கண்ணதாசன் திரைப்பாடல் அனைவரும் அறிந்தது.

    ஒருவர் சரியான இடத்தில் இருந்தால் யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம், ஆனால் அந்த இடம் பறிபோய்விட்டால் அவர்கள் நிலை ஆபத்தானது என்பதே இந்தப் பாடலின் பொருள்.

    பரமசிவன் கழுத்தில் இருக்கும் வரை பாம்புக்கு கருடனால் பிரச்சினை இல்லை. ஆனால் சிவன் கழுத்தை விட்டு விலகிவிட்டால் அதன்பிறகு பாம்பின் கதி அதோகதிதான்,

    நாகத்தையே ஆபரணமாக சிவன் தன் கழுத்தில் அணிந்துகொண்டுள்ளான்,

    கடவுளின் கழுத்தில் நாகம் உள்ளது என்பது மட்டுமல்ல, நாகமே கடவுளாகவும் வழிபடப்படுகிறது.

    இந்தியாவில் பல இடங்களில் நாகராஜர் கோவில்கள் உள்ளன. பல ஆலயங்களில் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாகம் பூஜிக்கப்படுகிறது.

    நாகர்கோவில் என்ற பெயரிலேயே தமிழகத்தில் ஓர் ஊர் உண்டு. அங்கு புகழ்பெற்ற நாகராஜர் ஆலயம் ஒன்றும் உண்டு.

    சிவன் கழுத்தில் ஆபரணமாக உள்ள பாம்பு, பாற்கடலில் துயிலும் பரந்தாமனுக்கு ஆதிசேஷனாக படுக்கையாக உள்ளது. அதுமட்டுமல்ல ஒவ்வோர் அவதாரத்திலும் பாம்பு ஒவ்வொரு விதத்தில் திருமா லுக்கு சேவகம் செய்கிறது. ராம அவதாரத்தில் ஆதி சேஷனே லட்சுமணனாக உருக் கொள்கிறது.

    பாம்பு பற்பல அவதாரங்களில் எந்த வகைகளில் எல்லாம் உதவுகிறது என்பதை பொய்கையாழ்வார் அருளிச் செய்த முதல் திருவந்தாதி வெண்பா ஒன்று அழகாக விவரிக்கிறது.

    `சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்

    நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்

    புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்

    அணையாம் திருமாற்கு அரவு.'

    பெருமாளுக்கு அவர் உலவும்போது நாகம்தான் குடை. அமரும்போது அதுவே சிம்மாசனம். நிற்கும்போது நாகம்தான் பாதுகை. பாற்கடலில் அதுவே மெத்தை. திருமால் அருகில் எப்போதும் திருவிளக்காக இருப்பவரும் திருமாலுக்குப் பட்டாடையாக இருப்பவரும் அணைப்பதற்கு அணையாக இருப்பவரும் நாகம்தான் என்கிறது அந்த வெண்பா.

    கிருஷ்ண அவதாரத்தில் தன் மனைவி தேவகிக்குக் குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதை இல்லத்திற்குக் கொட்டும் மழையில் கூடையில் எடுத்துச் செல்கிறார் வசுதேவர். அப்போது கண்ணன்மேல் மழைநீர் விழாதவாறு தன் படத்தையே குடையாக விரித்து உடன் செல்வது ஆதிசேஷன் என்ற பாம்புதான் என்பதை விவரிக்கிறது கண்ணன் கதையைச் சொல்லும் பாகவத புராணம்.

    திருமால் கண்ணனாக அவதரித்தபோது சின்னக் கண்ணன் காளிங்கன் என்ற கொடிய பாம்பின் தலைமீது பாதங்களைப் பதித்து நடனமாடினானே, அது அவன் லீலைகளில் ஒன்று.

    `பாம்புத் தலைமேலே நடம்செய்யும்

    பாதத்தினைப் புகழ்வோம்'

    எனக் கண்ணனின் லீலை குறித்துப் பாடி மகிழ்கிறார் பாரதியார்.

    பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிப்பட உதவுவது வாசுகி என்ற பாம்புதான். வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கித் தான் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள்.

    இந்நிகழ்ச்சியை இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் பேசுகிறது.

    வடவரையை மத்தாக்கி

    வாசுகியை நாணாக்கிக்

    கடல்வண்ணன் பண்டொருநாள்

    கடல்வயிறு கலக்கினனே

    கலக்கியகை அசோதையார்

    தடக்கயிற்றால் கட்டுண்கை

    மலர்க்கமலப் புந்தியான்

    மாயமோ மருட்கைத்தே

    எனப் புகழ்கிறது அந்தப் பாடல்.

    அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. அதைத் தாம் அருந்தி தேவர்களைக் காப்பாற்றினார் சிவபெருமான்.

    அந்த நஞ்சு சிவனின் வயிற்றுக்குள் போனால் அவர் வயிற்றிலிருக்கும் உலகங்கள் அனைத்தும் பாதிக்கப்படுமே எனக் கவலை கொண்டாள் பார்வதி.

    திருமணத்தின்போது சிவன் கையைப் பிடித்தவள் இப்போது அவன் கழுத்தைப் பிடித்தாள். நஞ்சு சிவன் கழுத்திலேயே நின்றது. அவன் நீலகண்டன் ஆனான். இவ்விதம் அன்னை பார்வதியின் செய்கையால் உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    நம் ஆன்மிகம் குண்டலினி சக்தி பற்றிப் பேசுகிறது. முதுகுத் தண்டின் கீழ்ப் பகுதியில் உள்ளதாகச் சொல்லப்படும் குண்டலினி ஒரு பாம்பாகவே உருவகிக்கப் படுகிறது.

    நாகலோகம் என்ற ஒரு தனி உலகம் பூமிக்குக் கீழ் உள்ளதாகவும் அங்கே ஏராளமான நாகங்கள் வசிப்பதாகவும் புராணங்கள் சொல்கின்றன.

    நாக அஸ்திரம் என்பது வலிமை வாய்ந்த ஓர் ஆயுதம். நாகப் பாம்பின் கொடிய விஷ சக்தியைத் தாங்கியுள்ள இந்த அஸ்திரத்தைப் பற்றிய குறிப்பு ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களிலும் வருகிறது.

    மகாபாரதத்தில் கர்ணனிடம் இந்த வலிமை வாய்ந்த அஸ்திரம் உண்டு. இதை அர்ச்சுனனை நோக்கி ஒருமுறை மட்டுமே பிரயோகிக்கலாம் எனக் கண்ணனின் ஆலோசனைப்படி குந்திதேவி கர்ணனிடம் வாக்குறுதி வாங்குகிறாள் . அர்ச்சுனன் மீது கர்ணன் நாக அஸ்திரத்தை ஏவிவிடும் தருணத்தில் தேரைச் சற்றே கீழே அழுத்தி கிருஷ்ணர் அது அர்ச்சுனனைத் தாக்காதவாறு காப்பாற்றி விடுகிறார்.

    ராமாயணத்திலும் நாக அஸ்திரம் வருகிறது. ராம ராவண யுத்தத்தின்போது இந்திரஜித் லட்சுமணன் மீது நாக அஸ்திரத்தைப் பிரயோகம் செய்ய லட்சுமணன் நாக பாசத்தால் கட்டுண்டு மயங்கி விழுகிறான் என்பதையும் பின்னர் வானிலிருந்து பறந்துவரும் கருடனால் அந்தக் கட்டுகள் எப்படி விலகுகின்றன என்பதையும் ராமாயணம் யுத்தகாண்டத்தில் விவரிக்கிறது.

    லட்சுமணனே ஆதிசேஷன் என்ற பாம்பின் அவதாரம் தான் என்றும் அவன் ஆதிசேஷனின் அவதாரமாக இருப்பதால்தான் ராமாயணப் பாத்திரங்களிலேயே அவனுக்குக் கோபம் அதிகம் என்றும் சொல்கிறார்கள்.

    இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் பாம்பு பற்றிய ஒரு செய்தி வருகிறது. கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண் தன் பிள்ளையை வளர்த்ததோடு கூடவே பாசத்துடன் ஒரு கீரிப் பிள்ளையையும் வளர்த்தாள்.

    ஒருநாள் அவள் குளத்தில் தண்ணீர் எடுக்கப் போனாள். வீட்டில் தொட்டிலில் இருந்தது குழந்தை.

    அந்தக் குழந்தையை ஒரு பாம்பு கடிக்க வந்தது. பாய்ந்து சென்ற கீரிப் பிள்ளை அந்தப் பாம்பைக் கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது. பின் பெருமிதத்தோடு வீட்டு வாயிலில் வந்து நின்றது அது.

    குடத்தில் தண்ணீரோடு திரும்பி வந்த தாய், கீரியின் கோலத்தைப் பார்த்தாள். பாம்பு வந்ததை அறியாத அவள் குழந்தையைத் தான் கீரிப்பிள்ளை கொன்றுவிட்டதாகத் தவறாக நினைத்தாள். உள்ளே சென்று குழந்தையின் அருகே பாம்பு. இறந்து கிடப்பதைக் காணத் தவறினாள். குழந்தையைக் காப்பாற்றிய கீரிப் பிள்ளையின் தலையில் தண்ணீர்க் குடத்தைப் போட்டுக் கீரியைக் கொன்றுவிட்டாள் அவள்.

    அந்தக் கொடும் பாவத்திலிருந்து அவள் விடுபட, கோவலன் எவ்விதம் உதவி செய்தான் என்பதை விவரிக்கிறது சிலப்பதிகாரம்.

    `சீதக் களபச் செந்தாமரை ` எனத் தொடங்குகிறது அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல். யோக சாஸ்திரம் முழுவதையும் உள்ளடக்கி எழுதப்பட்ட உயர்ந்த ஆன்மிக நூல் அது. ` நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி ` என அது குண்டலினியாகிய பாம்பைப் பற்றிப் பேசுகிறது.

    வயதான நாகங்களின் தலையில் அவற்றின் விஷமே ஒரு ரத்தினமாக உருவாகும் என்றும் அதுவே நாகரத்தினம் என்றும் சொல்வதுண்டு. அந்த நாகரத்தினத்தின் ஒளியிலேயே வயதான நாகங்கள் இரை தேடும் என்றும் ஒரு கருத்தோட்டம் நிலவுகிறது.

    ராமகிருஷ்ண மடத்தின் இலச்சினையில் பாம்பு உண்டு. கார்க்கோடகன் என்ற பாம்பைப் பற்றிய குறிப்பு நளசரிதத்தில் உண்டு. அது கடித்ததால் நளன் உருவம் பெரிதும் மாறியது என்றும் அதனால்தான் குறிப்பிட்ட காலம்வரை அவனால் மறைந்து வாழ முடிந்தது என்றும் நளசரிதம் சொல்கிறது.

    காட்டுத் தீ பற்றியபோது அதில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது கார்க்கோடக நாகம். அதைக் காப்பாற்றுகிறான் நளன். அப்போது தன்னைக் கையில் ஏந்தியவாறு பத்தடி நடந்து பத்தாவது அடி முடியும்போது தச என்று சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறது நாகம். நளனும் அவ்விதமே செய்கிறான்.

    தச என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் பத்து என்றும் கடி என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. கடி என்ற அர்த்தத்தையே தான் எடுத்துக்கொண்டதாகச் சொல்லும் கார்க் கோடக நாகம் நளனைக் கடிப்பதையும் அந்த நாக விஷத்தால் நளனின் தோற்றம் குறுகியதாகவும் கரிய நிறம் உடையதாகவும் மாறுவதை நளசரிதம் படிப்பவர்கள் பிரமிக்கும் வகையில் விவரிக்கிறது.

    பதினெண் சித்தர்களில் ஒருவர் பாம்பாட்டிச் சித்தர் எனப் பெயர் பெற்றவர். அவர் பாம்பை முன்னிலைப்படுத்தி பாம்புக்குச் சொல்வதுபோலப் பல பாடல்கள் எழுதியிருக்கிறார்.

    கொடிய விஷப் பாம்புகளை எவ்விதம் கையாளுவது என்ற கலையில் அவர் தேர்ச்சி பெற்றிருக்கலாம் என்றும் குண்டலினியே பாம்பாக உருவகப் படுத்தப்படுவதால் அவர் குண்டலினி யோகத்தில் சிறந்தவராக இருக்கலாம் என்றும் இருவேறு விதமாகக் கருத்து நிலவுகிறது.

    திருவண்ணாமலையில் மகரிஷி ரமணர் தங்கியிருந்த குகையில் ஒருமுறை பாம்பு வந்துவிட்டது. அன்பர்கள் அதை அடிக்கப் போனார்கள். ரமணர் தடுத்து நிறுத்தினார். பாம்பை ஏன் விரட்டுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். நீங்கள் தங்கியிருக்கும் குகையில் பாம்பு வந்துவிட்டது, அதனால் அதை அடிக்கிறோம் என்றார்கள். குகை என்பது பாம்புகள் வசிக்கும் இடமல்லவா…அது தங்கியிருக்கும் இடத்திற்கு நாம் வந்துவிட்டு அதை விரட்டுவது நியாயமா…சற்றுப் பொறுங்கள். அதுவே தானாக விலகிச் சென்றுவிடும் என ரமணர் அறிவுறுத்தினார். அவர் சொன்னபடியே யாரையும் எதுவும் செய்யாமல் சற்று நேரத்தில் பாம்பு ஊர்ந்து வெளியேறிச் சென்றுவிட்டது.

    எண்ணற்ற ஆன்மிகச் செய்திகளை நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன ஆன்மிகப் பரப்பில் நெடுக ஊர்ந்துசெல்லும் புனிதம் நிறைந்த நாகங்கள்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிதம்பரத்தில் இருக்குது சிதம்பர ரகசியம்’ என்பதைக் கேள்விப்பட்ட அவர் சிதம்பரம் வந்தார்.
    • ஓம் முழுவதுமாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

    உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவரான கார்ல் சகன், நடராஜரை தரிசிக்க சிதம்பரம் வந்தார் என்றால் ஆச்சரியமாக இல்லை?

    மிகப்பெரும் எழுத்தாளர், செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த விஞ்ஞானி, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது விண்கலங்களை சுக்ரன், செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களுக்கு அனுப்ப பெரிதும் உதவி செய்தவர் - இப்படி இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    உலகின் மிகப் பிரபலமான, ஏராளமானோர் பார்த்த, தொலைக்காட்சித் தொடரான காஸ்மாஸ் (Cosmos) தொடரை உருவாக்கியவர் அவரே. பதிமூன்று எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி அவர் சுவைபட விளக்கியாக வேண்டும்.

    இதை நல்ல ஒரு அறிமுக உரையுடன் தொடங்க அவர் எண்ணினார். இதற்காகப் பிரபஞ்சம் பற்றிய அறிவை உலகின் எந்த பழைய நாகரிகம் நவீன அறிவியலுக்கு ஒப்ப சரியாகக் கொண்டுள்ளது என்பதை ஆராய ஆரம்பித்தார் அவர்.

    எகிப்திய, சுமேரிய, அசிரிய, கிரேக்க, ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்களை அவர் ஆராய்ந்தார். அவருக்கு திருப்தி உண்டாகவில்லை. கடைசியில் இந்து நாகரிகத்தின் பக்கம் அவர் பார்வை திரும்பியது. வியந்து பிரமித்தார் அவர்.

    அறிவியல் ரீதியாக பிரபஞ்சத்தின் வயதை இந்து புராணங்கள் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்த்த அவர், "உலகின் மிகப் பெரும் மதங்களில் இந்து மதம் ஒன்றே தான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சமானது, உருவாகி, பிரளய காலத்தில் அழிந்து மீண்டும் உருவாகிறது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. நவீன பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கருத்துடன் கால அளவீடுகளில் ஒத்துப் போகும் ஒரே மதம் இது தான். பூமி, சூரியன் வயதையும் தாண்டி 'பிக் பேங்' தோன்றியதிலிருந்து பாதி அளவு காலத்தைப் பற்றி மட்டும் அல்ல, இன்னும் எல்லையற்ற காலத்தைப் பற்றியும் அது கூறுகிறது." என்று கூறிப் புகழ்ந்தார்.

    'பிரபஞ்சத்தின் இயக்கத்தை சிவ நடராஜாவின் நடனம் சுட்டிக் காட்டுகிறது. சிதம்பரத்தில் இருக்குது சிதம்பர ரகசியம்' என்பதைக் கேள்விப்பட்ட அவர் சிதம்பரம் வந்தார். நடராஜரைத் தரிசித்தார்.

    தனது காஸ்மாஸ் தொடரில் நடராஜரை தனது பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் பார் எவர்' இல் காண்பித்து பிரபஞ்சம் பற்றி விளக்கினார்.

    காமராமேன், சவுண்ட் ரிகார்ட் செய்வோர், எழுத்தாளர்கள், டைரக்டர் புடைசூழ அவர் சிதம்பரத்திற்கு ஒரு நாள் காலை ஆறு மணிக்கு வந்த போது உலகத்தின் பார்வை சிதம்பரம் பக்கம் திரும்பியது.

    இதே கால கட்டத்தில் பிரபல விஞ்ஞானியான பிரிட்ஜாப் காப்ரா சிவ நடராஜாவின் நடனம் பற்றி அறிந்து வியந்தார். ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானியான இவர் தனது மிக பிரபலமான நூலான 'தி டாவோ ஆப் பிசிக்ஸ்' என்ற நூலை 1975ஆம் ஆண்டு வெளியிட்டார். உலகில் இருபத்திமூன்று மொழிகளில் சுமார் 43 பதிப்புகளை உடனே கண்டது இந்தப் புத்தகம். அவர் அணுவின் அசைவை நடராஜரின் நடனத்தில் கண்டார். அணுத்துகளின் விஞ்ஞானத்தைக் கற்க விரும்புவோர் முதலில் நடராஜரைப் பற்றி அறிய வேண்டும் என்றார் அவர்!


    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

     1977, அக்டோபர் 29-ந் தேதி நடந்த 'பிசிக்ஸ் அண்ட் மெடா பிசிக்ஸ்' என்ற கருத்தரங்கத்தில் பேசும் போது, "நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இதையே இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனமாக அருமையான ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் படைத்துள்ளனர்" என்று கூறினார்.

    கடவுள் துகளைப் பற்றி ஆராயும் உலகின் மிகப்பெரும் சோதனைச்சாலையான செர்ன் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இதற்கு இந்திய அரசு 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையைப் பரிசாக அளிக்க அதை செர்ன் தனது முகப்பில் நிறுவியுள்ளது.

    ஓம் தரும் அளப்பற்ற நன்மைகள்

    ஓம் என்னும் மந்திரச் சொல் உடலில் ஏற்படுத்தும் அளப்பரிய அதிசயங்களை ஆராய்ந்தவர் அமராவதியில் உள்ள சிப்ளா காலேஜ் ஆப் என்ஜினியரிங் டெக்னா லஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர். அந்தக் கல்லூரியின் முதல்வரான சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இவர் இறங்கினார்.

    இந்த ஆராய்ச்சிக்கான காரணம்? 1999 மே மாதம் 29-ந் தேதி திடீரென்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அவரது தாயாருக்கு பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் ரத்தம் கட்டி விட்டதால் அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்குக் கோமா நிலை ஏற்பட்டது.

    இதைப் போக்க ஓம் பற்றிய ஆராய்ச்சியில் அனில் இறங்கினார். ஒம் என உச்சரிக்கும் போது மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதை அவர் நவீன சாதனங்கள் வாயிலாகக் குறிக்க ஆரம்பித்தார். நரம்பு மண்டலத்தில் ஓம் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதை அவர் கண்டு அதிசயித்தார். ஓம் என்று நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.

    'அ' என்ற ஒலி சுவாச அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் 'உ' மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளின் வழியே வரும் 'ம' தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது. ஓம் முழுவதுமாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

    அனிலின் தாயார் ஓம் மந்திரத்தை படிப்படியாக உச்சரிக்க ஆரம்பித்தார். விளைவு, 90 சதவிகிதம் பேசும் ஆற்றல் பழையபடி வந்து விட்டது.

    இந்த ஆராய்ச்சி ஆறு வருட காலம் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட குழுவிடம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

    1) ஓம் உச்சரிப்பால் மன அழுத்தம் குறைகிறது

    2) எதன் மீதும் செய்யும் ஒருமுனைப்படுத்தப்பட்ட கவனக் குவிப்பு அதிகரிக்கிறது.

    3) ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம் உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது.

    இப்படி விரிவாக டிஜிடல் சிக்னல் பிராசசிங் உத்திகளைப் பயன்படுத்தி தனது முடிவுகளை உலகத்திற்கு அறிவித்தார் அனில்.

    ஸ்ரீ சக்கரத்தை ஆராய்ந்த ரஷிய விஞ்ஞானி!

    ஸ்ரீ சக்கரத்தை ஆராய வேண்டும் என்று மாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் கணிதவியல் விஞ்ஞானி அலெக்சி குலைச்சேவ் என்பவருக்கும் ரஷிய விஞ்ஞானக் கழகத்தின்தலைவரான இன்னொரு விஞ்ஞானி ஐவான் கோவலான் சென்கோ என்பவருக்கும் ஏற்பட்டது.

    ஸ்ரீ சக்கரத்தில் உள்ள கோடுகள், முக்கோணங்கள் மற்றும் வடிவியல் அமைப்பைக் கண்டு பிரமித்த இவர்கள் கணினி மூலமாக அதைத் தீவிரமாக ஆராய ஆரம்பித்தனர்.

    இந்தச் சக்கரத்தின் நடுவில் பிந்துவும் (புள்ளி) சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ளன. மேல் நோக்கி உள்ள நான்கு முக்கோணங்கள் சிவனையும் கீழ் நோக்கிய ஐந்து முக்கோணங்கள்சக்தியையும் குறிக்கின்றன.

    எல்லையற்ற சக்தி, ஆரோக்கியம், செல்வம், ஞானம், முக்தி ஆகியவற்றைப் பெற காலம் காலமாக இதை அனைவரும் வழிபடுவது கண்கூடு.

    இந்தியாவெங்கும் ஏராளமான ஆலயங்களில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இதை ஆராய்ந்த ரஷிய விஞ்ஞானிகள் பிரமிப்பின் எல்லைக்கே சென்றனர். நவீன கணினி கூடம் இதை முழுவதுமாக ஆய்வு செய்யப் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்ட இவர்கள் ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டினால் ஏற்படும் சந்திப்புப் புள்ளிகள் எவ்வாறு பல்வேறு புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்று இணையும் என்ற கண்டுபிடிப்பும் இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத அநேக அறிவியல் வினாக்களும் இந்த யந்திரத்தில் பொதிந்துள்ளன என்றனர் அவர்கள்.

    இதை மனநலம் பாதிக்கப்பட்டு தன் நிலையை இழந்தவரிடையே பயன்படுத்திய அவர்கள் பாதிக்கப்பட்டோர் நலமடைவதைக் கண்டு பிரமித்தனர். குறிப்பிட்ட முறைப்படி இந்த ஸ்ரீ சக்கர யந்திரம் அமைக்கப்பட வேண்டும். இதே போல உள்ள ஆனால் குறிப்பிட்ட முறைப்படி அமைக்கப்படாத யந்திரத்தை அவர்கள் பயன்படுத்திய போது சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். இந்த ஆய்வை, ஆய்வின் மேலாளரும் உறுதிப்படுத்திய பின்னர் உலகினருக்கு ஆய்வு பற்றி அவர்கள் தெரிவித்தனர்.

    மூளை ஆற்றலைக் கூட்டும் தோப்புக்கரணம்!

    லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த டாக்டர் எரிக் ராபின்ஸ் மூளை ஆற்றலை ஊக்குவிக்க ஒரு பயிற்சியை அனைவருக்கும் சொல்லித்தருகிறார்.

    ஒரு மாணவன் பள்ளியில் பாடங்களைச் சரியாகவே கற்கமுடியவில்லை. அவர் கூறிய பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தவுடன் அவன் 'ஏ' கிரேடுடன் முதல் மாணவனாக ஆனான்.

    பயிற்சி என்ன? பாதங்களை நேராக இருக்கும்படி வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    வல்து காதை இடது கை கட்டை விரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். இதே போல இடது காதை வலது கை கட்டை விரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் குந்தி அமர்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியிட வேண்டும். ஆக இப்படி உட்கார்ந்து எழுந்தால் போதும்.

    இந்தப் பயிற்சியை மூன்று நிமிடம் செய்தாலேயே மூளை ஆற்றல் கூடும். இது நிரூபிக்கப்பட்ட பயிற்சி ஆனது

    யேல் நரம்பு-உயிரியல் நிபுணரான டாக்டர் யூஜீனியஸ் ஆங், காது மடல்களைப் பிடிக்கும் போது மூளையின் நரம்புப் பாதைகளை தூண்டி விடும் அக்குபங்சர் புள்ளிகளை அழுத்துகிறோம் என்கிறார்.

    மூளையின் இரு பாதிகளும் காது மடல்களின் எதிர்புறங்களில் உள்ளன. எதிரெதிர் கைகளைப் பயன்படுத்தி காது மடல்களைப் பிடிப்பதால் நுண்ணிய ஆற்றலைத் தூண்டும் மனித உடலின் ஒரு சிறப்பான அமைப்பைப் பயன்படுத்தியவர்களாக ஆகிறோம்.

    அட, பிள்ளையார் முன்னால் போடும் தோப்புக்கரணத்திற்கு - உக்கிக்கு - இவ்வளவு சக்தியா என்று வியக்க வேண்டியது தான்; பிரமிக்க வேண்டியது தான். அறிவியல் பிள்ளையார் உக்கியை ஆமோதிக்கிறது. பகுத்தறிவாளர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

    நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞானம் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து வருகிறது.

    இதைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுகையில் விஞ்ஞானம், ஆன்மீகத்தை ஆய்வு செய்வதை வரவேற்பதாகக் கூறியதோடு, முத்தாய்ப்பாக இப்படிக் கூறினார்:

    "நமது மகரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள். அவர்களின் கூற்றை உண்மை என்பதை உலகம் அறிய நெடுங்காலம் ஆகும்".

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாதிக்காயில் 5 முதல் 15 சதவீதம் நறுமண எண்ணெய் உள்ளது.
    • பல நோய்நிலைகளுக்கு சாதிக்காய் பலன் தரும் என்கிறது.

    பண்டைய காலங்களில் கறிமசாலா பொருட்களோடும், வெற்றிலைப்பாக்கு தாம்பூலத்தோடும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு 'சாதிக்காய்'. இது இன்று நாம் பயன்படுத்த மறந்த மூலிகை கடைச்சரக்குகளுள் ஒன்று. நாட்டு மருந்து கடைகளிலும், பல சரக்கு கடைகளிலும் கிடைக்கும், மலைப்பகுதிகளில் விளையும் மணமான காய் தான் 'சாதிக்காய்'.

    பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் இந்தியா வருகைக்கு முன்னரே, டச்சுகாரர்கள் படையெடுத்து வந்து, நாடுகளை தன்வசமாக்க விரும்பியது நாடறிந்த வரலாற்று செய்தி. ஆனால் அத்தகைய வரலாற்றுக்கு பின்னர் தெரியாத உண்மை யாதெனில், அவர்கள் தேடி வந்தது சாதிக்காய் எனும் மிகச்சிறந்த மணமூட்டியைத் தான் என்கிறது வரலாற்று நூல்கள். அத்தகைய சாதிக்காயால் டச்சுகாரர்களின் கார்ப்பரேட் தனத்துக்கு அடிமையான நாடு இந்தோனேசியா என்கிறது வரலாறு. ஆக, சாதிக்காய்க்கு பின்னர் மணமும், மருத்துவ குணமும் மட்டுமல்லாது பல வரலாற்று கதைகளும் உண்டு.

    இத்தகைய சாதிக்காய் பல்வேறு நாடுகளில் உணவுப் பொருட்களில் மணமூட்டியாக மட்டுமின்றி, மருத்துவ நலமூட்டியாக, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மார்பு சளி, இருமல், தசைப்பிடிப்புகள் மற்றும் நாள்பட்ட மூட்டு வாத நோய்களுக்கு சீன மருத்துவத்தில் சாதிக்காய் விதைத்தூளை பயன்படுத்தியதாகவும், பாரம்பரியமாக இந்தோனேசியர்கள் பசியின்மை, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, அசீரணம், வாயுதொல்லை ஆகியவற்றிற்கு சாதிக்காய் விதைத்தூளை வேக வைத்து பயன்படுத்தியதாகவும் அறியப்படுகின்றது.

    அரேபியர்கள் செரிமான கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள், நிணநீர் சுரப்பிக் கோளாறுகள் போன்றவற்றுக்கு சாதிக்காயை பயன்படுத்துகின்றனர். மேலும் பாலுணர்வை (காமத்தை) தூண்டும் மருந்துகளில் இன்றளவும் சாதிக்காயை பயன்படுத்துவதாக நூல்கள் தெரிவிக்கின்றன. இதன் விதையின் எண்ணெய் தலைவலிக்கு நிவாரணி. அசீரண கோளாறுகளுக்கு, விதை எண்ணெய் இரண்டு சொட்டு தேநீரில் கலந்து பல நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

    நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவமானது, மூச்சி ரைப்பு (ஆஸ்துமா), காய்ச்சல், இருமல், பெருங்கழிச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற வாயுவால் உண்டாகும் நோய்நிலைகள், வாத நோய், ஆண்களின் விந்தணுக்கள் குறைவு ஆகிய பல நோய்நிலைகளுக்கு சாதிக்காய் பலன் தரும் என்கிறது.

    சாதிக்காயின் கனி இன்றும் பல கிராமங்களில் ஊறுகாயாக செய்து பயன்படுத்தப்படுகிறது. கனிக்கு உள்ளிருக்கும் விதை தான் 'சாதிக்காய்'. அதுவே பல்வேறு மருத்துவக் குணங்களை உடையது. கனிக்கும் விதைக்கும் நடுவே இருக்கும் மெல்லிய தோல் பகுதி (விதை உறை) 'சாதிபத்திரி' என்று அழைக்கப்படுகிறது. அதுவும் மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக சித்த மருத்துவம் கூறுகின்றது.

    சாதிக்காயில் 5 முதல் 15 சதவீதம் நறுமண எண்ணெய் உள்ளது. அதில் உள்ள நறுமணம் தரும் எண்ணெய் பொருட்கள் அதன் மருத்துவ குணத்திற்கு காரணம் என்கிறது நவீன அறிவியல். அதில் உள்ள யூஜெனால், மிரிஸ்டிசின் ஆகிய முக்கிய வேதி மூலக்கூறுகள் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சாதிக்காயில் உள்ள 'மிரிஸ்டிசின்' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவ குணங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    சாதிக்காயில் கூடுதலாக உடலுக்கு இன்றியமையாத பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்புச் சத்து போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன. மேலும் ரிபோபிளேவின், தையமின், நியாசின் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் வைட்டமின்களும் உள்ளது. இது பல மருத்துவ நன்மைகளை பயக்கும் இயற்கை நிறமிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது கூடுதல் சிறப்பு.

    நீண்ட நறுமணமும், காரமும், துவர்ப்புச் சுவையும் கொண்ட சாதிக்காய் வெப்ப வீரியத்தன்மையை உடையது என்கிறது சித்த மருத்துவம். சித்த மருத்துவ நோய்க்கூறுகளான வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாயுவையும், கபத்தையும் குறைத்து பித்தத்தைக் கூட்டும் தன்மை இதற்குண்டு. நரம்பு சார்ந்த நோய்நிலைகளுக்கு சிறிய அளவில் பயன்படுத்த மிகப்பெரிய நன்மைகளைத் தரக்கூடியது.

    இது அதிக துவர்ப்பு சுவையை உடையதால் தனியாகவோ, துவர்ப்பு சுவையுடைய பிற மூலிகைகளுடன் சேர்த்தோ ரத்தம் கசியும் நோய்நிலைகளில் பயன்படுத்த சித்த மருத்துவம் அறிவுறுத்துகின்றது. சாதிக்காய் அதிகம் பயன்படுவது ஆண்களின் காமத்தைப் பெருக்குவதற்கும், குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும் தான். குழந்தைகளின் கழிச்சலுக்கு சிட்டிகை அளவு சாதிக்காய் பொடியை தேனுடன் அல்லது பாலுடன் கொடுக்க நன்மை தரும் என்கிறது சித்த மருத்துவம்.

    வயிற்றில் வாயுவினால் அவதிப்படும் நபர்கள் சாதிக்காயுடன், சுக்குப் பொடி சம அளவு சேர்த்து அத்துடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்து தேவைப்படும் போது எடுத்துக்கொள்ள நன்மை பயக்கும். அல்லது அரை கிராம் பொடியுடன் சிறிது சர்க்கரை கலந்து, உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வாயுத் தொல்லை நீங்கி செரிமானம் எளிதாகும். வாந்தி, வாய்க்குமட்டலை நீக்கி பசியைத் தூண்டும்.

    சாதிக்காயைப் பொடித்து சிட்டிகை அளவு பாலில் கலந்து எடுத்துக்கொள்ள மன அழுத்தம் நீங்கும். மனபதட்டம் குறையும். நரம்புகளுக்கு வன்மை தரும். தூக்கமின்மையால் தவிப்பவர்கள் சாதிக்காய் பொடியுடன், கசகசா சேர்த்து பாலில் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது.

    சாதிக்காயில் உள்ள மிரிஸ்டிசின் எனும் வேதிப்பொருள் மூட்டுகளில் வீக்கத்தை உண்டாக்கும் சைட்டோகைன் நொதிகளை தடுத்து வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே, சாதிக்காயில் இருந்து கிடைக்கும் நறுமண எண்ணெயுடன், நல்லெண்ணெய் கலந்து மூட்டு வீக்கம், மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற நோய்களுக்கு மேலே தடவ நல்ல பலன் தரும். இது இயற்கை வலி நிவாரணியாக செயல்படும்.

    நவீன யுகத்தில் குழந்தைப்பேறின்மை அளவுக்கு அதிகமாக பெருகிவிட்டது. நவீன வாழ்வியலில் உள்ள ஆண்களின் வம்ச விருத்தி தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. புகைபிடித்தலும், மதுப்பழக்கமும், மனஅழுத்தமும், இரவுப்பணிகளும், பெருகிவிட்ட மின்னணு சாதனங்களும், உடல் பருமனும், மறந்துபோன வாழ்வியல் நெறிமுறைகளும், துரித உணவு முறைகளும், ஆண்மை குறைவு நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளன.

    கலவியில் நாட்டமின்மை, விந்தணுக்கள் உற்பத்தி குறைவு, அதன் இயக்கம் குறைவு போன்ற பல்வேறு நிலைகளில் பயன்தரும் எளிய அஞ்சறைப்பெட்டிச் சரக்காக உள்ளது சாதிக்காய். சாதிக்காயைக் கொண்டு ஆண் எலிகளில் நடத்திய சோதனையில், அவற்றின் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரித்து இருப்பதாகவும், அவற்றின் கலவியில் நாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

    எனவே சாதிக்காய் பொடியுடன், ஆண்மையை அதிகரிக்கும் பிற மூலிகைகளாகிய நெருஞ்சில் முள் மற்றும் நீர்முள்ளி விதை சேர்த்து பொடித்து பாலில் கலந்து எடுத்துக்கொள்ள விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ஆண்களின் வம்ச விருத்திக்கு உதவும். தாம்பூலம் தரித்தலில் வெற்றிலை பாக்குடன் சாதிக்காய் சேர்ப்பது ஆண்மையை அதிகரிக்கும் என்பதை நம் முன்னோர்கள் முன்னரே அறிந்திருந்து, அதனை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இது தமிழர்களின் மரபு மருத்துவத்திற்கு உதாரணம்.

    முகத்தில் உண்டாகும் 'மங்கு' (மெலாஸ்மா) எனப்படும் கருப்பு நிற படைகளுக்கு இந்திய மருத்துவ முறைகளில் சாதிக்காய் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதிக்காயை பொடித்து பன்னீருடன் அல்லது பாலுடன் கலந்து தினசரி மேலே பூசிவர மங்கு படிப்படியாக மறையும். அதே போல், சாதிக்காயுடன் சந்தனம் சேர்த்து பாலுடன் கலந்து முகப்பருக்களுக்கு பூசி வர பருக்கள் நீங்கி முகம் பொலிவடையும்.

    சாதிக்காய் துவர்ப்பு சுவையுடையதால் பல்லீறுகளைப் பலப்படுத்தும் தன்மையுடையது. பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிக்கொல்லியாகவும் செயல்படக்கூடியதால் வாய் கொப்பளிக்கும் திரவங்களில் இதன் நறுமண எண்ணெய் சேர்க்கப்படுகின்றது.

    தோல் சுருக்கத்திற்கு காரணமாகும் 'எலாஸ்டேஸ்' எனும் நொதியின் செயல்பாட்டை தடுப்பதன் மூலம், தோல் என்றும் இளமையாக இருக்க சாதிக்காய் உதவுவதாக தென் கொரியா நாட்டு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. என்றும் இளமையாக இருக்க, தோல் சுருக்கத்தைப் போக்கும் முகப்பூச்சுகளில் வெளிநாட்டினர் இதனை சேர்ப்பதும் குறிப்பிடத்தக்கது.

    சாதிக்காய் எண்ணெய், புற்றுசெல்களின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் 'லாக்டேட் டிஹைடிரோஜீன்ஸ்- ஏ' எனும் நொதியின் செயல்பாட்டை தடுத்து பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுக்கட்டியின் வளர்ச்சியைத் தடுப்பதாக சீனாவில் நடந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே போல் உடலில் உள்ள புராஸ்டாகிளான்டின் எனும் நொதியின் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் புற்றுநோயின் பல்வேறு நிலைமைகளில் பலன் தருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

    சாதிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுத்து ரத்தகுழாய் அடைப்பு உண்டாவதைத் தடுப்பதாகவும் எலிகளில் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இதயத்திற்கு நன்மை அளிப்பதாகவும் உள்ளது.

    சாதிக்காயை நெய்யில் பொரித்து பயன்படுத்துவது நல்லது என்கிறது சித்த மருத்துவம். இரண்டு தேக்கரண்டி அளவு சாதிக்காய் அல்லது 5 கிராம் சாதிக்காய் பொடி எடுத்துக்கொள்ள மயக்கம், மாயத்தோற்றம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்று நவீன அறிவியல் மட்டுமல்ல சித்த மருத்துவமும் எச்சரிக்கின்றது.

    'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழிப்படி, சாதிக்காயை அளவுடன் பயன்படுத்துவது நல்லது. இன்றைய நவீன வாழ்வியலில் சிக்குண்டு, இல்லற வாழ்வில் வம்ச விருத்தி செய்து, சாதிக்கத் துடிக்கும் ஆண்களுக்கு இயற்கை தந்த அஞ்சறைப்பெட்டி கொடை சாதிக்காய். இதனை அளவோடு பயன்படுத்துவது நாடி நரம்புகளுக்கு நிச்சயம் நலம் பயக்கும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புகழ்பெற்ற கவிஞராக, எழுத்தாளராக விளங்கிய சரோஜினி, 1905-ல் கர்சன் பிரபுவால் நிகழ்த்தப்பட்ட வங்கப்பிரிவினையால் பெரிதும் மனம் வருந்தினார்.
    • சரோஜினி நாயுடு செய்த தொடர்சேவைகளுக்காக 1908-ல் இந்தியப் பேரரசர் எனும் பொருள்படும் "கைசர்-இ-இந்த்" எனும் பட்டத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது.

    "நான் வாழும்வரை, என் கரங்களில் இரத்த ஓட்டம் இருக்கும்வரை, எந்தக் காரணத்தை முன்னிட்டும் சுதந்திரத்திற்கான என் போராட்டங்களை விட்டுவிட மாட்டேன். நான் ஒரு பெண்ணாக, கவிஞராக உங்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கேடயமாகவும், ஆயுதங்களாகவும் தருகிறேன். என் பாடல்களை ஒலிப்பதாகைகளாக வீசுகிறேன். அதன் மூலம் போருக்கான அழைப்பை விடுக்கிறேன். என் மக்களே! அடிமைத்தனத்திலிருந்து உங்களை எழுப்பும் சுடரை நான் எப்படித்தான் ஏற்றுவது?"

    மேற்காணும் உணர்ச்சி மிக்க கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர்தான் இந்தியாவில் முதல்பெண் ஆளுநராக பதவியேற்று சிறப்பாக பணியாற்றியவர். பல்வேறு சாதனைகளுக்கும் பெருமைகளுக்கும் உரியவர். சிறப்பான தன் கவிதைகளின் மூலம் அயல்நாட்டு ஆங்கிலக் கவிஞர்களால் கொண்டாடப்பட்டவர். மகாத்மா காந்தியால் "இந்தியாவின் நைட்டிங்கேல்" என்று பட்டம் சூட்டப்பட்டவர்.

    பிறக்கும்போதே அறிவார்ந்த செல்வக்குடும்பத்தில் பிறப்பதும், கல்வி, கலைகள், பன்மொழிப் புலமை, கவிதை, கட்டுரை படைக்கும் ஆற்றல், அயல்நாடு சென்று உயர்கல்வி பெற்று அறிவும், ஆற்றலும் பெருகுதல் என்று எங்கோ ஒரு சிலருக்குத்தான் அந்த வாய்ப்புகளும் வாழ்க்கையும் வாய்க்கும். அப்படி வாழ்க்கை அழகாகவும், வசதியாகவும், சுகமாகவும் அமைந்துவிடும்போது அவற்றை துய்த்து மகிழ்வதில்தான் எல்லோரும் நாட்டம் கொள்வர்.

    பெருமைக்குரிய, மகிழ்ச்சியான உயர்வாழ்வு அமைந்தாலும் அவற்றை எல்லாம் அனுபவிப்பதை விட்டுவிட்டு குடும்பக் கடமைகளையும் கவனித்துக்கொண்டே நாட்டின் விடுதலைக்காகவும், எளிய மக்களின் உரிமைகளுக்காகவும், மகளிர் வாழ்க்கையை மேம்படுத்தவும் பாடுபட தன்னை ஒப்புவித்தார் ஒரு பெண். பொதுநலன் கருதிய தன் இலட்சியங்களை அடைய பல போராட்டங்களை முன்னெடுத்து, கைது செய்யப்பட்டு சிறைச்சாலை வாழ்வையும் அனுபவித்து, பல்வேறு சாதனைகளை படைத்து அந்தப் பெண்மணி வாழ்ந்தார் என்றால் அவர் பெரிதும் வியப்புக்குரியவர் அல்லவா!

    ஹைதராபாத்தில் ஒரு கல்லூரியை நிறுவி அதன் நிர்வாகியாக இருந்தவர் அகோர்நாத் சட்டோபாத்யாயா எனும் வங்காளத்துக்காரர். இவரின் வாழ்க்கைத் துணைவி வங்கமொழி கவிஞரான பரதாசுந்தரிதேவி. இவர்களுக்கு எட்டாவது மகளாக பிப்ரவரி 13, 1879-ல் பிறந்தார் சரோஜினி.

    வங்காளம், ஆங்கிலம், பாரசீகம், உருது, தெலுங்கு ஆகிய மொழிகளில் சீரிய புலமை வாய்ந்த சரோஜினி 12 வயதிலேயே உருதுமொழியில் கவிதைகளையும், நாடகத்தையும் இயற்றியவர். 1300 வரிகள் கொண்ட "லேடி ஆப் த லேக்" எனும் இவரின் படைப்பு புகழ்பெற்றது.

    பாரசீக மொழியில் சரோஜினி எழுதிய "மஹேர் முனீர்" என்ற நாடகத்தால் ஈர்க்கப்பட்ட ஹைதராபாத் நிசாம் மீர் மகபூப் அலிகான், சரோஜினி இங்கிலாந்து சென்று மேற்கல்வி பயில கல்விக்கொடை வழங்கினார். இங்கிலாந்தில் இரண்டு கல்லூரிகளில் படித்துத் திரும்பிய சரோஜினி, தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் கோவிந்தராஜூலு நாயுடு என்ற மருத்துவரை காதலித்து மணம்புரிந்தார். சாதிமறுப்பு திருமணம் நடைமுறையில் இல்லாத காலத்தில் தன்மகளின் விருப்பத்தை நிறைவேற்றிவைத்தார் சரோஜினியின் தந்தையார்.

    புகழ்பெற்ற கவிஞராக, எழுத்தாளராக விளங்கிய சரோஜினி, 1905-ல் கர்சன் பிரபுவால் நிகழ்த்தப்பட்ட வங்கப்பிரிவினையால் பெரிதும் மனம் வருந்தினார். வங்கப் பிரிவினைக்கு எதிராக இந்திய தேசியக் காங்கிரஸ் போராட்டங்களை முன்னெடுத்த சமயத்தில்தான் கோபாலகிருஷ்ண கோகலேவை சரோஜினி நாயுடு சந்திக்க நேர்ந்தது.

    நாட்டுக்காக போராட வரும்படி சரோஜினியை அழைத்தார் கோகலே. அதனை ஏற்றுக்கொண்ட சரோஜினி, நாட்டின் விடுதலையை நோக்கிய பயணத்திற்கு அடியெடுத்துவைக்க தன்னை தயார்படுத்திக் கொண்டார். முகமது அலி ஜின்னா, சி.பி. இராமஸ்வாமி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட தலைவர்கள் பலரையும் சரோஜினிக்கு அறிமுகப்படுத்திவைத்தார் கோகலே.

    சமூகத்தில் பெண்கள் படும் துன்பங்களைக் கண்ட சரோஜினியின் மனதில் மண் விடுதலையோடு பெண்விடுதலையும் வேண்டும் என்ற சிந்தனைகள் ஓடின. இந்திய தேசிய காங்கிரசின் 22வது சமூக மாநாடு 1908-ல் நடைபெற்ற போது, கைம்பெண்களுக்கு கல்வி அளிப்பது, பெண்களுக்கான பாதுகாப்பு இல்லங்கள் தொடங்குவது, கைம்பெண் மறுமணத்தில் இருக்கும் தடங்கல்களை நீக்குவது என தீர்மானங்கள் நிறைவேற்ற வலியுறுத்தினார் சரோஜினி நாயுடு.

    இந்திய மக்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட போது, சரோஜினி நாயுடு செய்த தொடர்சேவைகளுக்காக 1908-ல் இந்தியப் பேரரசர் எனும் பொருள்படும் "கைசர்-இ-இந்த்" எனும் பட்டத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது.

    சமூகப்பணிகளோடு அரசியல் பணிகளையும் இணைத்தே சுழன்றுவந்த சரோஜினி, 1916-ல் ஜவகர்லால் நேருவை சந்தித்தார். அவரோடு இணைந்து பீகாரில் பிரிட்டிஷாருக்கு எதிராக விவசாயிகள் நடத்திய இன்டிகோ போராட்டமான 'சம்பரன் சத்யாக்கிரகத்தில்' கலந்துகொண்டார். இதே ஆண்டில்தான் மகாத்மா காந்தியையும் சந்தித்த சரோஜினி நாயுடு அவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். காந்தியை மிக்கிமௌஸ் என்று அழைத்தவர் சரோஜினி.

    இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவரான அன்னிபெசன்ட் அவர்களுடன் இணைந்து 1917-ல் "இந்திய பெண்கள் கூட்டமைப்பை"த் தொடங்கிய சரோஜினி நாயுடு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தார். பெண்களுக்கு சம உரிமை கோரி லண்டனுக்குச் சென்ற பெண்கள் வாக்குரிமைக் குழுவை வழிநடத்திய இவர், பெண்களின் வாக்குரிமைக்கான சர்வதேச இயக்கத்திலும் இணைந்தார். 1918-ல் லண்டனில் இருந்து திரும்பிய சரோஜினி நாயுடு, இந்திய அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொண்டிருந்த குழுவிடம் பெண்களுக்கான வாக்குரிமையை கொண்டுவர வலியுறுத்தினார்.

    இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்திய மக்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தி வந்தார்.

    1919-ல் ரவுலட் சட்டத்திற்கு எதிராக காந்தியால் அறிவிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் முதலில் இணைந்தவர் சரோஜினி. தன்னாட்சி இயக்கக் குழுவின் இங்கிலாந்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டு, 1919 இந்திய அரசுச் சட்டத்தில் இந்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். தொடர்ந்து காந்தி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றார். ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்தபோது அதனை கண்டித்து தனக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கிய "கைசர்-இ-இந்த்" பட்டத்தை திருப்பித் தந்தார் சரோஜினி.

    1924 ஜனவரியில் இந்திய தேசிய காங்கிரசின் இரண்டு பிரதிநிதிகளில் ஒருவராக கிழக்கு ஆப்பிரிக்க இந்திய காங்கிரசில் இருந்து, கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்கா முழுவதும் பயணித்து சிதறிக் கிடந்த இந்திய மக்களின் தேவைகளை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

    1925-ல் இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்திய பெண் தலைவராக நியமிக்கப்பட்டார் சரோஜினி நாயுடு. காங்கிரஸ் தலைவராக அவர் நியமிக்கப்பட்டதை "இந்திய பெண்மைக்கு வழங்கப்பட்ட நற்சான்று" என்று அவர் கருதினார். தனது தலைமையுரையின் போது, சமூகத்தில் பெண்களின் பங்கை மீட்டெடுப்பது குறித்து அவர் பேசினார். "பெண்களுக்கு சமத்துவம்" இருந்தால் மட்டுமே சுதந்திரம் எட்டப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இந்திய தேசிய காங்கிரசில் பெண்கள் பிரிவைத் தொடங்கவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பது குறித்து பேசுவது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார் சரோஜினி நாயுடு. தமிழ்நாடு எதிலும் முன்நிற்கும் மாநிலம் என்பதற்கிணங்க இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டில் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி நியமிக்கப்பட்டார். இது சரோஜினியின் குரலுக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

    இந்து-முஸ்லீம் கலவரங்களை அடக்கி சமாதானப்படுத்துவதில் காந்திக்கு பெரிதும் உதவினார் சரோஜினி. 1928-ல் அமெரிக்கா சென்ற சரோஜினி, அங்கு காந்தியின் அகிம்சைக் கொள்கையை பரப்பினார்.

    சரோஜினி நாயுடுவின் முயற்சிகளால் தொடங்கப்பட்ட மகளிர் அமைப்புகள் அரசியல் சார்பற்றவையாக இருந்ததால், அவை பல திறமையான பெண்களுக்கு தங்களை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புகளை அளித்தன. மேலும் அவர்களில் பலர் அரசியல் கட்சிகளில் சேர்ந்து தேசிய இயக்கத்திலும் பங்கேற்றனர்.

    1930-ல் காந்தியின் தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகம் முடிந்தபின்னர், குஜராத்தில் உள்ள 'தாராசனா' என்னுமிடத்தில் மீண்டும் உப்புச் சத்தியாக்கிரகம் தொடங்கப்போவதாக காந்தி அறிவித்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அவரையும், அவரைத் தொடர்ந்த நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்களையும் கைதுசெய்தது. ஆனாலும் சரோஜினி நாயுடு தலைமையேற்று பல எதிர்ப்புகளுக்கிடையில் அபுல்கலாம் ஆசாத்துடன் இணைந்து 28 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தாராசனா சத்யாக்கிரக போராட்டத்தை தொடர்ந்தார்.

    1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காந்தியுடன் இணைந்து கலந்துகொண்டார். விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்து பணியாற்றியமைக்கு 1930, 1932 மற்றும் 1942-ல் சிறைத் தண்டனைகளை பரிசாக பெற்றார் சரோஜினி நாயுடு. குறிப்பாக 1942ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்க போராட்டத்தின் பரிசாக 21 மாதங்கள் சிறையில் இருந்தார். ஆனால் சிறைத்தண்டனைகளுக்கு அவர் எப்போதுமே அஞ்சியதில்லை.

    நான்கு குழந்தைகளுக்கு தாயாக இருந்த சரோஜினி நாயுடு, தன் குடும்பத்தையும், நாட்டையும் பிரித்துப் பார்த்தவர் இல்லை. இளமைக்காலம் தொட்டு இந்திய விடுதலைப் போராட்டங்களில் மிகத் தீவிரமாக பங்கெடுத்து வந்ததோடு பெண்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், எழுதியும், மேடைகளில் பேசியும், அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென்று பெரும் அக்கறையோடு வலியுறுத்தி வந்த சரோஜினி நாயுடுவின் தியாகம் சேவைகளுக்கு கிடைத்த பரிசுதான் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் எனும் பதவி.

    நாடு விடுதலைபெற்ற 1947 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் சரோஜினி நாயுடு. பதவி ஏற்ற நாள்முதல் அதிகாரப்பூர்வமாக தன் சேவையைத் தொடர்ந்த அவர், தன் இறுதி சுவாசத்தையும் தன் அலுவலகத்திலேயே மார்ச் 2, 1949-ல் நிறுத்திக் கொண்டார்.

    பாரதீய கோகிலா, நைட்டிங்கேல் ஆப் இந்தியா என்றெல்லாம் பாராட்டப்பட்ட சரோஜினி நாயுடு மறைந்த மார்ச் 2, இந்தியாவின் "தேசிய பெண்கள் தினமாக" போற்றப்படுகிறது.

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் இடமாற்றம் மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை எற்படுத்துகிறது.
    • பொதுவாக கல்வியாண்டின் துவக்கத்தில் உத்தியோகஸ்தர்கள் தான் இடப்பெயர்ச்சியை அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.

    ஒவ்வொரு வருடமும் ஆங்கிலப் புத்தாண்டின் ஏப்ரல், மே மாதங்களில் பலரின் எதிர்பார்ப்பு இடப்பெயர்ச்சி. பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் ஜீவிக்க இடம் பெயர்வது இயல்பு. அதுவும் மனிதர்களாய் பிறந்தவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறோம். குறிப்பாக தொழில் உத்தியோகத்திற்காக, பணம் சம்பாதிக்க, மன நிம்மதிக்காக, உல்லாச பயணத்திற்காக கல்விக்காக இடம் பெயருவார்கள்.

    சிலருக்கு வாழ்க்கையில் திருப்புமுனையைத் தரும் இடப்பெயர்ச்சி பலருக்கு அசவுகரியத்தையும் தரும். இந்த கட்டுரையில் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் சுப அசுபங்களைப் பார்க்கலாம். மனிதர்கள் வாழ்வில் நிகழும் இடப் பெயர்ச்சியை சுய ஜாதக ரீதியான இடப் பெயர்ச்சி, கோட்சார ரீதியான இடப்பெயர்ச்சி என இரண்டாக வகைப்படுத்தலாம்.

    1. சுய ஜாதக ரீதியான இடப்பெயர்ச்சி

    நாம் இருக்கும் வீட்டையும் நாட்டையும் குறிப்பது நான்காமிடம். அந்த வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடான மூன்றாம் வீடு தான் இடப்பெயர்ச்சியை குறிக்கிறது. நீண்ட தூரப்பயணம் செய்யும் இடப்பெயர்ச்சி ஒன்பதாமிடத்தை குறிக்கும். நீண்ட பயணத்தை மேற்கொண்டு அறிமுகம் இல்லாத மனிதர்களுடன் வாழ்வது

    12-ம் இடம். அதாவது வெளிநாட்டு பயணத்தையும் கூறுமிடம். ஆக ஒருவரின் சுய ஜாதகத்தில் 3,9,12-ம் பாவகங்கள் தசாபுத்தி ரீதியாக செயல்படும் போது இடப்பெயர்ச்சி நிகழும். காலபுருஷ தத்துவத்தின் படி மேஷத்தில் தொடங்கி மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் பல்வேறு தத்துவங்கள் ரகசியங்கள் அடங்கியுள்ளன. கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்து இருக்கிறார்கள்.

    சரம்

    மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும்.சரம் என்றால் வெகு சலனமுடையது. தடையற்ற இயக்கம் கொண்ட அமைப்பாகும். சர லக்னத்திற்கு சுபமோ அசுபமோ எளிதில் வந்தடையும். ஒருவடைய வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழி நடத்தும். மாற்றம் வந்த தடமும் இருக்காது. போன சுவடும் தெரியாது. சர ராசிகள் வலிமை பெற்று அதில் நின்று ஒரு கிரகம் தசா புத்திகள் நடத்தினால் ஜாதகருக்கு இடப் பெயர்ச்சி வேகமாக நடக்கும். குடியிருக்கும் வீட்டை அடிக்கடி மாற்றுவார்கள். பார்க்கும் வேலை அல்லது தொழிலை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒரு வேலையில் 3மாதத்திற்கு மேல் நிலைக்க மாட்டார்கள். வெளியூர், வெளிநாட்டு வேலை, தொழிலுக்கு பணம் செலவழித்துச் சென்று ஊர், பிடிக்கவில்லை அல்லது நாடு பிடிக்கவில்லை என்று பாதியில் திரும்பிவிடுவார்கள். 6 மாதத்திற்கு ஒரு தொழிலை நடத்துவார்கள்.

    உலகத்தில் உள்ள அனைத்து தொழிலையும் கற்றுக் கொள்வார்கள் ஆனால் ஒரு தொழிலைக் கூட உருப்படியாக செய்ய மாட்டார்கள். இவ்வளவு ஏன் பஸ்சில், ரெயிலில் பயணித்தால் கூட இடம் மாறி, மாறி அமர்ந்து பயணிப் பார்கள்.சிறு குழந்தைகளாக இருந்தால் அடிக்கடி பள்ளிக்கூடம் மாறுவார்கள். இவர்கள் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்கள். ஆனால் கிடைத்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்த தவறுவார்கள். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப மிக குறுகிய காலத்தில் எதிலும் வேகமாக விவேகமில்லாத முடிவினை எடுப்பார்கள்.

    சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரத்தில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தி கடுமையான இடப் பெயர்ச்சியை சந்திப்பவர்கள் தினமும் பிரம்ம முகூர்த்த வேளைகளில் குல தெய்வத்தின் முன்பு நெய் தீபம் ஏற்றி தொடர்ச்சியாக வணங்கி வருவது நல்லதாகும்.

    ஸ்திரம்

    ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னத்தில் அடங்கும். ஸ்திரம் என்பது சலனமற்றது.

    அசைவற்ற நிலையைக் கொண்ட தன்மையாகும். சுபமோ, அசுபமோ எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும் கூட வழி நடத்தும். ஸ்திர லக்னம் காத்தால் தத்துவத்தை அடக்கியது.

    கொள்கை மற்றும் லட்சிய பிடிப்பு உள்ளவர்கள். இவர்கள் ஒரு தடவை எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது. அதாவது இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள். அது சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அதிலிருந்து மாற்ற மாட்டார்கள். எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள். தாம் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். நிலையான வெற்றியை பெறுவார்கள். வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓய மாட்டார்கள்.

    ஸ்திர ராசியில் நின்று ஒரு கிரகம்

    சுபவலிமை பெற்று தசை புக்திகள் நடத்தினால் இடப்பெயர்ச்சி யாகி வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்வார்கள். சிறிது சிரமப்பட்டாலும் இடப்பெயர்ச்சியால் நிலையான பல யோகங்களை ஜாதகரின் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கும். முன்னேற்றங்கள் வளர்ச்சி தங்கு தடையின்றி இருக்கும்.

    ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்கள், லக்னாதிபதி ஸ்திர ராசியில் நின்றபவர்கள் தொழில், உத்தியோகத்திற்காக இடம் பெயர்ந்தால் நிலையாக அங்கேயே தங்கி விடுவார்கள். இளம் வாலிப பருவத்தில் ஸ்திர ராசியில் நிற்கும் கிரகங்களின் தசை நடந்தால் உயர் கல்விக்காக வெளிநாடு சென்று படித்து அங்கேயே வேலை கிடைத்து செட்டிலாகுவார்கள்.

    ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்தில் இருந்து ஒரு கிரகம் தசை நடத்தும் பொழுது தினமும் மகாவிஷ்ணுவிற்கு உரிய காயத்திரி மந்திரங்கள் மற்றும் லலிதா சகஸ்கர நாமம் படித்து வர நன்மைகள் அதிரிக்கும்.

    உபயம்

    மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னத்தில் அடங்கும். உபய லக்னம் சர, ஸ்திர லக்னங்களின் தன்மையையும் உள்ளடக்கியது. அதாவது ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு நகரும் போது கிரக தன்மை சரம். மாறிய பிறகு ஸ்திரம். அதிசார கதியில் அல்லது வக்கிர நிலையில் சஞ்சாரம் செய்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்புவது உபயம்.

    இந்த லக்னம் அழித்தல் தத்துவத்தையும் தனக்குள் கொண்டுள்ளது.


    பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

    பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

     ஒருவருடைய சுய ஜாதகத்தில் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகள் வலிமை பெற்ற கிரகத்தின் தசை புத்திகள் நடைபெற்றால் இடப்பெயர்ச்சியால் ஜாதகருக்கு தொடர்ந்து பல நன்மைகள் நடைபெறும். கடல் அலை போல் மீண்டும் மீண்டும் அவருக்கு தொடர்ந்து பல நன்மைகள்உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும்.

    இந்த ராசியில் அசுப தன்மை பெற்ற கிரகம் தசை புத்திகள் நடத்தினால் இடப்பெயர்ச்சியால் ஜாதகர் ஒரு பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினை அவர் வீட்டின் கதவை தட்டும். ஒரு இடப்பெயர்ச்சியை சமாளித்து மீளும் முன்பு மீண்டும் அடுத்த இடப்பெயர்ச்சி தயாராகி விடும். அப்படிச் செய்யலாமா, இப்படி செய்யலாமா என யோசித்து கொண்டே சொதப்பி தமக்கு தாமே சொந்த செலவில் சூன்யம் வைக்கும் புத்திசாலிகள். எதிலும் இரட்டை நிலைதான். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட மாட்டார்கள். ஒவ்வொரு நிமிடமும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். மனசு மாறிக்கிட்டே இருக்கும். ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும். உபய லக்னத்தில் நின்று கிரகம் தசை நடத்தும் போது இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் அசவுகரியத்தை சந்திப்பவர்களுக்கு அரச மரப் பிரதட்சணம் மற்றும் வழிபாடு நன்மை தரும்.

    2. கோட்சார ரீதியான இடப்பெயர்ச்சி

    சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய 4-ம் மாத கிரகங்கள். மாதம் ஒரு ராசியில் இருக்கும் என்பதால் இதனால் ஏற்படும் மாற்றங்கள் ஒரு மாதம் வரை நீடிக்கும். செவ்வாயும் மாத கிரகம் என்றாலும் 45 நாட்கள் முதல் 6 மாதம் வரை ஒரே ராசியில் இருப்பதால் இதனால் ஏற்படும் மாற்றங்கள் ஒரு சில மாதங்கள் முதல் ஒரு சில வருடங்கள் நீடிக்கலாம். குரு , ராகு/கேது, சனி இவை நான்கும் வருடங்கள்.

    இடப்பெயர்ச்சியை நிர்ணயிப்பதில் வருடகிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் அவற்றால் ஏற்படும் சுப / அசுப பலன்கள் வருடக் கணக்கில் ஜாதகருக்கு பலன் தரும். குரு பகவான் ஒரு ராசியை கடக்க தோராயமாக ஒரு வருடமாகும். மனிதனின் விருப்பம், எண்ணம், ஆசை போன்றவற்றை நிறைவு செய்பவர். பெரும்பாலும் குருவினால் ஏற்படுத்தப்படும் இடப்பெயர்ச்சி பதவி உயர்வு, ஊதிய உயர்வு, திருமணம், புதிய சொத்து வாங்கி குடியேறுவது போன்ற சுப பலன்களை உள்ளடக்கியிருக்கும்.

    ராகு, கேதுக்கள் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றரை ஆண்டுகள் 18 மாதங்கள் தங்கி பலன்களைத் தருவார்கள். இவர்கள் தங்கள் கோட்சார காலங்களில் வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என அவரவர் வயதிற்கும், தசா புத்திக்கும் ஏற்ற இடமாற்றத்தை வழங்குகின்றன.

    இவர்களால் ஏற்படுத்தப்படும் இடப்பெயர்ச்சி சாதகம் குறைவாகவும், பாதகம் அதிகமாகவும் இருக்கும்.

    அதிக வருடம் அதிகபட்சம் 2½ ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கி பலன்தருபவர் சனிபகவான்.

    இவரால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் ஜாதகரை பல வருடங்களுக்கு வழிநடத்தும்.

    சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் இடமாற்றம் மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை எற்படுத்துகிறது. ஜனன ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்களுக்கு, தன் தசா காலத்தில், கோட்சாரத்தில் தான் நின்ற இடத்திற்கு ஏற்ப ஏராளமான நற்பலன்களை சனி பகவான் வாரி வழங்குவார். உயர் பதவி, தொழில், அந்தஸ்து, வாழ்வியல் மாற்றம் தரும் இடப்பெயர்ச்சி என எட்டாத உயரத்தில் ஏற்றி விடுவார். கோட்சாரத்தில் வலிமை இல்லாத இடங்களுக்கு வரும் காலங்களில் நீசத் தொழில், வறுமை, சிறை தண்டனை கொடுத்து வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுப்பார்.

    பொதுவாக அசுப கிரகங்கள் தரும் பலன்களில் ஏற்ற இறக்கம் மிகுதியாகஇருக்கும் என்பதால், நன்மை வந்தாலும் அந்த நன்மையை அனுபவிக்க முடியாத சிரமமும் இருக்கும். சனியின் சாதகமற்ற கோட்ச்சார நிலைகள் சற்று அதிக பாதிப்பைத் தரும்.

    பொதுவாக கல்வியாண்டின் துவக்கத்தில் உத்தியோகஸ்தர்கள் தான் இடப்பெயர்ச்சியை அதிகம் எதிர்பார்க்கிறார்கள். வேலை மற்றும் உத்தியோகத்தை சுட்டிக் காட்டக் கூடிய பாவங்களாக 6 மற்றும் 10-ம் பாவகத்திற்கு விரைய பாவகங்களான ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகங்கள் செயல்படும் பொழுது ஜாதகருக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகும். அதோடு ஆதிபத்திய ரீதியாக மாற்றத்தை தரக்கூடிய அஷ்டமாதிபதி மற்றும் மூன்றாம் அதிபதி தொடர்புடைய தசாபுத்திகளிலும் மாற்றம் உண்டாகும். விரைவான மாற்றத்திற்கு காரக கிரகம் சந்திரன். ஒருவருடைய ஜாதகத்தில் பிறந்த காலச் சந்திரன் மீது வருட கிரகங்களான குரு, சனி, ராகு-கேது செல்லும்போதும் மாற்றங்கள் கிடைக்கும்.பிறந்த காலச்சந்திரன் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் தசா புத்திகளும் சாதக நிலையில் இருந்தால் மாற்றம் ஜாதகர் விரும்பக் கூடியதாக இருக்கும்.

    தசா புத்தி சாதகமற்ற காலத்தில் ஏற்படும் இடப் பெயர்ச்சியால் மன சஞ்சலம் அதிகமாக இருக்கும்.

    சோதனைகளை சாதனையாக மாற்ற நல்ல இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்க கூடியவர்கள் தங்களது பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளன்று குல இஷ்ட தெய்வ வழிபாடு செய்து மகிழவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த வருடம் கென்டக்கி டெர்பி எனப்படும் அமெரிக்க குதிரை ரேசில் இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது!
    • ஆம் ஸ்பெக்டிரா என்பது முதல் நாலு குதிரைகளின் பெயரையும் அவற்றின் சரியான வரிசையையும் முன்பே கணித்தல்.

    "பொறப்பட்டுட்டாரும்மா!"

    "காருக்கு வந்துட்டாரு!"

    "என் தகவல்படி ரெண்டு காரு ஒரே சமயம் புறப்பட்டு ஒரே திசையில போவுதுங்கம்மா!"

    "ரெண்டு காரும் போற திசை மந்தவெளி இல்லம்மா! அபிராமபுரம்!"

    நீங்கள் வீட்டு காலிங் பெல் அடிக்கும் முன்பே கதவு திறக்கப்பட்டு கேள்வி தெறிக்கும்.

    "ஏன் லேட்டு!"

    "லேட்டா? நேரா ஆபீஸ்லேர்ந்து வரேன்! என்ன டிராபிக்குங்கற!"

    "எங்க அபிராமபுரத்துலயா?"

    "என்..என்னது! அபிராமபுரமா? நான்..!"

    "புளுகாதீங்க! அந்த லாவண்யாவ நோகாம எஸ்கார்ட் பண்ணி வீட்ல கொண்டு விட்டுட்டு வர்ரீங்க!"

    "இல்ல வைஷு! நா வந்து…!"

    "ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் புரோகிராம் வந்ததாலதான் உங்க தகிடு தத்தமெல்லாம் தெரியுது!

    அட என்னங்க இது கொறக்களி வித்தையா இருக்கு!

    ஆம். இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு என்னும் இயல் தொழில் நுட்ப வகையில் புதிதாக இருந்தாலும் அது பயன்படுத்தும் அடிப்படை மிகப்பழமையானதுதான். ஸ்வார்ம் என்பது எறும்பு, தேனி, கரையான், முதலான உயிரினங்களின் கூட்டத்தைக்குறிக்கும். மந்தை என்பது ஆடு, மாடுகளின் கூட்டம். இது ஹெர்ட் எனப்படுகிறது. கூட்ட மதி நுட்பம் அல்லது அதற்குச் சமனாக மந்தை புத்தி, கவனிக்க மந்த புத்தி இல்லை, பொருத்தமாயிருக்கும். தவிர சரியோ பிழையோ முன்னே செல்வரின் வழியில் செல்வதைத் தான் மந்தைப்புத்தி என்கிறோம்.

    இந்த மந்தையானது ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமலும் ஒரு இடத்தில் இருந்து இயக்கம் ஏதுமில்லாமலும், ஆனாலும் ஏதோ ஒரு ஒழுங்கில் செயல் படுவதாகும். அந்த மத்திய இயக்கம் இல்லாத சுதந்திர நடத்தையிலும் அந்தக்குழுவின் ஒரு ஒழுங்கு நிறைந்த செயல்பாடு வெளிப்படும்.

    இந்த நடவடிக்கையை அலசி ஆராய்ந்து இது அடுத்து வரும் நேரங்களில் எப்படி இருக்கும் என்பதைக்கணிக்க முயலுவதுதான் ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு.

    இந்த வருடம் கென்டக்கி டெர்பி எனப்படும் அமெரிக்க குதிரை ரேசில் இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது! வருடா வருடம் இந்த டெர்பி ரேஸ் மே மாதத்தின் முதல் சனிக்கிழமை நடைபெறும். போன வருடம் இந்த ரேசை நடத்தும் நிறுவனமான சர்ச்சில் டவுன்ஸ் என்னும் கம்பெனி இந்த திரள் நுண்ணறிவு புரோகிராமை ரேசில் முதல் முறையாக பரிசோதனை அளவில் செயல் படுத்தியது. இந்த புரோகிராம் ரேஸ் நடக்கும் முன்பே முதலில் வரவிருக்கும் நான்கு குதிரைகளின் பெயர்களை மிகச்சரியாக கணித்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    "என்ன தலைவா! கிண்டி போனியே நேத்து, என்னாச்சு?"

    "ஸ்பெக்டிராவுல எல்லாம் நான் சொன்னபடிதான்!"

    "அடேயப்பா! எத்தன லாபம்?"

    "லாபமா! அதுங்க வர்ர வரிசை தப்பாப்போச்சுப்பா!"

    ஆம் ஸ்பெக்டிரா என்பது முதல் நாலு குதிரைகளின் பெயரையும் அவற்றின் சரியான வரிசையையும் முன்பே கணித்தல். இதைத்தான் திரள் நுண்ணறிவு புரோகிராம் கென்டக்கி டெர்பியில் படுதுல்லியமாக கணித்திருந்தது.

    இந்த இயலின் அடிப்படை வெகு இயற்கையான விஷயங்கள்தாம். பறவைகள் கூட்டமாகப்பறக்கும் நேர்த்தியைக் கவனித்தால் புரியும். அவற்றை இப்படிப்பற என்று யாரும் கட்டளையிடுவதில்லை. தன் சுற்றத்தாருடன் ஒன்று சேர்ந்து ஒரு முறையில் பறக்கும்போதே, அதில் ஒரு ஒழுங்கும் அந்த ஒழுங்கின் குழுமச்சக்தியும் வெளிப்படுவதாக விற்பன்னர்கள் சொல்லுகிறார்கள்.

    அதே அடிப்படையில்தால் இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவு இயலும் வடிவமைக்கப்படுகிறது. இதே போல எறும்புகளின் கூட்டச்செயல்பாடு, பாக்டீரியாக்களின் வளர்ச்சி, ஆடு மாடு மந்தைகள், நுண்ணுயிர் நுண்ணறிவு ஆகியவற்றிலும் இந்த திரள் நுண்ணறிவை பார்க்கலாம்.

    "என்ன மாதிரிடி உங்க குடும்பம்?"

    "ஏன், என் குடும்பத்துக்கென்னவாம்?"

    "பாத்தேனே உன் தம்பி கல்யாணத்துல! பொண்ணப்பெத்தவரை என்னமா ஆட்டி வெச்சீங்க!"

    "ஆமா இப்பவே கிடுக்கி போடலைன்னா அவருக்கு துளிர்த்துடுமே!"

    "அதெப்படி உங்க குடும்பத்துல எல்லோரும் சொல்லி வெச்சா மாதிரி ஒரே விதமா டார்ச்சர் பண்றீங்க!"

    பேசின ஆசாமிக்கு அன்று இரவு வெறும் பழைய சோறுதான் கிடைத்திருக்கும், என்றாலும் இதெல்லாம் திரள் நுண்ணறிவுக்குள் வராது.

    இந்த ஸ்வார்ம் இன்ட்டலிஜென்ஸ் அல்லது திரள் நுண்ணறிவுக்கான பயன்பாடுகள் பெருகிக்கொண்டே வருகின்றன.

    அமெரிக்க ராணுவம் இந்த இயலை பயன்படுத்தி ஆளில்லா டிரோன்களை இயக்கவும், நாசா விண்வெளி ஆராய்ச்சியிலும் மேலும் பல நாடுகள் மருத்துவத்துறையிலும் பயன்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன.

    முக்கியமாக நானோ ரோபாட்டுகளை உடலினுள் செலுத்தி கேன்சர் கட்டிகளை முறியடிப்பதற்கான ஆராய்ச்சிகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.

    "என்ன சார் டயர்டா இருக்கீங்க!"

    "ஒண்ணுமில்ல, காலையில டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட்!"

    "என்ன ஆச்சு?"

    "ஒண்ணும் இல்ல, சின்ன பிராப்ளம்தான்! நுரையீரல்ல கேன்சர்னு தெரிஞ்சது! அதான் கார்த்தால போய் நானோபோட் டிரீட்மெண்ட் எடுத்துண்டு வந்தேன். கேன்சர் குணமாயிடுத்து. என்ன கொஞ்சம் டயர்டா இருக்கு. லஞ்சுக்கு அப்புறம் ரெண்டு மணி நேரம் தூங்கினா சரியாய்டும், வரட்டுமா?"

    நடக்கத்தான் போகிறது!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஞ்சள் வீக்கங்கள் குறைவதற்கும், புற்று நோயினை எதிர்ப்பதற்கும் பெரிதும் உதவுகின்றது.
    • சிலர் இதே அளவில் மஞ்சள் டீ என்ற முறையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கின்றனர்.

    மஞ்சள்: இதன் மருத்துவ குணம் காரணமாக உலகெங்கிலும் மருத்துவ உலகில் இது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மஞ்சள் வீக்கங்கள் குறைவதற்கும், புற்று நோயினை எதிர்ப்பதற்கும் பெரிதும் உதவுகின்றது. முதுமை சீக்கிரம் கூடுவது கூட தவிர்க்கப்படுகின்றது. அநேக நோய்களுக்கு இது தீர்வாக அல்லது பெரும் உதவியாக இருக்கின்றது என சுமார் 7 ஆயிரம் விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. இதில் உள்ள குர்குமின் என்ற பொருள்தான் இந்த வியக்கும் முன்னேற்றத்திற்கு காரணம் என உறுதி செய்துள்ளனர்.

    ஒரு கிளாஸ் நீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ½ டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் கலந்து 3 அல்லது 5 நிமிடங்கள் மூடி வைத்து பின் வெது வெதுப்பாக குடித்து விடலாம்.

    சிலர் இதே அளவில் மஞ்சள் டீ என்ற முறையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கின்றனர்.

    சிலர் தேன், எலுமிச்சை சாறு, மிளகு பொடி இவற்றினை அவரவர் சுவைக்கேற்றபடி சேர்த்துக் கொள்கின்றனர்.

    சிலர் பாலுடன் மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக் கொள்கின்றனர்.

    பலர் இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டாலும் இதனை மதியம், இரவு நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.

    மேரி ஈஸ் பரவுன் எனும் புற்று நோய் பகுதி சத்துணவாளர் கூறுவது புற்று நோய், இருதய நோய் தாக்குதலை குறைக்க மஞ்சள் பெரிதும் உதவுகின்றது என்பதுதான். மேலும் மனச் சோர்வு, மறதி, மனநிலை சீராய் இருத்தல் இவற்றுக்கும் மஞ்சள் உதவுவதாக ஆய்வுகளின் முடிவுகள் குறிப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.

    * மூட்டு வலி பிரச்சினைக்கு சிறந்த வலி நிவாரணியாக உள்ளது.

    * நீரிழிவு நோய் பிரிவு 2 உடையவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பட உதவுகின்றது.

    * உள் வீக்கங்களும் குறைகின்றது.

    * ஜீரணத்திற்கு உதவுகின்றது.

    * கல்லீரலுக்கு பாதுகாப்பாய் உள்ளது.

    * மூளைக்கு நல்ல டானிக் ஆகின்றது.

    * இருதய பாதிப்பிற்கு நல்லது. ரத்த குழாய் அடைப்புகளை தவிர்க்கின்றது.

    * உள் வீக்கங்கள் குறைக்கப்படுவதால் முதுமை வேகமாக கூடுவது குறைகின்றது.

    * புற்று நோய் தவிர்ப்பிற்கும் சிகிச்சைக்கும் உதவுகின்றது.

    * கொழுப்பு குறைகின்றது.

    * சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.

    * படபடப்பு நீங்குகின்றது.


    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

     சிலர் மஞ்சளை சத்துணவு மாத்திரை போல் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் சில குறிப்பிட்ட மருந்துகளோடு இது சேரும் போது சில பாதிப்புகள் ஏற்படும். அவை சற்று அதிக அபாயமாக இருக்கக் கூடாது. இதனை தவிர்ப்பதற்காக மருந்துகள் நோய்க்காக எடுப்பவர்கள், புற்று நோய் சிகிச்சையில் இருப்பவர்கள், ரத்த திடத்தினை குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் இப்படி எந்த பிரிவில் இருந்தாலும் மஞ்சள் சத்துணவு மாத்திரை அல்லது மஞ்சள் நீர் எடுத்துக் கொள்பவர்கள் கண்டிப்பாய் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    மேலும் சிலருக்கு அலர்ஜி தரலாம். எனவே கவனம் தேவை. இயற்கை பல பொக்கிஷங்களை நம் ஆரோக்கியத்திற்காக வாரி வழங்கியுள்ளது. முறையாக பயன்படுத்தி பயன் பெறுவோம்.

    இருதய பாதிப்பு என்றாலே உலகெங்கிலும் அனைவருக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டிய பாதிப்பாக உள்ளது. இருதயம் ரத்த குழாய்கள் பாதிப்பு, பக்கவாதம் என பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இருதய பாதிப்பினை ஏற்படுத்தும் சில நோய்கள்.

    * உயர் ரத்த அழுத்தம் * புகையிலை * அதிக கொழுப்பு * சர்க்கரை நோய் * அதிக எடை * உடல் உழைப்பின்றி இருத்தல் * ஆரோக்கியமற்ற உணவு * பரம்பரை * வயது * ஸ்ட்ரெஸ் * குடிப்பழக்கம் * முறையான தூக்கமின்மை * சிறுநீரக பாதிப்பு * ஹார்மோன் பாதிப்பு * தூய்மையற்ற காற்று ஆகியவை ஆகும்.

    இதனை தவிர்க்க

    * முறையான மருத்துவ பரிசோதனை

    * ஆரோக்கியமான உணவு

    * புகை, புகையிலை தவிர்த்தல்

    * சீரான எடை

    * ஸ்ட்ரெஸ் இன்றி இருத்தல்

    * மது தவிர்த்தல்

    * நம் உடல் நலம் பற்றி நன்கு அறிந்து இருத்தல் ஆகியவை மிக அவசியம்.

    * தேவையான அளவு கலோரி சத்து அதனை முறையான உடற்பயிற்சி கொண்டு எடுத்தல்.

    * நல்ல காய்கறி, பழங்கள் உட் கொள்ளுதல்.

    * முழு தானிய உணவுகள்

    * தாவர உணவு, கடல் உணவு, தாவர வகை புரதம் எடுத்துக் கொள்ளுதல்.

    * பதப்படுத்தப்பட்ட புட்டியில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்தல்

    * சர்க்கரை உணவினை தவிர்த்தல்

    * உப்பு உணவினை தவிர்த்தல்- ஆகியவை நல்ல பலன் தரும்.

    நடுக்குவாத நோய் பற்றியும் சில குறிப்புகளை அறிந்து கொள்வோம்.

    இது நீண்ட கால நரம்பு மண்டல பாதிப்பின் வெளிப்பாடு ஆகும். பரம்பரையில் யாருக்கேனும் இருந்தால் பாதிப்பு வாய்ப்புகள் சந்ததிகளுக்கு சற்று கூடுதலாக இருக்கும். ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு பெண்களை விட சற்று கூடுதல் எனலாம்.

    60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு அபாயம் கூடும்.

    இதன் பாதிப்பு தவிர்ப்பு முறைகளைப் பற்றி ஆய்வு முடிவாக கூறியது காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு நடுக்கு வாத பாதிப்பு குறைவாகத்தான் ஏற்படுகின்றதாம். இப்படி சொல்லி விட்டதால் டிகிரி காபியாக அன்றாடம் பல முறை குடிக்க வேண்டும் என்பதல்ல இதன் பொருள். பொதுவில் அவர்கள் கூறும் காபி என்பது பால் கலக்காத அதிக திடம் இல்லாத கறுப்பு காபியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பால் கலந்து நம் முறைப்படி பருகினாலும் காலை 12 மணிக்குள் ஒரு முறை அருந்தினாலே போதும்.

    காலை, மாலை உடலில் நன்கு சூரிய ஒளி படும்படி 20 நிமிடங்கள் நடக்கலாம்.

    வைட்டமின் 'சி' சத்து நிறைந்த பழங்கள், சோயா உணவுகள், டீ, வெங்காயம் இவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    அதிகம் பால், பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    வைட்டமின் 'சி' -இதனை பற்றி அன்றாடம் மக்கள் படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும்தான் இருக்கின்றனர். அந்த அளவிற்கு இதன் முக்கியத்துவம் வலியுறுத்தப் படுகின்றது. உடலை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்ட வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்க உதவுகின்றது. இத்துடன் 'கொலஜென்' உற்பத்திக்கும் உதவுகின்றது. இந்த கொலஜென் தான் சருமம், எலும்பு, நகம், மந்த தெளிவு, இரும்பு சத்து, உடலில் உறிஞ்சப்பட உதவியாய் இருக்கின்றது.

    உடலில் 'வைட்டமின் சி' சத்து கொலஜன் உற்பத்தி மூலம் திசுக்கள் எலும்புகள் இத்தோடு ரத்த குழாய்களையும் காக்கின்றது. பலர் இந்த வைட்டமின் சி சத்தினைப் பற்றி நினைப்பதும் இல்லை. பலர் மிக அதிக அளவில் தானே சத்து மாத்திரைகளாக எடுத்துக் கொண்டு வயிற்றுப் போக்கு, வலி என பல குடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். சத்து மாத்திரையாக இருந்தாலும் அது மருத்துவர் அறிவுரைப்படியே இருக்க வேண்டும்.

    ஆனால் அன்றாட உணவில் விகிதாச்சார முறைபடி உண்ணும் போது இயற்கையாகவே பலன்கள் கிட்டும்.

    'சி' சத்து என்று சொன்னாலே எலுமிச்சை, நெல்லி, ஆரஞ்சு என ஞாபகம் வரும்.

    சிகப்பு, பச்சை கொடை மிளகாய்-சாலட் முறையில் இதனை பயன்படுத்தலாம்.

    புரோகலி மிக சிறந்த அளவு 'சி' சத்து கொண்டது.

    தக்காளி, தக்காளி ஜுஸ், கீரை வகைகள் என அன்றாடம் இவைகளை நம் உணவு பழக்க முறைப்படியே சேர்த்துக் கொள்ளலாமே.

    நோய் எதிர்ப்பு சக்தி, காயங்கள் ஆறுதல், ஈறுகளில் ரத்த கசிவு இல்லாது இருத்தல், சதைகள் சோர்வின்றி இருத்தல், ஆரோக்கியமான சருமம், சில பிரிவு புற்று நோய் எதிர்ப்பு என இத்தனை நன்மைகளைத் தரும் வைட்டமின் சி சத்தினை அவசியம் அன்றாடம் உணவு முறை மூலம் பெற வேண்டும்.

    அதிகமாக சில வைட்டமின்கள் பற்றி திரும்ப திரும்ப கூறுவது போல் மற்றொரு செய்தியினையும் இங்கு மேலும் அறிந்து கொள்வோம்.

    நைட்ரிக் ஆக்சைட்: இது ஒரு முக்கியமான மூலக்கூறு. உடலின் ஆரோக்கியம், செயல்பாட்டிற்கு அவசியம். இருதயம் சீராய் இயங்க, நோய் எதிர்ப்பு சக்தி கூட, ரத்த குழாய்களில் ரத்த ஓட்டம் சீராய் இருக்க என பல முக்கியத்துவங்களை நைட்ரிக் ஆக்சைட் தன்னுள் கொண்டது. உடல் இயற்கையிலேயே நைட்ரிக் ஆக்சைட் உற்பத்தி செய்தாலும் உணவின் மூலமும் இதனைப் பெற முடியும்.

    * தர்பூசணி * பீட் ரூட் * பூண்டு *அடர்ந்த சாக்லேட் *பசலை கீரை * மாதுளை * கொட்டை வகைகள் * முட்டை * காபி இவை நைட்ரிக் ஆக்சைடினை உடலில் கூட்டுவதற்கு உதவுபவை.

    நம்மால் கத்தாமல், குரலை உயர்த்தாமல் பேச முடிகின்றதா? கண்டபடி உண்ணாமல் அளவாய் முறையாய் உண்ண முடி கின்றதா? பொறுமையாய் வேலை செய்ய முடிகின்றதா? செய்யும் வேலையினை பயம் இன்றி செய்ய முடிகின்றதா? சிறிதாவது ஆக்கப்பூர்வமாக சிந்திக்கின்றோமா? நேர்மையாக சம்பாதிக்கின்றோமா? பண்பாக நடந்து கொள்கின்றோமா? நாம் நல்லவர்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print