என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் திருமணம்"

    • முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும்
    • திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும்.

    சிவகாசி மேயர் சங்கீதா இன்ப இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    அப்போது பேசிய அவர், "காதல் பண்ணறது EASYனு எல்லாரும் சொல்லுவாங்க ஆனா... இருக்குறதுலயே ரொம்ப கஷ்டமானது இந்த காதல் கல்யாணம்தான். முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும். அவங்களைச் சம்மதிக்க வைக்கணும். அடுத்து தன்னோட காதல் எவ்ளோ உண்மையானதுன்னு நிரூபிக்கணும். திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும். இது போதாதுன்னு சொந்தக்காரங்க வேற வருவாங்க... அவங்களைச் சமாளிக்கணும். காதல் கல்யாணத்துக்கு இதுமாதிரி பல பிரச்னைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்" என்று கலகலப்பாக பேசினார்.

    • அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன.
    • காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 30). எம்.எஸ்சி. பட்டதாரி. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்த தனக்கோடி- விஜயா தம்பதியின் மகன் சஞ்சய்குமார் (32). பி.பி.ஏ. பட்டதாரி.

    இவர்கள் 2 பேரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அமிர்தா, சஞ்சய்குமாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சய்குமார் வீட்டில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    திடீர் திருப்பமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சஞ்சய்குமார் குடும்பத்தை சேர்ந்த சிலரும், அமிர்தாவின் குடும்பத்தாரும் கலந்து பேசி 27.8.2025 அன்று (நேற்று) நாகை மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து சஞ்சய்குமார்- அமிர்தா திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.

    சஞ்சய்குமார் மற்றும் குடும்பத்தினர் திருமணத்துக்காக நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணமகளின் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் நேற்று முன்தினம் இரவு வரை வரவில்லை. திருமண நாள் வந்து விட்ட நிலையில் மணமகன் குடும்பத்தார் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த அமிர்தா, சஞ்சய்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.

    இதனால் பதற்றம் அடைந்த அவர் மணமகனின் சகோதரிகளிடம் பேசியபோது, உறவினர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய்குமாரை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர். சஞ்சய்குமார் திடீரென மாயமானது அமிர்தா மற்றும் குடும்பத்தினரை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கியது.

    இதுதொடர்பாக அமிர்தாவின் சகோதரர்கள் கண்ணன், கார்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட்டிடம் புகார் தெரிவித்தனர். அவர், உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது சஞ்சய்குமாரை உறவினர்கள் அழைத்துச்சென்றது தெரியவந்தது. நேற்று அதிகாலை கமுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் சஞ்சய்குமார் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அங்கிருந்து அவரை போலீசார் அழைத்து வந்து அவருடைய காதலி அமிர்தா வீட்டில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் சஞ்சய்குமாருக்கும், அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.

    கட்சியின் மாவட்ட செயலாளர் முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு, சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் சஞ்சய்குமார், அமிர்தாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

    திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அங்கு மணமக்கள் அளித்த புகாரில், 'வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாக திருமணத்துக்கு எதிர்ப்பு உள்ளதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என கூறி உள்ளனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு பவுனியா, இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.

    காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன' என கூறினார். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடியின் திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ காதல் ஜோடிகள் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர்.
    • ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.

    ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை. காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகத்தின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-

    பாஜக-வை சேர்ந்தவர்கள் ஆணவக் கொலைகள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறோம். மிகக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்து யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ காதல் ஜோடிகள் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர். தனிப்பட்ட முறையில் எனக்கே பலரைத் தெரியும். ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.

    நாம் சில இடங்களில் தந்தை, தாயை அழைத்து சொல்கிறோம். சில இடங்களில் பக்கத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டு சொல்கிறோம். நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

    ஒரு கட்சி அலுவலகம் என்பது எல்லோருக்கும், எல்லா சாதிக்கும், எல்லா மதத்துக்கும் பொதுவானது. நம்பி வருபவர்களை நாங்கள் வர வேற்கிறோம். பாஜக அலுவலகத்துக்கும் வாருங்கள், நாங்கள் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை.
    • சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் குறைந்தபாடில்லை.

    காதல் திருமணங்கள் முன்பை விட தற்போது அதிகரித்துள்ளன. ஆனாலும் காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் இன்னும் குறைந்தபாடில்லை.

    இந்நிலையில், சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் சிபிஎம் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை. காதலர்களுக்காக மார்க்ஸிஸ்ட் அலுவலகங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார். 

    • வாதி (25 வயது) மற்றும் மகேந்தர் ரெட்டி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பாலாஜி ஹில்ஸில் வசித்து வந்தனர்.
    • உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து வெளியே எடுத்துச் செல்ல ஆயத்தமானார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கர்ப்பிணி மனைவியை கணவன் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஐதராபாத் புறநகரில் உள்ள மேட்சல், மெடிபள்ளியில் பாலாஜி ஹில்ஸில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    விகாராபாத் மாவட்டம், காமரெட்டிகுடாவைச் சேர்ந்த ஸ்வாதி (22 வயது) மற்றும் மகேந்தர் ரெட்டி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    வேலை தேடி வந்த மகேந்தர் கர்ப்பமாக இருந்த மனைவி ஸ்வாதியை அழைத்துக்கொண்டு  28 நாட்களுக்கு முன்பு பாலாஜி ஹில்ஸில் குடியேறி உள்ளார். 

    இந்நிலையில்  மனைவி ஸ்வாதியை கணவர் மகேந்தர் நேற்று வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார்.

    ஸ்வாதியின் உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து  முசி நதியில் வீசியுள்ளார். ஸ்வாதியின் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டுள்ளன. 

    இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு ஸ்வாதியின் தலை, கைகள் மற்றும் கால்கள் அற்ற உடலை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். 

    இதைத்தொடர்ந்து மகேந்தரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருக்கின்றனர்.  

    • இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை.
    • நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை.

    சண்டிகர்:

    பஞசாப் மாநிலம் சண்டிகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மனக்பூர் ஷெரீப் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி முறை தவறி திருமணம் செய்து கொண்டதாக எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து இனி பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் ஜோடியினர் திருமணம் செய்ய தடை விதித்து கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யும் ஜோடி அந்த கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள பகுதிகளிலோ வசிக்க முடியாது.

    அவர்களுக்கு யாராவது அடைக்கலம் கொடுத்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கிராம தலைவர் தல்வீர் சிங் கூறும்போது, இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை ஆகும். நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை, ஆனால் எங்கள் கிராமத்தில் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

    கிராம கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    • உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
    • அப்போது சிலர் அவர்களை அடித்து முள் குச்சிகளால் குத்துவதும் வெளியான வீடியோவில் காணப்பட்டது.

    ஒடிசாவில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை சிலர் காளைகளைப் போல கலப்பையில் கட்டி வைத்து வயலை உழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ராயகடா மாவட்டத்தின் கஞ்சமாஜிரா கிராமத்தில் இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கு தண்டனையாக, அவர்கள் நுகத்தடியில் கட்டி வைக்கப்பட்டு காளைகளைப் போல வயலை உளுத்துள்னர். அப்போது சிலர் அவர்களை அடித்து முள் குச்சிகளால் குத்துவதும் வெளியான வீடியோவில் காணப்பட்டது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
    • இருவரும் மேஜர் என்பதால், போலீசார் மணமக்களை அனுப்பிவைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலை சுற்றி எந்நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும்

    இந்த நிலையில், இன்று காலை திருத்தணி கோவிலில் நடைபெற்ற திருமணம் சினிமா பட பாணியை மிஞ்சும் அளவுக்கு இருந்ததால் அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து பார்ப்போம்:-

    பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் உமாபதி (21). பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டா (19). இருவரும் ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். முதலில் நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலர்களாக மாறினர்.

    இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, இன்று காலை, திருத்தணி கோவிலுக்கு வந்த காதல் ஜோடி திருமணத்திற்கு தயாரான போது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மணக்கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி, "எங்களது மகளை கடத்தி வந்து கட்டாயத் திருமணம் செய்யப் பார்க்கிறாய்" என வாலிபரை நோக்கி கூச்சலிட்டனர்.

    இதையடுத்து, காதலியை அழைத்து சென்று விடுவார்கள் என்று உணர்ந்து உஷாரான காதலன், பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். ஒருபுறம் இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், திருத்தணி கோயில் சன்னதியில் திருமணம் செய்துக் கொண்டதாக காதல் ஜோடி தெரிவித்தது. இதையடுத்து, இருவரும் மேஜர் என்பதால், போலீசார் மணமக்களை அனுப்பிவைத்தனர்.

    • பர்கூர் போலீசார் குழந்தை திருமண வழக்கில் சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
    • ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கணவன், மனைவி உடலை மீட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியை சேர்ந்த குமார் (வயது 50). இவரது மனைவி கவிதா.

    தம்பதியின் 17 வயதுடைய மகள் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சிறுமிக்கு வாலிபருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

    காதல் திருமணம் செய்து கொண்ட சிறுமி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வாலிபரின் பகுதியில் எதிர்ப்புகள் கிளம்பின. இதன் காரணமாக குழந்தை திருமணம் செய்து வைத்ததாக கூறி பர்கூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பூச்சி மருந்து குடித்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

    பர்கூர் போலீசார் குழந்தை திருமண வழக்கில் சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

    வழக்கு பதிவு செய்யப்பட்டதால் முன் ஜாமின் பெற சென்னை ஐகோர்ட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு குமார், கவிதா இருவரும் திருப்பத்தூருக்கு வந்தனர்.

    மொளகாரன்பட்டி கீழ் குறும்பர் தெரு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றனர். விரக்தி அடைந்த தம்பதியினர் ரெயில் தண்டவாளத்தில் நின்றனர். அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்தனர். ரெயில் மோதியதில் குமார், கவிதா ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கணவன், மனைவி உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த கவினாஸ்ரீ என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் இளங்கலை பட்டதாரிகள்.

    இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரது அய்யர்சாமி-கவினாஸ்ரீ காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு தஞ்சமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த இருவீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசினர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர்.

    உடனே அங்கிருந்து பொது மக்கள் மற்றும் போலீசார் அவர்களிடமிருந்து காதல் ஜோடியை காப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 குடும்பத்தினரிடம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.

    • ஷப்னம் இந்து மதத்திற்கு மாறி ஷிவானி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
    • உ.பி., மதமாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள ஒரு மாநிலம்.

    உத்தரப் பிரதேசத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் தனது 2வது கணவனை உதறிவிட்டு 12 ஆம் வகுப்பு படிக்கும் காதலனை மதம்மாறி மூன்றாவதாக திருமணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடந்த ஒரு கோவில் விழாவில், மூன்று குழந்தைகளைக் கொண்ட 30 வயது பெண் ஒருவர் இந்து மதத்திற்கு மாறி 12 ஆம் வகுப்பு மாணவனை மணந்தார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஹசன்பூர் வட்ட அதிகாரி தீப் குமார் பந்த் கூறுகையில், அந்தப் பெண்ணின் பெயர் ஷப்னம். ஏற்கனவே இரண்டு முறை அவர் திருமணம் செய்து கொண்டார்.

    ஷப்னம் முதலில் மீரட்டில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் அவர் சைதன்வாலி கிராமத்தைச் சேர்ந்த தௌஃபிக்கை மணந்தார். தௌஃபிக் சில வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்துக்குப் பிறகு ஊனமுற்றார்.

    சமீபத்தில், 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயதுடைய பையனுடன் ஷப்னம்க்கு காதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஷப்னம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தௌஃபிக்கிடம் விவாகரத்து பெற்றார். பின்னர், ஷப்னம் இந்து மதத்திற்கு மாறி ஷிவானி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு 18 வயது காதலனை இன்று மணந்து கொண்டார்.

    உ.பி., மதமாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள ஒரு மாநிலம். வலுக்கட்டாயமாக, ஏமாற்றி அல்லது வேறு எந்த மோசடி வழிகளிலும் மத மாற்றத்தைத் தடை செய்கிறது. ஆனால் இந்த இவர்களின் விஷயத்தில் இதுவரை எந்த கட்டாயப்படுத்தலும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர்.
    • வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    ஆரணி:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி தமிழ் பிரியா. தம்பதியின் மகள் பூஜா (வயது 21). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 முடித்தார்.

    இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் சேர்ந்து நர்சிங் படித்தார். இதற்காக கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.

    அதே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சரண்ராஜ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரண்ராஜ் பெயிண்டர் வேலை மற்றும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். தன்னைவிட 2 வயது குறைவான வாலிபராக இருந்தாலும் சரண்ராஜ் மீது பூஜாவுக்கு காதல் மலர்ந்தது.

    அடிக்கடி தனிமையில் பேசி தங்களுடைய காதலை வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் பூஜாவின் பெற்றோருக்கு தெரிந்தது. தன்னுடைய மகள் படிப்பை கூட பார்க்காமல் பூஜாவை கும்மிடிப்பூண்டிக்கு அழைத்துச் சென்று விட்டனர். காதலனிடம் இருந்து தன்னை பிரித்து விட்டதால் பூஜா மனமுடைந்து காணப்பட்டார். எப்படியாவது காதலனை திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர். மகள் காணாமல் போனதாக தமிழ் பிரியா கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜாவை தேடி வந்தனர்.

    வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். காதலனை கரம் பிடித்த மகிழ்ச்சியில் இனி தங்கள் காதலுக்கு எதிர்ப்பு ஏற்படாது என்ற நினைப்பில் இருவரும் கஸ்தம்பாடி இலங்கை தமிழர் மறுவாழ் முகாமுக்கு வந்தனர்.

    இதற்கிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பூஜா காதலனுடன் பாதுகாப்பு கேட்டு ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த பூஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணிக்கு வந்தனர்.

    அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு 10 மீட்டருக்கு முன்பாக உள்ள ஒரு கோவில் அருகே மடக்கினர்.

    காரில் இருந்து காதல் ஜோடி இருவரையும் வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.

    சத்தம் கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலிருந்து போலீசார் வெளியே வந்தனர். அவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். பூஜாவின் உறவினர்கள் சரண்ராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் பூஜாவின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அடித்தனர். அவருடைய தாய் தமிழ் பிரியா பூஜாவின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து வீசினார்.

    போலீசார் கண்முன்னே சரண் ராஜை அடித்து தள்ளிவிட்டு பூஜாவை காரில் அழைத்து சென்றனர். காதல் மனைவியை மீட்க முடியாமல் சரண்ராஜ் அழுது துடித்தார். சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் சில நிமிடங்களில் அரங்கேறி விட்டது.

    பூஜாவை கஸ்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    காதல் கணவனிடம் இருந்து பிரித்ததால் பூஜா மனம் உடைந்தார். வாழ்வில் விரக்தி அடைந்த அவர் உடல் முழுவதும் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய உடலில் தீப்பற்றி எரிந்தது. வலியால் அலறி துடித்தார். அவருடைய குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 70 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பூஜாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா நேற்று பரிதாபமாக இறந்தார்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு பூஜாவின் உடல் கும்மிடிப்பூண்டியில் உள்ள அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து களம்பூர் போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி அனைத்து மகளிர் போலீசார் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். நெஞ்சை பதற வைத்த இந்த காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவம் நடந்தது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு நாங்கள் தகவல் தெரிவித்துவிட்டோம் அவர்கள் வரவில்லை நாங்கள் என்ன செய்வது என அனைத்து மகளிர் போலீசார் தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்தவிதமான தகவலும் தங்களுக்கு வரவில்லை என ஆரணி டவுன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் காதல் ஜோடி தாக்கப்படுவதை தடுத்து இருந்தால் இளம்பெண் உயிரிழப்பு நடந்திருக்காது இது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    காதல் திருமணம் செய்த இளம்பெண் அணிந்து இருந்த தாலியை கழட்டி வீசிய காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பிரிக்கப்பட்ட காதலி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த சரண்ராஜ் விரக்தியில் உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×