என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை வழக்கு"

    • அனிதா மற்றும் அவரின் 5, 4 மற்றும் 3 வயதுடைய மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
    • நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அனிதா (27) என்ற பெண் தனது கணவர் முன்சுன் கெவாட் மற்றும் 5, 4 மற்றும் 3 வயதுடைய மூன்று மகள்களுடன் டெல்லியில் வசித்து வந்தார்.

    முன்சுன் கெவாட் ஆசாத்பூர் மண்டியில் காய்கறி வியாபாரியாகப் பணியாற்றி வந்தார். அனிதா 2 மாத கர்பிணியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை 8:07 மணியளவில் காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அனிதா மற்றும் அவரின் 3 மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

    நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்திற்குப் பிறகு பெண்ணின் கணவரான முன்சுன் கெவாட் தலைமறைவாகியுள்ளார். அவரே இந்த கொலையை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

    கொலை செய்வதற்கு முன்னதாக, மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கணவர் மது அருந்தச் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆண் குழந்தை இல்லை என்ற ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் புலனாகி உள்ளது.

    கொலை வழக்குப்பதிந்த போலீசார் தலைமறைவான முன்சுன் கெவாட்டை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • வீட்டில் தந்தை பிரதாப் சிங் உரிமம் பெற்று வாங்கி வைத்திருந்த ரைபிளை எடுத்து அவரை சுட்டுக் கொன்றார்.
    • விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என தங்கையை அக்ஷத் மிரட்டியுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக் லக்னோவில் நீட் தேர்வு அழுத்தத்தால் 21 வயது இளைஞன் தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    லக்னோவின் ஆஷியானா பகுதியில் மருத்துவ பரிசோதனை மையம் நடத்தி வந்தவர் பிரதாப் சிங் (49). இவரது மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் மகன் மற்றும் மகள் உடன் வசித்து வந்தார்.

    தனது 21 வயது மகன் அக்ஷத்தை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு படிக்க சொல்லி பிரதாப் சிங் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

    இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 20 அன்று வீட்டில் இருவரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அக்ஷத்தின் தங்கையும் அங்கு இருந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் ஆத்திரத்தை அடக்க முடியால் அக்ஷத், வீட்டில் தந்தை பிரதாப் சிங் உரிமம் பெற்று வாங்கி வைத்திருந்த ரைபிளை எடுத்து அவரை சுட்டுக் கொன்றார்.

    மேலும் தங்களை கண் முன்னேயே உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். சில உடல் பாகங்களைச் சதரோனா கிராமம் அருகே வீசிவிட்டு, மீதமுள்ளவற்றை வீட்டில் இருந்த நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் மறைத்து வைத்துள்ளார்.

    இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என தங்கையை அக்ஷத் மிரட்டியுள்ளார்.

    பிரதாப் சிங்கை காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அக்ஷத்தின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

    டிரம்மில் வைக்கப்பட்டிருந்த உடலின் பாகங்களை போலீசார் மீட்ட நிலையில் நேற்று அக்ஷத் கொலை வழக்கில் கைது செய்யபட்டார்.  

    • கார் டிரைவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த மகளால் ஆத்திரம்!
    • கார் டிரைவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததால் பழிக்கு பழி நடந்த கொலை?

    சூர்யா - ஜோதிகா நடித்த மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து "கடவுள் தந்த அழகிய வீடு" என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை விஷ்ணு பிரியா. சென்னை திருவான்மியூரை சேர்ந்த சூர்ய நாராயணன் என்பவரின் மகளான நடிகை விஷ்ணு பிரியாவுக்கு ரமேஷ் கிருஷ்ணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இதனிடையே, கணவர் ரமேஷ் கிருஷ்ணாவுக்கு உடல்நலம் பாதித்ததையடுத்து, சிகிச்சைக்காக தந்தையுடன் கொடைக்கானல் சென்றார். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பின்புறம் தந்தைக்கு சொந்தமான பங்களாவில் தங்கி 2018-ம் ஆண்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அப்போது கார் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அந்த உறவில் இருந்து வெளிவற தந்தை சூர்ய நாராயணன் பலமுறை அறிவுறுத்தியும், டிரைவர் பிரபாகரனுடனான விஷ்ணு பிரியாவின் உறவு தொடர்ந்து நீடித்துள்ளது.

    இந்தநிலையில் டிரைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்படார். விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்ய நாராயணன்தான் கூலிப்படையை ஏவி பிரபாகரனை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்ய நாராயணன், ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    இந்த நிலையில்தான் சூர்ய நாராயணன் கொடைக்கானலில் உள்ள அவரது தங்கும் விடுதியுடன் கூடிய பங்களாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, சூர்ய நாராயணனின் பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் என்பவர், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்துவந்த கொடைக்கானல் போலீசார், சூர்ய நாராயணனின் பங்களாவிற்குள் செல்ல முயன்றபோது வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது.

    பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றபோது, பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் மற்றும் முரளி ஒரு அறையில் இருந்துள்ளனர். மற்றொரு அறையில், நாற்காலியில் அமர்ந்தபடி உடல் முழுவதும் டேப் சுற்றப்பட்ட நிலையில் சூர்ய நாராயணன் சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறுமுகம் மற்றும் முரளியிடம் விசாரணையை தொடங்கினர். 2 நாட்களுக்கு முன்னர், கோயம்புத்தூரைச் சேர்ந்த 5 பேர் விடுதிக்கு தங்க வந்ததாக அவர்கள் கூறினர். மேலும், 5 பேரும் ஆவணங்கள் ஏதும் கொடுக்காமல் விடுதியில் தங்கியதும், விடுதியை விட்டு அவர்கள் 2 தினங்களாக வெளியில் எங்கும் செல்லாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கடந்த சனிக்கிழமை மாலை, ஆறுமுகம் மற்றும் முரளியை கை, கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்த அந்த கும்பல், மறு அறையில் சூர்ய நாராயணனை நாற்காலியில் அமரவைத்து, உடல் முழுவதும் டேப்பை இறுக்கமாக சுற்றியுள்ளனர். இதில் சூர்ய நாராயணன் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், 5 பேர் கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. அப்போது விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றதோடு, சூர்ய நாராயணன், ஆறுமுகம், முரளி ஆகியோர் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றதாக சொல்லப்படுகிறது.

    இதில் நெடுநேரம் போராடி, ஆறுமுகம் கயிற்றை சிறிது கழற்றி காப்பாற்றுமாறு கூச்சலிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டிரைவர் பிரபாகரன் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கவே சூர்ய நாராயணன் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தக்கொலை பழிதீர்க்க நடத்தப்பட்டதா? இல்லை நகைக்காக நடத்தப்பட்டதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வழிப்பறியில் ஈடுபட்டு தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக அன்ஷுல் போலீசுக்கு போன் செய்துள்ளார்.
    • முதலில் கழுத்தை நெரித்தும், பின்னர் கத்தரிக்கோலால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் மஹக் (27). இவரின் கணவர் அன்ஷுல் தவான், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக உள்ளார். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 25, 2025 அன்று திருமணம் நடைபெற்றது.

    மஹக் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14, சனிக்கிழமை அன்று தம்பதியினர் குருகிராமிலிருந்து அன்ஷுலின் சொந்த ஊரான ஹிசாரிற்கு சென்றுள்ளனர்.

    அங்கு காதலர் தினத்தை அவர்கள் கொண்டாடிவிட்டு, அடுத்த நாள் பிப்ரவரி 15 ஹன்சியில் உள்ள மஹக்கின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

    அன்று மாலை 7 மணி அளவில் இருவரும் மீண்டும் குருகிராமிற்கு காரில் புறப்பட்டுள்ளனர்.

    ஆனால், வழியில் ஜஜ்ஜார் அருகே உள்ள பசோளர் கிராமத்தின் அருகே ஒரு ஒதுக்குப்புறமான பாதையில் சிலர் வழிப்பறியில் ஈடுபட்டு தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக அன்ஷுல் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    அன்ஷுல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

    தீவிர விசாரணைக்குப் பிறகு அன்ஷுல் தானே மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அன்றைய தினம் காரில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதலில் கழுத்தை நெரித்தும், பின்னர் கத்தரிக்கோலால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக  தெரிவித்துள்ளார்.

    தடயங்கள் சிக்காமல் இருக்க கையுறைகளை அணிந்து இக்கொலையைச் செய்துள்ளார். காவல்துறையினர் அன்ஷுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அடையாளம் காணப்பட்டார்.
    • தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் வீசியுள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிஷத்புரா பகுதியில் கமல் நகர் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, இங்குள்ள ஒரு செப்டிக் டேங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    செப்டிக் டேங்கிற்குள் சோதனை செய்தபோது, ஒரு இரும்புப் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவைச் சேர்ந்த அஷ்ரபி என்று அடையாளம் காணப்பட்டார்.

    போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

    மத்தியப் பிரதேசத்தை சமீர் கான் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், அஷ்ரபிக்கும் ஓராண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அஷ்ரபி போபாலில் சமீருடன் வசித்து வந்துள்ளார்.

    ஏற்கனவே திருமணமான சமீரைத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அஷ்ரபி வற்புறுத்தியதாகவும், பணம் தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சமீர், கடந்த பிப்ரவரி 7 இல் அஷ்ரபியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

    கொலைக்குப் பிறகு, தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் சடலத்தை ஒரு இரும்புப் பெட்டிக்குள் திணித்து, வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்கிற்குள் சமீர் வீசியுள்ளார்.

    இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி சமீர் கான் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • பெண்ணைக் காதலித்து வந்தபோதும், ஷிபாவுடனும் உறவைத் தொடர்ந்துள்ளார்.
    • குண்டு, ஷிபாவின் கன்னம் வழியாகப் பாய்ந்து மண்டை ஓட்டுக்குள் சிக்கிக் கொண்டது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் சிவாஜி நகரைச் சேர்ந்தவர் 19 வயதான ஷிபா ஷேக். இவர் ஒரு இளைஞரைக் காதலித்து வந்தார்.

    அந்த இளைஞர் ஏற்கனவே 25 வயதுடைய மற்றொரு பெண்ணைக் காதலித்து வந்தபோதும், ஷிபாவுடனும் உறவைத் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்ததும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்த 25 வயதுப் பெண், ஷிபாவை பேசுவதற்காக புர்கானியா மசூதி அருகே வருமாறு அழைத்துள்ளார்.

    அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தப் பெண் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஷிபாவை சுட்டுவிட்டுத் தப்பியோடினார்.

    தோட்டா ஷிபாவின் கன்னம் வழியாகப் பாய்ந்து மண்டை ஓட்டுக்குள் சிக்கிக் கொண்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் ஷிபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியான 25 வயது பெண்ணையும், அவருக்கு உதவியாக இருந்த 23 வயது இளைஞர் ஒருவரையும் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • ஓய்வுபெற்ற கடற்படை கேப்டன், பல் மருத்துவரான தனது மனைவியுடன் வசித்து வந்தார்
    • தங்களால் அவ்வளவு பணத்தைத் தர முடியாது என்று கூறினர்.

    ஸ்டார்ட்அப் தொழிலுக்குப் பணம் தராததால் பெற்ற தாய் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரங்கேறி உள்ளது.

    பெங்களூரு விஞ்ஞான் நகர் பகுதியில் ஓய்வுபெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திர பட் (60), பல் டாக்டரான அவரது மனைவி ஷியாமளா பட் (55) உடன் வசித்து வந்தார்.

    இவர்களின் மகன் ரோகன் சந்திர பட் (33), அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு திரும்பினார்.

    பெங்களூருவிலேயே புதிதாக ஸ்டார்ட்அப் தொழில் தொடங்க விரும்பிய அவர் முதலீட்டைத் திரட்ட முடியாமல் இருந்த நிலையில் பெற்றோரிடம் நிதி உதவி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

    ஆனால் தங்களால் அவ்வளவு பணத்தைத் தர முடியாது என்று பெற்றோர் கூறியதால் ஆத்திரத்தில் இருந்த ரோகன், அவர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

    இதனால் சில காலத்திற்கு முன்பு ரோகன் சந்திர பட், வர்த்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தனியாக வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று,  தாய், தந்தை வீட்டுக்கு சென்ற ரோகன் சந்திர பட், காலை 8 மணியளவில் அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், காயமடைந்த தம்பதியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் ரோகன் சந்திர பட்-ஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • எப்ஸ்டீன் கோப்பு தொடர்பாக தந்தையிடம் கேள்வி கேட்ட மகள்
    • ஒருவேளை நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருந்தால் எனக் கேள்வி கேட்ட மகள் பலி.

    அமெரிக்காவின் டெக்சாஸில் வசித்து வருபவர் கிரிஸ் ஹாரிசன். இவரது 23 வயது மகள் லூசி ஹாரிசன் தந்தையை சந்திப்பதற்காக தனது காதலன் சாம் லிட்லர் உடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

    கிரிஸ் ஹாரிசன் வீட்டின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஒன்றை வாங்கி வைத்துள்ளார். ஆனால் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிரான லூசி இதை அறிந்தததும் கோபம் அடைந்துள்ளார்.

    கடந்த ஜனவரி 10 அன்று காலை துப்பாக்கி கலாச்சாரம் குறித்தும், டொனால்ட் டிரம்ப் குறித்து தந்தைக்கும் மகளுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    டிரம்ப் குறித்து எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தகவல்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "ஒருவேளை நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?" என்று லூசி தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு, "எனக்கு இன்னும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள், அதனால் எனக்கு அவ்வளவு பெரிய பாதிப்பு இருக்காது" என்று கிரிஸ் பதிலளித்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த லூசி தனது அறைக்குச் சென்றுள்ளார்.

    வாக்குவாதம் நடந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, கிரிஸ் தனது மகள் லூசியைத் தனது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அடுத்த சில நொடிகளிலேயே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

    காதலன் லிட்லர் ஓடிச் சென்று பார்த்தபோது, லூசி நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

    தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை மகளிடம் காட்ட முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது வெடித்ததாகக் கிரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    கிரிஸ் முன்னதாக மதுவுக்கு அடிமையாக இருந்தவர் என்பதும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.

    சம்பவத்தன்று அவர் 500 மி.லி. வெள்ளை ஒயின் அருந்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. லூசியின் காதலன் சாம் லிட்லர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

    13 வயது சிறுமியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • சந்தன் குமார் டொராண்டோவில் ஒரு கன்னட சங்கத்தை உருவாக்கி நடத்தி வந்துள்ளார்.
    • நாடு திரும்பிவிடுமாறு நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் கேட்கவில்லை.

    கனடாவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    37 வயதான சந்தன் குமார் கர்நாடகாவின் பெங்களூரு புறநகப் பகுதியான நெலமங்களாவின் தியாமகொண்ட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 6-7 ஆண்டுகளாகக் கனடாவில் பிராம்ப்டன் பகுதியில் ஐ. டி. ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை டொராண்டோவில் உள்ள வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.

    துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த சந்தன் குமார், மீட்கப்பட்டபோதும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சந்தன் குமார் டொராண்டோவில் ஒரு கன்னட சங்கத்தை உருவாக்கி நடத்தி வந்துள்ளார். இந்தச் சங்கத்தை அமைத்ததே அவரது கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.

    சாந்தன் குமாரின் தந்தை தந்தை நந்தகுமார் பேசுகையில், "கனடா சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், நாடு திரும்பிவிடுமாறு நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டோம்.

    ஆனால் அவர் கேட்கவில்லை. இப்படி ஒரு கொடுமை நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை" என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

    தனது மகனின் உடலை இந்தியா கொண்டு வந்து இறுதிச் சடங்குகளைச் செய்ய மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் இறந்துவிட்டனர்.
    • ஒரு தலைமுறையைத் தாண்டி நீடிக்கும் கிரிமினல் வழக்கு நடைமுறையே ஒரு தண்டனையாக மாறிவிடுகிறது.

    40 ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபரை நிரபராதி என நீதிமன்றம் தற்போது விடுத்துள்ளது.

    விடுவிக்கப்பட்ட தானி ராம்-க்கு தற்போது வயது 100. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் தானி ராம். 1982-ஆம் ஆண்டு ஒரு நிலத் தகராறில் நடந்த கொலை தொடர்பாக தானி ராம் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    1984-ஆம் ஆண்டு ஹமிர்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

    தண்டனையை எதிர்த்து 1984-லேயே தானி ராம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதே ஆண்டு அவருக்கு ஜாமீனும் கிடைத்தது.

    இருப்பினும், அவரது மேல்முறையீட்டு மனு கடந்த 40 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் இறந்துவிட்டனர்.

    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்திர தாரி சிங் மற்றும் சஞ்சீவ் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, தானி ராமை விடுவித்து நீதிபத்திகள் உத்தரவிட்டனர்.

    ஒரு தலைமுறையைத் தாண்டி நீடிக்கும் கிரிமினல் வழக்கு நடைமுறையே ஒரு தண்டனையாக மாறிவிடுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.   

    • சிறு விஷயத்துக்காக சிவம் குப்தாவிற்கும், உணவு டெலிவரி செய்யும் 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • இதில் அவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    டெல்லியில் உணவு டெலிவரி ஊழியர்கள் தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவம் குப்தா (36).

    கடந்த ஜனவரி 3 இரவு, டெல்லியின் மிகவும் நெரிசலான பகுதியான Connaught Place-இல் சிறு விஷயத்துக்காக சிவம் குப்தாவிற்கும், உணவு டெலிவரி செய்யும் 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், தங்கள் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டுகளால் சிவம் குப்தாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 16 நாட்கள் உயிருக்குப் போராடிய சிவோம் குப்தா, சிகிச்சை பலனின்றி ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்தார்.

    சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, 2 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மூன்றாவது நபரைத் தேடி வருகின்றனர்.

     

    • அவர்கள் கை கால்களைப் பிடித்துக் கொள்ள, ஜோதி அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
    • மஃப்லரைப் பயன்படுத்தி அவரது உடலை ஜன்னல் கம்பியில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் யாதவ் (33). இவர் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.

    இவர் ஜோதி என்ற பெண்ணை கடந்த 9 வருடங்களாக காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்தின் பின் ஜோதிக்கும் ஜிதேந்திரனுக்கும் இடையே அடிக்கடி பணப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    ஜனவரி 26 அன்று ஏற்பட்ட தகராறின் போது, ஜோதி தனது பெற்றோர் மற்றும் சகோதரரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

    அவர்கள் ஜிதேந்திரனின் கை கால்களைப் பிடித்துக் கொள்ள, ஜோதி ஆவேசத்தில் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

    ஜிதேந்திரன் இறந்தவுடன், இது தற்கொலை என்று நம்ப வைப்பதற்காக, ஒரு மஃப்லரைப் பயன்படுத்தி அவரது உடலை ஜன்னல் கம்பியில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.

    பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி நாடகமாடியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

    பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து நடத்திய விசாரணையில் ஜோதி உண்மையை ஒப்புக்கொண்டார். ஜோதி மற்றும் அவரது பெற்றோரைக் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜோதியின் சகோதரர் தீபக்கைத் தேடி வருகின்றனர். 

    ×