என் மலர்
மகாராஷ்டிரா
- நண்பர்களுடன் விளையாட சென்றதால், வேலைக்கு தாமதமாக வந்தான்
- நியாயம் கேட்க சென்ற அனைவரையும் சீதாராம் அவமதித்து விரட்டியடித்தார்
மகாராஷ்டிர மாநிலத்தின் கொங்கன் பகுதியில் உள்ளது பல்கார் நகரம்.
இங்குள்ள கம்லோலி கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திர சீதாராம் பாட்டில். இவர் தனது வீட்டில், வீட்டு வேலைகளை செய்வதற்கு ஒரு 13 வயது சிறுவனை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியிருந்தார். அந்த சிறுவனும் அதே கிராமத்தில் வசித்து வந்தான். பல வருடங்களுக்கு முன்பே அச்சிறுவனின் தாயார் இறந்து விட்டார். அவன் தந்தை காசநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குடும்ப வறுமையை குறைக்க அவன் வேலைக்கு சென்றான்.
அவனுக்கு ராஜேந்திர சீதாராம் தனது வீட்டிலேயே தங்கும் வசதியுடன் மாத சம்பளமாக ரூ.1100 அளித்து வந்தார்.
மூன்று தினங்களுக்கு முன் விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தை காண சென்ற அந்த சிறுவன் வரும் வழியில் அவனது நண்பர்களை கண்டதும் அவர்களுடன் விளையாட சென்றான். அதனால் ராஜேந்திராவின் வீட்டிற்கு வேலைக்கு வருவதற்கு தாமதமாகி விட்டது.
அவன் தாமதமாக வந்ததால் கோபமடைந்த ராஜேந்திர சீதாராம், அவனை சரமாரியாக அடித்தார். அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற அச்சிறுவன் தனது தந்தையிடம் புகாரளித்தான். இதனையடுத்து அவன் தந்தையும், சில கிராமவாசிகளும் சீதாராமிடம் காரணம் கேட்க சென்றனர். ஆனால், அவர்களையும் ராஜேந்திர சீதாராம் தகாத வார்த்தைகளை கூறி விரட்டி விட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் காவல்துறையினரிடம் சென்று புகாரளித்தனர்.
விசாரித்த காவல்துறை அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளில் சீதாராம் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவரை இதுவரை கைது செய்யாத காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த காயங்களடைந்த அந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
- ஆப்பிள் ‘ஐ போன்’ விற்பனை நிலையத்தில் மணிக்கணக்கில் வாடிக்கையாளர்கள் திரண்டதால் முதல் போனை வாங்க நீண்ட வரிசையில் காத்து நிற்க தொடங்கினர்.
- அகமதாபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மும்பையில் 17 மணி நேரம் வரிசையில் காத்து நின்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் ‘ஐ போன்-15’- ஐ வாங்கி உள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வரிசையில் 'ஐ போன்-15' நேற்று இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. மும்பை, டெல்லியில் உள்ள ஆப்பிள் 'ஐ போன்' விற்பனை நிலையங்களில் இந்த விற்பனை தொடங்கிய நிலையில், புதிய 'ஐ போன்'-ஐ வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் முதலே குவியத்தொடங்கினர்.
குறிப்பாக மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஆப்பிள் 'ஐ போன்' விற்பனை நிலையத்தில் மணிக்கணக்கில் வாடிக்கையாளர்கள் திரண்டதால் முதல் போனை வாங்க நீண்ட வரிசையில் காத்து நிற்க தொடங்கினர்.
அந்த வகையில், அகமதாபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மும்பையில் 17 மணி நேரம் வரிசையில் காத்து நின்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் 'ஐ போன்-15'- ஐ வாங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நேற்று மாலை 3 மணி முதல் இங்கு இருக்கிறேன். இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரில் முதல் 'ஐ போன்'-ஐ பெறுவதற்காக 17 மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன். நான் அகமதாபாத்தில் இருந்து இதற்காக வந்துள்ளேன். முதல் நாளிலேயே இந்த போனை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
- நாக்பூர் விமான நிலைய பகுதியில் இன்று காலை 5.30 மணி வரை 10.6 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்பஜாரி ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் அதனை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
நாக்பூர்:
மகாராஷ்டிராவில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில் நாக்பூர் நகரில் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாமல் கொட்டிய இந்த மழையால் நாக்பூர் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. அந்த நகரில் உள்ள அம்பஜாரி ஏரி நிரம்பியது.
பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் தவிப்புக்குள்ளானார்கள். நாக்பூரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.
சாலைகளில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
நாக்பூர் விமான நிலைய பகுதியில் இன்று காலை 5.30 மணி வரை 10.6 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, நாக்பூர் நகரில் மழை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்பஜாரி ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் அதனை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நகரின் பிற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்க பல குழுக்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது என்றார்.
நாக்பூரில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடக்கிறது. நள்ளிரவு முதல் பெய்த மழை அந்நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
இதற்கிடையே நாக்பூர் பண்டாரா, கோண்டியா மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெங்காய வியாபாரிகள் போராட்டத்தை தள்ளிவைத்தனர்.
- விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்த வெங்காய மூட்டைகள் சந்தைகளில் தேங்கி கிடந்தன.
மும்பை:
நாட்டில் வெங்காய பற்றாக்குறையை சமாளிக்க, அதன் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை மத்திய அரசு கடந்த மாதம் விதித்தது. இதற்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வெங்காய சந்தைகளில் ஏலம் நிறுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள லசல்காவ் சந்தை இந்திய அளவில் பெரிய வெங்காய சந்தையாகும்.
மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெங்காய வியாபாரிகள் போராட்டத்தை தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இதுவரை தங்களது கோரிக்கை நிறைவேறாததை கண்டித்து நாசிக் மாவட்ட சந்தைகளில் வெங்காய ஏலம் நேற்று முன்தினம் மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்த வெங்காய மூட்டைகள் சந்தைகளில் தேங்கி கிடந்தன.
வியாபாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக வெங்காய வினியோகம் பாதிக்கப்பட்டு சில்லறை கடைகளில் விலை உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நாசிக் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து விவசாய விளைபொருள் சந்தை குழுக்களுக்கு (ஏ.பி.எம்.சி) உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் லைசென்ஸ் ரத்து அல்லது இடைநீக்கம் செய்யப்படும் என்று எச்சரித்து உள்ளார்.
இதுபற்றி நாசிக் மாவட்ட பொறுப்பு மந்திரி அப்துல் சத்தார் கூறுகையில், "20-ந் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் மற்றும் தரகர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதன் காரணமாக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
- நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.
- வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.
மும்பை:
கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று 'சாக்லேட்' அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.
அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏற்காமல் இருப்பது, அவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
அதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவர்களது இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக, சாக்லேட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் சில்லரை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.46 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் சில்லரைக் கடன் அளிப்பு ரூ.10,34,111 கோடியாக இருந்தது.
- சாண்ட்ஹர்ஸ்ட் சாலை மற்றும் மஸ்ஜித் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்ற போது நடன காட்சியை வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
- நடன வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகள் அத்துமீறிய காட்சிகள், காதல் ஜோடிகள் முத்தமழை பொழிந்த வீடியோ போன்றவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.
இதைத்தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு சில எச்சரிக்கைகளை வழங்கியது. இந்நிலையில் தற்போது மும்பையில் பயணிகள் ரெயில் ஒன்றில் இளம்பெண் ஒருவர் 'பெல்லி' நடனமாடிய வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
சாண்ட்ஹர்ஸ்ட் சாலை மற்றும் மஸ்ஜித் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்ற போது இந்த நடன காட்சியை வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நடன வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பொது இடங்களில் இவ்வாறு நடந்து கொள்ளும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை போலீசாரை வலியுறுத்தி சில பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
- முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது.
- இதில் கலந்து கொள்ள பல்வேறு பாலிவுட் நடிகர், நடிகைகள் வருகை தந்தனர்.
மும்பை:
ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு மும்பையில் பிரமாண்ட வீடு உள்ளது. அன்டிலியா இல்லம் என அழைக்கப்படும் இந்த வீடு மொத்தம் 27 மாடிகளைக் கொண்டது. நீச்சல் குளம் முதல் ஹெலிபேட் வரை பல்வேறு ஆடம்பர வசதிகள் இங்கு உள்ளன.
இந்நிலையில், இந்த அன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் வருகை தந்தனர்.
நடிகர் சல்மான் கான், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக் நடிகை ரேகா, ஹேமமாலினி, தீபிகா படுகோன், ஜெனிலியா, அனன்யா பாண்டே, கரீஷ்மா கபூர், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரேவும் வருகை தந்தனர்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஜவான் திரைப்பட இயக்குனர் அட்லி, அவரது மனைவி பிரியா ஆகியோரும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
- வர்த்தக சந்தை பாதிப்பு காரணமாகவே உள்நாட்டு சம்பளம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- வருவாய் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களை ஐ.ஐ.டி. நிறுவனம் வெளியிடவில்லை.
மும்பை:
மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூ சமீபத்தில் நடைபெற்றது.
வழக்கமாக ஐ.ஐ.டி. பாம்பே கல்லூரியில் கேம்பஸ் வேலைவாய்ப்பில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அதிகபடியான மாணவர்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு தேர்வாவார்கள்.
அதே போல இந்த ஆண்டும் கேம்பஸ் இண்டர்வியூவில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டன.
பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த முகாமில் சர்வதேச நிறுவனங்களில் சுமார் 300 வேலை வாய்ப்புகள் இருந்தது. இந்த இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் 194 இடங்கள் மாணவர்களால் நிரப்பப்பட்டது.
இதில் ஐ.ஐ.டி.-பம்பாய் இன்ஸ்டிடியூட் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதன் மூலம் அந்த பட்டதாரி சர்வதேச வேலைவாய்ப்பில் இதுவரை இல்லாத அளவில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதே போல உள்நாட்டு வேலைவாய்ப்பில் அதிக வருவாயாக ரூ.1.7 கோடி சம்பளத்தில் ஒரு மாணவருக்கு வேலை கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஐ.ஐ.டி. பாம்பே கல்லூரியில் மிக உயர்ந்த சர்வதேச வேலைக்கான வருடாந்திர சம்பளம் ரூ.2.1 கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது அதை விட அதிகமாகவும் இதுவரை இல்லாத அளவிலும் ஆண்டு சம்பளம் ரூ.3.7 கோடி கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது.
அதே நேரம் கடந்த ஆண்டு உள்நாட்டு சம்பளத்தில் அதிகபட்சம் ரூ.1.8 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது ரூ.1.7 கோடியாக குறைந்துள்ளது. வர்த்தக சந்தை பாதிப்பு காரணமாகவே உள்நாட்டு சம்பளம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர ஆண்டு சம்பளம் ரூ.1 கோடிக்கு மேல் 16 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த வருவாய் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களை ஐ.ஐ.டி. நிறுவனம் வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரையில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூ முகாம்களில் மொத்தம் 2,174 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,845 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 1,516 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
- இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலிய அணி வரும் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு முதல் இரண்டு ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
- மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன
- மகாராஷ்டிரா மாநில அரசுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிட இருக்கிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளை நான் கழுகுகள் என்று அழைக்கமாட்டேன். ஆனால், காட்டில் சிங்கத்திற்கு எதிராக செம்மறி மற்றும் ஆடுகள் ஒன்றிணைந்து சண்டையிட முடியாது. சிங்கம் எப்போதும் சிங்கம்தான். அது காட்டில் ஆளும் மன்னராக திகழும்.
பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதை மட்டுமே எதிர்க்கட்சிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், எதிர்க்கட்சிகளால் எந்த வகையிலும் போரிட முடியும் என்று நான் பார்க்கவில்லை. அஜித் பவார் எங்களுடன் இணைந்த பிறகு, எம்.எல்.ஏ. ஆதரவு 215 அதிகரிகத்துள்ளது. மாநில அரசுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்தியா பெயர் வைத்ததற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதாவினர், மற்றும் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். மத்திய அரசு இந்தியா நாட்டின் பெயரை பாரத் என மாற்ற திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை இடங்கள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. உ.பி.க்கு அடுத்தபடியாக மக்களவை தொகுதிகளை அதிக அளவில் கொண்ட பெரிய மாநிலம் மகாராஷ்டிரா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.