என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் உதவித்தொகை"
- 21 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்குகிறது.
- நான்கு சக்கர வாகனம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1.62 லட்சம் பெண்களும் பலன் பெற்றுள்ளனர்.
மகாராஷ்டிராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்காக தொடங்கப்பட்ட "லட்கி பஹின் யோஜனா" திட்டத்தில் பெரும் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைநடத்திய தணிக்கையில், 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து, 21.44 கோடி ரூபாய் நிதி பலன்களைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த 21 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்குகிறது.
இந்நிலையில் 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து, ரூ.21.44 கோடி பெற்றுள்ளனர். இந்தத் தொகை அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில், தகுதியற்றவர்கள் அதிகம் சேர்ந்ததால், ரூ.1,640 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண்களுக்கு மட்டுமே பலன் என்ற விதி இருந்தும், 7.97 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மூன்றாவது உறுப்பினர்களாகப் பதிவு செய்து, ரூ.1,196 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
65 வயதுக்கு மேற்பட்ட 2.87 லட்சம் பெண்கள் பலன் பெற்றுள்ளனர். இதனால் ரூ.431.7 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நான்கு சக்கர வாகனம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1.62 லட்சம் பெண்களும் பலன் பெற்றுள்ளனர்.
இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூன் 2025 முதல், சுமார் 26.34 லட்சம் தகுதியற்ற பயனாளிகளுக்கு திட்டப் பலன்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 2.25 கோடி தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஜூன் மாதத்திற்கான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அதிதி தட்கரே தெரிவித்துள்ளார்.






