என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா"

    • கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
    • மரணத்திலும் எங்கள் காதல் வென்றது; என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர் என்று அன்சல் கூறினார்.

    மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்துடன் காதலி திருமணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் நானந்த் பகுதியை சேர்ந்த 20 வயது சக்ஷம் டேட் மற்றும் அன்சல் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அன்சலின் குடும்பத்தினர் இவர்களது காதலை கடுமையாக எதிர்த்தனர்.

    எதிர்ப்பை மீறி சக்ஷமைத் திருமணம் செய்துகொள்ள அன்சல் முடிவெடுத்ததை அறிந்த அவரது தந்தையும் சகோதரர்களும், வியாழக்கிழமையன்று சக்ஷமைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.

    சக்ஷமின் இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, அன்சல் அவர் வீட்டிற்குச் சென்றார்.

    அவர் சக்ஷமின் உடலுக்கு மஞ்சள் பூசி, தன் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு இறந்த காதலனை திருமணம் செய்து கொண்டார்.

    அப்போது, சக்ஷமின் மரணத்திலும் எங்கள் காதல் வென்றது; என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர் என்று கூறிய அன்சல், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மேலும் சக்ஷமின் வீட்டிலேயே மருமகளாகத் தன் வாழ்நாள் முழுவதும் வாழப்போவதாகவும் அவர் சபதம் எடுத்துள்ளார்.

    கொலை வழக்கில் அன்சல் உடைய தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட 6 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

    • ஐஐடி மெட்ராஸ் அதன் பெயரை மாற்றவில்லை, அது இன்னும் ஐஐடி மெட்ராஸ் தான்
    • மும்பை என்ற பெயரை அவர்கள் வெறுக்கிறார்கள், ஏனென்றால் அது மும்பா தெய்வத்தின் பெயர்.

    மகாரஷ்டிராவின் ஐஐடி பாம்பேயில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசிய கருத்துக்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஐஐடி பாம்பே நிகழ்ச்சியில் பேசிய ஜிதேந்திர சிங், "கடவுளுக்கு நன்றி, ஐஐடி பாம்பே இன்னும் அதே பெயரைக் கொண்டுள்ளது. நீங்கள் அதை ஐஐடி மும்பை என்று மாற்றவில்லை. அதேபோல், ஐஐடி மெட்ராஸ் அதன் பெயரை மாற்றவில்லை, அது இன்னும் ஐஐடி மெட்ராஸ் தான்" என்று கூறினார்.

    இந்நிலையில் இதுகுறித்து பேசிய ராஜ் தாக்கரே, "இப்போதுதான் அவர்களின் மனநிலை வெளிப்பட்டுள்ளது. அவர்கள் மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பறிக்க விரும்புகிறார்கள். மும்பை மராத்தியர்களுக்குச் சொந்தமானது. எங்கள் மும்பை மராத்தியர்களிடம் இருக்கும்.

    பல ஆண்டுகளாக சிலரின் ஆசை இப்போது வெளிவந்துள்ளது. ஜிதேந்திர சிங்குக்கு மும்பையுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதைச் சொல்வதன் மூலம், அந்த கட்சியின் உயர் மட்ட கைதட்டலைப் பெறுவதே இதன் நோக்கம்.

    மும்பை என்ற பெயரை அவர்கள் வெறுக்கிறார்கள், ஏனென்றால் அது மும்பா தெய்வத்தின் பெயர். அதுதான் இங்கே உண்மையான தெய்வம். மராத்தியர்கள் அந்த தெய்வத்தின் குழந்தைகள். அவர்கள் உங்களை வெறுக்கிறார்கள்.

    பஞ்சாபிலிருந்து சண்டிகர் நகரைக் கைப்பற்ற அவர்கள் முயன்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அதை எதிர்த்தபோது அது தோல்வியடைந்தது. ஆனால் அது தற்காலிகமானது. மும்பையைப் போலவே அங்கேயும் ஒரு சதித்திட்டம் உள்ளது.

    எங்களுக்கு மும்பை வேண்டாம், பம்பாயே வேண்டும் என்று கூறி நகரத்தைக் கைப்பற்ற அவர்கள் திரும்பி வருகிறார்கள். மும்பை பெருநகர நகரத்தை குஜராத்துடன் இணைப்பதே அவர்களின் திட்டம். எனவே, மராத்தி மக்கள் விழித்தெழுந்து செயல்பட வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்தார். 

    • மகாராஷ்டிரா மட்டுமின்றி பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
    • மாநில அரசுகள் இதுபோன்ற சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின், அம்லா கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான சவிதா பாரத். இவர் பிரசவத்திற்காக கடந்த 19ஆம் தேதி மொகதா தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து ஜவஹர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சவிதாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நேற்று (நவ.24) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    தாய், சேய் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் சவிதாவின் கிராமத்திற்கு 2 கி.மீ தொலைவிற்கு முன்னரே வாகனத்தை நிறுத்தி, அவர்களை இறக்கிவிட்டு சென்றுள்ளார் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இதையடுத்து சவிதா, அவரது தாய், மாமியார் என மூவரும் தங்களது கிராமத்திற்கு நடந்தே சென்றுள்ளனர். ஆனால் இடையே சவிதாவால் நடக்க முடியவில்லை. இதனை அவ்வழியே சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அந்த தாய்க்கு ஏதாவது ஆனால், அந்த குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? நாங்கள் என்னதான் செய்ய வேண்டும்? அரசு பதில் சொல்லவேண்டும் என கேள்விகளை எழுப்பியிருந்தார். 

    இந்த வீடியோ வைரலான நிலையில் மொகதா தாலுகாவின் சுகாதார அலுவலர் டாக்டர் பௌசாஹேப் சத்தார், "ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சம்பவம் குறித்து அறிந்த உடன் அப்பெண்ணின் வீட்டிற்கு மருத்துவக்குழு சென்று பார்த்ததாகவும், தாய், சேய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும்" தெரிவித்தார். 

    புதிதாக குழந்தை பிரசவித்தவர்கள் இதுபோல இறக்கிவிடப்படுவது இது முதல்முறை அல்ல. அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பலரும் இதுபோன்ற மனிதாபிமானம் அற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் மாநில அரசுகள் இதுபோன்ற செயல்பாடுகளில் மெத்தனப்போக்கையே கடைபிடித்து வருகிறது. 

    • அஜித் பவார் மகன் பார்த்து பவார், புனேவில் ரூ.1800 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு முறைகேடாக வாங்கிய புகாரில் சிக்கினார்.
    • பவாரைப் போன்ற ஒரு தலைவர் வாக்காளர்களை அச்சுறுத்தும்போது, தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும், சிவசேனாவை இரண்டாக உடைத்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்த அஜித் பவார் ஆகிய இருவரும் துணை முதல்வராக உள்ளனர்.

    அஜித் பவார் மகன் பார்த்து பவார், புனேவில் ரூ.1800 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு முறைகேடாக தனது நிறுவனத்துக்காக வாங்கிய ஊழல் குற்றச்சாட்டில் அண்மையில் சிக்கினார்.

    இதற்கிடையே மகாராஷ்டிராவில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் டிசம்பர் 2 அன்று நடைபெற உள்ளன. இந்நிலையில் நிலையில் அஜித் பவார் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று மாலேகான் நகரில் உள்ள பாராமதி தாலுகாவில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் தனது கட்சி வெப்பாளர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே அந்த பகுதிக்கான வளர்ச்சி நிதியை வழங்குவேன் என மிரட்டியுள்ளார்.

    அமைச்சரவையில் நிதித் துறையை அஜித் பவார் தன் வசம் வைத்துள்ளார். இதன் பின்னணியில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "நண்பர்களே, மத்திய அரசும் மாநில அரசும் பல திட்டங்களைக் உருவாகியுள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தினால், மாலேகானுக்கு நல்ல வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.

    நீங்கள் எங்களின் 18 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்தால், நான் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் எனது வேட்பாளர்களை கிராஸ் மார்க் செய்தால், நானும் உங்களை கிராஸ் மார்க் செய்வேன். வாக்கு உங்கள் கையில் உள்ளது, நிதி என் கையில் உள்ளது." என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

    இதை விமர்சித்த உத்தவ் சிவசேனா தலைவர் அம்பாதாஸ் தான்வே, "நிதி என்பது பொதுமக்கள் செலுத்தும் வரிகளிலிருந்து வழங்கப்படுகிறது, அது அஜித் பவாரின் வீட்டில் இருந்து அல்ல. பவாரைப் போன்ற ஒரு தலைவர் வாக்காளர்களை அச்சுறுத்தும்போது, தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். 

    முன்னதாக கடந்த ஜனவரியில் கூட்டம் ஒன்றில் பேசிய அஜித் பவார், வாக்களித்து விட்டதால் நீங்கள் ஒன்றும் எனக்கு முதலாளிகள் இல்லை, நான் என்ன கூலியா? என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • உயிர் மாய்ப்பு கடிதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தகவல்
    • பள்ளி ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு.

    மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள ஜல்னா மாவட்டத்தில் 7ம் வகுப்பு சிறுமி, பள்ளி மாடியிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது மாணவி நேற்று (நவ.21) வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். சிறுமி வீட்டிலிருந்து சென்ற சிறிது நேரத்திலேயே அவளது தந்தைக்கு பள்ளியிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், உங்கள் மகள் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். செய்தியறிந்து உடனடியாக பள்ளியை அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே சம்பவம் அறிந்து பள்ளிக்கு சதார் காவல்நிலைய போலீசார், உயிரிழப்புக்கான காரணத்தை அறிய சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து  வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள், குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளனர். தற்கொலை கடிதங்கள் போன்ற எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், உடற்கூராய்வுக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் தெரிவித்தனர்.

    உயிரை மாய்த்துக்கொண்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவராத நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் பள்ளியை குற்றம் சாட்டியுள்ளனர். ஆசிரியர்களின் துன்புறுத்தலால்தான் இந்த முடிவை எடுத்திருப்பார் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.  பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம் குறித்து உள்ளூர்வாசிகளும், பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். 

    • சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
    • குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் தாலுகாவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக தண்டனையாக 100 முறை சிட்-அப் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதால் 13 வயது சிறுமி உயிரிழந்தார்.

    கடந்த வாரம், ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் மாணவி அன்ஷிகா கவுட்-க்கு, பள்ளிப் பையுடன் 100 முறை சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.

    மாலை வீடு திரும்பியபோது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    நிலைமை மேலும் மோசமடைந்து சிறுமி மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனளிக்காமல் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தண்டனைக்குப் பிறகு, தங்கள் மகளின் கழுத்து மற்றும் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும், குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 

    அன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வட்டார கல்வி அதிகாரி பாண்டுரங் கலங்கே தெரிவித்தார். 

    • 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று மாலை நவாலே பாலத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

    பாலத்தில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து காவல்துறை கூறுகையில், சத்தாராவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, பிரேக் செயலிழந்ததால் நவாலே பாலத்தின் சரிவில் மாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்தது.

    அந்த லாரி வழியில் பல வாகனங்களை மோதியது. இதில் ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கி  தீப்பிடித்து எரிந்தது

    இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைத்து, சேதமடைந்த கார் மற்றும் கண்டெய்னரில் இருந்து சடலங்களை மீட்டனர்.

    உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.

    கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் பிரேக் பிடிக்காத லாரி ஒன்று 48 வாகனங்களை இடித்து விபத்தை ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

    மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த்து பவார்.

    இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.

    இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், "இந்த ரூ.300 கோடி பரிவர்த்தனை குறித்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரித்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.

    இந்த பரிவர்த்தனை தொடர்பான பதிவு ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டு, தொடர்புடைய ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு ரூபாய் கூட கைமாறவில்லை. அந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானது, அதை விற்க முடியாது. அது அரசு நிலம் என்ற விஷயம் எனது மகன் பார்த்து மற்றும் அவரது கூட்டாளி திக்விஜய் பாட்டீல் ஆகியோருக்கு தெரியாது" என்று கூறினார்.

    இதற்கிடையே இந்த நிலமோசடி தொடர்பாக போலீசார் பதிந்த வழக்கு வழக்கில் அஜித் பவார் மகன் பெயர் இடம் பெறவில்லை.  நிலத்தை வாங்கிய நிறுவனத்தில் 1 சதவீதம் மட்டும் பங்கு வைத்துள்ள திக்விஜய் பாட்டீலின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    இது குறித்து சிவசேனா(உத்தவ்) நிர்வாகி அம்பாதாஸ் தன்வே கூறுகையில்,"நிலத்தை வாங்கிய கம்பெனியில் அஜித் பவார் மகனுக்கு 99 சதவீத பங்கு இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு சதவீத பங்கு இருப்பவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.

    • நில மோசடி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
    • எங்கள் கூட்டணி அரசு வெளிப்படைத்தன்மையை நம்புகிறது.

    மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த் பவார்.

    இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த இந்த நில மோசடி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

    இதுபோன்ற முறைகேடுகளை தனது அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது. மேலும் இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    "ஏதேனும் முறைகேடுகள் இருந்தால், அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கூட்டணி அரசு வெளிப்படைத்தன்மையை நம்புகிறது.

    எனவே ஏதேனும் முறைகேடுகள் உள்ளதா என்பதை அறிய இந்த விவகாரம் விசாரிக்கப்படும், உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.

    இது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில்,"

    நில ஒப்பந்தத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. முதல் மந்திரி நிச்சயமாக இதனை விசாரிக்க வேண்டும்.

    என்னுடைய உறவினர்களுக்காக சலுகைகளை பெறுவதற்காக நான் எந்த அதிகாரியையும் ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை" என்றார்.

    • தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.
    • மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் சதாரா மாவட்டம் பால்டன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

    4 நாட்களுக்கு முன்பு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதியுள்ளார்.

    பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வீட்டு உரிமையாளர் பிரசாந்த் பங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    போலியான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டதாக பெண் டாக்டரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இது தற்கொலை இல்லை என்றும் பிரேத பரிசோதனையை மாற்ற டாக்டர் ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் சேர்க்கை 3 மாணவர்களாகக் குறைந்ததால், அந்தப் பள்ளி மூடப்படும் நிலையை எதிர்கொண்டது.
    • இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கேட் தாலுகாவில் உள்ள ஜலிந்தர் நகர் ஜில்லா பரிஷத் பள்ளி, உலகளாவிய கல்வி அமைப்பான T4 கல்வியால் நிறுவப்பட்ட மதிப்புமிக்க உலகின் சிறந்த பள்ளி பரிசுகள் 2025-ல் சமூக தேர்வு விருதைப் பெற்றுள்ளது. இந்த பள்ளி பட்டியலிடப்பட்ட 50 பள்ளிகளை தாண்டி இந்த விருதை பெற்றுள்ளது.

    ஒரு காலத்தில் மூடப்படும் நிலையில் இருந்த இந்த பள்ளி அதன் புதுமை, சமூக தாக்கம் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற நடைமுறைகளுக்காக சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது ஒரு எடுத்துக்காட்டாகி உள்ளது. இந்த ஆண்டு T4 கல்வியால் கௌரவிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து ஒரே அரசு மராத்தி-நடுத்தர பள்ளி இதுவாகும்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் சேர்க்கை 3 மாணவர்களாகக் குறைந்ததால், அந்தப் பள்ளி மூடப்படும் நிலையை எதிர்கொண்டது. மாநில விதிமுறைகளின்படி, 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் பொதுவாக மூடப்படுகின்றன.

    இருப்பினும், உள்ளூர் சமூகத்தின் கூட்டு மற்றும் தொலைநோக்கு முயற்சிகள் மூலம், தப்பிப்பிழைத்தது மட்டுமல்லாமல் செழித்து வளர்ந்தது. இன்று இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    விருது பெற்ற இந்த பள்ளியை அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் பாராட்டி உள்ளார். இந்த சாதனை மகாராஷ்டிராவிற்கு பெருமையான தருணம். மேலும், ஜலிந்தர்நகர் ஜில்லா பரிஷத் பள்ளி ஏற்றுக்கொண்ட 'மாணவர்கள்-கற்பித்தல்-மாணவர்கள்' மாதிரி புரட்சிகரமானது.

    ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், பள்ளி மாநிலத்திற்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த வெற்றி குறித்து பள்ளியின் முதல்வர் தத்தாத்ரே வேர் கூறுகையில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள், சமூக தன்னார்வலர்கள் மற்றும் பலரின் கூட்டு முயற்சியால் பள்ளி அங்கீகாரம் பெற்றது. அவர்கள் புதிய உயரங்களை அடைய எங்களுக்கு உதவினர். எந்தவொரு சமூகத் திட்டமும் வெற்றிபெற, நம்பிக்கை முக்கியமானது. மேலும் நேர்மையான, தன்னலமற்ற வேலையிலிருந்து மட்டுமே நம்பிக்கை வருகிறது என்று அவர் கூறினார்.

    • மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • தானே மற்றும் பால்கர் மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்தது.

    மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு 10 பேர் பலியாகி உள்ளனர்.

    நாசிக் மாவட்டத்தில் மட்டும் 4 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3 பேர் வீடு இடிந்து விழுந்ததில் இறந்து உள்ளனர். தாராஷிவ், அகில்யாநகரில் தலா 2 பேர் இறந்துள்ளனர். ஜல்னா மற்றும் யவத்மால் ஆகிய இடங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

    பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தில் சிக்கியவர்கள் 11,800-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர். இந்த கனமழைக்கு காரணமாக மராத்வாடா பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

    அங்குள்ள கோதாவரி ஆற்றில் உள்ள ஜெயக்வாடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2.92 லட்சம் கன அடியாக உயர்ந்தது. வெள்ள அபாயம் காரணமாக சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பைதான் பகுதியில் இருந்து சுமார் 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த மாவட்டத்தில் உள்ள ஹர்சுல் வட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    மராத்வாடாவில் உள்ள பீட், நான்டெட் மற்றும் பர்பானி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. மராட்டிய மாநிலம் முழுவதும் 16 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2 கூடுதல் குழுவினர் புனே தலைமையகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

    மராத்வாடா மண்டலம் மற்றும் சோலாப்பூர் மாவட்டம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகளை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று 5 மணி நேரத்தில் 5 செ.மீ. மழை பெய்தது. நேற்று மதியத்துக்கு மேல் மும்பையில் மழை குறைந்தது. இதனால் போக்குவரத்து மற்றும் ரெயில் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

    தானே மற்றும் பால்கர் மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்தது. தானேவின் பிவாண்டி தாலுகாவில் 71 குடும்பங்களை சேர்ந்த 262 பேர் மீட்கப்பட்டனர். பீட், நாந்தேட் மற்றும் பர்பானி மாவட்டங்களின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.

    ஆஷ்டியில் உள்ள சாங்வி கோவிலில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 12 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்டது. நாந்தேட் நகராட்சி எல்லைக்குள் பொதுமக்கள் சுமார் 970 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

    நாசிக்கில் கனமழையை தொடர்ந்து கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரங்களில் உள்ள ராம்குண்ட் பகுதியில் சில கோவில்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 21 பேர் மீட்கப்பட்டனர்.

    மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    ×