என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
- சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் லிங்கத் துரை. இவரது மகன் ரமேஷ் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவரது முதல் மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு சூர்யா (17) என்ற மகன் உள்ளார். மூக்கம்மாள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.
இதனிடையே மகாலட்சுமி (35) என்பவரை ரமேஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். சூர்யா தனது தாத்தா லிங்கத்துரையுடன் தனிவீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ரமேஷ் தனது 2-வது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு சென்று டோக்கனை கொடுத்து விற்பனையாளர் ராசுக் குட்டியிடம் பரிசு தொகுப்பை கேட்டுள்ளார். அப்போது, ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2பேரும் ரேஷன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் எந்திரத்தை கையில் எடுத்தனர்.
மேலும் இந்த எந்திரம் இருந்தால் தானே எல்லாருக்கும் பணம் கொடுப்பாய் என்று கூறி அவதூறாக பேசிவிட்டு எந்திரத்தை தங்களது வீட்டுக்கு தூக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து எந்திரத்தை கொண்டு வந்து கடையில் கொடுத்த ரமேஷ், கடை ஊழியர் ராசுகுட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் விசாரணை நடத்தி அரசு ஊழியரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, எந்திரத்தை தூக்கி சென்றதாக மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார்.
- கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
திருச்சியில் கடந்த 2-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வைகோ வந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.
தொடர்ந்து இன்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார்.
இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்நிலையில், மதுரையில் சமத்துவ நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார்.
அண்ணா நகர், தெப்பக்குளம், கீழ வெளி வீதி வழியாக செல்லும் அவர் இன்று மாலை 6 மணிக்கு தனது பயணத்தை நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
- தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
- தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்பத்தூரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை மாநகராட்சியின் 5வது மற்றும் 6வது மண்டல தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்.
இதனையடுத்து பழச்சாறு கொடுத்து பெண் தூய்மைப் பணியாளரின் உண்ணாவிரதத்தை அமைச்சர் சேகர் பாபு முடித்து வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இம்மாத இறுதிக்குள் தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும்" என்று வாக்குறுதிஅளித்தார்.
இதனை கேட்டதும் தூய்மைப் பணியாளர்கள்குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்மூலம் தனியார்மயமாக்கலை எதிர்த்து 150 நாட்களுக்கு மேலாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தீர்வை எட்டியுள்ளது.
- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அவ்வாறே தொடரும்
- கூட்டணி இல்லாமல் போட்டி என விஜய் கூறியிருந்தார்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அவ்வாறே தொடரும் என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
மறுபுறம் அதிமுக தரப்பு பல கட்சிகளை கூட்டணியில் இணைத்து வருகிறது. இதனிடையே கூட்டணி இல்லாமல் போட்டி எனக்கூறி கட்சித் தொடங்கிய விஜய் தரப்பும் சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. மேலும் கரூர் சிபிஐ விசாரணை, ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் இழுபறி போன்றவை அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவதற்காக விஜய்க்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் நேர்காணலின்போது,
"அதிமுக கூட்டணியில் ஒரு சில நாட்களில் புதிய கட்சி வரவுள்ளது. அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது, மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், நம்பிக்கையுடன் இருங்கள்; அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்." என இபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த புதிய கட்சி தமிழக வெற்றிக் கழகமா இருக்குமோ என பலரும் யூகித்து வருகின்றனர்.
- தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும்.
- தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது.
சென்னை:
டாக்டர் அன்புமணி தரப்பு பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது. எனவே டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது.
தி.மு.க.வுடனும், த.வெ.க.வுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அணியில் இணைப்பதற்கான முயற்சியும் நடைபெறுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது.
இது பற்றி சென்னையில் முகாமிட்டு உள்ள டாக்டர் ராமதாசிடம் இன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? என்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும். இதில் உண்மையும் இருக்கும். பொய்யும் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை.
விரைவில் முடிவு எடுப்போம். நாட்களும் போய்க்கொண்டுதான் இருக்கிறது. புதிய கூட்டணிக்கு செல்வோமா என்பதை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். புதிய கூட்டணி ஏற்படுமா என்பதற்கு பொறுத்து இருந்து பதில் சொல்கிறேன்.
தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது என்றார்.
டாக்டர் ராமதாஸ் சென்னையில் முகாமிட்டு உள்ளார். அவரை கூட்டணியில் இழுப்பதற்கு பல கட்சிகளை சேர்ந்தவர்களும் ரகசியமாக பேசி வருவதாக கூறப்படுகிறது.
- திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது.
- அரசு மருத்துவமனையில் கொலை நடக்கிறது என்பது, காவல்துறையின் தோல்வி மட்டும் அல்ல. திமுக அரசின் நிர்வாகத் தோல்வி.
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலேயே, பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தலைநகரில்,அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ள இந்தப் படுகொலை, திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது.
தலைநகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொலை நடக்கிறது என்பது, காவல்துறையின் தோல்வி மட்டும் அல்ல. திமுக அரசின் நிர்வாகத் தோல்வி. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். எதிர்க்கட்சியினரைப் பழி வாங்க மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தி, தமிழகக் காவல்துறையை முற்றிலுமாக முடக்கி வைத்திருப்பதுதான் திமுக அரசின் ஒரே சாதனை.
வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவியர், இளைஞர்கள் என, யாருமே திமுக ஆட்சியில் பாதுகாப்பாக உணரவில்லை. அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு வழங்க முடியாத இந்த திமுக ஆட்சியில், பொதுமக்கள் எங்கே பாதுகாப்பாக இருப்பது?
துண்டுச்சீட்டில் யாரோ எழுதிக் கொடுப்பதை, திமுக அரசின் சாதனை என்று மேடையில் வாசிப்பது மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மாநில அரசின் முதல் பணியான சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல அசிங்கமாக இல்லையா? என கூறினார்.
- இன்றைக்கு எத்தனையோ வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- கேரளாவில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை நடத்த அங்குள்ள அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது.
நாகர்கோவில்:
அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதை மறந்துவிட்டு, மதுரையில் அண்ணா பெயரில் உள்ள பூங்கா பெயரை மாற்றவுள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தி.மு.க.வுக்கு 5 முழக்கம் இருக்கிறது. அதில் 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற முழக்கமும் ஒன்று.
அண்ணா எதை கற்றுத்தந்தாரோ, எதை முன் வைத்தாரோ, அதை இத்தனை ஆண்டுகளாக தி.மு.க. முன்வைத்து வருகிறது. 'ஆதிக்கமற்ற சமுதாயம் படைத்தே தீருவோம்' என்பது அண்ணாவின் 2-வது முழக்கம். அதனால் தான் ஒரு ஆதிக்க சமூகத்தை கட்டமைக்க நினைக்கின்ற பாசிச சிந்தனை கொண்ட பா.ஜ.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
அதே போன்று 'இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்று சொன்னோம். இன்றைக்கும் நம்முடைய கொள்கையில் கடுகளவு கூட விட்டுக்கொடுக்காமல் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். அதேபோன்று 'வன்முறை தவிர்த்து வறுமை ஒழிப்போம்' என்று சொன்னோம். இன்றைக்கு எத்தனையோ வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை பார்த்து மற்ற மாநிலங்கள் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் கொண்டு வருகிற அளவுக்கு அந்த முழக்கத்தை நிறைவேற்றி உள்ளோம்.
அதேபோன்று 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற தத்துவத்திலும் உறுதியாக இந்த இயக்கம் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது அந்த தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக செயல்படும், மாநில சுயாட்சிகளை, மாநில உரிமைகளை, மாநிலத்திற்கான நிதி ஆதாரங்களை தராமல் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து அவர்களின் இசைக்கெல்லாம் ஆடுகின்ற ஒரு கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. சொந்தக் கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை, பஞ்சாயத்தை தீர்ப்பதற்கு டெல்லியில் போய் அமித்ஷாவிடம் முழங்காலிடுகிறார்கள். இந்த கூத்தையெல்லாம் செய்பவர்கள் இந்தியை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை.
தி.மு.க. என்றைக்கும் தன்னுடைய முதல் முழக்கமான 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற தத்துவத்திலிருந்து கடுகளவும் வழிதவறாது. 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வர உள்ளார். அவரது வருகையால் தமிழக அரசியலில் கண்டிப்பாக மாற்றம் இருக்காது. அவர் இந்த முறையும் 100 சதவீதம் வெறுங்கையோடு தான் வரப்போகிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்குத் தர வேண்டிய நிதியை அவர் தரப்போவதில்லை. அதை அவர் முடிவோடு வைத்திருக்கிறார். கேரளாவில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை நடத்த அங்குள்ள அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களையோ, நமக்கு சேர வேண்டிய நிதியையோ அவர் கொண்டு வரப்போவதில்லை.
வெறும் வார்த்தை ஜாலங்களோடு வரப்போகிறார். எப்படியாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்க முடியுமா என்று சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த குட்டை குழம்பாது, மீன் பிடிக்கவும் அவர்களால் முடியாது. பா.ஜ.க.வின் முகத்திரை வெகு விரைவில் கிளிய இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது பராசக்தி படத்தின் விமர்சனம் எப்படி இருக்கிறது? என்று கேட்டபோது, நான் சினிமா பார்க்கவில்லை என கூறினார்.
- தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
- கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
கண்ணாடி பாலம் அமைப்பதற்கு முன்பே, கடல் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து வருவார்கள். இந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டபிறகு, படகில் பயணம் செய்ய அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று, பின்பு அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் வகையிலேயே தற்போது இருக்கிறது. இதனால் தற்போது திருவள்ளுவர் சிலைக்கு நேராக படகுகள் இயக்கப்படவில்லை.
விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக படகுகளை இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை படகில் சென்று பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். அதனை கருத்தில் கொண்டு வருகிற 15-ந் தேதி முதல் 17-ந்தேதி வரையிலான 3 நாட்களும் படகு போக்குவரத்து 3 மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது.
அதன்படி வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கக்கூடிய படகு போக்குவரத்து, இந்த 3 நாட்களும் 2 மணி நேரத்துக்கு முன்னதாக காலை 6 மணிக்கே தொடங்கப்படுகிறது. அதேபோல் மாலையில் வழக்கமாக 4 மணியுடன் நிறுத்தப்படும் படகு போக்குவரத்து, கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
- ராஜலட்சுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் சாதியை சொல்லி திட்டியதாகவும் என் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த தொண்டி வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் உயர் நீதிமன்றம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2020 பிப்ரவரி மாதம் தொண்டியில் போலி டாக்டர் ராஜலட்சுமியை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அப்போதைய தொண்டி டி.எஸ்.பி. புகழேந்திகணேசுக்கு எதிராக நான் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன்.
இதனால் கோபம் அடைந்த டி.எஸ்.பி. என்னை பழிவாங்கும் நோக்கோடு. போலி டாக்டருக்கு உதவியதாக அந்த வழக்கில் என்னையும் சேர்த்தனர். இந்த வழக்கில் என்னை கடுமையாக தாக்கி சட்ட விரோத காவலில் வைத்தா்.
இதனால் காவல் நிலையத்தில் நான் வாக்குவாதம் செய்தேன். அப்போது காவல் நிலைய ஆய்வாளர்கள் மேலும் உன் மீது வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினார்கள். பிறகு என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்து, மனித உரிமை கமிஷனில் புகார் செய்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட போலீசார் என் வீட்டுக்கு வந்து, என்னை தாக்கி, போலீசார் தங்கும் அறைக்கு இழுத்து சென்று அடைத்து தாக்கியதில் எனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் ராஜலட்சுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் சாதியை சொல்லி திட்டியதாகவும் என் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த 2 வழக்கும் பொய் வழக்கு. இதனை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். இரண்டையும் விசாரணை செய்து உயர் நீதிமன்றம் என் மீதான வழக்கை ரத்து செய்தது.
எனவே பொய்யான வழக்கு பதிந்து சட்டவிரோத காவலில் வைத்தும் வழக்கறிஞர் சமூகத்திலும் எனது சமூகத்திலும் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்திய டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா ராணி, திருவாடானை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், ஜோதி முருகன், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் என் மீது பொய் புகார் கொடுத்த முருகேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திருவாடானை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். ஆனால் எனது மனு நிராகரிக்கப்பட்டது.
எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி முகமது சபீக் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து தற்போதைய செங்கல்பட்டு உட்கொட்ட டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்துள்ளார்.
- தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
- தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்பத்தூரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை மாநகராட்சியின் 5வது மற்றும் 6வது மண்டல தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்.
இதனையடுத்து பழச்சாறு கொடுத்து பெண் தூய்மைப் பணியாளரின் உண்ணாவிரதத்தை அமைச்சர் சேகர் பாபு முடித்து வைத்தார்.
தனியார்மயமாக்கலை எதிர்த்து 150 நாட்களுக்கு மேலாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தீர்வை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பல வருடங்களாக ராஜபாளையம் தொகுதி மக்களுடன் தொடர்ந்து இருந்து வருகிறேன்.
- நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
சென்னை:
அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற்ற நிலையில் இன்று 3-வது நாளாக நடைபெற்ற நேர்காணலில் விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.
விருப்பமனு அளித்தவர்கள் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணலில் பங்கேற்றனர். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்த அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான கவுதமி நேர்காணலில் பங்கேற்றார்.
பின்னர் நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பல வருடங்களாக என் மனதில் நெருக்கமாக உள்ள ஊர் ராஜபாளையம். அதனால் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காக விருப்ப மனு அளித்தேன். நல்ல முடிவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று நம்புகிறேன்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கான அத்தனை முயற்சிகளையும் நானும் செய்வேன், என்னுடன் இருக்கும் ஒவ்வொரு தொண்டர்களும் செய்வார்கள் என்ற உறுதி எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது.
பல வருடங்களாக ராஜபாளையம் தொகுதி மக்களுடன் தொடர்ந்து இருந்து வருகிறேன். அத்தொகுதியில் உள்ள பெண்களோடும், இளைஞர்களோடும், விவசாயிகளோடும் இத்தனை வருடங்களாக இருந்து கொண்டு வருகிறேன்.
தமிழ்நாடு முழுவதுமே என் ஊர் தான். 7 வருடங்களுக்கு முன்பாக ராஜபாளையம் என் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளதால் அத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன்.
கேள்வி:- ராஜபாளையம் தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும்.
கேள்வி:- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?
பதில்:- அறிவுரை என்பதை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். ஒவ்வொருவருக்கான பாதை என்பது அவரவர்களுக்கு என அமையும். அவரவர் ஆலோசனைப்படி அவரவர் பாதை அமையும். சினிமாவோ, அரசியலோ இரண்டுமே பொதுவாழ்வில் கடினமான பாதை தான். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல முயற்சி மேற்கொள்ளும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும்.
அ.தி.மு.க.வின் வாக்குகளை விஜய்யால் அறுவடை செய்ய முடியாது. விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம். அவரது பயணம் தற்போது தான் தொடங்கி உள்ளது. மேலும் ராஜபாளையத்தில் போட்டியிட்டால் நான் 100 சதவீதம் வெற்றி பெறுவேன்.
2026 சட்டமன்ற தேர்தலில் புதியவர்களும் வர வேண்டும். அதைவிட மக்களுக்கு யார் முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்களோ, மக்களுக்காக உழைக்கிறார்களோ, அவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
- மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை.
நாகர்கோவில்:
தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குமரி மாவட்டம் வந்தார். அவர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ரப்பர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு ரப்பர் கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது கூட்டத்தில் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் வருகிற 17-ந்தேதி மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும்.
அரசு ரப்பர் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் சி.எல்.ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோரிக்கை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குரங்கு தொல்லை இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றை கூண்டுகள் வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கவால் குரங்குகள் மலைப்பகுதிகளில் வசிப்பவை என்பதால், அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வராது.
வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை. அடுத்த முறை தி.மு.க. ஆட்சி தான் தொடரும். எனவே எதிர்காலத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும்.
கேரளாவில் தனியார் காடுகள் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பணிகள் செய்ய கெடுபிடி காட்டுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கேரளாவில் உள்ள சட்ட திட்டங்களுக்கும், தமிழகத்தில் உள்ள சட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது. கேரளாவில் அதிக மலைகள் உள்ளன. இங்கு மலைகள் குறைவு. நமது சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தனியார் காடுகள் சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அழகுமீனா, வன அலுவலர் அன்பு, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட், உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், அரசு ரப்பர் கழக தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






