search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Assembly election"

    பாராளுமன்ற தேர்தல் முடிவால் பாதிப்பு இல்லை என்றும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபித்துக்காட்டும் என்றும் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில், அதை தி.மு.க.வும், மற்றக் கட்சிகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பா.ம.க. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

    தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி 7 இடங்களில் போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க வாங்கிய வாக்குகளின் விழுக்காடு 5.40 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ம.க. வாங்கிய வாக்குகளை விட இது அதிகம் ஆகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய அதே அளவிலான வாக்குகளை, இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் 7 இடங்களில் போட்டியிட்டு பா.ம.க. பெற்றுள்ளது.

    மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எவ்வகையிலும் இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

    தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம்.

    தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.

    பாட்டாளி மக்கள் கட்சி சரிவுகளை சந்திக்கவே சந்திக்காத கட்சி அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மிக மோசமான தோல்விகளை பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்திருக்கிறது. சாதாரண வேகத்தில் பயணித்து சரிவுகளை சந்திக்கும் போது, உடனடியாக அதிக வேகத்தில் மீண்டும் பயணித்து இலக்குகளை எளிதாக கடக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு.

    இதற்கு காரணம் பா.ம.க.வை உந்தித் தள்ளும் சக்தியாக இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்... இளைஞர்கள்... இளைஞர்கள் என்பது தான். கடந்த காலத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம்.

    இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக்காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

    பாட்டாளி இளைஞர்களும் போருக்காக காத்திருக்கும் புறநானூற்று வீரர்களைப் போல, மக்கள் சந்திப்பு, கொள்கைப் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நமது வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்..... புதிய வரலாறுகளை படைக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
    22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்கள், வேட்பாளர்களுக்கும், தே.மு.தி.க சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


    பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அயராது பாடுபட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் என்றும் தேமுதிக தொடர்ந்து ஈடுபட்டு அயராது பணியாற்றும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்களிக்க 4 ஆம்னி பஸ்களில் வந்த வாக்காளர்களை அதிகாரிகள் தடுத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடை பெற்றது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணி மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒன்றன்பின் ஒன்றாக 4 ஆம்னி பஸ்கள் வந்தன. அதனை வழிமறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, எஸ்.பி. விக்ரமன் ஆகியோர் தலைமையில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பஸ்களில் முஸ்லிம்கள் ஏராளமானோர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெளியூர் நபர்களுக்கு இங்கு அனுமதியில்லை என்றனர்.


    இதையடுத்து பஸ்சில் வந்தவர்கள், நாங்கள் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார், பள்ளப்பட்டியை சேர்ந்தவரா? என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்து விட்டு அனைவரும் செல்லும்படி அறிவுறுத்தினர்.

    இதற்காக அவர்களின் வாக்காளர் அட்டையை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    பள்ளப்பட்டி பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் பலர் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தொழில் செய்து வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தமட்டில் முஸ்லிம் வாக்குகள் மட்டும் 30 சதவீதம் உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் வாக்களிக்க வந்த இஸ்லாமியர்கள் கூறுகையில், ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக நாங்கள் வாக்களிக்க வந்தோம். ஆனால் போலீசார் எங்கள் மீது சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர். எங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை பார்த்த பிறகே வாக்களிக்க செல்ல அனுமதி அளித்தனர். நாங்கள் யாரிடமும் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்க வரவில்லை. ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளோம். இருப்பினும் போலீசார் எங்களிடம் விசாரணை நடத்தியது வருத்தமளிக்கிறது என்றனர்.

    சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 4 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
    சென்னை :

    அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 11-ந் தேதி (இன்று) முதல் 14-ந் தேதி வரையிலான 4 நாட்கள் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து இன்று மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, மாலை 5.30 மணிக்கு வடபழஞ்சி, மாலை 6.30 மணிக்கு தனக்கன்குளம், இரவு 7.15 மணிக்கு ஆர்.வி.பட்டி, இரவு 8 மணிக்கு நிலையூர் கைத்தறிநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.



    ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து 12-ந் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரம், மாலை 5.45 மணிக்கு வல்லநாடு, மாலை 6.30 மணிக்கு தெய்வசெயல்புரம், இரவு 7.15 மணிக்கு சவலாப்பேரி, இரவு 8 மணிக்கு ஒட்டநத்தம், இரவு 8.45 மணிக்கு ஒசநூத்து, இரவு 9.15 மணிக்கு குறுக்குச்சாலை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து கரூர் மாவட்டம் சீத்தப்பட்டி காலனியில் 13-ந் தேதி மாலை 5 மணிக்கும், அரவக்குறிச்சியில் மாலை 5.45 மணிக்கும், பள்ளப்பட்டியில் மாலை 6.30 மணிக்கும், இனங்கனூரில் இரவு 7.15 மணிக்கும், குரும்பப்பட்டியில் இரவு 8 மணிக்கும், ஆண்டிப்பட்டிகோட்டையில் இரவு 8.45 மணிக்கும், ஈசநத்தத்தில் இரவு 9.15 மணிக்கும் பிரசாரம் செய்கிறார்.

    இதேபோல சூலூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் 14-ந் தேதி மாலை 5 மணிக்கும், அதனைத் தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு முத்துக்கவுண்டன்புதூரிலும், மாலை 6.45 மணிக்கு வாகராயம்பாளையத்திலும், மாலை 7.15 மணிக்கு கிட்டாம்பாளையம் நால்ரோட்டிலும், இரவு 8 மணிக்கு கருமத்தம்பட்டியிலும் (சோமனூர் பவர் ஹவுஸ்), இரவு 8.30 மணிக்கு சாமளாபுரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு 9.20 மணிக்கு சூலூரில் தனது பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
    4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற மே 1-ந்தேதி முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். #Edappadipalaniswami #ADMK #TNAssemblyByElection #TNElections2019
    சென்னை :

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகின்ற மே 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    மே 1-ந் தேதி - சூலூர் தொகுதி. மே 5-ந் தேதி - அரவக்குறிச்சி தொகுதி. மே 6-ந் தேதி - திருப்பரங்குன்றம் தொகுதி. மே 7-ந் தேதி - ஓட்டப்பிடாரம் தொகுதி. மே 11-ந் தேதி - திருப்பரங்குன்றம் தொகுதி. மே 12-ந் தேதி - ஓட்டப்பிடாரம் தொகுதி. மே 13-ந் தேதி - அரவக்குறிச்சி தொகுதி. மே 14-ந் தேதி - சூலூர் தொகுதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    4 தொகுதி இடைத்தேர்தல் மே 19ந் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். #TNAssemblyElection #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ‘மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி’யின் சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    மே 1, 2-ந் தேதி:- ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி.

    3, 4-ந் தேதி:- திருப்பரங்குன்றம் தொகுதி.

    5, 6-ந் தேதி:- சூலூர் தொகுதி.

    7, 8-ந் தேதி:- அரவக்குறிச்சி.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #TNAssemblyElection #MKStalin

    நரேந்திர மோடி மூலம் அ.தி.மு.க. தலைமை 21 சட்டமன்ற தொகுதி தேர்தல்களையும் நடத்தாமல் ஒத்திப் போடுகிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். #Congress #KSAlagiri #ADMK
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாத அளவில் மக்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த எதிர்ப்பை எப்படியாவது சரிகட்டுவதற்கு அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. திரைமறைவு தந்திரங்களை செய்து வருகிறது.

    அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்தால் படு குழியில் விழ நேரிடும் என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள முதல்- அமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்க பேரம் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குறிப்பாக நரேந்திர மோடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை பாராளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தாமல் தள்ளி வைப்பதற்கு அ.தி.மு.க. தலைமை பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

    கடந்த 15 மாதங்களாக சட்டமன்ற உறுப்பினர்களே இல்லாமல் அந்த தொகுதிகளில் மக்கள் குறைகளை கேட்க எவரும் நாதியில்லாத நிலை இருந்து வருகிறது. இந்த அவலநிலையில் இருந்து 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பாராளுமன்றத் தேர்தலோடு இணைந்து நடத்திட வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.

    நரேந்திர மோடி மூலம் அ.தி.மு.க. தலைமை 21 சட்டமன்ற தொகுதி தேர்தல்களையும் நடத்தாமல் ஒத்திப் போடுகிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுவே அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணிக்கான பேரங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.

    அப்படி தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பறிபோகிற நிலை ஏற்பட்டு, ஆட்சி பறிபோகும் என்கிற அச்சத்தின் காரணமாக இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அ.தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.

    ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மீது குட்கா வழக்கு, ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு ரூபாய் 84 கோடி பணம் கொடுத்த வழக்கு மற்றும் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யாமல் பாதுகாப்பு அரணாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் அ.தி.மு.க.வின் எதிர்காலமே பா.ஜ.க.வின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

    எனவே, அரசமைப்புச் சட்டப்படி, ஜனநாயக முறைப்படி 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பாராளுமன்றத் தேர்தலோடு இணைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும்.

    இதில் அ.தி.மு.க. தலைமையின் வற்புறுத்தலின் காரணமாக மத்திய பா.ஜ.க. அரசின் நிர்ப்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் பணிந்து போகுமேயானால் அதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படுமென எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறி உள்ளார். #Congress #KSAlagiri #ADMK
    வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #TNAssemblyElection
    சேலம்:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் சேலம் வந்தார்.

    இன்று காலை சேலம் அருகே உள்ள பாகல்பட்டி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலையில் மு.க.ஸ்டாலின் காரில் அங்கு வந்தார். முதலில் அவர் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் தவறாமல் வந்திருக்கிறார்களா? என பெயர் வாசித்து ஆய்வு செய்தார்.

    விரைவில் 21 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 21 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி உறுதியாக உள்ளது. மக்கள் தெளிவாக உள்ளனர். பா.ஜ.க. ஆட்சி தலைதூக்க விடக்கூடாது என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    நாங்கள் உத்தரவு போட்டாலும், அதனை செயல்படுத்துவது உங்கள் கையில் தான் உள்ளது. உத்தரவுகளை அறிவிப்பது மட்டும் தான் நாங்கள். அதனை நிறைவேற்றுபவர்கள் நீங்கள்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியில் தி.மு.க.வுக்கு எத்தனை ஓட்டுகள் உள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஓட்டுகள் எவ்வளவு உள்ளது. இந்த ஓட்டுகளை நாம் வாங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்.

    தி.மு.க.வின் வளர்ச்சி திட்டங்களை நாம் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். ஜெயலலிதாவுக்காக மக்கள் ஓட்டு போட்டார்கள்.

    உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தி.மு.க. பெற்றி பெறும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மறுக்கிறார்கள். இதற்கான கூட்டம் தான் இந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்.


    இன்று ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனை அராஜகங்கள் அரங்கேறுகிறது. இது ஊழல் ஆட்சி மட்டுமல்ல. கொள்ளைக்கார ஆட்சி மட்டுமல்ல. கொலைகார ஆட்சியாக நடக்கிறது.

    ஓ.பன்னீர்செல்வம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. தீர்ப்புக்கு பின் இந்த ஆட்சி நீடிக்காது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. இதனால் தி.மு.க. வெற்றிக்காக நீங்கள் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தில் பேசியதாவது:-

    கடந்த 3-ந்தேதி திருவாரூரில் தலைவருடைய தொகுதியில் புலிவிலங்கு என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் நான் ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தேன். இதனை தொடர்ந்து எல்லா தொகுதிகளிலும் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க வரலாம் என நேற்று இரவு திடீரென முடிவு எடுத்தேன். நியாயமாக இன்று காலை நான் சேலத்தில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்திருக்க வேண்டும். மாலையில் ஈரோட்டுக்கு போக வேண்டும். 2 நாட்களாக நான் சுற்று பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

    கிராமத்தில் இருந்து தான் அரசியல் தொடங்குகிறது. கிராமங்கள் தான் அரசியலை நிர்ணயிக்கிறது. முதல் முதலில் மக்கள் பிரநிதிகளை தேர்ந்தெடுக்கிற முறை எங்கிருந்து தொடங்குகிறது என்று சொன்னால் கிராமத்தில் இருந்து தான்.

    இது படிப்படியாக மாறி வாக்குச்சீட்டு முறைக்கு வந்து விட்டது. இப்போது எலக்ட்ரானிக் முறைக்கு வந்து விட்டது.

    எம்.பி.யை தேர்ந்து எடுக்கிறோம். அவர் பாராளுமன்றத்திற்கு போகிறார். 6 சட்டமன்ற தொகுதிக்கு சேர்த்து ஒரு எம்.பி.

    அதுபோல் சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ. தேர்ந்தெடுத்து சென்னை கோட்டைக்கு அனுப்புகிறோம். பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேசுவார்கள். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள்.

    அதற்கு அடுத்து பார்த்தீர்களானால் உங்கள் ஊருக்கு ஒரு தலைவரை, ஒரு மெம்பரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் உங்கள் ஊர் பிரச்சனையை உள்ளாட்சி அமைப்பு கூட்டத்திலோ, ஊராட்சி ஒன்றிய கூட்டத்திலோ பேசி அதற்கான நிதியை வாங்கி மத்திய அரசு கிராமத்திற்கு என தனியாக நிதி ஒதுக்குகிறார்கள். அந்த நிதியை வாங்கி பயன்படுத்தி அந்த காரியங்களை செய்து முடிக்க வேண்டும். இது தான் உள்ளாட்சி அமைப்பு.

    இப்போது உள்ளாட்சி அமைப்பு இல்லை. ஆட்சியும் முறையாக இல்லை. மத்தியில் இருக்கிற ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநிலத்தில் இருக்கிற ஆட்சியாக இருந்தாலும் சரி எதுவும் முறையாக இல்லை. ஆகவே முறையாக இல்லாத காரணத்தினால் தான் இன்றைக்கு நாடு ஒரு குட்டிச்சுவரான நிலைக்கு தள்ளிக்கொண்டு போயிருக்கிறது.

    நீங்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு இங்கு வந்திருக்கிறீர்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.

    மக்களிடம் செல்வோம். மக்களிடம் சொல்வோம். மக்களுடைய மனங்களை எல்லாம் வெல்வோம் என்ற அந்த முழக்கத்தை அடிப்படையாக வைத்துத் தான் இந்த பணியை தொடங்கி இருக்கிறோம்.

    நான் 2 வாரத்திற்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு போயிருந்தேன். அங்கு மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார். இதில் பல்வேறு மாநில தலைவர்கள், முதல்-அமைச்சர்கள், பல அரசியல் கட்சி தலைவர்கள் வந்தார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் வந்தார்கள்.

    எல்லோரும் என்னை பார்த்து கேட்ட முதல் கேள்வி கிராம சபை கூட்டத்தை எப்படி சிறப்பாக நடத்துகிறீர்கள்?. உங்களால் எப்படி முடிகிறது என கேட்டார்கள். நான் விளக்கம் சொன்னேன். நான் சொன்ன உடனே அவர்கள் திருப்பி சொன்னார்கள். இதுவரைக்கும் தமிழ்நாட்டிலே, இந்தியாவிலே, உலகத்திலே இப்படிப்பட்ட கிராம சபை கூட்டத்தை யாரும் நடத்தியிருக்க முடியாது என பெருமையாக சொன்னார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து மு.க.ஸ்டாலின் கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்கள் ஒவ்வொரு பேராக எழுந்து வந்து தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள குறைகளை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

    முன்னதாக நேற்று இரவு சேலம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு தீவட்டிப்பட்டியில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKStalin #TNAssemblyElection
    பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரலாம் என்றும் அதை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயராக உள்ளதாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். #Congress #EVKSElangovan #ParliamentElection
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.

    முன்னதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரலாறு காணாத வகைகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. யானைப்பசிக்கு சோளப்பொரியை போடுவது போல் மத்திய அரசு ரூ 1.50 மட்டும் குறைத்து உள்ளது.

    தேர்தலுக்கு பயந்தே திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை இந்த அரசு தள்ளி வைத்துள்ளது. முதல்வரை கேட்டால் தலைமை செயலாளரை கைகாட்டுகிறார். முதல்வர் சொல்லித்தான் ஒரு தலைமை செயலாளர் செயல்பட முடியும் என கூற விரும்புகிறேன்.


    டெல்லியில் பிரதமரை சந்திக்க முதல்வர் செல்கிறார். தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மோடியை சந்திக்க செல்கிறாரே....தவிர பொதுமக்களின் நலனுக்ககாக அல்ல.

    நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்கள் நடிகர்களாக நடித்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரலாம். காங்கிரஸ் கட்சி அதை சந்திக்க தயராக உள்ளது.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி யாருக்கும் நிரந்தரம் கிடையாது. தலைவர் யார் என்பதை தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்வார்.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #EVKSElangovan #ParliamentElection #TNAssemblyElection

    ×