என் மலர்
நீங்கள் தேடியது "TN Assembly election"
- தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.
- புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது.
புதுக்கோட்டை:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு நடந்து முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
அத்துடன் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மனுக்கள் பெற்று, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி தொடர பாடுபடவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்
அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்களை தயார்படுத்தும் வகையில் தற்போதைய தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் அவர் அ.தி.மு.க. ஆட்சி சாதனைகளையும் பட்டியலிட்டு வருகிறார்.
தே.மு.தி.க. சார்பில் பொதுச்செயலாளர் பிரேமலதா இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய கோணத்தில் மாடுகள் மாநாடு, தண்ணீர் மாநாடு, கடலம்மா மாநாடு போன்றவற்றை நடத்தி இயற்கை ஆர்வலர்களை ஈர்த்து வருகிறார். த.வெ.க. தலைவர் விஜய்யும் மாவட்டந்தோறும் பிரசார கூட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும் சட்டமன்ற தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரும் கடந்த அக்டோபர் 12-ந்தேதி தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணத்தை மதுரையில் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் அவர், தனது பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவு செய்கிறார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்தவும், அதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பலத்தை நிரூபிக்கவும் திட்டமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சாந்தமாக பதிலடி கொடுத்து வரும் அவர், தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக தென் தமிழகத்தை குறிவைத்து சட்டமன்ற தேர்தலுக்கு காய் நகர்த்தும் நயினார் நாகேந்திரன், தேசிய தலைவர்களை அழைத்து வருவதன் மூலம் கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தை பயன்படுத்த தயாராகி வரும் நயினார் நாகேந்திரன் ஏற்பாடுகளை தற்போதே தொடங்கிவிட்டார்.
நேற்று டெல்லி சென்று திரும்பிய அவர், நிருபர்களிடம் கூறுகையில், எனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் நேரில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், இருவரில் ஒருவர் வருவார் என்றும் தெரிவித்தார். ராமேசுவரத்தில் காசி தமிழ்ச்சங்கமம் விழா, ராமேசுவரம்-தாம்பரம் புதிய வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா, புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழா ஆகியவற்றில் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது. தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தை பா.ஜ.க.வினர் மற்றும் போலீசார் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாலன் நகர் அருகே பள்ளத்தி வயலில் தனியாருக்கு சொந்தமான 59 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடம் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.
மேலும் தற்போது இந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் அங்கு 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் போலீசார், உளவுத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவும் ஆய்வு செய்தார். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் உள்ளிட்ட கருவிகளை வைத்தும், டிரோன்களை பறக்கவிட்டு அந்த இடத்தின் பாதுகாப்பு தன்மையும் உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் பெயர்கள், பின்புலங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கான ஹெலிபேடு தளம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.க. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளையும் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி வருகை குறித்த தகவல் தமிழக பா.ஜ.க.வினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மீண்டும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, கட்சியில் பணியாற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவும், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மீண்டும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் செந்தில் பாலாஜி தனது தொகுதியை மட்டுமல்லாமல், தான் போட்டியிடும் மாவட்டத்தையே மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அவர் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வியூகங்களை வகுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேற்கு மண்டலத்திற்கான தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கோவையில் தி.மு.க.வின் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" போன்ற கட்சி நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். எதிர்வரும் தேர்தல்களில் தி.மு.க.வின் பலத்தை மேற்கு மண்டலத்தில் வலுப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகவும், பின்னர் தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகவும் செந்தில் பாலாஜி பதவி வகித்துள்ளார். தற்போது கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், ஏப்ரல் மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு வேட்பாளர்களை டெல்லி மேலிடம் முடிவு செய்யும்.
- தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய-மந்திரி பியூஸ் கோயல் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவர்.
புதுடெல்லி:
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க.- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்கிறது.
இந்த கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகளை இணைத்து கூட்டணியை வலுப்படுத்துவது பற்றி இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.
கடந்த 11-ந்தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் நட்டா ஆகியோரையும் நயினார் நாகேந்திரன் சந்தித்து கூட்டணி நிலவரங்கள் தொடர்பாக விளக்கினார்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கத்தில் தேர்தலுக்கு பா.ஜ.க.வை முழு அளவில் தயார் செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. வகுத்துள்ளது. அதன் ஒரு கட்டமாக 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டங்களை தொகுதி வாரியாக நடத்தி வருகிறது. இன்றுடன் இந்த கூட்டம் முடிவடைகிறது.
ஏற்கனவே வெற்றி வாய்ப்பு உள்ள 70 தொகுதிகள் பட்டியலை பா.ஜ.க. தயாரித்து வைத்துள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கான தகுதியான நபர்கள் பெயர், விவரங்களையும் சேகரித்து உள்ளது. ஒரு தொகுதிக்கு தலா 3 பேர் வீதம் பட்டியல் தயாரித்து மேலிடத்திடம் கொடுத்துள்ளார்கள்.
கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு வேட்பாளர்களை டெல்லி மேலிடம் முடிவு செய்யும். தமிழக தேர்தல் பொறுப்பாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்த பைஜெயந்த் பாண்டா தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கள நிலவரங்களை ஆய்வு செய்து மேலிடத்திற்கு அறிக்கையும் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது புதிதாக 3 மத்திய மந்திரிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து கட்சி தலைவர் நட்டா அறிவித்துள்ளார். பொறுப்பாளராக மத்திய-மந்திரி பியூஸ் கோயல், இணை பொறுப்பாளர்களாக மத்திய-மந்திரிகள் அர்ஜூன்ராம் மெக்வால், முரளிதர் மோகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய-மந்திரி பியூஸ் கோயல் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவர். கடந்த காலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு திறம்பட பணியாற்றியவர்.
மத்திய-மந்திரி அமித் ஷாவுக்கு வலது கரம் போல் செயல்படுபவர். கட்சியில் மூத்த நிர்வாக அனுபவம் கொண்டவர்.
பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்புகளை ஒருங்கிணைத்து அடிமட்டத்தில் கட்சியை கட்டமைத்து தேர்தல் பணியை ஒருங்கிணைப்பதில் கைதேர்ந்தவர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தெளிவான தரவுகளுடன் பதிலடி கொடுப்பதிலும் கில்லாடி.
மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இவரது தேர்தல் வியூகம் பா.ஜ.க.வின் வெற்றிக்கு கைகொடுத்தது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் அவரது வியூகம் கூட்டணி வெற்றிக்கு பலன் அளிக்கும் என்று கட்சி மேலிடம் நம்புகிறது.
ஏற்கனவே கூட்டணியை வலுப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை தீர்ப்பதிலும் பியூஸ்கோயல் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தேர்தலை சந்திப்பதற்காக பா.ஜ.க. தயாராகி வருகிறது. வருகிற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் பா.ஜ.க களப்பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
புதிய பொறுப்பாளர்கள் நியமனத்தை தொடர்ந்து பா.ஜ.க.வில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும் என்று தமிழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த பைஜெயந்த் பாண்டா அசாம் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணை பொறுப்பாளர்களாக ஜம்மு-காஷ்மீர் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுனில் குமார் சர்மா எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி தர்ஷனா பென் ஜர்தோஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும்.
- பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும்.
புதுடெல்லி:
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்வது தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பார்வையாளர்கள் கிரிஸ்சோடங்கர், சூரஜ் ஹெக்டே, ஆலுவா ஆகியோர் இன்று கூடி ஆலோசித்தனர்.
இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் மற்றும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கேட்க வேண்டிய தொகுதிகள் பற்றி விவாதித்துள்ளார்கள். அப்போது 40 தொகுதிகள் கேட்டு வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கு பிறகு டெல்லியில் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் முன் தயாரிப்புகள் பற்றி கூட்டத்தில் விவாதித்தோம். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தான் நீடிக்கிறது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்வதே எங்கள் இலக்கு.
டெல்லியில் நாளை (செவ்வாய்)யும் தொடர்ந்து ஆலோசிக்க இருக்கிறோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும். பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்றார்.
பேட்டியின்போது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
- 26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது.
- அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. இந்த பட்டியல் தமிழகத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அ.தி.மு.க. தலைமையிடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது. அந்த தொகுதிகளில் 20 முதல் 40 சதவீதம் வரையில் பா.ஜ.க. கட்சிக்கு வாக்குகள் கிடைத்து உள்ளன.
அதனை மையமாக வைத்தே சென்னை முதல் குமரி வரை 50 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோளிங்கர், மத்திய சென்னையில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, வடசென்னையில் கொளத்தூர், தென்சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன.
கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், தர்மபுரி தொகுதியில் பாலக்கோடு, திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம், ஈரோட்டில் பவானி, கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் இதில் அடங்கி உள்ளன.
கரூரில் குளித்தலை, கிருஷ்ணகிரியில் ஓசூர், தளி, மதுரையில் மதுரை தெற்கு, நாமக்கல்லில் ராசிபுரம், நீலகிரியில் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி சட்டமன்ற தொகுதிகளும் பெரம்பலூர் தொகுதியில் பெரம்பலூர், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கிணத்துகடவு, தொண்டா முத்தூர், வால்பாறை, ராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி, தென்காசி எம்.பி. தொகுதியில் தென்காசி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போடி, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட ஒட்டபிடாரம், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளும் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், வேலூரில் ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இது தவிர கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற்று இருப்பதாகவும் அது தொடர்பான பட்டியலை தனியாகவும் பா.ஜ.க. கட்சி தயாரித்து வைத்துள்ளது.
மொத்தமாக அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மீதம் உள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதற்கும் அந்த கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி 50 தொகுதிகளில் களம் இறங்கும் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அமித்ஷா வியூகம் வகுத்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
வருகிற 15-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி இருப்பது அ.தி.மு.க.வை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
- அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
- தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது.
மதுரை:
மதுரையில் நடந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் ஊழல் நடைபெற்றுள்ளது, நகரமைப்பு பிரிவின் ஊழலுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க உள்ளோம். அனுமதி பெற்று குடியிருப்புகள் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டப்படுகிறது.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மோசமாக நடைபெறுகிறது. மக்களின் பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை, மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் நியமிக்க வேண்டும். தி.மு.க. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
தி.மு.க. அரசு நான்கே முக்கால் வருடத்தில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது?, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. திறந்து வைக்கிறது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 2 மாதங்களில் முடிவடையும் என சொன்னார்கள்.
ஆனால், கனிமொழி எம்.பி.யாக இருப்பதால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் செயல்பட தொடங்கி உள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அ.தி.மு.க. மட்டுமே, அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது. ஆனால் அ.தி.மு.க.வை அடிமை கட்சி என விமர்சனம் செய்கிறது. ஒரு அடிமை தான் இன்னொரு வரை அடிமை என சொல்லுவார்கள். அதனால் தான் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எங்களை அடிமை என விமர்சனம் செய்கிறது. அரிதாரம் பூசியவனால் ஆட்சி நடத்த முடியுமா? என எம்.ஜி.ஆரை தி.மு.க. விமர்சனம் செய்தது.
ஆனால், தி.மு.க.வை 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல செய்தவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் மறைந்தும் தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். எம்.ஜி.ஆரின் புகழை பாடாதோர் எவருமுண்டா?, முதலமைச்சர் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என கூறினார். முதலமைச்சரின் பெரியப்பாவை கேலி, கிண்டல் செய்யும் தி.மு.க.வினரை முதல்வர் கண்டிக்க வேண்டாமா? என்றார்.
- பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார்.
வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வரும் அமித்ஷா கூட்டணி விரிவாக்கம், தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழகம் வரும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் கூற வாய்ப்பு உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- த.வெ.க. சார்பில் ஆட்டோ சின்னம் கேட்கப்பட்டிருந்தது.
- ஆட்டோ சின்னம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு சென்று விட்டதால், அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட சில சின்னங்களை குறிப்பிட்டு, அதில் ஒன்றை ஒதுக்க விஜய் தரப்பினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, த.வெ.க. சார்பில் ஆட்டோ சின்னம் கேட்கப்பட்டிருந்தது. இந்த சின்னம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு சென்று விட்டதால், அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் என்று சின்னம் கேட்கப்பட்ட நிலையில், மோதிரம் சின்னம் த.வெ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தன்னுடைய கட்சிக்கான சின்னத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார்.
- எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் கோவை மாவட்டத்திற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள எந்திரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் திறந்து பார்க்கப்பட்டு பின்னர் அந்த அறைக்கு சீல் வைப்பது வழக்கம்.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனையொட்டி இன்று கோவையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
அதன்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் 8,391 வாக்குப்பதிவு கருவி எனப்படும் பேலட் எந்திரங்கள், 5 ஆயிரத்து 245 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 5,885 வாக்குச்சீட்டு சரிபார்க்கும் கருவி எனப்படும் வி.வி.பேட் எந்திரம் என மொத்தம் 19,521 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் முதல்கட்ட சோதனை பணி இன்று கலெக்டர் பவன்குமார் தலைமையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
அப்போது கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார். இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளானது 1 மாதம் வரை நடைபெற உள்ளது. இதனை தினமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரிபார்க்கும் பணியில் 19 ஆயிரம் மின்னணு எந்திரங்களும் தற்போது எந்த நிலையில் உள்ளது என பரிசோதனை செய்யப்படும். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒட்டப்படும் பேலட் எந்திரத்தின் அனைத்து பொத்தான்களும் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து சரிபார்க்கப்படுகிறது. மேலும் அந்த எந்திரத்தில் உள்ள தேர்தல் கால தகவல்கள் அனைத்தும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் அழிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
- பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் பயன்படுத்தபட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்கியது. ஜனவரி 24-ந்தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பயன்படுத்த தற்போது 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.
அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களில் முதல் நிலை சரி பார்ப்பு பணி நாளை முதல் தொடங்க உள்ளது. பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து பிரதிநிதிகள் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது.
இதன்படி பிரதிநிதிகள் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் நாட்களில் காலை 8.45 மணி முதல் மாலை 7 மணிவரை எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் இருக்க வேண்டும்.
முதல் நிலை சரிபார்ப்பு பணியின் நிறைவாக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தவறாது மாதிரி வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
முதல் நிலை சரிபார்ப்பு பணியில் பழுதானது என கண்டறியப்படும் எந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.
- ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு அ.தி.மு.க.வும் தயாராகி உள்ளது. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயலாற்றி வருகிறார்.
இதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. மேலும் சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அ.தி.மு.க. தரப்பிலோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. டெல்லி சென்று திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாக தெரிவித்திருந்தார். இது போன்ற பரபரப்பான சூழலில் தான் சென்னை வானகரத்தில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அது பற்றி யாரும் பேசவும் இல்லை.
அதே நேரத்தில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் சிலர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தமிழகத்தில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய முடிவை எடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பது போன்ற நிலை உருவாகி இருக்கிறது.
இவர்களில் டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சி நடத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக கட்சியை தொடங்காமலேயே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்பதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கிற தனி அமைப்பை அவர் நடத்தி வருகிறார். இது அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத அமைப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த உரிமை மீட்பு குழுவை உரிமை மீட்பு கழகம் என ஓபிஎஸ் மாற்றியுள்ளார்.
அ.தி.மு.க.வில் அவரை சேர்ப்பதற்கு முட்டுக்கட்டை போட்டு பொதுக்குழுவில் கதவடைக்கும் சூழலை ஏற்படுத்தி இருப்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க.வில் இணையவே முடியாத சூழல் ஏற்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை புதுக்கட்சியாக மாற்றலாமா? என்பது பற்றியும் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுபோன்ற நிலை ஏற்பட்டால் புதுக்கட்சியை தொடங்கி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஓ. பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிச்சயம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஒருவேளை அது போன்ற சூழல் ஏற்படாவிட்டால் மட்டுமே அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றிய முடிவை பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவர் கூறினார்.
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறலாம்.
- அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் கூட்டணி ஜனவரி மாதத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி வருகிற 15-ந்தேதி விருப்பமனுவை பெறலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






