என் மலர்
சென்னை
- வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த போது அண்ணாமலை, 'தி.மு.க. பைல்ஸ்' என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.
அதில், தி.மு.க. பொருளாளரும், எம்பி.யுமான டி.ஆர்.பாலு, அவரது மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் டி.ஆர்.பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தன்னுடைய பெயருக்கும் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில் டி.ஆர்.பாலுவின் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இரு தரப்பிலும் ஆஜராகி இருந்த வக்கீல்கள் குறுக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைக்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி, குறுக்கு விசாரணையை ஜனவரி 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
- அ.தி.மு.க. என்பது பூமாலை அல்ல, கோபுரம். அதில் இருந்து உதிர்ந்த செங்கல் வைத்திலிங்கம்.
- 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லை என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை மெரினாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விரைவில் பதில் அளிப்பார்.
* டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.
* அ.தி.மு.க. என்பது பூமாலை அல்ல, கோபுரம். அதில் இருந்து உதிர்ந்த செங்கல் வைத்திலிங்கம்.
* 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
* 100 நாள் வேலை திட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் தொடர்ந்தால் மக்களுக்கு நல்லதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கண்டன ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், விபி-ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை இனி இல்லை என முழக்கமிட்டனர். மத்திய அரசின் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- மக்களுக்கு சில விழிப்புணர்வுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அபிநயாவை பாராட்டி வருகின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்காக பல்வேறு வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இருப்பினும் சில்லரை, பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாதது உள்ளிட்ட பல பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேர்கிறது. இதனிடையே, தற்போது மக்களின் பயன்பாட்டிற்காக மின்சார பேருந்து பல வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதில் பயணிகளுக்கான ஆலோசனைகளை ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு சிறிய செயல், ஒரு பெரிய மாற்றம் என்ற தலைப்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள வீடியோவில்,
பெரும்பாக்கம்- பிராட்வே வழித்தடத்தில் இயக்கப்படும் 102P மின்சார பேருந்தின் நடத்துனரான அபிநயா என்பவர், பயணத்தின் போது மக்களுக்கு சில விழிப்புணர்வுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அபிநயாவை பாராட்டி வருகின்றனர்.
- எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். அவரைத்தொடர்ந்து மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர்.
- தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி.
- திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் நினைவு நாள் இன்று.
தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி,
தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி,
திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று,
மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
- பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்!
தமிழர்கள் தலைகுனியாமல் - ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் - பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி!
பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு #ஓரணியில்_தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.
- வெள்ளி விலையோ தடையே இல்லாமல் உச்சத்தை எட்டுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை எகிறி காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 570-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 560-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து, நேற்றும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் பதிவு செய்துவிட்டது.
அதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரம் 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் கூட இடையில் சில நாட்கள் குறைகிறது. ஆனால் வெள்ளி விலையோ தடையே இல்லாமல் உச்சத்தை எட்டுகிறது.

நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்திருந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.234-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
அதனை தொடர்ந்து இன்றும் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 244 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160
22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560
21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
19-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-12-2025- ஒரு கிராம் ரூ.234
22-12-2025- ஒரு கிராம் ரூ.231
21-12-2025- ஒரு கிராம் ரூ.226
20-12-2025- ஒரு கிராம் ரூ.226
19-12-2025- ஒரு கிராம் ரூ.221
- ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்து இன்றளவும் தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகம்.
- அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் வாழ்நாள் வழிகாட்டி...
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழக வரலாற்றின்
மாபெரும் சகாப்தம்!
ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்து இன்றளவும் தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகம்.
அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் வாழ்நாள் வழிகாட்டி...
கறுப்பு-வெள்ளை-சிவப்பு மூவர்ணத்தையும் ,
இரட்டை இலையையும் தமிழகத்திற்கான பாதுகாப்பு அரணாய் விட்டு சென்று,
அ.தி.மு.க. எனும் எஃகு கோட்டையை உருவாக்கிய இதய தெய்வம், #எங்கள்_வாத்தியார்_MGR அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்.
நாற்காலிக்காக அரசியலுக்கு வராமல், நலிந்தவர்களின் நல்வாழ்விற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் நம் புரட்சித்தலைவர் அவர்கள்.
புரட்சித்தலைவரின் உடன்பிறப்புகளுக்கு வருகின்ற தேர்தல் களம், நம் தலைவர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தின் வலிமையை பறைசாற்றும் தளம்.
துரோகங்களை வீழ்த்தி, எதிரிகளை முறியடித்து, மீண்டும் ஏழை எளியோரின் ஆட்சியை,
இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழிவந்த , கழகத்தின் மூன்றாம் அத்தியாயம் ,மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரச்செய்ய புரட்சித் தலைவரின் நினைவு நாளில் உறுதியேற்போம்! என்று கூறப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கி உள்ளது.
- ‘கியூ ஆர்' குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுப்பியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால், மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழந்தன. அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாடு முழுவதும் போலி மருந்துகள் மற்றும் தரமற்ற மருந்துகளால் பொதுமக்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்களும் எழுகிறது. இதுபோன்ற மருந்துகள் குறித்து 104 என்ற எண்ணில் மட்டுமே பொதுமக்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கி உள்ளது. இதன் வாயிலாக, 'கியூ ஆர்' குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுப்பியுள்ளது.
அவற்றை அனைத்து மருந்தகங்களின் முகப்பிலும், பொதுமக்கள் எளிதில் தெரியும் வகையில் காட்சிப்படுத்த மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இனி, மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் பாதிப்பு குறித்து குறிப்பிட்ட 'கியூ ஆர்' குறியீடு வாயிலாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
- ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
- பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இன்று முதல் இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், கல்வியியல், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இன்று முதல் ஜனவரி 5-ந்தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.dcetransfer.in மற்றும் www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் தற்போதைய நிலையில் 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 582 ரேஷன் கார்டுகள் உள்ளன.
- பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடந்தது.
சென்னை:
தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பை மற்றும் கரும்பு வழங்கப்பட்டன. 2023-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு உள்பட ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டன.
அதேபோல 2024-ம் ஆண்டில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டன. அதோடு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ரொக்கத்தொகை மத்திய -மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை.
அதே சமயம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படவில்லை.
இதற்கிடையே வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன. அதோடு ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அது ரூபாய் ஆயிரமா?, ரூ.2 ஆயிரமா?, ரூ.3 ஆயிரமா அல்லது ஏன் ரூ.5 ஆயிரமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தால்தான் தெரியும். இருந்தாலும் வரும் பொங்கலுக்கு ரொக்கப்பணம் வழங்குவது மட்டும் உறுதியாகி உள்ளது.
ஏனென்றால் அதற்கான முக்கிய காரணம் சட்டசபை தேர்தல் தான். தமிழகத்திற்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்பட்டு வந்தாலும், அதற்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் வெளியாகிவிடும். எனவே தேர்தலை தமிழகம் சந்திக்கவுள்ள நிலையில் ரொக்க பணம் அரசு வழங்கும் என்று மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஏனென்றால் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அ.தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி-திராட்சை, ஏலக்காய், ஒரு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கினார்.
எனவே சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளதால் கடந்த முறை அ.தி.மு.க. அரசு வழங்கியதை விட கூடுதலாக தி.மு.க. அரசு வழங்கும் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியும், பொங்கல் ரொக்க பணமாக ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 582 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த எண்ணிக்கையில் உள்ள அனைத்து கார்டுகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வழங்கினால் தமிழக அரசுக்கு ரூ.6 ஆயிரத்து 817 கோடி தேவைப்படும். அதுவே ரூ.5 ஆயிரம் என்றால் ரூ.11 ஆயிரத்து 361 கோடி தேவை ஆகும்.
தமிழக அரசை பொறுத்தவரை ஏற்கனவே மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை, முதியோர்- விதவை- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கி வருகிறது.
அதோடு 100 யூனிட் இலவச மின்சார மானியம், பெண்கள் விடியல் பயணம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிதி சுமை இருந்தாலும், பொங்கலுக்கு ரொக்க தொகை வழங்குவது உறுதி என்று கோட்டை வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் அல்லது ஜனவரி மாத தொடக்கத்திலேயே அறிவிக்க உள்ளார்.
அதற்கிடையில் பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. அதில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு டோக்கன் கொடுப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்தாண்டு டோக்கன் கொடுக்கும் பணி 7-ந்தேதியும், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி 11-ந்தேதியும் தொடங்கியது. அதே போல், இந்த பணி தொடங்குமா? அல்லது முன்னதாக தொடங்குமா? என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும்.






