என் மலர்
சென்னை
- ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா்.
- இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆா்.என். ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடா்ந்து, கேரள கவர்னர் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டாா்.
இதை தொடர்ந்து ஆா்.வி.ஆா்லேகா் நாளை மறுநாள்(புதன்கிழமை) சென்னைக்கு வருகிறாா். அதே நாளில் ஆா்.என்.ரவி, தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அவரை கவர்னர் மாளிகை அதிகாரிகளும், ஊழியா்களும் வழியனுப்பி வைக்கின்றனா்.
இதையடுத்து தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆா்.வி.ஆா்லேகா் 12-ந்தேதி மதியம் 12 மணியளவில் பதவி ஏற்கிறாா். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.
- 11-ந்தேதி வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் தமிழகத்திலிருந்து கடலோர கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
11-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
12-ந்தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
13-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
14 மற்றும் 15-ந்தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இதனிடையே 12 மற்றும் 13-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- திமுக அரசின் காவல்துறை கைது செய்து அடைத்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
- மக்களிடம் மனு வாங்கக் கூட இன்றைய பொம்மை முதல்வருக்கு மனமில்லையா?
மனு அளிக்க வந்த விவசாயிகளை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் வாயிலில் வைத்து கைது செய்வதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமடைந்தார்.
இதுகுறித்து இபிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட விவசாய விளைநிலங்களை அரசு திட்டத்திற்காக கையாகப்படுத்துவதை எதிர்த்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின்-ஐ சந்தித்து மனு கொடுக்க வந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் வாசலிலேயே வைத்து அவர்களை திமுக அரசின் காவல்துறை கைது செய்து அடைத்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு முதல்வராக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பார்த்தால், மக்களிடம் மனு வாங்கக் கூட இன்றைய பொம்மை முதல்வருக்கு மனமில்லையா?
கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு மக்களிடம் மனு கேட்டு பெட்டியோடு அலைந்தவர், ஆட்சியில் இருக்கும் போது ஏழை விவசாயிகளின் மனுவைப் பெறக் கூட மனமின்றி இருப்பது திரு. ஸ்டாலினின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்து, அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் மனுவைப் பெறவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 4 பேர் கொண்ட தேர்வு குழுவினர் நாளை மறுநாள் சென்னை வருகிறார்கள்.
- ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் பெயரை இந்த குழுவினர் தேர்வு செய்வார்கள்.
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அகில இந்திய தலைமை நியமித்துள்ள சிங்தியோ தலைமையிலான 4 பேர் கொண்ட தேர்வு குழுவினர் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை வருகிறார்கள்.
சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்கள்.
அப்போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் அந்த தொகுதியில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பற்றி முடிவு செய்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் பெயரை இந்த குழுவினர் தேர்வு செய்வார்கள்.
இந்த குழுவினரின் தேர்வு பட்டியலின் அடிப்படையில் எந்தெந்த தொகுதிகள் என்று தி.மு.க.வுடன் பேசி முடிவு செய்ததும் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான 3 நபர்களை தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்புவார்கள். அதன் பிறகு டெல்லி ஒப்புதல் அளித்ததும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார்.
- குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல்துறை தடுக்காமல் இருந்ததை எப்படி மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்த முடியும்?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்றைய தினம் பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதை சுட்டிக்காட்டினேன்.
இன்றைய தினம் (தற்போது வரை) செய்திகளில் வந்துள்ள "கொலை நிலவரத்தை" சுட்டிக்காட்ட விழைகிறேன்.
-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, முதியவர் கொலை செய்யப்பட்டு, மூதாட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை
-சென்னை திரிசூலத்தில் குடிசையில் தங்கியிருந்த இருவர் படுகொலை
-தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி படுகொலை
இப்படி தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது.
முதியோருக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு கொடூரமான நிலை? இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய பொம்மை முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியுள்ளாரா?
தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார்.
குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல்துறை தடுக்காமல் இருந்ததை எப்படி மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்த முடியும்?
ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் "அங்கொன்றும் இங்கொன்றுமாக" கொலைகள் நடக்கவில்லை. "எங்கும் கொலை, எப்போதும் கொலை" தான் நடக்கிறது.
நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்!
மேற்கூறிய வழக்குகளில் குற்றம் இழைத்தோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தனது ஆட்சியின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
- ராமதாஸ் தொடர்ந்த இந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.
- ராமதாஸ் தரப்பில் பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவைகளை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது, அதற்கு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உரிமையியல் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'டாக்டர் ராமதாசுக்கு தற்போது 87 வயது ஆகிறது. உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களால், அவரால் கட்சி தொடர்பான நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி சிலர் அவரை தவறாக வழி நடத்துகின்றனர்.
ராமதாஸ் தன்னைத்தானே பா.ம.கவின் தலைவர் என அறிவித்துக் கொண்டது கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. பா.ம.க.வின் நிறுவனர் என்ற அடிப்படையில் பா.ம.க. கட்சியில் ஆலோசனை வழங்கி, கட்சியின் வழிகாட்டுதலை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால் கட்சியின் முடிவுகளை எடுக்க பா.ம.க.வின் பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. பொதுக்குழு மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுக்க உரிமை உள்ளது.
ராமதாஸ் தொடர்ந்த இந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. பா.ம.க. கட்சியில் உரிமை கோரி வழக்கு தொடர நிறுவனருக்கு உரிமை, அதிகாரம் இல்லை. தன்னை தானே தலைவர் என ராமதாஸ் அறிவித்து கொண்டு விதிகளை திருத்தியதை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
அன்புமணி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு வருகிற 11-ந்தேதிக்குள் ராமதாஸ் தரப்பில் பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
- கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது.
- சென்னையில் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது. இதன் மூலம் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என கூறிய நிலையில், சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தியதையை திரும்பப் பெற கோரி சென்னை, குறளகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழகம் முழுவதும் 4954 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
- அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதனால் அரசு பொது தேர்வுகளை விரைவாக முடிக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் 11-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 4219 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கின செயல்களை ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் 4954 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகிறது.
வினா தாள்கள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகாமல் இருக்கவும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு விடைத்தாள்கள் அன்று காலையில் செல்வதற்கான ஏற்பாடுகள் கல்வி அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்விற்கும் போதுமான இடைவெளி விடப்பட்டுள்ளது மாணவர்கள் அனைத்து தேர்வையும் படித்து எழுதுவதற்கு வசதியாக அதிக விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
- விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
- புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்தை இன்று மறுதணிக்கை செய்யப்படும் என அறிவித்த நிலையில், கமிட்டி உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் படம் பார்ப்பது ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என அழுத்தம் தரப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கரூர் வழக்கிற்காக நாளை சி.பி.ஐ. முன் விஜய் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதும் அரசியல் அழுத்தமே என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
- சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை வெளியிடக் கோருகிறோம்.
- வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் வருகிற மார்ச் 12-ஆம் தேதி த.வெ.க. சார்பில் தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் என். ஆனந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.
அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.
இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் 12ஆம் தேதி (12.03.2026) காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.
- வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
- கட்சி தொடங்கியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் அறிவித்த பிறகும் எந்த கட்சியும் அவருடன் கைகோர்க்கவில்லை.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் வரப்போகும் 2026 தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்து உள்ளது.
வழக்கமாக தேர்தல் காலங்களில் 3 முதல் 4 முனை போட்டிகள் கூட ஏற்படும். ஆனால் கடைசியில் இருமுனை போட்டியே பலமாக இருக்கும். அந்த வகையில் இறுதியில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் மல்லுகட்டும். கடைசியில் இரண்டில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
ஆனால் இந்த முறை நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அந்த சூழ்நிலைக்கு சவால் விடும் சூழலை உருவாக்கி விட்டு உள்ளது. அதற்கு காரணம் அவருக்கு திரளும் ரசிகர்கள் கூட்டம்தான்.
அது வெறும் ரசிகர்கள் கூட்டம் தான், தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்று முன்னணி கட்சிகளை உதட்டளவில் பேச வைத்தாலும் விஜய்க்கு திரளும் ரசிகர்கள் எண்ணிக்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி விடுமோ என்று மற்ற கட்சிகளை உள்ளூர யோசிக்க வைத்துள்ளது.
ஆரம்ப கட்டத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்படி ஒரு கூட்டணி அமைந்திருந்தால் அதுவும் வலிமையான கூட்டணியாகவே இருந்து இருக்கும்.
இதை உணர்ந்த தி.மு.க.வும் காங்கிரசை வெளியேற விடாமல் 3 தொகுதிகளை கூடுதலாக கொடுத்து தக்க வைத்துக் கொண்டது. இப்போதைய நிலையில் தி.மு.க. அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட 26 கட்சிகள் இடம்பெற்று மெகா கூட்டணி தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று உள்ளன. வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
கட்சி தொடங்கியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் அறிவித்த பிறகும் எந்த கட்சியும் அவருடன் கைகோர்க்கவில்லை.
தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே லட்சியம் என்று விஜய் கூறிவந்தாலும் அதற்கான வியூகத்தை அவர் பலமாக வகுக்கவில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். காங்கிரசை இழுக்க த.வெ.க. முயற்சித்ததைபோல் அ.தி.மு.க.-பா.ஜ.க. அணியில் த.வெ.க.வை இணைக்க நடத்தப்பட்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம் முதல்வர் பதவியை விஜய் தரப்பில் விட்டுக்கொடுக்க முன்வராதது தான்.
ஆனால் இப்போது கள நிலவரம் மாறிவிட்டது. தி.மு.க. காங்கிரசை தக்க வைத்ததோடு தே.மு.தி.க.வையும் தங்கள் பக்கம் இழுத்து கூட்டணியை வலுப்படுத்தி வைத்துள்ளது.
இப்போதைய சூழ்நிலையில் தி.மு.க. அணியை எதிர்த்து தேர்தல் போட்டியில் வெற்றி பெற எதிரணியும் பலமாக இருக்க வேண்டும்.
எனவே, அ.தி.மு.க. அணியில் த.வெ.க.வும் இணைய வேண்டும் என்ற கருத்து அந்த கட்சி தொண்டர்களிடமும் எழுந்துள்ளது. ஏற்கனவே த.வெ.க.வுக்கு 24 முதல் 25 சதவீத வாக்குவங்கி இருப்பதாக அந்த கட்சி மதிப்பிட்டுள்ளது. அதே அளவுக்கு அ.தி.மு.க.வுக்கும் வாக்கு வங்கி உள்ளது. எனவே தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேற அ.தி.மு.க.வுடன் கை கோர்க்க வேண்டும் என்று த.வெ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இதை விஜய் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளதாகவும் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே த.வெ.க.வை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் சேர்க்க பல தரப்பிலும் ரகசிய முயற்சிகள் நடந்து வருவதாக கடந்த சில நாட்களாகவே தக வல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், த.வெ.க.கட்சிக்குள்ளும் அந்த உணர்வை ஏற்படுத்தி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1-ந்தேதி அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 2-ந்தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.815-ம் சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 520-ம் குறைந்து இருந்தது. தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை விலை அதிகரித்து சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கும் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
07-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
06-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
05-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960
04-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,21,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-03-2026- ஒரு கிராம் ரூ.290
07-03-2026- ஒரு கிராம் ரூ.290
06-03-2026- ஒரு கிராம் ரூ.290
05-03-2026- ஒரு கிராம் ரூ.295
04-03-2026- ஒரு கிராம் ரூ.295






