என் மலர்
நீங்கள் தேடியது "Central govt"
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
- மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது.
20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- அரசியல் ரீதியாகவோ, நடப்பு விவகாரங்களிலோ அரசையோ, பிரதமரையோ விமர்சித்து வீடியோவோ அல்லது தகவலோ யாருக்கும் அனுப்ப வேண்டாம்.
- மீறினால் போலீசார் நோட்டீசு அனுப்புவதோடு, தண்டனைக்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் வாட்ஸ்அப் செயலியை தங்களது செல்போன்களில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு விடுக்கும் தகவல் தொடர்பு விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்து உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அதில், வாட்ஸ்அப்பில் செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் கண்காணிக்கப்படும். ஒவ்வொருவரின் செல்போன் எண்களும், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தோடு இணைக்கப்படும். எனவே அரசியல் ரீதியாகவோ, நடப்பு விவகாரங்களிலோ அரசையோ, பிரதமரையோ விமர்சித்து வீடியோவோ அல்லது தகவலோ யாருக்கும் அனுப்ப வேண்டாம். அதை மீறினால் போலீசார் நோட்டீசு அனுப்புவதோடு, தண்டனைக்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது தவறான தகவல். மத்திய அரசு இதுபோன்ற ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை" என்று கூறப்பட்டு உள்ளது.
- U/A சான்றிதழை உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ‘ஜன நாயகன்’ படம் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், முதலில் விஜய் ரசிகர் மன்றத்தை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு உதவிகளை வழங்கி வந்தார். ஒரு புறம் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுவது தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்க்கு பிரச்சனைகள் ஆரம்பித்து என்றே சொல்லலாம். அதாவது 'தலைவா', 'மெர்சல்' படங்கள் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து படங்கள் வெளியாகின.
இதனிடையே, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'தமிழ வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கிய விஜய், அதே ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் தனது அரசியல் திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்தார். இதற்கு பிறகு அவரை சுற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய், கட்சியை பலப்படுத்தும் வேளைகளிலும், சட்டசபை தேர்தலை நோக்கி தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதனிடையே, தனது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்தார். இதனால் 'ஜன நாயகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்த விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கினார். இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வருகிற திங்கட்கிழமை ஆஜராகும் படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 'ஜன நாயகன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழு சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் U/A சான்றிதழை உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் சென்சார் போர்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முறையிடுவதாகவும் அதனை வருகிற திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டு உள்ளது. இதனால் 'ஜன நாயகன்' படம் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது.
சென்சார் போர்டு வழக்கை தாக்கல் செய்தால் இன்றே விசாரிப்பதாக நீதிமன்றமே கூறும் நிலையில், தணிக்கை குழு ஏன் திங்கட்கிழமைக்கு விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறது என்ற வினா எழச்செய்கிறது. அதாவது, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற திங்கட்கிழமைசி.பி.ஐ. விசாரணை முன்பு விஜய் ஆஜராகிறார். இவ்விரு விஷயங்களை வைத்து விஜய்க்கு அழுத்தம், நெருக்கடி தரப்படுவதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, கரூர் விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து பா.ஜ.க.வும், 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து காங்கிரசும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தன.
எனவே, வருகிற சட்டசபை தேர்தலை மையமாக கொண்டு விஜயை கூட்டணியில் இழுக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், விஜய் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
- இந்தியா இப்போது முழு சுதந்திரத்துடன் அணைகளை வடிவமைக்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள நதிநீர் ஆதாரங்களை முழுமையாகப் பயன்படுத்தவும், பிராந்தியத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்திய அரசு தனது நீர்மின் திட்டங்களை அதிவேகமாக முடுக்கிவிட்டுள்ளது.
குறிப்பாக, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா 2025-இல் முறைப்படி நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, இந்தப் பணிகள் இன்னும் வேகம் பெற்றுள்ளன.
மத்திய அரசு மற்றும் தேசிய நீர்மின் கழகம் இணைந்து சுமார் 3,000 மெகாவாட்டிற்கு அதிகமான மின் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு பெரிய திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன.
அதன்படி, பகல் துல் - 1000 மெகாவாட்(MW): செனாப் நதியின் கிளை நதியான மருசுதார் நதியில் அமைகிறது. இது செப்டம்பர் 2026-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராட்லே - 850 MW: செனாப் நதியின் குறுக்கே அமையும் இந்தத் திட்டம் மே 2026-இல் மின் உற்பத்தியைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரு - 624 MW: கிஷ்த்வார் மாவட்டத்தில் அமையும் இத்திட்டம் டிசம்பர் 2026-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குவார்- 540 MW: இது 2028-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 2025-இல் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதனால், நதிநீரைத் தேக்கி வைப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் நீங்கி, இந்தியா இப்போது முழு சுதந்திரத்துடன் அணைகளை வடிவமைக்கிறது.
நீண்ட காலத்திற்குப் பிறகு சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. இது மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும்.
அண்மையில் (டிசம்பர் 2025 இறுதியில்), செனாப் நதியில் துல்ஹஸ்தி நிலை-II (260 MW) மற்றும் சவல்கோட் (1,856 MW) ஆகிய பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் தங்களுக்கு வரும் நதிநீர் குறையும் என்று பாகிஸ்தான் சர்வதேச அளவில் முறையிட்டு வருகிறது. இருப்பினும், தனது இறையாண்மை மற்றும் வளர்ச்சி நலன்களின் அடிப்படையில் இந்தியா பணிகளைத் தொடர்ந்து வருகிறது.
- 2025-ம் ஆண்டில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடந்தது.
- பெரிய மாநிலங்களில் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 'தமிழ்நாடு' பெயர் பெறப்போகிறது.
சென்னை:
ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் ஒரு சக்திவாய்ந்த கருவி, எழுத்தறிவு. மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் 100 சதவீதம் எழுத்தறிவு பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், 95 சதவீதத்தை தாண்டினாலே அது முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கருதப்படுகிறது. ஏனென்றால், மிகவும் வயதானவர்கள், தன்னிச்சையாக செயல்பட முடியாதவர்களால் எழுத்தறிவை பெற முடியாது என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை 2027-ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களும் எட்டிவிட வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு திட்டங்களை வகுக்கிறது.
இந்த எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவும், நிதிசார் கல்வி, டிஜிட்டல் கல்வி மற்றும் முக்கியமான வாழ்க்கைத் திறன் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வும் நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறுபவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
மத்திய அரசு 2027-ல் இலக்கை நிர்ணயித்தாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த நிலையை கடந்த ஆண்டிலேயே (2025) அடைந்துவிட்டோம். ஆனாலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் முறையாக இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த ஒப்புதலுக்காகவும், அந்த ஒப்புதல் அளித்ததும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காகவும் தமிழ்நாடு அரசு ஆவலோடு காத்திருக்கிறது.
95 சதவீதத்தை தாண்டுவது மட்டுமல்லாமல், முடிந்த வரை 100 சதவீதத்தை எப்படியாவது நெருங்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழ்நாடு அரசும் எழுத்தறிவு பயிற்சி வழங்கி, அதன் மூலம் தேர்வை நடத்தி வருகிறது. 2025-ம் ஆண்டில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடந்தது. ஜூனில் நடந்த தேர்வை 5 லட்சத்து 38 ஆயிரத்து 29 பேரும், டிசம்பரில் நடந்த தேர்வை 9 லட்சத்து 63 ஆயிரத்து 169 பேரும் என மொத்தம் 15 லட்சத்து ஆயிரத்து 38 பேர் எழுதியுள்ளனர். இதன் தேர்ச்சியும், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்ற அறிவிப்பும் ஒருசேர வரும் சூழல் இருக்கிறது.
அப்படி அறிவிப்பு வந்தால், முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெறும். இதற்கு முன்பு மிசோரம், கோவா, திரிபுரா, இமாசல பிரதேசம், லடாக் ஆகிய மாநில, யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன.
இவைகள் எல்லாவற்றிலும் மக்கள் தொகை என்பது மிகவும் குறைவு. இந்த மாநிலங்களின் மக்கள் தொகையைவிட பல மடங்கு அதிகம் கொண்டவையாக தமிழ்நாடு உள்ளது. அந்த வகையில் பெரிய மாநிலங்களில் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 'தமிழ்நாடு' பெயர் பெறப்போகிறது.
கேரளாவை பொறுத்தவரையில், 1991-ம் ஆண்டிலேயே யுனெஸ்கோ அமைப்பால் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
- விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது. இந்த வகையில் தற்போது 100 மி. கிராமுக்கு மேலான 'நிம்சுலைடு' மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில்,
"100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், அந்த மருந்துக்கு பாதுகாப்பான மாற்றுகள் கிடைக்கின்றன என்றும் மத்திய அரசு அறிந்துள்ளது. மனித பயன்பாட்டுக்காக நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே, மருந்து பொருட்கள் சட்டப்பிரிவுகளின்படி 100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் தடை செய்யப்படுகின்றன" என கூறப்பட்டுள்ளது.
- கீழடியில் இதுவரை 4 சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
- இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வுகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இது சங்க கால தமிழர்களின் நாகரிகத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
10ம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பித்ததை அடுத்து 11ம் கட்ட அகழாய்விற்கு அனுமதி வழங்கியது.
கீழடியில் இதுவரை 4 சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நதிக்கரை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்களை வெளிக்கொணரத் திட்டமிடப்பட்டுள்ளது.
கீழடி மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளிலும் விரிவான ஆய்வுகள் தொடர வாய்ப்புள்ளது.
இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வுகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
- சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து.
- கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ் காலத்தில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என்பதை விட இந்திய இறையாண்மை மீதான தாக்குதல் ஆகும். இதன் தாக்கம் லண்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்பட வெளிநாடுகளில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
வங்காள தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் பாதுகாப்புக்கும் பிரதமர் மோடிதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தமிழகத்திற்கு ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் வர இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த கட்சியும் எங்களை நசுக்க எல்லாம் முடியாது. பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடைசி நேரத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் காங்கிரசுக்கு சிக்கல்கள் உருவானது.
அதனால்தான் முன்கூட்டியே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காங்கிரசை பலப்படுத்த ஆட்சி, அதிகாரம் அவசியம் என்பதை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்து உள்ளார்.
எங்கள் குழுவின் தலைவர் அவர்தான். தமிழக காங்கிரசுக்கும் அந்த நிலைப்பாடுதான். எங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து. அதேபோல்தான் திருச்சி வேலுசாமி கூறி இருப்பதும் அவரது கருத்துதான். காங்கிரசின் கருத்து அல்ல.
கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது. மீதி வாக்குறுதிகளையும் எஞ்சிய காலத்தில் நிறைவேற்றி விடும். ஆசிரியர்கள், நர்சுகள் போராட்டத்திலும் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என்றார்.
பேட்டியின் போது முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், சுமதி அன்பரசு, தாம்பரம் நாராயணன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ராம்மோகன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர் முத்தழகன், டி. என்.அசோகன், புத்தநேசன், ஜி.தமிழ் செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. யசோதாவின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள்.
- திட்டம் குறித்த விரிவான விவரங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விரிவான ஆய்வுக்காக பொது-தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாரணாசி, புவனேஸ்வரம், அமிர்தசரஸ், ராய்ப்பூர், திருச்சி உள்பட 11 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதை மத்திய அரசு வேகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் ஆய்வு செய்தது.
திட்டம் குறித்த விரிவான விவரங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான ஆய்வுக்காக பொது-தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி உள்ளிட்ட 5 பெரிய விமான நிலையங்களும், திருப்பதி உள்ளிட்ட 6 சிறிய விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டு குத்தகைக்கு விடப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி முரளிதர் மோஹோல் ஏற்கனவே கூறியுள்ளார்.
- டாலர், யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது.
- ரூபாய்க்கான புதிய குறியீடு 2010-ம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நிதிநிலை அறிக்கை குறித்த முன்னோட்ட காணொலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 13-ந்தேதி அன்று வெளியிட்டார். அதில் இருந்த ஒரு படம், நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை முன்னோட்ட காணொலியை வெளியிட்டார். இந்த காணொலியில் நிதிநிலை அறிக்கை குறித்த இலச்சினையில் ரூபாயை குறிக்கும் குறியீடாக 'ரூ'-வை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, கல்விக்கு நிதி வழங்காதது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்து நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் லோகோவில் தேவநாகிரி எழுத்தான '₹' குறியீட்டுக்கு பதிலாக 'ரூ' என மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் ரூபாய் அதிகாரப்பூர்வமான பணமாக அறிவிக்கப்பட்டது. இந்திய ரூபாய்க்கென தனி குறியீடு கடந்த 2010-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த புதிய குறியீட்டை வடிவமைத்தவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுபவருமான டி. உதயகுமார். டாலர், யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த வரிசையில் இந்திய ரூபாயும் சேர்ந்தது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார் வடிவமைத்த நிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்து அரசுப் பயன்பாட்டில் சேர்த்தது. ரூபாய்க்கான புதிய குறியீடு 2010-ம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டுகூட தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு பட்ஜெட் இலச்சினை 'ரூ' என மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.
மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ரூபாய் குறியீடு பட்ஜெட் இலச்சினையில் மாற்றப்பட்டதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தேசிய ரூபாய் குறியீட்டை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல்முறை என்றும், மத்திய அரசின் மீதான எதிர்ப்பின் காரணமாக தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசப்பட்டது.

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரபூர்வ ரூபாய் சின்னமான '₹'-ஐ தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
இதுகுறித்து அப்போதைய பா.ஜ.க. மாநில தலைவரான அண்ணாமலை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
- ஆரவல்லி மலைத்தொடர் பூகம்பம், நில அரிப்பு, காலநிலை மாற்றங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும்.
- இங்கு புதிய சுரங்க பணிக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
புதுடெல்லி:
ஆரவல்லி மலை குஜராத், ராஜஸ்தான், அரியானா மற்றும் டெல்லி முழுவதும் பரவியுள்ளது. 34 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீத பகுதியில் பரவியுள்ளது. புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உள்பட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன.
மிகப் பெரிய பூகம்பங்கள், அரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் என அனைத்தையும் தாங்கி நிலைத்தும், உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகவும் உள்ளது இந்த மலைத்தொடர்.
இதற்கிடையே, ஆரவல்லி மலை தொடரின் மொத்த பரப்பளவான 1.44 லட்சம் சதுர கிலோமீட்டரில் 0.19 சதவீத பகுதிகளில் மட்டுமே சுரங்கப் பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளோம் என மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக அரசு இயற்கை வளங்களை விற்று வருகின்றன என கண்டனம் தெரிவித்தன.
இதேபோல் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி புதிய நிலையான சுரங்கத் திட்டங்கள் தயாரிக்கப்படும் வரை, ஆரவல்லி மலைத்தொடரில் எந்தவொரு புதிய சுரங்கக் குத்தகைகளையும் வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
- திருப்பரங்குன்றம் பிரச்சனையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது.
- அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் டி.டி.வி.தினகரனையோ, ஓ.பி.எஸ்.சையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா? இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ்கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ் நாட்டின் அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால் நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது.
சாக்கு போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இருமுனைப் போட்டி என்பதை முன் வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும்.
மு.க.ஸ்டாலினை 2-வது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை. எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.5 ஆயிரம் கொடுத்து இருக்கலாம், கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும்.
திருப்பரங்குன்றம் பிரச்சனையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது. முதல்முறையாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக எதைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்பதற்காக பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். உடன் சேர்ந்து போட்ட திட்டம். அது இன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள் அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பது தெரியும்.
செவிலியர் போராட்டம் உள்ளிட்டவைகளால் எந்த நெருக்கடியும் வராது. எல்லா நெருக்கடியும் சுலபமாக தீர்க்கப்படும். நிச்சயமாக அனைவரின் ஆதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பார்ட்-2 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடரும். அ.தி.மு.க.வால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது.
அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியினுடைய கருத்துக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை. அனைவரும் தி.மு.க.வை நோக்கி வந்தால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். தி.மு.க.வை சொல்லித்தான் பேச முடியும். தி.மு.க.தான் எதிரி என்று சொன்னால் தான் திரும்பி பார்ப்பார்கள். அதனால்தான் தி.மு.க.வை சொல்லி வருகின்றனர். இதிலிருந்தே தி.மு.க. என்பது தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நயினார் நாகேந்திரனுக்கு நாடக கம்பெனி எல்லாம் பழைய காலத்தில்தான் இருந்தது. தற்போது வள்ளி திருமணம் நாடகம் எல்லாம் போட்டால் யாரும் போய் பார்ப்பதில்லை. அதனால் அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து தற்போது தான் விழித்துள்ளார். நல்ல அறிக்கைகளையும், நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தருகின்ற தேர்தல் அறிக்கைக்குழுதான் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு என்றார்.






