என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central govt"

    • கீழடியில் இதுவரை 4 சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
    • இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வுகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இது சங்க கால தமிழர்களின் நாகரிகத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

    10ம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பித்ததை அடுத்து 11ம் கட்ட அகழாய்விற்கு அனுமதி வழங்கியது.

    கீழடியில் இதுவரை 4 சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நதிக்கரை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்களை வெளிக்கொணரத் திட்டமிடப்பட்டுள்ளது.

    கீழடி மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளிலும் விரிவான ஆய்வுகள் தொடர வாய்ப்புள்ளது.

    இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வுகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    • சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து.
    • கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ் காலத்தில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என்பதை விட இந்திய இறையாண்மை மீதான தாக்குதல் ஆகும். இதன் தாக்கம் லண்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்பட வெளிநாடுகளில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

    வங்காள தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் பாதுகாப்புக்கும் பிரதமர் மோடிதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தமிழகத்திற்கு ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் வர இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த கட்சியும் எங்களை நசுக்க எல்லாம் முடியாது. பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடைசி நேரத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் காங்கிரசுக்கு சிக்கல்கள் உருவானது.

    அதனால்தான் முன்கூட்டியே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காங்கிரசை பலப்படுத்த ஆட்சி, அதிகாரம் அவசியம் என்பதை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்து உள்ளார்.

    எங்கள் குழுவின் தலைவர் அவர்தான். தமிழக காங்கிரசுக்கும் அந்த நிலைப்பாடுதான். எங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து. அதேபோல்தான் திருச்சி வேலுசாமி கூறி இருப்பதும் அவரது கருத்துதான். காங்கிரசின் கருத்து அல்ல.

    கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது. மீதி வாக்குறுதிகளையும் எஞ்சிய காலத்தில் நிறைவேற்றி விடும். ஆசிரியர்கள், நர்சுகள் போராட்டத்திலும் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என்றார்.

    பேட்டியின் போது முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், சுமதி அன்பரசு, தாம்பரம் நாராயணன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ராம்மோகன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர் முத்தழகன், டி. என்.அசோகன், புத்தநேசன், ஜி.தமிழ் செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. யசோதாவின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள்.

    • திட்டம் குறித்த விரிவான விவரங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • விரிவான ஆய்வுக்காக பொது-தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    வாரணாசி, புவனேஸ்வரம், அமிர்தசரஸ், ராய்ப்பூர், திருச்சி உள்பட 11 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதை மத்திய அரசு வேகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் ஆய்வு செய்தது.

    திட்டம் குறித்த விரிவான விவரங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான ஆய்வுக்காக பொது-தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    திருச்சி உள்ளிட்ட 5 பெரிய விமான நிலையங்களும், திருப்பதி உள்ளிட்ட 6 சிறிய விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டு குத்தகைக்கு விடப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி முரளிதர் மோஹோல் ஏற்கனவே கூறியுள்ளார்.

    • டாலர், யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது.
    • ரூபாய்க்கான புதிய குறியீடு 2010-ம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

    தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நிதிநிலை அறிக்கை குறித்த முன்னோட்ட காணொலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 13-ந்தேதி அன்று வெளியிட்டார். அதில் இருந்த ஒரு படம், நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது.

    முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை முன்னோட்ட காணொலியை வெளியிட்டார். இந்த காணொலியில் நிதிநிலை அறிக்கை குறித்த இலச்சினையில் ரூபாயை குறிக்கும் குறியீடாக 'ரூ'-வை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது.

    மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, கல்விக்கு நிதி வழங்காதது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்து நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் லோகோவில் தேவநாகிரி எழுத்தான '₹' குறியீட்டுக்கு பதிலாக 'ரூ' என மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

    சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் ரூபாய் அதிகாரப்பூர்வமான பணமாக அறிவிக்கப்பட்டது. இந்திய ரூபாய்க்கென தனி குறியீடு கடந்த 2010-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த புதிய குறியீட்டை வடிவமைத்தவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுபவருமான டி. உதயகுமார். டாலர், யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த வரிசையில் இந்திய ரூபாயும் சேர்ந்தது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார் வடிவமைத்த நிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்து அரசுப் பயன்பாட்டில் சேர்த்தது. ரூபாய்க்கான புதிய குறியீடு 2010-ம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

     

    இந்த நிலையில், கடந்த ஆண்டுகூட தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு பட்ஜெட் இலச்சினை 'ரூ' என மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

    மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ரூபாய் குறியீடு பட்ஜெட் இலச்சினையில் மாற்றப்பட்டதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தேசிய ரூபாய் குறியீட்டை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல்முறை என்றும், மத்திய அரசின் மீதான எதிர்ப்பின் காரணமாக தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசப்பட்டது.

     

    தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரபூர்வ ரூபாய் சின்னமான '₹'-ஐ தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.

    இதுகுறித்து அப்போதைய பா.ஜ.க. மாநில தலைவரான அண்ணாமலை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர். 

    • ஆரவல்லி மலைத்தொடர் பூகம்பம், நில அரிப்பு, காலநிலை மாற்றங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும்.
    • இங்கு புதிய சுரங்க பணிக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    ஆரவல்லி மலை குஜராத், ராஜஸ்தான், அரியானா மற்றும் டெல்லி முழுவதும் பரவியுள்ளது. 34 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீத பகுதியில் பரவியுள்ளது. புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உள்பட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன.

    மிகப் பெரிய பூகம்பங்கள், அரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் என அனைத்தையும் தாங்கி நிலைத்தும், உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகவும் உள்ளது இந்த மலைத்தொடர்.

    இதற்கிடையே, ஆரவல்லி மலை தொடரின் மொத்த பரப்பளவான 1.44 லட்சம் சதுர கிலோமீட்டரில் 0.19 சதவீத பகுதிகளில் மட்டுமே சுரங்கப் பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளோம் என மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக அரசு இயற்கை வளங்களை விற்று வருகின்றன என கண்டனம் தெரிவித்தன.

    இதேபோல் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி புதிய நிலையான சுரங்கத் திட்டங்கள் தயாரிக்கப்படும் வரை, ஆரவல்லி மலைத்தொடரில் எந்தவொரு புதிய சுரங்கக் குத்தகைகளையும் வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    • திருப்பரங்குன்றம் பிரச்சனையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது.
    • அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் டி.டி.வி.தினகரனையோ, ஓ.பி.எஸ்.சையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா? இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ்கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ் நாட்டின் அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால் நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது.

    சாக்கு போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இருமுனைப் போட்டி என்பதை முன் வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும்.

    மு.க.ஸ்டாலினை 2-வது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை. எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.5 ஆயிரம் கொடுத்து இருக்கலாம், கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் பிரச்சனையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது. முதல்முறையாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக எதைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்பதற்காக பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். உடன் சேர்ந்து போட்ட திட்டம். அது இன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள் அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பது தெரியும்.

    செவிலியர் போராட்டம் உள்ளிட்டவைகளால் எந்த நெருக்கடியும் வராது. எல்லா நெருக்கடியும் சுலபமாக தீர்க்கப்படும். நிச்சயமாக அனைவரின் ஆதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பார்ட்-2 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடரும். அ.தி.மு.க.வால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது.

    அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியினுடைய கருத்துக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை. அனைவரும் தி.மு.க.வை நோக்கி வந்தால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். தி.மு.க.வை சொல்லித்தான் பேச முடியும். தி.மு.க.தான் எதிரி என்று சொன்னால் தான் திரும்பி பார்ப்பார்கள். அதனால்தான் தி.மு.க.வை சொல்லி வருகின்றனர். இதிலிருந்தே தி.மு.க. என்பது தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    நயினார் நாகேந்திரனுக்கு நாடக கம்பெனி எல்லாம் பழைய காலத்தில்தான் இருந்தது. தற்போது வள்ளி திருமணம் நாடகம் எல்லாம் போட்டால் யாரும் போய் பார்ப்பதில்லை. அதனால் அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து தற்போது தான் விழித்துள்ளார். நல்ல அறிக்கைகளையும், நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தருகின்ற தேர்தல் அறிக்கைக்குழுதான் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு என்றார்.

    • இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.
    • சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்து விட்டது. பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை கையாள்வது, பயணிகளை வருகையை சமாளிப்பது, புதிய வழித்தடங்கள் மற்றும் விமான நிறுவனங்களை வரவேற்பது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமின்றி சென்னை மாநகர் படிப்படியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது.

    இதுபோன்ற காரணங்களால் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதையொட்டி பரந்தூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள 5,747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி மிகவும் பிரம்மாண்டமான பசுமைவெளி சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இந்த திட்டத்திற்குத் தேவையான மொத்த நிலத்தில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

     

    ஆனால் இதற்கு ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் தங்களின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பூர்வீக நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வரும் என வேதனை தெரிவிக்கின்றனர். இதை சுட்டிக் காட்டி பல மாதங்களாக தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். நீதிமன்ற வழக்குகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு என பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்ந்து இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது.

    இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் 2029 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2030 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத் திட்டமும் நான்கு கட்டங்களாக, 2046 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.29,150 கோடி ஆகும்.

     

    இந்த விமான நிலையம் தனது முழுத் திறனை எட்டும்போது ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.

    தற்போதுள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த புதிய இடம், வரவிருக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. மேலும், சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரூ.29,150 கோடி செலவில் புதிய விமான நிலையம் தேவை தானா அதுவும் விளைநிலங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் தேவை என்ன என்பவை முடிவில்லா முகவரியாகுமோ என்ற அச்சம் கலந்த கேள்வியை கேட்க தவறவில்லை!

    • தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.
    • துணிச்சலாக, வெளிப்படையாக #VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்...

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்!

    நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, #MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி!

    அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்?

    மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, தொகுதி நிர்ணயம் மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.

    ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய #MGNREGS திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் #VBGRAMG கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும்.

    தனது 'Owner' பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக #VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்... என பதிவிட்டுள்ளார். 

    • 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும்.
    • இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சென்னை:

    சமீபகாலமாக டிஜிட்டல் மோசடி குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடிக்காரர்கள் வங்கி அதிகாரிகள் போல் பேசி, கடவு சொற்களை பெறுவதும், சிறிது நேரத்திலேயே கணக்கில் இருந்த பணத்தை சூறையாடுவதும் தொடர்கதையாகி விட்டது. இதை தடுக்க 'சைபர்' கிரைம் போலீசாரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

    ஆனாலும், திரை மறைவில் கொள்ளையர்கள் இருந்துகொண்டு செல்போனுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அந்த லிங்கை தொட்ட சில கணங்களில் அவர்களது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் முற்றிலும் துடைத்து எடுக்கப்படுகிறது.

    இந்த நிலையில், "மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். எனவே தயவுசெய்து கீழே உள்ள லிங்கை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது" என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இதனை பலரும் பகிர்ந்து வருவதோடு, உதவிதொகை பெற விண்ணப்பிக்குமாறு தங்கள் குடும்பத்தினரையும் வற்புறுத்துகிறார்கள். இது தூண்டில் போட்டு மீனை பிடிப்பதுபோல, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை லாவகமாக எடுக்க கையாளப்படும் முயற்சியாகும் என சிலர் லிங்கை தொடுவதை தவிர்த்து வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியானச் செய்தி. வதந்தியைப் பரப்பாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது.
    • ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, பாராளுமன்றத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது? கருத்து என்ன? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு கமல்ஹாசன், இதில் கருத்து தான் சொல்ல முடியும். காந்தியார் அவர்களின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு வேறு இடத்தில் விளையாட கூடாது என்று தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்றார்.

    தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வருகை தர உள்ளனர். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதை நான் எப்படி சொல்லமுடியும்? மக்கள்தான் சொல்லமுடியும் என்றார்.

    2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக உண்டு என்று கூறினார். 

    • வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம்.
    • உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?

    கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

    #ThreeFarmLaws, #CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?

    #MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?

    திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?

    வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்?

    இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயர் எதற்கு?

    நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்! என்று கூறியுள்ளார். 



    • இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
    • இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்ட முன்வரைவில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும், திட்டத்தின் பெயரையும், நிதிப்பகிர்வு முறையையும் மாற்றுவது நியாயமானது அல்ல.

    கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகவும், வறுமை ஒழிப்பு ஆயுதமாகவும் திகழும் இந்தத் திட்டத்தின்படி 100 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, மொத்த பயனாளிகளில் 5 விழுக்காட்டினருக்குக் கூட முழு நாள்கள் வேலை வழங்கப்படவில்லை. அதனால், இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கையை 150 நாள்களாக உயர்த்த வேண்டும்; 50 % பயனாளிகளுக்காவது முழுமையாக 150 நாள்கள் வேலைவழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பயனாளிகளுக்கு அதிக நாள்கள் வேலை கிடைக்க வகை செய்யும்.

    அதேபோல், நடவு, அறுவடை போன்ற விவசாயப் பணிகள் நடைபெறும் நாள்களில் இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கும் விஷயமாகும். இதன் மூலம் வேளாண் பணிகளுக்கு தடையில்லாமல் ஆள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

    ஆனால், இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியடிகளின் பெயர் நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதும், திட்டச் செலவில் இதுவரை இருந்த 10%க்கு பதிலாக 40 விழுக்காட்டை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தின்படி எங்கு, எந்த நேரத்தில், என்ன பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ×