என் மலர்
டெல்லி
- பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
- பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி ஐந்து நாட்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை. ஜெர்மனிக்கு இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் நிகழ்ச்சிக்காக சென்றார்.
ராகுல் காந்தி ஜெர்மனி சென்றதை. பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம், ஜி ராம் ஜி மசோதா குறித்து பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம் என சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் கூறியதாவது:-
நாங்கள் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அவை நடவடிக்கையில் ஆளும் கட்சிக்கு எதிராக விவாதத்தில் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம். அது எங்களுடைய எதிர்பார்ப்பும், விருப்பமுமாக இருந்தது. ராகுல் காந்தி அந்த நேரத்தில் அவையில் இருந்திருந்தால், அனைத்தும் வேறு மாதிரி இந்திருந்திருக்கும்.
மேலும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் தேதி ஏறக்குறைய கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. ஏறக்குறைய டிசம்பர் 22-ந்தேதி வாக்கில் முடிவடையும் என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த நேரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்ற அட்டவணையை திட்டமிட வேண்டாம் மற்றும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நாங்கள் (இந்தியா கூட்டணி கட்சிகள்) சொல்ல வேண்டுமா?. அல்லது காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு சொல்ல வேண்டுமா?
இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.
- இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.
- இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் மோடி அரசு புல்டோசரை ஏற்றி அழித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
MGNREGA திட்டத்தின் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'விபி ஜி ராம் ஜி, 2025' மசோதா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் , "இந்த மசோதா குறித்து எந்தவிதமான பொது விவாதமோ அல்லது நாடாளுமன்றத்தில் முறையான விவாதமோ நடத்தப்படவில்லை.
மாநில அரசுகளிடம் இருந்தும் இதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை. இதன் மூலம் மோடி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் புல்டோசரை ஏற்றி தரைமட்டமாக்கியுள்ளது. இது வளர்ச்சி அல்ல, அழிவு.
இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.
இந்த மசோதா திட்டத்தை மேம்படுத்துவதற்காக அல்ல, மாறாக அந்தத் திட்டத்தையே சிதைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டி உள்ளார்.
டிசம்பர் 18-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
- பா.ஜ.க கைப்பற்றி பாரம்பரியமான காங்கிர சுக்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.
- நாட்டின் மேற்கு பகுதியையும் பா.ஜ.க தன்வசப்படுத்தி இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.
ஒரு கட்சியின் வலிமையையும், அந்த கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதுதான் தேர்தல்கள். அந்த வகையில் 2014-ல் அசுர பலத்துடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது பாரதிய ஜனதா. தொடர்ந்து பல மாநிலங்களிலும் தடம் பதித்து நாடு முழுவதும் தனது வளர்ச்சியை ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தி வருகிறது.
இப்போதைக்கு அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்று தன்னை நிலை நிறுத்தி கொண்டது. காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளின் பிடியில் இருக்கும் மலையாள சேதத்தில் தாமரை மலர என்றுமே வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.
ஆனால் கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 48 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி பாரம்பரியமான காங்கிர சுக்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.
2 நகராட்சிகளையும் தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற்றி இருக்கிறது. ஒட்டுமொத்த தேர்தல் முடிவும் காங்கிரசுக்கு புதிய நம்பிக்கையையும், இடது சாரிகளுக்கு தளர்ந்துவிடாத மனநிலையை கொடுத்தாலும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட கேரளாவில் பா.ஜ.கவும் வேகமாக வளர்ந்து வருவதை நிரூபித்துள்ளது.
எனவேதான் இந்த உள்ளாட்சி தேர்தலை 'மாற்றத்திற்கான தருணம்' என்று பிரதமர் மோடி கூறினார். இந்த மாற்றம் எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.
நாட்டின் தென் பகுதியில் பா.ஜ.க தனது வெற்றி சரித்திரத்தை பதிவு செய்துள்ளது என்ற பேச்சு அடங்குவதற்குள் நாட்டின் மேற்கு பகுதியையும் பா.ஜ.க தன்வசப்படுத்தி இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று வெளியானது.
286 நகராட்சிகளில் 245 நகராட்சிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 41 நகராட்சிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளது.
அதேபோல் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 859 கவுன்சிலர் பதவிகளில் 3 ஆயிரத்து 300 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 372 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள இந்த தேர்தல் மட்டுமல்ல இந்த ஆண்டில் நடந்து முடிந்த பல தேர்தல்களில் பா.ஜ.கவே வெற்றி வாகை சூடி இருக்கிறது.
தலைநகர் டெல்லியை 1998-ல் பா.ஜ.க ஆண் டது. அதன் பிறகு 27 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் பா.ஜ.கவால் வெற்றிக் கனியை ருசிக்க முடியவில்லை. 10 ஆண்டுகளாக அசைக்க முடியாத பலத்து டன் இருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் (பிப்.5) நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க முடிவுரை எழுதியது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் தலைநகர் ஆட்சியை கைப்பற்றியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.
நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் பா.ஜ.க மகத்தான சாதனை படைத்தது. கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானது.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களை கைப்பற்றியது. அதுமட்டுமல்ல பீகார் மாநில அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 89 இடங் களை பா.ஜனதா கைப்பற்றி சாதித்தது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் நிதிஷ்கு மார் கட்சி 85 இடங்களை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த இடைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களிலும் பா.ஜ.கவே கோலோச்சியது. சத்தீஸ்கரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிக ளையும் பா.ஜ.க கைப் பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 173 இடங்களில் 126 இடங்கள் பா.ஜ.க வசமானது.
உத்தரகண்ட் மாநிலம் பித்ரோகர் மாநகராட்சிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.கவே வென்றது.
உத்தரபிரதேச மாநிலம் மில்கிபூர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரியில் நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியை தோற் கடித்து பா.ஜ.க வென்றது.
இதே போல் ராய்ப்பூர் மாநகராட்சி தேர்தலிலும் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பா.ஜ.க 60 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியது.
பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.கவுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிர சுக்கு இந்த ஆண்டும் ராசி இல்லாத ஆண்டாகவே தொடங்கி முடிய போகிறது.
அடுத்ததாக பிறக்கப் போகும் புத்தாண்டில் தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல்களிலும் எந்த கட்சி சாதிக்கும்? எந்த கட்சி சறுக்கும்? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் ஏற்பட்டுள்ளது. இதை மக்கள் தங்கள் ஒரு விரல் புரட்சி மூலம் முடிவு செய் வார்கள்.
- இளம்பெண்ணின் வாழ்க்கை ஒரே நாளில் முற்றிலும் மாறிவிட்டது.
- பாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது மலையாளப் படவுலகிலும் நடித்து வருகிறார்.
புதுடெல்லி:
'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சுக்கிட்டு கொடுக்கும்' என்பது பழமொழி. அதுபோல, இறைவன் கொடுப்பதாக இருந்தால் எந்தத் தடையையும் மீறி, மிக பிரம்மாண்டமாக, எதிர்பாராத வழிகளில் வந்து கொடுப்பார் என்பதை உணர்த்துவதே இந்தப் பழமொழி.
அதுபோல, பிரபலமான ஒரு இளம்பெண்ணின் பிளாஷ்பேக்தான் இது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது கும்பமேளா. 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா.
அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், மகா கும்பமேளாவில் வீதி வீதியாக ருத்ராட்ச மாலைகள், பாசிமணி விற்றுக் கொண்டிருந்த ஒரு இளம்பெண் தனது காந்த விழி கண்களால் இந்திய அளவில் பிரபலமானார். அவரது வாழ்க்கை ஒரே நாளில் முற்றிலும் மாறிவிட்டது.
அந்த இளம்பெண்ணின் பெயர் மோனலிசா போஸ்லே. இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்தவர்.
அவர் மாலை விற்பனை செய்யும் விதம், அவரது அழகான தோற்றம் ஆகியவை பக்தர்கள் மட்டுமின்றி மீடியாவிலும் அதிக கவனத்தை ஈர்த்தது. சமூக வலைதளங்களின் அனைத்துப் பக்கங்களிலும் மோனலிசா தோற்றம் வைரலானது. இதைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட் பட வாய்ப்பும் கிடைத்தது.
'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு ஓ.டி.டி. நிறுவனங்கள் அவரை வெப் தொடரில் நடிக்க வைப்பதற்கு போட்டி போட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அதுமட்டுமின்றி, பிரபல கடைகள் திறப்புவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
பாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது மலையாளப் படவுலகிலும் நடித்து வருகிறார்.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி அநேக இடங்களில் முன்னிலை பெற்றன.
- அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றன.
இதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிரா மக்கள் வளர்ச்சியுடன் உறுதியாக நிற்கின்றனர். நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் மகாயுதி கூட்டணியை ஆசிர்வதித்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. வளர்ச்சிக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. மகாராஷ்டிரா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உறுதி பூண்டுள்ளோம். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த பா.ஜ.க. மற்றும் மகாயுதி தொண்டர்களுக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல, அருணாச்சல பிரதேச உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அவர் விடுத்த பதிவில், நல்லாட்சி வழங்கிய அரசுக்கு அருணாச்சலப் பிரதேச மக்கள் அசைக்க முடியாத ஆதரவைக் கொடுத்துள்ளனர். இது மாநிலத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றும் எங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
- டெல்லியில் இன்று காற்றின் தரம் 386 என்ற அளவில் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்தது.
- பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கடுமையாக உள்ளது. மேலும் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் காலை 10 மணிக்கு டெல்லி விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானச் செயல்பாடுகள் இயல்பு நிலையில் தொடர்கின்றன என்று தெரிவித்தது.
அதேவேளையில் புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியது. டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் 386 என்ற அளவில் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது. நகரத்தில் உள்ள 16 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது, மீதமுள்ள நிலையங்களில் மிகவும் மோசமான அளவில் பதிவாகியுள்ளது.
மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.
- துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட லஞ்சம் பெற்றார்.
- லஞ்சப் பணம் 3 லட்சம் ரூபாயுடன், கணக்கில் வராத 2.23 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி ஒருவர், துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி பிரிவில் துணை திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் லெப்டினன்ட் கர்னல் தீபக் குமார் சர்மா.
துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட, அந்த நிறுவனத்தின் சார்பாக வினோத் குமார் என்பவர் மூலம் தீபக் குமார் சர்மாவுக்கு 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, தீபக் குமார் சர்மா மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்தது.
இந்த ஊழல் சதியில் ஈடுபட்டதாக தீபக் குமார் சர்மாவின் மனைவியும், ராணுவ அதிகாரியுமான கர்னல் காஜல் பாலி மற்றும் துபாய் நிறுவனத்தின் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லியில் உள்ள தீபக் குமார் சர்மாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், லஞ்சப் பணம் 3 லட்சம் ரூபாயுடன், கணக்கில் வராத 2.23 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
பெங்களூரு, ஜம்மு மற்றும் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
- யாருக்கு வேலை, எங்கே, எப்படி? என்பது குறித்த முடிவுகள் இனி டெல்லியில் இருந்துதான் எடுக்கப்படும்.
ஊரக வேலைத்திட்ட புதிய சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மா காந்தி பெயரில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி, அதற்கு பதிலாக 'வி.பி. ஜி ராம் ஜி' என்ற 125 நாள் வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றியது. இதனை எதிர்க்கட்சிகள் இன்னும் எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
அதில் அவர்," கிராமப்புற ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த திட்டம் வேண்டுமென்றே பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி அரசு முற்றிலுமாக ஒழித்துவிட்டது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தின் ஒருமித்த கருத்துடன் இயற்றப்பட்டது. கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு, குறிப்பாக ஏழைகள், ஓரங்கட்டப்பட்ட மற்றும் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியத்தை வழங்கும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக அது இருந்தது.
அந்த சட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது. மக்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வாழ்வாதாரத்தை ஈட்ட உதவுவதன் மூலம் துன்பகரமான இடம்பெயர்வைத் தடுக்க உதவியது. மேலும் மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியக் கண்ணோட்டத்தை நனவாக்குவதற்கான ஒரு உறுதியான படியாக மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம் இருந்தது.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக, கிராமப்புற வேலையற்றோர், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன. கொரோனா காலத்தில் பல லட்சக்கணக்கானவர்களுக்கு உயிர்நாடியாக இருந்தது. ஆனால் சமீபத்தில் அந்த திட்டத்தை புல்டோசர் கொண்டு தாக்கி விட்டது.
மகாத்மா காந்தி சட்டத்தின் கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி எதிர்க்கட்சிகளிடம் கலந்துரையாடல் நடத்தப்படவில்லை. மகாத்மா காந்தியின் பெயர் கூட இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. யாருக்கு வேலை, எங்கே, எப்படி? என்பது குறித்த முடிவுகள் இனி டெல்லியில் இருந்துதான் எடுக்கப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தியதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தாலும், இந்த திட்டம் ஒருபோதும் எந்தவொரு கட்சியை பற்றியதாகவும் இல்லை. மாறாக தேசிய மற்றும் பொது நலனைப் பற்றியதாகவே இருந்தது. தற்போது அந்த சட்டத்தை பலவீனப்படுத்தி இருப்பது, கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலுக்கு சமம்" என்றார்.
மேலும், இந்த புதிய சட்டத்தை கருப்புச் சட்டம் என அழைத்த அவர், அதனை எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்களும், லட்சக்கணக்கான தொண்டர்களும் உறுதுணையாக நிற்பதாகவும் கூறினார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனை ஏற்று தற்போது சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
- மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது
- போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம்.
தனியார் நிறுவனங்களிடமிருந்து இந்திய ரயில்வேக்கு வரவேண்டிய சுமார் 4,087 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வசூலக்கப்படவில்லை என்று மத்திய கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது.
மேலும், இந்திய ரயில்வேயிடம் தற்போது 4.88 லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 62,740 ஹெக்டேர் நிலம் காலியாகவே கிடக்கிறது.
இந்த நிலங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்ட 'ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்திடம்' (RLDA) வெறும் 1.6% நிலம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் கூட, நில உரிமை தொடர்பான சிக்கல்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணமாகப் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை.
போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம் என்று சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் ரயில் டிக்கெட் கட்டணங்கள் தவிர்த்து, நிலங்களை மேம்படுத்துவதன் மூலம் ஈட்ட வேண்டிய டிக்கெட் சாரா வருவாயில் இந்திய ரயில்வே மிகவும் பின்தங்கியிருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
- திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.
- திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 8 மாநிலங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்தின்(சி.ஏ.ஜி.) தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதமரின் கவுஷல் விகாஸ் யோஜனா என்கிற திட்டம் மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம் மேற்பார்வை செய்து வருகிறது.
அசாம், பீகார், ஜார்கண்ட், மராட்டியம், கேரளா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் இந்த திட்டத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மோசமான நிதி மேலாண்மை, மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.
95.90 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 90.66 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வங்கிக்கணக்குகளில் இந்த நிதி உதவி வரவு வைக்கப்படவில்லை. பலரின் வங்கி கணக்குகளில் 2 முறை மற்றும் அதற்கு மேலான தடவையும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டி20 உலகக் கோப்பை போட்டி பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
- டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். துணை கேப்டன் சுப்மன் கில் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிறங்கள் நிச்சயம் மங்காது என பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டெல்லி வந்த அதிபர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
- அதிபர் புதினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.
புதுடெல்லி:
சுகுமார் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தான். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஊர் திரும்பினான்.
கடைக்குச் சென்று கொண்டிருந்த சுகுமாரை எதிரில் வந்த அவனது நண்பன் சுந்தர் பார்த்தான். உடனே, வாடா சுகுமார் எப்படி இருக்கே என கேட்டான் சுந்தர்.
நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே என்றான் சுகுமார்.
ஊருக்குப் போயிருந்தியே என்ன விஷயம்? ஊருல எல்லாம் நல்லா இருக்காங்களா என்றான் சுந்தர்.
எல்லாம் நல்லா இருக்காங்க. சரி, நாட்டு நடப்புல என்ன முக்கியமான விஷயம் சொல்லு என ஆரம்பித்தான் சுகுமார்.
கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இந்திய நாட்டின் மதிப்பு அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கும் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். பிரதமரின் வெளிநாட்டு பயணங்களிலும் அந்நாட்டு உயரிய விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாம் இந்தியாவுக்கு பெருமைதானே என்றான் சுந்தர்.
ஆமாம், அதுபோலவே இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கும் நாம் அளிக்கிற மரியாதை உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது தெரியுமா என கூறினான் சுகுமார்.
இந்த ஆண்டு இந்தியா வந்த அதிபர் புதினின் பயணம் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது எனக்கூறிய சுந்தர், அதிபர் புதினின் இந்திய பயணம் குறித்து சொல்லியதன் சாராம்சம் பின்வருமாறு:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதன் காரணமாக உலக அரங்கில் ரஷியா மிகவும் தனிமைப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரஷியா சென்றார். அப்போது, இந்தியாவுக்கு வருமாறு அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்தார். அதிபர் புதினும் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வருவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமர் புதின் டிசம்பர் 4, 5 ஆகிய இரு தினங்கள் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

டிசம்பர் 4-ம் தேதி டெல்லி வந்த அதிபர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அதிபர் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும், அணிவகுப்பு மரியாதைம் வழங்கப்பட்டது. இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது உலக அளவில் கவனம் பெற்றது. அதிபர் புதினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.
தலைநகர் டெல்லியில் நடந்த இந்தியா-ரஷியா இடையிலான 23-வது உச்சி மாநாட்டில் அதிபர் புதினும், பிரதமர் மோடியும் பங்கேற்றனர். அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தப் பயணத்தின்போது இந்தியா-ரஷியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ரஷிய அதிபர் விளாடிமர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் அரசு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த எம்.பி.யான சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
வெளிநாட்டு தலைவர்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வரும்போது, ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மற்றும் மூத்த எம்.பி.க்கள் அழைக்கப்படுவது வழக்கம். இந்த நடைமுறையில் ராகுல் காந்தி அழைப்பில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அளித்திருந்த பரிசுப் பொருட்கள்:
காஷ்மீர் குங்குமப்பூ, அசாமின் கருப்பு தேயிலை, ஆக்ராவின் பளிங்கு செஸ் செட், கைகளால் வடிவமைக்கப்பட்ட வெள்ளி குதிரை சிற்பம், முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் கோப்பைகள், ரஷிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை புத்தகம் ஆகியவை.
இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த பரிசுப் பொருட்கள் பலரது கவனத்தை ஈர்த்தன.

இந்தியாவில் தனது அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் ரஷியா புறப்பட்டுச் சென்றார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புதினை வழியனுப்பி வைத்தார்.
அதிபர் புதினின் இந்திய பயணம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தான்.
பரவாயில்லையே, அதிபர் புதின் - பிரதமர் மோடி இடையிலான நட்பு இரு நாடுகளுக்கும் நல்ல பலனை அளித்தால் சரிதான் என சொன்னபடியே வீட்டுக்குப் புறப்பட்டான் சுகுமார்.






