என் மலர்tooltip icon

    டெல்லி

    • பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.
    • விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன்சிங் வரவேற்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பல்வேறு தொழிலதிபர்கள் பங்கேற்கும் ரெய்சினா பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்ற பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் இதில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங், விமான நிலையத்தில் அவரை வரவேற்றார்.

    இந்நிலையில், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஸ்டப், ரெய்சினாபேச்சுவார்த்தையில் பங்கேற்று, மும்பையில் வணிகத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

    இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்து வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கப்படும். பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்லாந்து அதிபரின் இந்தப் பயணம் இந்தியாவிற்கும் பின்லாந்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

    • விலையை நிர்ணயிக்க செலவு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும்.
    • இந்தியாவில் தற்போது மூன்று S-400 அமைப்புகள் உள்ளன.

    ரஷ்யாவில் இருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான இந்திய விமானப்படை (IAF) முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் (DPB) அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தலைமையிலான குழு, IAF முன்மொழிவை ஏற்றுக்கொண்டது, இது இப்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சிலுக்கு (DAC) அவசியத்தை ஏற்றுக்கொள்வதற்காக அனுப்பப்படும் (AoN).

    பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் மற்றும் AoN ஐ அனுமதித்த பின்னரே, புதிய கையகப்படுத்துதலின் விலையை நிர்ணயிக்க செலவு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும். பின்னர் நிதி அமைச்சகம் வழியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) இந்த விஷயத்திற்கு இறுதி கிரீன் சிக்னல் வழங்கும்.

    இந்தியாவில் தற்போது மூன்று S-400 அமைப்புகள் உள்ளன, மேலும் இரண்டு இந்த ஆண்டு இந்திய ஆயுதப் படைகளில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. S-400 அமைப்பு, ஆபரேஷன் சிந்தூரின் போது சிறப்பாக செயல்பட்டது, மேலும் கடந்த ஆண்டு மே 10-ஆம் தேதியன்று இந்தியா எதிரி விமான தளங்கள், வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் கட்டளை கட்டுப்பாட்டு அமைப்புகளை வெடிக்கச் செய்தபோது, பாகிஸ்தான் போர் விமானங்கள், வான்வழி எச்சரிக்கை விமானங்கள் மற்றும் மின்னணு புலனாய்வு விமானங்கள் வானில் பறக்காமல் பார்த்துக் கொண்டது.

    இந்திய ஆயுதப் படைகளிடம் இருக்கும் 10 S-400 அமைப்புகளைப் பாதுகாக்க IAF 10 Pantsir அமைப்புகளை வாங்கப்படுகிறது. எல்லைகளில் கப்பல் ஏவுகணைகள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், மிதக்கும் வெடிமருந்துகள், ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளை எதிர்கொள்ள 3 Pantsir அமைப்புகள் இராணுவத்தால் வாங்கப்படும்.

    Pantsir அமைப்பு தற்போது UAE படைகளால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஈரானிய காமிகேஸ் ட்ரோன்களை வானத்திலிருந்து சுடும் திறனில் அதன் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி, கடந்த 2007-ம் ஆண்டு தன் யூடியூப் கணக்கை தொடங்கினார்.
    • பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களில் இந்தியர்களே அதிகம்.

    தற்போதைய தொழில்நுட்ப உலகில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இன்ஸ்டாகிராம். பேஸ்புக், எக்ஸ் சமூக வலைதளங்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளமான யூடியூப் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. யூடியூப் பயனர்கள் வீடியோக்கள் மூலம் கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்கும் உலகின் முன்னணி வீடியோ சமூக வலைதளமாகும்.

    பிரதமர் மோடி, யூடியூபில் 3 கோடி பின்தொடர்பவர்களை பெற்றிருக்கிறார். இதன் மூலம் யூடியூபில் உலகளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ள அரசியல் தலைவர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.

    இந்த வரிசையில் 2-வது இடத்தில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ 66 லட்சம் பின்தொடர்பவர்களையும், 3-வது இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 40 லட்சம் பின்தொடர்பவர்களையும் கொண்டு உள்ளனர்.

    பிரதமர் மோடி, கடந்த 2007-ம் ஆண்டு தன் யூடியூப் கணக்கை தொடங்கினார். இதுவரை 33 ஆயிரத்து 823 வீடியோக்கள் பதிவிட்டுள்ள அவர் 800 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளார். பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களில் இந்தியர்களே அதிகம்.

    முன்னதாக கடந்த மாதம் 26-ந்தேதி தான் இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்வோரை பெற்றிருந்தார் பிரதமர் மோடி. இன்ஸ்டாகிராமில் சர்வதேச அரசியல் தலைவர்களில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவர் என்ற பெருமையை இதன் மூலம் பிரதமர் மோடி பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று யூடியூபில் எந்தவொரு அரசியல் தலைவரும் தொடாத ஒரு உச்சத்தை அவர் தொட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் உரைகள், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் மனதின் குரல் போன்ற நிகழ்ச்சிகள் அவரது யூடியூப் சேனல் மூலம் உலகம் முழு வதும் உள்ள மக்களிடம் நேரடியாக சென்றடைவது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

    • போரில் இந்த நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பிரதமா் மோடி கவலை தெரிவித்தார்.
    • அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தாா்.

    புதுடெல்லி:

    ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. அதைத் தொடா்ந்து, ஈரானும் பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

    குவைத், கத்தாா் உள்ளிட்ட வளைகுடா நடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்த நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கடந்த 3 நாளாக தொடா்ந்து பேசி வருகிறாா். பஹ்ரைன் மன்னா், சவுதி அரேபிய பட்டத்து இளவரசா் ஆகியோருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டாா்.

    ஜோா்டான் மன்னா் இரண்டாம் அப்துல்லாவுடன் பேசிய பிரதமா் மோடி, அந்தப் பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்தாா். ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் மற்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருடனும் பிரதமா் மோடி தொலைபேசி வழியில் பேசினாா்.

    இந்நிலையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், குவைத் பட்டத்து இளவரசா் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமத் மற்றும் கத்தாா் அமீா் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று பேசினாா்.

    அப்போது, போரில் இந்த நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பிரதமா் மோடி கவலை தெரிவித்ததோடு, அந்த நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தாா் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் பல நாடுகள் தங்கல் வான்வழிப் பாதைகளை மூடின.
    • இதனால் வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமானநிலையங்களில் சிக்கியுள்ளனர்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த சனிக்கிழமை அன்று கொல்லப்பட்டார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.

    இதையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள பல்வேறு நாடுகள் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 80 சர்வதேச விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 36 விமானங்களும், வரவேண்டிய 44 விமானங்களும் ரத்தாகின.

    மத்திய கிழக்கில் உள்ள எமிரேட்ஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் தங்களது விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கின. டெல்லியில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீண்டும் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

    மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கடந்த 3 நாளில் இந்திய நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை ரத்துசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.
    • ஈரான் நடத்தும் தாக்குதல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக கண்டித்துள்ளது.

    ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்சந்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். பதிலடியாக இஸ்ரேல் மீதும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது

    துபாய், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. விமான சேவைகள் அனைத்தும் முடங்கியது.

    இதற்கிடையே வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேசி வருகிறார்.

    அந்த வகையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது சவுதி அரேபியா மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்த பிரதமர், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.

    பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீபாவுடன் பேசிய பிரதமர் மோடி, பஹ்ரைன் மீதான ஈரான் தாக்குதல் நிலைமை குறித்தும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்தும் பேசினார்.

    ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானுடன் பேசிய பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

    முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசித்தார்.

    இதற்கிடையே வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலை ஆய்வு செய்ய, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவின் அவசரக் கூட்டமும் நடைபெற்றது.

    போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது மற்றும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உறுதி செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    வளைகுடா நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக ஈரான் நடத்தும் தாக்குதல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக  கண்டித்துள்ளது.

    • இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டார்.
    • சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடயே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது.

    மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர். பிரதமர் மோடி கடந்த மாதம் சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    நேற்று 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம், மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனையின்போது அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக தெரிகிறது.

    பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக காலை 9.50 மணிக்கு தனபால் எம்.பி. விமானம் மூலம் டெல்லி சென்றார்.

    எடப்பாடி பழனிசாமி கடந்த முறை, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அவருடன், தனபால் எம்.பி. சென்றிருந்தார். எனவே இப்போதும் அவர் சென்றுள்ளார்.

    டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் 2 மணி நேரம் ஆலோசனைக்கு பின்னர் பின் அவர் அங்கிருந்து காரில் புறபட்டு சென்றார்.

    கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடி வருகிற 7-ந்தேதி மீண்டும் தமிழகம் வந்து வேலூரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    வருகிற 11-ந்தேதி அவர் திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். எனவே 7-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பு தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. 

    • தற்போது வரை 974 இந்தியர்கள் உதவி கோரி அழைத்துள்ளதாக தகவல்.
    • தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக தங்களை மீட்குமாறு அழைத்த இந்தியர்களில் தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி 28ம் தேதி இரவு 11.55 மணியில் இருந்து தற்போது வரை 974 இந்தியர்கள் உதவி கோரி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உதவி கோரி அழைத்த 974 இந்தியர்களில் 498 பேர் தமிழர்கள் என தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுபோல், ஐயக்கிய அரபு-253, பக்ரைன்-95, கத்தார்-66, சவுதி அரேபியா-13, சிங்கப்பூர்-25, ஓமன்-6 என தமிழர்கள் உதவிகோரி அழைப்பு விடுத்துள்ளனர்.

    உதவிகோரி அழைத்த 498 நபர்களும் தொழில் ரீதியாகவும், சுற்றுலாவிற்கும் சென்று சிக்கியர்கள் என விளக்கம் அளித்துள்ளது.

    உதவிகோரிய அனைவருக்கும் தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என வெளிநாடு வாழ் நலத்துறை தெரிவித்துள்ளது.

    உறவினர்கள் யாரும் பதற்றமோ அல்லது அச்சம் கொள்ளத்தேவை இல்லை எனவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    • யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.
    • மேலும், தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல்நஹ்யானிடம் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினாா்.

    அப்போது யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தக் கடினமான சூழலில் யுஏஇயுடன் இந்தியா துணை நிற்கிறது. அங்கு வசிக்கும் இந்தியா்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதற்கு நன்றி. மோதலை கைவிட்டு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இந்தியா ஆதரவு அளிக்கும் என பதிவிட்டுள்ளா.

    • அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது.
    • இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

    இதற்கு பதிலடியாக கத்தார், குவைத், பரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அப்போது, மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றியும், தேவைப்பட்டால் அவர்களை சிறப்பு விமானங்களில் அழைத்து வருவது பற்றியும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

    • இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று மோடி அறிவித்தார்.
    • அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.

    பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது இன்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    பதிலடியாக இஸ்ரேல் மீதும், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் புரட்சிகர ராணுவ படையினர் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

    ஈரான், இஸ்ரேல் மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ள பிற நாடுகளில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், " அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்கு மிகவும் கவலையளிக்கிறது.

    மத்திய கிழக்கு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் பாதுகாப்பும் நமது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

    நமது மக்களைப் பாதுகாக்க உடனடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடி தனது இஸ்ரேல் பயணத்தைக் கொண்டாடிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீதான தங்களின் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

    கடந்த சில மாதங்களாக அவர்களின் ராணுவக் குவிப்பை வைத்துப் பார்க்கும்போது இது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

    இருப்பினும், பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் செல்லத் தீர்மானித்தார், அங்கு அவர் மிக உயர்ந்த அளவிலான தார்மீக  கோழைத்தனத்தைக் காட்டினார்.

    இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று அவர் அறிவித்தார், அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.

    இந்த இஸ்ரேல் பயணம் வெட்கக்கேடானது, பிரதமர் மோடியின் 'நல்ல நண்பர்கள்' இருவரால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போரின் பின்னணியில் இது இன்னும் அவமானகரமானது.

    பல வாரங்களாக அதிபர் டிரம்ப், ஈரானுடன் ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

    அவர் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

    இந்திய தேசிய காங்கிரஸ் இந்தத் தாக்குதலைக் கண்டிக்கிறது மற்றும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

    மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.  

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த பிப்ரவரி 25 இல் இஸ்ரேல் சென்று திரும்பிய 48 மணிநேரத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

    • உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.
    • இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் உள்ள மின்உற்பத்தி ஆலைகள், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால். உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.

    இருப்பினும், உள்நாட்டு நிலக்கரியின் தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

    இந்நிலையில், நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில், இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 கோடி டன் நிலக்கரியை இந்திய மின்உற்பத்தி ஆலைகள் பயன்படுத்தின.

    ஆனால், நடப்பாண்டில் இதில் 1 கோடியே 50 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத 2 மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது. 30 சதவீத நிலக்கரி இறக்குமதி குறைக்கப்படுகிறது.

    பொதுத்துறை நிறுவனமான கோல் இண்டியா மற்றும் தனியார் நிலக்கரி சுரங்கங்கள் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரித்துள்ளன.

    மேலும், நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடங்கள் அருகே புதிதாக நிலக்கரி உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளதாக நிலக்கரி வர்த்தகர் ராஜீவ் ராம்நாராயணன் என்பவர் தெரிவித்தார்.

    இந்த காரணங்களால், வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    ×