என் மலர்tooltip icon

    டெல்லி

    • பாரிசின் கடைசி ராணிக்குச் சொந்தமான வைர மோதிரம் இது, மிக அரிதானது.
    • 17 வைரங்கள் சூழ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபல தொழிலதிபர் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் நிர்வாக இயக்குநராக இருந்து வருபவர் நடாஷா பூனாவாலா.

    நடாஷா பூனாவாலா கையில் போட்டுள்ள வைர மோதிரம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,

    உங்கள் கண்களை மூடிக்கொண்டு நான் சொல்வதை கேளுங்கள். 126 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை பற்றி நான் பேசப்போகிறேன் என்றதும் உங்கள் நினைவில் வருவது என்ன? பாரிசின் கடைசி ராணிக்குச் சொந்தமான வைர மோதிரம் இது, மிக அரிதானது. 17 வைரங்கள் சூழ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் ஏலத்தில் 126 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

    நடாஷா பூனாவாலா கையில் அணிந்துள்ள வைர மோதிரத்தின் மதிப்பு சுமார் 126 கோடி ரூபாய்.

    அது பிரான்ஸ் ராணி மேரி அன்டோனெட் குடும்பத்தைச் சேர்ந்தது.

    18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய இளஞ்சிவப்பு வைரம் அதில் உள்ளது.

    சமீபத்தில் கிறிஸ்டிஸ் ஏலத்தில் $13.98 மில்லியன் (சுமார் 126 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கப்பட்டது.

    தனது அற்புதமான மற்றும் ஆடம்பரமான நகை சேகரிப்புகளுக்காகப் பெயர் பெற்றவர் நடாஷா என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
    • முகாம்கள் மூலம் பெயர் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இம்மாநிலங்களில் இந்தப் பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது முகாம்கள் மூலம் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளாவில் 22 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களில், 2,54,42,352 வாக்காளர்கள் அதனை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.

    நீக்கப்பட்ட 22 லட்சம் பேரில் இறந்தவர்கள்: 6,49,885 பேர், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 14,61,769, இரட்டை பதிவுகள்: 1,36,029 என தெரியவந்துள்ளது.

    இதேபோல், சத்தீஸ்கரில் 27 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளனர். விநியோகம் யெ்யப்பட்டதில் 1,84,95,920 விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

    நீக்கப்பட்ட 27 லட்சம் பேரில் இறந்தவர்கள்: 6,42,234 பேர், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 1,79,043 பேர், இரட்டை பதிவுகள்: 1,79,043 என தெரிய வந்துள்ளது.

    மத்திய பிரதேசத்தில் அதிக அளவாக 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த 5,31,31,983 பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 42,74,160 ஓட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளன.

    நீக்கப்பட்டவர்களில் இடம்மாறியவர்கள்: 31.51 லட்சம், இறந்தவர்கள்: 8.46 லட்சம், இரட்டை பதிவுகள்: 2.77 லட்சம் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ம.பி.யில் 42 லட்சம், கேரளாவில் 22 லட்சம், சத்தீஸ்கரில் 27 லட்சம் என 3 மாநிலங்களில் சேர்த்து 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    • ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா.
    • டெல்லியில் பிரதமர் மோடியை நீரஜ் சோப்ரா, அவரது மனைவி ஆகியோர் சந்தித்தனர்.

    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. அவர் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் (கவுரவ) ஆகவும் உள்ளார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியை நீரஜ் சோபரா, தனது குடும்பத்துடன் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை லோக் கல்யாண் மார்க்கில் நீரஜ் சோப்ராவையும் அவரது மனைவி ஹிமானி மோரையும் சந்தித்தேன். விளையாட்டு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சிறந்த கலந்துரையாடலை மேற்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

    • எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
    • டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 145 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெற்று வருகின்றன.

    இந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தல்கள் முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு உற்சாகம் அளித்த ஆண்டாகவே அமைந்தது.

    ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

    தலைநகர் டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியே அடைந்துள்ளது.


    தலைநகர் டெல்லிக்கு பிப்ரவரி மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி அசத்தியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.

    தொடர்ந்து 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    தலைநகரிலேயே ஒரு இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் தேய்ந்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

    இதேபோல், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்தது.

    பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது. பாஜகவுக்கு 89 இடமும், கூட்டணிக்கு தலைமை தாங்கிய நிதிஷ்குமார் கட்சிக்கு 85 இடமும் கிடைத்தது.

    காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    இதுபோலவே, இந்தியா முழுவதும் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றி பெறவில்லை.

    பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிரசுக்கு இந்த ஆண்டு ராசி இல்லாத ஆண்டாகவே முடியப் போகிறது.


    சிறந்த ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். எதிர்க்கட்சிதான் மக்களின் பிரதிநிதியாக, அரசை விழிப்புடன் செயல்படவைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு 543 தொகுதிகளில் குறைந்தது 55 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி இல்லாமல்தான் பா.ஜ.க ஆட்சிசெய்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் 99 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தியது.

    பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், வரும் தேர்தல்களில் மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளும் குறைந்துவிடும். இதே நிலை மற்ற மாநிலங்களில் நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்தில்கூட இந்தியா கூட்டணியில் காங்கிரசால் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இதுபோன்ற சிக்கல்களை சரியாகக் கையாண்டால் மட்டுமே காங்கிரசால் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

    • பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
    • பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.

    இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி ஐந்து நாட்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை. ஜெர்மனிக்கு இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் நிகழ்ச்சிக்காக சென்றார்.

    ராகுல் காந்தி ஜெர்மனி சென்றதை. பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம், ஜி ராம் ஜி மசோதா குறித்து பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம் என சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் கூறியதாவது:-

    நாங்கள் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அவை நடவடிக்கையில் ஆளும் கட்சிக்கு எதிராக விவாதத்தில் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம். அது எங்களுடைய எதிர்பார்ப்பும், விருப்பமுமாக இருந்தது. ராகுல் காந்தி அந்த நேரத்தில் அவையில் இருந்திருந்தால், அனைத்தும் வேறு மாதிரி இந்திருந்திருக்கும்.

    மேலும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் தேதி ஏறக்குறைய கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. ஏறக்குறைய டிசம்பர் 22-ந்தேதி வாக்கில் முடிவடையும் என்று எல்லோருக்கும் தெரியும்.

    இந்த நேரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்ற அட்டவணையை திட்டமிட வேண்டாம் மற்றும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நாங்கள் (இந்தியா கூட்டணி கட்சிகள்) சொல்ல வேண்டுமா?. அல்லது காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு சொல்ல வேண்டுமா?

    இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.

    • இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.
    • இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் மோடி அரசு புல்டோசரை ஏற்றி அழித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

    MGNREGA திட்டத்தின் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'விபி ஜி ராம் ஜி, 2025' மசோதா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

    அதில் அவர் , "இந்த மசோதா குறித்து எந்தவிதமான பொது விவாதமோ அல்லது நாடாளுமன்றத்தில் முறையான விவாதமோ நடத்தப்படவில்லை.

    மாநில அரசுகளிடம் இருந்தும் இதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை. இதன் மூலம் மோடி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் புல்டோசரை ஏற்றி தரைமட்டமாக்கியுள்ளது. இது வளர்ச்சி அல்ல, அழிவு.

    இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.

    இந்த மசோதா திட்டத்தை மேம்படுத்துவதற்காக அல்ல, மாறாக அந்தத் திட்டத்தையே சிதைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டி உள்ளார்.

    டிசம்பர் 18-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.  

    • பா.ஜ.க கைப்பற்றி பாரம்பரியமான காங்கிர சுக்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.
    • நாட்டின் மேற்கு பகுதியையும் பா.ஜ.க தன்வசப்படுத்தி இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.

    ஒரு கட்சியின் வலிமையையும், அந்த கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதுதான் தேர்தல்கள். அந்த வகையில் 2014-ல் அசுர பலத்துடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது பாரதிய ஜனதா. தொடர்ந்து பல மாநிலங்களிலும் தடம் பதித்து நாடு முழுவதும் தனது வளர்ச்சியை ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தி வருகிறது.

    இப்போதைக்கு அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்று தன்னை நிலை நிறுத்தி கொண்டது. காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளின் பிடியில் இருக்கும் மலையாள சேதத்தில் தாமரை மலர என்றுமே வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.

    ஆனால் கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 48 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி பாரம்பரியமான காங்கிர சுக்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.

    2 நகராட்சிகளையும் தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற்றி இருக்கிறது. ஒட்டுமொத்த தேர்தல் முடிவும் காங்கிரசுக்கு புதிய நம்பிக்கையையும், இடது சாரிகளுக்கு தளர்ந்துவிடாத மனநிலையை கொடுத்தாலும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட கேரளாவில் பா.ஜ.கவும் வேகமாக வளர்ந்து வருவதை நிரூபித்துள்ளது.

    எனவேதான் இந்த உள்ளாட்சி தேர்தலை 'மாற்றத்திற்கான தருணம்' என்று பிரதமர் மோடி கூறினார். இந்த மாற்றம் எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

    நாட்டின் தென் பகுதியில் பா.ஜ.க தனது வெற்றி சரித்திரத்தை பதிவு செய்துள்ளது என்ற பேச்சு அடங்குவதற்குள் நாட்டின் மேற்கு பகுதியையும் பா.ஜ.க தன்வசப்படுத்தி இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.

    மராட்டிய மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று வெளியானது.

    286 நகராட்சிகளில் 245 நகராட்சிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 41 நகராட்சிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளது.

    அதேபோல் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 859 கவுன்சிலர் பதவிகளில் 3 ஆயிரத்து 300 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 372 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்துள்ள இந்த தேர்தல் மட்டுமல்ல இந்த ஆண்டில் நடந்து முடிந்த பல தேர்தல்களில் பா.ஜ.கவே வெற்றி வாகை சூடி இருக்கிறது.

    தலைநகர் டெல்லியை 1998-ல் பா.ஜ.க ஆண் டது. அதன் பிறகு 27 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் பா.ஜ.கவால் வெற்றிக் கனியை ருசிக்க முடியவில்லை. 10 ஆண்டுகளாக அசைக்க முடியாத பலத்து டன் இருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் (பிப்.5) நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க முடிவுரை எழுதியது.

    மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் தலைநகர் ஆட்சியை கைப்பற்றியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.

    நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் பா.ஜ.க மகத்தான சாதனை படைத்தது. கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானது.

    மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களை கைப்பற்றியது. அதுமட்டுமல்ல பீகார் மாநில அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 89 இடங் களை பா.ஜனதா கைப்பற்றி சாதித்தது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் நிதிஷ்கு மார் கட்சி 85 இடங்களை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

    அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த இடைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களிலும் பா.ஜ.கவே கோலோச்சியது. சத்தீஸ்கரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிக ளையும் பா.ஜ.க கைப் பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 173 இடங்களில் 126 இடங்கள் பா.ஜ.க வசமானது.

    உத்தரகண்ட் மாநிலம் பித்ரோகர் மாநகராட்சிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.கவே வென்றது.

    உத்தரபிரதேச மாநிலம் மில்கிபூர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரியில் நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியை தோற் கடித்து பா.ஜ.க வென்றது.

    இதே போல் ராய்ப்பூர் மாநகராட்சி தேர்தலிலும் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பா.ஜ.க 60 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியது.

    பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.கவுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிர சுக்கு இந்த ஆண்டும் ராசி இல்லாத ஆண்டாகவே தொடங்கி முடிய போகிறது.

    அடுத்ததாக பிறக்கப் போகும் புத்தாண்டில் தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தல்களிலும் எந்த கட்சி சாதிக்கும்? எந்த கட்சி சறுக்கும்? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் ஏற்பட்டுள்ளது. இதை மக்கள் தங்கள் ஒரு விரல் புரட்சி மூலம் முடிவு செய் வார்கள்.

    • இளம்பெண்ணின் வாழ்க்கை ஒரே நாளில் முற்றிலும் மாறிவிட்டது.
    • பாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது மலையாளப் படவுலகிலும் நடித்து வருகிறார்.

    புதுடெல்லி:

    'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சுக்கிட்டு கொடுக்கும்' என்பது பழமொழி. அதுபோல, இறைவன் கொடுப்பதாக இருந்தால் எந்தத் தடையையும் மீறி, மிக பிரம்மாண்டமாக, எதிர்பாராத வழிகளில் வந்து கொடுப்பார் என்பதை உணர்த்துவதே இந்தப் பழமொழி.

    அதுபோல, பிரபலமான ஒரு இளம்பெண்ணின் பிளாஷ்பேக்தான் இது.

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது கும்பமேளா. 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா.

    அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரியுடன் நிறைவடைந்தது.


    இந்நிலையில், மகா கும்பமேளாவில் வீதி வீதியாக ருத்ராட்ச மாலைகள், பாசிமணி விற்றுக் கொண்டிருந்த ஒரு இளம்பெண் தனது காந்த விழி கண்களால் இந்திய அளவில் பிரபலமானார். அவரது வாழ்க்கை ஒரே நாளில் முற்றிலும் மாறிவிட்டது.

    அந்த இளம்பெண்ணின் பெயர் மோனலிசா போஸ்லே. இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்தவர்.

    அவர் மாலை விற்பனை செய்யும் விதம், அவரது அழகான தோற்றம் ஆகியவை பக்தர்கள் மட்டுமின்றி மீடியாவிலும் அதிக கவனத்தை ஈர்த்தது. சமூக வலைதளங்களின் அனைத்துப் பக்கங்களிலும் மோனலிசா தோற்றம் வைரலானது. இதைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட் பட வாய்ப்பும் கிடைத்தது.

    'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு ஓ.டி.டி. நிறுவனங்கள் அவரை வெப் தொடரில் நடிக்க வைப்பதற்கு போட்டி போட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    அதுமட்டுமின்றி, பிரபல கடைகள் திறப்புவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

    பாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது மலையாளப் படவுலகிலும் நடித்து வருகிறார்.

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி அநேக இடங்களில் முன்னிலை பெற்றன.
    • அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

    உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றன.

    இதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிரா மக்கள் வளர்ச்சியுடன் உறுதியாக நிற்கின்றனர். நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் மகாயுதி கூட்டணியை ஆசிர்வதித்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. வளர்ச்சிக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. மகாராஷ்டிரா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உறுதி பூண்டுள்ளோம். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த பா.ஜ.க. மற்றும் மகாயுதி தொண்டர்களுக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல, அருணாச்சல பிரதேச உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அவர் விடுத்த பதிவில், நல்லாட்சி வழங்கிய அரசுக்கு அருணாச்சலப் பிரதேச மக்கள் அசைக்க முடியாத ஆதரவைக் கொடுத்துள்ளனர். இது மாநிலத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றும் எங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் இன்று காற்றின் தரம் 386 என்ற அளவில் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்தது.
    • பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கடுமையாக உள்ளது. மேலும் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் காலை 10 மணிக்கு டெல்லி விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானச் செயல்பாடுகள் இயல்பு நிலையில் தொடர்கின்றன என்று தெரிவித்தது.

    அதேவேளையில் புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியது. டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் 386 என்ற அளவில் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது. நகரத்தில் உள்ள 16 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது, மீதமுள்ள நிலையங்களில் மிகவும் மோசமான அளவில் பதிவாகியுள்ளது.

    மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.

    • துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட லஞ்சம் பெற்றார்.
    • லஞ்சப் பணம் 3 லட்சம் ரூபாயுடன், கணக்கில் வராத 2.23 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி ஒருவர், துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி பிரிவில் துணை திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் லெப்டினன்ட் கர்னல் தீபக் குமார் சர்மா.

    துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட, அந்த நிறுவனத்தின் சார்பாக வினோத் குமார் என்பவர் மூலம் தீபக் குமார் சர்மாவுக்கு 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, தீபக் குமார் சர்மா மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்தது.

    இந்த ஊழல் சதியில் ஈடுபட்டதாக தீபக் குமார் சர்மாவின் மனைவியும், ராணுவ அதிகாரியுமான கர்னல் காஜல் பாலி மற்றும் துபாய் நிறுவனத்தின் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

    டெல்லியில் உள்ள தீபக் குமார் சர்மாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், லஞ்சப் பணம் 3 லட்சம் ரூபாயுடன், கணக்கில் வராத 2.23 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    பெங்களூரு, ஜம்மு மற்றும் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    • காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
    • யாருக்கு வேலை, எங்கே, எப்படி? என்பது குறித்த முடிவுகள் இனி டெல்லியில் இருந்துதான் எடுக்கப்படும்.

    ஊரக வேலைத்திட்ட புதிய சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மா காந்தி பெயரில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி, அதற்கு பதிலாக 'வி.பி. ஜி ராம் ஜி' என்ற 125 நாள் வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றியது. இதனை எதிர்க்கட்சிகள் இன்னும் எதிர்த்து வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

    அதில் அவர்," கிராமப்புற ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த திட்டம் வேண்டுமென்றே பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி அரசு முற்றிலுமாக ஒழித்துவிட்டது.

    சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தின் ஒருமித்த கருத்துடன் இயற்றப்பட்டது. கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு, குறிப்பாக ஏழைகள், ஓரங்கட்டப்பட்ட மற்றும் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியத்தை வழங்கும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக அது இருந்தது.

    அந்த சட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது. மக்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வாழ்வாதாரத்தை ஈட்ட உதவுவதன் மூலம் துன்பகரமான இடம்பெயர்வைத் தடுக்க உதவியது. மேலும் மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியக் கண்ணோட்டத்தை நனவாக்குவதற்கான ஒரு உறுதியான படியாக மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம் இருந்தது.

    ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக, கிராமப்புற வேலையற்றோர், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன. கொரோனா காலத்தில் பல லட்சக்கணக்கானவர்களுக்கு உயிர்நாடியாக இருந்தது. ஆனால் சமீபத்தில் அந்த திட்டத்தை புல்டோசர் கொண்டு தாக்கி விட்டது.

    மகாத்மா காந்தி சட்டத்தின் கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி எதிர்க்கட்சிகளிடம் கலந்துரையாடல் நடத்தப்படவில்லை. மகாத்மா காந்தியின் பெயர் கூட இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. யாருக்கு வேலை, எங்கே, எப்படி? என்பது குறித்த முடிவுகள் இனி டெல்லியில் இருந்துதான் எடுக்கப்படும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தியதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தாலும், இந்த திட்டம் ஒருபோதும் எந்தவொரு கட்சியை பற்றியதாகவும் இல்லை. மாறாக தேசிய மற்றும் பொது நலனைப் பற்றியதாகவே இருந்தது. தற்போது அந்த சட்டத்தை பலவீனப்படுத்தி இருப்பது, கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலுக்கு சமம்" என்றார்.

    மேலும், இந்த புதிய சட்டத்தை கருப்புச் சட்டம் என அழைத்த அவர், அதனை எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்களும், லட்சக்கணக்கான தொண்டர்களும் உறுதுணையாக நிற்பதாகவும் கூறினார்.

    ஏற்கனவே இந்த விவகாரத்தை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனை ஏற்று தற்போது சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

    ×