என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா"

    • எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு
    • 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது.

    1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு நாடுகளுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. அப்போது ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேம், சிரியாவிலிருந்து கோலன் ஹைட்ஸ் மற்றும் எகிப்திடமிருந்து காசா பகுதி மற்றும் சினாய் தீபகற்பம் உள்ளிட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் கைப்பற்றியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தில் , "சிரியாவின் கோலன் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து இருப்பதை சட்டவிரோதம் என்றும், அப்பகுதியை விட்டு அந்நாடு வெளியேற வேண்டும்" என்று எகிப்து கோரியிருந்தது.

    எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது. இதன் முடிவில் இந்த தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறியது.

    இதனையடுத்து தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு சிரியா நன்றி தெரிவித்தது.

    • சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
    • இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.

    டெஸ்ட் தொடரை இழந்ததால் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணியினர் ஒரு நாள் தொடரை வெற்றியோடு தொடங்கி பரிகாரம் தேடிக் கொண்டனர். விராட் கோலியின் சதமும், ரோகித் சர்மா, கேப்டன் லோகேஷ் ராகுலின் அரைசதமும் 349 ரன்கள் குவிக்க உதவியதோடு வெற்றிக்கும் வித்திட்டது. பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் கலக்கினர். இன்றைய மோதலிலும் கோலி, ரோகித் சர்மாவின் ரன்வேட்டை தொடருமா? இந்த ஆட்டத்தோடு இந்திய அணி தொடரை சொந்தமாக்கி விடுமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

    முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் மார்கோ யான்சென் (70 ரன்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன்), கார்பின் பாஷ் (67 ரன்), ஆகியோரது அதிரடியால் இலக்கை நெருங்கி வந்தது. எக்ஸ்டிரா வகையில் அதிகமான ரன்களை (23) விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உடல்நலக்குறைவால் முதல் ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் பவுமா அணிக்கு திரும்புகிறார். அவரது வருகை அந்த அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும்.

    'பொதுவாக நான் டாப்-3 வரிசையில் ஆடுவேன். ஆனால் இப்போது எந்த இடம் காலியாக உள்ளதோ அந்த இடத்தில் களம் காணுவேன்' என பவுமா குறிப்பிட்டார். சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் சுப்ராயனுக்கு இடமிருக்காது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    போட்டி நடக்கும் ராய்ப்பூரில் இதற்கு முன்பு ஒரே ஒரு, ஒரு நாள் ஆட்டம் நடந்துள்ளது. 2023-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை 108 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா.

    தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக் அல்லது ரையான் ரிக்கெல்டன், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், நன்ரே பர்கர், பார்த்மேன்.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்தியர்களின் வரலாற்று வளர்ச்சியில் தோளோடு தோளாக நின்றதில் பெருமைக் கொள்கிறோம்.
    • நாங்கள் இந்தியாவில் இருந்து வாங்குவதை விட அதிகமாக விற்பனை செய்கிறோம் என்பதை நன்கு அறிவோம்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இருநாள் அரசுமுறை பயணமாக இந்த வாரம் (டிசம்பர் 4-5) இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்த சந்திப்பின்போது இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. 

    புதினின் இந்தியப் பயணம் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான உறவு குறித்தும் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,

    "ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான உறவு என்பது வெறும் ராஜாங்கரீதியானது மட்டுமல்ல. இந்த இருதரப்பு உறவு, பரஸ்பர புரிதலின் ஆழமான வரலாற்று பின்னணியில் அமைந்தது. இந்தியர்களின் வரலாற்று வளர்ச்சியில் தோளோடு தோளாக நின்றதில் பெருமைக் கொள்கிறோம். அதேநேரத்தில், இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய தொடர்புகளில் இந்தியாவின் நட்புரீதியான நிலைபாடுகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 

    இருநாடுகளும் அவரவர்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம், அவை பெரும்பாலான துறைகளில் உண்மையில் ஒத்துப்போகின்றன. பாதுகாப்புத் துறையில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நினைவில் கொள்வோம். இது வெறும் வர்த்தகம் சார்ந்தது மட்டுமல்ல. உயர் தொழில்நுட்பங்களின் பரிமாற்றம் ஆகும். சந்தை மதிப்பில், இந்தியாவிற்கு எண்ணெய் சப்ளை செய்யும் முக்கிய விநியோகஸ்தராக ரஷ்யா இருக்கிறது.

    இந்த வர்த்தகம் இந்தியாவிற்கு பெரும் நன்மை பயக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இது இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. மூன்றாம் நாடுகளால் பாதிக்கப்படாத வகையில் நமது வர்த்தக தொடர்புகளை கட்டமைக்கவேண்டும். நாங்கள் இந்தியாவில் இருந்து வாங்குவதை விட அதிகமாக விற்பனை செய்கிறோம் என்பதை நன்கு அறிவோம். புதினின் வருகையின்போது இதுகுறித்து ஆலோசிக்கப்படும். இந்தியாவில் இருந்து நிறைய பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புகிறோம். அதற்கான ஒரு நிகழ்வாக இது அமையும்" என தெரிவித்தார்.  

    ×