என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayatollah Ali Khamenei"

    • தேசத்தைத் தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் ஈரானிய தேசம் தகுந்த பதிலடி (பலமான அடி) கொடுக்கும்.
    • ஈரான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ராணுவங்களை 'பயங்கரவாதக் குழுக்கள்' என்று அறிவித்துள்ளது

    இருநாடுகளுக்கிடையே நிலவிவரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால் பிராந்தியப் போர் ஏற்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்கினால், அதன் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    "அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால் , இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்," என்று அயதுல்லா கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  மேலும், "நாங்கள் தூண்டுபவர்கள் அல்ல, எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் ஈரான் தேசத்தைத் தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் ஈரானிய தேசம் தகுந்த பதிலடி (பலமான அடி) கொடுக்கும். சமீபத்திய கிளர்ச்சி ஒரு இராணுவப் புரட்சியைப் போன்றது. நிச்சயமாக, அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டது." என தெரிவித்துள்ளார். 

    அமெரிக்கா தனது கடற்படையை ஈரான் அருகே அனுப்பியுள்ள நிலையில் கமெனி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஒருபுறம் போர் பதற்றம் நிலவினாலும், மோதலைத் தவிர்க்க இரு நாடுகளும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் "சீரியஸாகப் பேசி வருகிறது" என்று டிரம்ப் கூறியுள்ளார். ரகசிய பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இதற்கான கட்டமைப்பு தயார் செய்யப்பட்டு வருவதாகவும் ஈரானின் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.

    இதனிடையே ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை ஐரோப்பிய ஒன்றியம் 'பயங்கரவாத அமைப்பு' என அறிவித்ததற்குப் போட்டியாக, ஈரான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ராணுவங்களை 'பயங்கரவாதக் குழுக்கள்' என்று அறிவித்துள்ளது.

    • போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம், நாங்கள் உங்களுக்கு ராணுவ ரீதியாகவும் ஆதரவளிக்கிறோம் என டிரம்ப் தூண்டிவிட்டார்.

    ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.

    பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த ஈரான் மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத்தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே போர் சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஈரான் ஏற்பட்ட வன்முறை மற்றும் அதன்மூலம் ஏற்பட்ட உயிரிழப்புக்கு காரணமாக போராட்டத்தை ஆதரித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என ஈரான் உச்சதலைவர் அபயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.

    ஈரான் டெலிவிசனில் பேசிய கமேனி "போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கிளர்ச்சியின்போது, அமெரிக்க அதிபர் நேரடியாகப் பேசி, கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டு, "நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம், நாங்கள் உங்களுக்கு ராணுவ ரீதியாகவும் ஆதரவளிக்கிறோம்" என்று கூறினார்.

    அமெரிக்கா ஈரானின் பொருளாதார மற்றும் அரசியல் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் காரணமாகவும், ஈரானிய தேசத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் காரணமாகவும், நாங்கள் அமெரிக்க ஜனாதிபதியை ஒரு குற்றவாளியாகவே கருதுகிறோம்.

    போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் காலாட்படை வீரர்கள். அவர்கள் மசூதிகளையும் கல்வி மையங்களையும் அழித்துவிட்டனர். மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் அவர்கள் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.

    இவ்வாறு கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.

    • ஈரானில் பொருளாதார நெருக்கடியால் போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டிரம்ப் எச்சரிக்கை.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இதில் போராட்டக்காரர்கள்- பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் 45 பேர் பலியாகி உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளன.

    இந்த நிலையில் ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஒரு மாபெரும் போராட்டத்திற்காக ஈரான் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இரவு 8 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

    இதற்கிடையே நேற்று இரவு தலைநகர் தெஹ்ரானில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் நாட்டின் மற்ற பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. அப்போது அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல சந்தைகளும் கடைகளும் மூடப்பட்டன.

    தெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் பொருட்களை போட்டு எரித்தனர். சில இடங்களில் பாதுகாப்பு படையினருடன் மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து ஈரான் முழுவதும் இணையம் மற்றும் செல்போன் சேவைகள் முடக்கப்பட்டன.

    இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசுகையில் "டிரம்பை மகிழ்விப்பதற்காக போராட்டக்காரர்கள் தங்களுடைய சொந்த தெருக்களை நாசப்படுத்துகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்- டிரம்ப்
    • ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப்பட்டால் அது ஒப்பந்தம் அல்ல- காமேனி

    இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முக்கிய காரணமாக இருந்தார். அவர் இஸ்ரேல்- காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான எகிப்து வந்தார்.

    அதற்கு முன்னதாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்று, அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது "ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஈரானின் சுப்ரீம் தலைவர் அயோதுல்லா அலி காமேனி, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் விருப்பத்தை நிராகரித்துள்ளார். மேலும் ஈரானில் உள்ள அணு ஆயுத திறனை அமெரிக்கா அழிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஈரான்- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதுஇ அந்த 12 நாள் விமானத் தாக்குதலால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில்தான் அமெரிக்கா அதிபர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை காமேனி நிராகரித்துள்ளார்.

    "டொனால்டு டிரம்ப் தன்னை ஒரு டீல் மேக்கர் என சொல்கிறார். ஆனால் ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப்பட்டால், அது ஒரு ஒப்பந்தம் அல்ல, மாறாக ஒரு திணிப்பு மற்றும் மிரட்டல். ஈரான் மீது குண்டுகள் வீசி அணு ஆயுத தொழிற்சாலையை அழித்ததாக பெருமை கொள்கிறார். நன்று. அவர் கனவு காணட்டும்" காமேனி எனத் தெரிவித்துள்ளார்.

    • ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் மருத்துவமனை சேதம்.
    • ஈரானில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டை 7ஆவது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ஈரானில் உள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தியது. இந்த அணு உலையில் ரஷியாவைச் சேர்ந்த நிபுணர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் அணுஉலை மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ரஷியா வலியுறுத்தியுள்ளது.

    இரண்டு நாடுகளும் மாறிமாறி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் சேதத்தை சந்தித்து வருகின்றன.

    இந்த நிலையில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை இருக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதன் மறைமுக அர்த்தம் அவரை வீழ்த்துவது.

    இந்த கருத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் புறந்தள்ளிவிடவில்லை. "அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இது தொடர்பாக மீடியாவில் பேசுவது சிறந்ததாக இருக்காது. இஸ்ரேல் ராணுவத்திடம், ஈரான் அதிகாரத்தில் யாருக்கும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தன்மை இல்லை என அறிவுறுத்தியுள்ளேன். நான் பேசாமல் இருக்க விரும்புகிறேன். நீங்கள் நடவடிக்கையை பார்ப்பீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம் காமேனிக்கு இஸ்ரேல் குறி வைக்கலாம் எனத் தெரிகிறது.

    முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு காமேனி "ஈரான் ஒற்றுமையாக உள்ளது. ஒருபோதும் சரணடையமாட்டோம். அமெரிக்கா தலையீடு செய்தால் சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனத் தெரிவித்திருந்தார்.

    இஸ்ரேல் உடன் இணைந்து தாக்குதல் நடத்த டொனால்டு டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டை மேலும் மோசமான நிலையை எட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    • ஈரான் ஒற்றுமையாக நிற்கிறது.
    • சரிசெய்ய முடியாத அளவிற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

    ஈரான்- இஸ்ரேல் இடையிலான சண்டை போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்.

    நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஈரான் நாட்டின் உச்சபட்ச அதிகார தலைவரான அயதுல்லா அலி காமேனி "ஈரான் ஒருபோதும் சரணடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அயதுல்லா அலி காமேனி "இந்த விவகாரத்தில் ஈரான் ஒற்றுமையாக நிற்கிறது. ஒருபோதும் ஈரான் சரணடையாது. அமெரிக்கா ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால், சரிசெய்ய முடியாத அளவிற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் பல வருடங்களாக ஆதரவு அளித்து வருகிறது
    • அக்டோபர் 7 தாக்குதல் குறித்து ஈரானுக்கு ஹமாஸ் முன்னரே தெரிவிக்கவில்லை

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    ஈரான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

    போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக நேரடியாக போர்க்களத்தில் இறங்கினால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக களம் இறங்கும் என்றும் அதன் மூலம் போர் பிற நாடுகளுக்கு பரவலாம் என உலக நாடுகள் கவலை தெரிவித்து வந்தன.

    சில தினங்களுக்கு முன்பு ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனிக்கும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிற்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

    "ஹமாஸ் அமைப்பிற்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவை ஈரான், தொடர்ந்து வழங்குமே தவிர நேரடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஈரான் ஈடுபடாது என்றும் ஈரானின் ஆதரவை கோரி வெளிப்படையாக பாலஸ்தீனத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு ஹமாஸ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றும் அச்சந்திப்பின் போது ஈரான் அதிபர் அலி கமேனி திட்டவட்டமாக ஹமாஸ் தலைவரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து முன்கூட்டியே ஈரானுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் ஈரானின் இந்த நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரான் இந்த முக்கிய முடிவில் உறுதியாக இருந்தால், போர் பரவல் குறித்த அச்சம் குறைந்து விடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • மெட்டா-வின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் இயங்கி வருகின்றன
    • கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்

    உலகெங்கும் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில், அமெரிக்காவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு தளங்கள் முன்னணியில் உள்ளன.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதால் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், தங்கள் கருத்துகள் மக்களை எளிதில் சென்றடைய இவற்றை பயன்படுத்துகின்றனர்.

    மெட்டா எனும் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் இந்த 2 தளங்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய 2 தளங்களுக்கும் ஈரானில் தடை நிலவுகிறது.

    ஆனாலும், பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் இவற்றை பெருமளவில் "விபிஎன்" (VPN) மூலம் பயன்படுத்துகின்றனர்.

    இந்நிலையில், ஈரானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான 84-வயதாகும் "அயதுல்லா அலி கமேனி" (Ayatollah Ali Khamenei) பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் வைத்திருந்த சமூக வலைதள கணக்குகளை, கடந்த மாதம், மெட்டா நீக்கியது.


    இதற்கு உலகம் முழுவதும் உள்ள கமேனி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    தற்போது இது குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒசைன் அமிர்-அப்தொல்லாகியான் (Hossein Amir-Abdollahian) தெரிவித்ததாவது:

    கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவும், கமேனியின் கோடிக்கணக்கான ஆதரவாளர்களை அவமானப்படுத்தும் விதமாகவும் மெட்டாவின் இந்த நடவடிக்கை உள்ளது.

    கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரை 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்.

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலை கொண்டவர் கமேனி.

    கருத்து சுதந்திரம் குறித்து மேற்கத்திய நாடுகள் பெருமளவு பிரசாரங்கள் செய்கின்றன.

    ஆனால், அவை வெற்று முழக்கங்கள் என தற்போது தெளிவாகி விட்டது.

    தனது நடவடிக்கை மூலம் அவர்களின் மறைமுக அரசியல் உள்நோக்கங்கள் வெற்றி பெற மெட்டா உதவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரான் அதிபர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.
    • ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற தலைவரை சந்தித்த பின், வீட்டிற்கு சென்ற நிலையில் படுகொலை.

    ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பாதுகாவலர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

    நேற்று ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அத்துடன் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்கு காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகிறது.

    இந்த நிலையில் ஈரானுக்கு எதிராக பழிக்குப்பழி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அயதுல்லா அலி கமேனி கூறுகையில் "ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வான்வழி தாக்குதல் மூலம் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப்பின், இஸ்ரேல் தனக்குத்தானே கடுமையான தண்டனைக்கு தயார்படுத்தியுள்ளது.

    எங்களுடைய பணியான பழிக்குப்பழி குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம் என காமெனி தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹனியே எங்களுடைய நாட்டின் மதிப்பிற்குரிய விருந்தாளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    காசா மீதான தாக்குதலுக்குப்பின் ஒருமுறை ஈரான் பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக லெபனான் மற்றும் ஈரானில் இருந்து ஈரான் கடுமையான வான்தாக்குதலை நடத்தியது. அப்போது அமெரிக்கா உதவியுடன் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் ஈரான் தாக்குதலை முறியடித்தது.

    தற்போது இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி போர் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது.

    • இஸ்மாயில் ஹனியே சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவது எங்கள் கடமை.
    • கடுமையான தண்டனையை பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துள்ளது என்றார்.

    தெக்ரான்:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து உள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள வீட்டில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

    அவரை இஸ்ரேல் கொலை செய்துள்ளது என்று ஈரான், ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளன. ஈரான் நாட்டுக்குள்ளே ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது. அந்நாட்டு அரசை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. இதற்கு இஸ்ரேலை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி காமேனி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும் படி ராணுவ படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் நடந்தது. இதில் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

    போர் விரிவடையும் பட்சத்தில், இஸ்ரேல் தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டிற்கும் திட்டங்களை தயாரிக்குமாறு ஈரானின் புரட்சிகர காவலர்கள் மற்றும் ராணுவ தளபதிகளை அறிவுறுத்தினார். மேலும் அயோதுல்லா அலி காமேனி வெளியிட்ட அறிக்கையில், இஸ்மாயில் ஹனியே சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவது எங்கள் கடமை. ஏனென்றால் இது எங்கள் நாட்டில் நடந்தது. கடுமையான தண்டனையை பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துள்ளது என்றார்.

    இது குறித்து ஈரான் அதிகாரிகள் கூறும்போது, இஸ்ரேல் மீது ஈரான் எவ்வளவு வலிமையுடன் தாக்குதல் நடத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஹைபாவிற்கு அருகிலுள்ள ராணுவ இலக்குகள் மீது டிரோன்கள், ஏவுகணைகளின் கூட்டுத் தாக்குதலை நடத்த ராணுவத் தளபதிகள் பரிசீலித்து வருகின்றனர்.

    அதே வேளையில் பொதுமக்கள் மீது தாக்குதலை தவிர்ப்பது எங்களது குறிக்கோளாக இருக்கும். மேலும் ஈரான்,ஏமன், சிரியா, ஈராக் உள்ளிட்ட நட்பு நாட்டுப் படைகளுடன் இணைந்து மற்ற முனைகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    ஈரான் மீது இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ தாக்குதல் நடத்தினால் போரை விரிவுப்படுத்தும் படியும், அதற்கேற்ப தயாராகும்படியும் படைகளுக்கு காமினி உத்தரவிட்டு உள்ளார் என்றார்.

    • அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை தூண்டி விட்டுள்ளன.
    • ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க சதி திட்டம்.

    ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக கூறி ஈரானில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

    போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது. 


    இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும் அது தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில், ஹிஜாப் போராட்டம் ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி என்று அந்நாட்டு தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கியது முதல் மவுனம் காத்து வந்த அவர் தனது கருத்தை முதன்முறையாக தெரிவித்துள்ளார்.

    மாஷா அமினி போலீஸ் காவலில் இறந்ததை அறிந்து தாம் மனம் உடைந்ததாகவும் அவரது மரணம் மிகவும் துயரமானது என்றும் கொமெனி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை திட்டமிட்டு தூண்டி விட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். 

    ×