என் மலர்
புதுச்சேரி
- புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
- புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
புதுச்சேரி:
நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு திரளுவார்கள்.
அதுபோல் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை கொண்டாடப்படும் கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா துறை சார்பில் இசை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன. புதுச்சேரியில் உள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளை நோக்கி செல்கின்றனர்.
புதுச்சேரி நகர் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவ ரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
புதுச்சேரியில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க 50 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் சீருடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பணியில் ஈடுபடுவார்கள். மேலும் மதுகுடித்திருப்பதை கண்டறியும் கருவி (பிரீத் அனலைசர்) சோதனை மேற்கொள்வார்கள். இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்கக்கூடாது. அதிக வேகத்தில் செல்லக்கூடாது இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்யக்கூடாது அதிக இரைச்சல் எழுப்பக்கூடாது. இதனை இன்டர்செப்டர் வாகனம் மூலமாக கண்கா ணிக்கப்படும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள்.
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் நிரம்பி விட்டன.
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுப்பதால் நகர வீதிகள் எங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வலம் வருகிறார்கள். இதனால் புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
நாளை மறுநாள் நள்ளிரவு கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நித்யா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு, வருகிற 31-ந் தேதி இரவு கடற்கரை சாலை மற்றும் நகர மைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து ஒழுங்கு மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 31-ந் தேதி மதியம் 2 மணி முதல் ஜனவரி 1-ந் தேதி காலை 9 மணி வரை, ஒயிட் டவுன் பகுதியின் உள்ளே வாகனங் கள் செல்ல அனுமதியில்லை.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரி கடற்கரை நோக்கி வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை தற்காலிக வாகன நிறுத்து மிடங்களில் நிறுத்திவிட்டு, அங்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கட்டணமில்லா பேருந்து சேவைகளை பயன்படுத்தலாம்.
கடற்கரைக்கு செல்ல 30 தற்காலிக சிறப்பு கட்டணமில்லா பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் எளிதில் வழிகாணும் வகையில், சுமார் 400 போக்குவரத்து வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், முக்கிய சந்திப்புகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது.
- ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகைக்கு தரப்படும் இலவச ஆடைக்கு பதிலாக அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங்கல் திட்டம் இனி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
இலவச அரிசி மற்றும் கோதுமை தொடர்ச்சியாக வழங்கப்படும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னையை சேர்ந்த லூபின் நிறுவனம் அளித்த புகாரின்பேரில் ராஜா, விவேக் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- இவ்வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
போலி மருந்து குறித்து சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்து ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து கோர்ட் அனுமதியுடன் கம்பெனி, குடோன்கள், தலைமை அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.200 கோடிக்கு போலி மருந்துகள், பல கோடி சொத்துக்கள், தங்க, வைர நகைகள் சிக்கின.
இந்த நிலையில் இந்த வழக்கில் கவர்னர் உத்தரவின்பேரில், எஸ்.பி., நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர். உடன், வழக்கில் முன்ஜாமின் பெற்று தலை மறைவான ராஜா (எ) வள்ளியப்பன், விவேக் ஆகியோர் கடந்த 10-ந்தேதி கோர்ட்டில் சரணடைந்தனர்.
இருவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், 9 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த லூபின் நிறுவனம் அளித்த புகாரின்பேரில் ராஜா, விவேக் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் ஜெயிலில் அடைக்கப்பட்ட ராஜாவை, நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த 18-ந் தேதி முதல் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில் ராஜாவின் பங்குதாரரான என்.ஆர்.காங்., பிரமுகர் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். மேலும் ஜி.எஸ்.டி., செலுத்துவதில் மோசடி செய்ய உதவிய முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் ஜி.எஸ்.டி., அலுவலக கண்காணிப்பாளரை தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் பல மாநிலங்களை சேர்ந்தவர்களின் தொடர்பு உள்ளதால், வழக்கை சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை செய்து கவர்னர் உத்தரவிட்டார். இந்த நிலையில் ராஜாவின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அதனையொட்டி, சிறப்பு புலனாய்வு குழுவினர், ராஜாவை நேற்று மாலை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே, கவர்னர் உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து நேற்று மாலை உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இன்னும், ஓரிரு நாளில் இவ்வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் கோப்புகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
போலீஸ் காவலில் ராஜா அளித்த தகவலின் பேரில் போலி மருந்து தயாரிக்க உதவியது தொடர்பாக அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த ஜெகன் என்ற மருதமுத்து (வயது42) சொக்கலிங்கம், (43) ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதன்மூலம் இவ்வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சொக்கலிங்கம், திருபுவனைபாளையத்தில் உள்ள மருந்து கம்பெனியில் மெஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். ஜெகன் என்ற மருதமுத்து (42) வேன் டிரைவர் மருந்தை சென்னைக்கு எடுத்துச் சென்று வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வந்தார்.
- வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த 8 இடங்களில் வாகன நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நகரப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 30 அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்ராய் ஆகியோர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் புத்தாண்டையொட்டி எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஷாலினிசிங், ஐ.ஜி.அஜித் குமார்சிங்லா, டி.ஐ.ஜி.சத்திய சுந்தரம் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன். அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு போலீசார் 1,000 பேரும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 500 போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புத்தாண்டுக்கு முந்தைய நாள் (31-ந்தேதி) ஒயிட் டவுன் பகுதிகளில் மதியம் 2 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த 8 இடங்களில் வாகன நிறுத்த வசதி (பார்க்கிங்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகரப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 30 அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலி மருந்து வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். எனவே அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.
- போலி மருந்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
- ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதயம், சர்க்கரை, ரத்தகொதிப்பு நோயாளிகள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை போலி மருந்து தொழிற்சாலை மூலம் தயாரித்து நாட்டில் உள்ள 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரபல நிறுவனம் அளித்த புகாரில் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேட்டுப்பாளையம், திருபுவனை பாளையம், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் இயங்கிய போலி மருந்து தொழிற்சாலைகள், 10-க்கும் மேற்பட்ட குடோன்களை சோதனை செய்தனர்.
தொழிற்சாலையில் உள்ள நவீன எந்திரங்கள், பல கோடி மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள், மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 13 இடங்களில் சீல் வைக்கப்பட்டன.
போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா என்ற வள்ளியப்பன், அவரது பங்குதாரர் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன், குடோன் பொறுப்பாளர் வெங்கட் உறுதுணையாக இருந்த ராணா, மெய்யப்பன் உட்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொழிற்சாலை அதிபர் ராஜாவின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 2 ½கோடி அளவிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே போலி மருந்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த புதன்கிழமை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ராஜா பல தகவல்களை தொடர்ந்து அளித்து வருகிறார். அதன்படி போலீசார் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதாலும் ரசாயான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது என்பதாலும், வெளிநாட்டு பண பரிவர்த்தனை காரணங்களால் வழக்கை சி.பி.ஐ., என்.ஐ.ஏ. விசாரணைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.
இந்த நிலையில் போலியாக நடத்தப்பட்ட தொழிற்சாலைக்கு ஜி.எஸ்.டி. வரி எப்படி செலுத்தப்பட்டது என்ற கேள்வியை அரசியல் கட்சியினர் எழுப்பினர்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு குழுவினர் கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவிடம் ஜி.எஸ்.டி.வரி செலுத்தியது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். ஜி.எஸ்.டி. வரியை செலுத்த புதுவை வனத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி தனக்கு உதவி செய்ததாக கூறினார்.
மேலும் சத்திய மூர்த்தியிடம் ரூ12 கோடி பணம் கொடுத்ததாகவும், ஐ.எப்.எஸ். அதிகாரி தனது அதிகாரிகள் தொடர்பின் மூலம் உதவியதாகவும் ராஜா தெரிவித்தார். இதனிடையே அந்த அதிகாரி தலைமறைவானார்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஓசூரில் பதுங்கியிருந்த சத்தியமூர்த்தியை நேற்று இரவு கைது செய்தனர் அவரை இரவோடு இரவாக புதுச்சேரி கொண்டு வந்து விஜிலென்ஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் தனக்கு நெருக்கமாக இருந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் பெயரை சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இதனையடுத்து புதுவை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் பணிபுரியும் சூப்பிரண்டு பரிதாவிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஜி.எஸ்.டி அதிகாரியை கைது செய்ய மத்திய அரசிடம் முன் அனுமதி பெறும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர். விரைவில் ஜி.எஸ்.டி. அதிகாரிகளும் இந்த வழக்கில் கைதாவார்கள் என தெரிகிறது.
- கூட்டணியை உறுதிப்படுத்த, தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் இடங்கள் கோர பாஜக திட்டமிட்டு வருகிறது
- தவெக, என்.ஆர். காங்கிரஸ் இடையே உருவாகும் புதிய கூட்டணி?
புதுச்சேரியில் தற்போது பாஜக, என்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே அடுத்தாண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கூட்டணி தொடருமா? என்ற கேள்வி நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.
இந்நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்த, தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் இடங்கள் கோர பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம். புதுச்சேரி வளர்ச்சி குறித்து பாஜக செயல் தலைவர் நிதின் நபீனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்" என தெரிவித்தார்.
முன்னதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா , புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் அப்பா பைத்திய சுவாமி கோயிலில் முதலமைச்சருடன் வழிபட்டனர்.
- நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.
- புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
பா.ஜனதாவின் புதிய தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். அவருக்கு புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் பாரதியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அக்கார்டு ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
பா.ஜ.க-வினர் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக ஓயாமல் உழைத்து வருவது மிகப்பெரிய பலம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் பா.ஜ.க வலிமையான வளர்ச்சியடைந்து வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து உற்சாகத்துடன் செயல்பட்டு தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதற்காக சக்தி கேந்திர நிர்வாகிகள், பூத் தலைவர்கள் களத்தில் இறங்கி வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் ஒரு லட்சம் புதிய இளைஞர்களை அடையாளம் கண்டு, நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி வரை தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பிரதமர் அறிவித் துள்ள திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி.மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முதலியார் பேட்டை 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜ.க வல்லுனர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் பா. ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின்நபின் கலந்து கொண்டு பேசினார்.
நேற்று இரவு புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் தங்கிய பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்தார். அதனை தொடர்ந்து பா.ஜ.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் மணவெளி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தொடர்ந்து கணபதி செட்டிகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் அவருடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட வியாவும் பங்கேற்றார்.
- புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.
- தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
புதுச்சேரி:
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாளில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்ட நிலையில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்கவில்லை.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து புதுச்சேரியில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் மற்றும் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.
தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாதிரி தீபத் தூணில் தொழிலதிபர் குணசேகரன் தீபத்தை ஏற்றினார். திருக்கனூர் அருகேயுள்ள திருமங்கலம் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி பா.ஜனதா தலைவர் வி.பி.ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தீப்பாய்ந்தான், இந்து முன்னணி தலைவர் சனில்குமார் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள், முருகபக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
- தனியார் ஆப்ரேட்டர்கள் எலெக்ட்ரிக் பஸ்களின் ஓட்டுநர்களை நியமிப்பது, பஸ்களுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
- எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பிரதம மந்திரி இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த திட்டத்தில் மகாராஷ்டிரா, அரியானா, ஒடிசா, குஜராத் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களும், சண்டிகர், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களும் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 2024-25-ம் ஆண்டிற்கான 4,588 எலெக்ட்ரிக் பஸ்களுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ரூ.57 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்காக ரூ.20 ஆயிரம் கோடி வழங்க உள்ளது. மீத தொகையை இயக்கப்படும் பஸ்களுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே அதற்கான தொகையை ஏற்கும்.
இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி புதுவை முழுவதும் எலெக்ட்ரிக் பஸ்கள் மூலம் பொது போக்குவரத்தை மேம்படுத்த கவர்னர் கைலாஷ்நாதன் தீவிரம் காட்டி வருகிறார்.
மொத்தமுள்ள 75 பஸ்களில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இடையில் இயக்கவும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பஸ்களை புதுவை நகர பகுதிகளுக்குள் இயக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் பஸ்களை மறைமலை அடிகள் சாலை தாவரவியல் பூங்கா எதிரேவும் மொரட்டாண்டிக்கு அருகே உள்ள நியூகோவின் டெப்போவிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். தனியார் ஆப்ரேட்டர்கள் எலெக்ட்ரிக் பஸ்களின் ஓட்டுநர்களை நியமிப்பது, பஸ்களுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் கண்டக்டர்களை நியமிக்கும். புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 24 மற்றும் நகரங்களுக்குள் இயக்கப்படும் பஸ்களுக்கு ரூ. 22 என கணக்கிட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள லாரி முனையத்தில் 3.5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அருகில் உள்ள துணை நிலையத்திலிருந்து கேபிள்கள் புதைக்கப்பட உள்ளது.
பணிமனை கட்டுவதற்கு ரூ. 12.75 கோடிக்கு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்கான டெண்டர் விடும் பணி நடந்துவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், தானியங்கி கட்டண வசூல் அமைப்புகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே ஏற்கனவே புதுவையில் தனியார் பங்களிப்புடன் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
- காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார்.
புதுச்சேரியில் 16,171 வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 45,312 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், 22,077 வாக்காளர்கள் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாதவர்களாகவும், 1627 வாக்காளர்கள் ஏற்கனவே வேறு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களாகவும் மற்றும் 344 வாக்காளர்கள் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. மொத்தம் 85,531 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 17,936 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 1,03,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
- புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது.
- காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.
புதுச்சேரி:
புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலவச அரிசி மற்றும் கோதுமை தொடர்ச்சியாக வழங்கப்படும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்.
பிரதமர், முதல்-அமைச்சர் படம் மட்டும் அரிசி மற்றும் கோதுமை வழங்கும் பையில் இருந்தால் போதும் என கவர்னர் அறிவுறுத்தியதால், அவரின் படம் அச்சிடவில்லை என்றார்.
அப்போது த.வெ.க. தலைவர் விஜய், ரேஷன் கடைகள் செயல்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பொதுமக்களை விசாரித்தால் ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை வழங்கப்படுவதை அறிந்து கொள்ளலாம். குறைகள் இருந்தால் சொல்லாம் என பதிலளித்தார்.
புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது. காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.
இந்த ரேஷன் கார்டுகளுக்கு இலவச கோதுமை விநியோகம் செய்ய மாதந்தோறும் புதுச்சேரி பிராந்தியத்துக்கு 521, காரைக்காலுக்கு 120, மாகிக்கு 16, ஏனாமுக்கு 31 என 688 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இலவச கோதுமை திட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக மாதம் ரூ.3.25 கோடி செலவாகும் என்றார்.






