என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • புதுச்சேரி விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு தினந்தோறும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    தினமும் காலை 11.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது.

    மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது. அங்கிருந்து 3.05 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது.

    புதுவையில் இருந்து 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதில் 74 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நீடிக்கும் நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல் புதுச்சேரி விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வந்துள்ளது.

    மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி விமான நிலையத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுச்சேரி விமான நிலையத்திற்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் கொண்ட கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.

    • நள்ளிரவில் பரிவதவர்த்தினிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • பரிவதவர்த்தினி புதுச்சேரி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    புதுச்சேரி மாநிலம் தவளைக்குப்பம் தானம்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ-பரிமளம் தம்பதியின் மகள் பரிவதவர்த்தினி (வயது 15), மகன் விஷ்வா உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் காலனி செல்லும் ரோட்டில் தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். இரவு நேரத்தில் அங்குள்ள ஒரு ஓட்டலில் அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் பரிவதவர்த்தினிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    ஆனால் பெற்றோர் இதனை பெரிதுபடுத்தாமல் தைலம் தடவிவிட்டு தூங்கி விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது பரிவதவர்த்தினி பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்த பரிவதவர்த்தினி புதுச்சேரி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு எழுதிவிட்டு விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தபோது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவையில் கடல் வழி தாக்குதல் ஏற்பட்டால், ஜிப்மர் பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
    • அவசரகால சூழலில் ஊழியர்கள் இந்தியாவில் எங்கும் பணி அமர்த்த தயார் நிலையில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பதட்டம் நிலவுகிறது.

    தேசிய அவசர நிலையை தொடர்ந்து புதுவை ஜிப்மர் துறை தலைவர்களுடன், இயக்குனர் வீர்சிங் நேகி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    கூட்டத்துக்கு பின் ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெரிய தாக்குதல்கள் நடந்தால் மருத்துவம், அறுவை சிகிச்சை, அவசர மருத்துவம், மயக்க மருந்து, குழந்தை மருத்துவம், மகப்பேறியல், மகளிர் மருத்துவம் உட்பட உயர் மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தேவைப்படும் நேரத்தில் இந்த குழுவினர் ஜம்மு, காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநில எல்லைகளில் உள்ள மருத்துவ ஆஸ்பத்திரிகளுக்கு மத்திய அரசு உத்தரவுக்கு ஏற்ப அனுப்பி வைக்க தயார் நிலையில் உள்ளனர்.

    புதுவையில் கடல் வழி தாக்குதல் ஏற்பட்டால், ஜிப்மர் பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜிப்மரில் டாக்டர்கள், ஊழியர்களின் அனைத்து விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசரகால சூழலில் ஊழியர்கள் இந்தியாவில் எங்கும் பணி அமர்த்த தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.
    • வான்வழி தாக்குதலின் போது வெளியே செல்வதும், புகைப்படம் எடுப்பதும் கூடாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா-பாகிஸ்தான் போர் பதட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வான்வழித் தாக்குதல் ஏதேனும் நடந்தால் உங்கள் வீட்டில பாதாள அறை இருக்க வாய்ப்பில்லை என்பதால் குளியல் அறையை தேர்வு செய்யலாம். தாக்குதலில் ஜன்னல் கதவுகள் நொறுங்காமல் இருக்க பிளாஸ்டிக் சீட் வைத்து ஒட்டி விடுங்கள்.

    வீட்டில் உள்ள மெத்தை, மேஜை, புத்தகங்கள் வைத்து தற்காலிக குடில் அமைத்து கொள்ளுங்கள். வாய் சிறிதாக திறந்த நிலையில் பின்னந்தலையினை கைகளால் மறைத்தவாறு தரையில் குப்புறப்படுத்து கொள்ள வேண்டும்.

    போதிய உணவு, குடிநீர் இருப்பை உறுதி செய்யுங்கள். குளியல் வாளி, டப் என அனைத்திலும் நீர் வைத்துக் கொள்ள வேண்டும். மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பை அனைத்து வையுங்கள். ஜன்னல் அருகே இருக்காதீர்கள். பறந்து வரும் இடிபாடுகளிடம் இருந்து காத்து கொள்ள போர்வை, விரிப்புகள் கொண்டு மூடி கொள்ள வேண்டும்.

    அபாய சங்கு ஒலிப்பதன் மூலம் விடுக்கப்படும் விமான தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை பின்பற்றவும். உங்கள் சுற்று வட்டாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வான்வழி தாக்குதலின் போது வெளியே செல்வதும், புகைப்படம் எடுப்பதும் கூடாது.

    சுவர், ஜன்னல் அருகே நிற்க கூடாது. பெரும் கூட்டமாக நிற்க கூடாது. தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். அனைத்தும் சரியாகி விட்டதாக அரசு அறிவிக்கும் வரை வீட்டினுள் இருங்கள். வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஆபத்துக்கான சமிக்கை என்பதால் அதை அலட்சியப்படுத்த கூடாது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பணத்தை இழந்தவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மோசடி பேர்வழிகள் நூதன முறையில் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். மோசடிகாரர்கள் விரிக்கும் வலையில் படித்தவர்களும் பணத்தை இழந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக 'ஷாப்பிபை' உள்பட பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆன்லைன் மோசடி கும்பல் ஆசை வார்த்தை கூறினர்.

    ரூ.28 ஆயிரம் முதலீடு செய்தால் 30 நாளில் ரூ.1 லட்சத்து 800 தருவதாகவும் அல்லது தங்கமாக பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதனை நம்பிய புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு எந்த பணமும் வரவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து பணத்தை இழந்தவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த காலங்களில் மணமகன் கிளீன் ஷேவ் செய்து இருப்பார்.
    • திருமண கோலத்திலும் மணமகன் தாடி வைத்துள்ளார். இதுதான் இன்றைய பேஷனாக உள்ளது.

    புதுச்சேரி:

    ஆண்டுதோறும் புதிய புதிய பேஷன்கள் உருவாகி வருகிறது.

    உடைகளில் வரும் பேஷனை போல தலை முடி, தாடி வைப்பதிலும் பல ஸ்டைல்கள் உருவாகி உள்ளது. ஷிப்பி, டிஸ்கோ, முல்லட், பாக்ஸ், பங்க் என தலை முடியை இன்றைய இளைஞர்கள் அழகுபடுத்தி கொள்கின்றனர்.

    இதேபோல் இளைஞர்களிடம், 'தாடி' வளர்ப்பது தனி மோகமாகி உருவாகி உள்ளது. தாடி வளர்ப்பதில் கே.ஜி.எப். கதாநாயகன் யாஷ் வைத்திருந்த புல் லாங் பியட், பிரெஞ்சு போர்க், கோட்டே, ஸ்டபுள் லாங், மீடியம் என பல வகைகள் உள்ளது. கடந்த காலங்களில் மணமகன் கிளீன் ஷேவ் செய்து இருப்பார். ஆனால் இப்போது திருமண கோலத்திலும் மணமகன் தாடி வைத்துள்ளார். இதுதான் இன்றைய பேஷனாக உள்ளது.

    இந்த நிலையில் புதுவை மாநில காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவ கிராம மக்கள், 'திருமணத்தின் போது மணமகன் தாடி வைத்திருந்தால் அந்த திருமண விழாவில் கிராம மக்கள் யாரும் கலந்து கொள்வதில்லை' என, தடாலடியாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    மணமகளுக்கு சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். இதனை பலரும் ஏற்றுள்ளனர். ஆனாலும் தனி நபரின் விருப்பத்தில் தலையிடுவதா.? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. இது உள்ளூர் இளைஞர்களிடம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

    • புதுச்சேரியில் 51 பள்ளிகள், காரைக்காலில் 12 பள்ளிகள் என மொத்தம் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
    • 582 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது.

    இதனால் அரசு பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தை கைவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.

    கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுதேர்வுகள் நடந்தது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் 101 தனியார் பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 881 மாணவர்கள், 3 ஆயிரத்து 683 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 564 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    இதில் புதுச்சேரி, காரைக்காலில் 3 ஆயிரத்து 794 மாணவர்கள், 3 ஆயிரத்து 659 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 453 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி சதவீதம் 98.53 ஆகும்.

    புதுச்சேரியில் மட்டும் 3 ஆயிரத்து 637 மாணவர்கள், 3 ஆயிரத்து 289 மாணவிகள் என 6 ஆயிரத்து 926 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 561 மாணவர்கள், 3 ஆயிரத்து 266 மாணவிகள் என 6 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் 98.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    காரைக்கால் மாவட்டத்தில் 244 மாணவர்கள், 394 மாணவிகள் என மொத்தம் 638 பேர் தேர்வு எழுதினர். இதில் 233 மாணவர்கள், 393 மாணவிகள் என 696 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்காலில் தேர்ச்சி சதவீதம் 98.12 ஆகும்.

    புதுச்சேரியில் 51 பள்ளிகள், காரைக்காலில் 12 பள்ளிகள் என மொத்தம் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் 1, பிரெஞ்சு 75, இயற்பியல் 5, வேதியியல் 23, உயிரியல் 5, கணிப்பொறி அறிவியல் 253, கணிதம் 28, விலங்கியல் 1, தாவரவியல் 2, பொருளியல் 12, வணிக வியல் 16, கணக்குபதிவியல் 29, வணிக கணிதம் 9, கணிப்பொறி பயன்பாடு 122, வரலாறு 1 என மொத்தம் 582 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    • பத்திரப்பதிவு, நில அளவை, பொதுப்பணி என அரசுத் துறைகளில் ஊழல்கள் மலிந்துள்ளது.
    • காமாட்சி அம்மன்கோவில் நிலம் சூறையாடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சியினர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பத்திரப்பதிவு, நில அளவை, பொதுப்பணி என அரசுத் துறைகளில் ஊழல்கள் மலிந்துள்ளது. இதில் அதிகாரிகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன்கோவில் நிலம் சூறையாடப்பட்டுள்ளது.

    சென்டாக் மாணவர் சேர்க்கையில் அயல்நாடுகளில் வாழும் இந்திய மாணவர்கள் சேர்க்கையிலும் முறைகேடு நடந்துள்ளது. வில்லியனூர், கருவடிக் குப்பத்தில் பா.ஜ.க. பிரமுகர்கொலையில் பின்புலமாக நில ஆக்கிரமிப்பும், கஞ்சா விற்பனையும் உள்ளது. இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. சட்டமன்ற கட்சிதலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், ம.தி.மு.க. செயலாளர் ஹேமாபாண்டுரங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம்.
    • மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும்.

    தமிழகம், புதுவைக்கான சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் யார்? என்ற ஆலோசனையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.

    அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் புதிய வேட்பாளர்கள் மக்களை சந்திக்க தொடங்கி விட்டனர். கட்சி தாவல் படலங்களும் அரங்கேற தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை பெற்று புதுவை காங்கிரசின் கோட்டை என்பதை நிலை நாட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

    இதனால் மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே சென்று தேர்தல் பிரசாரத்தையே தொடங்கியுள்ளனர். புதுவை நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய அரசியலமைப்பை காப்போம் பிரசார பொதுகூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். அவர் மேலும் பேசியதாவது:-

    ரங்கசாமி ஆட்சியில் என்ன செய்துள்ளார்? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? தேர்தல் தினத்தில் கொடுக்கும் பணத்தை வைத்து முடிவெடுத்தால் உங்கள் வாழ்க்கை இருண்டு விடும். யாருக்கு ஓட்டு போட்டால் தொகுதி வளர்ச்சியடையும் என சிந்திக்க வேண்டும்.

    தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும். உங்களுக்கு வேண்டியதை செய்து தருவோம்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கடந்த 2 நாட்களாக ஆதிநாராயணன் பணிக்கு செல்லவில்லை.
    • போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகர் தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் டாக்டர் ஆதி நாராயணன் (51).

    இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மயக்கவியல் பிரிவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகாதவர். அவரது பெற்றோர் இருவரும் வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இறந்து போனார்கள். இதனால் டாக்டர் ஆதிநாராயணன் தனிமையில் வசித்து வந்தார். அவரது உறவினர்கள், பெங்களூருவில் வசிக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆதிநாராயணன் பணிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜிப்மர் நிர்வாகம் ஆதிநாராயணன் வசித்து வந்த குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிக்கு தகவல் தெரிவித்து அவரது வீட்டுக்கு சென்று பார்க்கும் படி கேட்டுக்கொண்டனர்.

    அதன்பேரில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி கோவிந்தராஜுலு, டாக்டர் ஆதிநாராயணன் வீட்டுக்கு அக்கம் பக்கத்தினருடன் சென்று பார்த்தார். அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து, லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் டாக்டர் ஆதிநாராயணன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அவரது உடல் அருகில் சில ஊசிகளும், குளுக்கோஸ் ட்ரிப்ஸ் ஏற்றும் உபகரணங்கள் கிடந்தன. இடது கையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி இருந்தது.

    பெற்றோர் அடுத்தடுத்து இறந்து போனதால் தனிமையில் வசித்து வந்த டாக்டர் ஆதிநாராயணன் விரக்தியில் விஷ ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
    • நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார்.

    புதுச்சேரி:

    பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி இந்தியன் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்ரா கடன் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது. விழாவிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

    அப்போது பயனாளிகள் முத்ரா வங்கிக் கடன் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கொண்டு வந்ததாக கூறினர். மேலும் குறைந்த வட்டியில் தொழில் முன்னேற்ற ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன், தற்போது மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி உதவி வருவதையும் உருக்கமாக எடுத்துக் கூறினர். முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

    தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசும்போது முத்ரா கடன் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் இதுகுறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தற்போது ரூ.40 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் பயனடைந்து இருக்கிறார்கள். இந்த திட்டம் அதன் இலக்கை நோக்கி சரியாக சென்று கொண்டு இருக்கிறது என்று கூறிய படி கவர்னர் கைலாஷ்நாதன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் கண் கண்ணாடியை கழற்றி விட்டு கண்ணீரை துடைத்தார்.

    தொடர்ந்து புதிய பயனாளிகளுக்கு முத்ரா கடன் வழங்குவதற்கான ஆணைகளை கவர்னர் வழங்கினார்.

    • ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிகாலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 'ஆபரேஷன் திரிசூலம்' என்ற திட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து 60-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×