என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assembly elections"

    • தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றார் எதிர்க்கட்சி தலைவர் சிவா.
    • மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்துவோம் ரங்கசாமி பேச்சு.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நடந்தது. அப்போது எதிர்கட்சி தலைவர் சிவா குறுக்கிட்டு, புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது.

    ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர்.

    இந்த போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை. இரட்டை என்ஜின் அரசு என கூறினீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீர்கள். வளர்ச்சிக்கான திட்டங்களான மேம்பால பணி தொடங்கவில்லை. விமான நிலைய விரிவாக்கம் செய்யவில்லை.

    மாநில அந்தஸ்துக்காக டெல்லிக்கு அழைத்து செல்வோம் என கூறினீர்கள். ஆனால் செய்யவில்லை. உங்களை நம்பி மக்கள் வாக்களித்தனர். மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.

    அப்போது முதல்- அமைச்சர் ரங்கசாமி குறுக்கிட்டு, தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக உள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தயார்தான். நீங்கள் தயாரா? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம் என்றார்.

    இத்துடன் விவாதம் முடிந்தது. கூட்டத்தின் இறுதியில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசும்போது, ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி முடிவு செய்யுங்கள் என கூறினார்.

    • மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள்.
    • கணக்கெடுப்புகள் அனைத்தும் சொல்வது 60 சதவீதம் மக்கள் தே.ஜ.கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றுதான்.

    "தேமுதிக சேரும் கூட்டணியே வெற்றி பெறும்" என்றும், சரியான நேரத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அவர்களை பாஜகவிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம் என தேமுதிக குறித்து கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக இரு கட்சிகளிடையே இழுபறி நீடிப்பது உறுதியாகியுள்ளது. 

    இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயர் நீக்கப்பட்டதற்கு தொடர்பான கேள்விக்கு,

    "விபி-ஜி ராம்-ஜி என்பது கிராம்பபுற வேலைவாய்ப்பு திட்டம் என்பதன் தமிழ் அர்த்தம்தான். அப்படி இல்லையெனில் இந்தி தெரிந்தவர்களிடம் அதன் அர்த்தம் என்னவென்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்." என பதிலளித்தார். 

    தொடர்ந்து தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு,

    "தேமுதிகவுடன் பாஜக தலைமையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர். நேற்று நடந்த பாஜக கட்சி கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. தேமுதிக எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர். மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள். நல்லபடியாக முடியும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்

    பாஜக தானே எங்கள் கூட்டணி. சாப்பாட்டில் காய்கறி, கூட்டு வைப்பது போலத்தான் இது. யார் பேசினாலும் எங்களுடன்தானே கூட்டணி. எங்களிடம் அன்பாக இருப்பவர்களை நாங்கள் அழைத்திருப்போம். பாஜகவிடம் அன்பாக உள்ளவர்களிடம் அவர்கள் பேசுகிறார்கள். எங்களை நம்பி சிலர் வருவார்கள், அவர்களை நம்பி சிலர் வருவார்கள். பாஜக அழைத்தாலும் அதிமுக தலைமையில் இருக்கிற தே.ஜ. கூட்டணிக்குதானே வருவார்கள்" என பதிலளித்தார்.

    சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அதாவது சிலர் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அங்கே பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம். ஆனால் முடிவு இந்த கூட்டணிக்கு சாதகமாகத்தான் வரும். டெல்லி சென்று கூட்டணியை பேசி முடித்தது எடப்பாடி பழனிசாமி தான். அமித்ஷா வந்து இங்கு அறிவித்தார். எங்கள் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். தலைமை அதிமுகதான்." என தெரிவித்தார். 

    தேர்தல் அறிக்கை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், 

    "நாடு முழுவதும் ஆயிரம் கட்சிகள் உள்ளன. எங்களுக்கு தெரிந்ததை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்கிறோம். கடந்த தேர்தலில் மகளிருக்கு ரூ.1500 தருகிறோம் எனக்கூறினோம், திமுக ரூ.1000 தருவதாக கூறியது. அது எடுபட்டுவிட்டது. அதனால்தான் இந்த முறை ரூ.2000 என முன்கூட்டியே அறிவித்துவிட்டோம். வேண்டுமானால் நீங்களும் (திமுக) அறிவித்துக்கொள்ளுங்கள்.

    மத்திய அரசு, மற்ற அமைப்புகள், எங்களது தனிப்பட்ட கணக்கெடுப்புகள் அனைத்தும் சொல்வது 60 சதவீதம் மக்கள் தே.ஜ.கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றுதான். பாஜக அகில இந்திய கட்சி. அதிமுக தலைமையில் இயங்குகிறோம் என சொல்லிவிட்டார்கள்." என தெரிவித்தார்.

    • நெடுஞ்சாலை, ரயில் திட்டங்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இன்னும் சில மாதங்களில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ளது.

    பீகாரில் ரூ.7,616 கோடி மதிப்புள்ள முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    நெடுஞ்சாலை, ரயில் திட்டங்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பீகார் தேர்தலை மனதில் கொண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

    முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடி பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று இணையத்தில் தகவல் பரவியது
    • அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்த்தது

    வரும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று சூர்யா நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சூர்யா நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊடக நண்பகர்களுக்கும். சமூக வலைத்தள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

    இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும் அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

    சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

    அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.

    எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திரிணாமுல் குண்டர்களால் தொழில்முனைவோர் இங்கு வருவதில்லை.
    • வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகள் கூட பெண்களுக்குப் பாதுகாப்பாக இல்லை.

    தமிழ்நாட்டை போல மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது.

    இந்த சூழலில் பிரதமர் மோடி அங்கு பயணம் செய்துள்ளார். துர்காபூரில் அரசு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். இதில் மேற்கு வங்க ஆளுநரும் பங்கேற்றார்.

    இதன்பின் துர்காபூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஆளும் திரிணாமுல் அரசையே அவர் கடுமையாக சாடினார்.

    மோடி பேசியதாவது, "முர்ஷிதாபாத் (கலவரம்) போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, காவல்துறையினர் பாரபட்சம் காட்டுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

    திரிணாமுல் குண்டர்களால் தொழில்முனைவோர் இங்கு வருவதில்லை. திரிணாமுல் அகற்றப்பட வேண்டும். சிண்டிகேட் ஆட்சியைக் கண்டு முதலீட்டாளர்கள் தப்பி ஓடுகிறார்கள். திரிணாமுல் காலத்தில் தொடக்கக் கல்வி, உயர்கல்வி அனைத்தும் படுகுழியில் சென்று கொண்டிருக்கின்றன.

    பாஜக ஆட்சிக்கு வந்தால், வங்காளம் நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக மாறும். இது எனது நம்பிக்கை. ஆனால் திரிணாமுல், வங்காளத்தில் தொழில்மயமாக மாற்ற அனுமதிக்கவில்லை. எனவே, திரிணாமுல் வங்காளத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்ட அவர், "வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அப்போதும் கூட, திரிணாமுல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. அதன் பிறகு, மற்றொரு (சட்ட) கல்லூரியில் ஒரு பெண் சித்திரவதை செய்யப்பட்டார். அதில் திரிணாமுல் (பிரமுகர்கள்) ஈடுபட்டிருப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கூறினார்.

    மேலும்"ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 

    • ரூ.2,008 கோடியை அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளன.
    • தேசிய கட்சிகள் அதிகபட்சமாக ரூ.2,204 கோடி செலவு செய்திருக்கின்றன.

    கடந்த ஆண்டு மக்களவை தேர்தல், அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் செலவு செய்த தொகை குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்(ADR) என்ற தன்னார்வ அமைப்பின் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

    தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த செலவின அறிக்கை இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மொத்தம் 32 கட்சிகளின் செலவின அறிக்கை ஆய்வில் அடங்கும்.

    அதன்படி மேற்கூறிய மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களுக்காக இந்த கட்சிகள் மொத்தம் ரூ.3,352 கோடி செலவு செய்துள்ளன. தேசிய கட்சிகள் அதிகபட்சமாக ரூ.2,204 கோடி செலவு செய்திருக்கின்றன.

    அதிகபட்சமாக பாஜக பாராளுமன்றம் மற்றும் 4 சட்டமன்ற தேர்தல்களுக்காக சுமார் ரூ.1,494 கோடியை செலவழித்துள்ளது. இது கட்சிகளின் மொத்த செலவினத்தில் 44.56 சதவீதம் ஆகும்.

    அடுத்ததாக காங்கிரஸ் கட்சி ரூ.620 கோடி (18.5%) செலவழித்துள்ளது. இக்கட்சிகள் செலவு செய்த தொகையில் அதிகபட்ச தொகை விளம்பரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ரூ.2,008 கோடியை அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளன.

    ரூ.795 கோடி பயணங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. மேலும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்கு ரூ.402 கோடி வழங்கி உள்ளன.

    2024 மக்களவை தேர்தலின் போது 5 தேசிய மற்றும் 27 பிராந்திய அரசியல் கட்சிகள் சேகரித்த மொத்த நிதி ரூ.7445.566 கோடி ஆகும். சேகரிக்கப்பட்ட மொத்த நிதியில், தேசிய கட்சிகள் ரூ.6930 கோடி (93.08%) வசூலித்தன. அதே நேரத்தில் பிராந்திய கட்சிகள் ரூ.515.32 கோடி (6.92%) பெற்றன.

    அதிகபட்சமாக பாஜக ரூ.6268 கோடி நிதியைப் பெற்றது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 592 கோடியைப் பெற்றது, சிபிஐ(எம்) ரூ.62.74 கோடி நிதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    தேர்தல் ஆணையத்தில், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, உத்தவ் சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), கேரளா காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் இன்னும் தங்கள் செலவின அறிக்கையை வழங்கவில்லை.

    அரசியல் கட்சிகள், காசோலைகள், DD (டிமாண்ட் டிராப்ட்) அல்லது RTGS வழியாக பரிவர்த்தனைகள் செய்வதன்மூலம் மட்டுமே கருப்புப் பணப் பயன்பாடு மற்றும் செலவினங்களை மட்டுப்படுத்த முடியும் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

    • என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைப்பதில் தீவிரமாக உள்ளார்.
    • 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள்

    பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் ஆர்ஜேடி - காங்கிரசின் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பல முறை கூட்டணி தாவலுக்கு பின் இறுதியில் பாஜகவின் என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    அந்த வகையில் மாநிலத்தில் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றை ரூ.400 இல் இருந்து ரூ.1,100 ஆக முதல்வர் நிதிஷ் குமார் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த ரூ.700 அதிகரிப்பு என்பது மாநிலத்தில்  1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இந்த ஓய்வூதிய உயர்வு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் மாதத்தில் 10 ஆம் தேதியில் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் நிதிஷ் குமார் விளக்கியுள்ளார்.

    • ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை விளம்பரப்படுத்த வலியுறுத்தினார்.
    • நீங்கள் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்

    பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வர உள்ளது. இதில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கும் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது.

    இந்நிலையில் பீகார் விஜயம் செய்துள்ள பிரதமர் மோடி பாஜக தலைவர்களுடன் கூட்டத்தில் பங்கேற்றார்.

    அப்போது, "தேர்தல் நெருங்கும்போது, சிலர் வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டு, தேர்தலுக்குப் பிறகு திரும்பிவிடுவார்கள். இது கட்சியில் உங்கள் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது" என்று பிரதமர் மோடி பாஜக தலைவர்களிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும், "ஒரு கட்சியில் பொறுமை என்பது மிகப்பெரிய சொத்து. உங்களிடம் பொறுமை இருந்தால், நீங்கள் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்" என்று அவர் கூறினார்.

    வரவிற்கும் தேர்தலில், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை விளம்பரப்படுத்தவும், அடிமட்டத் ஊழியர்கள் அளவில் கட்சியை வலுப்படுத்தவும் வலியுறுத்தினார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    மகா கூட்டணியுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பிறகு, கடந்த ஆண்டு ஜனவரியில் ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் ஒன்பதாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். அடிக்கடி கூட்டணி தாவுவதாக அவர் மீது விமர்சனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களைப் பெற்றபோது பாஜக 48 இடங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றது.
    • காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்திற்கான பொதுச் செலவாக ரூ.40.13 கோடி செலவிட்டது.

    தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வென்றது.

    சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக பெற்ற வெற்றி இது. அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி சிறை சென்றது, அவர் சொகுசு மாளிகையில் வாழ்ந்தார் என முன்னெடுத்த பிரசாரம் ஆகியவை பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது.

    டெல்லி சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களைப் பெற்றபோது பாஜக 48 இடங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்குக் கட்சிகள் வழங்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி கடந்த தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சி ரூ.14.51 கோடியை செலவிட்டுள்ளதாக அவர்களின் செலவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இதில் பொது கட்சி பிரச்சாரத்திற்கான மொத்த செலவாக ரூ.12.12 கோடி மற்றும் கட்சி வேட்பாளர்களுக்கான மொத்த செலவு ரூ.2.39 கோடி ஆகும்.

    அதேநேரம் தேர்தல் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பாஜகவின் செலவின அறிக்கையின்படி, பாஜக செலவிட்ட தொகை மொத்தம் ரூ.57.65 கோடி ஆகும். அதில் ரூ.39.15 கோடி பொது கட்சி பிரச்சாரத்திற்கான மொத்த செலவாகவும், மேலும் ரூ.18.51 கோடி கட்சி வேட்பாளர்களுக்கான மொத்த செலவாகவும் செலவிடப்பட்டது.

    காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்திற்கான பொதுச் செலவாக ரூ.40.13 கோடியும், கட்சி வேட்பாளர்களுக்கான மொத்தச் செலவாக ரூ.6.06 கோடியும் உட்பட மொத்தம் ரூ.46.19 கோடியை செலவிட்டுள்ளது. 

    • தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
    • புதிதாக 18.10 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பஞ்சநதி கோட்டை கிராமத்தில் அதி திறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தமிழகத்தில் முதல் முதலாக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பஞ்சநதிக்கோட்டையில் ரூ. 1.41 கோடி மதிப்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அதிதிறன் கொள்முதல் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 15 டன் கொள்முதல் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு இதுவரை 27.72 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    நெல் கொள்முதல் நிலையம் நிகழாண்டு இதுவரை 3.61 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 400 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. புதிதாக 18.10 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு அச்சடிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படவுள்ளது.

    தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் அல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறினோம். அதுபோல் வெற்றி பெற்று சாதித்து காட்டினோம்.

    தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 என்ற இலக்கை அடைவோம் என முதலமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் அதையும் தாண்டி 234 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது என எம்.எஸ்.ஷா தெரிவித்துள்ளார்.
    • தமிழக மக்களை வழிநடத்தி வரும் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    மதுரை

    பாரதீய ஜனதா கட்சியின் பொருளாதர பிரிவு மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தஞ்சா வூரில் நடந்தது. இதில் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை தலைமையேற்ற பின் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பா.ஜ.க.வின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. சாதாரண மக்களும் பா.ஜ.க.வின் கொள்கை களை புரிந்து கொள்ளும் வகையில் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பாமர மக்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகிறது. அண்ணாமலை மிக எளிய தலைவராக இருந்து மக்கள் பயன்பெறும் வகையில் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 590 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஒன்றி ரண்டு வாக்குறுதிகளை தவிர மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பி வருகிறது.

    தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வு குறித்தும், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அண்ணாமலை விளக்கி பேசி வருகிறார். இந்தியாவில் 3-வது முறையாகவும் மோடி பிரதமராவது உறுதியாகி உள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் செலவுகள் அதிகம் ஏற்பட்டு அரசு பணிகள் செய்வதில் தொய்வு ஏற்படு கிறது. எனவே பாராளு மன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். அதனை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துக்கள் பாரம மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    அவ்வாறு தேர்தல் நடக்கும் பட்சத்தில் இந்தியா வல்லரசாவது உறுதி. தமிழக மக்களை வழிநடத்தி வரும் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஜீ, பொருளாதார பிரிவு துணைத்தலைவர்கள் டாக்டர்கள் தேவ்ஜில், நாகராஜன் மற்றும் வெங்கடேஷ், ராஜசேகர் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாஜக தொண்டர்களின் கடுமையான தேர்தல் பணியை பிரதமர் மோடி பாராட்டினார்.
    • வடகிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தொண்டர்கள் மொபைல் போன் டார்ச்சை ஆன் செய்து அசைத்தனர்

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது. நாகாலாந்தில் பாஜக- தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு யாருக்கும் பெரும்பான்மைக்கு கிடைக்கவில்லை. எனினும் அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள என்பிபி கட்சி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது.

    இந்த தேர்தல் முடிவுகளால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கட்சி தலைமையகத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வெற்றியை கொண்டாடினர். தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேசுகையில், 'நாட்டில் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது மக்களுக்கு உள்ள வலுவான நம்பிக்கையை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது' என்றார். அப்போது தொண்டர்கள் 'மோடி, மோடி' என முழக்கம் எழுப்பினர்.

    இந்த சிறப்பான வெற்றி பெறுவதற்காக மூன்று வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தொண்டர்களின் கடுமையான தேர்தல் பணியை பிரதமர் மோடி பாராட்டினார். "வடகிழக்கில் உள்ள எங்கள் கட்சித் தொண்டர்கள் இங்குள்ள அனைவரையும் விட மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்' என்றும் மோடி குறிப்பிட்டார். அப்போது தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    அப்போது வடகிழக்கு மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தொண்டர்கள் தங்கள் மொபைல் போன் டார்ச்சை ஆன் செய்து அசைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். தொண்டர்கள் டார்ச் ஆன் செய்து அசைக்க, பிரதமர் மோடியும் அவர்களைப் பார்த்து கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    ×