என் மலர்
மேற்கு வங்காளம்
- மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும்- அமித் ஷா.
- மேற்கு வங்க மாநிலத்திற்கு அமித் ஷா சுற்றுலா பயணி போன்று வந்து சென்று கொண்டிருப்பார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக-வின் மூத்த அமைச்சருமான அமித் ஷா மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ளார்.
மேற்கு வங்கம் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித் ஷா "நாங்கள் ஊடுருவல்காரர்களை அடையாளம் மட்டும் காணமாட்டோம். அவர்களை வெளியேற்றுவோம். ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு புதிய பாஜக அரசு பெங்காலில் அமையும். மக்கள் இதை முடிவு செய்துவிட்டனர். மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும்" என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில கல்வித்துறை அமைச்சருமான பிரத்யா பாசு கூறுகையில் "மேற்கு வங்க மாநிலத்திற்கு அமித் ஷா சுற்றுலா பயணி போன்று வந்து சென்று கொண்டிருப்பார். இதுபோன்ற பயணம் எந்த பயனும் தராது. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக-வால் 50 இடங்களை கூட தாண்ட முடியாது, மோசமான தோல்வியை சந்திக்க இருக்கிறது" என்றார்.
- மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.
- SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:-
* ஏ.ஐ. பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி.
* மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.
* தேர்தல் வரும் நிலையில் சோனார் பங்க்ளா (Sonar Bangla) வாக்குறுதியை கொடுத்தார்கள். ஆனால், பெங்காலி பேசும் மக்கள் மற்ற மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள்.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது மேற்கு வங்கத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
* SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
- வாக்காளர் பட்டியலில் சந்தேகம் உள்ளவர்களை நேரில் வந்து ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.
- முகாம்களுக்கு முதியோர்கள் வர சிரமமாக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனடிப்படையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது உயிரோடு இருப்பவர்கள் பலரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் முகாம்களுக்கு செல்வதுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பார்தா பவ்மிக் கூறியதாவது:-
இது சித்ரவதைக்கு சற்றும் குறைவானது அல்ல. தேர்தல் நேரத்தின்போது வயதானவர்கள் வாக்களிக்க வர முடியாது என்பதால், அதிகாரிகளை வாக்குப்பதிவிற்கான வீடுகளுக்கு அனுப்புகிறது. அதே நடைமுறையை இதற்கு ஏன் பயன்படுத்தவில்லை?.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், வேண்டுமென்றே அவர்கள் இந்த கோரிக்கையை நிராகரிக்கின்றனர்.
இவ்வாறு தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த அமைச்சர் சஷி பஞ்சா "வயது மூத்த நபர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள் அவர்களுக்கு வழங்கப்ப்ட நாள், நேரத்தில் முகாமுக்கு செல்ல மிகப்பெரிய கஷ்டத்தை எதிர்கொள்கிறனர். 85 வயது போன்றவர்களை அவர்களுடைய வீட்டில் சந்தித்து ஆவணங்கள் குறித்து விசாரிகக் தேர்தல் ஆணையம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
- SIR மூலம் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
- SIR மேற்கொண்ட மற்ற அனைத்து மாநிலங்களை விட இது மிகவும் குறைவு.
மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. அதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீக்கப்பட்டவர்களில் வங்காளதேசத்தினர், ரோஹிங்கியா மக்கள் எவ்வளவு பேர் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மேற்கு வங்கத்தின் மக்கள் தொகை 10.05 கோடியாகும். இதில் SIR மூலம் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகையில் வெறும் 5.79 சதவீதம்தான். SIR மேற்கொண்ட மற்ற அனைத்து மாநிலங்களை விட இது மிகவும் குறைந்த சதவீதம். நீக்கப்பட்ட 58.20 லட்சம் வாக்காளர்களில் வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- மேற்கு வங்க மாநிலத்தில் சாமி சிலைகள் போலீஸ் உதவியுடன் சிறைச்சாலை வேன்களில் ஏற்றி செல்லப்பட்டன.
- இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றச்சாட்டு.
மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி, மாநிலத்தில் சனாதன தர்மம் பாதுகாப்பனது அல்ல எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
தெற்கு 24 பர்கானசில் உள்ள சாகர் ஐலேண்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு சுவேந்து அதிகாரி பேசியதாவது:-
சாமி சிலைகள் சிறைச்சாலை வேன்களில் போலீஸ் உதவியுடன் ஏற்றப்பட்டன. ஆனால் ஒரு நபர் கூட கைது செய்யப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் சனாதன தர்மம் மற்றும் இந்துக்களுக்கு மேற்கு வங்க மாநிலம் பாதுகாப்பானது அல்ல என்பதற்கு வழிவகுத்துள்ளன.
காவல்துறையினர் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு விளைவுகளை சந்திக்க நேரிம்.
இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
சாகர் ஐலேண்டில் பேரணி நடத்த சுவேந்து அதிகாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றம் அவரது பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.
- மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 'கர்மஸ்ரீ' க்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசு தனது தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு "விபி ஜி ராம் ஜி" எனப் பெயர் மாற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மம்தா, "தேசியத் தலைவர்களுக்குச் சில கட்சிகள் மரியாதை செலுத்தத் தவறினால், நாங்கள் அதைச் செய்வோம். தேசத் தந்தையின் பெயரையே நீக்குவது மிகுந்த அவமானமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக முறைகேடுகளைக் காரணம் காட்டி 2022-ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்திற்கான ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சுமார் 58 லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 6,919 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.
இது கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.
மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜியம் விரைவில் அகற்றப்படும் என பொதுக்கூட்டத்தில் சூளுரைத்துச் சென்றார்.
- மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.
- அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.
அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது. பிரதமரின் வருகைக்காக மாநாட்டுத் திடலில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.
இந்நிலையில், மாநாட்டுத் திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்.ஐ.ஆரை திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளனர்.
அந்தக் கட்சி என்னையும், பா.ஜ.க.வையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், பேசட்டும். ஆனால் மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது.
பின்தங்கிய, மேற்கு வங்கத்தின் தொலைதூர பகுதிகளுக்கு நவீன வசதிகளை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இங்கு வளர்ச்சியைக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
மாநிலத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு அளியுங்கள் என தெரிவித்தார்.
- இதனால் அவர் இந்த பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசுவார் என்று தெரிகிறது.
- பிரதமர் இன்று மாலை அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்கு வங்கம் வந்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் பகுதியில் நடைபெறவிருந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பினார்.
ஆனால் அங்கு நிலவும் அடர் மூடுபனி மற்றும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் அவரது ஹெலிகாப்டர் கொல்கத்தா விமான நிலையத்திற்கே திரும்பியது.
அடர் மூடுபணியால் தெரிவுநிலை குறைந்து சிறிது நேரம் வானிலேயே வட்டமடித்த ஹெலிகாப்டர், பாதுகாப்பு கருதி மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. இதனால் அவர் இந்த பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசுவார் என்று தெரிகிறது.
இந்தப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் இன்று மாலை அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.
- நாடியா மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
கொல்கத்தா:
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணிகள் (எஸ்ஐஆர்) நடந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று காலை பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள நாடியா மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து, இன்று மதியம் அசாம் செல்லும் பிரதமர் மோடி கவுகாத்தியில் அமைக்கப்பட்டுள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார். மேலும் அசாமில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- நான் ஒரு மக்கள் பிரதிநிதி, எனக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி என்ன?
- வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உயிருடன் இருக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சி கவுன்சிலர் ஒருவரை, தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை போல மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், கொல்கத்தா அருகே உள்ள டங்குனி நகராட்சியின் 18-வது வார்டு கவுன்சிலரான சூர்யா தே என்பவரின் பெயர் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கவும், தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தை கண்டிக்கவும் கவுன்சிலர் சூர்யா தே தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக ஒரு மயானத்திற்குச் சென்றார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம், "அரசு என்னை இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டதால், முறைப்படி இப்போது என்னை இங்கேயே தகனம் செய்துவிடுங்கள்" என கூறி வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
"நான் ஒரு மக்கள் பிரதிநிதி, எனக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி என்ன?" என்று சூர்யா தே கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முதல் கட்டமாக கொல்கத்தா சென்ற மெஸ்ஸி தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார்.
- அதன்பின் சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கொல்கத்தா:
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லயோனல் மெஸ்சி மூன்று நாள் பயணமாக 13-ம் தேதி இந்தியா வந்தார்.
முதல் கட்டமாக கொல்கத்தா சென்ற அவர் தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார். அதன்பின், அங்குள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். ரசிகர்கள் முண்டியடித்ததால் அரை மணி நேரத்திற்குள்ளாகவே மெஸ்சி அங்கிருந்து புறப்பட்டார்.
இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்ததாலும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் டிக்கெட் வாங்கியிருந்ததாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த இருக்கைகளை உடைத்தனர், தடுப்பு வேலிகளைத் தூக்கி எறிந்தனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைந்து போகச் செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த கொல்கத்தா ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முதன்மை நிகழ்ச்சி அமைப்பாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைதுசெய்தனர்.
மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வாவே பொறுப்பெனவும், முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை எனவும் பலரும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்காக அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பினார். அதில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே பதவியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார். இந்த ராஜினாமாவை மம்தா பானர்ஜியும் ஏற்றுக்கொண்டார்.
- மேற்குவங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
- தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தமிழகத்தை போல கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11 ஆம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில் மேற்குவங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த செயல்முறையில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், 24.17 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என்றும் 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் 12.20 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போகியுள்ளனர் என்றும் 1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






