என் மலர்
நீங்கள் தேடியது "கேரளா"
- மக்கள் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்க பிப்ரவரி 1-ந் தேதி முதல் 3 மண்டல அளவிலான பேரணிகள் நடைபெற உள்ளன.
- 30-ந் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள், இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்பு போராட்டங்களில் ஈடுபடும்.
மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) 'சத்தியாகிரகப்' போராட்டத்தை நாளைமுதல் (ஜன.12) நடத்தவுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாளை (12-ந் தேதி) திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற உள்ளது. சமுதாயத்தில் வகுப்புவாத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி மற்றும் பா.ஜ.க. செய்யும் முயற்சிகளுக்கு எதிராக, மகாத்மா காந்தியின் நினைவு நாளான வருகிற 30-ந் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள், இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்பு போராட்டங்களில் ஈடுபடும்.
மேலும், மாநில அரசு மேற்கொண்டு வரும் மக்கள் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்க பிப்ரவரி 1-ந் தேதி முதல் 3 மண்டல அளவிலான பேரணிகள் நடைபெற உள்ளன. வடக்கு மண்டல அணிவகுப்பு காசர்கோடு முதல் பாலக்காடு வரையிலும், மத்திய மண்டல அணிவகுப்பு பத்தனம்திட்டா முதல் எர்ணாகுளம் வரையிலும் நடைபெறும். தெற்கு மண்டல அணிவகுப்பு திருச்சூர் முதல் திருவனந்தபுரம் வரை நடைபெறும்." என்று அவர் கூறினார்.
மேலும் சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு தொடர்பாக பேசிய அவர், இந்த வழக்கில் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க மாட்டோம் என்றும், கோயிலில் இருந்து திருடப்பட்ட தங்கம் மீட்கப்படும் என்றும் சிபிஐ(எம்) ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது என தெரிவித்தார்.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது 3 பாலியல் பலாத்காரம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- தனிப்படை போலீசார் ஓட்டலில் எம்.எல்.ஏ.-வை மடக்கு பிடித்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மம்கூத்ததில். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியும் வகித்த இவர் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது. இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக போலீசார் தேடிவந்த நிலையில் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. தலைமறைவானார். இந்த சூழலில் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நிதி ரீதியாக சுரண்டுவதாகவும் ஒரு பெண் மின்னஞ்சல் மூலம் கேரள முதல்-மந்திரிக்கு புகார் அனுப்பினார். இது ராகுல் மம்கூத்ததில் மீதான 3-வது புகார் ஆகும்.
இதுகுறித்து விசாரிக்க மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு அரசு அறிவுறுத்தியது. அதன்பேரில் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அதிகாரி பூங்குழலி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இந்த நிலையில் பாலக்காட்டில் ஒரு ஓட்டலில் இருந்த ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ.வை தனிப்படையினர் நேற்று நள்ளிரவு மடக்கி பிடித்தனர். விசாரணைக்கு பிறகு அவரை இன்று அதிகாலை கைது செய்தனர். அவரது செல்போன்களையும் தனிப்படையினர் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணைக்காக அவரை பத்தனம்திட்டாவில் உள்ள ஆயுதப்படை முகாமிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் தெரிவித்த பெண், திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஓட்டலுக்கு வரவழைத்து ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னிடம் இருந்து விலை உயர்ந்த கைக் கடிகாரங்கள், காலணிகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் வாங்குவதற்காக பெரும் தொகையை தன்னிடம் இருந்து பெற்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்திய தாகவும் புகாரில் அவர் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆதாரங்களை சேகரித்த போலீசார், பெண்ணின் கருவில் டி.என்.ஏ. பரிசோதனையும் செய்தனர். இதன் தொடர்ச்சியாக தான் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.
- வாக்காளர்கள் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டு வர வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
- கேரளாவில் இந்த முறை ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கேரளாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களுடன் வருகிற மார்ச்- ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், கேரளாவில் பாஜக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என பாஜக தலைவர் சோபா சுரேந்திரன் தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான் என்று கருதுவதால், வாக்காளர்கள் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டு வர வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. அரசாங்கம் பெரும் வேகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசாங்கம் அதே வேகத்தை நிர்வாகத்தில் வெளிப்படுத்த தவறிவிட்டது. கேரளாவில் இந்த முறை ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது. பா.ஜ.க. கட்சி தலைமைச் செயலகத்தில் நுழைய மக்கள் தயாராகிவிட்டனர். அது நடந்தால், மாநிலத்தில் என்டிஏ-வின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்.
மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாநிலம் பெறும் ஆதாயங்கள் குறித்து மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறுவோம். கேரளாவில் என்டிஏ அரசாங்கத்தை அமைப்பதும், அம்மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்துவதும் பாஜகவின் நோக்கமாகும்.
இவ்வாறு சோபா சுரேந்திரன் தெரிவித்தார்.
- தந்திரிக்கு உதவியாக உன்னி கிருஷ்ணன் போற்றியை நியமித்தது தந்திரி கண்டரரு ராஜீவரு தான்.
- தங்கம் கடத்தலுக்கு தந்திரியும் உதவியாக இருந்ததும் அம்பலமானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது. அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் அதிரடியாக சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.
சபரிமலையில் தந்திரிக்கு உதவியாக உன்னி கிருஷ்ணன் போற்றியை நியமித்தது தந்திரி கண்டரரு ராஜீவரு தான் என்பதும், தந்திரியின் சிபாரிசு என்பதால் சபரிமலையில் உன்னி கிருஷ்ணன் போற்றி, தந்திரி குடும்பத்தின் ஒரு முக்கிய அதிகாரமிக்க பிரமுகராக வலம் வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. தங்கம் கடத்தலுக்கு தந்திரியும் உதவியாக இருந்ததும் அம்பலமானது.
தந்திரிக்கு எதிரான ஆதாரங்களைச் சேகரித்த அதிகாரிகள் நேற்று காலை அவரை விசாரணைக்கு அழைத்தனர். ரகசிய இடத்தில் வைத்து ஆதாரத்தைக் காண்பித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தியதை தொடர்ந்து கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டார்.
தங்கம் மோசடி வழக்கில் சபரிமலை தந்திரி கைது செய்யப்பட்டது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- 2017 முதல் மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பைக் குறைத்து, நிதி ஆதாரங்களை முடக்கி வருவதாக குறிப்பிட்டார்.
- இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் அமெரிக்க அதிபருக்கு எதிராக ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கக் கூட மத்திய அரசால் முடியவில்லை.
நிதி ரீதியாக முடக்கி கேரளாவின் கழுத்தை நெரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 12-ம் தேதி திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்கும் மாபெரும் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசு கேரளா மீது பொருளாதார முற்றுகையை நடத்தி வருவதாக சாடிய அவர், நிதிப் பங்கீட்டை குறைத்தும், 2017 முதல் மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பைக் குறைத்து, நிதி ஆதாரங்களை முடக்கியும் வருவதாக குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து, ஜனவரி 12 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறும்.இதில் கேரளாவின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் அமெரிக்க அதிபருக்கு எதிராக ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கக் கூட மத்திய அரசால் முடியவில்லை என்று பினராயி விஜயன் விமர்சித்தார். மேலும் amerik
- உலக ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
- வெனிசுலா மக்கள் காட்டும் மன உறுதி பாராட்டுக்குரியது.
வெனிசுலாவை தாக்கி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கடத்திச் சென்றது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்துமீறல் என கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.
நேற்று நிகழ்வு ஒன்றில் அவர் பேசுகையில், "வெனிசுலா ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு. அமெரிக்க அரசு சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக, ஏகாதிபத்திய ஆணவத்துடன் நடந்து கொள்கிறது.
ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்காமல், அதன் அதிபரைக் கைது செய்வது அமெரிக்காவின் அதிகாரத் திமிரையே காட்டுகிறது.
அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கையானது, உலகின் பிற நாடுகளில் அத்துமீறித் தலையிடும் அதன் நீண்டகால வரலாற்றையே மீண்டும் ஒருமுறை பிரதிபலிக்கிறது.
இது ஒன்றும் புதிதல்ல; தனது விருப்பத்திற்கு மாறான ஆட்சிகளை அகற்றுவதே அமெரிக்காவின் வாடிக்கையாக உள்ளது.
கடந்த காலங்களில் தனது சுயநலத்திற்காக அமெரிக்கா உருவாக்கிய போர்களாலும், ராணுவத் தலையீடுகளாலும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என்பதை உலகம் மறக்காது.
அதே போன்ற ஒரு ஆபத்தான சூழலைத் தான் இப்போது வெனிசுலாவிலும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது.
ஒரு நாட்டின் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை மற்றொரு நாடு ராணுவ பலத்தைக் கொண்டு அகற்றுவது உலக ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக வெனிசுலா மக்கள் காட்டும் மன உறுதி பாராட்டுக்குரியது.
அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கைகளை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது" என்று தெரிவித்தார்.
- மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
- சச்சிதானந்தத்தின் வீட்டு கிணற்று நீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவத்தொடங்கியது. இந்த காய்ச்சலுக்கு பலர் இறந்துவிட்ட நிலையில், கோழிக்கோடு புதியங்காடி பகுதியை சேர்ந்த சச்சிதானந்தன்(வயது72) என்ற முதியவர் தற்போது இறந்திருக்கிறார்.
மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு இந்த நோய் எப்படி பரவியது? என்பது தெரியவில்லை.
இதற்காக சச்சிதானந்தத்தின் வீட்டு கிணற்று நீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு இதுவரை 40 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அபுதாபி-துபாய் சாலையில் ஷஹாமா என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, அவர்களது கார் விபத்தில் சிக்கியது.
- விபத்தில் பலியானவர்களின் உடல்கள், துபாயிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவர் துபாயில் வேலை பார்த்து வந்ததால், அங்கேயே தனது மனைவி ருக்சானா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் அபுதாபியில் நடந்த விழாவிற்கு அப்துல் லத்தீப், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றார்.
பின்பு அவர்கள் அனைவரும் தங்களது காரில் துபாய்க்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அபுதாபி-துபாய் சாலையில் ஷஹாமா என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, அவர்களது கார் விபத்தில் சிக்கியது.
இதில் அப்துல் லத்தீப்பின் மனைவி ருக்சானா, குழந்தைகள் ஆஷாஸ்(வயது14), அம்மார்(12), அயாஷ்(5) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், அவர்களுடன் பயணம் செய்த வீட்டு வேலைக்கார பெண் புஷ்ராவும் இறந்துவிட்டார். இந்த விபத்தில் அப்துல் லத்தீப் காயத்துடன் உயிர்தப்பினார். விபத்தில் பலியானவர்களின் உடல்கள், துபாயிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, கேரளாவில் உள்ள அப்துல் லத்தீப்பின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
- அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித், அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
- கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவ மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த மருத்துவ மாணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டாக்டர் விக்னேஷ் தாதன், பிடிஎஸ் மாணவர் ஹலீனா, அசிம், அவினாஷ், அஜித், அன்சியா மற்றும் ஹரிஷ் என்பது தெரிய வந்துள்ளது.
அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித் மற்றும் அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சோதனையின்போது, சுமார் 4 கிராம் எம்.டி.எம்.ஏ, 1 கிராம் ஹைப்ரிட் கஞ்சா மற்றும் 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கார்கள், 2 பைக்குகள் மற்றும் 10 போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
- கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.
- சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை.
ராஜபாளையம்:
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக் கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது.
அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்ம குமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னி கிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அதன்பின் கிருஷ்ணனிடம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாறு பகுதியில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பூர்வீக ஊரான ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது இரிடியம் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கிருஷ்ணன் கூறுகையில், சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை. வீட்டில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. அதன்பின் போலீசார் அழைப்பின் பேரில் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். என்னிடம் 2 பேரின் பெயர்களை கூறி தெரியுமா? என கேட்டார்கள். நான் தெரியாது எனக்கூறினேன். அவர்கள் சபரிமலை குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. எனக்கும் சபரிமலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. டிசம்பர் 30-ம் தேதி திருவனந்தபுரம் அலுவலகத்தில் ஆஜராகி விசாரணை குறித்து கையெழுத்திட்டு செல்லுமாறு கூறியுள்ளனர், என்றார்.
- சுவாசக் கோளாறுதான் மரணத்திற்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிப்பு
- நடைமுறைகளை முடிக்கப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் மாவட்டம் சங்கரம்குளத்தில் உள்ள தெக்குமூரி பகுதியை சேர்ந்தவர் மஹ்ரூப். இவரது மனைவி ருமானா. இவர்களது மகன் அஸ்லம் நூஹ் (வயது 1). குழந்தை நேற்று கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது தவறுதலாக மண்ணை விழுங்கியுள்ளான். இதில் மண்ணில் இருந்த சிறிய கற்கள் தொண்டையில் சிக்கி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
உடனே குழந்தையை தூக்கி கொண்டு குடும்பத்தினர் சங்கரம்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இருப்பினும், குழந்தையின் உடல்நிலை மோசமாகியதால், சிறப்பு சிகிச்சைக்காக கொட்டக்கலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். ஆனால் நேற்றிரவே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
தொண்டையில் கல் சிக்கியதால் ஏற்பட்ட கடுமையான சுவாசக் கோளாறுதான் மரணத்திற்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சுத்திணறலால் ஏற்பட்ட மரணம் என்பதால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று சங்கரம்குளம் போலீசார் தெரிவித்தனர். நடைமுறைகளை முடித்த பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார்.
- அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கரோல் பாடிச் சென்ற சிறுவர்களை தாக்கியதாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலக்காடு மாவட்டம் புதுசேரி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் என்ற அந்த நபர், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சுரபி நகர் பகுதியில் கரோல் பாடிச் சென்ற 14 வயதுக்குட்பட்ட சில சிறுவர்களை வழிமறித்துள்ளார்.
அப்போது, சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த அவர், சிறுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்தச் சிறுவர்களை கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களைத் தாக்கியதுடன் இசைக்கருவிகளையும் அஸ்வின் ராஜ் சேதப்படுத்தியுள்ளார். அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
இச்சம்பவம் குறித்து உள்ளூர் சிபிஐ(எம்) கட்சியினர் கூறுகையில், அந்தச் சிறுவர்கள் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலத்தில் கட்சியின் இசைக்கருவிகளைச் சிறுவர்களுக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுப்பது வழக்கம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அஸ்வின் ராஜ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் மீதான இந்தத் தாக்குதல் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






