என் மலர்
பொது மருத்துவம்
- முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை.
- முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.
முட்டையின் வெள்ளைக்கருவில் சுமார் 90 சதவீதம் நீரும், 10 சதவீதம் புரதமும் கலந்திருக்கும். ஆனால் முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை. சோடியம் அதிகமாக இருக்கும். கலோரிகளோ குறைவாகவே (17 கலோரிகள்) இருக்கும். ஆனால் முட்டையின் மஞ்சள் கரு ஊட்டச்சத்து மிக்கது. அதில் சுமார் 17 சதவீதம் புரதம், ஏ, டி, இ, கே, பி12 போன்ற வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படும். சுமார் 50 கலோரிகளையும் கொண்டிருக்கும்.
எது சிறந்தது?
சமச்சீரான ஊட்டச்சத்தை நாடுபவர்களுக்கு வெள்ளை கரு, மஞ்சள் கரு இரண்டும் கலந்த முழு முட்டையே சிறந்தது. முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.
அதே நேரத்தில் கலோரிகள், கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்தது. மூளை ஆரோக்கியம், கண் ஆரோக்கியம், தசை வளர்ச்சிக்கு முட்டையின் மஞ்சள் கரு சிறந்த தேர்வாக அமையும்.
- சிறிய கருப்பு பழங்களும், பச்சை இலைகளும் கொண்டது.
- நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சத்து மிகுந்த கீரை வகைகள் தெருக்களில் அதிகமாக விற்கப்படுகிறது. அதிலும், தற்போதைய காலகட்டத்தில் மணத்தக்காளி கீரை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். பாரம்பரிய காட்டு கீரையான இது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
சிறிய கருப்பு பழங்களும், பச்சை இலைகளும் கொண்டது. பொதுவாக இதனை தமிழ்நாட்டில் நேரடி உணவாக சமைத்து உண்பது வழக்கம். இதனை தொடர்ந்து உணவாக உட்கொள்ளும் போது வயிற்று புண்கள், அஜீரணம், மலச்சிக்கலை குணப்படுத்தும். தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பை நீக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சளி, இருமல், கண் புரை பாதிப்புகளை தவிர்க்க உதவும். பொதுவாக, இதனை பயத்தம்பருப்புடன் வேகவைத்து மசித்து உண்ணலாம். இந்த கீரையில், ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
மணத்தக்காளி கீரையின் தனித்துவம், அது பெண்களின் கருப்பையை வலுப்படுத்துகிறது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 100 கிராம் மணத்தக்காளி கீரையில், நீர்ச்சத்து 82 சதவீதம், புரதம் 5.9 கிராம், கொழுப்பு, ரிபோப்ளாவின் 59 மி.கி. நியாசின் 0.9 மி.கி. நிறைந்துள்ளன. நாட்டுக்கீரைகள் மிகப்பெரிய அளவில் மனிதனுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை போக்கி நோய்களையும் வரவிடாமல் தடுக்கின்றன. உலக அளவில் தற்போது உள்நாட்டு கீரைகளை உண்ண மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும்.
- தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல.
தயிர் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கக்கூடியது. அதில் உள்ள ஊட்டச்சத்துகள் ஏராளமான நன்மைகளை அளிக்க வல்லது. ஆனாலும் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல என்று பலர் நினைக்கிறார்கள். சளியை உண்டாக்கிவிடும் என்ற எண்ணமே அதற்கு காரணம். சளி, இருமல் ஏற்படாத வண்ணம் தயிரை எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா?
பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும். தயிரும் குளிர்ச்சி தன்மை கொண்டது. அப்படியிருக்கையில் குளிர்ந்த அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்த தயிரை சாப்பிட்டால் உடல் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி அடையக்கூடும். தொண்டை வலி அல்லது சளிக்கு வழி வகுக்கும். அதனால் அந்த தவறை செய்யாதீர்கள்.
எப்படி சாப்பிடலாம்?
தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல. அறை வெப்பநிலையில் தயிரை சாப்பிடுவதுதான் சரியானது. குளிர் சாதனப்பெட்டியில் இருந்து எடுத்தால் அரை மணி நேரம் கழித்து உட்கொள்வது நல்லது.
இரவில் தயிர் சாப்பிடுவதும் கூடாது. அதன் குளிர்ச்சித்தன்மை உடல் வெப்பநிலையை மேலும் குறைத்து சளியை அதிகரிக்க செய்துவிடும். எனவே, காலையிலோ அல்லது மதிய உணவிலோ தயிர் கலந்து சாப்பிடுவது நல்லது.
யார் சாப்பிடக்கூடாது?
இருமல், சளி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வதோ அல்லது தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதோ நல்லது.
குளிர் காலத்திலும் தயிர் ஏன் சாப்பிட வேண்டும்?
குளிர்காலத்தில் இயல்பாகவே பசி உணர்வு அதிகரிக்கும். உடல் குளிர்ச்சி தன்மைக்கு மாறுவதை தடுத்து, உடல் சூடாக இருக்க அதிக கலோரிகள் எரிக்கப்படும். அப்படி வெப்பத்தை உருவாக்க உடல் அதிக சக்தியை பயன்படுத்துவது பசியை தூண்டி விட்டு விடும். அதனை கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட தோன்றும். அப்படி கனமான உணவுகளை சாப்பிடுவது செரிமான செயல்திறனை குறைக்கும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். அஜீரணத்தையும் குறைக்கும். வயிற்று ஆரோக்கியத்தையும் காக்கும். அதனால் குளிர் காலத்தில் தயிரை தவிர்க்கக்கூடாது.
சருமத்துக்கும் நன்மை பயக்குமா?
குளிர் காலத்தில் தோல் வறண்டு போகும். தயிரில் உள்ளடங்கி இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். முகத்துக்கு 'பேஸ் பேக்'காகவும் தயிரை பயன்படுத்தலாம். தயிரில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி போன்றவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தும்.
- இன்றைய சூழலில் பலர் வேலை அவசரத்தில் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், இது சரியல்ல.
- காலையில் அலுவலகம் செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். சரியான முறையில் பசித்த பின்னர் சரியான அளவோடு சுவையான உணவினை உட்கொண்டால் எந்த நோயும் அணுகாது.
முன்பெல்லாம் நோய்களை தடுக்கும் மருந்தாக நாம் உட்கொள்ளும் உணவே இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல. பசி என்பதே ஒரு பிணிதான். அதற்கான மருந்துதான் உணவு.
பிடித்த உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் உணர்வு அலாதியானது. அதை அளவோடு சாப்பிடும்போதே நன்மை பயப்பதாக உள்ளது.

காலை உணவு நமக்குத் தேவையான சக்தியை முதலில் அளிக்கிறது. இன்றைய சூழலில் பலர் வேலை அவசரத்தில் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், இது சரியல்ல. காலையில் அலுவலகம் செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
காலை உணவினைத் தவிர்த்தால் அது நம்முடைய சிந்தனையை சிறப்பாக வழங்கக் கூடிய மூளையைப் பாதிக்கும் என்கின்றனர் டாக்டர்கள். இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்தான் நீண்ட உணவு இடைவெளி உள்ளது. அதை சரி செய்ய காலை உணவை அவசியம் சாப்பிட வேண்டும்.
இல்லையேல் ஜீரண சுரப்பி நமது குடலை பாதிக்கச் செய்யும். காலை உணவினைத் தவிர்க்கும் போது வயிற்றில் வாயுத் தொல்லைகள் ஏற்பட்டு மந்த நிலை உருவாகிவிடும்.
எத்தகைய திறமையானவர்களாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கும்போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. தானியங்களை காலை உணவாக சாப்பிடுவதால் பல நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கலப்பு தானியங்கள் கொண்ட காலை உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருக்கும்.
நமது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் ஊட்டச்சத்து இது.
காலை எழுந்தவுடன் ஒரு பெரிய டம்ளரில் வெது வெதுப்பான தண்ணீர் பருகுவது உடலின் செரிமான அமைப்பை தூண்டுவதற்கு உதவும். இதன் மூலமாக குடலில் இயக்கங்கள் தூண்டப்பட்டு, அவற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். மேலும் உணவை உட்கொள்வதற்கு குடல் தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.
தேவைப்பட்டால் வெது வெதுப்பான தண்ணீரோடு ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது சிறந்தது.
- கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- குளிர்காலத்தை வாத காலம் என்றும் குறிப்பிடுவதுண்டு.
குளிர் காலம் தொடங்கியதும் பலரும் வழக்கத்தை விட விதவிதமாக ருசிப்பதற்கு விரும்புவார்கள். வெப்பநிலை குறைவதால் தாகம் தணிவதும், குளிர்ச்சியான வானிலைக்கு சூடான, பொரித்த உணவுகள் நாவின் சுவை மொட்டுகளுக்கு இதமாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது. அதேவேளையில் சில உணவுப்பழக்கங்களை தவிர்ப்பது குளிர் காலத்தில் உடல் நலனை சீராக பேணுவதற்கு வழிவகை செய்யும்.
குளிர்ந்த உணவுகளை சாப்பிடுதல்
குளிர்காலத்தில் ஜீரண சக்தி சீராக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் குளிர்ந்த பால், குளிர்ந்த ரொட்டி, குளிர்ந்த சாதம், அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், குளிர்ந்த உணவை சாப்பிட்டால் ஜீரண சக்தி பலவீனமடையும். அதனை தவிர்க்க எப்போதும் சூடான, புதிதாக சமைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள். சூடான சூப் பருகலாம். அவை உடலுக்கு கதகதப்புத்தன்மையை கொடுத்து குளிர்ச்சியில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவிடும்.
ஆரோக்கியமான கொழுப்புகளை தவிர்த்தல்
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேவேளையில் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதல்ல. உதாரணமாக, நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று கருதி சிலர் தவிர்ப்பார்கள். அது மிகப்பெரிய தவறு. அதிலும் குளிர் காலத்தில் தினமும் சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.
அதிகப்படியான உலர்ந்த உணவுகளை சாப்பிடுதல்
குளிர்காலத்தை வாத காலம் என்றும் குறிப்பிடுவதுண்டு. பரோட்டா, சப்பாத்தி, பச்சை காய்கறி சாலட்டுகள் போன்ற உலர்ந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் வாதம் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் அவை உடலை மேலும் உலரச் செய்து பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் உண்ணும் உணவுகளுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வது சிறப்பானது. அத்துடன் ஈரப்பதமான, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.
- சிரிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.
- சிரிப்பு சிறிது நேரம் நம் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.
தினமும் சிறிது நேரம் சத்தமாக சிரிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சிரிப்பு உடனடியாக மன நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
சத்தமாக சிரிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆயுட்காலத்தை அதிகரிக்கும் ஒரு எளிய பயிற்சியாகும். சத்தமாக சிரிப்பது நீண்ட ஆயுளுக்கு பெரிதும் உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
சிரிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். மகிழ்ச்சி ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு இணைக்கப்பட்டுள்ளது.

நேர்மறையான, மகிழ்ச்சியான மன நிலையைப் பராமரிப்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சிரிப்பு சிறிது நேரம் நம் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.
பின்னர் தசைகள் தளர்ந்து, இரத்த அழுத்தம் குறைகிறது. உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. சத்தமாக சிரிப்பது உதரவிதானம் மற்றும் நுரையீரலை செயல்படுத்துகிறது. இது ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது. மனம் அமைதியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். கலகலவென கண்ணில் நீர்வர சிரிப்போம்.
- ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் மணித்துளி வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- 30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது.
ஆதிகாலத்தில் மனிதர்கள் வயிற்று பசிக்கு உணவைத்தேடி காடுகள், மலைகளில் நடந்து வேட்டையாடி கிடைத்ததை உண்டு வாழ்ந்தார்கள். இயற்கையான வாழ்வில் உடல் உறுதியாக இருந்தது. உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததால் பெரிய அளவில் நோய்களின் தாக்கம் இல்லை.
வண்டி சக்கரம் மற்றும் வேட்டை ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு மனிதன் இலகுவாக உணவை வேட்டையாட தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தான். இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்து பிரபஞ்சத்தில் பல லட்சம் மைல் தொலைவில் இருக்கும் கோள்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் அளவுக்கு விரிவாகி இருக்கிறது. ஆனால், மனிதனின் வாழ்வியல் நடந்து ஓடி உணவு தேடும் தேவை குறைந்து போனதால் நோய்களின் இருப்பிடமாக மாறி வருகிறது. இதனை தவிர்க்க, ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் மணித்துளி வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உலக அளவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் நடைப்பயிற்சி பல்வேறு பலன்களை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 5 நிமிடங்கள் நடந்தால் மனநிலை மேம்படுகிறது. 10 நிமிடங்கள் நடந்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அளவு குறைந்து மனதில் அமைதி ஏற்படுகிறது. 15 நிமிடங்கள் நடந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைகிறது. 30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது. 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் மனதில் இருக்கும் தேவை இல்லாத குழப்பங்கள் நீங்க, சிந்தனை குறைந்து தெளிவான மனநிலை ஏற்படுகிறது. 60 நிமிடங்கள் நடந்தால் மனதில் உற்சாகம் பிறக்கிறது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதையெல்லாம் விட தினமும் நடந்தால் உடலில் ரத்த சுழற்சி சீராக நடந்து உடலின் அனைத்து உறுப்புகளும் புத்துணர்வுடன் இயங்குகின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு நன்மை தரும் நடைப்பயிற்சியை நாமும் மேற்கொள்ளலாம்.
- பிஸ்கட் சாப்பிட விரும்பினால் நார்ச்சத்து அதிகம் கொண்ட, முழுத் தானியங்கள் கலந்த பிஸ்கட்டுகளை தேர்வு செய்வது நல்லது.
- டீயுடன் சமோசா, பக்கோடா போன்ற எண்ணெய்யில் பொரித்த பதார்த்தங்களை சாப்பிடுவதும் நல்லதல்ல.
டீயுடன் பிஸ்கட்டை சேர்த்து உட்கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. ஆனால் அது ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதல்ல. ஏனெனில் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் காணப்படும். அதனை டீயுடன் சேர்த்து உட்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

பிஸ்கட்டுகளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் போதிய அளவில் இருப்பதில்லை. பசியை கட்டுப்படுத்துவது போல் தோன்றினாலும் குறைந்த ஊட்டச்சத்துகளையே உடலுக்கு வழங்கும். டீயுடன் சேர்த்து சாப்பிடும்போது சிலருக்கு அசிடிட்டி ஏற்படக்கூடும். இந்த பழக்கத்தை தொடர்வது உடல் பருமன், அஜீரணம் போன்ற பாதிப்புகளுக்கு வித்திடும். பிஸ்கட் சாப்பிட விரும்பினால் நார்ச்சத்து அதிகம் கொண்ட, முழுத் தானியங்கள் கலந்த பிஸ்கட்டுகளை தேர்வு செய்வது நல்லது.
எண்ணெய் பலகாரம் உட்கொள்ளலாமா?
டீயுடன் சமோசா, பக்கோடா போன்ற எண்ணெய்யில் பொரித்த பதார்த்தங்களை சாப்பிடுவதும் நல்லதல்ல. டீயில் இருக்கும் டானின், எண்ணெய்யுடன் கலந்து வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் டீயுடன் உட்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். டீயில் உள்ள ஆக்சலேட், இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும். டீ அருந்திய பிறகு சிறிது இடைவெளி விட்டு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- விஷ காளான்களை கண்டறியும் வகையில் சில அடிப்படையான அடையாளங்கள் உள்ளன.
- தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் விஷ காளான்கள் பரவலாக காணப்படுகின்றன.
மழை பெய்யும்போது ஆங்காங்கே காளான்கள் முளைப்பதை காணலாம். குடை போன்ற அழகிய தோற்றம், மென்மையான வடிவம் என்று பார்க்க அழகாக தோன்றும். ஆனால், பெரும்பாலும் இவற்றை விஷ காளான்களாகவே இயற்கை படைத்து உள்ளது.
இந்த காளான்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம், ஏனெனில் அவை பெரும்பாலும் உண்ணத்தகுந்த காளான்களை போன்றே தோற்றமளிக்கும்.
சில நேரங்களில் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூட மனிதர்கள் உண்ணத்தகுந்த காளான்கள் மற்றும் விஷக்காளான்களை அடையாளம் காண்பதில் தோல்வி அடைய நேரிடுகிறது.
காளான்களை பொறுத்தவரை காட்டுப்பகுதியில் முளைத்து வளரும் எந்த காளானையும் உண்பது மிக மோசமான ஆபத்தை விளைவிக்கும்.
விஷ காளான்களை கண்டறியும் வகையில் சில அடிப்படையான அடையாளங்கள் உள்ளன. இந்த காளான்கள் தொப்பி போன்ற மேல் பகுதியில் செதில்களுடன் காணப்படும். தண்டின் அடிப்பகுதியில் குமிழ் அல்லது வளையம் போன்ற தோற்றம் இருக்கும். மேலும், இந்த விஷக்காளான்கள் மிகவும் கவர்ச்சிகரமான வண்ணங்கள், அடர்த்தியான நிறங்களுடன், ஒரு வித துர்நாற்றம் வீசும்.
இந்த வகை காளான்களை அவற்றின் நச்சு அடிப்படையில் தரம் பிரிக்கிறார்கள். அமானிடா பாலோய்ட்ஸ், கோனோசைப் பிலாரிஸ், அமானிட ஜெம்மாட்டா, அமானிட பேன்தரீனா சைலோசைப் சைனாசீன்ஸ், ஜிரோமிட்ரா எஸ்குலண்டா என்ற தாவரவியல் பெயரில் உள்ள காளான்கள் நச்சுத்தன்மை கொண்டவை.
இந்தியாவில், குறிப்பாக தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் விஷ காளான்கள் பரவலாக காணப்படுகின்றன.
உண்ண தகுந்ததில் பட்டன் காளான் முதல் இடத்தில் உள்ளது. இது வெள்ளை அல்லது கிரீம் நிறம் கொண்ட மென்மையான காளான் ஆகும். இதே போல் சாம்பல், வெள்ளை, பழுப்பு நிறங்களை கொண்ட சிப்பி காளான் சுவையானதாகும். இதை உண்ணும்போது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது தவிர, ஷிடேக் காளான், எனோகி காளான், மோரல் காளான்களும் உள்பட மேலும் சில ரகங்களும் உண்பதற்கு ஏற்ற பட்டியலில் உள்ளன.
- ஆழ்நிலை தியானத்தில் பயிற்சி பெற்ற பலரை பல்வேறு நகரங்களில் குழுவாக தியானம் செய்ய வைத்தனர்.
- ஒரு மனிதரிடம் நல்ல உணர்வுகள் வெளிப்படும் போது அது சக மனிதர்களை அமைதிப்படுத்துகிறது என்பது உண்மை.
தியானம் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பயிற்சியாக கற்று தரப்படுகிறது. இந்த தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு நோய்களை போக்க தியானம் ஒரு சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ஒருவர் அல்லது ஒரு குழு செய்யும் தியானம் என்ன மாதிரியான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்ய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
ஆழ்நிலை தியானத்தில் பயிற்சி பெற்ற பலரை பல்வேறு நகரங்களில் குழுவாக தியானம் செய்ய வைத்தனர். பின்னர் இந்த தியான நிகழ்வு நடைபெற்ற நகரங்களில் அந்த தியான நிகழ்வுக்கு முன் பின் நடைபெற்ற சம்பவங்களை ஆய்வு செய்தனர். அதில், இந்த தியான நிகழ்வுக்கு பிறகு அந்த நகரங்களில் குற்றம், வன்முறை சம்பவங்கள், விபத்துகள், நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
இது போன்ற மாற்றங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் விவாதித்தனர். அதில், தோராயமாக ஒரு நகரில் வெறும் 1 சதவீத மக்கள் தொடர்ந்து தியானம் செய்தால், அந்த இடத்தில் இருந்து பரவும் கண்ணுக்கு தெரியாத அமைதி அலைகள் அந்த நகரைச் சுற்றி சுமார் 5 மைல் தொலைவுக்கு ஒரு வித அமைதியை அந்த பகுதியில் வாழும் மனிதர்களிடத்தில் ஏற்படுத்துகிறது. இது அந்த பகுதியில் வாழும் தியானத்தில் ஈடுபடாத மக்களின் மனதில் மாற்றத்தை உருவாக்கி அமைதியை உருவாக்குவதால் அந்த மக்களின் மன அழுத்தம் குறையத் தொடங்குகிறது. பொதுவாக மனிதர்கள் ஒருவரையொருவர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கின்றனர். ஒரு மனிதரிடம் நல்ல உணர்வுகள் வெளிப்படும் போது அது சக மனிதர்களை அமைதிப்படுத்துகிறது என்பது உண்மை. பொதுவாக தியானம் அமைதியை தருகிறது. அது ஒரு சமூகத்தில் பரவும் போது ஒட்டுமொத்த சமூகமும் அமைதிக்கு திரும்புகிறது என்றனர்.
- புற்று நோய்க்கு எதிராக போராடி நமது உடல் நலனை பாதுகாக்கின்றன.
- திராட்சை பழம் மலச்சிக்கலை தடுப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறது.
திராட்சையில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக திராட்சையில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. திராட்சை பழத்தில் முகம், தலை முடி மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிக அதிகமாக உள்ளன.
திராட்சையை உண்டால் நமது உடலுக்கு உடனடியாக தேவையான ஆற்றலும், நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும், வலிமையும் அதிகரிக்கும். திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது.
திராட்சை அதுவும் குறிப்பாக கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும். திராட்சை பழம் மலச்சிக்கலை தடுப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறது. அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை சிறந்தது.
திராட்சை பழத்தில் சர்க்கரை அதிகளவில் உள்ளது. மற்றும் ஆர்கானிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் போன்றவையும் உள்ளன. இவை வயிற்றின் அமைப்பை நல்ல முறையில் வைத்திருக்க உதவுகின்றன.
பொதுவாக திராட்சை பாசம் பலவகையான புற்றுநோய்களையூம் எதிர்த்து போராடும் ஆற்றல் தரும். அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை வகை மார்பக புற்றுநோயையும் மற்ற பிற புற்றுநோய்களையும் கட்டுப்படுத்தும்தன்மை கொண்டது. திராட்சையிலுள்ள அதிகளவிலான "ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்" உதவுகின்றன.
இவை புற்று நோய்க்கு எதிராக போராடி நமது உடல் நலனை பாதுகாக்கின்றன. திராட்சையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது சிறுநீரகங்களை நன்றாக பாதுகாத்து நலமாக வாழலாம். திராட்சை பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது இரத்தத்திலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக குறைத்து நமது உடலை சீராக்கும் பணியை செய்யும். திராட்சை பழத்திலுள்ள "லிவோலியிக் அமிலம்" அமிலம் நமது மயிர்கால்களை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்கும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும்.
- வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
- இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது.
நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பாலும் பருகி வரலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.






