என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health"

    • முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை.
    • முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.

    முட்டையின் வெள்ளைக்கருவில் சுமார் 90 சதவீதம் நீரும், 10 சதவீதம் புரதமும் கலந்திருக்கும். ஆனால் முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை. சோடியம் அதிகமாக இருக்கும். கலோரிகளோ குறைவாகவே (17 கலோரிகள்) இருக்கும். ஆனால் முட்டையின் மஞ்சள் கரு ஊட்டச்சத்து மிக்கது. அதில் சுமார் 17 சதவீதம் புரதம், ஏ, டி, இ, கே, பி12 போன்ற வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படும். சுமார் 50 கலோரிகளையும் கொண்டிருக்கும்.

    எது சிறந்தது?

    சமச்சீரான ஊட்டச்சத்தை நாடுபவர்களுக்கு வெள்ளை கரு, மஞ்சள் கரு இரண்டும் கலந்த முழு முட்டையே சிறந்தது. முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.

    அதே நேரத்தில் கலோரிகள், கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்தது. மூளை ஆரோக்கியம், கண் ஆரோக்கியம், தசை வளர்ச்சிக்கு முட்டையின் மஞ்சள் கரு சிறந்த தேர்வாக அமையும்.

    • பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும்.
    • தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல.

    தயிர் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கக்கூடியது. அதில் உள்ள ஊட்டச்சத்துகள் ஏராளமான நன்மைகளை அளிக்க வல்லது. ஆனாலும் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல என்று பலர் நினைக்கிறார்கள். சளியை உண்டாக்கிவிடும் என்ற எண்ணமே அதற்கு காரணம். சளி, இருமல் ஏற்படாத வண்ணம் தயிரை எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா?

    பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும். தயிரும் குளிர்ச்சி தன்மை கொண்டது. அப்படியிருக்கையில் குளிர்ந்த அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்த தயிரை சாப்பிட்டால் உடல் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி அடையக்கூடும். தொண்டை வலி அல்லது சளிக்கு வழி வகுக்கும். அதனால் அந்த தவறை செய்யாதீர்கள்.

    எப்படி சாப்பிடலாம்?

    தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல. அறை வெப்பநிலையில் தயிரை சாப்பிடுவதுதான் சரியானது. குளிர் சாதனப்பெட்டியில் இருந்து எடுத்தால் அரை மணி நேரம் கழித்து உட்கொள்வது நல்லது.

    இரவில் தயிர் சாப்பிடுவதும் கூடாது. அதன் குளிர்ச்சித்தன்மை உடல் வெப்பநிலையை மேலும் குறைத்து சளியை அதிகரிக்க செய்துவிடும். எனவே, காலையிலோ அல்லது மதிய உணவிலோ தயிர் கலந்து சாப்பிடுவது நல்லது.

    யார் சாப்பிடக்கூடாது?

    இருமல், சளி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வதோ அல்லது தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதோ நல்லது.

    குளிர் காலத்திலும் தயிர் ஏன் சாப்பிட வேண்டும்?

    குளிர்காலத்தில் இயல்பாகவே பசி உணர்வு அதிகரிக்கும். உடல் குளிர்ச்சி தன்மைக்கு மாறுவதை தடுத்து, உடல் சூடாக இருக்க அதிக கலோரிகள் எரிக்கப்படும். அப்படி வெப்பத்தை உருவாக்க உடல் அதிக சக்தியை பயன்படுத்துவது பசியை தூண்டி விட்டு விடும். அதனை கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட தோன்றும். அப்படி கனமான உணவுகளை சாப்பிடுவது செரிமான செயல்திறனை குறைக்கும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். அஜீரணத்தையும் குறைக்கும். வயிற்று ஆரோக்கியத்தையும் காக்கும். அதனால் குளிர் காலத்தில் தயிரை தவிர்க்கக்கூடாது.

    சருமத்துக்கும் நன்மை பயக்குமா?

    குளிர் காலத்தில் தோல் வறண்டு போகும். தயிரில் உள்ளடங்கி இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். முகத்துக்கு 'பேஸ் பேக்'காகவும் தயிரை பயன்படுத்தலாம். தயிரில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி போன்றவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தும்.

    • இன்றைய சூழலில் பலர் வேலை அவசரத்தில் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், இது சரியல்ல.
    • காலையில் அலுவலகம் செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

    உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். சரியான முறையில் பசித்த பின்னர் சரியான அளவோடு சுவையான உணவினை உட்கொண்டால் எந்த நோயும் அணுகாது.

    முன்பெல்லாம் நோய்களை தடுக்கும் மருந்தாக நாம் உட்கொள்ளும் உணவே இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல. பசி என்பதே ஒரு பிணிதான். அதற்கான மருந்துதான் உணவு.

    பிடித்த உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் உணர்வு அலாதியானது. அதை அளவோடு சாப்பிடும்போதே நன்மை பயப்பதாக உள்ளது.

     

    காலை உணவு நமக்குத் தேவையான சக்தியை முதலில் அளிக்கிறது. இன்றைய சூழலில் பலர் வேலை அவசரத்தில் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், இது சரியல்ல. காலையில் அலுவலகம் செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

    காலை உணவினைத் தவிர்த்தால் அது நம்முடைய சிந்தனையை சிறப்பாக வழங்கக் கூடிய மூளையைப் பாதிக்கும் என்கின்றனர் டாக்டர்கள். இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்தான் நீண்ட உணவு இடைவெளி உள்ளது. அதை சரி செய்ய காலை உணவை அவசியம் சாப்பிட வேண்டும்.

    இல்லையேல் ஜீரண சுரப்பி நமது குடலை பாதிக்கச் செய்யும். காலை உணவினைத் தவிர்க்கும் போது வயிற்றில் வாயுத் தொல்லைகள் ஏற்பட்டு மந்த நிலை உருவாகிவிடும்.

    எத்தகைய திறமையானவர்களாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கும்போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. தானியங்களை காலை உணவாக சாப்பிடுவதால் பல நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கலப்பு தானியங்கள் கொண்ட காலை உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருக்கும்.

    நமது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் ஊட்டச்சத்து இது.

    காலை எழுந்தவுடன் ஒரு பெரிய டம்ளரில் வெது வெதுப்பான தண்ணீர் பருகுவது உடலின் செரிமான அமைப்பை தூண்டுவதற்கு உதவும். இதன் மூலமாக குடலில் இயக்கங்கள் தூண்டப்பட்டு, அவற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். மேலும் உணவை உட்கொள்வதற்கு குடல் தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.

    தேவைப்பட்டால் வெது வெதுப்பான தண்ணீரோடு ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது சிறந்தது.

    • கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
    • குளிர்காலத்தை வாத காலம் என்றும் குறிப்பிடுவதுண்டு.

    குளிர் காலம் தொடங்கியதும் பலரும் வழக்கத்தை விட விதவிதமாக ருசிப்பதற்கு விரும்புவார்கள். வெப்பநிலை குறைவதால் தாகம் தணிவதும், குளிர்ச்சியான வானிலைக்கு சூடான, பொரித்த உணவுகள் நாவின் சுவை மொட்டுகளுக்கு இதமாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது. அதேவேளையில் சில உணவுப்பழக்கங்களை தவிர்ப்பது குளிர் காலத்தில் உடல் நலனை சீராக பேணுவதற்கு வழிவகை செய்யும்.

    குளிர்ந்த உணவுகளை சாப்பிடுதல்

    குளிர்காலத்தில் ஜீரண சக்தி சீராக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் குளிர்ந்த பால், குளிர்ந்த ரொட்டி, குளிர்ந்த சாதம், அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், குளிர்ந்த உணவை சாப்பிட்டால் ஜீரண சக்தி பலவீனமடையும். அதனை தவிர்க்க எப்போதும் சூடான, புதிதாக சமைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள். சூடான சூப் பருகலாம். அவை உடலுக்கு கதகதப்புத்தன்மையை கொடுத்து குளிர்ச்சியில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவிடும்.

    ஆரோக்கியமான கொழுப்புகளை தவிர்த்தல்

    கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேவேளையில் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதல்ல. உதாரணமாக, நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று கருதி சிலர் தவிர்ப்பார்கள். அது மிகப்பெரிய தவறு. அதிலும் குளிர் காலத்தில் தினமும் சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.

    அதிகப்படியான உலர்ந்த உணவுகளை சாப்பிடுதல்

    குளிர்காலத்தை வாத காலம் என்றும் குறிப்பிடுவதுண்டு. பரோட்டா, சப்பாத்தி, பச்சை காய்கறி சாலட்டுகள் போன்ற உலர்ந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் வாதம் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் அவை உடலை மேலும் உலரச் செய்து பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் உண்ணும் உணவுகளுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வது சிறப்பானது. அத்துடன் ஈரப்பதமான, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.

    • சிரிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.
    • சிரிப்பு சிறிது நேரம் நம் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.

    தினமும் சிறிது நேரம் சத்தமாக சிரிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சிரிப்பு உடனடியாக மன நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

    சத்தமாக சிரிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆயுட்காலத்தை அதிகரிக்கும் ஒரு எளிய பயிற்சியாகும். சத்தமாக சிரிப்பது நீண்ட ஆயுளுக்கு பெரிதும் உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

    சிரிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். மகிழ்ச்சி ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு இணைக்கப்பட்டுள்ளது.

     

    நேர்மறையான, மகிழ்ச்சியான மன நிலையைப் பராமரிப்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சிரிப்பு சிறிது நேரம் நம் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.

    பின்னர் தசைகள் தளர்ந்து, இரத்த அழுத்தம் குறைகிறது. உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. சத்தமாக சிரிப்பது உதரவிதானம் மற்றும் நுரையீரலை செயல்படுத்துகிறது. இது ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது. மனம் அமைதியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். கலகலவென கண்ணில் நீர்வர சிரிப்போம்.

    • ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் மணித்துளி வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    • 30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது.

    ஆதிகாலத்தில் மனிதர்கள் வயிற்று பசிக்கு உணவைத்தேடி காடுகள், மலைகளில் நடந்து வேட்டையாடி கிடைத்ததை உண்டு வாழ்ந்தார்கள். இயற்கையான வாழ்வில் உடல் உறுதியாக இருந்தது. உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததால் பெரிய அளவில் நோய்களின் தாக்கம் இல்லை.

    வண்டி சக்கரம் மற்றும் வேட்டை ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு மனிதன் இலகுவாக உணவை வேட்டையாட தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தான். இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்து பிரபஞ்சத்தில் பல லட்சம் மைல் தொலைவில் இருக்கும் கோள்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் அளவுக்கு விரிவாகி இருக்கிறது. ஆனால், மனிதனின் வாழ்வியல் நடந்து ஓடி உணவு தேடும் தேவை குறைந்து போனதால் நோய்களின் இருப்பிடமாக மாறி வருகிறது. இதனை தவிர்க்க, ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் மணித்துளி வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    உலக அளவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் நடைப்பயிற்சி பல்வேறு பலன்களை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 5 நிமிடங்கள் நடந்தால் மனநிலை மேம்படுகிறது. 10 நிமிடங்கள் நடந்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அளவு குறைந்து மனதில் அமைதி ஏற்படுகிறது. 15 நிமிடங்கள் நடந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைகிறது. 30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது. 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் மனதில் இருக்கும் தேவை இல்லாத குழப்பங்கள் நீங்க, சிந்தனை குறைந்து தெளிவான மனநிலை ஏற்படுகிறது. 60 நிமிடங்கள் நடந்தால் மனதில் உற்சாகம் பிறக்கிறது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    இதையெல்லாம் விட தினமும் நடந்தால் உடலில் ரத்த சுழற்சி சீராக நடந்து உடலின் அனைத்து உறுப்புகளும் புத்துணர்வுடன் இயங்குகின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு நன்மை தரும் நடைப்பயிற்சியை நாமும் மேற்கொள்ளலாம்.

    • பிஸ்கட் சாப்பிட விரும்பினால் நார்ச்சத்து அதிகம் கொண்ட, முழுத் தானியங்கள் கலந்த பிஸ்கட்டுகளை தேர்வு செய்வது நல்லது.
    • டீயுடன் சமோசா, பக்கோடா போன்ற எண்ணெய்யில் பொரித்த பதார்த்தங்களை சாப்பிடுவதும் நல்லதல்ல.

    டீயுடன் பிஸ்கட்டை சேர்த்து உட்கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. ஆனால் அது ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதல்ல. ஏனெனில் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் காணப்படும். அதனை டீயுடன் சேர்த்து உட்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

     

    பிஸ்கட்டுகளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் போதிய அளவில் இருப்பதில்லை. பசியை கட்டுப்படுத்துவது போல் தோன்றினாலும் குறைந்த ஊட்டச்சத்துகளையே உடலுக்கு வழங்கும். டீயுடன் சேர்த்து சாப்பிடும்போது சிலருக்கு அசிடிட்டி ஏற்படக்கூடும். இந்த பழக்கத்தை தொடர்வது உடல் பருமன், அஜீரணம் போன்ற பாதிப்புகளுக்கு வித்திடும். பிஸ்கட் சாப்பிட விரும்பினால் நார்ச்சத்து அதிகம் கொண்ட, முழுத் தானியங்கள் கலந்த பிஸ்கட்டுகளை தேர்வு செய்வது நல்லது.

    எண்ணெய் பலகாரம் உட்கொள்ளலாமா?

    டீயுடன் சமோசா, பக்கோடா போன்ற எண்ணெய்யில் பொரித்த பதார்த்தங்களை சாப்பிடுவதும் நல்லதல்ல. டீயில் இருக்கும் டானின், எண்ணெய்யுடன் கலந்து வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் டீயுடன் உட்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். டீயில் உள்ள ஆக்சலேட், இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும். டீ அருந்திய பிறகு சிறிது இடைவெளி விட்டு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    • வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது.
    • மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு.

    காலை மெல்லோட்டம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடற்பருமனானவர்கள் பலர் மெல்லோட்டம் ஓட மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்.

    இன்று வெறும் 10 அடி தூரம் மெல்லோட்டம் செய்தாலே பலருக்கு மூச்சு வாங்கும், வியர்த்துக்கொட்டும். இதனால் வேக நடையே சிறந்தது என எண்ணி பலர் கை, கால்களை வீசியபடி வேக நடை செல்வர்.

    வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது. ஆனால் மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு. காலை நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வோர் வேக நடை, மெல்லோட்டம் இடையே உள்ள வேறுபாட்டை அறிவது நல்லது.

    நடக்கும் வேகத்தில் மெல்லோட்டம் செய்வது, அதாவது நிமிடத்துக்கு 50 அடி எடுத்து வைத்து மெல்லோட்டம் செய்வது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஓர் உடற்பயிற்சி முறை.

    கட்டுடல் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள் இதுபோல தினமும் காலை பல கி.மீ., மெல்லோட்டம் செல்வார்கள். இது இதயத்துடிப்பை அதிகரித்து, வியர்வையை வெளியேற்றி மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் மெல்லோட்டம் கால்களின் தசை நாரில் தசைப்பிடிப்பு, காயம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    இளைஞர்கள், நடுத்தர வயதினர் மெல்லோட்டம் ஓடும்போது சரியான வேகத்தில் ஓடுவது நல்லது.

    வேகநடை மூலம் குறைவான கலோரிகளே எரிக்கப்படும். வேக நடை பயிலும்போது கைகளை முன்னும் பின்னும் வேகமாக ஆட்டி நடப்பது அதிக பலனைத் தரும். வேகநடை முதியோருக்கு ஏற்ற ஓர் சிறந்த கார்டியோ பயிற்சி. இதனை தினமும் செய்வதால் உடற்பருமனானவர்களின் உடற்தசைகளின் அடியில் உள்ள கொழுப்புப் படலம் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும். வேக நடை பயில்வது மிக எளிய கார்டியோ உடற்பயிற்சிக்கு சமமானது. வேக நடை பயில்வது மெல்லோட்டம் அளவுக்கு விரைவில் பலனைத் தராது என்றபோதும், உடல் களைப்படையாமல் நீண்டநேரம் செய்ய ஏற்ற உடற்பயிற்சிகளுள் சிறந்தது.

    வேகநடை, மெல்லோட்டம் ஆகிய இரண்டிலுமே சாதக பாதகங்கள் உள்ள நிலையில் உங்கள் உடல் நிலைக்கேற்ப நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.

    • மருந்துகள் முறையாய் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
    • உடல் இயக்க குறைவு, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம்.

    இன்றைய கால கட்டத்தில் அன்றாடம் எல்லோரும் உடலில் ஏதோ ஒரு சிறிய பாதிப்போ அல்லது பெரிய பாதிப்புடனோ உள்ளனர். தலைவலி, சைனஸ், மூட்டுவலி, முதுகு வலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளை தன் குடும்ப உறுப்பினர்போல் அதனுடன் கைகோர்த்து வாழ்ந்து வருபவர்கள் ஏராளம். ஆனால் அநேகர்

    * உடல் ரீதியான பல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

    * காய்ச்சல் வந்து விட்டாலே உடல் சோர்ந்து விடும்.

    * உடல் வலி, மூட்டு வலி என்று சொல்லாதவர்கள் மிகக்குறைவே.

    * எளிதில் பலவீனப்பட்டு இருப்பார்கள்.

    * உணவு சாப்பிட பிடிக்காத உணர்வு இருக்கும்.

    * இதுவே மன அழுத்தத்தினையும், கவலையையும் கொடுத்து விடும்.

    * தூக்கத்தில் தொந்தரவு இருக்கும்

    * செய்ய வேண்டிய வேலைகள் மறந்து போகும்.

    * சிகிச்சைக்கு பின் உடல்தேறுவதற்கு காலம் பிடிக்கும்,

    * சிலருக்கு மருத்துவமனை, இடைவிடாத கவனிப்பு அவசியம் தேவை என்ற சூழ்நிலை ஏற்படலாம்.

    * சிலருக்கு நோய் முழுமையாக குணமடையாது இருக்கலாம்.

    * மருந்துகள் முறையாய் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

    * குடும்ப ஆதரவு அவசியம்.

    * நோயின் தீவிரத்தன்மைக்கேற்ப அவசர சிகிச்சை தேவைப்படலாம்.

    * உடல் இயக்க குறைவு, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம்.

    * ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.

    * சுகாதார பராமரிப்பு அவசியம்.

    * நோயின் வகையையும், நிலைமையையும் பார்க்க வேண்டும்.

    * பரம்பரை வகை பாதிப்புகள் இருக்கலாம்.

    * உடல்நிலை பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

    * மருத்துவ பரிசோதனைகள் அவசியம்.

    * வல்லுநர்கள் ஆலோசனை தேவைப்படலாம்.

    * அத்தியாவசிய உதவிகள் அவசியம்.

    * ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது நல்லது.

    * மருத்துவமனை அருகிலேயே இருப்பது நல்லது.

    * நிரந்தர கண்காணிப்பு தேவைப்படலாம்.

    * தடுப்பூசிகள் அவசியம்.

    * அறுவை சிகிச்சை அவசியப்படலாம்.

    * பேச்சு குறையலாம்.

    * பயிற்சிகள் தேவை.

    * நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும்.

    ஆக ஒரு நோய் பாதிப்பு என்பது சாதாரண விஷயமல்ல. இந்த உடலோடு விடாமல் போராடினால்தான் ஆரோக்கியம் பெற முடியும். அதற்கான விழிப்புணர்வுடன், வழி முறைகளை பின்பற்றுவது அவசியம் ஆகும்.

    உடல் நலம் பற்றி மேலும் சில செய்திகளை பார்ப்போம்

    * மிகவும் மனச்சோர்வு இருக்கும்போது ஒரு கப் காபி உதவும். ஒரு கப் மட்டும் போதும். அடிக்கடி பருகுவதையும் அதையே பழக்கமாக்கிக் கொள்வதும் வேண்டாம்.

    * அமெரிக்காவின் இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஒரு செல்லப் பிராணி வைத்துக் கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைகின்றது. இருதய பாதிப்பு குறைகின்றது என்று கூறியுள்ளது.

    கமலி ஸ்ரீபால்


     

    * ஸ்ட்ரெஸ் அதிகமானால் இருதய பாதிப்பு கூடுகின்றது. சர்க்கரை நோய் பிரிவு, 2 பாதிப்பு வரவும் வாய்ப்புகள் அதிகம். காரணம் உடலில் கார்டினால் அளவு அதிகமாவது தான்.

    * மனித மூக்கு 50 ஆயிரம் வகை வாசனைகளை உணர முடியும்.

    * நல்ல உடற்பயிற்சி நல்ல தூக்கத்தினை தரும்.

    * முறையான தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தியினை கெடுக்கும்.

    ரத்த அழுத்தம், இருதய ஆரோக்கியத்தினையும் பாதிக்கும்.

    சில அறிகுறிகளை சற்றும் காலதாமதிக்காமல் உடனடியாக கவனிக்க வேண்டும்

    * நெஞ்சில் வலி, நெஞ்சில் அழுத்தம்.

    * மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, இருமல்.

    * திடீரென வேகமாக எடை குறைதல்.

    * திடீரென பொறுக்க முடியாத தலைவலி.

    * திடீரென தடுமாறி குளறி பேசுதல்.

    * கை, கால்களில் குறும்பு, திடீரென மரத்து போகுதல்.

    * பார்வை தெளிவின்மை.

    * சிறுநீர், கழிவுப் பொருள் வெளியேற்றத்தில் ரத்தம்.

    * அடிக்கடி வயிற்று வலி.

    * தொடர்ந்து அதிக ஜுரம்.

    * சக்தியின்மை, தொடர்ந்து சோர்வு.

    இந்த அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.

    நமக்கு நன்மை பயப்பவர்களை எந்நாளும் நாம் காயப்படுத்தக் கூடாது

    * யாரிடம் இருக்கும் பொழுது நீங்கள் பத்திரமாக, கவலை இன்றி உணருகின்றீர்களோ. அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். உங்கள் செயல்களை எடை போட்டு பாருங்கள்.

    * யார் உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கு உதவியாய் இருக்க முயற்சி செய்கின்றார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * யாரை உங்களால் முழுமையாக நம்ப முடியுேமா அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுக்காக அன்பு, அக்கறையை யார் முழுமையாக கொடுக்கிறார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுக்கு கொடுக்கும் வாக்குகளை யார் நிறைவேற்றுகின்றார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்கள் கருத்துக்கு யார் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * வார்த்தை, செயல் மாறாது இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்கள் பேச்சை யார் முழு கவனத்துடன் கேட்கின்றார்களோ. அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்கள் நியாயமான கனவு, லட்சியங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களை ஊக்கப்படுத்துபவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுடன் உபயோகமாக முன்னேற்றமான வழியில் நேரம் செலவழிப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * தவறு செய்து விட்டால் மன்னிப்பு கேட்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுக்குரிய எல்லைகளில் தலையீடு செய்யாதவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுடன் மனம் விட்டு உண்மையாய் பேசுபவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுடன் இருக்கும் பொழுது மகிழ்ச்சியாய் இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    இப்படிப்பட்டவர்கள் 99 சதவீதம் உங்கள் பெற்றோர்கள்தான். அவர்களை எந்நாளும் எந்த நேரத்திலும் கைவிடக்கூடாது.

    இப்படிப்பட்ட பல பெற்றோர்கள் இன்று பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகி நோய் வாய்பட்டு காலம் தள்ளுகின்றனர். இவர்கள் இனியாவது அவர்கள் பிள்ளைகளால் நன்கு கவனிக்கப்பட வேண்டும்.

    குடும்ப மருத்துவர்

    சிலரின் ஒரு பொதுவான குறை என்ன வென்றால் ஒரு சின்ன உடல்நல கோளாறு என்றாலும் நிறைய பரிசோதனைகள் செய்து செலவு வைத்து விடுகின்றார்கள் என்பதுதான். சில சின்ன அறிகுறிகள் உடனடியாக கவனிக்கப் படாவிட்டால் ஆபத்தில் கூட கொண்டு விடலாம். இதுவும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது. ஆகவேதான் 'குடும்ப மருத்துவர்' என்று இருந்தால் உங்களுக்கு அநேக நன்மைகள் நடக்கும். அவருக்கு உங்கள் உடல் ஆரோக்கியம், பாதிப்பு என்பது நன்கு தெரியும்.

    அமைதியாய் சிறு அறிகுறிகளுடன் ஒருவரைத் தாக்கும் பெரிய பாதிப்புகளை பாருங்கள்.

    'மாரடைப்பு' - இது முதியோர்கள், பெண்கள், சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களுக்கு ஏற்படும். இதன் அறிகுறிகள் சில நேரங்களில் ஜீரண கோளாறு, சோர்வு என்று சிறிதாக தெரியும். இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்களே கவனமின்றி இருந்து விடலாம். ஆனால் சிறுவேலை செய்தாலும் அதிக சோர்வு, ஓய்வில் கூட மூச்சு வாங்குதல், வயிற்றுவலி, வயிற்று பிரட்டல், ஜீரணமின்மை, தலைசுற்றல், தூக்கமின்மை, சர்க்கரை நோய் பாதிப்பு என இருந்தால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள்.

    * அடிக்கடி கிருமி, பூஞ்சை பாதிப்பு. கை, கால்களில் குறுகுறுப்பு இவை இருந்தால் உங்கள் டாக்டர் சர்க்கரைநோய் பரிசோதனையை செய்வார்.

    * உடல் சதா அரிப்பு, வறண்ட சருமம், கால், கணுக்கால் வீக்கம், கண்ணை சுற்றிய உப்பிசம், நுரைத்த சிறுநீர், பசியின்மை போன்றவை இருந்தால் சிறுநீரக பரிசோதனை செய்யப்படும்.

    மேலும் சில பாதிப்புகளை குறிப்பிடலாம். ஆனால் அது அச்சத்தினை தரக் கூடாது என்பதற்காக எந்த சிறு அறிகுறியினையும் அலட்சியம் செய்யாது குடும்ப மருத்துவரை அணுகுங்கள் என்று வலியுறுத்தப்படுகின்றது.

    இவைகளை நாம் அன்றாட உணவில் அடிக்கடி பயன்படுத்துகின்றோமா?

    முட்டை: இன்று அசைவ உணவு உண்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்ணும் பலரும் உணவில் இதனை சேர்த்துக் கொள்கின்றனர்.

    சிறந்த புரத சத்து கொண்டது. இதன் மஞ்சள் கருவில் உள்ள சத்து கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. எடை குறைக்க விரும்புபவர்களுக்குக் கூட இது பரிந்துரைக்கப்படுகின்றது.

    பருப்பு வகைகள்: புரதம், நார்சத்து, போலேட், இரும்புசத்து கொண்டது. செரிமானம் எளிதானது. சுண்டல் வகைகள் எளிதாக சமைக்க முடியும். வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அவசியமானது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இருதயம், ரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுவது.

    புரோகலி: வைட்டமின் 'சி', 'கே' சத்து நிறைந்தது. நார் சத்து கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

    பூண்டு: இது நம் நாட்டு சமையல் முறையில் அதிகம் சேர்க்கப்படுவது மிக நல்ல செயல். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். கெட்ட கொழுப்பு கட்டுப்படும். இருதய ஆரோக்கியம் கூடும். கிருமிகள் அழியும்.

    வால்நட்: தினமும் இதனை 2 அல்லது 3 உண்பது மிகச் சிறந்தது. சில சில மாறுதல்கள் உணவில் ஏற்படும் பொழுது சிறந்த நன்மைகள் கூடும்.

    • வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
    • இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது.

    நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பாலும் பருகி வரலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

    வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

    அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.

    • ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை.
    • கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

    டீ, காபியுடன் பால் கலந்து பருகும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். பாலை தவிர்த்து பிளாக் டீ, பிளாக் காபி என்ற கருப்பு நிற பானம் பருகுபவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த கருப்பு பானம் ஆரோக்கியமானது என்று பார்ப்போம்.

    கருப்பு காபி (பிளாக் காபி):

    கருப்பு காபியை அதிகம் விரும்புபவர்கள் உடற்பயிற்சி ஆர்வலர்களாகத்தான் இருக்கிறார்கள். ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு ஒரு கப் காபி பருகுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. காபியில் உள்ளடங்கி இருக்கும் அதிக காபின் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    மேலும் கருப்பு காபியில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பல்வேறு வகையான ஆன்டி ஆக்சிடென்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை. சர்வதேச தொற்றுநோயியல் ஆய்விதழில், 'கருப்பு காபி' குடிப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காபியில் இருக்கும் அதிக காபின் சிலருக்கு நடுக்கம், பதற்றம் அல்லது தூக்க கோளாறு பிரச்சினையை ஏற்படுத்தும். அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் வயிற்று அசவுகரியத்தை உண்டாக்கும். கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

    கருப்பு தேநீர் (பிளாக் டீ):

    கருப்பு காபி, கருப்பு தேநீர் இரண்டுமே ஒரே மாதிரியானவை என்றாலும் பிளாக் டீயில் காபின் குறைவாக இருக்கும். அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது. இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

    ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கருப்பு தேநீரை தொடர்ந்து பருகுபவர்களால் கூடுதலாக உடல் எடையை குறைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் பருகுவதற்கு ஏற்ற பானமாக கருப்பு தேநீர் விளங்குகிறது. ஒரு கப் கருப்பு தேநீரில் 2 கலோரிகளே உள்ளது குறிப்பிடத்தக்கது. வயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்க கருப்பு டீ சிறந்த தேர்வாகும்.

    எது சிறந்தது?

    இரண்டு பானங்களையும் மிதமாக பருகினால் ஆரோக்கியமானவை. உடல் இயக்க செயல்பாடு மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு எந்த பானத்தை தேர்வு செய்வது என்று முடிவு செய்யலாம். குறிப்பாக காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருப்பவர்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலை பெறவும் கருப்பு காபியை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

    சின்ன விஷயத்திற்கும் சட்டென்று பதற்றம் கொள்பவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு காபியை தவிர்க்க வேண்டும். மேலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் கருப்பு காபி பருகக்கூடாது. ஏனெனில் அது தூக்கத்தை பாதிக்கும். காபின் அதிகமாக உட்கொள்ள விரும்பவில்லை என்றால் கருப்பு தேநீர் சிறந்த தேர்வாக அமையும்.

    • குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
    • வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம்.

    டிசம்பர் மாதத்தில்தான் பொதுவாக குளிர்காலம் தொடங்கும் என்றாலும், பருவமழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்ந்த காற்று வீசக்கூடும். அதனால் இந்த காலகட்டங்களில் நாம் பாதுகாப்பாக இருப்பது நல்லது. குறிப்பாக முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் காது வலி அடிக்கடி ஏற்படும். குளிர்காலத்தின் போது ஏற்படும் காது வலி இயல்பானது என பலர் நினைக்கின்றனர். ஆனால் உரிய நேரத்தில் கவனிக்கத் தவறினால், காதில் ஏற்படும் வலி அதிகரித்து பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குளிர்காலத்தில் ஏன் காது வலி ஏற்படுகிறது? இதை சமாளிப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்.

    சளி, மூக்கடைப்பு பிரச்சனையால் காது வலி வருமா?

    குளிர்காலத்தின் போது காற்றில் வழக்கத்தை விட அதிகமாக தூசு நிறைந்து இருக்கும். இதன் காரணமாக சுவாசிக்கும் காற்று மூக்கு வழியாக நுழையும் போது அலர்ஜி ஏற்படுகிறது. குறிப்பாக சளி தொந்தரவு இருக்கும் நபர்களுக்கு யூஸ்டேஷியன் குழாயினுள் தூசு நுழைவதன் காரணமாக காது வலி இயல்பாகவே ஏற்படுகிறது. காதில் ஏற்படும் இந்த வலியின் காரணமாக முகத்துடன் இணைந்துள்ள நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த நரம்பின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக முகத்தில் உள்ள தசைகளின் செயல்பாடும் முடங்கிப்போய்விடுகிறது. இது 'பெல்ஸ் பாலஸி' என்று அழைக்கப்படுகிறது.

    குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம். குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்று உள் நுழையும்போது மூக்குக்கு உள்ளே இருக்கும் சதைகள் வீங்கும். இதனால் அவர்களுக்கு காது வலி, தலை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.



    காது வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

    வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம். அது குளிர் காற்று காதுக்குள் செல்வதைத் தடுக்க உதவும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது காதையும், மூக்கையும் சேர்த்து மூடும் வகையில் 'ஸ்கார்ப்' அணிந்து கொள்ளலாம்.

    குளிர் காற்று காரணமாக ஏற்படும் காது வலிக்கு நீராவி பிடிப்பது நல்லது. அப்போது மூக்கினுள் ஈரப்பதம் நிறைந்த சூடான காற்று சென்று நிவாரணம் தேடித்தரும். அதன் பிறகும் காது வலி இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

    எதனால் ஏற்படுகிறது?

    நமது மூக்கையும், காதையும் இணைக்கும் ஒரு குழாய்தான் குளிர்காலத்தில் ஏற்படும் காது வலிக்கு முக்கிய காரணம். யூஸ்டேஷியன் குழாய் என்று அழைக்கப்படும் இந்தக் குழாய், குளிர்காலத்தின் போது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்றின் காரணமாக மூடிக்கொள்கிறது. இந்தக்குழாய் மூடுவதன் விளைவாக, காது சவ்வுகள் இறுக்கமாகி காது வலி உண்டாகிறது.

    ×