என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Tips"

    • மருந்துகள் முறையாய் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
    • உடல் இயக்க குறைவு, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம்.

    இன்றைய கால கட்டத்தில் அன்றாடம் எல்லோரும் உடலில் ஏதோ ஒரு சிறிய பாதிப்போ அல்லது பெரிய பாதிப்புடனோ உள்ளனர். தலைவலி, சைனஸ், மூட்டுவலி, முதுகு வலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளை தன் குடும்ப உறுப்பினர்போல் அதனுடன் கைகோர்த்து வாழ்ந்து வருபவர்கள் ஏராளம். ஆனால் அநேகர்

    * உடல் ரீதியான பல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

    * காய்ச்சல் வந்து விட்டாலே உடல் சோர்ந்து விடும்.

    * உடல் வலி, மூட்டு வலி என்று சொல்லாதவர்கள் மிகக்குறைவே.

    * எளிதில் பலவீனப்பட்டு இருப்பார்கள்.

    * உணவு சாப்பிட பிடிக்காத உணர்வு இருக்கும்.

    * இதுவே மன அழுத்தத்தினையும், கவலையையும் கொடுத்து விடும்.

    * தூக்கத்தில் தொந்தரவு இருக்கும்

    * செய்ய வேண்டிய வேலைகள் மறந்து போகும்.

    * சிகிச்சைக்கு பின் உடல்தேறுவதற்கு காலம் பிடிக்கும்,

    * சிலருக்கு மருத்துவமனை, இடைவிடாத கவனிப்பு அவசியம் தேவை என்ற சூழ்நிலை ஏற்படலாம்.

    * சிலருக்கு நோய் முழுமையாக குணமடையாது இருக்கலாம்.

    * மருந்துகள் முறையாய் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

    * குடும்ப ஆதரவு அவசியம்.

    * நோயின் தீவிரத்தன்மைக்கேற்ப அவசர சிகிச்சை தேவைப்படலாம்.

    * உடல் இயக்க குறைவு, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம்.

    * ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.

    * சுகாதார பராமரிப்பு அவசியம்.

    * நோயின் வகையையும், நிலைமையையும் பார்க்க வேண்டும்.

    * பரம்பரை வகை பாதிப்புகள் இருக்கலாம்.

    * உடல்நிலை பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

    * மருத்துவ பரிசோதனைகள் அவசியம்.

    * வல்லுநர்கள் ஆலோசனை தேவைப்படலாம்.

    * அத்தியாவசிய உதவிகள் அவசியம்.

    * ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது நல்லது.

    * மருத்துவமனை அருகிலேயே இருப்பது நல்லது.

    * நிரந்தர கண்காணிப்பு தேவைப்படலாம்.

    * தடுப்பூசிகள் அவசியம்.

    * அறுவை சிகிச்சை அவசியப்படலாம்.

    * பேச்சு குறையலாம்.

    * பயிற்சிகள் தேவை.

    * நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும்.

    ஆக ஒரு நோய் பாதிப்பு என்பது சாதாரண விஷயமல்ல. இந்த உடலோடு விடாமல் போராடினால்தான் ஆரோக்கியம் பெற முடியும். அதற்கான விழிப்புணர்வுடன், வழி முறைகளை பின்பற்றுவது அவசியம் ஆகும்.

    உடல் நலம் பற்றி மேலும் சில செய்திகளை பார்ப்போம்

    * மிகவும் மனச்சோர்வு இருக்கும்போது ஒரு கப் காபி உதவும். ஒரு கப் மட்டும் போதும். அடிக்கடி பருகுவதையும் அதையே பழக்கமாக்கிக் கொள்வதும் வேண்டாம்.

    * அமெரிக்காவின் இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஒரு செல்லப் பிராணி வைத்துக் கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைகின்றது. இருதய பாதிப்பு குறைகின்றது என்று கூறியுள்ளது.

    கமலி ஸ்ரீபால்


     

    * ஸ்ட்ரெஸ் அதிகமானால் இருதய பாதிப்பு கூடுகின்றது. சர்க்கரை நோய் பிரிவு, 2 பாதிப்பு வரவும் வாய்ப்புகள் அதிகம். காரணம் உடலில் கார்டினால் அளவு அதிகமாவது தான்.

    * மனித மூக்கு 50 ஆயிரம் வகை வாசனைகளை உணர முடியும்.

    * நல்ல உடற்பயிற்சி நல்ல தூக்கத்தினை தரும்.

    * முறையான தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தியினை கெடுக்கும்.

    ரத்த அழுத்தம், இருதய ஆரோக்கியத்தினையும் பாதிக்கும்.

    சில அறிகுறிகளை சற்றும் காலதாமதிக்காமல் உடனடியாக கவனிக்க வேண்டும்

    * நெஞ்சில் வலி, நெஞ்சில் அழுத்தம்.

    * மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, இருமல்.

    * திடீரென வேகமாக எடை குறைதல்.

    * திடீரென பொறுக்க முடியாத தலைவலி.

    * திடீரென தடுமாறி குளறி பேசுதல்.

    * கை, கால்களில் குறும்பு, திடீரென மரத்து போகுதல்.

    * பார்வை தெளிவின்மை.

    * சிறுநீர், கழிவுப் பொருள் வெளியேற்றத்தில் ரத்தம்.

    * அடிக்கடி வயிற்று வலி.

    * தொடர்ந்து அதிக ஜுரம்.

    * சக்தியின்மை, தொடர்ந்து சோர்வு.

    இந்த அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.

    நமக்கு நன்மை பயப்பவர்களை எந்நாளும் நாம் காயப்படுத்தக் கூடாது

    * யாரிடம் இருக்கும் பொழுது நீங்கள் பத்திரமாக, கவலை இன்றி உணருகின்றீர்களோ. அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். உங்கள் செயல்களை எடை போட்டு பாருங்கள்.

    * யார் உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கு உதவியாய் இருக்க முயற்சி செய்கின்றார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * யாரை உங்களால் முழுமையாக நம்ப முடியுேமா அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுக்காக அன்பு, அக்கறையை யார் முழுமையாக கொடுக்கிறார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுக்கு கொடுக்கும் வாக்குகளை யார் நிறைவேற்றுகின்றார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்கள் கருத்துக்கு யார் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * வார்த்தை, செயல் மாறாது இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்கள் பேச்சை யார் முழு கவனத்துடன் கேட்கின்றார்களோ. அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்கள் நியாயமான கனவு, லட்சியங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களை ஊக்கப்படுத்துபவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுடன் உபயோகமாக முன்னேற்றமான வழியில் நேரம் செலவழிப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * தவறு செய்து விட்டால் மன்னிப்பு கேட்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுக்குரிய எல்லைகளில் தலையீடு செய்யாதவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுடன் மனம் விட்டு உண்மையாய் பேசுபவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுடன் இருக்கும் பொழுது மகிழ்ச்சியாய் இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    இப்படிப்பட்டவர்கள் 99 சதவீதம் உங்கள் பெற்றோர்கள்தான். அவர்களை எந்நாளும் எந்த நேரத்திலும் கைவிடக்கூடாது.

    இப்படிப்பட்ட பல பெற்றோர்கள் இன்று பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகி நோய் வாய்பட்டு காலம் தள்ளுகின்றனர். இவர்கள் இனியாவது அவர்கள் பிள்ளைகளால் நன்கு கவனிக்கப்பட வேண்டும்.

    குடும்ப மருத்துவர்

    சிலரின் ஒரு பொதுவான குறை என்ன வென்றால் ஒரு சின்ன உடல்நல கோளாறு என்றாலும் நிறைய பரிசோதனைகள் செய்து செலவு வைத்து விடுகின்றார்கள் என்பதுதான். சில சின்ன அறிகுறிகள் உடனடியாக கவனிக்கப் படாவிட்டால் ஆபத்தில் கூட கொண்டு விடலாம். இதுவும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது. ஆகவேதான் 'குடும்ப மருத்துவர்' என்று இருந்தால் உங்களுக்கு அநேக நன்மைகள் நடக்கும். அவருக்கு உங்கள் உடல் ஆரோக்கியம், பாதிப்பு என்பது நன்கு தெரியும்.

    அமைதியாய் சிறு அறிகுறிகளுடன் ஒருவரைத் தாக்கும் பெரிய பாதிப்புகளை பாருங்கள்.

    'மாரடைப்பு' - இது முதியோர்கள், பெண்கள், சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களுக்கு ஏற்படும். இதன் அறிகுறிகள் சில நேரங்களில் ஜீரண கோளாறு, சோர்வு என்று சிறிதாக தெரியும். இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்களே கவனமின்றி இருந்து விடலாம். ஆனால் சிறுவேலை செய்தாலும் அதிக சோர்வு, ஓய்வில் கூட மூச்சு வாங்குதல், வயிற்றுவலி, வயிற்று பிரட்டல், ஜீரணமின்மை, தலைசுற்றல், தூக்கமின்மை, சர்க்கரை நோய் பாதிப்பு என இருந்தால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள்.

    * அடிக்கடி கிருமி, பூஞ்சை பாதிப்பு. கை, கால்களில் குறுகுறுப்பு இவை இருந்தால் உங்கள் டாக்டர் சர்க்கரைநோய் பரிசோதனையை செய்வார்.

    * உடல் சதா அரிப்பு, வறண்ட சருமம், கால், கணுக்கால் வீக்கம், கண்ணை சுற்றிய உப்பிசம், நுரைத்த சிறுநீர், பசியின்மை போன்றவை இருந்தால் சிறுநீரக பரிசோதனை செய்யப்படும்.

    மேலும் சில பாதிப்புகளை குறிப்பிடலாம். ஆனால் அது அச்சத்தினை தரக் கூடாது என்பதற்காக எந்த சிறு அறிகுறியினையும் அலட்சியம் செய்யாது குடும்ப மருத்துவரை அணுகுங்கள் என்று வலியுறுத்தப்படுகின்றது.

    இவைகளை நாம் அன்றாட உணவில் அடிக்கடி பயன்படுத்துகின்றோமா?

    முட்டை: இன்று அசைவ உணவு உண்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்ணும் பலரும் உணவில் இதனை சேர்த்துக் கொள்கின்றனர்.

    சிறந்த புரத சத்து கொண்டது. இதன் மஞ்சள் கருவில் உள்ள சத்து கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. எடை குறைக்க விரும்புபவர்களுக்குக் கூட இது பரிந்துரைக்கப்படுகின்றது.

    பருப்பு வகைகள்: புரதம், நார்சத்து, போலேட், இரும்புசத்து கொண்டது. செரிமானம் எளிதானது. சுண்டல் வகைகள் எளிதாக சமைக்க முடியும். வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அவசியமானது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இருதயம், ரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுவது.

    புரோகலி: வைட்டமின் 'சி', 'கே' சத்து நிறைந்தது. நார் சத்து கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

    பூண்டு: இது நம் நாட்டு சமையல் முறையில் அதிகம் சேர்க்கப்படுவது மிக நல்ல செயல். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். கெட்ட கொழுப்பு கட்டுப்படும். இருதய ஆரோக்கியம் கூடும். கிருமிகள் அழியும்.

    வால்நட்: தினமும் இதனை 2 அல்லது 3 உண்பது மிகச் சிறந்தது. சில சில மாறுதல்கள் உணவில் ஏற்படும் பொழுது சிறந்த நன்மைகள் கூடும்.

    • வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
    • இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது.

    நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பாலும் பருகி வரலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

    வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

    அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.

    • ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை.
    • கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

    டீ, காபியுடன் பால் கலந்து பருகும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். பாலை தவிர்த்து பிளாக் டீ, பிளாக் காபி என்ற கருப்பு நிற பானம் பருகுபவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த கருப்பு பானம் ஆரோக்கியமானது என்று பார்ப்போம்.

    கருப்பு காபி (பிளாக் காபி):

    கருப்பு காபியை அதிகம் விரும்புபவர்கள் உடற்பயிற்சி ஆர்வலர்களாகத்தான் இருக்கிறார்கள். ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு ஒரு கப் காபி பருகுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. காபியில் உள்ளடங்கி இருக்கும் அதிக காபின் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    மேலும் கருப்பு காபியில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பல்வேறு வகையான ஆன்டி ஆக்சிடென்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை. சர்வதேச தொற்றுநோயியல் ஆய்விதழில், 'கருப்பு காபி' குடிப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காபியில் இருக்கும் அதிக காபின் சிலருக்கு நடுக்கம், பதற்றம் அல்லது தூக்க கோளாறு பிரச்சினையை ஏற்படுத்தும். அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் வயிற்று அசவுகரியத்தை உண்டாக்கும். கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

    கருப்பு தேநீர் (பிளாக் டீ):

    கருப்பு காபி, கருப்பு தேநீர் இரண்டுமே ஒரே மாதிரியானவை என்றாலும் பிளாக் டீயில் காபின் குறைவாக இருக்கும். அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது. இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

    ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கருப்பு தேநீரை தொடர்ந்து பருகுபவர்களால் கூடுதலாக உடல் எடையை குறைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் பருகுவதற்கு ஏற்ற பானமாக கருப்பு தேநீர் விளங்குகிறது. ஒரு கப் கருப்பு தேநீரில் 2 கலோரிகளே உள்ளது குறிப்பிடத்தக்கது. வயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்க கருப்பு டீ சிறந்த தேர்வாகும்.

    எது சிறந்தது?

    இரண்டு பானங்களையும் மிதமாக பருகினால் ஆரோக்கியமானவை. உடல் இயக்க செயல்பாடு மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு எந்த பானத்தை தேர்வு செய்வது என்று முடிவு செய்யலாம். குறிப்பாக காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருப்பவர்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலை பெறவும் கருப்பு காபியை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

    சின்ன விஷயத்திற்கும் சட்டென்று பதற்றம் கொள்பவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு காபியை தவிர்க்க வேண்டும். மேலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் கருப்பு காபி பருகக்கூடாது. ஏனெனில் அது தூக்கத்தை பாதிக்கும். காபின் அதிகமாக உட்கொள்ள விரும்பவில்லை என்றால் கருப்பு தேநீர் சிறந்த தேர்வாக அமையும்.

    • குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
    • வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம்.

    டிசம்பர் மாதத்தில்தான் பொதுவாக குளிர்காலம் தொடங்கும் என்றாலும், பருவமழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்ந்த காற்று வீசக்கூடும். அதனால் இந்த காலகட்டங்களில் நாம் பாதுகாப்பாக இருப்பது நல்லது. குறிப்பாக முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் காது வலி அடிக்கடி ஏற்படும். குளிர்காலத்தின் போது ஏற்படும் காது வலி இயல்பானது என பலர் நினைக்கின்றனர். ஆனால் உரிய நேரத்தில் கவனிக்கத் தவறினால், காதில் ஏற்படும் வலி அதிகரித்து பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குளிர்காலத்தில் ஏன் காது வலி ஏற்படுகிறது? இதை சமாளிப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்.

    சளி, மூக்கடைப்பு பிரச்சனையால் காது வலி வருமா?

    குளிர்காலத்தின் போது காற்றில் வழக்கத்தை விட அதிகமாக தூசு நிறைந்து இருக்கும். இதன் காரணமாக சுவாசிக்கும் காற்று மூக்கு வழியாக நுழையும் போது அலர்ஜி ஏற்படுகிறது. குறிப்பாக சளி தொந்தரவு இருக்கும் நபர்களுக்கு யூஸ்டேஷியன் குழாயினுள் தூசு நுழைவதன் காரணமாக காது வலி இயல்பாகவே ஏற்படுகிறது. காதில் ஏற்படும் இந்த வலியின் காரணமாக முகத்துடன் இணைந்துள்ள நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த நரம்பின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக முகத்தில் உள்ள தசைகளின் செயல்பாடும் முடங்கிப்போய்விடுகிறது. இது 'பெல்ஸ் பாலஸி' என்று அழைக்கப்படுகிறது.

    குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம். குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்று உள் நுழையும்போது மூக்குக்கு உள்ளே இருக்கும் சதைகள் வீங்கும். இதனால் அவர்களுக்கு காது வலி, தலை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.



    காது வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

    வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம். அது குளிர் காற்று காதுக்குள் செல்வதைத் தடுக்க உதவும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது காதையும், மூக்கையும் சேர்த்து மூடும் வகையில் 'ஸ்கார்ப்' அணிந்து கொள்ளலாம்.

    குளிர் காற்று காரணமாக ஏற்படும் காது வலிக்கு நீராவி பிடிப்பது நல்லது. அப்போது மூக்கினுள் ஈரப்பதம் நிறைந்த சூடான காற்று சென்று நிவாரணம் தேடித்தரும். அதன் பிறகும் காது வலி இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

    எதனால் ஏற்படுகிறது?

    நமது மூக்கையும், காதையும் இணைக்கும் ஒரு குழாய்தான் குளிர்காலத்தில் ஏற்படும் காது வலிக்கு முக்கிய காரணம். யூஸ்டேஷியன் குழாய் என்று அழைக்கப்படும் இந்தக் குழாய், குளிர்காலத்தின் போது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்றின் காரணமாக மூடிக்கொள்கிறது. இந்தக்குழாய் மூடுவதன் விளைவாக, காது சவ்வுகள் இறுக்கமாகி காது வலி உண்டாகிறது.

    • ரசாயனப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவது ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவிற்கு நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    • சுத்தம் செய்யும்போது வெளியாகும் புகை மற்றும் துகள்கள் சுவாச பாதைகளை சேதப்படுத்தி நுரையீரலுக்கு பங்கம் விளைவிக்கின்றன.

    வீட்டை சுத்தம் செய்வதற்கு ஸ்ப்ரேக்கள் மற்றும் ரசாயனப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவது ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவிற்கு நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    குறிப்பாக தொடர்ந்து வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு காலப்போக்கில் நுரையீரல் செயல்பாடு பாதிப்புக்குள்ளாவதையும் நார்வே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    சுத்தம் செய்யும்போது வெளியாகும் புகை மற்றும் துகள்கள் சுவாச பாதைகளை சேதப்படுத்தி நுரையீரலுக்கு பங்கம் விளைவிக்கின்றன. எனவே நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க ரசாயன கலப்பில்லாத இயற்கை பொருட்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர்.

    • வாரத்திற்கு மூன்றுமுறையாவது பீட்ரூட் எடுத்துக்கொள்ளுங்கள்.
    • பீட்ரூட் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    நாம் சுவைக்காகவே பெரும்பாலும் நிறைய காய்கறிகளை எடுத்துக்கொள்வோம். அதுவும் சைடிஸ் இல்லாமல் சாதம் இறங்காது என்பதற்காகத்தான், எதாவது ஒரு பொரியலை சாப்பிடுவோம். அப்படி நாம் சாப்பிடக்கூடிய பொரியல்களில் ஒன்றுதான் பீட்ருட். பலரும் அதிகமாக உருளைக்கிழங்குதான் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பீட்ரூட்டின் ஊட்டச்சத்து நன்மைகளை நீங்கள் அறிந்தால் தினசரியாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிடுவீர்கள். பீட்ரூட்டின் ஆரோக்கிய நன்மைகளை காண்போம். 

    இரத்த அழுத்த மேலாண்மை

    பீட்ரூட்டில் அதிகளவு நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகின்றன. நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களைத் தளர்த்தி, விரிவுபடுத்தும். மேலும் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது.

    செரிமானம்

    ஒரு கப் பச்சை பீட்ரூட் 3.81 கிராம் நார்ச்சத்தை உடலுக்கு வழங்குகிறது. இது தினசரி மதிப்பில் (DV) சுமார் 13.61% ஆகும். நார்ச்சத்து என்பது செரிமானத்தை ஆதரிக்க உதவும் ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இது குடல் இயக்கத்தை சீராக, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது உதவுகிறது. மேலும் நீண்டநேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை தருகிறது.

    ஆக்ஸிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள்

    பீட்ரூட்டில் அதிகளவு பெட்டாலைன் உள்ளது. இது சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட ஒரு சேர்மமாகும். ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து காக்க உதவுகிறது. 

    இதய ஆரோக்கியம்

    பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, இதில் உள்ள பீட்டெய்ன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது.

    பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இதில் உள்ள பீட்டீன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது. 


    பீட்ரூட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

    மூளை ஆரோக்கியம்

    பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வயதாகும்போது இரத்த ஓட்டம் இயற்கையாகவே குறையத்தொடங்கும். நைட்ரிக் ஆக்சைடு மூளையில் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இதனால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது. 

    கல்லீரல் ஆரோக்கியம்

    கல்லீரல் இரத்தத்தை வடிகட்டுதல், நச்சு நீக்குதல், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்தல் என உடலின் பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. பீட்ரூட்டில் உள்ள பீட்டெய்ன், கல்லீரலில் கொழுப்பு படிவதைக் குறைத்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். கல்லீரல் தொடர்பான பிற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.  

    ஒரு கப் பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துகள்

    கலோரிகள் 58, கொழுப்பு 0.231 கிராம் , சோடியம் 78 மிகி, கார்போஹைட்ரேட்டுகள் 13 கிராம், நார்ச்சத்து 3.81 கிராம், புரதம் 2.19 கிராம் உள்ளது. மேலும் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பொட்டாசியம் இதயம், தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. ஃபோலேட் திசு வளர்ச்சி மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தியை ஆதரிக்கும் ஒரு பி வைட்டமின் ஆகும். வைட்டமின் சி தோல், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 

    • அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.
    • யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்.

    நான், என் முகம், என் சருமம் பார்ப்பதற்கு அழகாக, பொலிவாக தெரியவேண்டும் என பலரும் நினைப்போம். இதற்கு பொருட்செலவு, பணச்செலவு, நேரச்செலவு என அனைத்தையும் செய்வோம். ஆனால் எதற்கு இவ்வளவு மெனக்கெடல்கள்? பொருட்செலவு? பணச்செலவு? நம் முகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதுதான் உண்மையான அழகா? உண்மையில் எது அழகு? பார்ப்போம்.

    "அழகு என்பது ஒருவரின் பார்வையில்தான் உள்ளது". ஆம், நாம் பலமுறை புத்தகங்களில் அல்லது பேச்சாளர்களால் அல்லது ஏதோ ஒருவகையில் கேள்விப்பட்டிருக்கும் இந்த சொற்றொடர் உண்மையில் அழகு என்பது நாம் ஒருவரை பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. ஒருவரை அப்படியே அவராகவே ஏற்றுக்கொள்வதில்தான் உள்ளது. இந்த சமூகத்தில் அழகு என்றால் அளவு உள்ளது. அதாவது முகம் உட்பட உதடு, மூக்கு, உடல்வாகு என அனைத்திற்கும் ஒரு அளவு உள்ளது. அது இந்த அளவில் இருந்தால்தான் அழகு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நிறமும். தமிழர்களின் நிறமே, ஏன் இந்தியர்களின் நிறமே கருப்புதான் எனக்கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கே வெள்ளையாக வேண்டும் என்பதுதான் ஆசை. வெள்ளையாக இருப்பதுதான் இங்கு அழகு. அழகென்றால் இப்படித்தான் இருக்கும் என ஒரு இலக்கணம் இந்த சமூகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த இலக்கணத்தை தாண்டிய அழகு எது? இந்த கேள்வியை ஒரு  10 பொதுமக்களிடம் முன்வைத்தால், அவர்கள் அனைவரிடத்திலும் இருந்து பத்து பதில்கள் வரும். 

    ஒவ்வொரு பதிலும் ஒவ்வொன்றாக இருக்கும்போது அவர்களின் புரிதல்கள், பார்வைகள் வேறுபட்டது என்பது நமக்குத் தெரியும். ஆம், உண்மையில் அனைவரின் பார்வையும் வேறுபட்டது. எல்லோருடைய கண்களுக்கும் நாம் அழகாக தெரிவோமா என்றால் இல்லை. சமூகத்தின் அழகு இலக்கண வரையறைப்படி இருக்கும் ஒருவரை அனைவருக்கும் பிடிக்காது. அந்த இலக்கணத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்தான் அவர்களை பிடிக்கும். அப்போது எப்படி நம்மை பிடிக்கும்? எதனால் நம்மை பிடிக்கும்? எதுதான் அழகு?


    குழந்தைகளின் புன்னகையும் ஒரு அழகுதான்

    உலகில் படைக்கப்பட்ட அனைத்துமே அழகுதான். நான், நீங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்கள், எழில் கொஞ்சும் இயற்கை வளம், தெரியாதோரின் கருணை, காரணமே இன்றி அழுத்தத்தில் சாலையில் தனியாக நடந்து செல்லும் நம் மனதை புன்னகைக்க வைக்கும் குழந்தை, என்றோ ஓர்நாள் தடவியதற்காக பார்க்கும்போதெல்லாம் வாலாட்டும் நாய்க்குட்டி, பாதையை அறிந்து பயணம் செய்யும் நமக்கு பயணத்தின்போது வழிசொல்லி "பத்திரமாக செல்" எனக்கூறும் யாரென்றே தெரியாத நரைவிழுந்த மூதாட்டி, அம்மாவின் தலையில் இருக்கும் கனகாம்பரம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும்தான் அழகு. ஆறுதல் தரும் அன்பை உமிழும் அனைவருமே அழகானவர்கள்தான். அவர்களின் வார்த்தைகள்தான் அழகானவை. அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.

    யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள். பிடித்த பெண்கள் அனைவரும் ஆண்களின் கண்களுக்கு தேவதைதான். பிடித்த ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு இளமாறன்தான். மொத்தமாக அகமும், அகத்தின்வழி நாம் ஒருவருக்கு அளிக்கும் புன்னகையும்தான் உண்மையான அழகு. இறுதியாக, நீங்கள் அழகாக தெரியவேண்டும் என்றால் எதுவும் செய்யவேண்டாம், புன்னகையை மற்றவருக்கு பரிசளியுங்கள். 

    • பாஞ்சாலி, தனது கணவர்கள் பேச்சை கேட்டதில்லை. தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தவர்.
    • சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான்.

    கணவனா? தோழனா? என்னும் நம் தலைப்பிலேயே எவ்வளவு அர்த்தங்கள், பொருட்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான பெண்களிடம் உங்கள் கணவரா? தோழரா? எனக்கேட்டால், தோழரையே சொல்வார்கள். ஏன் மகாபாரத நாயகி திரௌபதியை கேட்டிருந்தால்கூட தனது தோழர் கிருஷ்ணனைத்தான் கூறியிருப்பார். " ஐந்து ஆண்களுக்கு மனைவியான பாஞ்சாலி தனது கணவர்கள் எவரின் பேச்சையும் கேட்டதில்லை, தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்கவில்லை. நடந்தவர்" என பலரும் சொல்வதே அந்த பதிலுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த பதிலுக்கான உண்மையான காரணம் என்ன?

    குந்தியின் சொல்லோ, அல்லது முன்ஜென்ம வரமோ ஏதோ ஒரு காரணத்தால் திரௌபதி ஐந்து கணவர்களை ஏற்க வேண்டிய சூழல். ஏற்றாள். ஐந்து கணவர்கள் இருந்தும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது யார்? அவளது தோழன் கிருஷ்ணன்தானே. எப்போதெல்லாம் அவள் மனம் குழப்பத்தில் ஆழ்கிறதோ, எப்போதெல்லாம் அவள் இடரை அனுபவிக்கிறாளோ அப்போதெல்லாம் உறுதுணையாக இருந்து தோள் கொடுத்தவன் கண்ணன் ஒருவன்தானே. தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடியவர்களா? இல்லை சபையில் தனது துயில் உரியபோது துணி கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றியவனா? யாரைச் சொல்வாள்?

    தர்மத்தில் சிறந்தவன் யுதிர்ஷ்டன். பலத்தில் சிறந்தவன் பீமன். வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன். திரௌபதியால் முதலில் மாலை சூட்டப்பட்ட, முதலில் நேசிக்கப்பட்ட கணவன். குதிரைகள் பற்றிய அறிவிலும், அழகிலும் சிறந்து விளங்கியவன் நகுலன். திரௌபதி துயில் உரியப்படுவது உட்பட முக்காலத்தையும் முன்னரே அறிந்தவன் சகாதேவன். இப்படி உலகில் சிறந்திருந்த இவர்களின் தர்மமோ, அறமோ, திறனோ, எதுவாலும் திரௌபதி துயில் உரியப்படுவதை தடுக்க முடியவில்லை. தடுக்கவில்லை. அத்தனை பலம் கொண்ட பீமன், வில்வித்தையில் சிறந்த அர்ஜூனன், ஞானத்திலும், வீரத்திலும், தர்மத்திலும் சிறந்திருந்த பீஷ்மர் உட்பட அரங்கில் சில தர்மர்கள் நினைத்திருந்தால், தடுத்திருந்தால் திரௌபதி அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டாள். தன்னை அர்ப்பணித்த கணவன்மார்களே உதவாதபோது, கையில் சிறிது காயம் பட்டபோது தனது உடையை கிழித்து கண்ணனுக்கு கட்டியதை நினைவுகூர்ந்து, துணியை விட்டு மானம் காத்தான் கிருஷ்ணன். இதில் யார் சிறந்தவர்கள்? யார் திரௌபதி மீது உண்மையான பாசமும், அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர்கள்? நட்பின் அடிப்படையில் வந்த ஒருவர் தனக்காக இவ்வளவு செய்யும்போது, காதல், திருமணப் பந்தம் மூலம் வந்த கணவர்கள் பயனற்றதாக இருந்தது ஏன்?


    திரௌபதிக்கு கண்ணன் உதவும் காட்சி

    இந்த பாண்டவர்களைப் போல பல கணவர்மார்கள் உள்ளனர். எப்போது தனது துணைக்கு தேவையோ அப்போது உதவமாட்டார்கள். சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான். அப்படி இருந்தால்தான் அந்த உறவு சிறக்கும். தோழன் கணவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கணவன் கண்டிப்பாக தோழனாக மாறமுடியும். பெண்களின் பதிலுக்கும் இதுதான் காரணம். தன் உணர்வுகளை மதிக்கும் ஒருவரையே பெண் தேர்ந்தெடுப்பாள். 

    • குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது!
    • எடை இழப்பு மற்றும் எடை அதிகரித்தலுக்கு குடல் புழுக்கள் ஒரு காரணியாக உள்ளன.

    "தம்பிக்கு, பாப்பாவுக்கு நாக்குப்பூச்சி மாத்திரை கொடுக்கணும். இந்த மாசம் நிறைய சாக்லேட் சாப்பிட்டா. வயித்துல புழு இருக்கும்" என நம்மை சுற்றி இருக்கும் சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என சிறுவயது குழந்தைகளின் பெற்றோர் கூற கேட்டிருப்போம். குழந்தைகளுக்கு குடலில் எளிதாக புழுக்கள் உருவாகும். அதனால் அவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் கொடுப்பார்கள். ஆனால் அதை கேட்கும், பார்க்கும் நாம் என்றாவது குடல்புழு மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளோமா? குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது. குடல் புழுக்களால் பெரியவர்களுக்கும் ஆபத்து உள்ளது. நமது குடலில் புழுக்கள் உள்ளன என்பதை எவ்வாறு கண்டறியலாம். அதற்கான அறிகுறிகளை இங்கு காணலாம்.  

    அதிகப்படியான பசி

    நாம் வேளை வேளைக்கு சரியாக உணவு எடுத்துக்கொண்டாலும், அடிக்கடி பசி எடுக்கும். குடல் ஒட்டுண்ணிகள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் பாதிப்படையும். உதாரணமாக அஸ்காரியாசிஸ் போன்ற புழுக்கள் உடலில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்துகள் உறியப்படும்போது நமக்கு அடிக்கடி பசி எடுக்கும். நாம் இடையில் நொறுக்குத்தீணிகள் எடுத்துக்கொண்டாலும் பசி அடங்கவில்லை என்றால் கண்டிப்பாக குடல் புழுக்களுக்கான அபாயம் உள்ளது. 

    பருக்கள், தோல் பிரச்சனைகள்

    தோல் வெடிப்புகள், புதிய தடிப்புகள் அல்லது அரிப்பு புள்ளிகள் போன்ற தோல் பிரச்சனைகள் பொதுவாக உணவு, ஹார்மோன்கள் அல்லது மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன. ஆனால் சில புழு தொற்றுகளும் தோலில் தடிப்புகள் அல்லது புண்கள் போன்ற வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன. உதாரணமாக, தோல் லார்வா மைக்ரான்ஸ் (கொக்கிப்புழு லார்வாக்களால் ஏற்படுகிறது) தோலில் ஊடுருவி அரிப்பு மற்றும் சிவப்பு நிற வெடிப்புகளை உருவாக்குகிறது. இவை வெளிப்புற பாதிப்புகள் என்றால், குடல் புழுக்கள் ஊட்டச்சத்து குறைபாடு, நோயெதிர்ப்பு மண்டல மாற்றங்கள் அல்லது வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் போன்ற இரண்டாம் நிலை ஏற்றத்தாழ்வுகள் மூலம் சருமத்தை பாதிக்கும். இது பருக்கள் மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகளை காட்டும்.

    எடை மாற்றம்

    குடல் புழு தொற்று இருப்பதற்கான வழக்கமான அறிகுறிகள், வயிற்று வலி, வீக்கம், வாயு, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். பெரியவர்களுக்கு இந்த அறிகுறிகள் சற்று மாறுபடும். லேசான அசௌகரியம், வாயு பிரச்சனைகள், வீக்கம், எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு இருக்கும்.


    பெரியவர்களும் குடல் புழு மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அவசியமானது 

    அரிப்பு

    என்டோரோபயாசிஸ் போன்ற நூல் புழுக்கள், அதாவது அதன் பெண் புழுக்கள் இரவில் குடலை விட்டு வெளியே வந்து ஆசனவாயைச் சுற்றியுள்ள தோலில் முட்டையிடுவதால், கடுமையான அரிப்பு மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது. பெரும்பாலும் பெரியவர்கள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கின்றனர். அதாவது வெறும் எரிச்சல், அவ்வளவு பெரிய விஷயமல்ல என்று நினைத்து இந்த தொற்றுகளை கண்டுகொள்வதில்லை.

    சோர்வு, இரும்புச்சத்து குறைபாடு

    புழுக்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை உண்ணும்போது, நமது உடல் போதுமான இரும்பு, புரதங்கள் அல்லது பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பெறும் வாய்ப்புகளை இழக்கிறது. இது சோர்வு, சிலநேரங்களில் ரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். ஒருவருக்கு காரணமில்லாமல் தொடர்ச்சியாக சோர்வு இருந்தால் கண்டிப்பாக குடல்புழுக்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டு, உங்களுக்கு குடல் புழுக்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், இரப்பை குடல் நிபுணரிடம் உங்கள் உடலில் தென்படும் அறிகுறிகளைக் கூறி ஆலோசனை பெறுங்கள்.  

    • பாதாமை அப்படியே எடுத்துக்கொள்வதை விட ஊறவைத்து எடுத்துக்கொள்வது இன்னும் ஆரோக்கியமானது.
    • ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம்.

    உணவை தாண்டி உடல் ஆரோக்கியத்திற்காக பழங்கள், விதைகள், கொட்டைகள் போன்றவற்றையும் நாம் எடுத்துக்கொள்வோம். அந்த வகையில் நம்மில் பலரும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் பாதாம். பலரும் இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரியாமலேயே சாப்பிடுவர். ஆனால் இது உடலுக்கு பயக்கும் சில நன்மைகளை நாம் அறிந்தால் கண்டிப்பாக தினசரி உணவின் ஒரு பகுதியாகவே மாற்றிவிடுவோம். அப்படி என்ன நன்மைகளை கொண்டுள்ளது பாதாம், பார்ப்போம்.

    ஆக்ஸிஜனேற்றிகள்

    பாதாமில் வைட்டமின் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஈ ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து காக்கிறது. வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. மேலும் அல்சைமர் உள்ளிட்ட நரம்பியல் சிதைவுகளை எதிர்த்து போராடுகிறது. பாதாமில் இயற்கையான ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உட்பட பல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மைகள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    ஊட்டச்சத்துகள்

    பாதாம் பருப்பு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இந்த கொட்டைகள் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் சிறந்த ஆதாரங்களாகும். நிறைவுறா கொழுப்புகள் எல்டிஎல் கொழுப்பை (low-density lipoprotein) குறைக்க உதவும். மெக்னீசியம் பாதாமில் அதிக அளவில் காணப்படும் மற்றொரு ஊட்டச்சத்து ஆகும். மெக்னீசியம் நரம்பு மற்றும் தசை செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது, இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கிறது மற்றும் எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஆதரிக்கிறது. 

    குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

    பாதாம் பருப்பு குடல் பாக்டீரியாக்கள் நன்றாக செயல்பட உதவுகிறது. 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாதாம் சாப்பிடுபவர்களுக்கு, சாப்பிடாதவர்களை விட அதிக ப்யூட்ரேட் இருப்பது கண்டறியப்பட்டது. இது குடல் பாக்டீரியாக்கள் நன்கு செயல்படுவதைக் குறிக்கிறது. ப்யூட்ரேட் என்பது குடல் நுண்ணுயிரிகளால், செரிக்க முடியாத உணவு நார்ச்சத்தை பதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு கொழுப்பு அமிலமாகும். பாதாம் மற்றும் பாதாம் தோல் ஆகியவை ப்ரீபயாடிக்குகளாகக் கருதப்படுகின்றன. காரணம் இவை குடல் பாக்டீரியாக்கள் செழித்து வளர உதவுகின்றன. குடல் பாக்டீரியாக்கள் செழித்து வளரும்போது, அவை அதிக ப்யூட்ரேட்டை உற்பத்தி செய்கின்றன. ப்யூட்ரேட் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. சில வளர்சிதை மாற்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.   


    உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் பாதாம் எடுத்துக்கொள்ளலாம்

    இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

    பாதாம் பருப்பு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் வாஸ்குலர் அமைப்பு உட்பட உடல் உறுப்புகளில் ஏற்படும் கூடுதல் அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், தமனி விறைப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. கொட்டை வகைகள் நல்ல கொழுப்பை ஆதரிக்க உதவுகின்றன. அதிக கொழுப்பு உள்ளவர்கள் பாதாமை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. 

    எடைக்குறைப்பு

    எடைக் குறைக்க விரும்புவர்கள் பாதாமை எடுத்துக்கொள்ளலாம். பாதாம் பசியை அடக்க உதவுகிறது. பாதாம் பருப்பு உடல் நிறை குறியீட்டெண் (BMI), இடுப்பு சுற்றளவு மற்றும் வயிற்றுப் பகுதி கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.   

    தோல் ஆரோக்கியம்

    மாதாவிடாய் பிரச்சனைகள் இருப்பவர்கள் பாதாம் எடுத்துக்கொள்ளலாம். மற்ற கொட்டைகளுடன் ஒப்பிடும்போது, பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், மெக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.  

    • காதல் மொழிகள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள்.
    • தொடுதல் மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஒன்று.

    காதல் ஒருவரை பைத்தியமாக்கும் எனக்கூறுவார்கள். அதற்கு காரணம் காதல் வந்தால் தனிமையில் சிரிப்பார்கள், கூட்டத்தின் மத்தியிலும் தனியாக உணர்வார்கள், ஏதோ ஒரு யோசனையிலேயே இருப்பார்களாம். அதாவது மற்றவர்கள் கூறுவதை செவிகொடுத்து கேட்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் அப்படி கூறுவார்களாம். இப்படிப்பட்ட இந்த காதலுக்கு 5 மொழிகள் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தமிழும், ஆங்கிலமும்தான். அதென்ன 5 மொழிகள் என பலரும் ஆச்சர்யப்படலாம். ஆம் காதலில் 5 மொழிகள் உள்ளனவாம். அதாவது காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள். காதலில் இந்த மொழிகளைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள். 

    வார்த்தை

    நமது காதலரிடமோ அல்லது நமக்கு பிடித்தவர்களிடமோ வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துதல். நீ அழகாக இருக்கிறாய் எனக்கூறுதல், அவர்களை புகழ்தல், பாராட்டுதல், ஊக்குவித்தல், நான் இருக்கிறேன் என தைரியம் கொடுத்தல் போன்ற அனைத்தும் காதலின் முதல் மொழியாகும். இப்படி செய்யும்போது உண்மையில் உங்கள் அன்புக்குரியவர்கள் உள்ளிருந்து மகிழ்ச்சியடைவார்கள். ஒரு உறவு நீடிக்க தொடர்பு (communication) மிகவும் அவசியமானது. பல உறவுகளுக்கிடையே பேச்சு இல்லாததே அதன் பிரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 

    நேரம்

    பலரும் தங்கள் துணையோடு நேரம் செலவிட விரும்புவர். பல திருமணங்கள் முடிவுக்கு வரக்காரணமே நேரம் ஒதுக்காமைதான். வேலை, வீடு என சாக்குப்போக்கு கூறாமல் உங்கள் துணைக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் விரும்புவது அதைத்தான். நேரம் பொன் போன்றது எனக்கூறுவார்கள். நேரத்தை கொடுக்காமல், நீங்கள் பொன்னையே கொடுத்தாலும் அதை பலரும் ஏற்கமாட்டார்கள். 

    தொடுதல்

    தொடுதல் என்பது உடலுறவை குறிப்பது அல்ல. தொடுதல் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அது காதலரைத்தான் தொடவேண்டும் என்றல்ல. உங்கள் நாய்க்குட்டியை கட்டியணைக்கலாம். நண்பர்களை ஆரத்தழுவலாம். தழுவுதல் மனித வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தரும். அதுபோல காதலில் ஒருவரின் கையை ஒருவர் பிடித்து நடப்பது போன்றவை பெண்கள் அதிகம் விரும்பும் ஒன்றாகும். பெண்களின் நகங்களை பிடித்து அவர்களுக்கு நெய்ல்பாலிஷ் போடலாம், மருதாணி போடலாம். அதுபோல பெண்களும் ஆண்களின் கையை பிடித்து அவர்களுக்கு ஆறுதல் கூறலாம். அன்பாக பேசலாம். இந்த தொடுதல் பலருக்கும் பல மனநன்மைகளை தருகிறது. 


    எந்த வழியாக, மொழியாக இருந்தாலும் காதலை வெளிப்படுத்துங்கள்

    துணைக்கு சேவை

    சொல்லைவிட செயலில்தான் ஒருவரின் காதல் வெளிப்படும். உங்களின் காதல் செயல்களாக இருந்தால், நீங்கள் அவர்களுக்காகச் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட அவர்கள் பெரிதாக எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். அதாவது வீட்டில் அதிக வேலை இருந்தால், உங்கள் துணைக்கு ஆதரவாக பாத்திரங்களை சுத்தம் செய்யுதல், வீட்டை பெருக்குதல், குழந்தைகளை கவனித்தல், காதலர்கள் அலுவலக வேலைகளில் உதவுதல் என சின்ன சின்ன உதவிகளை செய்தாலே போதும்.

    பரிசு

    உங்கள் அன்பை பரிசுகள் மூலம் வெளிப்படுத்தலாம். அந்தப் பரிசின் அளவு முக்கியமல்ல, ஆனந்தம்தான் முக்கியம். பெண்கள் பரிசு கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற எண்ணம் பொதுவாகவே ஆண்களிடம் உள்ளது. ஆனால் அது பரிசுக்கான ஆனந்தமோ, மகிழ்ச்சியோ கிடையாது. பரிசு வாங்க அவர்கள் செலவிடும் நேரமும், அவர்களின் அந்த முயற்சியும் ஈர்க்கிறது, மகிழ்விக்கிறது. நமக்காக யோசித்து செய்கிறார்கள் என ஒரு ஆனந்தம். நாம் நேசிக்கும் ஒருவர் கொடுக்கும் பரிசுகள் பொக்கிஷமானவை.  

    இவை மட்டும்தான் காதல்மொழியா?

    இவை மட்டும்தான் காதலை வெளிப்படுத்துவதற்கான வழிகள் என்று இல்லை. அன்பை வெளிப்படுத்தவும், பெறவும் பல்வேறு வழிகள் உள்ளன. இவை அன்பை கட்டமைக்கக்கூடிய சில வழிகளே. வெளிப்படுத்தப்படாமலும் பல காதல்கள் இங்கு வாழ்கின்றன. ஆனால் சொல்லாமல் இருந்தால், அவர்கள் மீதான உங்கள் அன்பு எப்படி அவர்களுக்கு தெரியும்? ஆகையால் உங்கள் காதலை எந்த வழியாக இருந்தாலும் அந்த காதலின்வழி வெளிப்படுத்துங்கள். 

    • குழந்தைகளின் அழுகை "எனக்கு நீ தேவை!" என்பதற்கான சமிக்ஞையாகும்.
    • குழந்தை எழுப்பும் வெவ்வேறு விதமான சத்தங்களையும், அழுகைகளையும் புரிந்துகொள்ள நாளாகும்.

    புதிதாக பெற்றோரான சிலருக்கு ஆரம்பத்தில் குழந்தை எழுப்பும் வெவ்வேறு விதமான சத்தங்களையும், அழுகைகளையும் புரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள சிறிது நாட்கள் எடுக்கும். நாட்கள் செல்ல செல்ல குழந்தை எதற்காக அழுகிறது என்று நீங்களே தெரிந்துகொள்வீர்கள். ஆனால் ஆரம்பத்தில் குழந்தைகளை கையாள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். குழந்தைகளின் அழுகை "எனக்கு நீ தேவை!" என்பதற்கான சமிக்ஞையாகும். உங்கள் குழந்தை ஏன் அழுகிறது என்பதையும், அவர்களை அமைதிப்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.  

    குழந்தைகள் அழுவதற்கான சில காரணங்கள்

    • பசி
    • காற்று புகுதல்
    • அசௌகரியம்
    • சோர்வு
    • கோலிக் (குழந்தைகள் பொதுவாக ஒருநாளைக்கு 3 மணிநேரத்திற்கும் மேலாக அழுவது - உடல்நல பாதிப்புகளை குறிக்காது)
    • உடல்நிலை சரியில்லாமல் இருப்பது 

    மேற்குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் குழந்தைகள் அழுவதற்கான பொதுவான காரணங்கள். 

    குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதை எவ்வாறு அறிவது?

    • தொடர்ந்து அழுவது (அழும் விதம் வழக்கத்தை விட வித்தியாசமாகவும், அதிக சத்தமாகவும் இருக்கலாம்)
    • சிணுங்கும் சத்தங்களை எழுப்புதல்
    • அதிக சத்தமாக அலறல்
    • புரண்டு புரண்டு படுத்தல்
    • கை, கால்களை பிடுங்குவது, உடலை வேகமாக நீட்டுவது
    • எப்போதும் எரிச்சலாக இருத்தல் ( முகத்தில் வெளிகாட்டுவார்கள்)
    • சாப்பிடாமல் இருப்பது
    • இரவில் தூங்காமல் இருப்பது அல்லது வழக்கத்தை விட அதிகமாக தூங்குவது.

    மேற்கூறிய காரணங்கள் உடல்நல பாதிப்பை குறிக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். 


    குழந்தைகள் பொதுவாகவே ஒருநாளைக்கு 3 மணிநேரத்திற்கும் மேல் அழுவார்கள்!

    குழந்தையை எப்படி அமைதிப்படுத்துவது?

    • குழந்தையை ஒரே இடத்தில் படுக்க வைக்காமல், கையில் தூக்கி விளையாட்டு காட்டுங்கள். மார்போடு அணைத்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
    • வெந்நீரில் குளிப்பாட்டுங்கள்.
    • குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்ய, மென்மையான குரலில் பாட்டுப்பாடலாம். அல்லது அமைதியாக பேசலாம். எப்போதும் இல்லாமல் வித்தியாசமாக அமைதியாக பேசுவது அவர்களின் கவனத்தை ஈர்க்கும். அழுகையை மறக்கச்செய்யும்
    • பால் கொடுத்து பாருங்கள். பசியாக இருந்தால் அழுகை நின்றுவிடும்.
    • மடியில் குப்புற படுக்க வைத்து முதுகை லேசாக தடவிக்கொடுத்து பாருங்கள்.
    • பொம்மைகளை கொடுத்து பார்க்கலாம்
    • சாப்பிடும்போது அல்லது பால் குடிக்கும்போது காற்று புகுந்திருந்தால் அது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அப்போது அவர்களை ஏப்பம்விட வையுங்கள். காற்று வெளியே வந்தால் நன்றாக உணர்வார்கள்.
    • குழந்தையின் துணி ஈரமாக, அழுக்காக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 
    ×