என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • சப்பாத்தி மாவில் சிறிது தயிர் சேர்த்தால் சப்பாத்தி மென்மையாக வரும்.
    • குழம்பில் வெண்டைக்காய் சேர்க்கும் முன்பு அதை வதக்க வேண்டும்.

    * ராகி அல்லது சாமை தோசைக்கு சிறிது அரிசி மாவு கலக்கவும். தோசை சத்தாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * ஆம்லெட்டுக்கு சிறிது பால் சேர்த்து முட்டையை அடித்தால் மென்மையாக இருக்கும்.

    * பருப்பு, மசாலா, முந்திரிகளை வறுக்கும் போது சிறிது உப்பு சேர்த்தால் ருசி கூடும்.

    * பூரி தயாரிக்கும்போது மாவில் சிறிது ரவை சேர்த்தால் பூரி நன்றாக பூரிக்கும்.

    * பாசிப்பயிறு குழம்புக்கு பயிறை நன்கு வறுத்து அரைத்து சேருங்கள். சுவை அதிகரிக்கும்.

    * பன்னீர் கட்லெட் செய்யும் போது, பன்னீரை நன்கு வடித்துப் பிசைய வேண்டும்.

    * சப்பாத்தி மாவில் சிறிது தயிர் சேர்த்தால் சப்பாத்தி மென்மையாக வரும்.

    * பாயசம் கொதிக்கும்போது அடிக்கடி கலக்க வேண்டும். இல்லையெனில் பாத்திரத்தில் அடிப்பிடிக்கும்.

    * காய்கறி பாயசத்துக்கு அதில் சிறிது உளுந்து பருப்பு வதக்கி சேர்த்தால் ருசி அதிகரிக்கும்.

    * தேங்காயை நன்கு விழுதாக அரைத்தால் சட்னி ருசிக்கும்.

    * வெங்காயம் அதிகமாக இருந்தால், அதை கடலை மாவில் உருட்டி பொரித்து சாம்பாரில் போடலாம்.

    * சாம்பாரில் சுண்டைக்காய் சேர்க்கும் முன்பு, அதை எண்ணெய்யில் வதக்கினால் அதிக கசப்பு தெரியாது.

    *நெய் சாதத்திற்கு சிறிது ஏலக்காய் தூள் சேர்த்தால் நறுமணமும், சுவையும் கூடும்.

    * பச்சை மிளகாய் நறுக்கும்போது கையில் எரிச்சலை தருமெனில், எலுமிச்சை சாறில் கைகளை கழுவுங்கள்.

    * பூண்டு விழுதை அது பழுப்பு நிறமாகும் வரை வதக்கினால் வாசனை போகும்.

    * குழம்புக்கு புளி கரைக்கும் போது கெட்டியான புளி நீரை சேர்க்க வேண்டாம். குழம்பு புளிக்கும்.

    * குழம்பில் வெண்டைக்காய் சேர்க்கும் முன்பு அதை வதக்க வேண்டும்.

    * வெங்காயம் சீக்கிரம் வதங்க தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். 

    • இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
    • இளநீர் குடிப்பதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

    உலகில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விரும்பி குடிக்கும் பானமாக இளநீர் உள்ளது. இளநீரை விரும்பாதவர்கள் அரிது தான். ஏனெனில் இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கோடை காலங்களில் இளநீர் வியாபாரம் இந்தியாவில் அமோகமாகவே நடக்கும். உடலுக்கு பல வழிகளில் நன்மை தரக்கூடிய இளநீரை இரவு அருந்தலாமா என்ற கேள்வி சிலருக்கு எழும். அதற்கான தீர்வு குறித்து பார்க்கலாம்.

    கோடை காலங்களில் ஏற்படும் தாகத்தை தணிக்க இளநீர் சிறந்த தேர்வாக அமையும். அதே போல் இரவு நேரங்களில் இளநீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதாக இருக்கும். குறிப்பாக பருவகால நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும். இளநீரில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்களும் அடங்கியுள்ளதால், கூந்தல் மற்றும் சருமத்திற்கும் வலுசேர்க்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன்பு இளநீர் குடிக்கலாம். இவற்றிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும். நீரிழப்பை தடுக்கும்.

    இளநீர் வருடம் முழுவதும் ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் கிடைக்கும் ஒரு பானம். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    இளநீர் குடிப்பதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது உடலில் இருக்கும் தொற்றுக்கிருமிகளை வெளியேற்ற உதவும். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் இளநீர் துணை புரியும். இளநீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் குடிப்பதால், அதன் ஆரோக்கிய நன்மைகள் இரட்டிப்பாகும். உணவுக்கு முன்பும், பின்பும், தூங்குவதற்கு முன்பும், உடற்பயிற்சிக்கு பின்பும் இளநீர் குடிப்பது உடலுக்கு நல்லது. இதனால் செரிமானம் மேம்பட்டு, உடல் நீரேற்றமாக இருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கும். இதய துடிப்பை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்.

    பொதுவாக ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டம்ளர் இளநீர் குடிப்பது போதுமானது. இருப்பினும், சர்க்கரை நோய் அல்லது குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி இளநீரை குடிப்பது நல்லது.

    • நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கலைத் தடுக்கிறது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தன்மையை கொண்டவை.

    "பழங்களின் ராணி' என்ற பெருமைக்குரியது மங்குஸ் தான் பழம். வெளியே அடர் ஊதா நிறத்திலும், உள்ளே பஞ்சு போன்ற வெள்ளை சதைப்பகுதியுடனும் காணப்படும். இனிப்பு மற்றும் மென்மையான புளிப்பு கலந்த சுவையால் தனித்துவம் பெற்ற இந்தப் பழம் ஆறு வெண்மை நிற பாகங்களையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு பாகமும் மென்மையான சுவையுடன், சத்தானவையாகும். சுவை மட்டுமல்லாமல், உடலுக்கு பயனுள்ள பல்வேறு மருத்துவ குணங்களையும் இயல்பாகவே கொண்ட இயற்கை கொடையாகவும் விளங்குகிறது.

    மங்குஸ்தான் பழம் வெப்பமண்டல காலநிலை உள்ள பகுதிகளில் செழித்து வளரும் மரமாகும். அதிக ஈரப்பதமுள்ள சூடான வானிலையே இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் சில ஈரப்பதமுள்ள பகுதிகளில் மங்குஸ்தான் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக, குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, ஆலஞ்சோலை, களியல், நெட்டா, மாறமலை, வேளிமலை உள்ளிட்ட இடங்களில் மங்குஸ்தான் பழ மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த பழங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகம் விளைகின்றன.

    ஊட்டச்சத்து:

    இதில் நார்ச்சத்து, வைட்டமின் பி1, பி2, பி9 மற்றும் ஆண்டி ஆக்சிடென்டுகள், பொட்டாசியம், தாதுக்கள் நிறைந்துள்ளன.

    நன்மைகள்:

    ஜாந்தோன்கள் மற்றும் வைட்டமின் சி இந்த பழங்களில் அதிகம் நிறைந்து காணப்படுவதால், உடலை நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. ஜாந்தோன்கள் என்பது பழங்களில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்சிடென்ட் சேர்மங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தன்மையை கொண்டவை.

    இந்த பழத்தில் இருக்கும் பொட்டாசியம், தாதுக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

    நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கலைத் தடுக்கிறது.

    ஆன்டி-ஆக்சிடென்டுகள் சரும செல்களை பாதுகாத்து இளமையான தோற்றத்தை தக்க வைக்க உதவுகின்றன.

    இந்த பழத்தில் பி-வைட்டமின்கள் இருப்பதால் உடல் ஆற்றல் மற்றும் செல்களின் வளர்ச்சியை ஆதரிக்கின்றன.

    மங்குஸ்தான் பழத்தில் மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்களும் உள்ளன. அவை தசைகள் வலுவாகவும், எலும்புகள் பலமாகவும், இதயம் ஆரோக்கியமாகவும் செயல்பட உதவுகின்றன.

    • முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
    • வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும்.

    முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்கு தெரியும். அதில் மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் தெரியாத ஒன்று.

    முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை 'பிரம்ம விருட்சம்' என்று அழைக்கிறார்கள். வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நம்மில் எத்தனைபேர் முருங்கைப்பூவை சமைத்துச் சாப்பிட்டிருப்போம்..? காரணம் அந்தப் பூக்களின் மருத்துவகுணம் பற்றி தெரியாதது மட்டுமல்ல... முருங்கைப்பூவை விட முருங்கைக்காயையே நாம் அதிகம் சமையலுக்கு பயன்படுத்திப் பழகியிருக்கிறோம்.

    இன்றைய அவசர யுகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு, பகலாக ஓய்வின்றி உழைப்பது, கம்ப்யூட்டரே கதி என்று மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது போன்றவற்றால் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அந்த நேரங்களில் முருங்கைப்பூவை கசாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.

    மேலும், பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும் என்கிறார்கள்.

    • குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளையும் சுத்தமாக வைத்திருக்கவும்.
    • செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

    குடற்புழுக்கள் பெரும்பாலும் அசுத்தமான நீர் அல்லது உணவு உட்கொள்வது, சுகாதாரமற்ற கழிப்பறை வசதிகள் மற்றும் கைகளை சரியாக கழுவாததால் ஏற்படுகின்றன. மண், அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் புழுக்களின் முட்டைகள் உடலுக்குள் நுழைந்து குடலில் வாழத்தொடங்குகின்றன. இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    வயிற்றில் புழுக்கள் இருந்தால் வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், பசியின்மை, எடையிழப்பு, ஆசனவாயில் அரிப்பு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும்.

    குடற்புழுக்கள் வராமல் தடுக்க அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும். நகங்களை நன்றாக வெட்ட வேண்டும். சாப்பிடும் முன்பும், கழிவறைக்கு சென்று வந்த பிறகும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். பல் துலக்கும் முன்பும், பின்பும் பிரஸை கழுவ வேண்டும். டவல்கள் மற்றும் படுக்கை விரிப்புகளை சூடான நீரில் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளையும் சுத்தமாக வைத்திருக்கவும். சமையலறை மற்றும் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும்.

    பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். செல்லப்பிராணிகளின் கழிவுகள் அருகே குழந்தைகளை விளையாட விடக்கூடாது. நோய்த்தொற்றுகள் அதிகம் வாய்ப்புள்ள சுகாதாரமற்ற இடங்களில் இருந்து பழங்கள், காய்கறிகள் வாங்கக் கூடாது. அசுத்தமான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கக் கூடாது

    • காபி குடிப்பது அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
    • புதிய கொழுப்பு செல் உருவாவதை குறைக்கிறது.

    பொதுவாக காபி உடலுக்குத் தீங்கு என்பார்கள். ஆனால், பிளாக் காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலைப் பாதுகாப்பதில் முதலிடம் வகிக்கின்றன. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் பண்புகள் கல்லீரல் கொழுப்பு சேர்வதைத் தடுக்கின்றன.

    அல்சைமர் நோய் என்பது மூளைப் பிரச்சனையாகும். இது நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனை அழித்து, மிக எளிய பணிகளைச் செய்வதைக் கூட கடினமாக்குகிறது. காபி குடிப்பது அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

    அல்சைமர் நோய் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 2-3 கப் காபி குடிப்பதால் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் அபாயத்தை 65 சதவீதம் குறைக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    கருப்பு காபியை தொடர்ந்து உட்கொள்வது உடல் எடையை குறைக்கவும் உதவும். ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த், எடை குறைப்பதில் கருப்பு காபியை உட்கொள்வதால் நேர்மறையான விளைவுகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

    எடை இழப்பை ஊக்குவிக்கும் மற்றும் உடலில் குளுக்கோஸ் உற்பத்தியை மெதுவாக்கும் குளோரோஜெனிக் அமிலங்கள் இதில் உள்ளதாக நிபுணர் விளக்குகிறார். புதிய கொழுப்பு செல் உருவாவதை குறைக்கிறது. எனவே எடை இழப்புக்கு இது முக்கியமானது. கூடுதலாக, நீங்கள் சர்க்கரை சேர்க்கவில்லை என்றால் கலோரிகள் குறைவாக இருக்கும். எனவே எதுவானாலும் அளவோடு உட்கொள்வது உடலுக்கு உகந்தது.

    • திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெயின் பிக்சர் ஆக அமைய உள்ளது.
    • திருச்சியில் திரள்வோம் கழகத் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம்.

    தி.மு.க. முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மார்ச் 9-ல் திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து மிகப் பிரம்மாண்டமாக நடத்திட தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

    திருச்சியின் மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட திக்கெட்டும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். திருச்சியில் திரளும் கூட்டம் 2026 சட்டப்பேரைவைத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்திட வேண்டும்.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு , என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவாடி , வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைகள், கழக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, வாக்குச்சாவடி நிலை முகவர்கள்-உறுப்பினர்கள் பயிற்சிக் கூட்டம், வெல்லும் தமிழ்ப்பெண்கள் மகளிரணி மாநாடுகள், வீடு வீடாகப் பரப்புரை என அசுர வேகத்தில் நம் கழகம் களப்பணியாற்றி வந்தாலும் கழகத்தலைவர் கூறியது போல திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெயின் பிக்சர் ஆக அமைய உள்ளது.

    இந்த மாபெரும் மாநில மாநாட்டில் அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட மாநகர நகர-ஒன்றிய-பகுதி-பேரூர் வார்டு-கிளைக் கழக செய லாளர்கள்-நிர்வாகிகள் என கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.

    சார்பு அணிகளின் மாநிலச் செயலாளர்கள், அமைப்பாளர்களும் தங்கள் அணி சார்பில் அனைவரும் முழுமையாக கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இம்மாபெரும் மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடும் வகையில் அனைத்து கழக மாவட்ட செயலாளர்களும் அந்தந்த மாவட்ட ஒன்றிய நகர-பேரூர் அளவில் நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி திருச்சி மாநில மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை, வாகன வசதிகள், செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திட வேண்டும் எனவும், வாகன நிறுத்தும் வசதி, போக்கு வரத்து வழித்தட ஏற்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட வசதியாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து கிளம்பும் வாகன விவரங்களை மார்ச் 1-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதேபோல ஒரு கழக நிர்வாகியும் விடுபடாமல் மாநாட்டில் கலந்து கொள்வதையும், மாண்புமிகு கழகத்தலைவர் உரையை முடிக்கும் வரையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கும் வழிகாட்டி, மாநாட்டு திடலுக்கு உரிய நேரத்திற்கு வந்துவிடுவதை யும் அந்தந்த மாவட்ட செய லாளர்கள் உறுதி செய்திட வேண்டும். மாவட்டத்தின் கடைசி வாகனம் மாநாடு நோக்கி கிளம்பிய பிறகு தான் மாவட்ட செயலாளர்கள் மாநாட்டிற்கு கிளம்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    கரை புரண்டு ஓடும் காவிரியாய் தடைபோட முடியாத கடல் அலையாய் திருச்சியில் திரள்வோம் கழகத் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம். ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டில் சமைப்பவர், 'உடம்புக்கு நல்லது' என்று நினைப்பார்.
    • வீட்டில் சமைக்கப்படும் உணவின் பின்னால் இருக்கும் உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.

    'அம்மா சாப்பாடு நல்லாதான் இருக்கு... ஆனா ஓட்டல் மாதிரி இல்ல!' - இந்தக் குரல் இன்று பல வீடுகளில் அடிக்கடி ஒலிக்கிறது. வீட்டை விட, ஓட்டலில் சாப்பிட அனேகம் பேருக்கு பிடிக்கிறது, ருசியாக இருப்பதாக தோன்றுகிறது. இது ஏன்?

    இதற்கு காரணம், 'சுவை' என்பது நாக்கில் மட்டும் இல்லை.

    அது மணம், தோற்றம், சூழல், மனநிலை, எதிர்பார்ப்பு ஆகிய அனைத்தின் கூட்டுத்தொகை. வீட்டில் தினமும் அதே சமையலறை, அதே பாத்திரம், அதே நபர் சமைக்கும் உணவு நமக்கு 'பழக்கம்' ஆகிவிடுகிறது. பழக்கம் வந்த இடத்தில் புதுமை குறையும்; புதுமை குறைந்த இடத்தில் சுவை மங்குவது போல தோன்றும்.

    ஆனால் உணவகங்களில்?

    புதுமை. புதிய இடம். வேறு கைகள். வேறு வாசனை. வேறு பரிமாறும் முறை. இதுவே உணவின் சுவையை இரட்டிப்பாக்குகிறது.

    பொதுவாக, உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகளில், வீட்டைவிட அதிக அளவில் உப்பு, எண்ணெய், வெண்ணெய், நெய், சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. காரணம் ஒன்றுதான், வாடிக்கையாளரின் நாக்கை வசப்படுத்த வேண்டும்.

    வீட்டில் சமைப்பவர், 'உடம்புக்கு நல்லது' என்று நினைப்பார். ஓட்டலில் சமைப்பவர், 'மீண்டும் வர வைக்க வேண்டும்' என்று நினைப்பார்.

    இந்த இரண்டு எண்ணங்களின் இடைவெளிதான், சுவையின் இடைவெளியாக நமக்கு தெரிகிறது.

    வீட்டில் சாப்பிடும்போது, வேலைப்பளு, குடும்பப் பிரச்சனை, பணச்சுமை, நாளைய பொறுப்புகள் எல்லாமே நம்முடன் மேசைக்கு வந்து உட்காரும்.

    உணவகத்திலோ, 'இன்று சாப்பிட வந்திருக்கோம்' என்ற மனநிலை.

    சமைக்கவில்லை. பாத்திரம் கழுவ வேண்டாம். யாருக்கும் பரிமாற வேண்டாம். இந்த மனஅழுத்தமற்ற நிலை, உணவின் சுவையை கூடுதலாக்குகிறது.

    வீட்டில் சமைக்கப்படும் உணவின் பின்னால் இருக்கும் உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. தினமும் சமைக்கும் கைகளின் மதிப்பு, அன்றாடமாகி விட்டதால் சாதாரணமாகிவிடுகிறது. ஆனால் ஓட்டலில் பணம்

    கொடுத்து வாங்கும் உணவு, 'விலை' காரணமாகவே நமக்கு உயர்ந்ததாக தோன்றுகிறது.

    பணம் கொடுத்தால் சுவை கூடும் என்ற மனநிலை, அறியாமலே நம்முள் உருவாகிவிட்டது.

    அழகான தட்டு, கவரும் உள்அலங்காரம், சூடான பரிமாற்றம், உணவுகளுக்கு கவர்ச்சியான பெயர்கள் இவை அனைத்தும் உணவின் சுவைக்கு முன் நம் மனதை தயார் செய்கின்றன.

    வீட்டில்?

    'சாப்பாடு ரெடி... வாங்க!'

    அவ்வளவுதான்.

    அன்பு இருந்தாலும், அங்கு ஒரு 'நிகழ்வு' இல்லை. நிகழ்வு இல்லாத இடத்தில் சுவை நினைவாக மாறுவதில்லை.

    இன்றைய தலைமுறை, வெளியே சாப்பிடுவதை ஒரு அனுபவமாக பார்க்கிறது. செல்பி, சமூக ஊடகப் பதிவு, நண்பர்கள், சிரிப்பு இவை அனைத்தும் உணவுடன் சேர்ந்து ஒரு நினைவாக உருவாகின்றன. வீட்டுச் சாப்பாடு அந்தப் போட்டியில் பின்னடைகிறது.

    உணவக சுவை நாக்குக்கு இனிமை.

    வீட்டுச் சாப்பாடு உடலுக்கு நன்மை.

    வீட்டுச் சாப்பாடு சுவையில்லை என்று நாம் சொல்வது, உணவின் குறை அல்ல; நமது பார்வையின் குறை.

    அதை தினசரி என்று எடுத்துக்கொள்ளாமல், அன்பின் வெளிப்பாடாக பார்த்தால், அதில் இருக்கும் சுவையும் நமக்குத் தெரியும்.

    • தேன் மிகசிறந்த உணவு பொருளாகும்.
    • ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

    கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

    தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள். மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும்.

    மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது. படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள்.

    • எண்ணெய்யை முழுமையாக உறிஞ்ச முடிக்கு போதிய நேரம் கிடைக்காது.
    • வறண்ட தலைமுடி மற்றும் சேதமடைந்த முடி உள்ளவர்களுக்கு இரவு எண்ணெய் தடவுவது ஏற்றது.

    குழந்தை பருவம் முதலே தலை முடிக்கு எண்ணெய் தேய்க்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவதொரு எண்ணெய் இடம் பிடித்திருக்கும். தலைமுடிக்கு தொடர்ந்து எண்ணெய் தடவி வந்தாலும் முடி வளர்ச்சிக்கு சிறந்தது காலை நேரமா அல்லது மாலை நேரமா? என்ற குழப்பம் பலருக்கும் அடிக்கடி எழுவதுண்டு.

    காலை நேரத்தில் எண்ணெய் தடவுவது தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் என்று சிலர் நம்புகின்றனர். தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு இரவு முழுவதும் அப்படியே வைத்திருப்பதால் முடியின் வேர் வரை ஊட்டச்சத்து கிடைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால் வாழ்க்கை முறை, முடி வகை, தேய்க்கும் நேரத்தை பொறுத்து தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள் மாறுபடும்.

    முடி வளர்ச்சிக்கு எண்ணெய் தடவுவது ஏன் முக்கியம்?

    முடிக்கு எண்ணெய் தடவுவது தலை சருமத்திற்கு ஊட்டமளிக்கும். முடி உலர்வடைவதை குறைக்கும். முடி வேர்களை வலுப்படுத்தும், தலைக்கு மெதுவான மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி வளர்ச்சிக்கு உதவிடும். மேலும் எண்ணெய் தடவுவது முடியில் ஏற்படும் உராய்வை குறைக்கும். முடி உடைதல் மற்றும் பிளவு ஏற்படாமல் பாதுகாக்கும். ஆனால், எண்ணெய் தேய்ப்பது மட்டும் போதுமானது அல்ல. சீரான உணவு, நல்ல உறக்கம், மன அழுத்தமின்மை மற்றும் சரியான முடி பராமரிப்பு ஆகியவை முக்கியமானவை.

    முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?

    உலர்ந்த அல்லது சேதமடைந்த முடி உள்ளவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவலாம். எண்ணெய் சுரப்பு அதிகம் உள்ளவர்கள் காலை நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு குளிப்பது பாதுகாப்பானது. வாரத்திற்கு இரண்டு அல்லது 3 முறை தலைக்கு எண்ணெய் தடவினால் போதும். தலைமுடிக்கு மெதுவாக மசாஜ் செய்யவும். அதிக எண்ணெய் தடவுவதை தவிர்க்கவும். தலை முடியை நன்றாக அலசவும்.

     

    காலை நேரமா இரவு நேரமா நேரத்தை விட எளிமையான, தொடர்ச்சியான பராமரிப்பே முடி வளர்ச்சிக்கு உதவிடும்.

    காலை நேரத்தில்...

    நன்மைகள்:

    * தலைச்சருமத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

    * தலைமுடி வறட்சி அடைவதை குறைக்க உதவும்.

    * தலைமுடியில் லேசாக எண்ணெய் தேய்த்து 30 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை தக்கவைப்பது அதிக எண்ணெய் தலையில் சேர்வதை தடுக்க உதவும். எண்ணெய் பசைத்தன்மை மற்றும் முகப்பரு பிரச்சனை கொண்டவர்களின் தலைக்கு காலை நேரத்தில் எண்ணெய் தேய்ப்பது சிறந்தது.

    குறைபாடுகள்:

    * எண்ணெய்யை முழுமையாக உறிஞ்ச முடிக்கு போதிய நேரம் கிடைக்காது.

    * எண்ணெய் தேய்த்தபடி வெளியே சென்றால் தூசி, மாசுக்கள் முடியில் ஒட்டும் அபாயம் உண்டு.

    * வெயில் சமயத்தில் காலையில் எண்ணெய் தேய்ப்பது தலைச்சருமத்தில் அழுக்கு சேரக்கூடும்.

    * தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்துவிட்டு ஷாம்பு உபயோகித்து குளிப்பவர்களுக்கு காலையில் எண்ணெய் தேய்ப்பது ஏற்றது.

    இரவு நேரத்தில்...

    நன்மைகள்:

    * எண்ணெய் நீண்ட நேரம் தலையில் படிந்திருந்து முடிக்கு ஊட்ட மளிக்கும்.

    * உலர்ந்த, சேதமடைந்த முடியை சீரமைக்க உதவும்.

    * தலை முடி உலர்தல் பிரச்சனை குறையும்.

    * இரவில் தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால் நல்ல உறக்கம் கிடைக்கும். மன அமைதிக்கும் உதவும்.

    குறைபாடுகள்:

    * சிலருக்கு சரும துளைகள் அடைபட்டு பொடுகு பிரச்சனை அதிகரிக்கலாம்.

    * தலைமுடியை முழுவதுமாக மூடவில்லை என்றால் தூசி ஓட்ட வாய்ப்பு உண்டு.

    * எண்ணெய் சுரப்பு அதிகம் உள்ளவர்கள் அடிக்கடி இரவில் தலைமுடிக்கு எண்ணெய் தடவினால் பொடுகு பிரச்சனை ஏற்படலாம்.

    * வறண்ட தலைமுடி மற்றும் சேதமடைந்த முடி உள்ளவர்களுக்கு இரவு எண்ணெய் தடவுவது ஏற்றது.

    • விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள்.
    • பயணங்களின்போது ஜன்னல் அருகே அமர்ந்து காற்றை ரசிப்பதும் மனதை அலாதியாக்கும்.

    மகிழ்ச்சி ஏன் கடினமாகிறது?

    * எது நம்மை மகிழ்ச்சியாக்கும் என்பதை கண்டறியும் விஷயத்தில் சில சமயம் மனம் தவறான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.

    * மனதை உலுக்கும் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கும்போது துயரம் குடிகொள்ளும். அந்த சமயத்தில் தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள் எழுவது மனதை பலவீனப்படுத்தி விடும். பதற்றத்தை உண்டாக்கிவிடும்.

    * ஏதாவது மகிழ்ச்சியாக நிகழ்வு ஒன்று நடந்த பிறகு, மூளை விரைவாக அதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்கு பழகி விடுகிறது. அத்தகைய எதிர்பார்ப்பு ஈடேறாதபோது மன மகிழ்ச்சி தடைபடும்.

    எது மகிழ்ச்சியை தடுக்கிறது?

    * அதிக பணம் (அடிப்படை தேவைகளுக்கு மேலாக)

    * கவர்ச்சியான வேலை

    * டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் மூழ்கி விடுதல்

    * கனவு வீடு, ஆடம்பரமான கார், பேஷன் ஆடைகள் பற்றிய சிந்தனையில் எந்நேரமும் மூழ்கி இருத்தல்

    * விரும்பிய உடல் அமைப்பை பெறுவதற்கு போராடுதல்

    எது நம்மை அதிக மகிழ்ச்சியாக்கும்?

    தொடர்பில் இருத்தல்

    * நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி உங்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவி புரிந்தவர்களுடன் அவ்வப்போது பேசுங்கள். நேரில் தொடர்பு கொள்வது மற்ற எல்லாவற்றையும் விட சிறந்தது.

    * அந்நியர்களுடன் பேசுவதும் (உங்களுக்கு அந்த யோசனை பிடிக்காவிட்டாலும் கூட) மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர்கள் முகவரி தெரியாமல் தடுமாறி நிற்கும்போது நீங்களாக சென்று வழிகாட்டுவது கூட ஒருவித மகிழ்ச்சியை உண்டாக்கும்.

    சிறிய தருணங்களை ரசித்தல்

    * விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள். ஐஸ்கிரீமை ருசிக்கும்போது அதை நேசியுங்கள். இப்படி சிறிய தருணங்களை ரசித்தல் மனதை மகிழ்ச்சிப்படுத்தும்.

    * பயணங்களின்போது ஜன்னல் அருகே அமர்ந்து காற்றை ரசிப்பதும் மனதை அலாதியாக்கும்.

    தினசரி நன்றியுணர்வு

    * ஒவ்வொரு நாளும் அன்றைய நாளில் நடந்த முக்கியமான 3 விஷயங்களை எழுதுங்கள். இந்த பழக்கம் மூளையை நினைவூட்டும்.

    * அந்த 3 விஷயங்களை உங்களை அதிகம் நேசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வது அதை விட சிறந்தது.

    நற்செயல் செய்தல்

    * ஒருவருக்கு தற்செயலாக ஒரு நல்ல செயலை செய்யுங்கள். அந்த நபர் உறவினர்கள், நண்பர்களாக இருக்கலாம். ஏற்கனவே அறிமுகம் இல்லாத நபராகவும் இருக்கலாம்.

    * குறிப்பாக உங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு உடனே உதவிடுங்கள். அவர்கள் உங்களை அணுகி கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்களாகவே செய்யும் அந்த உதவி உங்களையும், சம்பந்தப்பட்டவரையும் மகிழ்ச்சியான மன நிலைக்கு கொண்டு செல்லும்.

    நன்றாக தூங்குதல்

    * ஒவ்வொரு இரவும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். அதில் சமரசம் செய்யாதீர்கள்.

    * உங்கள் தூக்க அட்டவணை நிலையானதாக இருந்தால் அதுவே நோய் நொடி இல்லாத, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை சூழலை உருவாக்கிக் கொடுக்கும்.

    சாகச பயணங்கள் மேற்கொள்ளுதல்

    * சுற்றுலாவுக்கோ, வெளியிடங்களுக்கோ சென்றால் அங்கு நீங்கள் வாழ்நாளில் அனுபவிக்காத சாகசங்கள், விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தால் அதில் ஈடுபட யோசிக்காதீர்கள். கூடுதல் பணம் செலவழிக்கவும் தயங்காதீர்கள். அது வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும்பட்சத்தில் அதனை அனுபவிப்பது கூடுதல் மகிழ்ச்சியை தேடித்தரும்.

    * வருடத்திற்கு ஒருமுறையோ, குறிப்பிட்ட மாதங்களுக்கு இடையேயோ வெளியிடங்களுக்கு செல்லும் பட்சத்தில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்யுங்கள். அங்கு செல்வதற்காக காத்திருக்கும் நாட்களும், எதிர்பார்ப்புகளும் கூட மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    தியானம் செய்தல்

    * அலை பாய்ந்து திரியும் மனம் மகிழ்ச்சியற்றதாகவே இருக்கும். அதை தியானம் மீட்டமைக்கும்.

    * தியானத்திற்கு தினமும் 5 நிமிடங்கள் செலவிட்டால் போதும். சமூக வலைத்தளத்தில் யோகா நிபுணர்களின் வழிகாட்டுதலில் வடிவமைக்கப்படும் வீடியோக்களை கூட பார்த்து பயிற்சி செய்யலாம். அதுவும் மனதை இலகுவாக்கும்.

    ஒப்பீடு செய்தல்

    * ஒப்பிடும் அளவுகோலை மாற்றியமையுங்கள். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவததல்ல. உங்களுடனே ஒப்பீடு செய்யுங்கள். உங்கள் நிறை, குறைகளை அலசி ஆராயுங்கள்.

    * விறுவிறுப்பான, சுவாரசியமான திரைப்படம் பார்க்கும் போது சிறிது நேரம் நிறுத்தி வையுங்கள். அது அந்த படத்தின் மீதான ஆவலையும், எதிர்பார்ப்பையும் தூண்டி விடும். மீண்டும் பார்க்கும்போது புதிய உற்சாகத்தை பெறுவீர்கள்.

    நேரம் செலவளித்தல்

    * உங்களுக்கு அதிக நேரத்தை அளிக்கும் வகையில் செலவிடப்படும் பணம் எப்போதும் மதிப்புடையது என்பதை மனதில் கொள்ளுங்கள். அது பொழுதுபோக்காக இருக்கலாம். விருந்து, விழாக்களாக அமையலாம். உற்றார், உறவினர்கள் ஒன்று கூடும் இடமாக இருக்கலாம்.

    * எனவே எப்போதும் செலவளிக்கும் பணத்திற்கு உரிய மதிப்பு கிடைக்கும் வகையில் கூடுதல் நேரத்தை உங்களுக்கு பிடித்தமான நபர்களுடன் செலவிடுங்கள்.

    உடற்பயிற்சி செய்தல்

    * உடலுக்கு அசைவு கொடுக்கும் எந்த பயிற்சியாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்வதற்கு முயற்சியுங்கள். அது சில நிமிடங்கள் செய்யக்கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை.

    * செல்போன் அழைப்பின்போது நடந்து கொண்டே பதிலளிப்பது கூட ஒருவித உடல் இயக்கமாக அமையும். உடலையும், மனதையும் ஆசுவாசமடைய செய்யும்.

    • பருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும்.
    • இனிப்புகள் செய்யும்போது நெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மிருது தன்மை அதிகரிக்கும்.

    * கேக் தயாரிக்கும்போது முந்திரி, பாதாம் போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கேக்கில் இருந்து கீழே விழாது.

    * கீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரையை சேர்த்தால் சத்தும் போகாது. நிறமும் மாறாது.

    * பருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும். பருப்பு சீக்கிரம் வெந்து விடும்.

    * குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் சிறு வாழைத் தண்டு அல்லது உருளைக்கிழங்கு அளவிற்கு சாதத்தை துணியில் கட்டிப்போட்டு குழம்பு கொதித்ததும் எடுத்து விடவும்.

    * உருளைக்கிழங்கு வாங்கும்போது பச்சையாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.

    * உருளைக்கிழங்கு தோல் கெட்டியாக உரிந்திருந்தால் அது நல்ல உருளைக்கிழங்கு.

    * வாழைக்காயை உணவில் சேர்க்கும்பொழுது மிளகு, சீரகம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் வாயு தொல்லை இருக்காது.

    * இனிப்புகள் செய்யும்போது நெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மிருது தன்மை அதிகரிக்கும்.

    ×