என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK"

    • அரசியல் கட்சிகள் விருப்பமனு தாக்கலை தொடங்கி உள்ளன
    • இந்தக்குழுவில் பி.டி.ஆர். தியாகராஜன் இடம்பெற்றுள்ளார்.

    திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்துள்ளது திமுக. இதுதொடர்பான அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். 

    தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் விருப்பமனு தாக்கலை தொடங்கி உள்ளன. கூட்டணி தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில் திமுக, தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. 

    கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழுவில், டி.கே.எஸ். இளங்கோவன், கோவி.செழியன், பி.டி.ஆர். தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம், சுரேஷ் சம்மந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

    இக்குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொது நலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை தயாரிக்கும் எனவும் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

    • வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம்.
    • உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?

    கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

    #ThreeFarmLaws, #CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?

    #MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?

    திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?

    வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்?

    இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயர் எதற்கு?

    நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்! என்று கூறியுள்ளார். 



    • தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க.வின் உண்மை முகம், கோர முகம், பழிவாங்கும் முகம் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
    • தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒத்த கருத்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று சேர்ந்து களம் காணவேண்டும்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி 11 மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து சரித்திர சாதனை படைத்தார். அதில் பல மருத்துவமனைகளில் கட்டுமான முறைகேடு நடைபெற்றதாக தி.மு.க. வைத்த குற்றச்சாட்டில், துளிகூட முகாந்திரம் இல்லை என நீதியரசர்கள் கூறியதில் தி.மு.க. தற்போது பின்வாங்கியுள்ளது.

    ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில், 11 மருத்துவக் கல்லூரியில் கொண்டு வந்து அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்து அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பை நனவாக்கி, சமூக நீதியை எடப்பாடி பழனிசாமி காத்தார்.

    மக்களுக்காக உழைத்து வரும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி விடலாம் என்று தி.மு.க. நினைத்தால் அதில் தோல்விதான் கிடைக்கும் என்பது தான் தற்போது வந்த மகத்தான தீர்ப்பு மூலம் நமக்கு கிடைத்துள்ளது.

    தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க.வின் உண்மை முகம், கோர முகம், பழிவாங்கும் முகம் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இன்றைக்கு, தி.மு.க.வின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட, தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒத்த கருத்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று சேர்ந்து களம் காணவேண்டும்.

    யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக்கு மகுடம் சூட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்றார். 

    • தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.
    • பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ சிந்தாமணியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம் என தமிழக முதலமைச்சர் கூறியது தரவுகள் அடிப்படையிலேயே தான். தற்போது அது உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் முதலமைச்சர் கூறுவது மாய பிம்பம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

    தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது, அது உண்மையில்லை. தமிழகத்தில் ஆரம்ப கல்வியில் இடைநிற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அளவில் உயர்நிலை, மேல்நிலைக் கல்வியில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 7.7 சதவீதமாகவே உள்ளது.

    இதில் மாணவர்கள் பலர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளில் சேருகின்றனர். எனவே இடைநிற்றல் சதவீத கணக்கில் வருகிறது. மேலும் இந்த சதவீதமும் குறையும். தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.

    திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது வேதனைக்குரிய செய்தி. இந்த துயர செய்தி குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாலும் போன உயிர் திரும்ப வராது. மாணவர் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் சகோதரருக்கு கல்வி சார்ந்த உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

    • சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மீண்டும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்துள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, கட்சியில் பணியாற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவும், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மீண்டும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் செந்தில் பாலாஜி தனது தொகுதியை மட்டுமல்லாமல், தான் போட்டியிடும் மாவட்டத்தையே மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அவர் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வியூகங்களை வகுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

     

    மேற்கு மண்டலத்திற்கான தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கோவையில் தி.மு.க.வின் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" போன்ற கட்சி நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். எதிர்வரும் தேர்தல்களில் தி.மு.க.வின் பலத்தை மேற்கு மண்டலத்தில் வலுப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகவும், பின்னர் தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகவும் செந்தில் பாலாஜி பதவி வகித்துள்ளார். தற்போது கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், ஏப்ரல் மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?
    • அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்

    திருவள்ளூரில், பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்துவிழுந்து ஏழாம் வகுப்பு மாணவர் மோகித் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

    "திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

    பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?

    பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சமத்துவ நடைபயணம் வருகின்ற ஜனவரி 2-ந்தேதி மேற்கொள்ள உள்ளேன்.
    • மக்கள் மன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு தான் ஆதரவு உள்ளது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். அப்போது அவர் திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2-ந்தேதி தனது தலைமையில் நடைபெறும் "சமத்துவ நடைப்பயணத்தை" தொடங்கி வைப்பதற்கான விழா அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி னார்.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சமத்துவ நடைபயணம் வருகின்ற ஜனவரி 2-ந்தேதி மேற்கொள்ள உள்ளேன். 950 பேர் இந்த நடைபயணத்தில் மேற்கொள்ள உள்ளனர்.

    திருச்சி உழவர் சந்தையில் மது ஒழிப்பு நடைபயணத்தை ஜனவரி 2-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நடைபயணத்தில் விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன், கமல்ஹாசன், நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்.

    ஜனவரி 12-ந்தேதி மதுரையில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் நிறைவு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். கட்டுப்பாடாகவும், போக்குவரத்து ஒழுங்கு செய்வதாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படும்.

    மக்கள் மன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு தான் ஆதரவு உள்ளது. 2026 சட்ட மன்ற பொது தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும். யார் எந்த முயற்சி செய்தாலும் தவிடு பொடியாகி விடும்.

    சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் இப்போது அதற்கான தேவையில்லை.

    2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெரும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும் யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் மக்கள் மத்தியில் தி.மு.க. கூட்டணிக்கு வரவேற்பு இருப்பதை மக்கள் மத்தியில் பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.

    குடிமனைபட்டா கோரி இன்று நடத்தும் பேரணி தொடர்பாக கோரிக்கை வைத்து பேசினார்கள். அதேபோல் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் ராஜாராம் சிங், மாநில செயலாளர் ஆசை தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

    • தமிழகத்தில் 2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பது நாட்டுக்கே திருப்புமுனையாக அமையும்.
    • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்.

    பழனி:

    பழனியில் பா.ஜ.க. சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், சட்ட பேரவை தொகுதி பயிலரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தி.மு.க. தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு 2 ஏக்கர் நிலம் குறித்து கேட்டபோது தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் கொடுக்கும் அளவுக்கு நிலம் இல்லை என்று தனக்கு தற்போதுதான் தெரியவந்தது என்றார்.

    5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி மனதறிந்து பொய்சொல்லி வெற்றி பெற்றார். அதுபோலத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆட்சி முடியும் தருவாயில் ஹஜ் பயணம் செல்வோருக்கு இல்லம், மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என்பது போன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார். பொங்கல் பண்டிகையின் போது ஆளுக்கு ஒரு வீடு கொடுப்போம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், ஆளுக்கு ஒரு பஸ் தருவோம் என சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. தேர்தலுக்காக வாக்குகளை பெற வலைவிரிக்கும் தி.மு.க.வின் முயற்சி ஒருபோதும் பலிக்காது.

    தமிழகத்தில் 2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பது நாட்டுக்கே திருப்புமுனையாக அமையும். தமிழகத்தில் பா.ஜ.க. கொடிகட்ட 1 அடி இடம் கூட தரமுடியாது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். தற்போது எங்கு பார்த்தாலும் பா.ஜ.க. கொடிதான் பறக்கிறது. தமிழகத்தை அழித்து வரும் தி.மு..க.வை அகற்ற விரும்பும் அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்.

    செங்கோட்டையன் வேறு கட்சியில் இணைந்திருப்பது சேராத இடம் தனிலே சேரவேண்டாம் என்பது போல உள்ளது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் இதயத்தையே பா.ஜ.க. கைப்பற்றியதன் மூலம் வரும் தேர்தலில் அங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். வடிவில் விஜய் தெரிவதாகவும், அவர் முதலமைச்சர் ஆவார் என்றும், நாஞ்சில் சம்பத் பேசி வருகிறார். அவர் உண்மையில் எம்.ஜி.ஆரை. பார்த்திருக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
    • இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், அ.தி.மு.க நிர்வாகிகள் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், தங்கள் பெயரிலும் விருப்ப மனுவை அளிக்க வைகை எக்ஸ்பிரசில் புறப்பட்டு சென்றனர்.

    முன்னதாக ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 54 ஆண்டுகளில் தேர்தல் களத்தில் முதன்மை இயக்கமாக, தேர்தலில் முதல் துவக்கமாக எம்.ஜி.ஆர். காலம் தொட்டு, அம்மா காலம் வரை அ.தி.மு.க. இருந்து வந்தது. இன்றைக்கு இந்த இருபெரும் தலைவர்களின் மறுவடிவமாக உள்ள எடப்பாடி பழனிசாமி காலத்தில் தற்போது தேர்தல் பணியில் துள்ளி குதித்து வருகிறது.

    தேர்தல் பிரச்சாரத்தை முதலில் தொடங்கி 175 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். 12,000 கிலோமீட்டர் பச்சை பேருந்து மூலம் பச்சை தமிழராய் ஒரு கோடி மக்களை சந்தித்தார். இந்த சரித்திர சாதனையை யாரும் முறியடிக்க முடியாது.

    அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வழங்கும் முதல் நாளில் 1,237 மனுக்கள் பெறப்பட்டு அதில் 234 தொகுதிகளில் தனி தொகுதியை தவிர 349 தொண்டர்கள் தங்கள் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை அளித்தனர்.

    தற்பொழுது அம்மா பேரவையின் சார்பில் மதுரை மாவட்டத்தில் தனி தொகுதி தவிர உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நிற்க வேண்டும் என்று விருப்ப மனு அளிக்க உள்ளோம். மதுரையில் எந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நின்றாலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்.

    தற்போது நடைபெற்று வரும் தி.மு.க.வின் சர்வாதிகார, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வெற்றி மகுடம் சூட்ட தயாராகிவிட்டனர்.

    குமரி முதல் இமயம் வரை வெற்றி வரலாறு படைக்கும் வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ளது. குறிப்பாக இந்த கூட்டணி குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயக ஆட்சியை மலரச் செய்யும். அதனால் தான் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கண்டு ஸ்டாலினும், உதயநிதியும் இன்றைக்கு நடுங்கி போய் உள்ளார்கள்.

    நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது. செயற்கையாக சுவாசத்தை கொடுக்க விளம்பரங்களை செய்து வருகிறார்கள்.

    தி.மு.க.வின் தோல்வியை பற்றி உளவுத்துறை மூலம் அறிந்த ஸ்டாலின் தற்போது மகளிர் உரிமைத் தொகை கூடுதலாக வழங்கப்படும் என்று கூறுகிறார். இந்த ஆட்சி முடிய 3 மாதம் உள்ளது. இப்போது அறிவித்து என்ன பயன்? இதை எல்லாம் மக்கள் நம்பப் போவதில்லை தி.மு.க. வுக்கு மக்கள் ரெட்கார்டு போட்டு விடுவார்கள்.

    எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள், ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் தான் பொதுக்குழு தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயமாக அது நிறைவேறும், தை பிறந்தால் வழி பிறக்கும்.

    யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது. தி.மு.க. வை எதிர்த்து அரசியல் செய்பவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளார்கள்.

    அ.தி.மு.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். 54 வருடங்களாக எங்களுக்கு எதிரி தி.மு.க. தான். சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்றுதான் பார்ப்பார்கள். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார். 

    • ரங்கனை கைது செய்ய வேண்டும் என்றும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

    விருத்தாசலத்தில் நேற்று திமுக நிர்வாகி ரங்கநாதனை தாக்கிய விவகாரத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு, வீடு திரும்பிய சீமானின் காரை திமுக நிர்வாகி ரங்கன் வழிமறித்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் திமுக நிர்வாகி ரங்கனை சராமாரியாக தாக்கினர். தொடர்ந்து ரங்கனை கைது செய்ய வேண்டும் என்றும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இன்று சீமான்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக ரங்கநாதன் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் காவல்நிலையத்தில் சீமான் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின்பேரில் திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!
    • 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

    100 நாள் வேலை திட்டத்திற்கான பெயர் மாற்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!

    தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

    100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

    இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!

    பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

    #ThreeFarmLaws, #CasteCensus போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல #MGNREGA-வைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே #VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
    • காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.

    தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. லட்சக்கணக்கான உழவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்வதும், ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது.

    வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. அதன்பின் நவம்பர் இறுதியில் டிட்வா புயல் காரணமாக பெய்த மழையில் சிக்கி காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.

    மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 22-ஆம் தேதியும், நவம்பர் 30-ஆம் தேதியும் வெளியிட்ட அறிக்கைகளில் வலியுறுத்தியிருந்தேன். அக்டோபர் மாதத்தில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக நான் கூறியிருந்த நிலையில், அதே நாளில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர், 16 ஆயிரம் ஹெக்டேரில் ( 40 ஆயிரம் ஏக்கர்) பயிர்கள் பாதிக்கபட்டிருப்பதாகவும், மீதமுள்ள பயிர்களையும் கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், அதன்பின் சுமார் 2 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படாதது ஏன்?

    டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அடுத்த 10 நாள்களில் கணக்கிடப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு 15 நாள்களுக்கு மேலாகியும் இன்று வரை பாதிக்கப்பட்ட பயிர்கள் முழுமையாக கணக்கிடப்படவில்லை. நாகை மாவட்டத்தில் 50% அளவுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 55% அளவுக்கும், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 65% அளவுக்கும் மட்டுமே கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயிர்களுக்கான பாதிப்பு எப்போது கணக்கிடப்படும்? எப்போது இழப்பீடு வழங்கப்படும்? என்பது மில்லியன் டாலர் வினாவாக தோன்றுகிறது.

    பயிர் பாதிப்புகளை கணக்கிடுவதற்கு போதிய மனிதவளம் இல்லாதது தான் கணக்கெடுப்பு தாமதமாவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உதவி வேளாண் அலுவலர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவரால் அதிகபட்சமாக 3 வருவாய் கிராமங்களில் உள்ள பயிர்களை மட்டுமே கணக்கெடுக்க முடியும். ஆனால், ஒவ்வொரு உதவி வேளாண் அலுவலருக்கும் 14 முதல் 16 வருவாய் கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அவர்கள் பாதிப்பை கணக்கிடுவதற்கு இன்னும் பல நாள்கள் ஆகும். உழவர்கள் கடன் வாங்கி சாகுபடி செய்திருக்கும் நிலையில், இழப்பீடு வழங்குவதை தாமதித்துக் கொண்டே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    அதுமட்டுமின்ன்றி, காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு ஏக்கர் சம்பா, தாளடி பயிர்களுக்கான சாகுபடி செலவு ரூ.40,000 ஆகும் நிலையில், ஏக்கருக்கு ரூ.8000 மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2014-ஆம் ஆண்டின் சாகுபடி செலவுகளை கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகையை 11 ஆண்டுகளுக்குப் பிறகும் உழவர்களுக்கு வழங்குவது பெரும் அநீதி.

    கடன் வாங்கியும், கடுமையாக உழைத்தும் வளர்த்தெடுத்த பயிர்களை இழந்து விட்டு தவிக்கும் விவசாயிகளுக்கு இனியும் தாமதிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.8,000 என்ற இழப்பீடு போதாது என்பதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    ×