என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "DMK"
- இந்தியா கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.
- இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிட அனைவரின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.
சென்னை:
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் 'இந்தியா' கூட்டணியை 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 பாராளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.
2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019 பாராளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது. தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில், "நாற்பதும் நமதே! நாடும் நமதே!" என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்! என்று தெரிவித்துள்ளார்.
- இந்த தேர்தல் களம் ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாகும்
- தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அளிக்கையில், "இந்த தேர்தல் களத்தை ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது.
நாட்டின் பன்மை கலாச்சாரத்தையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியுள்ளதை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
கடந்த இரண்டு வாரங்களாக சான்றோர்கள், அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் நல்லெண்ண கருத்துகளை உள்வாங்கி, 18.03.2024 அன்று நடைபெற்ற கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசத்தை காக்கும் அறப்போரில் கட்டுமரத்தில் பயணிப்பதா? போர் கப்பலில் பயணிப்பதா? என்ற நிலையில், I.N.D.I.A கூட்டணி என்ற போர் கப்பலில் ஏறியுள்ளோம்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான I.N.D.I A கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இக்கூட்டணியின் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நோக்கம்.
- தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ராமதாஸ், அன்புமணி பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளனர்.
சேலம்:
பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் பேச்சை தொடங்கினார்.
முதலில் சேலம் கோட்டை மாரியம்மனை வணங்குகிறேன் என்றார்.
அதன்பின் தொடர்ந்து பேச தொடங்கிய பிரதமர் மோடி,
* தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவை நாடே ஆச்சரியமாக பார்க்கிறது.
* பா.ஜ.க.வுக்கு பெருகும் ஆதரவு தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
* வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக 400-க்கும் அதிகமான இடங்களை பெற வேண்டும்.
* தமிழகம் வளர்ச்சியடைய 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும்.
* தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நோக்கம்.
* தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ராமதாஸ், அன்புமணி பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளனர்.
* சேலத்திற்கு பலமுறை வந்துள்ளேன். இன்று பழைய நினைவுகள் எனக்கு வருகின்றன.
* சேலத்தை சேர்ந்த ரத்தினவேல் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார்.
* ரத்தினவேல் இன்று நம்மிடையே இல்லை, அவரின் நினைவு மட்டுமே உள்ளது.
* சேலம் வந்ததும், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்த லட்சுமணன் என் நினைவுக்கு வருகிறார்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசி வருகிறார்.
இதனிடையே ஆடிட்டர் ரமேஷ் மரணம் குறித்து பேசும் போது பிரதமர் மோடி கண் கலங்கினார்.
#WATCH | Prime Minister Narendra Modi says, "Tamil Nadu has decided that every single vote on 19th April will be given to BJP-NDA..." pic.twitter.com/1hfPP1WAKE
— ANI (@ANI) March 19, 2024
- வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
- தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்படவில்லை.
ஈரோடு:
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் சுயேட்சையாக போட்டியிட பலரும் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது. பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக செல்லும் வழியை காண்பிக்கும் அறிவிப்பு பலகை சுவற்றில் ஒட்டும் பணி நடந்தது.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,
வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதில் ஊர்வலமாகவோ, கூட்டமாகவோ வந்து வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு போடப்படும் என்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்பட வில்லை. இதனால் நாளை முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள். அதே சமயம் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
- கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- வேட்பாளர் பட்டியலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர்.
- தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ள தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தஞ்சை, தேனி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. சீனியர் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதுடன் புதுமுகங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் என்று தெரியவந்துள்ளது.
இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவும், மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனும், தென்சென்னையில், தமிழச்சி தங்கபாண்டியனும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
இதே போல் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா, தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் போட்டியிடுகிறார்கள்.
இதே போல் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் யார் என்று முடிவாகி விட்டது. வேட்பாளர் பட்டியலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர். பெண்களுக்கும் இதில் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
21 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வாக்குறுதிகள் இடம்பெற செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பெண்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளும் இதில் இடம்பெற்று உள்ளதாக தெரிகிறது.
- பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது
- திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.
அதன்படி திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி (51) அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
10 ஆண்டுகள் கொமதேக தலைமை நிலைய செயலாளராகவும், 7 ஆண்டுகள் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருந்தவர் சூரியமூர்த்தி. அவர் 2001 மற்றும் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியிலும், 2006-ல் வெள்ளக்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாமக்கல் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தான் திமுக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
- கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.
இதைதொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவை உடனடியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
இதுகுறித்து திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது.
ஆளுநர் தனியாக ஒரு அரசை நடத்த முயற்சி செய்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.
- திமுக நேரடியாக களம் காணும் 21 தொகுதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.
அதன்படி திமுக நேரடியாக களம் காணும் 21 தொகுதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன.
சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட ஆரணி மற்றும் தேனி தொகுதிகளில் திமுக இம்முறை நேரடியாக களம் காண்கிறது. அதே போல் கடந்த முறை மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியிலும் திமுக போட்டியிடுகிறது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில், திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது
மதிமுக திருச்சியிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரத்திலும் போட்டியிடுகிறது.
விசிகவிற்கு விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
- விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சத்தியமூர்த்தி பவனில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
- விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், அத்துடன் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் 233 விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விருப்ப மனுப்படிவத்தை இன்று முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுப் படிவங்களை 20.03.2024 புதன்கிழமை மதியம் 1 மணிக்குள் பாராளுமன்ற பொதுத் தொகுதிகளுக்கு ரூ.30,000, பாராளுமன்ற தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூ.15,000, அதேபோல விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.10,000, மகளிருக்கு ரூ.5,000 கட்சி நன்கொடையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வங்கி வரைவோலையாக மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு நகலை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க.வினர் தாங்கள் போலீசாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
- தி.மு.க.வினருக்கும் தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக என். புதுப்பட்டியில் நிதிநிலை அறிக்கையின் தெருமுனை பிரசாரக் கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
இதை அறிந்த நிலக்கோட்டை தொகுதி பறக்கும் படை அதிகாரி பிரவீன் தலைமையில் அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் ஆணையம் அனுமதி பெறாமல் கூட்டம் நடப்பதாக கூறி அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
ஆனால் தி.மு.க.வினர் தாங்கள் போலீசாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் கூட்டம் நடத்தக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தி.மு.க.வினருக்கும் தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டம் விரைவாக முடிக்கப்பட்டது.
- கடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்படவில்லை.
- மயிலாடுதுறை, திருநெல்வேலி, கடலூர் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்படவில்லை.
மயிலாடுதுறை, திருநெல்வேலி, கடலூர் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் திமுகவும், திருச்சியில் மதிமுகவும் போட்டியிடுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்