search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN chief minister"

    • விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.
    • 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதன்படி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதேபோல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில், தமிழகத்தில் இடைத்தேரத்லில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

    மற்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டு முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மகத்தான மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி பெற்றது.

    சாதாரண வெற்றியல்ல, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றோம். அதிமுக கூட்டணி படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி, பாதாளத்தில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம்.

    விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி அவர்கள் உடல்நிலை காரணமாக மறைவெய்தியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக ஆற்றமிகு உடன்பிறப்பு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தோம்.

    நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பா.ம.க.வை நிறுத்தியது.

    'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.

    தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நேரகாலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல்மிகு வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க பொறுப்பேற்றுக் கொண்ட கழக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் க.பொன்முடி கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் களம் கண்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் என பலரும் களப்பணி ஆற்றினார்கள்.

    பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் தேர்தல் பரப்புரை செய்தார்கள். நமது இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார்கள். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் உடன்பிறப்புகளும் - தோழமைக் கட்சித் தோழர்களும், உதயசூரியனின் வெற்றிக்கு இரவு பகல் பாராது கண்துஞ்சாது உழைத்த அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

    விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பொன் கௌதமசிகாமணி உள்ளிட்ட ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது.

    நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது.

    திமுக கழக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது.

    நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும் பயணத்தையும் தொடர்கிறோம். வெற்றிப் மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை.
    • இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம்.

    ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அந்த கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:-

    1974ம் ஆண்டில் இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த பிரச்சினை தொடங்கியது.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவு.

    குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது.

    அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனைகளில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீ விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

    இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தொடர்பு எண்கள்: +91 1800 309 3793,

    +91 80 6900 9900, +91 80 6900 9901

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம்.
    • குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னனியில் உள்ளது.

    பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணிகள் சுகாதாரம், மகப்பேறுக்குப் பின் கவனிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கணினி பொருள்கள் ஏற்றுமதி ஆகிய பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த மத்திய அரசின் அறிக்கைகள் அனைத்திலும் தமிழ்நாடே முதலிடம் என்று திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதாரம் நிறுவனங்கள் வழங்கும் பயன்கள்.

    மகப்பேற்றுக்குபின் கவனிப்பு கணினி பொருள்கள் ஏற்றுமதி இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.

    அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவு படுத்துகின்றன.

    ஏற்றுமதி ஆயத்த நிலைக்கான 2022 ஆம் ஆண்டின் குறியீடுகள் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது,

    அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.

    பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022 2023 ஆம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது.

    இறக்குமதி ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022, 2023ம் ஆண்டிற்கான விவரங்களை National Import Export Record for Yearly Analysis of Trade (NIRYAT) என்று ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மராட்டிய மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம்

    கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில்: கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும்.

    பிகார் 29.75 புள்ளிகளையும், உத்தரப்பிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது. மருத்துவமனைகளில் மகப்பேறுகள் ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள் தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின்படி நாட்டி நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம். 

    அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது.

    குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னனியில் உள்ளது.

    மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

    இதில் தமிழ்நாடு மாநிலம்தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

    வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளதாக ஒன்றிய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வாக்குப்பதிவு நெருங்கி வருவதால், போட்டி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு.

    மக்களவை தேர்தல் முதற்கட்டமாகவும், தமிழகத்தில் ஒரே கட்டமாகவும் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நெருங்கி வருவதால், போட்டி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுக, பாஜக ஆட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே மதம் என 'ஒரே'யடியாக இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு!

    பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் அவரால் கைப்பற்றவே முடியாத திராவிட எஃகுக் கோட்டையாகவே தமிழ்நாடு என்றும் இருக்கும்!

    இந்த இரண்டாவது விடுதலைப் போரில், எதிரிகளோடு, அவர்களுக்குத் துணைபோகும் கட்சிகளையும், தமிழ்நாட்டை வஞ்சித்த அ.தி.மு.க.வையும் சேர்த்து விரட்டியடிப்போம்! தென்னகத்தின் விடியல் ஒளி டெல்லியிலும் பரவிட இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது.
    • அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளது.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8 முறை சம்மன் அனுப்பியும்ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது.

    அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, தோல்வியின் பயத்தால் உந்தப்பட்டு, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் பாசிச பாஜக அரசு வெறுக்கத்தக்க செயலை காட்டுகிறது.

    அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் சீரழிவு போன்றவற்றை அம்பலப்படுத்தி, ஒரு பாஜக தலைவர் கூட விசாரணையையோ அல்லது கைது செய்வதையோ எதிர்கொள்வதில்லை.

    பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை இடைவிடாமல் துன்புறுத்துவது ஒரு அவநம்பிக்கையான சூனிய வேட்டையை காட்டுகிறது.

    இந்த கொடுங்கோன்மை பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது, பாஜகவின் உண்மையான நிறத்தை வெளிக்கொணர்கிறது. ஆனால் அவர்களின் வீண் கைதுகள் நமது உறுதியை அதிகரித்து, இந்திய கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தற்போது அளித்துள்ளது
    • தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

    அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (மார்ச் 2) முகாம் அலுவலகத்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன், பிரபாகரன், வைத்திசெல்வன், ஜியோ டாமின், பேராட்டக் குழுவைக் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, ஹரிராகவன், மகேஷ்குமார், மெரினா பிரபு, சுஜித், குணசீலன், ரீகன், ராஜா, கிதர் பிஸ்மி, அம்ஜித், வசந்தி, சிம்லா, கோபால், வாஞ்சிநாதன், மாரியம்மாள் ஆகியோர் சந்தித்து. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதையொட்டியும். இந்த ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை 22-5-2018 அன்று நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசால் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டதோடு, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

    அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தற்போது அளித்துள்ளது தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

    இச்சந்திப்பின்போது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோர் உடனிருந்தனர்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது.
    • எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

    நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது!

    எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசிக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு.
    • திராவிட மாடல் போன்ற வாக்கியங்களை குறிப்பிடவில்லை என அவருக்கு எதிராக தீர்மானம்.

    தமிழக சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவது வழக்கம். தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை கவர்னர் அப்படியே வாசிப்பதுதான் நடைமுறை.

    ஆனால் ஜனவரி 9-ந்தேதி சட்டசபை கூடியதும் கவர்னர் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது, திராவிட மாடல் ஆகிய வாசகங்களை வாசிக்கவில்லை. இதை உன்னிப்பாக கவனித்த துரைமுருகன் உடனடியாக ஒரு தீர்மான அறிக்கையை தயார் செய்து முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

    கவர்னர் முழு உரையையும் வாசித்தபின், சபாநாயகர் தமிழ் உரையை வாசிப்பார். அதன்பின் தேசியகீதம் பாடப்பட்டு அவை முடிவடையும்.

     சபாநாயகர் தமிழ் உரையை வாசித்த முடித்த உடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்தார். அந்த தீர்மானத்தில் அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து பகுிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட உரை இடம்பெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

    முதலமைச்சர் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார் என ஆளுநர் ஆர்.என். ரவி நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் தங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது எனக் கூறியதும், அவை முடிவடையும் முன்னதாகவே ஆளுநர் ஆர்.என். ரவி அவையை விட்டு உடனடியாக வெளியேறினார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இருதரப்பிலும் பரஸ்பர குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை அழித்த இந்திய விமானப்படைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். #IAFAttack #SurgicalStrike2 #IndianAirForce
    சென்னை:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மிகப்பெரிய பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என வர்ணிக்கப்படும் இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலை நடத்திய விமானப்படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பல்வேறு தலைவர்கள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

    தமிழக மக்கள் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமானப்படைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டால் வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.



    பயங்கரவாத முகாம்களை அழித்த வீரர்களால் நாட்டுக்கு பெருமை என்றும், பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப் படைக்கு வணக்கங்களை தெரிவிப்பதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.

    மோடியின் தலைமையில் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக பாஜக கூறியுள்ளது. நமது வீரர்கள் உயிரிழந்ததால் மிகுந்த வேதனையில் இருந்த ஒவ்வொரு இந்தியனுக்கும், இன்று காலை நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதாக பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.

    நாட்டு மக்களை பாதுகாக்க விமானப்படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நமது படை வீரர்களுக்கு பின்னால் மக்கள் உறுதியாக இருந்து ஆதரவு அளித்ததாகவும் கூறினார்.

    இந்திய விமானப்படை வீரர்களை நாட்டின் அற்புதமான வீரர்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #IAFAttack #SurgicalStrike2 #IndianAirForce
    முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி அளித்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். #MullaperiyarDam #EdappadiPalaniswami #Modi
    சென்னை:

    முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. கேரளாவின் கோரிக்கையை ஏற்று புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    புதிய அணை கட்ட தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



    இந்நிலையில், முல்லைபெரியாறு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வறிக்கை தயாரிக்க கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் இந்த முடிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். எனவே, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சக அனுமதியை வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.  #MullaperiyarDam #MullaperiyarStudy #EdappadiPalaniswami #Modi
    ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை என்று வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    சென்னை:

    செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து நகரச் செயலாளர் நரேந்திரன் தலைமையில் பழைய பஸ்நிலையம் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆப்பூர் வரலட்சுமி மதுசூதனன் பேசும்போது கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. குட்கா ஊழல், மின்வாரிய ஊழல், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறைகளில் மெகா ஊழல்கள் நடைபெறுகிறது.

    இதை எதிர்க்கட்சியான தி.மு.க. சுட்டிக் காட்டினாலும், ஆளும் தரப்பினர் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து கிடக்கிறது. திட்டப்பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் பணம் இல்லை என்கிறார்கள்.

    ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சருக்கு தைரியம் இல்லை. ஏனென்றால் அவர் மீதே லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் உள்ளது. என்னை மாட்டி விட்டால் உன்னை மாட்டி விடுவேன் என்று அமைச்சர்கள் மிரட்டுவதால் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தலைவர் மு.க.ஸ்டாலின் இவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தொழில் அதிபர் ஆப்பூர் மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ், ஒன்றிய செயலாளர் எம்.கே. தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
    ×