என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • ஏ.வி.எம். சரவணன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
    • ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு.

    சென்னை:

    ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏ.வி.எம். நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏ.வி.எம். சரவணன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ் திரையுலகின் பாதையை தீர்மானித்து உருவாக்கியதில் ஏ.வி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் பாதையை தீர்மானித்ததில் சரவணன் பங்கும் அளப்பரியது.

    புதல்வராகவும், திரைத்துறை ஆளுமையாகவும் "அப்பச்சி" என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை ஏ.வி.எம்-க்குப் புகழ் சேர்த்தவர் சரவணன். பேரறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு", தலைவர் கலைஞரின் "பராசக்தி", முரசொலி மாறனின் "குலதெய்வம்" என ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏ.வி.எம்.சரவணன்.

    கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஏ.வி.எம்-ன் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏ.வி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோல பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் 'தமிழ்த் திரை உலகில் பல புதுமைகளை புகுத்துவதற்கு காரணமாக இருந்த ஏ.வி.எம்.சரவணன் ஏராளமான கலைஞர்கள் தமிழ்த் திரை உலகில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

    • சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

    வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    • பதிவு செய்த அடுத்த நிமிடங்களிலேயே அந்த ஆவணங்களின் சான்றிட்ட நகல் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது.
    • குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதற்கும் ஒரு புதுமையான மென்பொருளை பதிவுத்துறை வடிவமைத்து இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 590 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்து பரிமாற்றப்பதிவு, திருமணப்பதிவு, கடன் ஆவணங்கள் பதிவு, உயில், குடும்ப ஏற்பாடு (செட்டில்மென்ட்) உள்ளிட்ட பல ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

    பொதுவாக இதுபோன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பதிவு செய்த ஆவணங்களை பெற காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படும்.

    இதனை தவிர்க்க பதிவுத்துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பதிவுத்துறை தலைவர் (ஐ.ஜி.) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்பார்வையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக மக்கள் எளிதாக பத்திரப்பதிவு செய்வதற்கு ஏதுவான வசதிகளை ஏற்படுத்தும் வகையில், இப்போது பதிவுத்துறை அலுவலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஒரு சீர்திருத்தமாக 'ஸ்டார் 3.0' என்ற திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பதிவுத்துறை உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கான பத்திரப்பதிவு சேவைகள் விரைவாகவும், இருந்த இடத்திலேயே கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

    இதன்மூலமாக புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், மனைப்பிரிவுகளை வாங்கவும், விற்கவும் வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம்.

    அதற்கான புதிய மென்பொருள் மூலம் சொத்துகளை வாங்குபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும், விற்பவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும், சொத்துகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்தால் போதும். மென்பொருளே தானாக பத்திரங்களை உருவாக்கிவிடும்.

    பின்னர் ஆதார் எண்ணை அதில் பதிவு செய்தால், 'ஓ.டி.பி.' எண் கேட்கும். அதனையும் அதில் குறிப்பிட்டால், தொடர்ந்து விரல் ரேகைப்பதிவு செய்ய வேண்டும். இந்த விரல் ரேகைப் பதிவு செய்வதற்கான எந்திரங்கள் இப்போது கடைகளில் ரூ.1,500-க்கு கிடைக்கிறது. அதனை வாங்கி அதில் விரல் ரேகையை பதிவு செய்தால்போதும். அனைத்து பணிகளையும் இருந்த இடத்திலேயே செய்து முடித்துவிடலாம்.

    இதற்காக செலவிடும் மொத்த நேரம் அதிகபட்சமாக 10 நிமிடம்தான். அதற்குள் நம்முடைய கையில் பத்திரப் பதிவு செய்ததற்கான ஆவணங்களும் கிடைத்துவிடும். இதன் மூலம் இனி அலைய வேண்டிய நிலையும், காத்திருக்க வேண்டிய அவசியமும் மக்களுக்கு நிச்சயம் இருக்காது.

    இதுமட்டுமா? ஆவணங்களின் நகல் பெறுவதற்கு இப்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் காத்துக்கிடக்கும் நிலைமை இனி இல்லாத சூழ்நிலையை பதிவுத்துறை மேற்கொள்ள இருக்கிறது.

    தற்போது ஆன்லைன் மூலமாக ஆவணங்களின் நகல் பெற பதிவு செய்யும்போது, சார் பதிவாளர் 'லாக்கினு'க்கு அந்த அனுமதிப்பதிவு சென்று, அதனை அவர் பார்த்து ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற சூழ்நிலை இருந்தது.

    அவ்வாறான நகலை பெறுவதற்கு குறைந்தது 2 நாட்களோ அல்லது ஒரு வாரமோ காலம் எடுக்கும். அதனையும் தவிர்க்கும் நோக்கில், ''சிஸ்டம் ஜெனரேட்டர் சிக்னேச்சர்'' என்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்மூலம் பதிவு செய்த அடுத்த நிமிடங்களிலேயே அந்த ஆவணங்களின் சான்றிட்ட நகல் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதற்கும் ஒரு புதுமையான மென்பொருளை பதிவுத்துறை வடிவமைத்து இருக்கிறது. இந்த சங்கங்களை பதிவு செய்ய இப்போது நேரடியாக அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது. அதற்கும் தீர்வு காணப்பட்டு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே அதற்கான பதிவுகளை மேற்கொண்டு, ஒப்புதல் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை வாங்குபவர்கள் அதனை பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீட்டு வசதி வாரிய அலுவலகத்திலேயே பதிவுசெய்து கையில் பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    இதுபோன்ற பல்வேறு சேவைகளை பதிவுத் துறை 'ஸ்டார் 3.0' என்ற திட்டத்தின் கீழ் இன்னும் சில நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்க இருக்கிறார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை உரிமை தானே தவிர கருணை அல்ல.
    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார். இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

    * உணர்ச்சிகரமான நெகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி, உங்களை இப்படி பார்த்துக்கொண்டிருந்தால் போதும் என தோன்றுகிறது.

    * மாற்றுத்திறனாளி தோழர்களுக்கு சம வாய்ப்பு என்பதை நினைவுபடுத்தும் நாள் இது.

    * தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை என்பது உறுதி செய்யப்பட்டது.

    * உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    * ஐ.நா. அமைப்பு கூட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பெருமைப்படும்.

    * பெரும்பாலான மக்கள் தீண்டாமையை கைவிட்டு முற்போக்கு பாதையில் செல்லத் தொடங்கி விட்டனர்.

    * கடந்த கால ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டனர். தகாத வார்த்தையில் அவமரியாதை செய்யப்பட்டனர்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை உரிமை தானே தவிர கருணை அல்ல.

    * மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    * உள்ளாட்சி அமைப்புகளில் மேலும் 9,000 மாற்றுத்திறனாளிகள் பணி அமர்த்தப்படுவர்.

    * விளையாட்டுத்துறையில் மாற்றுத்திறனாளிகள் சாதிப்பதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

    * மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி நிதியாக 22,300 பேருக்கு ரூ.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    * அரசு பணிகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * கலைஞர் ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டது.

    * மாற்றுத்திறனாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக மாறி என்ன செய்யப் போகிறார்கள் என சிலர் நினைக்கலாம்.

    * மாற்றுத்திறனாளிகளை மக்கள் பிரதிநிதிகளாக மாற்றி இருக்கிறோம்.

    * சக்கர நாற்காலியில் பம்பரம் போல் சுழன்று உழைத்தவர் கலைஞர் கருணாநிதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
    • முத்தமிழறிஞர் கலைஞருடன் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற் றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கும் 2023-ம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கும், அதே ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பினமாக மகளிர் ஒருவருக்கும் 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து சுகிதா சாரங்கராஜிக்கும் வழங்கப்பட்டது.

    அவற்றின் தொடர்ச்சியாக, 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

    டி.இ.ஆர்.சுகுமார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து நேர்முகமாகப் பேட்டிகண்டு சுவையான செய்திகளை மக்களுக்கு வழங்கியவர் ஆவார். தினத்தந்தி நாளிதழில் நாள்தோறும் அவர் எழுதி வரும் "தலையங்கம்", வாரம் ஒருமுறை "பேனா மன்னன்" என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்து வரும் பதில்களும் மக்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்று உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் டி.இ.ஆர்.சுகுமார், உலக அளவில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சிறப்பான நிகழ்வுகளின்போது, அந்தந்த நாடுகளுக்குச் சென்று, செய்திகளைத் திரட்டி, தினத்தந்தி வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள சிறப்பான இதழியல் துறை அனுபவங்களையும் கொண்டுள்ளார். அத்துடன் முத்தமிழறிஞர் கலைஞருடன் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.

    இதழியல் துறையில் 50 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நேர்மையுடனும் நெஞ்சுறுதியோடும் தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றிவரும் டி.இ.ஆர். சுகுமாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றையதினம் 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 5 லட்சம் ரூபாய் பொற்கிழி ஆகியவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு அச்சகப் பணியாளர்களுக்கு தண்டையார்பேட்டை - காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகு சாலை, தெரு விளக்கு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை மானியக் கோரிக்கையில், அரசு அச்சகப் பணியாளர்களுக்கு சென்னை, தண்டையார்பேட்டை - காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் 39 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 79 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 96 குடியிருப்புகளுடன், தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர் குடியிருப்பினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.

    இக்குடியிருப்பின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம், முதல் தளம் முதல் 6-ம் தளம் வரை உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் தலா 450 சதுரடியுடன், குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகு சாலை, தெரு விளக்கு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.
    • மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 3-ம் நாளில், மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வழங்கி அவர்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    ஆண்டுதோறும் இந்நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் முக்கிய உறுதிமொழி வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் அதாவது "மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் வளர சமூக ஏற்றம் மலரும்" என அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனும் உன்னத கொள்கையின் அடிப்படையில் இல்லம் தேடி உதவி வழங்கும் வகையில், உலக வங்கியின் கடன் உதவி மூலம் செயல்படுத்தப்படும் 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' மூலம் மாற்றுத் திறனாளிகள் பயனடைய பல்வேறு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே மறுவாழ்வு சேவைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாற்றுத்திறனாளிகள் தேவைகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து, பயனாளிகளுக்கு வயது மற்றும் உடல் நலத்திற்கு ஏற்ற சிகிச்சைகள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற நவீன உதவி உபகரணங்களை தன்னிறைவு எய்தும் வகையில் வழங்கி, மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கியும், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளை ஒதுக்கியும், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஏற்றம் காண சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகிறது.

    மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறாக, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன.
    • ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி கி.வீரமணி அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், முத்தமிழறிஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு #DravidianModel நல்லாட்சி நிலைக்கச் செய்வோம், ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முழுமையாக பாதிப்படைந்துள்ளன.
    • மழையில் டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்ல, ராமேஸ்வரம் நகரமே நீரில் மூழ்கி அங்குள்ள மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

    27.11.2025 முதல் இன்று வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் 'டிட்வா' புயல் காரணமாக பெய்து வரும் கனமழையினால், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முழுமையாக பாதிப்படைந்துள்ளன. மேலும், பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட இதர பயிர்களும் கனமழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள நீரில் மூழ்கிய சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் பாதிப்படைந்துள்ளன.

    அதேபோல், திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் பருவ மழையின் காரணமாக விவசாய நிலங்களில் 10 நாட்களுக்கும் மேலாக, இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பாதிப்படைந்துள்ள பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிட்டிருந்த நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கியதால், நெற்பயிர்களின் அழுகிய நிலையைக் கண்டு விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

    'பயிர் காப்பீடு'-ன் போது பட்டாவில் நேரடி பெயர் இல்லாதவர்கள், இறந்தவர்களின் பெயரில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் என்று பலர் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையில் உள்ளதாக, பாதித்துள்ள விவசாயிகள் விடியா திமுக அரசின் மீது புகார் தெரிவிக்கின்றனர்.

    அம்மா ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வந்த "குடிமராமத்துப் பணி" திட்டத்தினால் தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. 2021-ல் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, குடிமராமத்துப் பணியை ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு நிறுத்திவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பருவமழைக்கு முன் டெல்டா மாவட்டங்களில் உள்ள 'வாய்க்கால்களை தூர் வாருங்கள்' என்று நான் அடிக்கடி சட்டமன்றம், பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் அறிக்கைகள் வாயிலாக இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தினாலும், இந்த அரசு தூர் வாருவதில் அலட்சியம் காட்டியதால், டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் நெல் பயிரிட்ட வயல்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த மழையில் டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்ல, ராமேஸ்வரம் நகரமே நீரில் மூழ்கி அங்குள்ள மக்கள் தத்தளித்து வருகின்றனர். அவர்களின் துயரைத் துடைக்க சிறு துரும்பையும் கிள்ளிப் போடாத நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வேன் என்று

    வாய்ச் சவடால் அடிக்கிறார். ராமேஸ்வரம் நகர மக்கள் 2-3 நாட்களாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படும்போது, மக்களைப் பற்றி கவலையில்லாமல் விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், வாக்கிங் போகும்போது நடிகையுடன் பேசுவதை, வலைதளத்தில் பதிவிடுகிறார்.

    மழைக்காலத்தில் கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது. பாதிக்கப்பட்ட மக்களை விடியா திமுக அரசின் முதலமைச்சர் நேரில் சந்திக்கச் சென்றால்தான், கீழே பணியாற்றும் அமைச்சர்களும், அதிகாரிகளும் விரைந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்ட நெற் பயிர், 'டிட்வா' புயல் மழையினால், தண்ணீரில் முழுமையாக மூழ்கியுள்ளன என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    'டிட்வா' புயல் மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தற்போது பெய்து வரும் கன மழையினால் தமிழகத்தின்

    கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாய நிலங்களை வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக

    நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும்.
    • நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன்.

    டிட்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டிட்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்!

    அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான வடகிழக்கு பருவமழை கனமழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் & வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியில் (SDRF) இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன்.

    முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும், மக்களைக் காக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும்.
    • மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.

    அக்டோபர் மாதம் பெய்த மழையால் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.12.2025) தலைமைச் செயலகத்தில், டிட்வா புயல்

    கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    டித்வா புயல் நேற்று பின்னிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    டித்வா புயல் காரணமாக மாநிலத்தில் 27.11.2025-லிருந்து 01.12.2025 வரை நாகப்பட்டினம் (22.2 செ.மீ), மயிலாடுதுறை (13.2 செ.மீ), திருவாரூர் (10.2 செ.மீ), இராமநாதபுரம் (8.7 செ.மீ). தஞ்சாவூர் (8.6 செ.மீ) ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைப்பொழி பதிவாகியுள்ளது.

    பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 27.11.2025 அன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    மேலும், 28.11.2025 அன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, டித்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவமழையால், குறிப்பாக டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    மேலும், கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    மேலும், அக்டோபர், 2025 மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர்பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து.

    33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 எக்டர்

    வேளாண்பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    டித்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

    கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும், இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செய்துதர வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

    மேலும், நிவாரணத் தொகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தியறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.

    உடனடியாக மாவட்ட ஆட்சியரையும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    ×